குடிஅரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடிஅரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூலை, 2025

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! - கடந்து வந்த பாதை

 

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!-மஞ்சை வசந்தன்



சுயமரியாதை இயக்கத்தின் கால்கோள் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் நடைபெற்றது என்று கூறும் அளவிற்கு குறிப்பிடும் அளவிற்கு – சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமாக ‘குடிஅரசு’ ஏடு அமைந்தது.

‘குடிஅரசு’ ஏட்டின் முதல் இதழ் 02.05.1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும் மிகக் கடுமையாக,  முனைப்புடன் செயல்பட்டு வந்தார் பெரியார்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, இலக்கு இவற்றைக் கூறும் ஏடாக ‘குடிஅரசு’ அமைந்தது. நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற இலக்குடன் இவ்வேடு தொடங்கப்பட்டதால், ஏடு தொடங்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து, 23.08.1925 இதழ் முதல் தலையங்கத் தலைப்பில்,

‘‘அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன்றுண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும்தானே.’’

என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏடு தொடங்கப்படும் செய்தியறிந்து, திரு.வி.க. அவர்களும், வரதராஜுலு நாயுடு அவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். ஆனால் இச்செய்தியை ராஜகோபாலாச்சாரியிடம் பெரியார் கூறியதும், ‘‘இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டுவிட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. அதனால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது’’ என்றார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகை வெளியிடுவது பற்றிக் கேட்கையில்,

‘‘அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும், அவை தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது. உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்’’ என்று பெரியார் கூறினார். அதைக் கேட்டு அகம்மகிழ்ந்த ஞானியார் அடிகள், ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திறந்துவைக்கும்போது,

‘‘நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்று கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை’’

‘‘உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். ‘குடிஅரசு’ ஏட்டின் கருத்தும் இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இவை ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் கொள்கையாய் இருக்கவேண்டும். இப்பத்திரிகையில் சிறீமான் நாயக்கருக்கு (பெரியாருக்கு) எவ்வளவு சிரத்தையுண்டே அவ்வளவு எனக்கும் உண்டு’’ என்று கூறி வாழ்த்தினார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஆசிரியராய்ப் பெரியார் இருந்த நிலையில் இணையாசிரியராக திரு.தங்கபெருமாள் 6 மாதகாலம் இருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் இறை சம்பந்தப்பட்டவை இடம் பெற்றிருந்ததற்கு அவரே காரணம். பெரியாரின் முழுப்பொறுப்பில் (ஒரே ஆசிரியர் என்ற நிலை) வந்தபின் அதுபோன்ற கருத்துகள் இடம் பெறவில்லை.

‘குடிஅரசு’ ஏடு தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் அதைப் பாராட்டி சுமார் 400 கடிதங்களும், எதிர்த்து 4 கடிதங்களும் வந்தன.

‘‘குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும்’’ என்று விமர்சனங்களுக்கு விடையாய் பெரியார் தம் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு தலையங்கத்தில் பெரியார், தாம் கண்டித்து எழுதியவை பற்றிக் குறிப்பிட்டார். என்னால் கண்டிக்கப்படாதவை எவை என்று பார்த்தால் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கண்டித்திருக்கிறேன்.

அரசியம், மதம், கோயில், கடவுள், சடங்கு, வேதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பனியம், ஜாதி, நீதிமன்றம், அலுவலகம், தேர்தல், கல்வி, காங்கிரஸ் ஆட்சியென்று அவர் கண்டித்தவற்றின் பட்டியல் நீள்கிறது.

‘‘ஒரு பொருள் அல்லது ஒரு கருத்து எவ்வளவு பழைமை உடையது என்று சொல்கிறோமோ, அந்த அளவிற்கு அது சீர்திருத்தப்பட வேண்டியதாகும்’’ என்ற தன் வலுவான கருத்தின் அடிப்படையில்தான்அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்தார். திருத்த வேண்டியவற்றைத் திருத்தினார். பெரியார் உலகியலைப் பேசினார்; உலகியலையே எழுதினார். கண்டித்தாலும், பாராட்டினாலும் அது உலகு, உலக மக்கள் நன்மை இவற்றின் அடிப்படையிலேதான் செய்தார். மக்களுக்குப் புரியும் சொற்களில் பேசினார், எழுதினார். புலமையை, திறமையை கவர்ச்சியைக் காட்டும் வகையில் அவர் பேச்சோ எழுத்தோ அமையவில்லை.

தான் கூறுவதை அப்படியே ஏற்காமல், சிந்தித்து சரியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். எதிர்ப்புக்கும், கண்டனங்களுக்கும், தாக்குதலுக்கும் அஞ்சாது, கலங்காது, பின்வாங்காது, துணிவுடன், எதிர்கொண்டு தன் கருத்துகளைப் பரப்பினார்.

பதவி நாட்டம். புகழ் நாட்டம், பணநாட்டம் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காகவே பாடுபட்டார்.

எனவே தான் ஜெர்மனி தத்துவஞானி வால்டர்ரூபன் என்பவர், ‘‘தந்தை பெரியார் இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை!’’ – என்றார்.

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் ‘‘வால்டர் ரூபன்’’ இந்தியாவைப் பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்.

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு ‘‘கேள்வியை’’ முன்வைக்கிறார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத ‘‘மகத்தான மானுட ஆளுமையுடையவர்’’ யார் தெரியுமா? (Who is the unprecedented Human personality of the present India?)

திகைத்துப் போனவர்கள் காந்தி பெயரைத் தயக்கத்துடன் சொல்ல, காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரைச் சொல்ல, அவருக்கு முன் உதாரணம் அசோகர் எனச் சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல, தான் எழுப்பிய வரலாற்றுப் புதிர் கேள்விக்குரிய பதிலைச் சொன்னார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை ‘‘பெரியார் ஈ.வெ.ரா தான்’’ என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம், மனுதர்மம், வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகத்தளத்தில் போராடுகிறார். அதனால்தான் என்றார். இந்தச் செய்தியை சாகித்திய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் 25.11.2011 அன்று ஆற்றிய ஒரு உரையில் கூறியிருக்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஒவ்வொரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும்போதும் மக்களுக்கு தம் கருத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. ‘குடிஅரசு’ இதழின் நிலை, சமுதாய நிலை இரண்டைப் பற்றியும் ஒளிவு மறைவு இன்றி தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

‘குடிஅரசு’ ஒவ்வோர் ஆண்டைக் கடக்கும் போதும் அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான சவால்களும் தொடர்ந்தன. மதவாதிகள், பக்தர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் கையாளர்கள் என்று பல தரப்பு கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருந்தன; தொடர்ந்தன.

‘‘உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் குடிஅரசின் தலைமீது விழுந்து கிடக்கிறது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, வருணாசிரமக்காரர்களும், சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும்’’ என்று பெரியாரே குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்கள் ‘குடிஅரசு’ ஏட்டின் பிரச்சாரம், அந்த ஏட்டைப் படித்துவிட்டு தொண்டர்கள் செய்யும் பிரச்சாரம் இரண்டும் சேர்ந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்க அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கியதால் அவர்களின் எதிர்ப்பும் வலுவாக இருந்தது.

மேலும் ‘குடிஅரசு’ பெற்றுள்ள மக்கள் ஆதரவையும் பெறவேண்டிய ஆதரவையும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

‘குடிஅரசு’ ‘முதல் வருஷ’த்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ‘குடிஅரசே’  அதிகமான சந்தாதாரர்களையும் வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில்  ‘குடிஅரசு’ 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் ‘குடிஅரசு’ மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும், அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும், தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே  உறுதி கூறலாம்.

‘குடிஅரசு’வின் வாயிலாகப் பெரியார் ஆற்றிய குமுகாயத் தொண்டின் தாக்கம் பற்றிக் கோவை அய்யாமுத்து அவர்கள்,

‘‘கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து. அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்து வந்தது போலவே, பெரியார் ‘குடிஅரசு தொடங்கிச் சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் அன்பும் அறிவும் ஆவேச உணர்வும் பொங்கிட உழைத்தார். அய்ம்பது ஆண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் அய்ந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதோர் இலர்!’’

இச்சான்றுரைகள் யாவும் மிகையானவை அன்று; மெய்யானவை!

ஆக ‘குடிஅரசு’ என்பது வெறும் இதழாக இல்லாமல் ஓர் இயக்கமாக விளங்கிற்று. சுயமரியாதை இயக்கந்தான் ‘குடிஅரசு’ இயக்கம்; ‘குடிஅரசு’ இயக்கந்தான் சுயமரியாதை இயக்கம். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றுப் பெயராக இலங்கின.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே ‘குடிஅரசு இயக்கம்’ என்று குறிப்பிட நேர்ந்தது.

‘‘என் கருத்துகளை வரும் தலைமுறையினர்க்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை’’ என்னும் உறுதிப்பாட்டுடன் ‘குடிஅரசு’ ஏட்டை ஈன்ற பெரியார், அதைப் பேணி வளர்ப்பதற்கான முறைகளைச் செம்மையாகக் கையாண்டார்.

‘குடிஅரசு’ முதல் இதழின் முதற்பக்கத்தில், ‘‘சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா’’ ரூபாய் மூன்றுதான் என்பதோடு, ‘‘தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால், இதனை ஆதரிக்க வேண்டுவது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்’’ என்றும் பெரிய எழுத்துகளில் பொறித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இதழியல் வரலாற்றில் இணையில்லாப் பெருமை படைத்த ‘குடிஅரசு’ ஏட்டை அறிமுகம் செய்தார் பெரியார். கடந்த மே மாதத்துடன் இந்த இதழ் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன.

‘‘விடுதலை’’ ஏடு நீதிக்கட்சியென்று அழைக்கப்படும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினரால் 01.06.1935ஆம் நாள் அன்று தொடங்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டு, விளைவுகளை விடிவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஏடு தொடங்கப்பட்ட போது பெரியார் அவர்கள், அதை வரவேற்றுப் பாராட்டி ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.

தற்போது அண்ணாசாலை என்று அழைக்கப்படும் மவுண்ட்ரோட்டில் 14ஆம் எண்ணுள்ள கட்டடத்திலிருநது வெளிவந்தது. அதன்பின் 1937 ஆண்டு முதல் பெரியாரே ஏற்று நடத்தினார். 01.01.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடக்க காலத்தில் ‘விடுதலை’ ஏட்டின் விலை காலணா.

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வேடு பரப்பிக்கொண்டிருக்கிறது. வருணபேதம், ஜாதி, மதம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை, வேத, சாஸ்திரம், புராணங்களை மறுத்தல், எதிர்த்தல், ஒழித்தல் இதன் முதன்மை இலக்காக இருந்து வருகிறது. சமூகநீதி, சமத்துவம், அறிவியல், பொதுவுடைமை கல்வி உரிமை, பெண்ணுரிமை, ஆதிக்க ஒழிப்பு, தமிழை அறிவியல் மொழியாக்கல் போன்றவற்றைச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது. எனவே இது செய்தி ஏடல்ல, இயக்கக் கொள்கைகளை வென்றெடுக்க, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழிகாட்டும் ஏடு. இன்றைக்கு வீடு தோறும் ‘விடுதலை’ என்பது இலக்காகக் கொள்ளப்பட்டு பரப்பப்படுவதோடு, இணையதளத்திலும் இலவசமாய்ப் படிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறையாகத் தொடங்கப்பட்டு அதன்பின் நாளேடாக ஆக்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் அவர்கள். இவர் 01.06.1935 முதல் 06.05.1936 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார். இவர் தந்தை பெரியார் 1940இல் மும்பை சென்று அம்பேத்கரைச் சந்தித்துபோது உடன் சென்றவர். ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்கள் 04.11.1936 முதல் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1936 ஜனவரி 7ஆம் நாள் வரை அப்பொறுப்பிலிருந்தார்.

நீதிக்கட்சியால் தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டை நடத்த முடியாமல் பெரியாரிடம் ஒப்படைத்தது. 29.051935 நீதிக்கட்சியால் நிறுத்தப்பட்ட ‘விடுதலை’ ஏடு மீண்டும் 01.07.1937 முதல் பெரியாரால் நாளிதழாக நடத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.

நீதிக்கட்சி ‘விடுதலை’ ஏட்டை நடத்தியபோது,

‘‘பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

பரவரோடு குறவருக்கு மறவருக்கும் விடுதலை!’’

என்ற பாரதியார் பாடல் இடம் பெற்றிருந்தது. பெரியாரிடம் ‘விடுதலை’ வந்தபின் 01.07.1937 முதல் அப்பாடல் இடம் பெறவில்லை.

1937இல் துறையூரில் முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டில் அண்ணா பங்கேற்றார். அண்ணா முதன்முதலில் தலைமையேற்ற மாநாடு இதுதான். துறையூரில் நடந்த மாநாடு குறித்து 1937 ஆகஸ்ட் 23ஆம் தேதி பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை துல்லியமாக அதில் கூறியிருந்தார்.

சுயமரியாதை இயக்கம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் ஜஸ்டிஸ் கட்சி ஆழப்புதைக்கப்பட்டு, சத்தியமூர்த்தியின் ஆசை நிறைவேறியிருக்கும் என்ற வரலாற்று உண்மையையும் கூறியிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் சுயமரியாதைக்காரர்களின் தலையிலே இறக்கப்பட்டது என்றும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்த செலவாக்குக்கு காரணம் சுயமரியாதை இயக்கமே என்றும் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்கவேண்டியதாயிற்று. அறவே அழியும் நிலையிலிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிய பெரியார், ‘விடுதலை’ ஏட்டையும் பொறுப்பேற்று நடத்தினார்.

ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ கடைசியாக வெளிவந்தது 29.05.1937 அன்றுதான்.

‘விடுதலை’ ஏட்டை பெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றினார். 01.07.1937 முதல் விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. பெரியார் பொறுப்பில் விடுதலை வந்தபின் அதன் ஆசிரியராக பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை பொறுப்பேற்றார். வெளியிடுபவராக ஈ.வெ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டில் வருணாசிரம தர்மத்திற்கும், முதலாளிகள் ஆட்சிக்கு எதிராகப் பத்திரிகை நடத்துவது கஷ்டமும், நஷ்டமும், தொல்லையுமான காரியமாகும் என்ற கசப்பான  உண்மையையும் பெரியார் சரியாகக் கூறினார்.

விடுதலைப் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை அரசு விரோதம், வகுப்பு துவேஷம் ஊட்டுகின்றன என்று கூறி வழக்குத் தொடுத்து,  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பண்டித முத்துசாமி பிள்ளையும் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

09.01.1939 அன்று பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று 13.02.1942 வரை பணியாற்றினார். 14.02.1942 முதல் 18.09.1943 வரை ‘விடுதலை’யின் ஆசிரியராக என்.கரிவரதசாமி பணியாற்றினார்.

18.09.1943 இதழோடு ‘விடுதலை’ நிறுத்தப்பட்டு யுத்தப் பிரச்சார ஏடாக வெளிவந்தது. 19.09.1943 முதல் 05.06.1966 வரை ‘விடுதலை’ பெரியார் பொறுப்பில் இல்லை. அக்காலகட்டத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ‘‘புது விடுதலை’’ என்ற பெயரில் வந்தது.

தனக்கு நெருக்கடி தந்த அரசாங்கத்திற்கு போர்க் காலம் என்பதால் அரசுக்கு துணை நிற்றல் என்ற அடிப்படையில் பெரியார் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். பத்திரிகை முழுக்க போர்ச் செய்திகளே அச்சிடப்பட்டிருந்தன. அப்போது சீர்திருத்த எழுத்தும் தவிர்க்கப்பட்டது.

1943 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ‘விடுதலை’ இதழ்கள் பெரியார் பொறுப்பில் இல்லை. அதுபோல் 1944 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டு காலமும் அவர் பொறுப்பில் ‘விடுதலை’ வெளிவந்தது. கே.ஏ. மணி(மணியம்மையார்) 07.06.1946 முதல் 06.09.1949 வரை விடுதலை ஆசிரியராகப் பொறுப்பில்  இருந்தார். 1949 செப்டம்பர் 7ஆம் தேதி கே.ஏ.மணி என்னும் பெயர் ஈ.வெ.ரா.மணியம்மை என்று மாற்றப்பட்டு இதழ் வெளிவந்தது. (பெரியார் மணியம்மையார் திருமணம் 09.07.1949ல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

07.09.1949 முதல் 16.03.1978 வரை ஈ.வெ.ரா. மணியம்மை அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் அதிகார பூர்வ ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு ‘விடுதலை’ இதழுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இவ்வளவு தொகை கேட்கப்படவில்லை என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆரிய பார்ப்பனர்கள், எப்படியாவது விடுதலையை முடக்கி, அதன் பிரச்சாரத்தை, அதன்மூலம் மக்கள் பெறும் விழிப்பைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே, அரசின் மூலம் இச்செயலைச் செய்தனர்.

அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தங்கள் கருத்துகளை ‘விடுதலை’யில் எழுதி மக்களைக் கவர்ந்தனர், விழிப்பூட்டி எழுச்சிபெறச் செய்தனர்.

அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் தி.மு.க. தொடங்கப்பட்டபின், குத்தூசி குருசாமி நிருவாக ஆசிரியராக ‘விடுதலை’யில் சிறப்பாக எழுதி வந்தார். குத்தூசி குருசாமி தந்தை பெரியாருடன் முரண்பட்டு நின்றதால் விலக்கப்பட்டார்.

அந்நிலையில் விடுதலையைத் தொடர்ந்து நடத்துவதில் சரியான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி பெரியாருக்கு ஏற்பட்டது. அச்சூழலில் பெரியார் தேர்வு செய்தது. கடலூரில்  வழக்கறிஞராகப் பணியாற்றிய கி.வீரமணியவர்களைத்தான்.

பெரியாரின் அன்புக் கட்டளையை ஏற்று கி.வீரமணியவர்கள் 21.08.1962 முதல் ‘விடுதலை’க்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் ‘விடுதலை’ தொடர்ந்து வெளிவர துணை நின்றார்.

மணியம்மையார் மறைவிற்குப்பின் ‘விடுதலை’யின் முழுப் பொறுப்பையும் ஏற்று, விடுதலையை விரிவாக்கி, சந்தாக்களைப் பெருக்கி, திருச்சியிலும் ஒரு பதிப்பை உருவாக்கி சிறப்புடன் நடத்தி வருகிறார். ‘விடுதலை’ தமிழக வரலாற்றில் பல சாதனைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

‘விடுதலை’ பற்றி அண்ணா

‘‘கீழ்த்தர ஜாதியாய் – நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் – உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் – பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டுவிட்டாய் – கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் – அரசியலிலோ, பிறதுறைகளிலோ கேவலம்  கீழ்த்தர சிப்பந்தியாய்ச் சீர்க்குலைக்கப்பட்டுவிட்டாய்’ என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியும் வாழக்கைத்துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது’’ என்று ‘விடுதலை’யின் அளப்பரிய பணியைக் கூறினார்.

கலைஞர் கருத்து

‘‘‘விடுதலை’ என் வழிகாட்டி, திசைகாட்டி, ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் தவறாது படித்து என்னை நான் சீர்செய்து கொள்கிறேன்; நேர் செய்து கொள்கிறேன் என்று ‘விடுதலை’யைப் பெருமையாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

சமூகநீதி, இடஒதுக்கீடு, ஆட்சியாளர்களை நெறிப்படுத்தல், போராட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’ ஏட்டின் பங்கு இணையற்றது.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதில் இவ்வேடு வரலாற்று சாதனை செய்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அரசுக்கும், மக்களுக்கும், அலுவலர்களுக்கும், தொண்டு பணி செய்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தேவையான கருத்துகளை அறிக்கையாக எழுதி வழிநடத்துகின்ற, தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற பணியை ‘விடுதலை’ செய்து வருகிறது. தொலைக்காட்சிகளின் அன்றாட விவாதங்களின் கருப்பொருளை ‘விடுதலை’யே வழங்குகிறது என்றால் அது மிகையன்று.

இத்தகு சிறப்புக்குரிய பழைய ‘குடிஅரசு’ ஏட்டையும் ‘விடுதலை’ ஏட்டையும் இன்றைய தலைமுறை படிப்பதோடு, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘The
Modern Rationalist’ போன்ற ஏடுகளைத் தவறராது படித்து, விழிப்பும், தெளிவும் பெற்று, கல்வி, சமூக நீதி, சமத்துவம், சமஉரிமை பெற வேண்டும், அனைவரும் பெறத்தொண்டாற்ற வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே காப்பாற்றப்பட,  இந்திய மக்கள் உரிமையும் உயர்வும் பெற அதுவே வழி! சுயமரியாதைச் சுடரொளிதான் இந்தியா எங்கும் வெளிச்சமும், விழிப்பும் தருகிறது என்பதே இன்றைய யதார்த்த நிலை! தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம்! .

- உண்மை இதழ், 1-15.7.25

செவ்வாய், 9 ஜூலை, 2024

குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!- முனைவர் துரை.சந்திரசேகரன்

 

விடுதலை நாளேடு

- முனைவர் துரை.சந்திரசேகரன்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப்பது ஈரோட்டில் நூற்றாண்டு கண்ட சிறப்பினைப் பெற்ற குடிநீர் தேக்கத் தொட்டி. அய்யாவின் செயல்பாட்டின் சிறப்பை உணர்த்திடும் வகையில் இன்றைக்கும் அந்த குடிநீர்த் தொட்டி செயல்பட்டு வருவதைக் காணலாம்!

1919இல் மோதிலால் நேரு தலைமையில் நடைபெற்ற அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாடு பெரியார் பங்கு பெற்ற மாநாடு. காங்கிரசில் இணைந்து நாட்டின் விடுதலைக்கும், மக்களின் வாழ்வாதார விடுதலைக்கும் தொண்டாற்ற விரும்பிய பெரியார் தமது மக்கள் பணிக்கு காங்கிரசு ஏற்புடையதாக இருக்குமென்று கருதியே தீவிரமாக செயல்படத் தொடங்கினார் – 1919 ஆண்டு முதல். ஜாலியன் வாலாபாக் படுகொலையும் பெரியாரின் உள்ளத்தை பெரிதாக பாதித்தது. காங்கிரசில் இன்னும் தீவிரமாக உழைத்துப் பாடுபடலானார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு மாகாண காங்கிரசு மாநாட்டில் தீர்மானமாக ஏற்று பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளை அங்கீரிக்க வேண்டும் என வலியுறுத்திவும் செய்தார் பெரியார். தீர்மானம் கொண்டுவர அவரே முனைப்பு காட்டினார். உரிய முயற்சிகளையும், வற்புறுத்தலையும் செய்து ஆதரவும் திரட்டினார்.

1920இல் திருநெல்வேலி,
1921இல் தஞ்சாவூர்,
1922இல் திருப்பூர்,
1923இல் சேலம்,
1924இல் திருவண்ணாமலை,
1925இல் காஞ்சிபுரம் மாநாடு

என தொடர்ந்து நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் பெரியாரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பெரியாரின் முயற்சிக்கு தொடர்ந்து தோல்வியே கிடைத்தது.

மக்களிடையே தமது கருத்துகளை கொண்டு செல்லவும், விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தவும், எண்ணங்களை ஈடேற்றவும் ஒரு பத்திரிகை அவசியம் என்பதை உணர்ந்தார்.

தாம் முன்மொழியக்கூடிய தீர்மானங்கள் மக்கள் நலத்துக்கானது. மானுட உரிமைக்கானது. சமூகநீதி கோருவது. ஆயினும் காங்கிரசு தலைவர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மறுக்கிறார்களே… என்றெல்லாம் எண்ணிய தந்தை பெரியார் பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்ததிலோ, தொடங்க வேண்டும் என்று எண்ணியதிலோ வியப்பில்லை.

பெரியாரின் தன்னம்பிக்கை!

“தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட்டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். இக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன்.

சொல்ல வேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் ‘குடிஅரசை’ வெளியிட்டு என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (‘குடிஅரசு’ – 10.6.1929) என்று அவர் சொன்னதில் உள்ள தன்னம்பிக்கை வருங்காலத் தலைமுறை பற்றிய கவலை, கடமை உணர்வு அவருக்கு இருந்தது என்பதை நாம் உணர முடியும்.

1922 கோவை சிறையில் ‘குடிஅரசு’ ஏடு தந்தை பெரியாரின் எண்ணத்தில் கருக்கொண்டது.

19.1.1923இல் காங்கிரசில் தலைவராக இருந்தபோதே ‘குடிஅரசு’ பதிவு பெற்றது.

2.5.1925இல் பெரியாரால் நிறுவப் பெற்று, வ.மு.தங்கபெருமாள் பிள்ளை ஆசிரியர் பொறுப்பில் உருப்பெற்றது ‘குடிஅரசு’. கடலூர் – திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தொடங்கி வைத்தார். ‘குடிஅரசு’ உதயமானது.

தங்கள் புரட்சிக் கருத்துகளைப் பரப்புவதற்கு மக்கள் பெரும் பயன் குவிப்பதற்கு காரல் மார்க்சுக்கு, ‘ரைனிஷ்’ இதழ் உதவியதைப் போல –மாமேதை லெனினுக்கு இஸ்க்ரா, ஸார்யா, ரயோச்சயா, கஸேத்தா பயன்பட்டதைப் போல-மக்கள் தலைவர் ஹோசிமின்னுக்கு வியத்லாட் உழைத்ததைப் போல –ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அம்பேத்கருக்கு ஜனதா, பகிஷ்கரத் பாரத் தோன்றாத் துணை நின்றதைப் போல-
இந்திய தேசத் தந்தை காந்தியாருக்கு ‘அரிசன்’, ‘யங் இந்தியா’ ஊன்று கோலாய் இருந்ததைப் போல-

அறிவுலகத் திருத்தூதுவராம் தந்தை பெரியாருக்கு ‘குடிஅரசு’ கருத்துப் பரவல் தூதுவனாய் அமைந்தது எனலாம்.

குடிஅரசின் முழக்கங்கள்!

 

“மனுநீதி போன்ற அதர்ம நீதி உலகில் மற்றொன்றும் இல்லை.”
“சூத்திரன் என்று உன்னைச் சொல்லிக் கொள்ளாதே.”
சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள்.
“இறந்தவர்களைத் திருப்தி செய்யப் பார்ப்பனர்கள் வயிற்றை நிரப்பாதே”
“சுயமரியாதை பெற்றால் – சுயராஜ்யம் பெறலாம்!”
இப்படிப்பட்ட முழக்கங்கள் வெளியிடப் பெற்றிருந்தன.

முதல் ‘குடிஅரசு’ இதழிலேயே இவ்வாறு நோக்கங்களை பதிவு செய்திருந்தார் பெரியார்.

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும்.

நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்சசிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன் மூலம் உழைத்து வருவோம்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.

மக்களிடம் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளருதல் வேண்டும்.
மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்.”

(2.5.1925 – ‘குடிஅரசு’)

 

“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும்.

 

மேற்சொன்ன கொள்கைகளையாவது நாம் சிறிதளவு பயமின்றி எதிர்த்துச் சினேகிதர் – விரோதி என்ற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை” (2.5.1925 – குடிஅரசு)

தெளிந்த குறிக்கோளும், அச்சமற்ற தன்மையும் ‘குடிஅரசு’க்கு இருந்ததை தந்தை பெரியார் தெளிவாக்கி உள்ளதைப் பாருங்கள்.

 

‘குடிஅரசு’ – ‘புரட்சி’ எழுத்துகள்

 

“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிடத் தீண்டாதாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம். ஏனெனில், சமுதாயப் பெருக்கத்துக்குத் தக்கவாறு கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ; அவர்கள் முன்னேறவே இல்லை.”

“மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக மான அவமானமென்னும் தன்மானம் ஆகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கும்.” (9.1.1927 – குடிஅரசு)

“சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஒரு ஜாதியார் (பார்ப்பனர்) பிழைப்பதற்கு இருக்குமே அல்லாது வேறில்லை.”

இவ்வாறு சுயமரியாதை என்ற கருத்தையே பரப்பிட ‘குடிஅரசு’ துணை நின்றது.

குடிஅரசின் மானிடப் பற்றுமிக்க
கட்டுரைத் தலைப்புகள்

குடிஅரசின் சில கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்தாலே தந்தை பெரியாரின் எழுத்தாற்றல், மானுடப் பற்று, மனித உரிமைக்குரல் வெளிப்படும் என்பதை உணரலாம்.

*தமிழர்களே! உங்களுக்கு புத்தி இல்லையா?
*புராண ஆபாசங்கள்
*ஆச்சாரியாரின் 10 கற்பனைகள்
*தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?
*சென்னையே என்ன செய்யப் போகிறாய்?
*முத்தையா வாழ்க!
*இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?
*தோழர் என விளியுங்கள்!
*போர் மூண்டுவிட்டது!
*சீர்திருத்தமா? அழிவு வேலையா?
*தமிழர் ஒன்று சேர்க!
*ஜாதித் தொழிலாளர் – கூலித் தொழிலாளர்!
*மகன் செத்தாலும் மருமகள் முண்டை ஆக வேண்டும்!
*சுயமரியாதைத் திதியும் புரோகிதத் திதியும்.
*இந்தியா ஒரு நேஷனா?
*நான் சொல்லுவது கட்டளையா?
*ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன்?
*உதவாக்கரை இலக்கியங்கள்!
*தேவர்களின் காமவிகாரம்!
*பிராமணரைவிட வெள்ளைக்காரரே மேல்…
தொடக்கக் கல்வி மட்டுமே வாய்த்த தந்தை பெரியார் பிறவிப் பேரறிவாளர் என்பதை பறைசாற்றும் தலைப்புகள். பெரியாரின் எழுத்துகள் எந்த அளவு தனித்துவமிக்கவை – கவரும் தன்மை நிரம்பியவை என்பதும் வெளிப்படும்.

வாய்மைப் போரின் ஆயுதம்

தந்தை பெரியார் நடத்திய வாய்மைப் போருக்கு வலு சேர்ப்பதற்கும், வெற்றியை ஈட்டித் தருவதற்கும் போர் ஆயுதமாக பல ஏடுகள், இதழ்கள் அவரால் தொடங்கி நடத்தப்பெற்றன. அவற்றில் முதன்மையானதே குடிஅரசு, திராவிடன், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை என பல தமிழ் ஏடுகளும், Revolt, Justicite, The Modern Rationalist முதலான ஆங்கில இதழ்களும் அவற்றில் அடங்கும்.

“உண்மைகளை அறிதல்; உண்மைகளைக் கண்டு பிடித்தல்; உண்மைகளை உலகம் அறிய வெளியிடல்; உண்மைகளை ஊன்றுவதற்காக உழைத்தல்; உண்மைகளை நாட்டும் முயற்சியில் வெல்லுதல் முதலிய குறிக்கோள் கூறுகளைத் தன்னகத்தே கொண்டதுதான் வாய்மைப் போர் என்பது” என்கிறார் பெரியாரியலாளர் பேராசிரியர் அ.இறையன்.

“மனிதத் தன்மையும், பகுத்தறிவும் உடையவன் அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபமும், விருப்புக் காட்ட வேண்டிய இடத்தில் விருப்பும், வெறுப்புக் காட்ட வேண்டிய இடத்தில் வெறுப்பும் காட்டித்தான் தீர வேண்டும்” (18.12.1927 – குடிஅரசு) என்று போராடிய பெரியார் நடத்திய வாய்மைப் போருக்கு உற்ற துணையாக நின்று சமர் செய்ததே குடிஅரசு.

“திராவிடர் இயக்கத்தின் போராட்ட்த்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை. எழுதுகோல்தான் அவர்களின் இணையில்லா ஆயுதம்! இதழ்களையே போர்க் கருவிகளாகப் பயன்படுத்தியே திராவிடர் இயக்கம் வெற்றி பெற்றது” என்பார் இதழியலாளர் அ.மா.சாமி.

திராவிடன் – ஜஸ்டிஸ் (Justice)

1916 நவம்பர் 20ஆம் நாள் தோற்றுவிக்கப் பெற்ற ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ (SILF) எனும் இயக்கத்தின் பிரச்சார ஆயுதங்கள் ‘Justice’, ‘திராவிடன்’, ‘ஆந்திர பிரகாசிகா’. ‘Justice’ எனும் ஆங்கில ஏட்டுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவு செல்வாக்கு இருந்திருந்தால் கட்சியின் பெயரே Justice Party என்றும், ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கும்!

நீதிக்கட்சி சார்பாக 1917இல் தோன்றிய நாளிதழே ‘திராவிடன்’. 89 பக்கங்களில் வெளிவந்தது. தொடக்கத்தில் அதன் ஆசிரியர் என்.பக்தவத்சலம். 1923இல் ஏ.சண்முகம் பிள்ளை. 1927 செப்டம்பர் முதல் சில காலம் தந்தை பெரியார்… அய்யாவுக்குப் பின் ஜனக சங்கர கண்ணப்பர் (J.s.கண்ணப்பர்) ஆசிரியராக (இதழ் நிறுத்தப்பட்ட) 1931 வரை இருந்தார்.

‘திராவிடன்’ நாளிதழ் தோன்றுவதற்கான காரணத்தைக் கூற வந்த பெரியார், “படித்திருந்த பிராமணரல்லாதார் சிலர் தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டுக் கிடக்கிறோம் என்று யோசனை செய்து பார்த்ததில், பிராமணப் பத்திரிகைகளும் கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்து, தாங்களும், மற்றவர்களைப் போல முன்னேறுவதற்குத் தங்களுக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று கருதி… ‘திராவிடன்’ பத்திரிகையை ஏற்படுத்தினார்கள்.” (மலர் 13 – இதழ் 196) என்று குறிப்பிட்டுள்ளார்.

குடிஅரசின் தாராள உள்ளம்!

தாம் நடத்திய ‘குடிஅரசு’ (30.1.1927) இதழிலும் ‘திராவிடனை ஆதரிக்க வேண்டும்’ என்று தமது வேண்டுகோளை இப்படி விடுத்துள்ளார் தந்தை பெரியார்.

“… நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு, நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

… சாதாரணமாக ‘திராவிடன்’ பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணர்கிறார்களா? அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா?… கட்டின பெண்டை தெருவில் அலைய விட்டுவிட்டு தாசிவீடு காத்துத் திரிவது போல், திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவே நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படச் சரியான மார்க்கமாகும்.”

குடிஅரசின் தாராள உள்ளத்தைப் பாருங்கள். நம் இனத்துக்கான இன்னொரு இதழின் வளர்ச்சியில் எந்த அளவு அக்கறை இருப்பதை எண்ணுங்கள். பெரியாரின் உயர்ந்த இதழியல் பண்பாட்டு நோக்கும் போக்கும் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம் இல்லையா?

‘முதல் நாளிதழ்கள் மூன்று’ என்னும் தமது நூலில் “திராவிடன் நாளிதழ் ஜாதிப் பாகுபாடுகளைப் போக்குவதிலும், மக்களிடையே மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைகளை அகற்றுவதிலும் பேரார்வம் காட்டியது” என்கிறார் பேராசிரியர் மா.ரா.இளங்கோவன். முதல் மூன்று நாளிதழ்களில் திராவிடனும் ஒன்று.

தகுதிமிக்க தலையங்கங்கள்!

‘தலையங்கம் என்பது இதழின் உடலும் உயிரும் ஆகும். இதழாசிரியர் சிக்கல்களை ஆய்வதுடன், தெளிவாக, துணிவாக, பயன் விளையும் வகையில் தமது கருத்தினை வெளியிடல் வேண்டும்’ என்பார் வினோத் மேத்தா.
12.8.1926 ‘குடிஅரசு’ இதழின் தலையங்கம் இதோ…

“… ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண் விடுதலை இல்லை என்பது உறுதி.

… பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள். ஏனெனில், தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் நன்மையையே, தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்ப் பெண்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று ‘பெண் விடுதலை’ பற்றிய கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

27.5.1928 குடிஅரசு இதழில்…

“செங்கற்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மாநாடு திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் அக்கிராசனப் பிரசங்கம” என்னும் தலைப்பில் பெரியாரின் உரை வெளிவந்துள்ளது.

“ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒருவித தொழிலாளிகளே… ஆதலால், இம்மாதிரி மாநாட்டுக்கு, உபாத்தியாயத் தொழிலாளர் மாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு தொழிலாகப் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை!

அய்யாவின் ‘குடிஅரசு’ உரை ஆசிரியர்களை எந்த அளவுக்கு தன் உணர்வு பெற வைத்திருக்கும், சிந்திக்கத் தூண்டியிருக்கும்!

மறைமலை அடிகளார் தந்தை பெரியாரை, சுயமரியாதை இயக்கத்தை கடுமையாகத் தாக்கிப் பேசியதாக இதழ்களில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ‘பல்லாவரத்துப் பண்டிதர்’ எனும் தலைப்பில் 29.7.1928 ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறைமலை அடிகளார் “தங்களுக்காவது, தங்கள் இயக்கத்தைச் சார்ந்த அன்பர்களுக்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதும் இல்லை; யாண்டும் சொல்லியதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என் மீது வருந்துதல் வேண்டாம்” என்று 24.8.1928 நாளிட்ட தமது கடிதம் மூலம் கருத்தறிவித்தார்.

அக்கடிதம் கண்ட பெரியார் 2.9.1928 ‘குடிஅரசு’ தலையங்கத்தில் “திரு.வேதாசலம் (மறைமலை அடிகளாரின் இயற்பெயர்) அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால், பத்திரிகைகளிலும், நிரூபங்களிலும் கண்டவற்றுக்குச் சமாதானம் எழுதுவது என்பது நமக்குச் சற்று சங்கடமாகவே இருக்கிறது… திரு. வேதாசலம் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதை ஆதாரமாக வைத்தே அவ்விஷயங்களை நழுவ விட்டுவிடலாம் என்றும் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று பதிலுரை தந்திருந்தார். மறைமலை அடிகளாரிடமிருந்து அய்யா எதிர்பார்த்தது போலவே பதிலும் வந்தது – என்பது பெரியாரின் குடிஅரசின் எழுத்தின் வலிமையை, நனி நாகரிகத்தை எடுத்தியம்புவதாய் இருப்பதை அறியலாம்.

நமது இயக்கமும், தந்தை பெரியாரும் ‘திறந்த புத்தகம்’ போல… என்பது சாலப் பொருத்தமன்றோ! வரலாற்றை புரட்டிப் போட்ட முக்கியத்துவம் வாய்ந்திட்ட இதுபோன்ற தலையங்கங்கள் ஏராளம் ‘குடிஅரசு’ ஏட்டில்!

‘குடிஅரசு’ ஏட்டில் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் கலைஞர் எழுதிய தலையங்கம், அய்யா அவர்களாலேயே பாராட்டப்பட்ட தலையங்கம்.

“… தமிழர்கள் உயிரோடு வாழும் தமிழ்நாட்டிலே தமிழர்களுடைய மொழிக்குத் தடை உத்தரவு. ஆங்கில அரசாங்கம் அல்ல – ஆரிய அரசாங்கத்தின் ஆணை. தமிழ்மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக, அனுமார்களாக வாழ்வதுதான்” என்று தலையங்கத்தில் கலைஞரால் எழுதப்பட்ட ஒரு சிறு பகுதி. படிப்போரை – வாசகர்களை அறிவைத் தூண்டி சிந்திக்கச் செய்யும் எழுத்தல்லவா இது! (9.2.1946 – குடிஅரசு)

‘குடிஅரசு’ தமிழ் உரைநடைக்கு ஆற்றியுள்ள பங்கு – பணியைப் பற்றி தமிழறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் ‘இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி’ என்னும் நூலில் பதிவு செய்துள்ள கருத்தைப் படியுங்கள்:

“பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் நடத்திய ‘குடிஅரசு’ மக்களுக்கு உலக அறிவையும் நன்கு ஊட்டியது. சமய சீர்திருத்தம் பற்றிப் பல கட்டுரைகள் அதனில் வெளிவந்தன. அவற்றை எதிர்த்துப் பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்தன. இவ்விதமாக அவை தமிழ் உரைநடையை வளர்த்தன.”

“பெரியார் அவர்கள் மிகுதியான அளவுக்குத் தமிழை இந்த நூற்றாண்டில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்… அவர் கையாண்ட மொழிநடை தனித்தமிழ் மொழிநடை அல்ல. அது மணிப்பிரவாள மொழி நடையும் அல்ல; அது வேறு ஒரு நடை என்பார் தமிழாய்வறிஞர் முனைவர் பொற்கோ. இவ்வாறு ‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள் அல்லவா பெரியார்!