சுயமரியாதை உலகு

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினையும் - கழகத்தின் செயல்பாடுகளும் - 2


August 18, 2021 • Viduthalai

"காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது"  தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்

"அய்ப்பசி மாத வாக்கில் 'சூத்திரன்' என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சித் துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

தோழர்களே, காலம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது! நம் நாட்டில்  நடைபெற வேண்டிய முக்கிய காரியங்கள் சிந்திக்கப் படாமல் இருக்கின்றன. நம் நாட்டு இன்றைய ஆட்சி, சிந்தனையாளர் ஆட்சியென்ற பெயரைக் கொண்டிருந்தாலும், ஆட்சி நிலைக்கவேண்டுமே என்பதற்காகச் சிந்தனையாளருக்கும், மூடநம்பிக்கைக்காரர்களுக்கும் தன்மையைக் கொள்கையாக கொண்டே  நடைபெற்று வருகிறது.

ஆட்சி சமுதாயத்துறையில் கைவைக்கப் பயப்படுகிறது. என்றாலும், அது நிலைக்க வேண்டுமே என்பதற்காக நான் அதற்கு  ஆதரவாளனாக இருக்கத்தான் பாடுபடுகிறேனே ஒழிய,  எந்தத் துறையிலும் அதற்கு அசவுகரியம் கொடுக்க நினைப்பதில்லை. என்றாலும், நாம் சமுதாயத்துறையில் ஒன்றும் செய்யாமல் பார்ப்பனியத்தைக் கண்டித்துக் கொண்டேயிருந்தால் போதுமா? காரியத்தில் ஏதாவது செய்ய வேண்டாமா? என்ற கவலை என்னை வாட்டுகிறது.

சமுதாயத் துறையில் பத்தாண்டு காலமாக நம் நாட்டில் ஒரு கிளர்ச்சியும் நடக்கவில்லை. 1954 முதல் 1967 வரை காங்கிரசை ஆதரித்து வந்தோம். அதனால் உத்தியோகத்துறையில் முன்னேற்ற மடைந்து வருகிறோம். இவற்றின் பயனாய் நாம் சமுதாய அமைப்பில் ஒரு காரியமும் செய்ய முடியாமல் இருக்கிறோம். இது மிக்க அவமானகரமான காரியம் என்றே நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் சமுதாயத் துறையில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

நம் மக்கள் தீபாவளி கொண்டாடுவதும், பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடுவதுமான, காரியத்தில் சிறிதும் மானாவ மானம் இல்லாமல்  ஈடுபடுகிறார்கள். அரசாங்கமும் இதற்கு ஒத்துழைக்கின்றது.

மக்கள் ஏராளமாகக் கோவில்களுக்கும், உற்சவங்களுக்கும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். திதி,- தெவசம்,- புரோகிதம்,- அர்ச்சனை முதலியன செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மானாவமானத்தைப் பற்றிச் சிந்தனை இல்லை. படித்த பெரும் பதவியில் உள்ள முட்டாள்களே இதில் பெரிதும் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தடுக்க நம்மால் முடியவில்லை. இவை இப்படியே நடந்து கொண்டிருந்தால், சமுதாயத் துறையில் எப்படி மாறுதல் ஏற்பட முடியும்? சமுதாயத் துறையில் மாறுதல் ஏற்படாவிட்டால் நம் இழிவு, சூத்திரத்தன்மை எப்படி மாற்றம் அடையும்?

ஆகையால் சமுதாயத்துறை மாற்றத்திற்கு ஏதாவது கிளர்ச்சித் துவக்கலாம் என்று கருதியே இதை எழுதுகின்றேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லை; மன உறுதி இருக்கிறதே தவிர முன்போன்ற உடல் சக்தி, வசதியில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர்க்கார் காரியாலயங்களிலும், சர்க்கார் உணவு விடுதிகளிலேயும் "பிராமணன் - சூத்திரன்" என்று பிரிக்கப்பட்டிருந்த பாகுபாடுகளைக் கிளர்ச்சி- அறிக்கை மூலம் ஒழித்தேன்.

தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்றிருந்ததைக்  கிளர்ச்சி மூலம் ஒழித்தேன். கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்றிருந்த தடையை ஒழித்தேன். இவற்றிற்கு எல்லாம் நானே காரணஸ்தனாகவும், முக்கியஸ்தனாகவும்  இருந்திருக்கிறேன்.

இப்போது கோவிலுக்குள் சிலை இருக்கும் இடத்திற்குப் பார்ப்பான் தவிர வேறு யாரும் போகக்கூடாது என்ற தடை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மேலும் அந்தச் சிலைக்குப் பார்ப்பான் தான் பூசை செய்யவேண்டுமென்கின்ற நிபந்தனையும் இருந்து வருகிறது. அதுமாத்திரம் அல்லாமல் பூசைக்குச் சொல்லும் வார்த்தைகள் வடமொழியா (சமஸ்கிருதமா) கத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமும் இருந்து வருகிறது. இந்த மூன்றும் ஜாதி பேதத்தையும், நம் இழிவையும், பார்ப்பான் உயர்வையும் நிலைநிறுத்தவே இருந்து வருகின்றன. அதுவும் இந்தியாவில் சில நாடுகளில் தான் இருக்கின்றன.

இவை உள்ளவரை "சூத்திரன், - பிராமணன்" என்கின்ற தன்மையும், கீழ்ஜாதி (பிறவி), மேல் ஜாதி (பிறவி), என்கின்ற தன்மையும் இருந்தே தீரும்.  அதற்காகவேதான் இவை இருத்தி வைக்கப் பட்டு இருக்கின்றன.

கோவில்கள், சிலைகள் என்பவை "இந்துக்கள்" என்பவர்களுக்குப் பொதுவான இடங்களே தவிர, எந்த ஜாதிக்கும் தனி உரிமை உடையவையல்ல; ஆதலால் இந்தத் தடைகள், நிபந்தனைகள் இருப்பது 'இந்துக்கள்' என்பவர்களில் பெரும்பாலான 100க்கு 97 பேர்களான மக்கள் சமுதாயத்திற்கு அவமானமும், இழிவுமேயாகும். சாப்பிடும் இடபேதம் ஒழிக்கப்பட்டபின், தொழுகை இடபேதம் மட்டும் எதற்காக  இருக்க அனுமதிக்கப் படவேண்டும்?

இந்தியாவில் மற்ற நாடுகள் சிலவற்றில் முடிதிருத்தும் மருத்துவர்கள், முடிதிருத்தும் தொழிலைச் செய்து கொண்டே அர்ச்சகர்களாக இருந்து பூசை செய்கிறார்கள். காசி ஜெகனாதம், பண்டரிபுரம் முதலிய பல பிரபல ஸ்தலங்கள் என்னும் இடங்களில் கோவில்களில் எல்லா ஜாதியாரும் சிலையைத் தொட்டுப் பிராத்திக்கிறார்கள்.

எனவே இங்கு மாத்திரம் பேதம் இருக்க அனுமதிப்பது பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெரும் இழிவும்- தாழ்மையும் ஆகும்.

எனவே இந்த இழிவை ஒழிக்க, பார்ப்பானர் அல்லாத எல்லா (இந்து) மக்களும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இதற்காகக் கிளர்ச்சி துவக்க வேண்டியது- சிறப்பாகத் தமிழர்களுக்கு, நமக்கு இன்றியமையாத கடமையாகும். இதை வெகுநாளாகச் சொல்லியும்,  எழுதியும் வருகிறேன்; இனி காலம் தாழ்த்த எனக்கு இஷ்டமில்லை.

எனவே, இன்று முதல் சுமார் ஒரு மாத காலத்திற்குள் இதற்கான கிளர்ச்சி துவக்குவது என்று உறுதி செய்து கொண்டிருக்கிறேன்; அவசியம் துவக்குவதென்றே முடிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

தேதியும், இடமும், முறையும் சீக்கிரமாகத் தெரிவிக்க இருக்கிறேன்.

அதற்குள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட- கலந்துகொள்ள இஷ்டமுள்ளவர்கள், முன் வருபவர்கள் தங்களுடைய பெயர்களை முழு விலாசத்துடன் எனக்கு எழுதி அனுப்ப வேண்டிக் கொள்கிறேன். பெண்களும் கணிசமாக முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனேகமாக என் உடல்நிலையைப் பொறுத்து இதுவே என் கடைசிக் கிளர்ச்சியாக இருக்கலாம். தனித்தனியாகக் கடிதம் எழுதுவது ஒருபுறமிருந்தாலும், சிலர் ஆங்காங்கு ஒரு சம்மத அறிக்கை- விண்ணப்பம் தயாரித்து, அதில் கிளர்ச்சியில் ஈடுபடச் சம்மதிப்பவர்களின் கையொப்பங்களை வாங்கி நமக்கு அனுப்பவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இதை விளையாட்டாகக் கருதாமல் உணர்ச்சியோடு கருதிச் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பி.கு:- கிளர்ச்சியில் ஈடுபடப் பெயர் கொடுப் பவர்கள் தங்களின் முழு முகவரியைத் தெளிவாக எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரகசியம் என்று குறிப்பிட்டால் அந்தப் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.

ஈ.வெ.ராமசாமி,

கிளர்ச்சிக் காரியாலயம்,

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 17.

குறிப்பு: கையொப்பம் வாங்கப்படும் பாரத்தில் - கர்ப்பக்கிரகப் பிரவேச, கிளர்ச்சியில் ஈடுபட்டு, தலைவர் கருத்துப்படி நடக்கத் தயாராய் இருக்கிறேன் என்பதாக எழுதி, கையொப்பம் வாங்கவும்.

9-10-1969, 'விடுதலை'யில்

பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்

18.10.1969 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை 'நுழைவுக் கிளர்ச்சி'ப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.

தொடரும்...

parthasarathy r நேரம் 7:18 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-4



August 20, 2021 • Viduthalai

கிளர்ச்சி தேதி அறிவிப்பு : ஜனவரி 26

தி.மு.க ஆட்சியைத் தீவிரமாக ஆதரித்து வந்த நிலையில், கிளர்ச்சி குறித்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்த தந்தை பெரியார் 09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மய்தானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு உரையாற்றினார்.

இந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும், இந்தப் போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டி இருக்கிறது. இவர்கள் தண்டித்தாலும் இவர்களை ஆதரிப்பதை நான் ஒன்றும் மாற்றிக் கொள்ளப்போவது கிடையாது. இந்த ஆட்சியைப் போன்று நம் மக்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி வேறு எதுவும் கிடையாது. இந்த ஆட்சி மாறினால் அடுத்து யார் வருவார்கள் என்பதைச் சிந்தியுங்கள். இந்தச் சுப்பிரமணியத்திற்கும் பூணூல் போட்டு விடுவார்கள்; பக்தவத்சலத்திற்கும் பூணூல் போட்டுவிடுவார்கள். மற்றவர் யார் வந்தாலும் அவர்கள் பார்ப்பானுக்குத் தான் ஆளாக இருந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்களே ஒழிய, இவர்களைப் போல நம் இனத்திற்கு நன்மை செய்ய மாட்டார்கள். இந்த ஆட்சியின் பயனால் நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். இது எதிரிக்கும் தெரியாது- பார்ப்பனக் கூலிக்கும் தெரியாது; எனக்குத்தான் தெரியும். நம் மக்கள் உத்தியோகத்துறையில் எண்ணிப் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் இருக்கும்படியான வாய்ப்பு இவர்களால் தான் ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் நாம் ஜெயிக்கா விட்டால் என்ன நஷ்டம்? நம் ஜனங்களுக்குப் புத்தி வந்தால் போதுமே! வெற்றி தோல்வியைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. நமக்கிருக்கிற இழிவு நீக்கப்பட வேண்டும் என்பதே எனது முக்கிய இலட்சியமாகும். எனவே நம் மக்கள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மைதானத்தில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு: விடுதலை,16.11.1969.

குன்றக்குடி அடிகளார் முயற்சி

பெயர் பட்டியல் குவிந்து நாள்தோறும் விடுதலையில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் “அருள்நெறித் திருக்கூட்டம்” என்னும் ஆன்மீக தலைவர்கள் கலந்துரையாடல் நடைப்பெற்றது. அதில் தந்தை பெரியார் நடத்தவிருந்த கருவறைக் கிளர்ச்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திருக்கோயில் கருவறைக்குள் இருக்கும் மூர்த்திக்கு பூவும், நீரும் இட்டு வழிபடும் உரிமை இந்து சமூதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களும் வேண்டும் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு அருள்நெறிதிருக்கூட்டம் பேசியும் எழுதியும் வந்திருக்கிறது. ஆனால், அந்த கருத்துரிமையை கருத்துப் புரட்சி மூலம் மனமாற்றத்தின் மூலமே அடைய விரும்பியது. அதன் காரணமாக கிளர்ச்சியில் ஈடுபடவில்லை.

“கிளர்ச்சியில் ஈடுபடாததாலேயே நாம் பின்தங்கிவிட மாட்டோம். மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ராமசாமி இந்த உரிமையை அடைவதற்காக முயற்சியெடுக்க முன்வந்ததற்கு கொள்கையளவில் அருள்நெறிதிருக்கூட்டம் தனது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆயினும் கடவுள் நம்பிக்கை முற்றிலும் இல்லாத திராவிடர் கழகம் இந்த கிளர்ச்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதன்று. அதனால் இந்த உரிமைகளை சார்ந்துள்ள நியாயத்தன்மை வலுவற்றதாகப் போய் சாதியற்ற சமுதாய லட்சியத்திற்கே இடையூறு ஏற்படும் ஆதலால், அருள்நெறித்திருக்கூட்டம் இந்த உரிமையை அடைய கங்கணம் பூணுகிறது.

ஆதலால், திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா அவர்களை கிளர்ச்சியை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறது. அருள்நெறிதிருக்கூட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக திராவிடர் கழகம் இதனை கைவிடவேண்டுமென்றும் மனம் நிறைந்த மதிப்புணர்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறது” மேற்கண்ட இந்த தீர்மானம் நிறைவேற்றியதுடன், தவத்திருக் குன்றக்குடி அடிகளார் தனியே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைவராகிய பெருமதிப்புக்குரிய மகா சன்னிதானம் தவத்திருக் குன்றக்குடி அடிகளார் விடுத்திருந்த வேண்டுகோள் போராட்டத் தத்துவத்தை ஆதரிக்கும் அதே நிலையில் போரட்டத்தினை ஆத்திகப் பெருமக்களாகிய தங்களிடமே விட்டுவிடும்படி கேட்டிருக்கும் வேண்டுகோள் பற்றி திருச்சியில் நடந்த கூட்டம் மிகவும் ஆழ்ந்து பரிசீலித்தது.

தந்தை பெரியார் அவர்கள் அதை பற்றி மிக விளக்கமாக கருத்துரைக் கூறினார். “தவத்திரு அடிகளாரிடம் மிகுந்த அன்பு தமக்கு உண்டு என்றபோதிலும் கூட இக்கிளர்ச்சி சம்பந்தமாக அடிகளார் எப்போது எப்படி தாங்கள் முன்நின்று கிளர்ச்சியை செய்ய முன்வருவார்கள் என்பதற்கு திட்டவட்டமான பதில் அருள்நெறித் திருக்கூட்டத் தீர்மானத்தில் இல்லையே என்பது பற்றியும், நமது பிறவி இழிவை நீக்க நாம் மக்களை நல்லவண்ணம் பிரச்சாரப் படை மாநாடுகள் மூலம் தயார்படுத்தவும் தற்போதுள்ள சிக்கல் நிறைந்த அரசியல் சூழ் நிலைகளும் மிகவும் தெளிவுப்பட வேண்டுமென்பதாலும் உடனடியாக கிளர்ச்சி தேதி வைப்பதைவிட சற்று காலம் தள்ளி வைப்பது மிகவும் பொருத்தம் என்று அப்படி தள்ளுவதால் நட்டம் ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

திருச்சியில் கூடிய மத்திய கமிட்டி 16.11.1969

16-11-69 ஞாயிறு மாலை 3-30 மணியளவில் திருச்சி "பெரியார் மாளிகை"யில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது.

தந்தை பெரியார் அவர்கள் "கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின்'' அவசியம் பற்றியும், அது பற்றி முடிவெடுக்க வேண்டிய தேவை பற்றியும் விளக்கினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் உரைக்குப்பின் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்கள் இந்த கிளர்ச்சி எப்படி சட்ட சம்மதமானது, இந்த கிளர்ச்சி நடத்தவேண்டிய தேவை ஆகியவைகளை விளக்கிய பின், கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்லாத கழக முக்கியஸ்தர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். பிறகு தந்தை பெரியார் அவர்களால் பிரரேபிக்கப்பட்ட கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

· தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களு டைய கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி பற்றிய கடிதத்தை கமிட்டியில் வைத்து, அதைப்பற்றி மிக மரியாதையுடன் ஆலோசித்து அதில் எந்தவிதமான திட்டவட்டமான சமாதானமும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட வேண்டுமென்று மாத்திரம் இருக்கிறதே தவிர, வேறு எந்த விதமான முடிவும் இல்லை யென்பதால் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முடியாமலிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

·   'கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி" செய்யும் தேதியை ஜனவரி 26ஆம் தேதியாக வைத்துச் கொள்ளலாமென கமிட்டி முடிவு செய்கிறது.

·  "கர்ப்பக்கிருக'' கிளர்ச்சியை மன்னார்குடி ராஜகோபால்சாமி கோயில் என்று மாத்திரமல்லாமல் மற்ற ஊர்களில் உள்ள மூன்று, நான்கு கோயில்கள் வரை சேர்த்துக் கொள்ளலாமென இக்கமிட்டி தீர்மானிக்கின்றது,

·  மற்றும் பல கட்சித் தோழர்களும், பல ஆத்தீக நண்பர்களும் கர்ப்பக்கிருக கிளர்ச்சியில் கலந்து கொள்வதால் எதிர் வழக்காட வேண்டிய அவசியம் வந்தால் எதிர் வழக்காடலாமென முடிவு செய்கிறது.

·  ஒரு பிரசாரப் படையை அமைத்து சில முக்கிய ஊர்களுக்கு படையை அனுப்பி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யலாமென தீர்மானிக்கிறது.

· ஜனவரி 26ஆம் தேதிக்குள்ளாக ஆத்தீகர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் தாங்களாகவே இந்தக் கிளர்ச்சியை நடத்துவதாக இருந்தால் நம்மால் ஆன எல்லா உதவிகளையும் செய்வது என கமிட்டி முடிவு செய்கிறது

கோயில் கர்ப்பக்கிருக நுழைவு கிளர்ச்சி சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் கமிட்டியால் நியமிக்கப்பட்டது.

1. தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி - தலைவர்

2. கே. வீரமணி எம். ஏ. பி. எல். - செயலாளர்

3. டி.டி. வீரப்பா (திருச்சி) - உறுப்பினர்

4. அ.ஆறுமுகம் (நீடாமங்கலம்)

5. து. ம. பெரியசாமி (திருச்சி)

6. புலவர் கோ. இமயவரம்பன் - பொருளாளர்

வழக்கறிஞர் படை திரண்டது

இதுவரை தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களில் வழக்காடாத நிலையில் இந்த கிளர்ச்சிக்கு எதிர் வழக்காடுவது என்று முடிவெடுத்த நிலையில்

கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கிறோம் என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் 28.11.1969லும், குடந்தை வழக்கறிஞர்கள் 3.12.1969லும், தஞ்சை வழக்கறிஞர்கள் 11.12.1969லும், கோவை வழக்கறிஞர்கள் 9.1.1970லும் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.

parthasarathy r நேரம் 7:09 AM கருத்துகள் இல்லை:
பகிர்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

திரும்பிப் பார்க்கிறோம் - திகைக்கிறோம்! (அனைத்து சாதியினரும் அர்ச்சகர்)


August 15, 2021 • Viduthalai

கவிஞர் கலி. பூங்குன்றன்

2021 ஆகஸ்டு 14ஆம் நாள் - வாழ்விலோர் திருநாள்!

தமிழின  அரசர்கள் கட்டிய கோயில்களில் - தமிழினத்தவர்களின் உழைப்பால் உருவாக் கப்பட்ட கோயில்களில் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டுப்பட்டு விடும் - ஏன் சாமி செத்து விடும்!

சூத்திரன் சாமி சிலையைத் தொடுவத னால் இந்நிலைக்கு ஆளாகும் நிலையில் என்ன செய்ய வேண்டுமாம்? "108 கலசங் களைச் செய்து வைக்க வேண்டும், பிம்பங் களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண் டும். அதனைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப் பட வேண்டும் என்று வைகனாச ஆகமம் சொல்லுகிறது" என்று நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில் ஏறி  எடுத்து வைத்த கொடுமையை என்ன சொல்ல!

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய மாமன்னன் சிலையைக் கோயிலுக் குள் வைக்கக் கூடாதாம். அதனால்தான் காவல்காரனாக (Watch Man) வெளியிலே சிலையாக கையில் வாளுடன் நின்று கொண்டு இருக்கும் அவலம்!

பொது வீதிகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும், உணவு விடுதிகளிலும் பட மெடுத்துத் தாண்டவமாடிய ஜாதி  - தீண் டாமைப் பாம்பை அடித்து வீழ்த்திய ஈரோட் டுக் கைத்தடி, கொஞ்சம்  - எட்டிப் பார்த்தது.

அடடே, இந்த இடத்தில் இவன் மட்டும் தான் இருக்கிறான் - ஏன் மற்றவர்களுக்கு அங்கு இடம் இல்லையா? நுழையத் தகுதி இல்லையா? என்ன கூத்து இது? என்ன திமிர்வாதம் இது? என்ன அயோக்கியத்தனம் இது? என்ன விபரீதம் இது? என்ற சிந்தனை  சீறிப் பாய்ந்தது.

இரு இரு இதற்கொரு முடிவு கட்டுகிறேன் - ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று கைத்தடியை ஒரு தட்டுத் தட்டிக் கிளம்பினார்.

'ஓ சூத்திரர்களே! (மனுதர்மப்படி வேசி மக்களே!) இந்த அக்கிரமத்தைப் பார்த் தீர்களா? நீங்கள் கட்டிய கோயில்களில்  நீங்கள் நுழையக் கூடாதாம்! கருவறையில் அடியெடுத்து வைத்துப் பூஜை செய்ய உங்க ளுக்குத் தகுதிஇல்லையாமே! உங்களுக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை இல் லையா? குருதி கொதிக்கவில்லையா?' என்று போர்க் குரல் கொடுத்தார்!

இன்று நேற்றல்ல - 1937ஆம் ஆண்டி லேயே போர்க் குரல் கொடுத்தார் தந்தை பெரியார். (பெட்டி செய்தி காண்க). 1969 அக் டோபர் எட்டாம் தேதி வந்தது சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியாரின் போராட்ட அறிக்கை..

1970 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி என்று அறிவித்தார்.

தந்தை பெரியாரின் சீடர் கலைஞர் அல்லவா முதல் அமைச்சர். அவர் ஆட்சி யில் இருக்கும்போது அவர் ஏற்றுக் கொண்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் வீதிகளில் இறங்கிப் போராட அனுமதிப்பாரா?

உடனடியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (17.1.1970).

அய்யா அவர்களே, உங்கள் கொள் கையை, விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் தனயன் சட்டம் இயற்றுகிறேன் - போராட் டத்தைக் கை விடுக என்று வேண்டுகோள் அறிக்கை ஒன்றினை வெளியிட,  நமக்குக் காரியம் தானே முக்கியம் - வீரியமா முக்கியம்? என்ற அடிப்படையில் கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது - என்று அறிக்கை வெளியிட்டார். இனநலக் காப்பாளர் தந்தை பெரியார் (19.1.1970).

மானமிகு முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில், இரு வேறு கால கட்டங்களில் இரு தனித்தனி சட்டங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

பார்ப்பனர்களின் குருச்சேத்திரமான உச்சநீதிமன்றத்திற்கு இரு முறைகளும் படை எடுத்துச் சென்று கதவைத் தட்டினர்.

கடைசியாக வந்த தீர்ப்பின்படி (16.12.2015) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆவதற்கு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி விட்டது.

இதுவரை இருவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டினும் ஒரே நேரத்தில் 58 பேர்களுக்கு (தனியே 5ஆம் பக்கம் காண்க) தமிழ்நாட்டின் கோயில்களில் அர்ச்சகர் பணிக்கான ஆணை வழங்கப்பட்ட வரலாற்றுக்கு மகுடம் சூட்டப் பட்ட சமத்துவ நாள்தான் ஆகஸ்டு 14!

பெண் ஒருவரும் ஓதுவாராகவும் நியமிக் கப்பட்ட நேர்த்திதான் என்னே! என்னே! - (வாழ்க பெரியார்!)

இந்த நாள் இனிய நாள் - இலட்சிய வாதிகளுக்கு இளமை முறுக்கேறும் இன்பத் திருநாள். ஜாதி ஒழிப்புத் தீரர்களுக்கு  தேனினும் இனிக்கும் திருநாள்!

ஜாதி ஒழிப்புக்காக இன்னுயிர் ஈந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் தியாகத் தீப நாள்!

பல நூற்றாண்டுகளாக பிறப்பின் அடிப் படையில் பேதப்படுத்தப்பட்டுக் கிடந்த கோடானு கோடிமக்களின் வாழ்வில் சுயமரி யாதை என்னும் மதிப்பைக் கூட்டிய திமுக வின் நூறாம் நாளின் நன்கொடை நல்கிய நன்னாள்!

"தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் புதைத்து விட்டோமே" என்று கண்ணீர் மல்கிய கலைஞரின் கண்ணீரை அவர்தம் மைந்தர் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  துடைத்து - தம் வாழ்வின் பயனை அடைந்தார். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மட்டுமல்ல,  சமதர்ம சமத்துவ விரும்பிகள், மனித உரிமை மாண்பாளர்கள் மத்தியில் மங்கா புகழ் படைத்த திமுக ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை வாயார, மனமார, கையார வாழ்த்துவோம் - பாராட்டுவோம்.

நீடு வாழ்ந்து நிலை பெற்ற சாதனை சரித்திரக் காவியங்களை நாள் தோறும் படைக்கட்டும்! படைக்கட்டும்!!

தமிழர் தலைவர் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம்! பெரியார் உலகம் காண்போம்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

வெல்க திராவிடம்!!!

parthasarathy r நேரம் 9:43 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.