வியாழன், 28 நவம்பர், 2024

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்! இந்துக்கள் தெருவில் நடப்பது கூட இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்

 

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

விடுதலை நாளேடு
கட்டுரை

இந்துக்கள் தெருவில் நடப்பது கூட

இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்


சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்ஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபசுவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது.

இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போராட்டம் போன்று சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பன போலீசு சுப்பிரண்டின் அடக்குமுறை வெறியாட்டம்
இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவ துடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த மனிதனும் பொறுத்துக் கொள்வானா?
இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர் களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி எது?
ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம்.
இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப் பட்டதாகும். அவ்வாக் குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.06.1930

ஞாயிறு, 24 நவம்பர், 2024

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

 

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30

இயக்க வரலாறான தன் வரலாறு (351)

டி.கே.கைலாசம் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் ஆசிரியர்

அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் நினைவு அறக்கட்டளை (நிறுவனர்: கைலாசம் அவர்களின் மகன் டி.கே.சுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற ஆசிரியர்)யின் சார்பில் ‘பெரியார் பேருரையாளர்’க்கான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி- கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஆர்.இராசேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
திருச்சி பெரியார் மாளிகை வளாகம் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ டி.டி.வீரப்பா மன்றத்தில் இரண்டாவது சொற்பொழிவுக் கூட்டம் 17.1.2006 செவ்வாய் காலை 10.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு (திருச்சி)

 

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை வகித்தோம்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘‘தந்தை பெரியார் காணும் உலகம் – நெறிகளும் – தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்களை ஆய்வுரையாக நிகழ்த்தினோம்.

எமது தலைமை நிறைவுரைக்கு முன்பாக அருப்புக்கோட்டை டி.கே.கைலாசம் நினைவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ என்கிற சிறப்புத் தகுதியை அறிவித்துப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 வழங்கினோம். இந்தச் சிறப்புக்கு முழு தகுதியுள்ள கலி.பூங்குன்றன் அவர்கள் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறந்த பெரியாரின் மாணவர் என்று பாராட்டினோம். அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் மூத்தபெரியார் பெருந்தொண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்துப் பாராட்டினோம்.

-கட்டுரையின் ஒருபகுதி....

வியாழன், 21 நவம்பர், 2024

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அனல் வீச்சு!

 

ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!

விடுதலை நாளேடு

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அனல் வீச்சு!

செவ்வாய், 12 நவம்பர், 2024

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள் மொத்தம் 73.

அவர்களோடு சிறைக்குச் சென்ற குழந்தைகள் 32.

போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.

இந்த வீர வரலாறு தொடங்குவதற்கு வித்திட்ட நாள் நவம்பர் 13.

#தமிழ்நாட்டுப்_பெண்கள்_மாநாடு
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய டாக்டர் தருமாம்பாள் அவர்களும், அவரது இரண்டு மருமகள்களும்...!

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சுவரெழுத்தாளர் சுப்பையா!'' - கி.வீரமணி

                    

                         விளம்பரமில்லா வியக்கத்தக்க                                               பெரியார் தொண்டர்கள்!

                       '' சுவரெழுத்தாளர் சுப்பையா!''

                              - கி.வீரமணி  


                                   ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,

ஈரோட்டு வேந்தர் பராக்! பராக்!!

விநாயகனை வீதியிலே போட்டுடைத்த, வீராதி வீரர்!

சூராதி சூரர் சுப்ரமணியனை சுக்குநூறாக்கிய சூரர்!

தீராதி தீரர் தீங்கான அரசியல் சட்டத்தை எரித்த தீரர்!

பராக்! பராக்!

என கட்டியம் கூறும் கம்பிரக் குரல் மாநாட்டுப் பேரணிகளில் பெரியார் அமர்ந்து வரும் அலங்கார ஊர்திக்கு முன்னால் ஒலிக்கின்றதென்றால் அது சுவரெழுத்தாளர் சுப்பையாவின் குரலாகத்தான் இருக்கும். காரைக்குடி அருகில் சூரக்குடி எனும் கிராமத்தில் பிறந்து இளமைப்பருவத்தில் 1940களின் மத்தியில் வேலைதேடி மயிலாடுதுறைக்கு வந்தவர். சுயமரியாதைக் கோட்டையாக விளங்கிய மயிலாடுதுறையில் பெரியார் தொண்டர்களின் தொடர்பு ஏற்பட பெரியார் கொள்கை மீதும் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மயிலாடுதுறை கோ.அரங்கசாமி அவர்களின் மளிகைக்கடைதான் பெரும்பாலும் அவரின் பாசறை

1950 வாக்கில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிச் சுவர்களில் பெரியாரின் கொள்கைகளை எழுத ஆரம்பித்த அவரது சுவரெழுத்துப் பணி தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தொடர்ந்தது. சுவரில் அவரால் எழுதப்பட்ட வாசகங்கள் இருபால் இளைஞர்களையும் ஈர்த்து அவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சுப்பையா சுவரெழுத்திற்கென எந்தவித பிரத்யோக எழுதுபொருளையும் பயன்படுத்தியதில்லை. சாலை போட பயன்படும் தாரை எடுத்து காய்ச்சி மண்ணெண்ணெய் கலந்து அதில் துணி சுற்றப்பட்ட மூங்கில் குச்சியை தோய்த்துதான் எழுதுவார். கடைசிவரை அவருக்குப் பயன்பட்டது இரண்டு பழைய தகர டப்பாக்களும் அழுக்குத்துணியும் மூங்கில் குச்சியும்தான். இரவு முழுதும்
எழுத்துப் பணி, பகல் வேளையில் மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம். இதுவே அவரது வாழ்க்கையாகி இருந்தது. யாருக்கும் கட்டுப்படமாட்டார். முன்கோபக்காரர். மயிலாடுதுறை காவிரி ஆற்றில் காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதில் விபூதி வீரமுத்து எனும் காங்கிரஸ் பேச்சாளர் பேசயிருந்தார். இவர் போகுமிடங்களிலெல்லாம் தந்தை பெரியார் அவர்களை விமர்சித்து பேசிவந்தார். விபூதி வீரமுத்து மயிலாடுதுறை வருவதை அறிந்த சுப்பையா "கருப்புக்கு மறுப்பு! மறுப்புக்கு செருப்பு!" என கொட்டை எழுத்துக்களில் கூறைநாடு பகுதியில் எழுதிவிட்டார். இது இயக்கத் தோழர்களை உசுப்பிவிட்டது. வழக்கம்போல் விபூதி வீரமுத்து பெரியார் அவர்களைப்பற்றி பேச ஆரம்பிக்க கூட்டத்தில் கலந்திருந்த இயக்கத் தோழர்களும் சுப்பையாவும் மேடை முன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட அடிதடி ரகளையாகி கூட்டம் அத்தோடு ரத்தாகிப் போனது. விபூதி வீரமுத்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி அருகில் இருந்த காங்கிரஸ் தோழர் பூட்டுக்கடை தங்கராசுவின் கடையில் ஒளிந்துகொண்டார். பின்னாளில் அந்தத் தங்கராக கருப்புச்சட்டை போடாத பெரியாரின் தொண்டராகவும், என்பால் மிகுந்த பற்று கொண்டவராகவும் விளங்கினார். நான் மயிலாடுதுறைப் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு என்னை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார்.

காங்கிரசை நமது இயக்கம் கடுமையாக எதிர்த்த நேரத்தில் மயிலாடுதுறைக்கு வருகைதந்த காமராஜரிடம் சுப்பையாவின் சுவரெழுத்தைப் பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் முறையிட அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காமராஜரே ஆத்திரப்பட்டு 'கட்டை விரலை வெட்ட வேண்டும்" என்று பேசிவிட்டுப் போனார்.
-
-உண்மை இதழ், 16-30.09.2015