திங்கள், 24 ஜனவரி, 2022

சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை என்னும் பூங்காற்று!

மதத்தை ஒழிக்கவேண்டும் என்று பெரியார் ஏன் சொன்னார்?சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை! (3)&(4)

ஆலயப் பிரவேச சட்டத்தை கொண்டு வரவைத்த சுயமரியாதை இயக்கம்



சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் போராட்டம் துவக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் அத்தோடு நிற்கவில்லை. கோயிலுக்குள்ளும் நுழைய 50,222 பேரிடம் கையெழுத்து / கைநாட்டு வாங்கி, அதை திவான் சி.பி.ராமசாமி அய்யரிடம் கொடுத்தார் எம்.ஈ.நாயுடு. தொடர்ச்சியான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத திருவிதாங்கூர் அரசு பணிந்தது. அதன் விளைவுதான் ஆலயப் பிரவேச சட்டம் (1936).

1933இல் கோயில் நுழைவை எதிர்த்த அதே திவான் சி.பி.ராமசாமி அய்யர்தான், 1936இல் ஆலயப் பிரவேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அனைத்து கோயில்களிலும் அனைவரும் நுழையலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது சுயமரியாதை இயக்கம்.
- விடுதலை ஞாயிறு மலர், 21.8.20

புதிய ‘கோயபல்சுகள்’ புறப்பட்டுள்ளனர்! ஆலய நுழைவு சட்டம் விளக்கம்

நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து திராவிடர் கழகமாக மாறிய காலகட்டத்தில் இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் (ஒப்பற்ற தலைமை-5)

ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள்ளே வைத்து பூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத்தினர்!                                            

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 1929 மார்ச் 12ஆம் தேதி தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர, தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை பெரியாரின்  தளபதி குத்தூசிகுருசாமி முன்னின்று நடத்திக் காட்டினார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சை மேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு திருநீறு பூசச் செய்து தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டோடு ஈரோட்டின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்.

குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்ப்பனர்கள் செய்தியை ஊருக்குள் பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டி தோழர்களை கோவிலுக்கு உள்ளேயே வைத்து வெளிக்கதவை இழுத்துப் பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது.

9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை சென்றார். ”ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம்பெறும்” என்று குடிஅரசில் எழுதினார்கள்.