செவ்வாய், 16 ஜூன், 2026

கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள் இன்று!



 சுயமரியாதை இயக்கத்தின் வளர்ப்புத் தாய் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களது நினைவு நாள் இன்று (11.5.2026).

இந்திய வரலாற்றில் முதலாவது முன்னோடி யான களப் போர் வீராங்கனைகள் அன்னை நாகம்மையாரும், தந்தை பெரியாரின் பாசமுள்ள தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும் ஆவார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோது, காந்தியார் ஆணைக்கேற்ப 1921 இல், (105 ஆண்டுகளுக்கு முன்னதாக), கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை!

அதுபற்றி சாமி.சிதம்பரனார் எழுதிய, தந்தை பெரியார் வரலாற்றுக் காவியமான ‘‘தமிழர் தலைவர்’’ எனும் நூலில் உள்ள அரிய, அறியவேண்டிய தகவல்களை இன்றைய இளையர்கள் படித்து, மக்களிடையே பரப்பிட வேண்டும்.

அன்று முதல் இன்றுவரை வரலாறு எழுதுபவர்களுக்கும், ஊடகத்தினருக்கும், சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கங்கள் என்றால், ஒரு ஒவ்வாமை நோய் உண்டு. அதன் தலைவர் தந்தை பெரியார் முதல் வீரமணி காலம் வரை தொடரும் கேவலமான நோய்.

அது ஆதவனை கைகளால் மறைப்பதுபோல ஒரு முட்டாள்தனமே!

வரலாற்றுத் தெளிவு பெற படியுங்கள்!

‘‘1921ஆம் ஆண்டில் நடந்த கள்ளுக்கடை மறியல் மிகவும் புகழ் பெற்றது. ஈரோட்டில் மறியல் மும்முரம் மிகுதி. ஈ.வெ.ரா. மறியலைத் தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. மறியல்காரர்கள் தடையுத்தரவைப் பொருட் படுத்தவில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை புகுந்தனர். 1921 நவம்பரில் ஈ.வெ.ரா.வும் அவரோடு சுமார் 100 தொண்டர்களோடு சிறை பிடிக்கப்பட்டனர். ஒரு மாதம் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி. நாடெங்கும் கலவரம். இச்சமயம் நாகம்மை யாரும், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர். மறியல் செய்பவர்களில் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர். நாகம்மையாரும் அவருடன் சென்ற தோழர்களும் சிறைபடுத்தப் பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி, 10,000 பேர்களுக்கு சிறை வேண்டியிருக்குமென்று அதிகாரிகள் கருதி, சென்னை அரசாங்கத்துக்குத் தந்தி கொடுத்து முன்னறிவுடன் தடையுத்தரவை நீக்கினர். அச்சமயம் சர்க்கார் 144-க்கு மதிப்பற்று வாய்தா காலத்திற்குள் ரத்து செய்யப்பட்டது இது ஒன்றேயாகும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு குடும்பத் துடன் தேசத்திற்குத் தியாகம் செய்த இராமசாமியாரை இன்று சிலர் தேசத் துரோகி என்று தூற்றுகின்றனர். என்னே! இக்கற்றுக் குட்டிகளின் பேதமை.

இச்சமயம் பொதுவாகவே இந்தியாவில் நடந்துவந்த ஒத்துழை யாமைக் கிளர்ச்சி சம்பந்தமாகக் காங்கிரசுக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இதற்காகப் பம்பாயில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற சர். சங்கரன் நாயர் தலைவர். இம்மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு. இம்மாநாட்டின் நடவடிக்கை தொடங்கப்படும் முன்பு திரு. பண்டிட் மாளவியா அவர்களும், சர். சங்கரன் நாயர் அவர்களும் ‘மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கை தொடங்கலாம்’ என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது காந்தியார், “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டி லுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும்” என்று பதிலுரைத்தார். இச்செய்தி அச்சமயம் 19.1.1922ஆம் தேதி வெளியான “ஹிந்து” பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காந்தியார் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம்மையார், அவருடைய தங்கை கண் ணம்மாள் ஆகிய இரு பெண்மணிகளும் மறியலுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆதலால், அவர்களின் கருத்தையறிந்த பின்பே முடிவு செய்ய வேண்டுமென்று கருதிக் கூறியதேயாகும்.

கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன்முதல் முடிவு செய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. அவர்கள் வீட்டில் காந்தியார் முதலிய தலைவர்கள் கூடின காலத்தில் கள்ளுக்கடை மறியல் செய்ய வேண்டுமென்று பேசி முடிவு செய்யப்பட்டது. அம்முடிவுக்கு அடிப்படை ஈ.வெ.ரா.வின் முழு ஆதரவேயாகும். இவ்வுண்மையை இளங்கன்றுகள் சில அறியாதிருக்கலாம். ஆனால் காந்தியாரும், ஆச்சாரியாரும் மறந்திருக்க முடியாது.

பின்பு ஒத்துழையாமை ஒருவாறு அடங்கிற்று. பலர் அம்முறை தவறு என்று உணர்ந்தனர். அவர்களில் காலஞ்சென்ற சி.ஆர். தாஸ் என்பவரும் ஒருவர். “விலகி நின்று கூச்சலிடுவது பயன் தராது. கோட்டைக்குள் சென்று எதிரிகளை மடக்க வேண்டும்” என்ற கொள்கையுடன் சுயராஜ்யக் கட்சியைத் தொடங்கினார் இவர். இக்கட்சியை ஈ.வெ.ரா. ஆதரிக்கவில்லை; எதிர்த்தார். காந்தியார் முதலிய மற்றும் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. திரு. சி. ராஜகோ பாலாச்சாரியாரும், ஈ.வெ.ரா.வையே பின்பற்றினார். காந்தியாரின் தலைமைக்கடங்கிய இவர்கள் வைதிக ஒத்துழையாதார் அல்லது “மாறுதல் வேண்டாதார்” என்று அழைக்கப்பட்டனர். ஆயினும் சுயராஜ்யக் கட்சி வளர்ச்சியடைந்து வந்தது. தென்னாட்டிலும் இக்கட்சி உரம் பெற்றது. அப்பொழுது நமது மாகாணத்தில் நீதிக்கட்சியின் பேரால் பார்ப்பனரல்லாதார் அதிகாரம் நடத்தினர். பார்ப்பனர்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காகவே சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்தார்கள் என்றும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து நின்றனர் என்றும் சொல்ல வேண்டும். “பார்ப்பனரல்லாதார் கட்சியை அதிகாரத்திலிருந்து விரட்ட வேண்டும். சுயராஜ்யக் கட்சியின் பேரால் நாமே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்பது அக்காலச் சுயராஜ்யக் கட்சியின் நோக்கம். இதனாலேயே பார்ப்பனர்கள் அனைவரும் ஒருமுகமாக அக்கட்சியைப் போற் றினர், ஆதரித்தனர். இவ்வுண்மையை ஈ.வெ.ரா.வும் அறிந்து கொண்டார்.

மலையாளத்தில் வைக்கம் என்ற ஊரிலுள்ள தெருவில் தாழ்த்தப் பட்டவர்கள் நடக்கக் கூடாது என்பது வெகு நாளைய கட்டுப் பாடாய் இருந்து வந்தது. அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையுணர்ச்சி கொண்டனர். தெருவில் நடக்கும் உரிமை பெற விரும்பினர். அதற்காக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டுமென்று கேரள காங்கிரஸ்  தலைவர்கள் கருதினர். அதன்படியே தொடங்கினர். காலஞ்சென்ற ஜார்ஜ் ஜோசஃப் உள்பட 19 பேர் வரிசையாகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டு விட்டனர். தலைவர் இல்லாத திண்டாட் டத்தால் சத்தியாக்கிரகம் நின்றுவிடும் போலாகிவிட்டது. சிறையிலிருந்தபடியே யோசித்துத் தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்ஃபும் குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினர். “பெரிய காரியத்தைத் தொடங்கி விட்டோம்; அடக்குமுறை பலப்பட்டு விட்டது; இவ்வளவு சீக்கிரத்தில் நாங்களெல்லோரும் கைது செய்யப்படுவோமென்று எதிர்பார்க்கவில்லை; தாங்கள் உடனே வைக்கம் வந்து சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்தினால்தான் கேரளத்தினுடைய மானமும், எங்களுடைய மானமும் மிஞ்சும்; காலதாமதம் செய்யவோ, யோசித்துப் பார்க்கவோ நேரமில்லை. உடனே வரவும்” என்று ஜெயிலில் இருந்தபடியே இரகசியமாக ஆள்வசம் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். ஈ.வெ.ரா. குளித்தலை அரசியல் மாநாட்டில் இருந்தபடியே மதுரை ஜில்லா சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அங்கு வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு திடீரென்று புறப்பட்டு ஈரோடு வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் வைக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அவருக்குக் கிடைத்தது. அன்று வருஷப் பிறப்பு. அதைப் பார்த்தவுடன் நாகம்மையாரிடம் தம் நோய் குண மாகி விட்டதென்று பொய் சொல்லிவிட்டு, படுக்கை, துணிமூட்டை முதலியவற்றைச் சற்றுப் பெரிதாகவே கட்டிக் கொண்டு அன்றிரவே வைக்கத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

மறுநாள் பகல் 2 மணிக்கு வைக்கம் சேர்ந்தார். உடனே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு விடுவாரென்று மக்கள் கருதினர். ஆனால், காரியம் அப்படி நடக்கவில்லை. இராமசாமியார் வைக்கம் வந்து சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட சங்கதி திருவாங்கூர் அரசருக்கு எட்டிற்று. அவர் உடனே போலீஸ் கமிஷனரை அழைத்து ஈ.வெ.ரா.வைக் கைதியாக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். பிறகு திவான் பேஷ்காரையழைத்து இராமசாமி திருவாங்கூரில் இருக்கும் வரையில் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அரசாங்க விருந்தாளிபோல், குறிப்பாகக் கவனித்துக் கொள்ளும் படி உத்தரவிட்டார். இது அப்போதிருந்த திவான் ராகவய் யாவுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் போலீஸ் கமிஷனர் ‘பட்’ துரையும், திவான் பேஷ்கார் சுப்பிரமணிய அய்யரும் சத்தியாகிரக நிலையத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்த பொதுமக்கள் ஈ.வெ.ரா.வைக் கைது செய்வதற்காகத்தான் வந்திருக்கிறார்களெனக் கருதினார்கள்; ராமசாமியாரும் அவ்விதமே கருதினார். மூட் டையைக் கட்டிக் கொண்டு தயாரானார். ஆனால், நடந்ததென்ன? அதிகாரிகள் இருவரும் அவரிடம் சென்றார்கள். அவரை வணங்கினார்கள். அவருடைய நலனைப் பற்றி விசாரித்தார்கள். அவரது சவுகரியத்திற்காகத் தாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள். ஈ.வெ.ரா.வைப் பார்த்து, “சத்தி யாக்கிரகம் வேறு; அரச மரியாதை வேறு” என்று சொன்னார்கள். அதற்கு ராமசாமியார், “நான் சத்தியாக்கிரகம் சம்பந்தமாக வந்திருக்கிறேனெயொழிய விருந்தாளியாகவோ, அரச மரியா தையைப் பெறவோ வரவில்லை. ஆதலால், தாங்கள் சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யலாம்” என்று சொன்னார்.

இதற்குள் ஏராளமான மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதிகாரிகள் ஈ.வெ.ரா.வுக்கு செய்யும் மரியாதையைப் பார்த்த பொதுமக்கள் குழப்பமடைந்து விட்டார்கள். அவர் நன்மைக்கு வந்தாரோ, தீமைக்கு வந்தாரோ, சத்தியாகிரகத்தை நிறுத்தி விடுவாரோ என்று சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள். கடைசியாக அதிகாரிகள், “மகாராஜா அவர்கள் தமது வரவேற்பைத் தெரிவிப்பதற்காகவே எங்களை இங்கு அனுப் பினார்கள்” என்று சொன்னபோதுதான் அரசருக்கும் தமக்கு முள்ள பரிச்சயமும் அதன் சந்தர்ப்பங்களும் ராமசாமியாருக்கு ஞாபகத்திற்கு வந்தன. அதன் விவரம் என்னவென்றால், திருவாங்கூர் அரசர் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நடுவில் இறங்கிக் குளித்துச் சாப்பிட்டுப் போவதற்காக ஈரோடு ஸ்டேஷனில் இறங்கும்போதெல்லாம் அரசர் ஈ.வெ.ரா.வின் ரயில்வே ஸ்டேஷன் பங்களாவிலும் அவரது பரிவாரங்கள் ராமசாமியாரின் சத்திரத்திலும் தங்கி உணவருந்திப் போவது வழக்கம், அவ்விதமே பல தடவை வந்து போயிருக்கிறார். அதன்மூலம் அரசருக்கும், சில அதிகாரிகளுக்கும் ஈ.வெ.ரா.வின் குடும்பத்தாருக்கும் அறிமுகமுண்டு. இதன் காரணமாகத் தாம் பல தடவை பெற்ற உபசாரங்களுக்குப் பதில் உபசாரங்கள் செய்வதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக அரசர் கருதினார். ஆகையால்தான் அதிகாரிகளை ஈ.வெ.ரா.விடம்  அனுப்பினார். அரசர் அவர்கள் தன்னைப் பற்றித் தப்பாக நினைக்கக் கூடா தென்றும், தம் கடமையைச் செய்ய வந்திருப்பதாகவும், அரசர் அவர்களும் தமது கடமையைச் சட்டப்படி செய்வதில் தமக்காக எவ்வித தாட்சண்யமும் பார்க்கக் கூடாதென்றும் ஈ.வெ.ரா. கூறி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து அனுப்பி விட்டார்.

பிறகு இச்சத்தியாக்கிரகத்தில் ராமசாமியாரும் அவருடன் கூடச் சென்ற தோழர் அய்யாமுத்துவும் சிறைப்பட்டனர். உடனே நாகம் மையார் தோழர் எஸ்.ராமநாதன் அவர்களுடன் ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். சிறிது காலம் தோழர் ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கி சத்தியாக்கிரகத்தை நடத்தினார். பின் நாகம்மையார் இதில் முக்கிய பங்கு கொண்டார். இச்சமயம் தமிழ்நாட்டிலிருந்தும், மலையாளத்திலிருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். இச்சமயம் ஒரு மாதமானதும் ஈ.வெ.ரா. விடுதலையானார். விடுதலை ஆனவுடன் அவருக்குப் பிரஷ்ட உத்தரவு போடப்பட்டது. ஈ.வெ.ரா. அதையும் மீறினார். அதனால் மறுபடியும் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டார். அதன் பிறகு நாகம்மை யார் தலைமை தாங்கி பல பெண்களுடன் திருவாங்கூர் முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்து புரட்சியான பெருங் கிளர்ச்சியை யுண்டாக்கி விட்டார். இறுதியில் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதல் வெற்றி பெற்றது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இச்சத்தியாக்கிரகத்தின் பின்விளைவேதான் கோவில் பிரவேசக் கிளர்ச்சி ஏற்பட்டு, திருவாங்கூர் கோவில்கள் எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்து விடப்பட்டதாகும்.

இச்சத்தியாக்கிரகம் நாடெங்கும் புகழ் பெற்றுவிட்டது. இதனால் ஈ.வெ.ரா. “வைக்கம் வீரர்” என்ற பெயர் பெற்றார். இன்றும் தமிழ் நாட்டார் இப்பெயரை மறக்கவில்லை. “வைக்கம் வீரர்” என்றால் போதும் ஈ.வெ.ரா. என்று நன்கறிவார்கள். எனவே, தீண்டாமையை ஒழிப்பதற்காகத் திருவாங்கூர் அரசாங்கத்தாரால் இவர் இருமுறை சிறையிலிடப்பட்டார். 22.4.1924இல் ஒருமாத தண்டனை பெற்று அருவிக்குத்திச் சிறையிலிருந்தார். இது அரசர் லேசான தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டதால் ஏற்பட்டதாகும். விடுதலையான வுடன் ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார்.  ஆறு மாதம் தண்டிக்கப்பட்டுத் திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயிலில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார். என்றாலும் நான்கு மாதத்திலேயே அரசர் இறந்து போய்விட்டதால் அரச விளம்பரம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்கலாமென்றும், தம் தாயாரைப் பார்க்கலாமென்றும் கருதி ஈரோட்டுக்குச் சென்றார்.

ராமசாமியார் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபோது, சென்னையில் பேசிய பேச்சுக்காக அரசு வெறுப்பு, வகுப்பு வெறுப்புக் குற்றஞ் சாற்றப்பட்டு, 124-ஏ, 153-ஏ செக்ஷன்களின்படி சென்னை அரசாங்கத்தாரால் 11.9.1924இல், அதாவது ஈரோட்டுக்கு வந்தவுடனேயே சிறைப் பிடிக்கப்பட்டுச் சென்னைக்குக் கொண்டு போய், அங்குச் சில நாள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இதை இவர் மறுபடியும் திருவாங்கூருக்குச் சென்று, அங்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதற்காகவே சென்னைஅரசாங்கத்தார் திருவாங்கூர் அர சாங்கத்திற்குச் செய்யும் உதவியென்று சொல்லிக் கொள்ளப் பட்டது. ஏனெனில், அச்சமயம் திருவாங்கூர் திவானாக இருந்தவர் ராகவய்யா. சென்னை மாகாணத்திற்குச் சட்ட மந்திரியாயிருந்தவர் சர்.சி.பி. ராமசாமி அய்யர். இவ்வழக்கில் ராமசாமியார் எதிர்வழக்காடவில்லை. என்றாலும் நியாயமற்ற வழக்கானதால் சர்க்காராலேயே பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு முடிவதற்குள் வைக்கத்தில் தெருவை எல்லோருக்கும் திறந்துவிட வேண்டுமென்று சர்க்காரே தீர்மானித்து, அதற்குள்ள வேலை களைத் தொடங்கி விட்டார்கள்.’’

(தமிழர் தலைவர், பக்கம் 65–67)

அவற்றையெல்லாம் தாண்டி, மகுடம் வைத்ததுபோல, அய்யா தந்தை பெரியார், அன்னை நாகம்மையார் மறைவின்போது எழுதிய இரங்கல் இலக்கியம்!

‘பெரியார் இலக்கியவாதி அல்ல’ என்று கூறிடும் சிலர் அறியவேண்டிய புத்திப் பாடம் அது!

‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்று எப்போதும் பேசும் சில மேடைப் பேச்சாளர்களுக்கு இது தெரிந்தால் அல்லது புரிந்தால், பெரியார் வடித்தெடுத்த ‘புரட்சிப் பெண்’ வரிசையில் அன்னையார்பற்றி ‘அனா, ஆவன்னா’ அறிய முடியும். பல கருத்தரங்கங்களை நமது தோழர்கள் நடத்தி, அன்னை நாகம்மையார்,  அன்னை மணியம்மையார் ஆகியோரின் போராட்டங்கள் குணங்களை விளக்கிப் பரப்பிடுதல் அவசியம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் – அதுவும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி, அடங்கிக் கிடக்கவேண்டும் என்று மனுதர்மம் கோலோச்சிய காலத்தில், அவர்களை வெளியே கொண்டு வந்தது மட்டுமல்ல, போராட்டக் களத்திலும் நிற்க வைத்த தந்தை பெரியாரின் ஒப்பற்ற ஆளுமைக்கு ஈடு இணை உளதோ?

செப்புவீர், ஜெகத்தோரே!

- விடுதலை நாளேடு,11.05.26

வெள்ளி, 5 டிசம்பர், 2025

நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி.லெனின் மாநில ஆலோசகர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி



 அன்றைய சென்னை மாகாணத்தில் பெரும்பான்மை மக்களான திராவிடர்களின் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உருவான இயக்கம்தான் ‘நீதிக்கட்சி’ எனும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. சர் பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் மூவரும் இந்த சங்கத்தை உருவாக்குவதில் முதன்மையானவர்கள். பானகல் அரசர் எனப்படும் இராமராய நிங்கர், எம்.சி.ராஜா, டாக்டர் முகமது உஸ்மான், அகமது தம்பி மரைக்காயர், அலமேலு மங்கைத் தாயாரம்மாள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பார்ப்பனரல்லாத மக்களின் உரிமையை நிலைநாட்டிட வேண்டிய தேவையை எடுத்துரைத்தனர்.

நீதிக்கட்சி செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில், பெரியார் இருந்தது காங்கிரஸ் கட்சியில். அதிலும் குறிப்பாக, பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்காகக் குரல்  கொடுத்த நீதிக்கட்சிக்கு எதிராக, காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாத நிர்வாகிகளை முன்னிறுத்தி செயல்படுவதற்கான அமைப்பாக இருந்த சென்னை மகாஜன சங்கத்தில் பெரியார் இருந்தார். அவருடன் வரதராஜூலு நாயுடு இருந்தார். காங்கிரசின் முக்கிய பிரதிநிதியாக திரு.வி.க. இருந்தார்.

தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்தச் செய்வது போல, பார்ப்பனரல்லாத பிரதிநிதிகளை வைத்தே நீதிக்கட்சியை எதிர்க்கும் காங்கிரசின் போக்கை உணர்ந்த நீதிக்கட்சித் தலைவர் டி.எம்.நாயர் இது குறித்து 1919ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் ஏரிக்கரை மைதானத்தில் ஆற்றிய புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“காங்கிரஸ்காரரான டாக்டர் பி.வரதராஜூலுவிடம் நான் சொல்லுவேன். சீக்கிரமாகத் தாங்களும் தங்கள் தோழர்களான நாயக்கரும் (பெரியார்), பிள்ளைவாளும் (வ.உ.சிதம்பரம்), முதலியார்வாளும் (திரு.வி.க), தங்களைப் போன்ற காங்கிரசில் உள்ள மற்ற மற்ற பார்ப்பனரல்லாத பிரமுகர்களும் என் ஜஸ்டிஸ் கட்சி இலட்சியத்தை நாடி நீரெல்லாம் வந்தேதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்வது வழக்கம்”

டி.எம்.நாயர் சொன்னதுபோலவே, காங்கிரசில் பார்ப்பன அதிகாரம் மேலோங்கியிருப்பதை வைக்கம் போராட்ட வீரரரான பெரியார் விரைந்து புரிந்து கொண்டார். சேரன்மாதேவி குருகுலத்தில் மாணவர்களுக்கிடையிலான பாரபட்சமான உணவுப் பந்தி அப்பப்பட்டமான பார்ப்பன-வருணாசிரமத்தன்மையை வெளிப்படுத்தியதை பெரியார் கண்டார். இந்த காலகட்டத்தில், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்து பனகல் அரசர் முதல் பொப்பிலி அரசர் வரையிலான ஆட்சிக்காலத்தில்  வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை, இந்து அறநிலையச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பெண்களுக்கான பிரநிதித்துவம், பட்டியல் இன சமுதாயத்தினரை இழிவான சொற்களில் குறிப்பிடுவதற்கு தடை, பொது இடங்களில் அனைத்து சமுதாயத்தினருக்கான உரிமை, தேவதாசி முறை ஒழிப்பிற்கான முன்னெடுப்பு, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச உணவுத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக வகுப்புவாரி உரிமையை ஏற்க வேண்டும் என்பதையும் அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் மகாநாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் பெரியார் வலியுறுத்தியபோது அது ஏற்கப்படாததால் பெரியாரும் அவரது தோழர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினர். 1925இல் ‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடங்கியதுடன் ‘சுயமரியாதை இயக்கத்தை’யும் நடத்தினார் பெரியார்.

மக்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் முன்னோடியான இயக்கமாக நீதிக்கட்சி இருந்தாலும், அது மக்களின் நேரடித் தொடர்புள்ள இயக்கமாக இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட செல்வாக்குமிக்க தலைவர்களின் அமைப்பாகவே இருந்து வந்தது. இப்போது போல தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை என்பதும் அப்போது கிடையாது. சொத்து உடையவர்கள், பட்டதாரிகள் போன்றவர்களே வாக்களிக்கும் நிலை இருந்ததால், பெரும்பான்மை மக்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லாத சூழல் நிலவியது.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காந்தியார் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்று வந்தது. 1926ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரசார் பலர் சுயராஜ்ஜியக் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தல் களத்தில் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பெரியார் வேலை செய்தார். அவர் மீது காங்கிரசார் அவதூறுகளை அச்சிட்டுப் பரப்பினர். நீதிக்கட்சியிடம் பணம் வாங்கிவிட்டார் என்றும், வெள்ளைக்கார அரசுக்கு அடிமையாகிவிட்டார் என்றும் காங்கிரசின் பார்ப்பனத் தலைவர்கள் அவர்கள் சார்பான பத்திரிகைகளில் செய்திகளை வெளியிடச் செய்தனர். அந்தத் தேர்தலில் நீதிக்கட்சியைவிட சுயராஜ்ஜிய கட்சியும், சுயேட்சைகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

“நீதிக்கட்சித் தேர்தலில் தோற்றுவிட்டதால் பலவீனம் அடைந்துவிட்டது என்றோ, குடி மூழ்கிப்போய்விட்டதோ என்று கருதத் தேவையில்லை” என்று குடிஅரசு இதழின் தலையங்கத்தில் எழுதினார் பெரியார். அவர் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பிலான திட்டங்களை தயாரித்து நீதிக்கட்சியிடமும் காங்கிரசிடமும் முன்வைத்தார். பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்து, திராவிட சமுதாயத்தின் உயர்வை முன்னிறுத்தும் சமூக நீதிக் கொள்கை அடங்கிய அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஏற்கத் தயங்கியது. நீதிக்கட்சி ஏற்க முன் வந்தது. அதனால் அவர் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

சைமன் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியில் 1938ஆம் ஆண்டு நடந்த மாகாணத் தேர்தல்களில்  நாடு முழுவதும் காங்கிரஸ் முதன்முறையாக நேரடியாகப் போட்டியிட்டது. சென்னை மாகாணத் தேர்தல் உள்பட 7 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி கடுமையான தோல்வியை சந்தித்தது. நீதிக்கட்சிக்காக பெரியார் தேர்தல் வேலை செய்தபோதும், கள நிலவரத்தை அறிந்தே இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, “நீதிக்கட்சி தோல்வி நமக்கு அனுகூலம்தான். வெற்றியைக் காட்டிலும் தோல்வியினால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்” என்பது பெரியாரின்  கருத்தாக வெளிப்பட்டது. நீதிக்கட்சியின் நோக்கங்கள் உயர்வானதாக இருந்தாலும், அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள், தலைவர்களிடையிலான பூசல்கள் ஆகியவை மக்களை அந்த இயக்கத்திடமிருந்து விலக்கி வைத்திருந்தன.

காங்கிரஸ் கட்சி தனது நோக்கமாக வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை என்பதை முன்வைத்தது. அதை மக்கள் இயக்கமாக மாற்றியது. நீதிக்கட்சி எந்த பார்ப்பனரல்லாத மக்களுக்காகத் திட்டங்களை செயல்படுத்தியதோ, அவர்களே அது பற்றி அறியாதவர்களாக இருந்தனர். மக்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்றினால்தான், இருநூறு ஆண்டுகால ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலையைவிட, இரண்டாயிரம் ஆண்டுகால ஆரியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுயமரியாதையாக வாழ முடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்பதே பெரியாரின் இலட்சியம்.

அதிகாரப் பொறுப்புகளுக்குப் போட்டி போடுவதால் மட்டுமே இலட்சியப் பயணம் நிறைவேறிவிடாது என்பதையும் மக்களை அணி திரட்டுவதே இயக்கத்தின் முதன்மையான பணி என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கவும் குடிஅரசு, புரட்சி, விடுதலை, பகுத்தறிவு போன்ற ஏடுகளை நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு உரை உள்ளிட்டவற்றை வெளியிட்டார். அய்ரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் பயணம் செய்து முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்டு, தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

ஆரிய அடிமைத்தனம் ஒழிந்திட சுய ஜாதிப் பற்றை நீக்கி, அனைத்து சமூகத்தினருடனும் ஒருங்கிணைப்பு, பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றுக்காக மாநாடுகளை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணங்கள் மூலமாக ஆரிய ஆதிக்கத்தையும் – ஜாதிய மனநிலையையும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தகர்க்கின்ற நுட்பமான வேலையை செய்தார் பெரியார்.

சென்னை மாகாண காங்கிரஸ் முதலமைச்சரான இராஜகோபாலச்சாரியார், பள்ளிகளில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாகத் திணிக்க முற்பட்டபோது, பெரியார் எதிர்பார்த்த மக்கள் இயக்கமாக நீதிக்கட்சி மாறியது. போராட்டக் களத்தில் பெரியார் முன்னின்றார். அண்ணா உள்ளிட்ட அவரது இயக்கத்தினர் களம் கண்டு சிறை சென்றனர். தமிழறிஞர்கள், சமய நெறியினர், மொழிப்பற்று கொண்ட இளைஞர்கள் அணிவகுத்தனர். 73 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு தமிழர் பெரும்படை நடந்தே வந்து, ஹிந்தி எதிர்ப்புணர்வை மக்களிடம் பரப்பியது. சென்னை கடற்கரையில் நடந்த மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் முழங்கினார். இராஜகோபாலாச்சாரியார் அரசு பெரியாரை கைது செய்து பெல்லாரி சிறையில் அடைத்தது. ஆனாலும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முன்னிலும் எழுச்சியாக நடைபெற்றது. நடராசன் – தாளமுத்து ஆகிய இருவர் ஹிந்தி ஆதிக்கத்திற்காக சிறை சென்று நோய்வாய்ப்பட்டு, தமிழுக்குத் தங்கள் உயிரைத் தந்தனர்.

சிறையில் பெரியார் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சித் தலைவராகப் பெரியாரையே தேர்ந்தெடுத்தனர். நீதிக்கட்சியின் தளகர்த்தராக விளங்கிய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, மாநாட்டு மேடையில் இருந்த பெரியாரின் படத்திற்கு அணிவித்து, இனி பெரியார்தான் நீதிக்கட்சியின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தினார்.

தோல்வியால் துவண்டிருந்த நிலையில் ஓர் இயக்கத்துடன் இணைந்து  நின்று, அதனை இலட்சியப் பாதைக்குத் திருப்பி, மக்களை அணிதிரட்டி, உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்று, நீதிக்கட்சியை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர் பெரியார்

-விடுதலை நாளேடு, 20.11.25

புதன், 23 ஜூலை, 2025

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! - கடந்து வந்த பாதை

 

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!-மஞ்சை வசந்தன்



சுயமரியாதை இயக்கத்தின் கால்கோள் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் நடைபெற்றது என்று கூறும் அளவிற்கு குறிப்பிடும் அளவிற்கு – சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமாக ‘குடிஅரசு’ ஏடு அமைந்தது.

‘குடிஅரசு’ ஏட்டின் முதல் இதழ் 02.05.1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும் மிகக் கடுமையாக,  முனைப்புடன் செயல்பட்டு வந்தார் பெரியார்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, இலக்கு இவற்றைக் கூறும் ஏடாக ‘குடிஅரசு’ அமைந்தது. நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற இலக்குடன் இவ்வேடு தொடங்கப்பட்டதால், ஏடு தொடங்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து, 23.08.1925 இதழ் முதல் தலையங்கத் தலைப்பில்,

‘‘அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன்றுண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும்தானே.’’

என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏடு தொடங்கப்படும் செய்தியறிந்து, திரு.வி.க. அவர்களும், வரதராஜுலு நாயுடு அவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். ஆனால் இச்செய்தியை ராஜகோபாலாச்சாரியிடம் பெரியார் கூறியதும், ‘‘இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டுவிட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. அதனால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது’’ என்றார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகை வெளியிடுவது பற்றிக் கேட்கையில்,

‘‘அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும், அவை தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது. உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்’’ என்று பெரியார் கூறினார். அதைக் கேட்டு அகம்மகிழ்ந்த ஞானியார் அடிகள், ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திறந்துவைக்கும்போது,

‘‘நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்று கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை’’

‘‘உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். ‘குடிஅரசு’ ஏட்டின் கருத்தும் இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இவை ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் கொள்கையாய் இருக்கவேண்டும். இப்பத்திரிகையில் சிறீமான் நாயக்கருக்கு (பெரியாருக்கு) எவ்வளவு சிரத்தையுண்டே அவ்வளவு எனக்கும் உண்டு’’ என்று கூறி வாழ்த்தினார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஆசிரியராய்ப் பெரியார் இருந்த நிலையில் இணையாசிரியராக திரு.தங்கபெருமாள் 6 மாதகாலம் இருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் இறை சம்பந்தப்பட்டவை இடம் பெற்றிருந்ததற்கு அவரே காரணம். பெரியாரின் முழுப்பொறுப்பில் (ஒரே ஆசிரியர் என்ற நிலை) வந்தபின் அதுபோன்ற கருத்துகள் இடம் பெறவில்லை.

‘குடிஅரசு’ ஏடு தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் அதைப் பாராட்டி சுமார் 400 கடிதங்களும், எதிர்த்து 4 கடிதங்களும் வந்தன.

‘‘குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும்’’ என்று விமர்சனங்களுக்கு விடையாய் பெரியார் தம் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு தலையங்கத்தில் பெரியார், தாம் கண்டித்து எழுதியவை பற்றிக் குறிப்பிட்டார். என்னால் கண்டிக்கப்படாதவை எவை என்று பார்த்தால் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கண்டித்திருக்கிறேன்.

அரசியம், மதம், கோயில், கடவுள், சடங்கு, வேதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பனியம், ஜாதி, நீதிமன்றம், அலுவலகம், தேர்தல், கல்வி, காங்கிரஸ் ஆட்சியென்று அவர் கண்டித்தவற்றின் பட்டியல் நீள்கிறது.

‘‘ஒரு பொருள் அல்லது ஒரு கருத்து எவ்வளவு பழைமை உடையது என்று சொல்கிறோமோ, அந்த அளவிற்கு அது சீர்திருத்தப்பட வேண்டியதாகும்’’ என்ற தன் வலுவான கருத்தின் அடிப்படையில்தான்அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்தார். திருத்த வேண்டியவற்றைத் திருத்தினார். பெரியார் உலகியலைப் பேசினார்; உலகியலையே எழுதினார். கண்டித்தாலும், பாராட்டினாலும் அது உலகு, உலக மக்கள் நன்மை இவற்றின் அடிப்படையிலேதான் செய்தார். மக்களுக்குப் புரியும் சொற்களில் பேசினார், எழுதினார். புலமையை, திறமையை கவர்ச்சியைக் காட்டும் வகையில் அவர் பேச்சோ எழுத்தோ அமையவில்லை.

தான் கூறுவதை அப்படியே ஏற்காமல், சிந்தித்து சரியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். எதிர்ப்புக்கும், கண்டனங்களுக்கும், தாக்குதலுக்கும் அஞ்சாது, கலங்காது, பின்வாங்காது, துணிவுடன், எதிர்கொண்டு தன் கருத்துகளைப் பரப்பினார்.

பதவி நாட்டம். புகழ் நாட்டம், பணநாட்டம் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காகவே பாடுபட்டார்.

எனவே தான் ஜெர்மனி தத்துவஞானி வால்டர்ரூபன் என்பவர், ‘‘தந்தை பெரியார் இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை!’’ – என்றார்.

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் ‘‘வால்டர் ரூபன்’’ இந்தியாவைப் பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்.

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு ‘‘கேள்வியை’’ முன்வைக்கிறார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத ‘‘மகத்தான மானுட ஆளுமையுடையவர்’’ யார் தெரியுமா? (Who is the unprecedented Human personality of the present India?)

திகைத்துப் போனவர்கள் காந்தி பெயரைத் தயக்கத்துடன் சொல்ல, காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரைச் சொல்ல, அவருக்கு முன் உதாரணம் அசோகர் எனச் சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல, தான் எழுப்பிய வரலாற்றுப் புதிர் கேள்விக்குரிய பதிலைச் சொன்னார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை ‘‘பெரியார் ஈ.வெ.ரா தான்’’ என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம், மனுதர்மம், வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகத்தளத்தில் போராடுகிறார். அதனால்தான் என்றார். இந்தச் செய்தியை சாகித்திய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் 25.11.2011 அன்று ஆற்றிய ஒரு உரையில் கூறியிருக்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஒவ்வொரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும்போதும் மக்களுக்கு தம் கருத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. ‘குடிஅரசு’ இதழின் நிலை, சமுதாய நிலை இரண்டைப் பற்றியும் ஒளிவு மறைவு இன்றி தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

‘குடிஅரசு’ ஒவ்வோர் ஆண்டைக் கடக்கும் போதும் அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான சவால்களும் தொடர்ந்தன. மதவாதிகள், பக்தர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் கையாளர்கள் என்று பல தரப்பு கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருந்தன; தொடர்ந்தன.

‘‘உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் குடிஅரசின் தலைமீது விழுந்து கிடக்கிறது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, வருணாசிரமக்காரர்களும், சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும்’’ என்று பெரியாரே குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்கள் ‘குடிஅரசு’ ஏட்டின் பிரச்சாரம், அந்த ஏட்டைப் படித்துவிட்டு தொண்டர்கள் செய்யும் பிரச்சாரம் இரண்டும் சேர்ந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்க அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கியதால் அவர்களின் எதிர்ப்பும் வலுவாக இருந்தது.

மேலும் ‘குடிஅரசு’ பெற்றுள்ள மக்கள் ஆதரவையும் பெறவேண்டிய ஆதரவையும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

‘குடிஅரசு’ ‘முதல் வருஷ’த்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ‘குடிஅரசே’  அதிகமான சந்தாதாரர்களையும் வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில்  ‘குடிஅரசு’ 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் ‘குடிஅரசு’ மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும், அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும், தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே  உறுதி கூறலாம்.

‘குடிஅரசு’வின் வாயிலாகப் பெரியார் ஆற்றிய குமுகாயத் தொண்டின் தாக்கம் பற்றிக் கோவை அய்யாமுத்து அவர்கள்,

‘‘கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து. அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்து வந்தது போலவே, பெரியார் ‘குடிஅரசு தொடங்கிச் சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் அன்பும் அறிவும் ஆவேச உணர்வும் பொங்கிட உழைத்தார். அய்ம்பது ஆண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் அய்ந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதோர் இலர்!’’

இச்சான்றுரைகள் யாவும் மிகையானவை அன்று; மெய்யானவை!

ஆக ‘குடிஅரசு’ என்பது வெறும் இதழாக இல்லாமல் ஓர் இயக்கமாக விளங்கிற்று. சுயமரியாதை இயக்கந்தான் ‘குடிஅரசு’ இயக்கம்; ‘குடிஅரசு’ இயக்கந்தான் சுயமரியாதை இயக்கம். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றுப் பெயராக இலங்கின.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே ‘குடிஅரசு இயக்கம்’ என்று குறிப்பிட நேர்ந்தது.

‘‘என் கருத்துகளை வரும் தலைமுறையினர்க்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை’’ என்னும் உறுதிப்பாட்டுடன் ‘குடிஅரசு’ ஏட்டை ஈன்ற பெரியார், அதைப் பேணி வளர்ப்பதற்கான முறைகளைச் செம்மையாகக் கையாண்டார்.

‘குடிஅரசு’ முதல் இதழின் முதற்பக்கத்தில், ‘‘சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா’’ ரூபாய் மூன்றுதான் என்பதோடு, ‘‘தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால், இதனை ஆதரிக்க வேண்டுவது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்’’ என்றும் பெரிய எழுத்துகளில் பொறித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இதழியல் வரலாற்றில் இணையில்லாப் பெருமை படைத்த ‘குடிஅரசு’ ஏட்டை அறிமுகம் செய்தார் பெரியார். கடந்த மே மாதத்துடன் இந்த இதழ் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன.

‘‘விடுதலை’’ ஏடு நீதிக்கட்சியென்று அழைக்கப்படும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினரால் 01.06.1935ஆம் நாள் அன்று தொடங்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டு, விளைவுகளை விடிவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஏடு தொடங்கப்பட்ட போது பெரியார் அவர்கள், அதை வரவேற்றுப் பாராட்டி ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.

தற்போது அண்ணாசாலை என்று அழைக்கப்படும் மவுண்ட்ரோட்டில் 14ஆம் எண்ணுள்ள கட்டடத்திலிருநது வெளிவந்தது. அதன்பின் 1937 ஆண்டு முதல் பெரியாரே ஏற்று நடத்தினார். 01.01.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடக்க காலத்தில் ‘விடுதலை’ ஏட்டின் விலை காலணா.

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வேடு பரப்பிக்கொண்டிருக்கிறது. வருணபேதம், ஜாதி, மதம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை, வேத, சாஸ்திரம், புராணங்களை மறுத்தல், எதிர்த்தல், ஒழித்தல் இதன் முதன்மை இலக்காக இருந்து வருகிறது. சமூகநீதி, சமத்துவம், அறிவியல், பொதுவுடைமை கல்வி உரிமை, பெண்ணுரிமை, ஆதிக்க ஒழிப்பு, தமிழை அறிவியல் மொழியாக்கல் போன்றவற்றைச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது. எனவே இது செய்தி ஏடல்ல, இயக்கக் கொள்கைகளை வென்றெடுக்க, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழிகாட்டும் ஏடு. இன்றைக்கு வீடு தோறும் ‘விடுதலை’ என்பது இலக்காகக் கொள்ளப்பட்டு பரப்பப்படுவதோடு, இணையதளத்திலும் இலவசமாய்ப் படிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறையாகத் தொடங்கப்பட்டு அதன்பின் நாளேடாக ஆக்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் அவர்கள். இவர் 01.06.1935 முதல் 06.05.1936 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார். இவர் தந்தை பெரியார் 1940இல் மும்பை சென்று அம்பேத்கரைச் சந்தித்துபோது உடன் சென்றவர். ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்கள் 04.11.1936 முதல் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1936 ஜனவரி 7ஆம் நாள் வரை அப்பொறுப்பிலிருந்தார்.

நீதிக்கட்சியால் தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டை நடத்த முடியாமல் பெரியாரிடம் ஒப்படைத்தது. 29.051935 நீதிக்கட்சியால் நிறுத்தப்பட்ட ‘விடுதலை’ ஏடு மீண்டும் 01.07.1937 முதல் பெரியாரால் நாளிதழாக நடத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.

நீதிக்கட்சி ‘விடுதலை’ ஏட்டை நடத்தியபோது,

‘‘பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

பரவரோடு குறவருக்கு மறவருக்கும் விடுதலை!’’

என்ற பாரதியார் பாடல் இடம் பெற்றிருந்தது. பெரியாரிடம் ‘விடுதலை’ வந்தபின் 01.07.1937 முதல் அப்பாடல் இடம் பெறவில்லை.

1937இல் துறையூரில் முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டில் அண்ணா பங்கேற்றார். அண்ணா முதன்முதலில் தலைமையேற்ற மாநாடு இதுதான். துறையூரில் நடந்த மாநாடு குறித்து 1937 ஆகஸ்ட் 23ஆம் தேதி பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை துல்லியமாக அதில் கூறியிருந்தார்.

சுயமரியாதை இயக்கம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் ஜஸ்டிஸ் கட்சி ஆழப்புதைக்கப்பட்டு, சத்தியமூர்த்தியின் ஆசை நிறைவேறியிருக்கும் என்ற வரலாற்று உண்மையையும் கூறியிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் சுயமரியாதைக்காரர்களின் தலையிலே இறக்கப்பட்டது என்றும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்த செலவாக்குக்கு காரணம் சுயமரியாதை இயக்கமே என்றும் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்கவேண்டியதாயிற்று. அறவே அழியும் நிலையிலிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிய பெரியார், ‘விடுதலை’ ஏட்டையும் பொறுப்பேற்று நடத்தினார்.

ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ கடைசியாக வெளிவந்தது 29.05.1937 அன்றுதான்.

‘விடுதலை’ ஏட்டை பெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றினார். 01.07.1937 முதல் விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. பெரியார் பொறுப்பில் விடுதலை வந்தபின் அதன் ஆசிரியராக பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை பொறுப்பேற்றார். வெளியிடுபவராக ஈ.வெ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டில் வருணாசிரம தர்மத்திற்கும், முதலாளிகள் ஆட்சிக்கு எதிராகப் பத்திரிகை நடத்துவது கஷ்டமும், நஷ்டமும், தொல்லையுமான காரியமாகும் என்ற கசப்பான  உண்மையையும் பெரியார் சரியாகக் கூறினார்.

விடுதலைப் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை அரசு விரோதம், வகுப்பு துவேஷம் ஊட்டுகின்றன என்று கூறி வழக்குத் தொடுத்து,  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பண்டித முத்துசாமி பிள்ளையும் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

09.01.1939 அன்று பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று 13.02.1942 வரை பணியாற்றினார். 14.02.1942 முதல் 18.09.1943 வரை ‘விடுதலை’யின் ஆசிரியராக என்.கரிவரதசாமி பணியாற்றினார்.

18.09.1943 இதழோடு ‘விடுதலை’ நிறுத்தப்பட்டு யுத்தப் பிரச்சார ஏடாக வெளிவந்தது. 19.09.1943 முதல் 05.06.1966 வரை ‘விடுதலை’ பெரியார் பொறுப்பில் இல்லை. அக்காலகட்டத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ‘‘புது விடுதலை’’ என்ற பெயரில் வந்தது.

தனக்கு நெருக்கடி தந்த அரசாங்கத்திற்கு போர்க் காலம் என்பதால் அரசுக்கு துணை நிற்றல் என்ற அடிப்படையில் பெரியார் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். பத்திரிகை முழுக்க போர்ச் செய்திகளே அச்சிடப்பட்டிருந்தன. அப்போது சீர்திருத்த எழுத்தும் தவிர்க்கப்பட்டது.

1943 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ‘விடுதலை’ இதழ்கள் பெரியார் பொறுப்பில் இல்லை. அதுபோல் 1944 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டு காலமும் அவர் பொறுப்பில் ‘விடுதலை’ வெளிவந்தது. கே.ஏ. மணி(மணியம்மையார்) 07.06.1946 முதல் 06.09.1949 வரை விடுதலை ஆசிரியராகப் பொறுப்பில்  இருந்தார். 1949 செப்டம்பர் 7ஆம் தேதி கே.ஏ.மணி என்னும் பெயர் ஈ.வெ.ரா.மணியம்மை என்று மாற்றப்பட்டு இதழ் வெளிவந்தது. (பெரியார் மணியம்மையார் திருமணம் 09.07.1949ல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

07.09.1949 முதல் 16.03.1978 வரை ஈ.வெ.ரா. மணியம்மை அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் அதிகார பூர்வ ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு ‘விடுதலை’ இதழுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இவ்வளவு தொகை கேட்கப்படவில்லை என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆரிய பார்ப்பனர்கள், எப்படியாவது விடுதலையை முடக்கி, அதன் பிரச்சாரத்தை, அதன்மூலம் மக்கள் பெறும் விழிப்பைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே, அரசின் மூலம் இச்செயலைச் செய்தனர்.

அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தங்கள் கருத்துகளை ‘விடுதலை’யில் எழுதி மக்களைக் கவர்ந்தனர், விழிப்பூட்டி எழுச்சிபெறச் செய்தனர்.

அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் தி.மு.க. தொடங்கப்பட்டபின், குத்தூசி குருசாமி நிருவாக ஆசிரியராக ‘விடுதலை’யில் சிறப்பாக எழுதி வந்தார். குத்தூசி குருசாமி தந்தை பெரியாருடன் முரண்பட்டு நின்றதால் விலக்கப்பட்டார்.

அந்நிலையில் விடுதலையைத் தொடர்ந்து நடத்துவதில் சரியான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி பெரியாருக்கு ஏற்பட்டது. அச்சூழலில் பெரியார் தேர்வு செய்தது. கடலூரில்  வழக்கறிஞராகப் பணியாற்றிய கி.வீரமணியவர்களைத்தான்.

பெரியாரின் அன்புக் கட்டளையை ஏற்று கி.வீரமணியவர்கள் 21.08.1962 முதல் ‘விடுதலை’க்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் ‘விடுதலை’ தொடர்ந்து வெளிவர துணை நின்றார்.

மணியம்மையார் மறைவிற்குப்பின் ‘விடுதலை’யின் முழுப் பொறுப்பையும் ஏற்று, விடுதலையை விரிவாக்கி, சந்தாக்களைப் பெருக்கி, திருச்சியிலும் ஒரு பதிப்பை உருவாக்கி சிறப்புடன் நடத்தி வருகிறார். ‘விடுதலை’ தமிழக வரலாற்றில் பல சாதனைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

‘விடுதலை’ பற்றி அண்ணா

‘‘கீழ்த்தர ஜாதியாய் – நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் – உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் – பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டுவிட்டாய் – கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் – அரசியலிலோ, பிறதுறைகளிலோ கேவலம்  கீழ்த்தர சிப்பந்தியாய்ச் சீர்க்குலைக்கப்பட்டுவிட்டாய்’ என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியும் வாழக்கைத்துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது’’ என்று ‘விடுதலை’யின் அளப்பரிய பணியைக் கூறினார்.

கலைஞர் கருத்து

‘‘‘விடுதலை’ என் வழிகாட்டி, திசைகாட்டி, ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் தவறாது படித்து என்னை நான் சீர்செய்து கொள்கிறேன்; நேர் செய்து கொள்கிறேன் என்று ‘விடுதலை’யைப் பெருமையாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

சமூகநீதி, இடஒதுக்கீடு, ஆட்சியாளர்களை நெறிப்படுத்தல், போராட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’ ஏட்டின் பங்கு இணையற்றது.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதில் இவ்வேடு வரலாற்று சாதனை செய்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அரசுக்கும், மக்களுக்கும், அலுவலர்களுக்கும், தொண்டு பணி செய்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தேவையான கருத்துகளை அறிக்கையாக எழுதி வழிநடத்துகின்ற, தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற பணியை ‘விடுதலை’ செய்து வருகிறது. தொலைக்காட்சிகளின் அன்றாட விவாதங்களின் கருப்பொருளை ‘விடுதலை’யே வழங்குகிறது என்றால் அது மிகையன்று.

இத்தகு சிறப்புக்குரிய பழைய ‘குடிஅரசு’ ஏட்டையும் ‘விடுதலை’ ஏட்டையும் இன்றைய தலைமுறை படிப்பதோடு, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘The
Modern Rationalist’ போன்ற ஏடுகளைத் தவறராது படித்து, விழிப்பும், தெளிவும் பெற்று, கல்வி, சமூக நீதி, சமத்துவம், சமஉரிமை பெற வேண்டும், அனைவரும் பெறத்தொண்டாற்ற வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே காப்பாற்றப்பட,  இந்திய மக்கள் உரிமையும் உயர்வும் பெற அதுவே வழி! சுயமரியாதைச் சுடரொளிதான் இந்தியா எங்கும் வெளிச்சமும், விழிப்பும் தருகிறது என்பதே இன்றைய யதார்த்த நிலை! தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம்! .

- உண்மை இதழ், 1-15.7.25

செவ்வாய், 3 ஜூன், 2025

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)

 Published May 27, 2025

விடுதலை நாளேடு

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)
எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! – தந்தை பெரியார்

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக் கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தி யானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– “விடுதலை” நாளேடு 11-07-1953

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

 Published May 28, 2025

விடுதலை நாளேடு

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது பாரம்பரிய சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் நடந்தது. அந்த நிகழ்வில் ஒரே மேடையில் மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.

விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர்.

ஆடம்பரமான ஆடையோ, அணிகலன்களோ கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி கொண்டனர்.

அப்போது, “சுயமரியாதை வெல்க! வைக்கம் வீரர் வாழ்க!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று முதல் முறையாக மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

மதச்சடங்கு திருமணங்கள் பெரும்பாலும் ஜாதியப் பாகுபாட்டோடு இழிவுபடுத்தும் நிலையிலும் நடத்தப் பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த  அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.

பின்னாளில், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) நிறைவேற்றப்பட்டது. இது 1968 ஜனவரி 20 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

உலகமெங்கிலும் இன்றளவும் பல்வேறு வகைகளில் திருமண முறைகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏதாவது ஒரு மதச்சடங்கு அல்லது அச்சமூகத்திற்கான அடையாளமாக ஏதாவது ஒரு சடங்கு நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக இணையர்கள் உறுதிமொழி ஏற்க புரட்சிகர சுயமரியாதைத் திருமணம் நடத்திய தந்தை பெரியார் மனிதகுலத்திற்கு மேலும் ஒரு நவீன பாதையினை அமைத்துகொடுத்த நாள் இன்று.