செவ்வாய், 31 ஜூலை, 2018

ஆர்க்காடு சர். ஏ.ராமசாமி



சர்.ஏ.ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1918இல் ராமசாமி முதலியார் அவர்கள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோருடன் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளைப் பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார்.

நீதிக்கட்சியின் ‘ஜஸ்டிஸ்’ செய்தித்தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித்தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.

மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.

ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதார் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.

1925இல் சர். பி.டி.தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மகராஜ்  அவர்களையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. டிசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடத்த பானகல் அரசருக்குத் துணை புரிந்தவர். பின்னர் தொடர்ந்து பல்வேறு அரசாங்கப் பதவிகளில் இருந்துகொண்டு சமூகநீதிக்குப் பாடுபட்டவர். அவரது நினைவு நாள் ஜூலை 21.

- உண்மை இதழ், 16-31.7.18

திராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்

நினைவு நாள்: 17-07-1919

 


டாக்டர் ஜி.வி. நாயர் (தரவாட் மாதவன் நாயர்) அவர்கள் இங்கிலாந்தில் காது, மூக்கு, தொண்டை (ணி.ழி.ஜி) துறையில் மிகப் பெரிய மருத்துவப் படிப்பு முடித்து திரும்பிய அறிஞர்.

நீதிக்கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (ஷி.மி.லி.தி)  சார்பில் துவக்கப்பட்ட ‘யிustவீநீமீ’  ஆங்கில நாளேட்டிற்கு அதன் முதல் ஆசிரியப் பொறுப்பை ஏற்ற பெருமகனார். (26.2.1917)

டாக்டர் நாயர், துவக்கத்தில் காங்கிரஸ்காரராகவே, சர். பிட்டி தியாகராயர் போன்றே இருந்தவர்.

டாக்டர் சி. நடேசனார் திராவிடர் சங்கத்தை 1912 முதலே உருவாக்கி நடத்திய நிலையில், இம்மூவரும் முப்பெரும் தலைவர்களாகி முன்னெடுத்துச் சென்றனர் - திராவிடர் இயக்கத்தை!

டாக்டர் டி.எம். நாயர் அவர்களுக்கு, 1918 ஜூனில் லண்டன் போய்ச் சேர்ந்தபோது, அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது, மருத்துவம் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்று வாய்ப்பூட்டை இங்கிலாந்து அரசு போட்டது. திருமதி அன்னிபெசன்ட், திலகர், அவரது கூட்டமே இதற்கு மூல காரணம். பிறகு இங்கு பணியாற்றிச் சென்று நாடாளுமன்றத்தில் இருந்த லார்ட் சைடன்ஹாம், லார்ட் கார்மைக்கேல் போன்றவர்கள் வாதாடி, நாயருக்குப் போடப்பட்ட வாய்ப்பூட்டை உடைத்தனர்.

பிறகு நாயர் தெளிவாக வாதிட்டார் - பிரிட்டிஷ் அரசியல்வாதிகளிடையே இரு அவைகளைச் சேர்ந்து கொண்ட கூட்டத்தில் பேசினார் (2.8.1918) உடல் நிலை மிகவும் கெட்டு, லண்டனில் தமது 51ஆம் வயதில்,  1919 ஜூலை 17-இல் அங்கேயே டாக்டர் நாயர் மறைந்து, அடக்கம் செய்யப்பட்டார்! அவரை திராவிட லெனின் என்று வர்ணித்தார் தந்தை பெரியார் அவர்கள்! காலம் என்ற மணல்மேட்டில் அந்தப் பெருமான்களின் காலடிச் சுவடுகளே - நமக்குச் செல்லவேண்டிய பாதைக்கு ஒளியூட்டும் கலங்கரை வெளிச்சங்களாகும்

- உண்மை இதழ், 16-31.7.18

ஞாயிறு, 29 ஜூலை, 2018

தருமபுரி - மத்தூரில் (28.7.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் ...

மத்தூர் மாநாட்டில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!
நமது சிறப்புச் செய்தியாளர்
'உண்மை' சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டன (மத்தூர், 28.7.2018)

மத்தூர், ஜூலை 29 தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போக இளைஞர்களை அழைப்பதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கூறினார்.
தருமபுரி - மத்தூரில் நேற்று (28.7.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
அண்மைக் காலமாக புதுமுக இளைஞர்களை ஏராள மாகப் பார்க்கிறேன்; என்னைப் பொருத்தவரை ஒவ் வொரு கழகத் தோழரையும் நேரடியாகவே அறிந்திருப் பவன், அப்படிப்பட்ட எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைஞர்கள், மாணவர்களை ஏராளமாகப் பார்த்து வருகிறேன். இந்த மாநாட்டிலும் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம்
எப்படி இருக்கிறது?
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று சொன்னவர்கள், அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு இன்றைக்கு இயக்கத்தை நோக்கி இளைஞர்கள், மாணவர்கள் அலை அலையாக வருவதுதான் சரியான பதிலாகும்.
இந்த மாவட்டத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பெண் ஒருவர் மாவட்டத் தலைவராக வந்த முதல் மாவட்டம் இந்த மாவட்டமாகும்.
இந்த மாநாட்டுக்கு உள்ள கூடுதல் பெருமை சாதனை - 1000 உண்மை சந்தாக்களை அளிக்க இருக்கிறார்கள் என்பதுதான் - அளிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.
பெரியார் நடத்திய ஏடுகள் இதழ்களின்
தனித் தன்மை
இதழ் உலகத்தில் தந்தை பெரியாரின் முத்திரை தனித் தன்மையானது - தான் துவக்கிய ஏடுகள், இதழ்களுக் கெல்லாம் தந்தை பெரியார் சூட்டிய பெயரினை நினைத் துப் பார்க்க வேண்டும்.
'குடிஅரசு' 'பகுத்தறிவு', 'புரட்சி', 'விடுதலை' ஆங்கி லத்தில் 'ரிவோல்ட்'  'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆங்கிலத்தில் 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' என்றெல்லாம் ஏடு நடத்தி வந்திருக்கிறார்கள். ஏடுகள், இதழ்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்களே - அந்த ஏடுகளின் கொள்கை எந்தத் திசையில் இருக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட 'திராவிடன்' என்ற இதழையும், பிற்காலத்தில் தந்தை பெரியார் தம் பொறுப்பில் ஏற்று நடத்தினார். தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று சிறுபிள்ளைத்தனமாக சிலர் கேட்கிறார்கள். தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ஏடுகள் - இதழ்களுக்குச் சூட்டிய பெயர்களே - பெரியார் தமிழுக்குச் செய்த தொண்டினை பறைசாற்றும்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
தந்தை பெரியார் கருத்துகள், கொள்கைகள் உலகம் பூராவும் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர் பெரு மக்கள் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகள் மிகவும் தேவைப்படுகின்றன.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவிலும் அத்தகைய மாநாடு நடைபெற உள்ளது. மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் தொலைநோக்கோடு பாடினார். அதன் நிலைப்பாட்டை - தேவையை இன்று நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இது பெரியார் மண்!
காவிகள், சங்பரிவார்கள் என்ற பார்ப்பனீய பிற்போக்குச் சக்திகள் இந்தியாவின் வேறு சில பகுதிகளில் ஆட்டம் போட்டாலும் தமிழ்நாட்டில் அது எடுபட முடியாததற்குக் காரணம் - இது தந்தை பெரியார் மண் என்பதே!
சுவாசம் என்று சொல்லும் பொழுது, அதில் இரண்டைக் கவனிக்க வேண்டும். நல்ல காற்றை பிராண வாயு என்னும் ஆக்சிஜனை உள்ளே வாங்குகிறோம். கெட்ட காற்றான கரிமில வாயுவை வெளியே விடுகிறோம். சுவாசம் என்கிறபோது - இந்த இரண்டும் சேர்ந்ததுதான். நல்ல காற்றை அனுபவிக்க கற்றுக் கொடுப்பதுதான் திராவிடர் கழகம்.
போராட்டத்தின் சின்னம் கருப்பு
இன்றைக்குப் பல்வேறு காரணங்களுக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் அணிய வேண்டிய உடை கருப்புச் சட்டையாகத் தானிருக்கிறது.
எதிர்ப்புக்கு அடையாளம் கருப்புச் சட்டையாகவே இருக்கிறது; நீதி கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் செல்லுபவர்களும், நீதி வழங்கக் கூடிய இடத்தில் இருக்கக் கூடியவர்களும் கருப்புடைதான் அணிகிறார்கள்.
இளைஞர்களே, உங்களை அழைத்துச் செல்லவே இங்கு வந்திருக்கிறேன்!
நான் இந்த மாநாட்டுக்கு வந்ததன் முக்கியம் இளைஞர்களை அழைத்துச் செல்லுவதற்குத்தான்;  இளைஞர்களை அழைக்கிறோம் என்றால், எங்களிடம் வாருங்கள், பதவிக்குச் செல்லலாம் என்பதற்காக அல்ல.
எங்களிடம் வந்தால் ஊராட்சிமன்ற உறுப்பினராகக்கூட ஆக முடியாது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது.
"துறவிகளுக்கும் மேலானவர்கள் கருஞ்சட்டைக்காரர்கள்!"
தந்தை பெரியார் கூறுவார் - எங்கள் தொண்டர்கள் துறவிக்கு மேலானவர்கள் என்று கூறுவார். அந்தத் துறவிக்காவது அடுத்த ஜென்மத்தில் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்ற ஆசை உண்டு. எங்களுக்கு  அதிலும் நம்பிக்கை கிடையாது. அதனால்தான் துறவிக்கு மேலானவர்கள் எங்கள் தொண்டர்கள் என்று தந்தை பெரியார் கூறினார்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் - அதன் மூல வேரான ஜாதி அறவே ஒழிக்கப்பட வேண்டும் - ஜாதியைப் பாதுகாக்கும் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும். அதுவே கழகத்தின் அடிப்படைக் கொள்கை.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம்
குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான போராட்டம்.
தந்தை பெரியார் அவர்களின் சீடரான மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் 'உங்கள் சீடர்களாகிய நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் போராட வேண்டுமா என்று கேட்டு, அந்த வகையில் சட்டமே இயற்றினார். உச்சநீதிமன்றம் சென்றனர் பார்ப்பனர்கள். மறுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் மறுபடியும் சட்டம் ஒன்றை இயற்றினார் நமது கலைஞர். இப்பொழுது உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்க முடியும். ஆனால் அதிமுக அரசு அதைச்  செய்யாமல் தவிர்த்து வருவது தேவையில்லாதது - கண்டிக்கத்தக்கது.
உங்களை அழைப்பது ஜெயிலுக்கே!
இந்த நிலையில் நாம் அவசியம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  நான் தொடக்கத்தில் சொன்னபோது - அதற்காகத்தான் இளைஞர்களை அழைப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன் சட்டசபைக்கல்ல - ஜெயிலுக்கு அழைத்துப் போகத்தான் இங்கு வந்திருக்கிறேன். (பலத்த கரஒலி).
திராவிடர் கழகத்திற்கு வர விரும்புவோர் போராட்டத்திற்கு முன்வர வேண்டும் - அதில் ஈடுபட்டு ஜெயிலுக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இளைஞர்களே, வாருங்கள் வாருங்கள் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் அழைக்கிறோம் என்று கூறி போர் முரசம் கொட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.
"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?" என்ற புத்தகம் வெளியீடு
எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய "ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?" என்ற புத்தகத்தை கழகத் தலைவர் வெளியிட கே.சி.எழிலரசன், ஊமை.ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, அரூர் ராஜேந்திரன், இந்திராகாந்தி, கரு.பாலன், அ.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர் (மத்தூர், 28.7.2018).

தீயவற்றைத் தீய்க்கும் தீப்பந்த வரவேற்பு (மத்தூர் - 28.7.2018)


மத்தூரில் (தருமபுரி) நேற்று நடைபெற்ற தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டுக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 250 கருஞ்சட்டை இளைஞர்கள் அணிவகுத்து அளித்த தீப்பந்த வரவேற்பு, எழுச்சிமிகு ஓர் உணர்ச்சிக் காவியமாகும். இரவு 7 மணியளவில் தருமபுரியிலிருந்து வருகை தந்த தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. தந்தை பெரியார் சிலை அருகே சாலையின் இரு புறங்களிலும் தீப்பந்தத்துடன் போர்ப்பாட்டு ஒலி முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.
தந்தை பெரியார் வாழ்க!  அன்னை மணியம்மையார் வாழ்க!  தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! பணி முடிப்போம் பணி முடிப்போம்! தந்தை பெரியார் பணி முடிப்போம்! என்ற ஒலி முழக்கங்களை மண்ணும் விண்ணும் அதிர முழக்கமிட்டு வரவேற்றனர். பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த முன்னணியினரும், பொதுமக்களும் கூடி நின்று, கருஞ்சட்டைத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு இலட்சிய முழக்கமிட்டு வரவேற்ற காட்சியைக் கண்டு களித்தனர்.
இதுபற்றி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: மாநாட்டுக்கு இங்கே நான் வந்தபோது கழக இளைஞரணியினர் எழுச்சிமிகு தீப்பந்த வரவேற்பை அளித்தனர். எரித்து முடிக்கப்பட வேண்டிய பிற்போக்கு மதவாதக் கருத்துகள், மூடநம்பிக்கைகள், ஆதிக்கப் பழைமைச் சித்தாந்தங்கள், சமூக அநீதி போக்குகள் ஏராளமாக உள்ளன. அவை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்கான அடையாளமாகத்தான் கழக இளைஞரணியினர் இந்த தீப்பந்த வரவேற்பினை அளித்தனர். அழிக்கப்பட வேண்டியவற்றை அழித்து முடிக்க அரிமாக்களாகிய நாங்கள் தயார் தயார் என்ற அறிவிப்பின் அடையாளம்தான் இந்தத் தீப்பந்த வரவேற்பு - அதற்குத் தயாராகி விட்ட இளைஞர்களின் சூளுரைதான் - அறிவிப்புதான் இந்தத் தீப்பந்த வரவேற்பு - அதனை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி - தீச்சட்டி ஏந்தி மகளிர் ஊர்வலம்

  
தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர்
- விடுதலை நாளேடு, 29.7.18

வியாழன், 26 ஜூலை, 2018

சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?

பிற இதழிலிருந்து

இந்த வார "ஆனந்த விகடன்" - பேட்டி: த.கதிரவன்

படம்: சொ.பாலசுப்ரமணியன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி



 

சமீபகாலமாகவே சர்ச்சைகள் சுற்றிவருகின்றன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை. அவர் ஒரு திருமணத்தில் மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்த வீடியோ, "வீரமணி பேரனின் திருமணம்" என்று சமூக வலைதளங்களில் பரவியது. அது ஓய்ந்த சில நாள்களிலேயே கும்பகோணம் "திராவிட மாணவர் கழகப் பவள விழா" மாநாட்டில், கி.வீரமணி, சாரட்டில் பயணித்ததும் சர்ச்சை யானது.  அவரைச் சந்தித்துப் பேசினேன்.

"சமூக நீதி, சமத்துவம் பேசும் கி.வீரமணி, தொண்டர் களிடையே சாரட் வண்டியில் பயணித்து வந்தது சரி தானா?"

"குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பேரணி, ஊர்வலம், முழக்கங்கள் எல்லாமே ஒரு வகையான பிரச்சார உத்தி. ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காகச் சிறைசென்ற பெரியார் விடுதலை யானபோது, சிதம்பரத்தில், தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அந்தக் காட்சியை வர்ணித்துதான் "அவர்தாம் பெரியார்" பாடலை இயற்றினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இப்போது குடந்தையில், 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டில், அய்யாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 'பொது ஒழுக்கத்தோடு நடப்போம்‘, `சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்‘ என்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டுடன் திரண்டெழுந்த இந்த மாணவர் எழுச்சி பற்றிய சிறப்புச் செய்திகளை எல்லாம் மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்ட மிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.  "பல்லக்கில் பவனி வந்தார்" என்று மோசடியாகச் சித்திரித்து பரவ விட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு, கன்ஷிராம், மாயாவதி தலைமையில், உத்தரப்பிரதேசத்தில் "பெரியார் மேளா" கொண்டாடப் பட்டது. இந்தியா முழுக்கப் பரவிய இந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றே, அப்போது 'பிள்ளை யார் பால் குடிக்கிறார்' என்று கிளப்பிவிட்டார்கள். இதை யடுத்து, 'பிள்ளையார் பால் குடிக்க முடியுமா? பால் குடித்தது உண்மையா? பால் குடித்தது சரியா?‘ என்றெல்லாம் விவா திக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இது காலங்காலமாக அவர்கள் செய்துவரும் உத்தி; காலாவதியான உத்தி!"

"ஜமீன், ராஜாக்களின் அடையாளமான சாரட் வண்டி யில், சமத்துவத்தை வலியுறுத்தும் இயக்கத் தலைவரே தோழர்களுக்கு மத்தியில் பயணித்து வந்தது குறித்து முற்போக்காளர்கள் சிலரும் விமர்சிக்கிறார்களே..?"

"குதிரை வண்டியில் ஏறிவந்தாலே, சமத்துவம் போய் விடுமா? சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?அப்படி 'வீக்'கானதாகத்தான் சமத்துவம் இருக்கிறதென்றால், அப்படி யொரு சமத்துவமே இருக்கக்கூடாது. காவல்துறையில், அணிவகுப்பு நடக்கிறது, அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துகின்றனர்... அப்போதெல்லாம் தலைவர்கள் காரில் அமர்ந்தவாறேதான் பார்வையிடு கின்றனர். நான் காரில் அமர்ந்து செல்லும்வழியிலேயேகூட தோழர்கள் எனக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்; நானும் பதில் வணக்கம் வைக்கிறேன். எனவே, இது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

சமத்துவம் என்பது எதில் வரவேண்டும்... உத்தியோகத் தில், பேச்சில், சுடுகாட்டில் என்று சமத்துவம் வரவேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. திராவிடர் கழகம் அளவுக்கு சமூக நீதிக்காகப் போராடுகிற இயக்கம் வேறு எங்கேயிருக்கிறது? எனவே, இதில்போய் சமத்துவத்தைத் தேடுவதென்பது, அவர்களுக்குச் சரியான பார்வை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது!"

"ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டிய துரை முருகன், கோ.சி.மணிக்கு எதிராக ஆவேசம் காட்டிய திரா விடர் கழகம்., மு.க.ஸ்டாலின், சிறீரங்கம் கோயிலுக்குச் சென்று வந்தது குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லையே...?

"அது உண்மையில்லீங்களே... ஒரு திருமண விழாவை நடத்திவைக்கத்தானே ஸ்டாலின், சிறீரங்கம் சென்றார். அங்கேயுள்ள பார்ப்பனர்கள்தான், வலியவந்து 'பூரண கும்ப மரியாதை' கொடுப்பதாகச் சொல்லி அவருக்குப் பொட்டு வைத்திருக்கிறார்கள். அதையும்கூட ஸ்டாலின், உடனே அழித்துவிட்டார். இப்போது, அதையும் வைத்துப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள். ஸ்டாலினே முன்வந்து ஏதாவது கோயி லுக்குப் போனதாக ஏதேனும் செய்திகள் இருக்கிறதா... சொல் லுங்கள்... நான் கண்டிக்கிறேன்!"

"சிறீரங்கம் கோயிலை ஸ்டாலின் வாகனத்திலேயே வலம் வந்ததாகவும், யானைக்கு கரும்பு, வெல்லம் கொடுத்துப் பரிகாரம் செய்ததாகவும் செய்திகள் வெளி யாகி யிருக்கின்றனவே...?"

"பரிகாரம் செய்வதற்காக ஸ்டாலின் அங்கே போக வில்லை. அது தேவையும் இல்லாத விஷயம். 'ஸ்டாலின், கோயிலுக்குள் சென்றார்... கும்பிடு போட்டார்... அர்ச்சனை செய்தார்‘ என்று சொல்லுங்கள்... நான் கண்டிக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், கண்டிப்பதற்கு நாங்கள்  யோசிப்பதே இல்லை.

பா.ஜ.க-வோடு தி.மு.க கூட்டு வைத்தபோது, அதனை நாங்கள் ஏற்கவில்லையே... தி.க-வைப் பொருத்தவரையில், தவறு செய்தால் தயவு தாட்சண்யத்துக்கு இடமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பெரியாராவது மடத்துக்குப் போயிருந்தபோது குன்றக்குடி அடிகளார் வைத்த பொட் டினை உடனே அழித்துவிடாமல், கொஞ்சம் தாமதமாகத் தான் அழித்தார். ஆனால், ஸ்டாலினோ உடனே பொட் டினை அழித்து, தான் எவ்வளவு சிறந்த கொள்கையாளர் என்பதைக் காட்டி விட்டாரே...!"

"ஸ்டாலின், குங்குமத்தை அழித்த சம்பவம் இந்து மதத்தினரைப் புண்படுத்தாதா?"

"ஒரு விஷயத்தை ஏற்காதவரிடம் போய் அதே விஷயத் தைச் செய்வதென்பது அறிவுடைமையா? குன்றக்குடி அடிகளார் அழைத்ததின் பேரில், ஒருமுறை மடத்துக்குச் சென்றார் பெரியார். அங்கே வரவேற்பு முறையில் ஒன்றாகப் பெரியாருக்குத் திருநீறு பூசப்பட்டது. ஆனால், இங்கே ஸ்டாலின், 'தனக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டும்' என்று யாரையும் அழைக்கவே இல்லையே... ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் போயிருந்தவரை ஒரு குழப்பு குழப்பிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்பனர்களே வலியப்போய் பூரண கும்ப மரியாதை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களது முயற்சி எதுவும் 'டேக் ஆஃப்' ஆகவில்லை. எனவே, ஸ்டா லின், குங்குமத்தை அழித்துக்கொண்டதுதான் இப்போது செய்தியாகியிருக்கிறது. இது பாராட்டப்படக் கூடியதுதான்!"

"தாலி அகற்றும் விழா நடத்துகிற கி.வீரமணி, தன் பேரன் திருமணத்தைத் தாலி கட்டி நடத்தியிருப்பதாகச் செய்திகள் பரவியதே?"

"1,500 பேர் முன்னிலையில் நடந்த திருமணம் அது. அப்படியொரு சம்பவமே அங்கு நடைபெறவில்லை. எனவே, இந்தச் செய்தியில், துளியளவும் உண்மையில்லை. ஆனாலும், திரும்பத் திரும்ப இப்படியொரு பொய்ச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இதழான 'விஜயபாரத'த்தில், இந்தச் செய்தி வந்தவுடனேயே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, இப்போது வழக்குப் போடவும் தயாராகியிருக்கிறோம்."

"தாலி அகற்றும் விழாவில் பிரச்சினை ஏற்பட்டபோது திராவிடர் விடுதலைக்கழகம், ம.க.இ.க. போன்ற அமைப் புகள் உங்களுக்குத் துணைநின்றன. ஆனால், இதற்குச் சில மாதங்கள் கழித்து, 'பெரியார் தொகுப்பு' தொடர்பாக நீங்கள் கொளத்தூர் மணிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே... இது தோழமைச் சக்திகளிடம் விரிசலை ஏற்படுத்தாதா? "

"இது தவறான கருத்து... அப்படி எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. பெரியார் புத்தகம் அச்சடிப்பது தொடர்பாக ஏற்கெனவே ராமகிருஷ்ணன் மீது தொடுத் திருந்த வழக்குதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. சில இளைஞர்கள், இந்தப் பக்கம் வருகிறார்கள். அதற்காக இதுபோன்ற திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்படு கின்றன... அவ்வளவுதான்!"

"அரசியலில், ரஜினியின் ஆன்மிகத்தையும், கமல் ஹாசனின் பகுத்தறிவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"தேர்தல் மார்க்கெட்டில் அதிக விலை போவது எது என்ற பிரச்சினையில், இவர்கள் இரண்டு பேருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, 'நான் பகுத்தறிவாளர் என்றாலும்கூட, என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே பகுத்தறிவாளர்கள் என்று சொல்லமாட்டேன்' என்று பின்வாங்கிவிட்டார் கமல்ஹாசன். ஏனெனில், தேர்தலில் வாக்கு வாங்கும்போது, பகுத்தறிவை வலியுறுத்த முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இதையே ரஜினிகாந்த் மாற்றிப் போட்டுவிட்டார். அதாவது, மதவாதம் என்று சொன்னால், மாட்டிக்குவாங்க பி.ஜே.பி எனக் கருதி, ஒண்ணும் புரியாத, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து 'ஆன்மிகம்' என்று சொல்கிறார். இதனால் அவரும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது பெரியார் மண். இங்கே மாய மான் வேட்டையெல்லாம் எடுபடாது!"

"திராவிடர் கழகத்துக்கு தலித்தை தலைவராகக் கொண்டு வர முடியுமா? என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரே....?"



"தி.க-வைப் பொருத்தவரையில், இங்கே ஆதி திராவிடர், மீதி திராவிடர், பாதி திராவிடர் என்பதெல்லாம் கிடையாது. இங்கே இருப்பவர்களுக்கு சாதி, மதம் கிடையாது என்பதுதான் தி.க-வின் அடிப்படையே. இங்கே தலித்துகள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அந்தத் தோழர்களை நான் கொச்சைப்படுத்துவதாகாதா...! இங்கே தலித்துகள் இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் மற்றவர்களுக்குக் கணக்கெடுத்து சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கொள்கை உறுதி, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டே தோழர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். அதனால், இங்கே இருக்கிறவர்களுக்குத் தெரியும்... எந்தவிதமான பொறுப்புகளில் நடத்தப்படுகிறார் கள் என்று!"

"உங்கள் மகன் அன்புராஜை, தி.க பொதுச் செயலாள ராகக் கொண்டுவந்ததின் மூலம், இங்கேயும் வாரிசு அரசியலைக் கொண்டு வந்துவிட்டீர்களே....?"

"ஜெயேந்திரர் போனவுடன், விஜயேந்திரருக்கு பட்டம் சூட்டப்பட்டது" என்று சொல்வதற்கு தி.க ஒன்றும் மடம் கிடையாது. இது தெளிவானதொரு அமைப்பு. இங்கே செயற்குழு, பொதுக்குழு எல்லாமே இருக்கின்றன.

அன்புராஜ், ஏற்கெனவே பொதுக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். தோழர்கள் விரும்பியதன் அடிப்படையில், நான்கு பொதுச்செயலாளர்களுள் ஒருவராக அன்புராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். என் மகன் என்பதாலேயே அவர் தகுதிக்குறைவுக்கு உள்ளாக்கப் படுவதும் கிடையாது; அதே காரணத்தினாலேயே அவருக்கு அதிகத் தகுதி இருக்கிறது என்று முன்னே வந்து நிறுத்தப்ப டுவதும் இங்கே கிடையாது."

"வாழ்நாள் முழுக்க ஓய்வின்றி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் பெரியார். ஆனால், இப்போதைய திராவிடர் கழகம் பெரியார் திடலைத் தாண்டி பிரச்சாரங்கள் செய்வ தில்லையே?"

"அதிகமான எண்ணிக்கையில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான். மாதத்தில், 25 நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். தெருமுனைக் கூட்டங்கள், மாநாடுகள், உலகளாவிய அளவில் 'விடுதலை' நாளேடு விநியோகம், இணையத்தில் 'பெரியார் வலைக்காட்சி' மூலமாக உடனுக்குடன் செய்தி ஒளிபரப்பு என தீவிரமாகவே கழகப் பணியாற்றி வருகி றோம். அதனால்தான் பஞ்சாபிலேயே, 'பெரியார் வாழ்க' என்ற முழக்கம் எழுந்திருக்கிறது. இப்போதுகூட அமெ ரிக்காவில், சுபவீ போன்றோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'திராவிடம் 2.0' என்ற தலைப்பின்கீழ் பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ராமாய ணத்துக்கு எதிரான பிரச்சாரத்தையே நாங்கள்தானே முழு மையாக செய்துவருகிறோம்! எனவே பெரியார் காலத்தில், தமிழக அளவில் இருந்த பகுத்தறிவுப் பிரச்சாரம்... இன்றைக்கு உலகளாவிய நிலைக்கு மாறியிருக்கிறது!"

நன்றி: "ஆனந்த விகடன்", 1.8.2018

- விடுதலை நாளேடு, 26.7.18