தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் - எதிர்வினை 28

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 28

ஜனவரி 16-31 2019

 நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும்

நேயன்

சென்னையில் பெரியார் தலைமையில் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் கூட்டம் நடந்தது. 8.10.1939ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அந்தக் கூட்டம், சென்னை ராயல் தியேட்டரில் நடந்தது. அந்தக் கூட்ட மேடையில் கே.வி.ரெட்டி, சர்.பன்னீர்செல்வம், பெரியார் ஈ.வெ.ரா., எஸ்.முத்தையா முதலியார், திவான்பகதூர் ஆர்.இரட்டைமலை சீனிவாசன், குமாரராஜா முத்தையா செட்டியார், ராவ்பகதூர் எம்.சி.ராஜா, ராவ்சாகிப் என்.சிவராஜ், சோமசுந்தர பாரதியார், அருணகிரிநாதர், சண்முகானந்தா, அயப்பாக்கம் முத்துரங்க ரெட்டியார், டி.ஷண்முகம் பிள்ளை, ஏ.அப்பாதுரை பிள்ளை, பி.பாலசுப்பிரமணிய முதலியார் (சண்டே அப்சர்வர்), பாசுதேவ், தாமோதரம் நாயுடு, ஷ.கோதண்டராம முதலியார், சர்-.ஏ.பி.பாத்ரோ, கே.சி.சுப்பிரமணியம் செட்டியார், எஸ்.எஸ்.ஆனந்தம், பார்வதி அம்மாள், குஞ்சிதம் அம்மாள், குருசாமி, சுப்பிரமணிய பிள்ளை, சங்கரன் எம்.சி., டி.வி.நடராஜன், என்.வி.முருகேசன், ஜீவானந்தம், சிவஞானம், நாராயணியம்மாள், கணேசன், சித்தூர் கன்னையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்கிறது ‘குடிஅரசு’. இந்தப் பெயர் பட்டியல் ‘குடிஅரசு’ இதழில் உள்ளவாறு இங்கு தரப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இக்கூட்டம் எற்பாடு செய்யப்பட்டாலும் எராளமானவர்கள் கலந்து கொண்டிருப்பதாக பெரியார் குறிப்பிடுகிறார். சரியாக விளம்பரம் செய்யாவிட்டாலும் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். இவர்கள் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ‘தென்னாட்டுத் தலைவர்கள் அறிக்கை’ என்று தலைப்பிட்டுள்ளது ‘குடிஅரசு’.

இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி… ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டுமென்பதுதான் நமது ஆசை…

 

எம்.சி. ராஜா

தென்னாட்டுத் தலைவர்களாக இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். இதனை, “நமது பார்ப்பனரல்லாதாரின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் அறிகுறி” என்று தனது பேச்சில் குறிப்பிட்ட பெரியார்,

“காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான பிரதிநிதியாக முடியாது என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டத்தில், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகிய மூவரும் பேசினார்கள். இந்தத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை, 15.10.1939ஆம் தேதி வெளியான ‘குடிஅரசு’ இதழில் இடம் பெற்றுள்ளது.

இரட்டைமலை சீனிவாசன்

“இம்மாகாணத்தின் தென்பாகத்தைப் பொறுத்தமட்டில் பல சமூகங்களைச் சேர்ந்த மெஜாரிட்டி மக்கள், காங்கிரஸின் கொள்கைகளையும் திட்டங்களையும் வெறுத்தது என்றும், அதில் சேராமலிருந்து வருகிறார்கள். இம்மாகாணத்தில் ஒரு சிறு சமூகம் பல சமூகங்களை அடக்கியாண்டு வர முடிந்தது. அரசியல் ஆதிக்கத்தையும், பதவிகளையும் ஒரு சிறு சமூகமாகிய… அதாவது நூற்றுக்கு 3 சதவிகிதமுள்ள ஒரு சமூகம் ஏகபோகமாக அனுபவித்து வந்தது. கடந்த 23 வருடங்களுக்கு முன்தான் டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி.டி.தியாகராய செட்டியார், பனகல் ராஜா போன்ற பிரபல தலைவர்களில் பார்ப்பனரல்லாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டம் புகுத்ததப்பட்ட காலத்தில், இம்மாகாணத்திலுள்ள மெஜாரிட்டி சமூகங்களின் மீது மைனாரிட்டிகள் ஆதிக்கம் செலுத்தாமலிருக்க வேண்டிய பாதுகாப்புகள் வேண்டுமென்றே இப்பார்ப்பனரல்லாத தலைவர்கள் கோரினார்கள்…

என்.சிவராஜ்

சட்டசபையில் காங்கிரஸ்காரர் புகுந்தபின் நமது தலைவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் பெரிய ஏமாற்றத்தை உண்டுபண்ணிவிட்டது. ஷெட்யூல்டு வகுப்பார் எதிர்பார்த்ததும் சீர்குலைந்துவிட்டது. பூனா ஒப்பந்தம் காங்கிரஸ்காரர்களினாலே கொலை செய்யப்பட்டுவிட்டது. ஆரம்பத் தேர்தலில் அதாவது, ‘பிரிலிமினரி’ தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்ததாலே தாழ்த்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 ஸ்தானங்களில் 28 ஸ்தானங்களைக் கைப்பற்றினர். இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு தனி ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டதின் நோக்கமே பாழாகிவிட்டது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பூதத்திற்குப் பயந்து தாங்கள் சமூக நலனை பலியிட்டு விடுகிறார்கள். இதற்கு உதாரணம் தாழ்த்தப்பட்டோருக்கு ஆலயப் பிரவேசம் அளிக்க வேண்டியது சம்பந்தமாக ராவ்பகதூர் எம்.-சி.ராஜா அவர்கள் கொண்டு வந்தபோது ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த இருவர்தான் ஆதரித்தார்கள் என்பதே போதுமானதாகும்…

இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி… ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டுமென்பதுதான் நமது ஆசை… இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார் கோரும் சுயராஜ்யம், சுயராஜ்யத்திலும் ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை அடிமை கொள்ளாமலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்க வேண்டுமென்பதே யாகும். (‘குடிஅரசு’ 15.10.1939)

இதில் கையெழுத்திட்டிருப்பவர்கள் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோர். இக்கூட்டம் நடந்தபோது, பெரியார் நீதிக்கட்சித் தலைவர். நீதிக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.பி.பாத்ரோ இதில் இருந்தார். இவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் ஷெட்யூல்டு மக்களின் எண்ணங்கள் முழுமையான அறிக்கையாக வெளிவந்தன. ‘தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சியும் பெரியாரும் செய்தது என்ன? என்று கேட்பவர்கள் இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதே அறிக்கையில், நீதிக்கட்சி தலைவர்களான டி.எம்.நாயர், சர்.பி.டி.தியாகராயர், பனகல் அரசர் ஆகிய முவரும் புகழப்பட்டுள்ளார்கள். இதை ஏற்றுக் கொண்டுதான் இரட்டைமலை சீனிவாசனும், எம்.சி.ராஜாவும் கையெழுத்துப் போட்டிருப்பார்கள். எம்.சி.ராஜாவுக்கும் நீதிக்கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பவர்களும் இதைக் கவனிக்க வேண்டும். 3 சதவிகித பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக 97 சதவிகித மக்கள் திரள வேண்டும் என்பதை அப்போதைய தென்னாட்டுத் தலைவர்கள் விரும்பியதன் வெளிப்பாடே அந்தக் கூட்டம்.

இந்த அறிக்கையைக் கண்டித்து அன்றைய விளம்பர மந்திரி வெளியிட்ட அறிக்கைக்கு இரட்டைமலை சீனிவாசன் அளித்துள்ள பதிலும் 22.10.1939 ‘குடிஅரசு’வில் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை 25.10.1939 கூடிய நீதிக்கட்சி நிர்வாகக் கமிட்டி ஏற்றுக் கொண்டது.

நீதிக்கட்சித் தலைவர்களுடன் எம்.சி.ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை ‘குடிஅரசு’ வெளியிடப்பட்டுள்ளது. (‘குடிஅரசு’ 13.02.1940)

17.3.1940இல் பன்னீர்செல்வம் சென்ற விமானம் காணாமல்போய் அவர் மறைந்தார். இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரின் இரங்கல் செய்திகளை ‘குடிஅரசு’ வெளியிட்டது. “சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மரணம் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும், இம்மாகா ணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பெருத்த நஷ்டம். மனம், வாக்கு, காரியத்தில் உறுதி உள்ளவர். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் படைத்தவர். அவருக்கு எதிரிகள் பலர் இருந்தனர். சமயம் கிடைத்தால் அவரை நசுக்கிவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால், எல்லா எதிர்ப்பையும் தைரியமாக எதிர்த்து நின்று எதிரிகளின் வாயை தக்க பதில் சொல்லி அடைத்து வந்தார். ஒன்றல்ல… இரண்டல்ல… பல புயல்களையும் சமாளித்துச் சென்ற மாலுமி அவர். அவருடைய கட்சிப் பற்றை, உறுதியைக் குறித்து யாரும் குறை சொல்ல முடியாது. தன்னுடைய கட்சியினர் எதிரிகளிடம் சமரசப் பேச்சுப் பேசி வருகையில், இவர் மட்டும் தைரியமாக சர்க்காரையும் காங்கிரஸ் ஆட்சி¬யும் கண்டித்து வந்தார். அதனால்தான் சென்னை சர்க்கார் நிர்வாக சபையில் ஒரு மெம்பராக நியமனம் செய்யப்பட்டார். என்னுடைய சமூகம் உட்பட எல்லா சமூகத்தினருக்கும் சம நீதியையும் நியாயத்தையும் அளித்து வந்தார். எல்லா சமூகங்களுக்கும் அனுதாபத்தைக் காட்டி வந்தார். அதனால்தான் அவருடைய பிரிவால் வருந்தும் எல்லாருடனும் நாமும் சேர்ந்து துக்கப்படுகிறோம்’’ (‘குடிஅரசு’ 07.04.1940) என்று எம்.சி.ராஜாவும்…

“வட்டமேஜை மாநாட்டிற்கு நாங்கள் போய்வந்த பொழுது அவர் எனக்காக எடுத்துக்கொண்ட கஷ்டமும் என்னுடைய சவுகரியத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கவலையும் கொஞ்சநெஞ்சமல்ல… அவர் இன்னமும் நம்மிடையே இருக்கிறார் என்றுதான் உணர்கிறேன்’’ என்று இரட்டைமலை சீனிவாசனும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இது நீதிக்கட்சி, பெரியார் மீது தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கொண்டிருந்த பற்றையும், தாழ்த்தப்பட்ட தலைவர்களை பெரியார் மதித்த மாண்பையும் காட்டுவன அல்லவா?

(தொடரும்…)

ஞாயிறு, 12 மே, 2024

வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் – கோவில் நுழைவுப் போராட்டமும்!



விடுதலை நாளேடு
Published March 18, 2023

ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும் உரிமையும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆண்ட பரம்பரையினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சூத்திரர்களுக்கு அரசுப் பணியிடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் புறக்கணிப்பே தொடர்ந்தது. பஞ்சமர்- தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட ஆதிதிராவிட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பனர்களும் – சூத்திரர்களும் நடத்தினர். ஜாதிப் படிநிலையின் உச்சத்தில் இருந்த பார்ப்பனர்கள் சொல்வதே வேதம் என்கிற பொதுப்புத்திக்கு மக்கள் கட்டமைக்கப்பட்டிருந்தனர்.

ஹிந்துக்கள் எனப்படும் அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைத்திட வேண்டும் என்பதை முன்னெடுத்த திராவிட இயக்கம், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சனை செய்யும் உரிமை கொண்ட கோவில்களில் அனைத்து சமுதாயத்தினருக்கும் வழிபாட்டு உரிமையும் பூசை செய்யும் உரிமையும் வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து போராடியது. குறிப்பாக, ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள்ளும்- கோவில்கள், அக்ரகாரங்கள் உள்ள தெருக்களுக்குள்ளும் அனுமதிக்காத தீண்டாமையை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே 1922இல் நடந்த திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்துச் சமூகத்தினரும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரசிலிருந்து பிரிந்து, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகும் அவரது செயல்பாடுகள் தொடர்ந்தன.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926 இல் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற கிளர்ச்சியே இதில் முதன்மையானதாகும். இதனையடுத்து, கோவிலுக்குள் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துச் செல்லும் கோவில் நுழைவுப் போராட்டத்தை முதற் கட்டமாக திருவண்ணாமலையில் தொடங்கினார், நீதிக்கட்சி சார்பில் வெளியான ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். 1927ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் திருவண்ணாமலை கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரையும் மற்றவர்களையும் கோவிலுக்குள் வைத்து பூட்டிவிட்டனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஓர் ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கின் இறுதியில், கண்ணப்பருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஜே.என் இராமநாதன் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவிலுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்றார். இதுவும் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டமாகும். அப்போது,தாயுமானவர் சன்னதியில் இருந்தவர்கள் குண்டர்களைக் கொண்டு. இராமநாதன் உள்ளிட்டோரை படிக்கட்டுகளில் உருட்டிவிட்டனர்.

அதே 1927ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதசாமி கோவிலுக்கு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் அனைத்து ஜாதியை சேர்ந்த 1000 பேர் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து, கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் பூட்டிவிட்டனர் போராட்டக்காரர்களோ, பக்கவாட்டுக் கதவு வழியாக சென்று, அப்பர் சாமிகள் எனப்படும் திருநாவுக்கரசரின் ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற பாடலைப் பாடி போராட்டக்குரல் எழுப்பினர். 1928ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோவிலிலும், திருவானைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்டனர்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, ஆதிதிராவிடர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தானக் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு மறுநாள், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் முடிவுடன் பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையார் அவர்கள் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் ஆகியோருடன் ஆதிதிராவிடத் தோழர்கள் மூவருக்கு நெற்றியில் திருநீறு பூசி, அருச்சனைத் தட்டுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். சென்றவர்களை வைத்துக் கோவில் கதவு பூட்டப்பட்டதால், இரண்டு நாள் உள்ளேயே இருந்தனர். வெளியூர் சென்றிருந்த பெரியார் ஈரோடு திரும்பியபிறகே, கோவில் கதவு திறக்கப்பட்டது.

****

கோவில் நுழைவு தொடர்பாக குத்தூசி குருசாமி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆதிதிராவிடத் தோழர்கள் பசுபதி, கருப்பன், ஈஸ்வரன் மூவருக்கும் அபராதம் விதித்தது நீதிமன்றம். அதனைக் கட்ட மறுத்த ஈஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கோவில் நுழைவு- சுசீந்திரம் கோவில் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான உரிமைப் போராட்டம் ஆகியவை தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் கண்ணப்பர், காரைக்குடியில் சொ.முருகப்பா, தலைச்சேரியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் பண்டிதர் திருஞானசம்பந்தன்- சுப்ரமணியன் ஆகியோரும் முன்னின்று கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர்.

1932இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த கோவில் நுழைவு மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக்கட்சியின் கடமை என குடி அரசு இதழில் 30.10.1932 அன்று தலையங்கம் எழுதினார் பெரியார்.

இத்தகையத் தொடர்ச்சியான போராட்டங்களை 1920களிலேயே திராவிட இயக்கம் நடத்தியது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்த இன்றைய ஆர்.எஸ்.எஸ். மனநிலை கொண்ட பார்ப்பனர்கள் இதனை எதிர்த்தனர். அதன் பிறகு. 1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜாகோபாலாச்சாரி முதல்வர் (பிரிமியர்) ஆனார். அப்போது, பல்வேறு வகையில் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்திகளை தவிர்க்கும் வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நடைசாத்தப்படும் நேரத்தில் ஆதிதிராவிடர் சிலருடன் காங்கிரஸ் கட்சிக்காரரான வைத்தியநாத அய்யர் உள்ளே சென்றார். இது ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்று நிகழ்வாகப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வரை பதிவாகின. சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கும் முந்தையவை-வலிமையானவை.

(கோவி.லெனின் எழுதியுள்ள “சமூகநீதியின் நெடும் பயணம்” என்ற நூலின் பக்கம் 27-30)

சனி, 26 அக்டோபர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் - திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை - இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

                                                                                       (தொடரும்)

உண்மை இதழ், 16 -31. 10 .19

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை!



நேயன்


திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கிறோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கர் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று சட்டமும் செய்யப்படுமேயானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தை அளிக்கின்றதோ அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில், இந்தச் சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு அய்யமில்லை.

                                                              (‘குடிஅரசு’ 22.12.1929)

இதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்ற 4.1.1945ஆம் தேதி கல்கத்தாவில் தாழ்த்தப்பட்டோர் வாரப் பத்திரிகையான ‘பீப்பிள் ஹெரால்டை’ திறந்து வைக்கையில் ‘ஹிந்துக்கள் புல்லுருவிகள். நாம் உழைக்க அவர்கள் உறிஞ்சித் தின்கிறார்கள். இந்தச் சுரண்டலை நிலைநாட்டும் சுதந்திரம் வந்தாலும் ஒன்றுதான், வராதொழிந்தாலும் ஒன்றுதான்’ என்ற வயிறெரிந்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு பிறர் இரத்தத்தை உறிஞ்சி வந்த கூட்டம், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வந்த கூட்டம், கிழிச்ச பஞ்சாங்கத்தையும் காய்ந்த தர்ப்பைப் புல்லையும் கை முதலாகக் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் கூட்டம் வயிறு எரியத்தான் செய்யும். சீறி விழத்தான் செய்யும்.                                  

    (‘குடிஅரசு’ 6.1.1945)

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, ‘இன்றைய நிலையில் நமக்கு சுயராஜ்யம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர, நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளாகவே ஆளப்படுபவர் களாகவேதான் இருப்போம். ஆதலால், சுயராஜ்ய ஆட்சி இன்றைய ஆட்சியைவிட மேலானதாக இருக்க முடியாது’ என்று சொன்னார். அதாவது, ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்த சுயராஜ்யத்திலும் ஆட்சி புரியுமென்றும் அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்யத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத்தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.

                                                   (‘விடுதலை’ - 26.3.1950)

கோவில்கள் திறக்கப்படுவதாலும், ஓட்டல்கள் தடை நீக்கப்படுவதாலும் மாத்திரம் ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் ஒழிந்துபோகும் என்ற நினைப்பவர்கள் வடிகட்டிய பைத்தியக்காரர்களே ஆவார்கள். இது ஒரு பித்தலாட்டகரமான காரியம் என்பதோடு பெரிதும் டாக்டர் அம்பேத்கர் கூட்டமாகிய வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றும் வித்தையாகும். 15 வருடத்துக்கு முன் ஏமாந்து தனித் தொகுதியை விட்டுக்கொடுத்த அம்பேத்கர் கோஷ்டி இப்போதும் ஏமாந்து போகக்கூடும் என்ற கருதி அம்பேத்கரை வசப்படுத்த வேறு என்ன என்னவோ சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் சூழ்ச்சிகள் எல்லாம் இதுவரை முஸ்லீம்களை என்ன செய்ய முடிந்ததோ, அந்த அளவுக்கத்தான் திராவிடர்களையும், ஆதி திராவிடர்கள் என்பவர்களையும் செய்ய முடியுமே தவிர, ஏமாற்ற முடியும் என்பது இனி நடக்காத காரியமாகும். அம்பேத்கரை சரிப்படுத்திக் கொண்டாலும் அதனால் வடநாட்டு ஷெடியூல்டு வகுப்பார்தான் ஏமாறக்கூடுமே தவிர தென்னாட்டவரை ஏமாற்ற முடியாது.                                                              

    (‘குடிஅரசு’ 25.1.1947)

இந்து மதத்தைச் சாராதவர்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்து மதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள், மிலேச்சர்கள் என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும் சண்டாளர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.

(‘குடிஅரசு’, 8.5.1932)

நான் காங்கிரசிலிருக்கும் போதும்  தீண்டாதார் விஷயத்தைப் பற்றியே அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதும் தீண்டாமை விலக்குக்காகத்தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோவில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.

(‘குடிஅரசு’ 4.12.1932)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.

(‘குடிஅரசு’ 4.12.1932)

சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதிதிராவிடரைக்கூட காங்கிரஸ் நிறுத்தவே இல்லை என்பதையும் தானாக எந்தக் கட்சியையும் சேராமல் நிற்கிறவர்களையும் ஆதரிக்காமல், எதிர்த்து தோற்கடித்தார்கள் என்பதையும் முன்னமே எழுதி இருக்கிறோம். ஆகவே காங்கிரசுக்காரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது சட்டசபைக்கு நின்ற ஆதிதிராவிடரைக் காங்கிரஸ் திட்டத்தில் கையொப்பமிடும்படியாக யாராவது கேட்டு அவர் மறுத்தாரா? அல்லது அவர் மறுத்திருந்தாலும் வேறு ஆதிதிராவிடர் கிடைக்கவில்லையா?

(‘குடிஅரசு’ 3.2.1935)

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்ற பெயருடன் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்?

(‘குடிஅரசு’ 23.6.1935)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.


திராவிடர் -_ ஆதிதிராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.

(‘குடிஅரசு’ 8.9.1940)

திராவிட நாட்டில் திராவிடப் பெருங்குடி மக்கள் அறிவிலும் ஆண்மையிலும் வீரத்திலும் தலைசிறந்து இருந்த மக்கள் இன்று சமுதாயத்தில் நான்காம் ஜாதி, பஞ்சமர் என்றும் ஐந்தாம் ஜாதி என்றும் அதாவது சூத்திரர், அல்லது பிறவி அடிமை ஜாதி என்றும், சண்டாளர் அல்லது ஈகை ஜாதி என்றும் அழைக்கப்படுவதோடல்லாமல், அந்தப்படியே நடத்தப்படுகிற மக்களாகவும் இருந்து வருகிறோம்.

(‘குடிஅரசு’ 12.4.1941)

மதுரைக் கோவிலில் பறையர் முதலியவர்கள் செல்ல சட்டம் அனுமதிக்கப்படுகிறது. அக்கோயிலில் பறையர்களுக்குப் பள்ளிக்கூடம் வைத்தார்களா? பறையரை மேளக்காரராக, பூக்கட்டுபவர்களாக வெளித்துறை சிப்பந்திகளாக நியமித்தார்களா? அனுமதித்த கோவில்களுக்கெல்லாம் பறையர்களை டிரஸ்டியாகப் போட்டார்களா?

(‘விடுதலை’ 29.6.1943)

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும், உயர்ந்த ஜாதியார், கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தினாலும் உருவத்தினாலும் அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

(‘குடிஅரசு’ 6.1.1945)

(தொடரும்...)

- உண்மை இதழ், ஏப்ரல் 16 -30 .2019

திங்கள், 17 ஜூன், 2019

இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு

*- கவிஞர் கலி.பூங்குன்றன் -*

முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று  தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.

நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் -  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல் லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடை யேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல் லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா - அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர் களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?  அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள்  விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால்  தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக   இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில் லையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம் பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு - சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே  இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே - ஒரு எடுத்துக்காட்டு

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன்.  பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் பெரியார் தலை மையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி... ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். (நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.

தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர் வானவர்கள்  என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன்,  பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார். (குடிஅரசு - 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன் னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக் கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடு மையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது -  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)

கள்ளக்குறிச்சி - தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)

சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)

இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)

திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)

சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)

திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)

லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)

அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932

லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)

சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)

தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)

சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)

சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)

திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)

பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)

சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)

சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)

ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)

திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர்  மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு - இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிர யோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

" எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் - தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள்  தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே. முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது,  மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன்.

*தந்தை பெரியாரின் அழைப்பு*

(வகுப்புவாரி உரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்குக் காரணமான காஞ்சிபுரம் மாநாட்டிற்காக "குடிஅரசு"  இதழில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை)

காஞ்சிபுரத்தில், 31 ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை 'நவசக்தி', ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகக்ஷியார்களும் மடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய்   இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன்  கேட்டுக் கொள்ளுகிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமண ரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார் களின் முன்னேற்றந்தான் பிராமண ரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல் லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஓழிவதன் முலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேறமுடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று, ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி
ஈரோடு, 15.11.1925

தாழ்த்தப்பட்டவர்கள் மீது எந்த அளவு கவலையும், அக்கறையும் கொண்டிருந்தார் என்பதற்கு வேறு எடுத்துக் காட்டும் தேவையோ?

அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியு  கூட! சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல்  கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட  நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டி யவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது - சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது.

மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது.  அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை  தேவையில்லை. நடந்திருக்கின்ற மாற்றங்களை  பரிகசிப்பதோ,  உதாசீனப்படுத்துவதோ,  ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும்,  இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் - கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில்  உசத்தி - தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.

இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற் றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய  GRADED IN EQUALITY என்பதுதான்; ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது,  பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு - சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா - இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? - அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே!  திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு  எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது - யாருக்கோ தான் பயன்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல. ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் - அதற்குமேல் விமர்சிக்கலாமா? விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் - வரவேற்கிறோம்.

பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும். தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும்.

ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது. தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.

*நன்றி : "விடுதலை" ஞாயிறு  மலர்  இதழ் 08.12.2018*