புதன், 28 ஜூன், 2017

மூவலூர் இராமாமிர்தம் அம்மைய்யார்



தேவதாசி முறை ஒழிப்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

திருவாரூருக்கு அருகில் பாலூரில் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி _ சின்னம்மாளின் மகளாகப் பிறந்தார். கிருஷ்ணசாமி மனவேதனை-யில் வீட்டை விட்டுச் சென்றுவிட, வறுமையில் வாடிய சின்னம்மாள் குழந்தையை (இராமாமிர்தத்தை) 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழைய புடவைக்கும் தாசிலகுல பெண்ணிடம் விற்றுவிட்டார்.

அப்போது இராமாமிர்தத்திற்கு வயது 5.

இவருக்கு 7 வயதானதும் தாசித் தொழிலில் ஈடுபடுத்த சடங்கு செய்தனர். மூவலூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார், கூடவே சுயம்பு பிள்ளையிடம் நாட்டியம் பயின்றார்.

ஆடல்பாடலில் வல்லவரானார். 17 வயதான நிலையில் 60 வயது கிழவர் இவரைத் திருமணம் செய்ய முயன்றபோது, இவர் தன் குருவான சுயம்பு பிள்ளையைத் திருமணம் செய்து-கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன், செல்லப்பா என்று இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தன.

இராமாமிர்தம் தொடக்க காலத்தில் தந்தை பெரியாருடன் காங்கிரஸ்காரராகப் பணியாற்றினார். காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரஸைவிட்டு பெரியார் வெளியேறியபோது இவரும் வெளியேறினார். பின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் தந்தை பெரியாருக்குப் பெருந்துணையாய் இருந்தார். சுயமரியாதை மாநாடுகளுக்கு, தேவதாசிப் பெண்களை அதிகளவில் அழைத்துவந்தார்.

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கையாய் இருந்தது. 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அம்மையார் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்பு முதல் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

முத்துலட்சுமி ரெட்டியின் முன்னோடி:-

தேவதாசி முறை ஒழிப்பில் முத்துலட்சுமி ரெட்டிக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னோடியாவார். காங்கிரஸில் இருக்கும்போதே 1925இல் மாயவரத்தில் (மயிலாடுதுறை) தேவதாசி ஒழிப்பு மாநாடு கூட்டினார். கட்டுரை, கதை போன்றவற்றை எழுதி விழிப்பூட்டினார்.

‘குடிஅரசு’ இதழில் (13.12.1925) “தேவதாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை’’ என்ற கட்டுரையில் தன் சொந்த அனுபவங்கள் பற்றி எழுதி விழிப்பூட்டினார்.

தந்தை பெரியாரும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஊட்டிய விழிப்புணர்வின் விளைவாய் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பை சட்டபூர்வமாகச் செய்ய முனைந்தார். சட்டசபையில் மசோதா கொண்டுவந்து, சத்தியமூர்த்தி அய்யரின் எதிர்ப்பையும் வென்று சட்டத்தை நிறைவேற்றினார். இதற்கு மூவலூர் அம்மையார் முழு ஒத்துழைப்பையும் தந்தார்.

“தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’’ என்ற நாவலையும், “தமயந்தி’’ என்ற சிறுகதையும் எழுதினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 14.11.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்கு கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

எண்பது வயதைக் கடந்த அம்மையாரின் பொதுப்பணி அளவிடற்கரியது. தாய்க்குலத்-திற்கும், தமிழ்மொழிக்கும், சமுதாயப் புரட்சிக்கும், தன்மான இயக்கத்திற்கும் அவர் இறுதிவரை உழைத்தவர் என்ற சிறப்புக்குரிய இப் பெருமாட்டி 27.6.1962ஆம் நாள் மறைந்தார்.

‘அறப்போர் இதழ்’, ‘அம்மா போய்-விட்டார்கள்’ (6.7.1962, பக்கம் 2) என்று அவர் மறைவுச் செய்திக் கட்டுரை வெளியிட்டு, அவருடைய சிறப்புகளை நினைவு கூர்ந்துள்ளது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மறைவுக்கு 27.06.1962ஆம் நாள் ‘முரசொலி’ இதழில் எழுதிய தலையங்கத்தில்,

வீரத்தாயை இழந்தோம்

பால் நுரைபோல் தலை

தும்பை மலர் போல் உடை!

கம்பீர நடை!

கனல் தெறிக்கும் பேச்சு!

அனல் பறக்கும் வாதத்திறன்!

அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்!

அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்!

ஓயாத பணி! ஒழியாத அலைச்சல்!

என்று பாராட்டினார்.

-உண்மை,16-30.6.17

ஞாயிறு, 25 ஜூன், 2017

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பகுத்தறிவாளர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

சகோதரத்துவ மாநாட்டை தமிழர் தலைவர் தொடங்கி வைத்த மாண்பு!

- ஒரு பயணத் தொகுப்பு -
நேற்றையத் தொடர்ச்சி....
சகோதரத்துவ மாநாட்டினைத்
தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்
கேரள யுக்திவாதி சங்கத்தின் புரவலர் யு. கலாநாதன் ஆற்றிய முகவுரையினை அடுத்து தமிழர் தலைவர் சகோத ரத்துவ மாநாட்டினை தொடங்கி வைத்து நீண்டதோர் ஆய் வுரையினை வழங்கினார். ஜாதி முறை ஒழிப்பு  பெரியார் இயக்கத்தின் பங்களிப்புகள் (கிதீஷீறீவீtவீஷீஸீ ஷீயீ சிணீstமீ ஷிஹ்stமீனீ – சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீs ஷீயீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ விஷீஸ்மீனீமீஸீt) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
“பகுத்தறிவாளர் அமைப்புகள் வெறும் கருத்தியல் அமைப்புகளாக மட்டுமல்லாமல், களப்பணி ஆற்றி சமூகத் தில் நிலவிடும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கிடப் போராடும் அமைப்புகளாக செயல்பட வேண்டும்.  இதற்கு எடுத்துக் காட்டாக, தந்தை பெரியார் மற்றும் சகோதரன் அய்யப்பன் நடத்திய பகுத்தறிவாளர் அமைப்புகளை பின்பற்றலாம்.  தந்தை பெரியாரும், சகோதரன் அய்யப்பனும் ஜாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை ஏற்படுத்திய மேல் ஜாதியினரான பார்ப்பனர்களை எதிர்த்து அவர்களின் தாக்கத்தினை தகர்த்துப் போராடிட இயக்கம் கண்டனர். ஜாதி ஒழிப்பு எனச் செயல்படும் பொழுது, ஜாதி வருண முறையினை ஏற்படுத்தி அதனைப் பிரகடனப்படுத் திய கடவுளையும் எதிர்க்க முற்பட்டனர். கடவுளை மறுக் காத ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளால் நிலைத்த, நீடித்த பயன் விளையப் போவதில்லை. இதனை லட்சியமாகக் கொண்டு தந்தை பெரியாரும் சகோதரன் அய்யப்பனும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்  ஒரே காலக் கட்டத்தில் இணைந்து சமுதாயப் பணியாற்றிய புரட்சியாளர்கள் ஆவர்.
வைக்கம் போராட்டம்
கோயில் நுழைவுக்கான உரிமை எனும் மத உரிமை யினைத் தாண்டி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்லும் மனித உரிமை மறுக்கப்பட்ட, சமூகத்தின் அடித்தள மக்களிடம் காட்டப்பட்ட பாகுபாட்டை ஒழித்திட 1924ஆம் ஆண்டில் கேரள மண்ணில் வைக்கத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை அன்றைய சமஸ்தான நிருவாகம் கைது செய்து சிறையில் அடைத்த வேளையில், போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு,  அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து தமிழ் நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியார், போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட அழைக்கப்பட்டார்.  போராட்டத்தினை நடத்திய தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஒரு மாதத்திற்குப் பின் விடுதலை ஆனபின்பும் தொடர்ந்து போராட்டத்தினை நடத்தியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை பெரியாரது முழுமையான ஈடுபாட்டால் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்று கோயில் தெருக்களை அனைத்து ஜாதி மக்களும் பாகுபாடு ஏதுமின்றி பயன்படுத்திடலாம் என சமஸ்தான நிருவாகம் அறிவித்தது. வெற்றிகரமாக போராட்டத்தினை நடத்திய தந்தை பெரியார் வைக்கம் வீரர் எனப் பாராட்டப்பட்டார். வைக்கத்தில் நடைபெற்ற இந்த மனித உரிமைக்கான போராட்டம் இந்தியாவின் சமூக நீதிக்கான முதல் போராட் டமாக அமைந்து பின்னர் நடைபெற்ற பல்வேறு சமூகப் பாகுபாட்டு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்து தலாக விளங்கியது.
சேரன் மாதேவி குருகுலப் போராட்டம்
இதே காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கும் உணவு வகையிலும், உணவு பரிமாறப்படுவதிலும், பயிற்று விக்கப்படும் பாடத்திட்ட முறையிலும் பாகுபாடு காட்டப் பட்டது.  தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் நிதி உதவியில் நடைபெற்ற குருகுலத்தில் மாணவர்களிடையே காட்டப் பட்ட பாகுபாட்டினை நீக்கிட வலியுறுத்தப்பட்டது.  பாகு பாடு களையப்படாத நிலையில் காங்கிரசு கட்சியின் தலை வராக இருந்த தந்தை பெரியார் குருகுலத்திற்கு அளிக்கப் பட்டு வந்த நிதி உதவியினை நிறுத்தி விட்டார். குருகுலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட பாகுபாட்டை எதிர்த்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார் காட்டிய உறுதிப்பாடு தீண்டாமை ஒழிப்பிற்கு அளப்பரிய பங்கினை அளித்தது.
அரசியலமைப்புச் சட்ட எரிப்பு
பின்னர் நாடு விடுதலை அடைந்து, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில்  அதன் விதிமுறை களும் ஜாதிமுறைக்கு பாதுகாப்பு தரும் வகையில் இருந் ததை எதிர்த்து 1957  ஆம் ஆண்டில் ஜாதி ஒழிப்புப் போர் எனும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போரை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட் டனர். சட்ட எரிப்பிற்காக  மூன்று மாதம் முதல் மூன்றாண் டுகள் வரை என் தண்டனை அளிக்கபட்டதிலும் பாகுபாடு காட்டப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் நடத்திய அரசியலமைப்புச் சட்ட எரிப்பு முக்கியப் பங்கு வகித்தது.
ஜாதி முறை, தீண்டாமைக் கடைப்பிடிப்பு ஆகியவற் றிற்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மதம், கடவுள் நம் பிக்கை என பகுத்தறிந்து இறுதியில் கடவுள் மறுப்பினை நடைமுறைத் திட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார்.  கேரளாவிலும் கடவுளை மறுத்து பகுத்தறிவின் அடிப்படை யில் தீண்டாமை ஒழிப்புப் போரை சகோதரன் அய்யப்பன் நடத்தினார்.
பிறப்பின் அடிப்படையில், ஜாதி  ஜாதியின் அடிப்படை யில் ஏற்றத் தாழ்வு - பரம்பரைத் தொழில் கடைப்பிடிப்பு என பாகுபாடு நிறைந்த சமூகத்தில், அந்தப் பாகுபாட்டிற்கு பரிகாரம் கண்டு சமூகநீதி நிலை நாட்டப்பட வேண்டும். ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப ஜாதியின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட பாகு பாட்டிற்கு ஜாதி அடிப்படையில்தான் பரிகாரம் காணப்பட வேண்டும். அந்தப் பரிகார நடவடிக்கை வழி முறைதான் இடஒதுக்கீடு கல்வி கற்பதில் வேலைவாய்ப்பினை பெறு வதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். இந்த உரிமைக்கு நாடு விடுதலை அடைவதற்கு முன்பே பாடுபட்டு வந்த இயக்கம் திராவிடர் இயக்கம்  அதன் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். 1928  ஆம் ஆண்டு வகுப்புரிமை அரசாணை(Communal G.O.)  சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியின் ஆட்சியில் நடை முறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக இட ஒதுக்கீட்டின் முறை, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற வாறு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (Communal Representation) என தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டம் நடத்தி வகுப்புரிமையினை தந்தை பெரியார் பெற்றுத் தந்தார்.
நாடு விடுதலை அடைந்த நிலையில் வகுப்புரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் தீர்ப்புகள் வழங்கிய நிலையில், தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராட்டம் கண்டார்.  இதன் விளைவாக அரசியலமைப்புச் சட்டம் முதன் முத லாக 1951 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் வகுப்புரிமையிலான இடஒதுக்கீடு கல்வி கற்பதில் நடைமுறைக்கு வந்தது. பின்னர் திராவிடர் இயக்க ஆட்சியில் இட ஒதுக்கீடு விழுக்காடு படிப்படியாக உயர்ந்து தற்பொழுது மொத்த இடஒதுக்கீடு அளவு 69 விழுக்காடு என நாட்டிலேயே அதிக அளவில், உரிய அளவிற்கு நெருங்கிய அளவில் உள்ளது. இந்த 69 விழுக்காடு ஒதுக்கீட்டை பாதுகாத்திட, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளித்திட இடஒதுக்கீட்டிற்காக நாட்டிலேயே முதன்முறையாக ஒரு தனிச்சட்டம் தமிழ்நாட்டில் உருவாக் கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 76 ஆம் திருத்தத்தின் மூலம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதற்கு சட்ட ரீதியான, சமூக நீதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி உரிய வகையில் நடைமுறைக்கு வந்திட தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம் முக்கிய காரணமாக இருந்தது.
ஓரளவிற்கு சமூகப் பாகுபாட்டை களைந்திட இட ஒதுக்கீடு சட்டரீதியான விதிமுறைகள் உருவாக்கப்பட் டாலும், நடைமுறையில் சட்ட ரீதியான அளவு இன்றும் எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. இந்த நிலையினை மாற்றிட சமூக நீதிக்குப் பாடுபடும் அமைப்பு கள், பகுத்தறிவாளர் இயக்கங்கள் முன் வரவேண் டும்; முழுமையாக ஈடுபட வேண்டும்; களம் கண்டு போராட வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வினைக் களைந்திட நூறாண் டுகளுக்கு முன்பு தந்தைப் பெரியாரும் சகோதரன் அய்யப் பனும் தொடங்கி வைத்த பணிகளை இன்றைய பகுத்தறி வாளர் அமைப்புகள் தொடர்ந்து நடத்திட வேண்டும். மனித உரிமைகளான இட ஒதுக்கீட்டு உரிமைகள் முழுமையாக கிடைக்கும் நிலையில்தான் சமூகத்தில் சமன்மை நிலை உருவாகும்.  அந்த நிலையினை ஏற்படுத்திட பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழாவில் நாம் அனைவரும் உறுதி எடுத்து செயல்படுவதே அவர்தம் புரட்சிப் பணிகளுக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாருக்கும், சகோதரன் அய்யப்ப னுக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கம் ஆகும்.
- இவ்வாறு தமிழர் தலைவரின் மாநாட்டு தொடக்க வுரையின் திரட்டு அமைந்தது.
தமிழர் தலைவரின் முழு உரை அடங்கிய ஆங்கிலப் புத்தகங்கள் மேடையில் இருந்தோருக்கும், பார்வையாளர்க ளுக்கும் வழங்கப்பட்டது.
நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீடு
பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழாவின் ‘100’ சிறப்பு மலரை தமிழர் தலைவர் அனைவரது கரவொலிக் கிடையே வெளியிட்டார். சிறப்பு மலரின் முதல் நகலினை தோழர் எம்.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நூற்றாண்டு விழா கண்காட்சி
பகுத்தறிவாளர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, விழா நடைபெற்ற கோழிக்கோடு நகர் மன்ற அரங்கினைச் சுற்றியுள்ள நடை பாதையில் ஓவியம், ஒளிப் படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது; வெகு சிறப்பாக, ஆவணப் பதிவாக இருந்தது.
கண்காட்சியில் கடந்த ஒரு நூற்றாண்டில் நடைபெற்ற சமூகப் புரட்சி நடவடிக்கைகளான, வைக்கம் போராட்டம், சமன்மை விருந்து, கோயில் நுழைவுப் போராட்டம், மார்பக வரி மறுப்புப் போராட்டம் என பல்வேறு எழுச்சிப் போராட் டங்கள் பற்றிய ஒளிப் படங்கள், ஓவியங்கள் பலவும் இடம் பெற்று, பார்வையாளர்கள், பொது மக்கள் கவனத்தை ஈர்த்தன.
மார்பக வரி மறுப்புப் போராட்டம்
ஒடுக்கப்பட்ட சமுதாயப்  பெண்களிடம் விதிக்கப்பட்ட மார்பக வரி  (Breast Tax) மறுப்பு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற ஒரு மகத்தான சமூக நீதிப் போராட்டமாகும்.  அந்நாளில் வரிவிதிப்பின் மூலம் கருவூல வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சொத்து உள்ள மேல் தட்டு மக்களிடம் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் வரி விதிப்பிற்கான வழி முறைகள் ஏதும் இல்லாத நிலையில்  ஒடுக்கப்பட்ட மக்களில் குறிப்பாக பெண்களுக்கு மார்பக வரி விதிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தை சீர் குலைக்கும் வகையில் அன்றைய சமஸ்தான நிருவாகம் முலைவரி எனும் மார்பக வரி விதிப்பினை  கடுமையாக நடைமுறைப் படுத்தியது. ஒருவரது சொத்து அளவிற்கு ஏற்றவாறு வரி விதிப்பு அளவு வேறுபடுவது போல, ஒடுக்கப்பட்ட பெண்களின் மார்பக அளவிற்கு ஏற்றவாறு மார்பக வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்பு அதிகாரிகள் மார்பக அளவினை பார்த்து  மிகவும் கொடுமையான முறையில் தொட்டுப் பார்த்து மார்பக அளவினை கணக் கிட்டு வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டது. நினைத்துப் பார்த்திடவே மனம் கொதிக்கும். இந்த மார்பக வரி விதிப்பு நடவடிக்கைகள் பற்றிய எதிர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களி டையே நிலவி வந்தது. இந்த எதிர்ப்பின் வெளிப் பாடாக, நாஞ்செள்ளி எனும் ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்மணி தனது எதிர்ப்பினை நெஞ்சம் பதை பதைக்கின்ற வகையில் தெரிவித்தார். “மார்பகம் இருப்பதால்தானே வரி விதிக் கிறீர்கள்! மார்பகத்தை எடுத்து விட்டால் எப்படி வரி விதிப்பீர்கள்?” என எதிர்ப்புக் குரல் எழுப்பி தனது மார்ப கத்தை கத்தியின் மூலம் தானே அறுத்து எடுத்தார்; தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களி டையே ஒரு மாபெரும் எதிர்ப்பு எழுச்சி வெடித்தது. சமஸ் தான நிருவாகம் எதிர்ப்பினை, மக்கள் எழுச்சியினை எதிர்கொள்ள முடியாமல், மார்பக வரி விதிப்பை நீக்கியது.  இந்த மார்பக வரி விதிப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஓவியங்கள் பல கண்காட்சியில் இடம் பெற்றன; அந்த ஓவியங்கள் பார்த்த பார்வையாளர்களைக் கண் கலங்கிட வைத்தது.  ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றுள்ள நிலையிலிருந்து பின்னோக்கி எப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கை யினை நடத்தினார்கள் என்பதனை  அழுத்தமாக காட்டும் வகையில் நூற்றாண்டு கண்காட்சி அமைந்திருந்தது.
திராவிடர் கழக (இயக்க)
வெளியீடுகளுக்கு வரவேற்பு
சகோதரத்துவ மாநாடு நடைபெற்ற மூன்றாம் நாளில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் விற்பனைக்காக விழா நடைபெற்ற நகர் மன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பகுத்தறிவு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தந்தை பெரியார்தம் உரை  எழுத்து தொகுப்புகள், ஆசிரியர் கி. வீரமணி எழுதிய நூல்கள்  (பெரும்பாலும் ஆங்கில நூல் கள்) புத்தக அரங்கில் நிறைந்திருந்தன. மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர்கள், பார்வையாளர்கள் பலர் புத்தக அரங்கி னைப் பார்வையிட்டு திராவிடர் கழக (இயக்க) வெளியீடு களைக் காசு கொடுத்து வாங்கிச் சென்றனர். கணிசமான அளவில் புத்தகங்கள் விற்பனையானது பகுத்தறிவாளர் மற்றும் பொதுமக்களின் வாசிப்பு வழக்கத்தினையும், இயக்க வெளியீடுகளில் உள்ள கருத்துச் செறிவையும் வெளிப்படுத் துவதாக இருந்தது.
மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றி அமர்ந்த தமிழர் தலைவருடன் மாநாடு ஏற்பாட்டு தலைவரும், பொது வுடைமைக் கட்சியின் தலைவரும்  மாநில மேனாள் அமைச்சருமான பினாய் விஸ்வம், விரிவாக உரையாடிக் கொண்டிருந்தார். சமூக நீதியை முன்னிறுத்திய செயல்பாடு கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழக பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் இரா. நல்லக் கண்ணு உட்பட பல தோழர்களுடன் அவருக்கு உள்ள தொடர்பினை தமிழர் தலைவரிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் விழா அரங்கத்திலிருந்த அனைவரிடமும் நன்றி தெரிவித்து தமிழர் தலைவர் விடைபெற்றார்.
விடுதியில் வந்து நண்பகல் உணவு அருந்திவிட்டு, அறையில் ஓய்வு எடுத்த பின்னர், மாலையில் மாநாடு ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து நன்றி கூறினர். இரவு 8.00 மணிக்கு கிளம்பிடும் சென்னை விரைவு ரயிலில் சென்னைக்கு கிளம்பிட தோழர்களுடன் சற்று நேரம் முன்னரே தமிழர் தலைவர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார். பயணிகள் காத்திருப்பு அறையில் தமிழர் தலைவர் அமர்ந்திருந்த பொழுது, அவரை அடையாளம் அறிந்து, தோழர்களிடம் உறுதி செய்து கொண்டு வெளி மாநிலத் தமிழ்க் குடும்பத்தினர், பகுத்தறிவாளர் எனப் பலரும் தமிழர் தலைவரிடம் வந்து நலம் விசாரித்து, உரை யாடி ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். சிறார்கள் பலரும் தமிழர் தலைவரிடம் நெருக்கமாக இருந்து ஒளிப் படம் எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
மங்களூரிலிருந்து சரியான நேரத்தில் கோழிக்கோடு வந்தடைந்த ரயிலில் ஏறி, ரயில் புறப்பட்ட உடனே தமிழர் தலைவர் பாராட்டு அறிக்கை எழுத ஆரம்பித்துவிட்டார். ஆம்; திருச்சியில் மே  27 ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் மாநாடு ஏற்பாட்டு மாண்பு, நடத்தப்பட்ட விதம், மாநாட்டு வெற்றிக்கு உழைத்திட்ட மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களைப் பாராட்டி அறிக்கையினை எழுதி முடித்தார். இரவு உண வினை பயணத்தின் பொழுது அருந்தி விட்டு, நீண்ட நேரம் உரையாடிவிட்டு உறங்கச் சென்றரார். அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு சென்னைசென்ட்ரல் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தது.
தஞ்சையில் பயிற்சி முகாம், திருமண நிகழ்வு, திருச்சியில் மகளிர் மாநாடு, விழுப்புரத்தில் பயிற்சி முகாம் என இடைவிடாமல் நிகழ்வுகளில் பங்கேற்று, தொடர்ந்து கேரளா  - கோழிக்கோடு பகுத்தறிவாளர் இயக்க நூற்றாண்டு விழா வில் பங்கேற்று சென்னை திரும்பி, வீடு சென்று பெரியார் திடலுக்கு வந்து வழமையான பணிகளில் தமிழர் தலைவர் ஈடுபட்டார். ஓய்வறியா தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலான தமிழர் தலைவர் பயணச் செறிவிலும், கொள்கைப் பரப்புரைப் பணியிலும் பகுத்தறிவுப் பகலவ னின் மறுபதிப்பாகவே இருக்கிறார். 1924  ஆம் ஆண்டு தந்தை பெரியார் கேரள மண்ணில் நடத்திய சமூகப் புரட்சித் தாக்கத் தினை ஏற்படுத்திய நிகழ்வுகளை கேரள மக்களிடம் நினைவு கூர்ந்து, அவை தொடர்பான புரட்சிப் பணிகளை வலியுறுத்திய தமிழர் தலைவரின் கோழிக்கோடு பயணம் ஒரு வரலாற்றுப் பதிவாக சிறப்புக்குரியதாக அமைந்துவிட்டது.
(Communal G.O.)

விடுதலை,25.6.17

புதன், 7 ஜூன், 2017

ஆரியம் தகர்த்த அயோத்திதாச பண்டிதர்!

கி.பி. 1845 -1914)

1845 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த, சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் ‘புத்தம்’ மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர்.

ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர்.

அமெரிக்க மக்கள் உரிமைப் போராட்ட வீரர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களின் நெருங்கிய நண்பர்.  தீண்டத் தகாதவர்களாய் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். சென்னை அடையாறு பகுதியில் தியோசபிகல் சொசையிட்டியை 1884இல் நிறுவக் காரணமாய் அமைந்தவர்.

1894இல் கர்னல் ஆல்காட் அவர்களுடன் இலங்கை போன்ற பௌத்த நாடுகளுக்குச் சென்று பவுத்த தர்மக் கொள்கைகளை விளக்கிப் பேருரையாற்றியவர். தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இந்தச் சங்கம்தான் பிற்காலத்தில் தென்னிந்திய பவுத்த சங்கம் என்ற பெயரில் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய, தமிழன் என்ற இதழை நடத்தினார்.

ஆதிதிராவிடர்கள் பவுத்தர்கள்; அவர்களை இந்துக்களுடன் சேர்த்து சென்செஸ் கணக்கெடுக்கக் கூடாது என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்த ஆங்கில அரசு, 1910ஆம் ஆண்டு சென்செஸ் முதல், ஆதிப் பழங்குடியினர் ஒரு தனித் தேசிய இனம் என்று கணக்கிடப்பட்டது.

1954-இல் சென்னைக்கு வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அயோத்தி தாசரின் பவுத்த இலக்கியங்களைத் தேடிச் சேகரித்துத் தம்முடன் கொண்டு சென்றார். அம்பேத்கரின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் அயோத்திதாசர் என்றால், அவர் பணி எத்தகையது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பவுத்தம் பற்றிய சிந்தனை அம்பேத்கர் உள்ளத்தில் வேரூன்றவும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பௌத்தம் தகுத்த பாதுகாப்பிடம் என்பதை அவர் உணரவும் அயோத்தி தாசரே காரணமாய் அமைந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் எங்கு பறிக்கப்படுகிறதோ, எங்கு அவர்கள் இழிவாக, அடிமைகளாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும். பின்னால் வந்த சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுக்கு இவர் முன்னோடியாகவும் அமைந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும், அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வந்தவர்கள் செய்த விரைவான நடவடிக்கைகளுக்கு விதையிட்டவர் இவரேயாவார்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், அறிவைத் திருடவும், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள், தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும் பண்டிதர் இவர்.

பாலி மொழியிலிருந்த திரிபிடகம், வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) இருந்த வேதங்கள் உபநிடதங்களையும், தமிழில் ஓலைச்சுவடிகளில் இருந்த தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவ வாக்கியம், தேவாரம், பெருந்திரட்டு, சிறு திரட்டு, பெருங் குறவஞ்சி, ஏரெழுபது போன்ற இலக்கியங்களையும், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம், நல்வழி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நீதிவெண்பா, மூதுரை போன்ற அற நூல்களையும், பட்டினத்தார், பத்திரிகிரியார், தாயுமானவர், மச்சமுனி, இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற துறவியாரின் பாடல்களையும், ஞானத்திரட்டு, ஞானபேதம், ஞானவாசிட்டம், பதஞ்சலியார் ஞானம், சொரூபசாரம், தருக்க கௌமுகி, சிவயோக சாரம் போன்ற சமய நூல்களையும், அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும் தெளிவாகக் கற்றார். எட்வின் ஆர்னால்டு எழுதிய ஆசியாவின் ஒளி (லிவீரீலீt ஷீயீ கிsவீணீ) என்ற நூலிலிருந்தும் மற்றைய மொழி நூல்களிலிருந்தும் அவர் மேற்கோள்களை எடுத்துக்காட்டி எழுதியது, பேசியது, அவருக்குள்ள படிப்பறிவைக் காட்டியது.

மேலும், பறையர் அவர் பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்று சூளுரைத்தார்.

இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களை ஊருக்குப் புறத்தே ஒதுக்கித் தள்ளி, அவர்கள் பொது வீதியில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது, நல்ல குடிநீர் குடிக்கக்கூடாது, படிக்கக் கூடாது, நல்ல பெயர்களைக் கூடச் சூட்டிக் கொள்ளக் கூடாது, பொதுக்கோயிலில் வழிபடக்கூடாது, தீண்டிக் கொள்ளக்கூடாது என்று வந்தேறிய அந்நிய நாட்டு ஆரியர்கள் அநியாயமாக கூறுவதை ஏற்றுக் கொண்டு வாழலாமா? என்று சொந்த உரிமை பற்றியும், சுயமரியாதைப் பற்றியும் உணர்வூட்டினார்.

இந்து மதத்தோடும் அதன் ஜாதியத்தோடும் தொடர்பு உடைய எதுவானாலும் அது மனித இனத்துக்குப் பொதுவான நன்மையைத் தரும் தகுதி அற்றது என்பதே உண்மை என்ற சரியான கருத்தைத் தெளிவாகக் கூறினார்.

இந்தி மொழி இந்து மதத்தோடு தொடர்புடையது என்பதால் அதற்குப் பொதுமொழியாகும் தகுதி அறவே கிடையாது. ஆங்கிலம் மட்டுமே அத்தகுதிக்கு உரியது என்று கணித்துச் சொன்னார்.

ஜாதி பேதத்தை நிலைநாட்டும் இந்துமதம், சிலருடைய தன்னலத்திற்காக, அவர்களது பிழைப்புக்காக, அவர்களது ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே தவிர, பொது நலன்கருதி உருவாக்கப்பட்டது அல்ல என்ற அப்பட்டமான உண்மையையும் ஆணியடித்தாற் போன்று கூறினார்.

இந்துமதம் என்று ஆரியர்கள் கூறுவது கற்பனையானதே. அது ஆகாயக் கோட்டையும், அந்தரப்பூவும் போன்றதே! இந்துமதம் எது என்று கேட்டால், அது சைவ மதம், வைணவ மதம், வேதாந்த மதம், விசிட்டாத்துவ மதம் என்று வேறு வேறுபட்ட மதங்களைக் கூறி மக்களை மயக்குகிறார்கள் என்று சரியான சவுக்கடி கொடுத்தார் பண்டிதர்.

இந்தியாவின் பொற்காலம் என்பது, புத்த மதம் ஓங்கியிருந்த காலமே! கருணையும் அன்பும் நிலைத்திருந்த அக்காலத்தில்தான் எல்லோரும் வளமாக, நலமாக வாழ்ந்தார்கள். ஆனால், அதைப் பொறுக்காத கயவர்கள், மக்களை ஏமாற்றி, மாற்றுக் கருத்துக்களை கவர்ச்சியைப் புகுத்தி, தன்னல நோக்கர்கள் புத்தத்தை அழித்து, ஆதிக்க நெறிகளை புராணம், சாஸ்திரம், மதம் என்ற பெயரில் மக்கள் மனதில் ஏற்றி, நாட்டையும் மக்களையும் சீரழித்தனர். அதன் விளைவாய் ஆக்கப்பணிகள் குறைந்து, பஞ்சமும் வறுமையும் பெருகின என்றார்.

ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி, அதைத் தங்கள் மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துக்கள் தங்களால் கூறப்பட்டதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர் என்று ஆய்வு செய்து கூறினார் அயோத்திதாச பண்டிதர்.

மனு முதலான ஆரிய நூல்கள் உழவுத் தொழிலை இழி தொழில் என்று கூறிய நிலையில், அர்த்த சாஸ்திரம் உழவுக்குச் சிறப்பிடம் அளித்தது. இது திருக்குறளை ஏற்றதன் விளைவு என்றார். அர்த்த சாஸ்திரம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவும் இதை உறுதி செய்கிறது.  மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’’ என்ற குறளின் அடிப்படையில்தான் அர்த்த சாஸ்திரத்தில் உழவின் சிறப்பு கூறப்பட்டது.

அர்த்த சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்திலும் பத்தாம் அத்தியாயத்திலும் அரசன் ஆராய்ந்து அறிவது பற்றி கூறப்படும் கருத்து.

“அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

அமைச்சர் இயல்பு பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் கருத்து.

“அகலாதணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’’

என்ற குறளின் கருத்தையே,

பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், காத்தவற்றை வளர்த்தலும், அவற்றை நல்வழியில் பயன்படுத்தலும்.. என்ற அர்த்த சாஸ்திரப் பகுதி ஏற்றுக் கூறுகிறது.

“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்’’

என்று வள்ளுவர் கூறியதையே,

கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும்; குறைந்த தண்டம் அவமதிக்கப்படும்; தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும் என்று அர்த்த சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்’’

என்ற வள்ளுவர் கருத்தையே,

மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியல்லாதாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட் கொடையாலும், இன்சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

“பொருள்கருவி மூலம் வினைஇடனொ         டைடுந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்’’

என்று குறள் கூறுவதை,

காரியத்தைத் தொடங்குவதற்குரிய உபாயம், வினை செய்வாரும் பொருளும் நிரம்ப உடைமை, ஏற்ற காலம், இடங்களை அறிதல், இடையூறு களைதல், காரியத்தின் பயன் என்னும் அய்ந்தும் சூழ்ச்சிக்கு உறுப்புகளாகும்.. என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

அமைச்சர்க்குரிய குணங்கள் நிறைந்த தொழில் தலைவர் எல்லோரும் அவரவர் ஆற்றற்கேற்பக் காரியங்களில் நியமிக்கத் தக்கவராவர்.. என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’’

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது என்று எடுத்துக்காட்டி உறுதி செய்த அயோத்திதாசர்,

சுக்கிர நீதியும் திருக்குறளை பல இடங்களில் எடுத்துக் கொண்டுள்ளது என்று ஆணித்தரமாக உறுதி செய்கிறார்.

தமிழன் வார இதழில் 1907 முதல் 1914 வரை அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அவரது திறமைக்குச் சரியான சான்றுகள்.

அக்காலத்தில் வெளிவந்த “சுதேசமித்திரன்’’, “இந்தியா’’ போன்ற தமிழ் இதழ்களின் கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் இவரது கட்டுரைகள் ஆழமும், செறிவும், நுட்பமும் உடையவை.

புகையிலை, மதுவுக்கு எதிராக முழங்கியதோடு, அவற்றின் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்றார். இத்தகு மாமனிதர் 05.05.1914இல் மரணமடைந்தார்.

- சிகரம்

 -உண்மை இதழ்,1-15.5.17