சனி, 9 மார்ச், 2024

அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்

 

என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய ‘ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய முடியும்.

தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து அடைந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை, ஆடம்பர, உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் லாபத்தையும் எதிர்பார்த்தோ வந்தவளல்ல, அல்லவே அல்ல!

என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரும் பணக்காரத் தன்மையில் இல்லை என்றாலும், போதிய கவுரவமும் – மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில், கஷ்டம் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்குப் போதிய வசதியான அளவிற்கு ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது, மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத் தகுதியுடைய நிலையில் இருந்ததுதான். சிறுவயது முதல் என் தந்தையாரால் சுயமரியாதை கருத்துபட வளர்க்கப்பட்டு தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அவரோடு பழகி, அவரது கருத்துக்களாலும் கொள்கையாலும் கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப் பணிபுரியச் சேர்ந்தவளே தவிர வேறில்லை. 1948லிருந்து என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் – அன்று முதல் இன்று வரை என் செயல்கள். நடவடிக்கைகள், வாழுகின்ற முறைகள், அய்யா மறைவிற்குப் பிறகும், என் போக்கு. தன்மை – இவைகளெல்லாம் எப்படிப்பட்டவை என்று என்னைப் பொறுத்தவரையில் என்றும் ஒளிவு மறைவு இல்லாத ஒரே சீரான தன்மையில் தான் இருந்து வருகிறேன். எந்தவிதமான புதிய மாற்றங்களுக்கும் அவசியமில்லை என்பதையும் உணருகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்க இலட்சியங்கள் – கருத்துக்கள். பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக செய்துள்ள ஏற்பாடுகள். நாட்டு மக்களிடத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான அன்பின் பிடிப்பையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது தனக்கென என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் பொது நன்மைக்கே. பயன்படும் வகையில் தக்க முறையில் ஏற்பாடு செய்து தனக்குப் பின்னால் பயனுறும் வகையில் செய்துள்ள அந்நற்செயல் மற்ற எவரும் சாதாரணமாய் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட தன்னலமற்ற தியாகமும் அன்பு உள்ளமும் கொண்ட ஒரு உத்தமரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பணிபுரிய வந்த என்னை சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்திற்காக ஒரு ஏற்பாடு என்ற கவலையினால் தனது வாழ்க்கைத் துணைவி என்று. எதிர்ப்பு ஏளனம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அறிவித்தார்கள்.
சில சமயங்களில் சுபாவ குணத்தால் எனக்கும் பிடிவாதம், அர்த்தமற்ற கோபம் இவைகளால் ஏற்படுகிற தொல்லைகளை எல்லாம் அன்போடு சகித்து, அவர் சகித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டு, தனது மனநிலைக்கு ஒத்தவாறு என்னையும் மாற்றி அமைத்துப் பக்குவமான நிலையை அடையச் செய்தார்கள்.
அவர்களது காலத்திற்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதி எனக்குத் தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது பல ஆண்டுகள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.

அந்த ஏற்பாட்டின்படி எனக்குத் தனிப்பட்ட வாழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, கிடைத்துள்ள சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும், அய்யா அவர்கள் காட்டிய வழியிலேயே அய்யா அவர்களைப் போன்றே, பொது மக்களுக்கே உபயோகப்படும் தன்மையில், நான் நல்ல வண்ணம் சிந்தித்து ஒரு ஏற்பாட்டினைச் செய்வது என்ற திடமான முடிவுக்கு வந்து, சென்ற 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் சேதி “Periyar Maniammal Educational and Charitable Society” என்ற பெயரால் ஒரு அறக்கட்டளை (Trust) ஏற்படுத்தி தக்கபடி. முறையாக. சட்டரீதியாக அதற்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்து விட்டேன்.
தலைவர் பெரியார் அவர்கள் பிறந்த வீட்டை. (அது எனக்கே உரியதாய் சட்டப்படி இருந்தபோதிலும்) என்றென்றும் அவர் வீடாகவே’ வைத்திருக்க ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற அய்யா அவர்களது 96ஆவது பிறந்தநாள் விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். ஈரோட்டில் அய்யா அவர்கள் பிறந்த இல்லத்தை தமிழ்நாடு அரசுக்கு அளிக்கும்படியும், அதை அரசு சார்பான நினைவுச் சின்னமாக நிறுவ தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் அறிவித்து கேட்டுக் கொண்டதே அவ்வாய்ப்பாகும். அந்த மேடையிலே நான். நமது முதலமைச்சர் அவர்களிடம் அந்த வீட்டை ஒப்படைப்பதாக அறிவித்தேன்.
நமது தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அய்யா நினைவுச் சின்னமாக அழகுபடச் செய்யப்பட்டு, மக்கள் பார்த்து மகிழும் வண்ணம், காலம் உள்ள அளவு நிலைத்து நிற்கும்படியான அரும் பெரும் ஏற்பாடுகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்கு அய்யா அவர்களின் பிறந்த நாளில் திறந்து வைக்கப்படுகிறது.

(‘விடுதலை’ – 23.9.1975)

திராவிடர் கழகத்தின் சோர்விலா தொடர்பணி (சுதந்திரத் தனித் தமிழ்நாடு போராட்டம்)

 


Published March 9, 2024, விடுதலை ஞாயிறு மலர்

“நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள்ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, சுமார் 3,000- த்துக்கும் மேற்பட்ட கழகத்தினர் பலவித கடுங்காவல் தண்டனை அடைந்து சிறை சென்றனர். இன்னும் பலர் சிறையில் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். 15 தோழர்களுக்கு மேல் சிறைக்கு உள்ளும் வெளியிலும் பிணமாக ஆகியிருக்கின்றனர்.

இதனால் நாம் சலிப்போ, மனச் சோர்வோ அடைந்து விடவில்லை. சுயநலம் அற்ற உண்மைத் தொண்டர்களுக்கு ஒருபோதும் சோர்வு மனப்பான்மை ஏற்படாது.
இதற்கு அறிகுறியாக. அடுத்து நடக்க இருக்கும் “சுதந்திரத் தனித் தமிழ்நாடு ” போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் ஈடுபட முன்வரவேண்டும். இதற்குத் தயங்கப் போவதில்லை.”

(பாபநாசம் தாலுகா, கோவிந்தக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை) – ‘விடுதலை’ 15.06.1959

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

பகுத்தறிவு வார ஏடு

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார் அவர்கள் கடந்த 99 ஆண்டுகளுக்கு முன்பு “பகுத்தறிவு” வார இதழினை 26.8.1934இல் வெளியிட்டார். “குடிஅரசு” ஏட்டிற்கு மாற்றாக வெளியிடப்பட்ட “புரட்சி” ஏடு மூன்று முறை அரசின் அடக்கு முறைக்கு உட்பட்டு அபராதம் கட்டி தொடர்ந்து வெளிவர முடியாத நிலைக்கு சென்றது. “பகுத்தறிவு” என்னும் பேரால் அதே வடிவமைப்புடன் ஒரு வார ஏட்டினை பெரியார் வெளியிட்டார்.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் “பகுத்தறிவு” தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும் இன்றியமையாதனவாகவும் கருதப்படும்.

“எங்கும் நிறைந்த

இறைவனை” வாழ்த்தவோ

“எல்லாம் வல் மன்னனை

வாழ்த்தவோ,

“யாதினும் மேம்பட்ட

வேதியனை” வணங்கவோ

“ஏதும் செய்ய வல்ல செல்வவானை”

வாழிய செப்பவோ கருதி அல்ல” வென்பதேயாகும்.

மேலும் மனித சமூகத்தில் மவுட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும் ஒற்றுமையையும் பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் “பகுத்தறிவு” வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழைமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும், ஆற்றலையுமே துணை கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும். முடிவாய் கூறுமிடத்து “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய, எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வியல் உயிர் வாழாது என்பதேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

(பகுத்தறிவு – தலையங்கம் – 26.8.1934)

வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

“வைக்கம் போராட்டம்” நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் இரண்டாண்டுக் காலம் நடைபெற்று அது வெற்றி பெற்ற வரலாற்றை நாள்வாரியாக தொகுத்து அளிக்கப்படுகிறது.

“வைக்கம்” என்பது வெறும் ஊரின் பெயரல்ல; அது அடையாளம், தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தந்தை பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று சமூகநீதியின் அடையாளமாக இருமுறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். வைக்கத்தில் 141 நாளில் 74 நாள் சிறையில் இருந்தார். தான் மட்டும் அல்ல; தம் துணைவியாரையும், தங்கையையும் அப்போராட்டத்தில் ஈடுபடுத்தி வெற்றி பெற்ற வரலாறே இவைகள்…

வைக்கம் போராட்ட வரலாறு

6 பிப்ரவரி 1924

கொல்லம், சுயராஜ்ய ஆசிரமத்தில் தீண்டாமை விலக்குக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. சுதந்திர நடமாட்டத்துக்கும், கோயில் நுழைவுக்கும் ஆதரவாகத் தீவிர பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

29 பிப்ரவரி 1924

தீண்டாமை விலக்குக் குழு சார்பில் காங்கிரஸ் கட்சி வைக்கத்தில் பொதுக்கூட்டம் நடத்தியது.

30 மார்ச் 1924

வைக்கம் போராட்டம் தொடங்கியது. குன்னப்பி (புலையர்), பாஹுலேயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிறு, தொடங்கிய நாள் தவிர, மற்ற ஞாயிற்றுகிழமைகளில் சத்தியாகிரகம் நடைபெறவில்லை.

31 மார்ச் 1924

ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1 ஏப்ரல் 1924

கே.பி. கேசவ மேனன் அனுப்பியிருந்த சத்தியாகிரகத் தொடக்கம் பற்றிய செய்திகள் அடங்கிய தந்தியை காந்தியார் பெறுகிறார். சத்தியாகிரகிகள் இன்னும் சிறிது காலம் பிரச்சாரம் செய்யவும் சமாதானப் பேச்சுக்குத் தயார் செய்து கொள்ளவும் ஏதுவாகச் சிறிதுகாலம் போராட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என காந்தியார் யோசனை அளித்தார்.

7 ஏப்ரல்

இரண்டு நாட்கள் நடந்து பின்னர் ஆறு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் இன்று மீண்டும் துவங்கியது. கே.பி. கேசவ மேனன், டி.கே. மாதவன் தடைப்பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

9 ஏப்ரல்

ஏ.கே. பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே. கேளப்பன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

10 ஏப்ரல்

இன்று முதல் சத்தியாகிரகிகளைக் கைது செய்வதில்லை. என்று காவல்துறை முடிவு செய்தது. சத்தியாகிரகிகள் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்,

11 ஏப்ரல்

ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

13 ஏப்ரல் 

பெரியார் வைக்கம் வந்தார்.

14 ஏப்ரல்

பட்டினிப் போரை நிறுத்துங்கள் என்ற காந்தியாரின் செய்தி சத்தியாகிரகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு தன் ஆதரவைத் தந்தி மூலம் தெரிவித்தார்.

15 ஏப்ரல்

அய்யாமுத்து வருகை

17 ஏப்ரல்

எஸ்.சீனிவாச அய்யங்கார் வைக்கத்தில் குறிப்பிட்ட வீதிகளைச் சுற்றிப்பார்த்தார்.

21 ஏப்ரல்

டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் கைது.

29 ஏப்ரல்

நாராயண குருவிற்குச் சொந்தமான இடத்திற்குச் சத்தியாகிரகிகள் குடிபெயர்ந்தனர், காந்தியார், வெளியாட்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தடைவிதித்தார்.

3 மே

இலவச உணவு அளிக்க அகாலியர் வைக்கம் வருகை.

8 மே

சிரத்தானந்தர் சத்தியாகிரகத் தலைவர்களுடன் சந்திப்பு.

13 மே

கோட்டயம் மாவட்டத்தில் நுழைய பெரியாருக்குத் தடை.

22 மே

பெரியார் முதன்முறை கைது.

26 மே

ராஜாஜி வைக்கம் வருகை.

21 ஜூன்

சத்தியாகிரகிகளின் ராட்டினங்களைக் காவல்துறை கைப்பற்றியது.  பெரியார் அருவிக்குட்டி சிறையிலிருந்து விடுதலை.

ஜூன் – ஆகஸ்ட்

மழை பெய்து வைக்கம் வெள்ளத்தால் நிரம்பியது. சத்தியாகிரகிகள் கழுத்தளவு நீரில் நின்று போராடினர். காவல்துறையினர் படகுகளில் காவலிருந்தனர்.

சத்தியாகிரகத்திற்கு ஆதரவாய் மக்கள் திரண்டனர்.

13 ஜூலை

நாகம்மையார் போராட்டத்தில் கலந்துகொள்ளல்.

18 ஜூலை

பெரியார் இரண்டாம் முறை கைது.

7 ஆகஸ்ட்

மகாராஜா காலமானார், துக்கம் அனுசரித்து போராட்டம் மூன்று நாளைக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

31 ஆகஸ்ட்

பெரியார், கேபி. கேசவமேனன் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து விடுதலை.

1 செப்டம்பர்

சேதுலட்சுமி பாய் பொறுப்பு அரசியாக (Maharani Regent) பதவி ஏற்றார். இன்று சத்தியாகிரகம் இல்லை.

28 செப்டம்பர்

நாராயண குரு சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வருகை.

2 அக்டோபர்

ஈழவர் தலைவரும், திருவாங்கூர் சட்டசபை நியமன உறுப்பினருமான என். குமாரன் வைக்கம் கோயில் தெருக்களை எல்லா ஜாதியினருக்கும் திறந்துவிடவேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

1 நவம்பர்

கோயில் தெருக்களில் தீண்டாதாரை அனுமதிப்பதற்குத் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிப்பதோடு அதற்கு அரசு அனுமதியளிக்கக் கோரும் நோக்கத்துடன் உயர்ஜாதியினர் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவான சவர்ணர்களின் இந்த ஊர்வலம் வைக்கத்திலிருந்து சமஸ்தான தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டது. மன்னத்து பத்மநாபன் இதன் தலைவர். திருவனந்தபுரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இத்தகைய இன்னொரு ஊர்வலம் சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு தலைநகரம் நோக்கி வந்தது. இதன் தலைவர் எம்பெருமாள் நாயுடு- இன்று சத்தியாகிரகம் இல்லை.

11 நவம்பர்

உயர் ஜாதியினரின் பேரணிகள் திருவனந்தபுரத்தை அடைந்தன.

12 நவம்பர்

மகாராணி ரீஜண்டிடம், 12 பேர் அடங்கிய குழுவினர் பெரிய மகஜரை அளித்தனர். கோயில் தெருக்களை அனைவருக்கும் திறந்துவிட ஆதரவு தெரிவித்து 25,000 ஜாதி இந்துக்கள் அதில் கையொப்பம் இட்டிருந்தனர். மாலை திருவனந்தபுரம் கடற்கரையில் பெரும் பொதுக்கூட்டம். இன்றும் சத்தியாகிரகம் இல்லை.

7 பிப்ரவரி 1925

சுதந்திர நடமாட்டத்திற்கென சட்டசபையில் 2 அக்டோபர் 1924இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 22 – 21 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அது தோற்றது. அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்தது எனச் சந்தேகிக்கப்பட்டது.

9 மார்ச்

காந்தியார் வைக்கம் வந்தார்.

10 மார்ச்

காந்தியார் சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார், மதியம் 2:30 மணிக்கு உயர் ஜாதியினரைச் சென்று சந்தித்தார், மூன்று திட்டங்களை முன்னுரைத்தார். உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது.

12 மார்ச்

காந்தியார் மகாராணி ரீஜண்டை வர்க்கலையில் சந்தித்தார். பிறகு நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு.அய்யர் உடன் இருந்தனர்.

13 மார்ச்

காந்தியார் ராஜமாதாவைத் திருவனந்தபுரத்தில் சந்தித்தார். அப்போது பெரியார் திருவனந்தபுரத்தில் இருந்ததாக உறுதிப்படுத்த இயலாத தகவல் உண்டு.

17 மார்ச்

காந்தியாரை உயர் ஜாதிக்குழு சந்தித்து, சங்கர ஸ்மிருதியை ஆதாரமாகத் தந்தது. காந்தியார் வள்ளத்தோல் சந்திப்பு வைக்கத்தில் நிகழ்ந்தது.

18 மார்ச்

காந்தியார் வைக்கத்திலிருந்து புறப்பட்டார். அரசு விருந்தினராக காந்தியார் திருவாங்கூரில் சுற்றுப்பயணம் செய்தபோது உடனிருந்தவர் காவல்துறை ஆணையாளர் பிட் ஆவார். அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் வைக்கம் கோயில் பாதையில் மார்ச் 1924 முதல் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை நீக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல்: திருவாங்கூர் அரசாங்கம் 1924 மார்ச் 24ஆம் தேதி பிறப்பித்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றது.

24 ஜூன்

சத்தியாகிரக செயலாளர் கே.கேளப்பன் அறிக்கை.

17 நவம்பர்

தீண்டாமை விலக்குக் குழு தீர்மானம்

23 நவம்பர்

பல மாதங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்து அரசாங்கம் கோயிலைச் சுற்றியிருந்த மூன்று பாதைகளை அனைவருக்குமெனத் திறந்துவிட்டது. ஒரு துணைப் பாதையையும் உருவாக்கிக்கொண்டது. இது தீர்வு எனப்பட்டது (தேதி ஆதாரம்: மேரி எலிசபெத் நூல்)

29 நவம்பர்

பெரியார் தலைமையில் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைப்பட்ட 74 நாட்கள் அனுபவித்த சித்தரவதைகள்!!

 Published December 29, 2023,விடுதலை நாளேடு

போராட்டக்காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை அருவிக்குத்தி என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில் ஒரு மாதகாலம் சிறை தண் டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஒருமாத காலம் திருவனந்தபுரம் சிறையில் கழித்தார்.

வைக்கம் போராட்டம் நடந்தது மொத்தம் 603 நாட்கள். இதில் 141 நாட்கள் தந்தை பெரியார் அவர்கள் பங்கெடுத் தார்கள். அதில் 74 நாட்கள் சிறையில் இருந்தார்கள். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து 7 முறை கேரளத்துக்குச் சென்றுள்ளார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன சிறப்பு என்றால் – இந்த போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாரை மிகமோசமாக நடத்தினார்கள். கையி லும் காலிலும் விலங்கு போட்டு – கழுத்தில் மரப்பலகையை மாட்டி – அடைத்து வைத்திருந்தார்கள். இதே போராட் டத்தில் கைதாகிச் சிறையில் இருந்த தலைவர்களில் ஒரு வரான கே.பி.கேசவ மேனன் அவர்கள் ‘பந்தனத்தில் நின்னு’ என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

தந்தை பெரியார் சிறையில் பட்ட சித்தரவதைகள்
அதன் சில வரிகளை மட்டும் நான் படிக்கிறேன்… ” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் – ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனாக இருந்தவரும் – ஒரு பெரும் பணக்காரரும் – உத்தம தேசாபிமானியுமான – ஈ.வெ.ராமசாமி அவர்களுக்குக் காலில் சங்கிலி மாட்டப் பட்டு இருந்தது. கைதிகளது தொப்பி மாட்டப்பட்டு இருந்தது. முழங்கால் வரையில் வேட்டி அணிந்திருந்தார். கழுத்தில் மரக்கட்டையை மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் வைக்கப்பட்டுள்ளார். கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக் காகத் தமிழ்நாட்டின் மேல்குலத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது எங்களுக்கு புத்துயிர் தந்தது” – என்று கே.பி.கேசவ மேனன் எழுதி இருக்கிறார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே ஈரோடு திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் பெரியார்.
போராட்டக்காரர்களுக்கும் மன்னருக்குமான பேச்சு வார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரிடம் கலந்துரையாடல் நடத்திய பிறகே திருவிதாங்கூர் ராணியைச் சென்று சந்தித்தார்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி

 

“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஜாவைப் பாராட்டி பலவிடங் களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் இதர பாகங்களுக்கும் திருவாங் கூர் ஓர் வழிகாட்டியாயிருக்குமென கருதப்படு கிறது.
– ‘விடுதலை’ – 11.11.1936

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்

திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன.

மகாராஜா தமது பிரகடனத்தில், “கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு இன்று முதல் இன்று முதற்கொண்டு எந்த இந்துவின் பெயரிலும் பிறப்பாலோ, மதத்தாலோ நமது ஆதீனத் திலும், நமது சக்கர ஆதீனத்திலும் நிருவா கத்திலும் இருக்கக்கூடிய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கு எத்தகைய தடை களும் விதிக்கக்கூடாது என பிரசித்தமாக உத்தரவு செய்து இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது பிரசுரஞ் செய்யப்பட்ட சட்டங்கள் இந்த நோக்கத்தை நிறைவேற் றுவனவாக அமைந்துள்ளன.
21ஆவது சட்டம்: ஆலய பிரவேச பிர கடனத்தால் ஏற்பட்ட பெரும் சீர்திருத்தத் திற்கு இசைந்த வண்ணம் ஆலயங்களில் நடைபெற்று வரும் சடங்கு, வழிபாடு சம்பந்தமான பழக்க வழக்கங்கள் சம்ரட்சிக் கப்படுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆலயம் அதன் பிரகாரங்களின் புனிதமும் சுத்தமும் குறைவதற்கான காஸ்பதமான எத்தகைய காரியங்களையும் யாரும் செய்யக்கூடாது என்றும் இடையே விதிக்கப்பட்டிருக்கிறது. கோயில் கட்டடங் களையும் பிரகாரங்களையும் வழிபாட்டுக் குச் சம்பந்தமில்லாத காரியங்களுக்கு உப யோகப்படுத்திக் கொள்வது சட்டவிரோத மாகக் கருதப்படும்.
இன்னின்னார் இன்னின்ன இடத்திலிருந்து தான் தொழ வேண்டும் என்ற பழைய பழக்க வழக்கப்படி இருந்து வந்த கட்டுப்பாடுகள் முன் இருந்தபடியே எல்லா சமூகத்தாருக்கும் இருந்து வரும் என்றொரு முக்கிய விதியும் அச்சட்டத்தில் காணப்படுகிறது.

பிரகடனத்தின் நோக்கத்திற்கு ஏற்ற வாறு அவ்வப்பொழுது அவசியமான ஆல யப் பிரவேசம், வழிபாடு ஆகியவற்றிற்கு காலத்தை வரையறுத்து விடுவதற்கும், குறிப்பிட்ட காலத்தில் தெய்வ வழிபாட் டிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட காரியத்திற் காக சில தனிப்பட்டவருக்கும், சமூகத்த வர்க்கும் பொருந்தக்கூடிய சில விசேஷ பழக்கங்களை நிலை நிறுத்தவும், அவசிய மான உத்தரவுகளிட பிரதம ஆலய நிரு வாக அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கோயில் பிர காரங்களில் கூட அடியெடுத்து வைக்கத் தகாத ஒரு சில பிரிவினரையும் சட்டம் குறிக்கிறது.
ஹிந்துக்கள் அல்லாத அனைவரும் குடும்பங்களில் ஏற்பட்ட ஜனன மரணங் களால் தீட்டு உடையவர், குடியர்கள், ஒழுக்கம் முறை தவறியவர்கள், சில காலங்களில் பெண்கள், பிச்சைக்காரர்கள் முதலியவர்கள் ஆவார். ஆலயத்திற்குச் செல்வோர் நடை உடை முதலியவை களைப் பற்றியும் கோயிலுக்கு எடுத்துச் செல்ல தகாத பொருட்களைப் பற்றியும் சட்டங்களில் பொதுவாகக் கூறப்பட்டிருக் கிறது. இச்சட்டங்களை மீறியவர்களைத் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டங்களில் பொதுவாகக் கூறப்பட்டிருக் கிறது.
சட்டங்களின் வியாக்கியான சம்பந்த மாக ஏற்படும் தகராறு சந்தேகம் முதலிய விஷயங்களில் எதிர்பாராத கஷ்டம் சம யத்திலும், அவசரமான சந்தர்ப்பங்களிலும் திவான் உடைய தீர்ப்பு முடிவானதாகும்.

– ‘விடுதலை’ – 12.11.1936