விருத்தாசலம்,ஆக.23- திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையனால் கட்டப்பட்ட அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சீ.தமயந்தி இல்ல அறிமுக விழா - தந்தை பெரியார்- அன்னை மணியம்மையார் - தமிழர் தலைவர் ஆசிரியர் வெண்கலச் சிலைகள் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - திராவிட இயக்கப் போர்வாள் வைகோ - எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்று எழுச்சியுரையாற்றினர்.
விருத்தாசலம் பெரியார் நகரில் திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ. இளந்திரையன் குடும்பத்தினரால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு சீ.தமயந்தி இல்ல அறிமுக விழா, அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறப்பு விழா 16.8.2021 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரையாற்றினார். புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப. வெற்றிச்செல்வன், கடலூர் மண்டல மகளிரணிச் செயலாளர் இரமாபிரபா ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
தமயந்தி இல்லம் மற்றும் தந்தை பெரியார் சிலையை காணொலி வழியாக தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்து உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் சிலையை திராவிட இயக்கப் போர்வாள் மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திறந்து வைத்தார். அன்னை மணியம்மையார் சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்துப் பேசினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
செயல் வீரர் இளந்திரையன் - உஷா ஆகிய நமது நெருங்கிய கொள்கை உறவுகள் இல்லத்தில் மகிழ்ச்சியோடும், மிகுந்த எழுச்சியோடும், திகைப்போடும், தெவிட்டுதலோடும் அருமை யாக நடைபெறக்கூடிய விழாக்கள்,பேரின்ப நிகழ்வு. திராவிட இயக்கப் போர்ப்படை தளபதிகள் பங்கேற்று நம்மை உற்சாகப் படுத்தியிருக்கிறார் என தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
திராவிட இயக்கப் போர் வாள் வைகோ உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி சிலை திறப்பு விழாவில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உரையாற்றுகையில்,
மகிழ்ச்சிக்குரிய இந்த நன்னாளில், அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறப்பு விழாவோடு, பெற்ற தாய்க்கு ஒரு தனயன் செய்கின்ற பெரும் கடமையாக, தானும் தன் துணைவியார் உஷாவும் கட்டி எழுப்பி இருக்கின்ற இல்லத்துக்கு, தன்னுடைய அன்னை தமயந்தி அவர்களுடைய பெயரையும் சூட்டி, அனைவரையும் வரவேற்ற, திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர், பாராட்டுக்குரிய பணிகளைச் செய்து வருகின்றவர் என்று எல்லோராலும் போற்றப்படுகின்ற அன்புச் சகோதரர் இளந்திரையன் அவர்களைப் பாராட்டு கின்றேன்.
யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்குக் கிடைத்து இருக்கின்றது. ‘‘திராவிட இயக்கப் போர்வாள்'' என்று எனக்குப் பட்டம் சூட்டியவரே மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் தான். அவருக்கு வயது 88.
10 வயதில் மேடையேறி, 78 ஆண்டுகள் தொடர்ந்து மேடை களிலே முழங்கிய ஒரு தலைவர், இந்தியத் துணைக்கண்டத் திலேயே கிடையாது என்கின்ற அந்தப் பெருமைக்கு உரிய அண்ணன் வீரமணி அவர்களுடைய 88 ஆவது வயதில், அவர் போற்றிய தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு 88 ஆவது வயதில் சிலை திறந்து வைக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டில் முதன்முதலாக, அண்ணன் வீரமணி அவர்களின் சிலையையும் திறந்து வைக்கின்ற வாய்ப்பை, இந்த எளிய வனுக்கு வழங்கிய திராவிடர் கழகத்துக்கு, திராவிடர் கழகத்தின் இளைஞரணி பாசறைக்கு, நான் என்னுடைய இதயமெல்லாம் நிரம்பி இருக்கின்ற, ததும்பி வழியக்கூடிய நன்றி உணர்வைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் நாள், திண்டுக் கல்லில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சிலையை, குன்றக்குடி அடிகளார் தலைமையில், அண்ணன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் பேசுகின்ற பொழுது, தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். “பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருகின்ற எனக்கு சிலை எழுப்பி இருக்கின்றீர்கள். அதே பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வருகின்ற வீரமணிக்கும் சிலை எழுப்புங்கள்” என்று, அன்றைக்கு திண்டுக்கல்லில் சொன்னார், மற்ற மாநாடுகளில் சொன்னார். அது இன்று நிறைவேறி இருக்கின்றது என்றார்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை
திராவிடர் கழகத்தின் நிறுவனரும், பகுத்தறிவு பகலவனுமான தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகள், முதன்முதலாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிலை திறக்கப்படும் விழாவில் கலந்து கொள்வதில் பெருமையடை கிறேன். நான் அரியலூர் மாவட்டத்தில் பிறந்திருந்தாலும்கூட கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றத்தில் ஓராண்டு தங்கிப் படித்திருக்கின்றேன். திருமுதுகுன்றம் என் தாய் மண் என்ற உணர்வோடு அன்னை மணியம்மையார் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குடும்பத் தலைவியாக மட்டும் பெண்கள் கருதப்படுகிற காலகட்டத்தில் பகுத்தறிவு இயக்கத்துக்கு, நாத்திக இயக்கத்துக்கு ஒரு பெண் முதல் முதல்முறையாக தலைமையேற்று வழி நடத்தியது சிறப்புக்குரியதாகும். அத்தகைய அன்னை மணியம் மையாரின் சிலையைத் திறந்து வைத்ததை பெரும்பேறாகக் கருதுகிறேன் என்றார்.
(தலைவர்கள் உரை பின்னர் விரிவாக வெளிவரும்)
கூட்டத்தின் தொடக்கத்தில் கோட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் முத்து.கதிரவன் வாழ்த்துரை வழங்கி உரையாற்றும் போது,
இளந்திரையன் இல்லத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு முதல் வெண்கலச் சிலை நிறுவப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இளந்திரையன் நாங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை. எங்கள் வீட்டுப் பிள்ளையை நாங்கள் பாராட்டுவதைவிட மற்றவர்கள் பாராட்ட கேட்பது தான் சிறப்புக் குரியதாகும் என்றார்.
அன்பு - அடக்கம் - மென்மையாக இருப்பவரால் தான் கோபம் கொள்ள முடியும்:
கவிஞர் கரிகாலன் வாழ்த்துரை வழங்கிப் பேசியதாவது:
வீடுகள் என்பவை வெறும் செங்கற்களால் கட்டப்படுபவை அல்ல. அவை கனவுகளிலிருந்து எழுப்பப்படுபவை. குப்பநத்தம் எனும் சிற்றூரிலிருந்து வளர்ந்த தம்பி இளந்திரையன் கட்டிய புது இல்லத்தை , நண்பர் இமையத்தோடு சென்று பார்த்தேன். தம்பி தன் இல்லத்தை தத்துவங்களைக் குழைத்துக் கட்டியிருந்தார். மதிற்சுவரில் பெரியாரும், மணியம்மையாரும், ஆசிரியர் வீரமணியும் வீற்றிருக்கிறார்கள்.
இன்று அவரது இல்லத் திறப்பு விழாவில்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெரியார் சிலையையும், எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் அன்னை மணியம்மையார் சிலையையும், மறுமலர்ச்சி தி.மு.க தலைவர் வைகோ அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் சிலை யையும் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றுவது சிறப்புக்குரியதாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சில் மழைத்துளி போல விழுந்து இன்று தீப்பொறியாக சுடர்கிறார் தம்பி இளந்திரையன். மென்மை , அடக்கம், எளிமை , அன்பு உருகொண்டவர்.
இத்தகையவர்களாலேயே மானுடத்துக்கு ஆதரவான கோபத்தையும் வளர்க்க முடிகிறது என்பதன் நல் உதாரணம் இளந்திரையன். இன்று திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளராக உயர்ந்து நிற்கிறார். தம்பியின் புத்தில் மலரட்டும். மணம் பரப்பட்டும். வாழ்த்துகள்!
விருத்தாசலத்தில் திராவிட இயக்கத் தொடர் ஓட்டம் முன்னெடுக்கப்படுகிறது:
மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் பேசியதாவது:
இளந்திரையன் குறிப்பிட்டது போல, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நிறுவப்படும் முதல் வெண்கலச்சிலை இதுவாகும். இங்கே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்களும், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களும் உரையாற்ற காத்துக் கொண்டிருப்பதால், நான் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லி விடை பெற விரும்புகிறேன்.
விருத்தாசலம் பகுதியிலே தொடக்கத்தில் சைக்கிள் கடை தாஸ் இந்த இயக்கத்தை நடத்தி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அவரை நாங்கள் பார்த்ததில்லை. அவருக்குப் பின்னால் சபாபதி அவர்கள் விருத்தாசலம் தொடர் வண்டி நிலையத்தில் உணவுக் கடை வைத்து இயக்கத்தை நடத்தியவர். அவரை நாங்கள் பார்த்திருக்கிறோம். விருத்தாச் சலம் பெரியார் நகருக்கு பெரியார் நகர் என பெயர் சூட்டிய சுயமரியாதைச் சுடரொளி செழியன் நினைவை எண்ணிப் பார்க்கிறோம். திமுக ஒன்றிய செயலாளராக இருந்த அண்ணன் ரொட்டிக்கடை ராசு தான் திராவிடர் கழகத்திற்கும் பொறுப் பாளராக இருந்து செயல்பட்டார். பெண்ணாடம் நகரில் வசித்தாலும் விருத்தாச்சலம் ஒன்றிய செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்ட கென்னடி ஆறுமுகம், ரயில்வே ஊழியராக இருந்து பணியாற்றிய உரத்தநாடு பகுதியைச் சார்ந்த பகுத் தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்த சிவ. பாலசுப்பிரமணியம், மின் துறையில் பணியாற்றிய கார்மாங்குடி அய்யனார், குடந்தை மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்த இளங்கோவன் ஆகியோர் நம் நினைவுக்கு வருகிறார்கள்.
சவால்கள் சூழ்ந்த காலகட்டத்தில் நான் மேற்குறிப்பிட்ட தோழர்கள் இங்கே பணியாற்றி இயக்கம் வளர்த்தவர்கள் ஆவார்கள். அப்போதெல்லாம் கூட்டம் என்றாலே தடை விதிக்கப்படும். நம்முடைய சபாபதி அவர்கள் கழுத்தில் தகர டப்பாவை மாட்டிக்கொண்டு ‘டாம் டாம்' என்று அடித்து மாலையில் கூட்டம் நடைபெறுகிறது என நகரில் அறிவிப்பு செய்வார். அந்த இயக்கம் இன்று வீறு கொண்டு எழுந்திருக்கிறது. உமர் முக்தார் படத்தில் ஒரு காட்சி இருக்கும் அவர் இறந்து விழுகின்ற போது அவருடைய கண்ணாடியை ஒரு குழந்தை எடுத்து பார்ப்பது போல, அந்த படம் முடியும். அதுபோல நம்முடைய இளந்திரையன் கொள்கை தெளிவு உடையவர். இயக்கப் பணிகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லக் கூடியவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் இடக்கூடிய கட்டளைகளை சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர். கரோனா பெருந்தொற்று காலமாக இல்லாவிட்டால் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்களும், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களும் நேரில் பங்கேற்று இருப்பார்கள். இருந்தாலும் பல தடைகளை கடந்து நடைபோடக்கூடிய இயக்கம். கரோனா பெருந்தொற்று காலத்தையும் வென்று இந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது எனப் பேசினார்.
தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தந்தை பெரியாரின் அரசும் தான்: பாவலர் அறிவுமதி உரை
கடலூர் மாவட்டம் பெரியாருக்கு தந்த தொடர் உழைப்பாளி தான் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள். சு. கீணனூர் எனும் ஊரைச் சேர்ந்த மதியழகன், சோனங்குப்பத்தைச் சார்ந்த அறிவழகனும் இன்று அறிவுமதியாக நிற்கிறேன். சோனங்குப்பம் நடராஜன் எனும் அறிவழகனின் தந்தை , ஆசிரியர் அவர்களை மேடையேற்றி அழகு பார்த்தவர். அதன் நினைவாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் நடராஜன் அவர்கள் இல்லத்திற்கே சென்று அவரைப் பாராட்டி இருக்கிறார்.
கடலூர் மாவட்டம் தான் தந்தை பெரியாருக்கும், அன்னை மணியம்மையாருக்கும், தமிழர் தலைவர் ஆசிரியருக்கும் ஒரே இடத்தில் முதல் மூன்று வெண்கல சிலைகளை திறந்துள்ளது.
எத்தனை புயல்களை கடந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - தமிழ்நாடு அரசு இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, இது தந்தை பெரியாரின் அரசும் கூட.
தமிழ் மொழியை கோவிலுக்குள் அர்ச்சனை மொழியாக ஆக்கியிருக்கிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமித்திருக்கிறார் இதன்மூலம் முதுகெலும்புள்ள முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார்.
விருத்தாசலம் என்று சொல்ல எனக்கு நா கூசுகிறது. பழமலை, திருமுதுகுன்றம் என பெயர் இருக்கும்போது விருத் தாச்சலம் என்ற பெயர் ஏன்? கோயிலுக்குள் தமிழ் நுழைந்தது போல் ஊருக்குள்ளும் தமிழ் நுழைய வேண்டும். விருத் தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கும் போது திருமுதுகுன்றம் மாவட்டம் என அறிவிக்க வேண்டும். அதை முன்மொழிகிற மேடையாகத்தான் நான் இந்த மேடையை பார்க்கிறேன்.
பெரியார் திடலுக்குச் சென்றால் சாக்ரட்டீஸ் எனும் தம்பி அனைவரையும் அழைத்து அன்போடு பேசக் கூடியவர். தமிழர் தலைவர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர். அவரது தம்பி பிரின்சு இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.
சாக்ரடீஸ் எனும் தம்பியை நாம் இழந்த நிலையில், அதை ஈடு செய்யக்கூடிய தம்பியாக இளந்திரையன் நமக்கு இருக்கிறார். இந்த இல்ல நிகழ்வு என்பது அவரது பகுத்தறிவு வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு. பெரியார் தேநீர் விடுதிக்கு நோயாளியாகச் சென்றாலும், திரும்புகின்ற போது ஆரோக்கியமாக வருவார்கள். தோழர்களின் கூட்டு முயற்சியால் நடைபெறக்கூடிய தேநீர் விடுதியில் அவர்களின் உபசரிப்பு மிகுந்த சிறப்பானது என்று பேசினார்.
தந்தை பெரியாருக்கும் அவரின் வாழ்நாள் மாணவர் ஆசிரியருக்கும் 88 ஆவது வயதில் சிலை
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கழகக் கொடி ஏற்றி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞரணித் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்களின் பேரன்பை பெற்றவர் இளந்திரையன். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். 2019ஆம் ஆண்டு அன்னை மணியம் மையார் அவர்களின் நூற்றாண்டு என்பதால் தன்னுடைய இல்லத்திற்கு அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு சீ.தமயந்தி இல்லம் என பெயர் சூட்டியுள்ளார்.
இனத்துக்கு முகவரியாக இருந்த தந்தை பெரியாருக்கு சிலை. தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைத்த புரட்சித் தாய் அன்னை மணியம்மையாருக்கு சிலை, இனத்தை வழிநடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிலை தமது இல்லத்தில் அமைத்திருக்கிறார். செப்டம்பர் 17, 1967 ஆம் ஆண்டு திருச்சியில் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது காமராசர் தலைமையில் தந்தை பெரியாருக்கு முதல் சிலை நிறுவப்பட்டது. அப்போது தந்தை பெரியாருக்கு வயது 88. அவருடைய வாழ்நாள் மாணவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தற்போது வயது 88. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிலையை அண்ணாவின் தம்பிமார்களில் முதன்மையானவராக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர், திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள் திறந்து வைக்கிறார். எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இது வரலாற்று குறிப்பு நாள்.
இளந்திரையன், முத்து.கதிரவன், வெற்றிச்செல்வன் போன் றோர் இயக்கத்திற்கு வந்தபிறகு இன்றைக்கு விருத்தாச் சலம் இயக்கத்தின் கோட்டையாக, இளைஞர்களின் பாசறையாக மாறி இருக்கிறது.
கரோனா பெருந்தொற்று இல்லை என்றால் மாநாடு போல் நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது. ‘ஜூம் காணொலி‘ வழியாக 500 பேர் பங்கேற்க கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நாடு முழுவதும் பல தோழர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
8 வயதில் தந்தையை இழந்த இளந்திரையனுக்கு, தாயார் தமயந்தி படிப்போடு சேர்த்து பகுத்தறிவும் ஊட்டியிருக்கிறார். நம்முடைய தோழர் இளந்திரையன். 2014 ஆம் ஆண்டு இதே நாளில் ஆசிரியர் தலைமையில் ராகு காலத்தில் புரட்சிகர திருமணத்தை செய்து கொண்டவர். ஆடி மாதம் 31 ஆம் தேதி நவமி அன்று மூட நம்பிக்கையை ஒழிக்கக் கூடிய வகையிலே இந்த இல்லத் திறப்பு விழாவை நடத்துகிறார். சொல்வதை செய்யக் கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்பதை தோழர் இளந்திரையன் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அவரை பாராட்டி மகிழ்வோம் என பேசினார்.
நன்றிப் பெருக்கை காட்டும் விழா
அண்ணல் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பேசிய தாவது:
‘‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்'' எனும் குறளுக்கேற்ப தன்னுடைய அன்னையார் பெயரில் இளந்திரையன் அவர்கள் புதிய இல்லத்தைக் கட்டியிருக்கிறார். பல்வேறு இன்னல்களுக்கிடையே 3, 4 தோழர்கள் இணைந்து பெரியார் தேநீர் விடுதியை நடத்தி வாழ்க்கைப் பாதையில் உயர்ந்திருக்கிறார்.
நாட்டில் முதன்முதலாக ஆசிரியருக்கு சிலை எழுப்பப்பட்டு இருக்கிறது. கேட்காமல் செய்யக்கூடிய துணிச்சல் ஒரு சிலருக்கு தான் இருக்கும். அவ்வாறு இளந்திரையன் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கேட்காமலேயே சிலையை எழுப்பி இருக்கிறார். நம்முடைய ஆசிரியர் அவர்கள் பெருமை களை என்றைக்கும் விரும்பாதவர். இருப்பினும் நாம் நன்றி உள்ளவர்கள் என்பதை காட்டுவதற்காக இந்த சிலையை எழுப்பியிருக்கிறோம். இந்த இல்லத்தில் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் தமிழர் தலைவர் ஆசிரியர் சிலை களோடு, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலையும் இடம்பெற வேண்டும். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை ஜாதி தலைவராக அடையாளப்படுத்தி இருட்டடிப்பு செய்து இருக்கிறார்கள். அவர் ஜாதிகளை கடந்தவர். அவருக்கு சிலை எழுப்புவது சாலச் சிறந்ததாகும் . மேலும், தமிழ்நாடு முழுவதும் சென்று கழக நிதி திரட்டும் இளந்திரையன் மற்றும் தோழர்களை ‘‘கறக்கும் படை'' என தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தார். அத்தகைய சிறப்புக்குரிய தோழரை பாராட்டுவோம் எனப் பேசினார்.
அன்பின் வெளிப்பாடாக தலைவர்களுக்கு சிலை
திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்து பேசியதாவது:
நம்முடைய மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் - உஷா ஆகியோர் இணைந்து புதிய இல்லத்தைக் கட்டியிருக்கிறார்கள். தூக்கணாங்குருவியில் ஆண் குருவி கூடு கட்டும். அதனை பெண்குருவி ஆய்வு செய்து பிறகுதான் அந்த கூட்டில் இடம்பெறும். கூடு சரியில்லை என்றால், பெண் குருவி ஆண் குருவியை விட்டு விட்டு வேறு குருவியோடு சென்றுவிடும். ஆனால், நம்முடைய இளந்திரையன் - உஷா அவர்களும் இணைந்து இந்த இல்லத்தை கட்டி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகச் சிறப்பாக சிலை எழுப்பி இருக் கிறார்கள். 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து, 7 ஆண்டுகளில் வீடு கட்டி இருக்கிறார்.
முன்னேறத் துடிக்கும் இளைஞராக இருக்கக்கூடிய இளந்திரையன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தனித்த அன்பினை பெற்றிருக்கிறார். அத்தகைய அன்பின் வெளிப் பாடாக நம்முடைய தலைவர்களுக்கு சிலை எழுப்பி சிறப்பு செய்திருக்கிறார். அவர் வாழ்வில் பெற வேண்டிய சிறப்புகள் இன்னும் இருக்கிறது. அவர் மென்மேலும் உயர வேண்டும் என்று பேசினார்.
பெற்றோர்களுக்கு நன்றி காட்ட வேண்டும்
நன்றிக்குரியவர்கள் கல்வெட்டை திறந்து வைத்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:
நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எப்போ தும் பெற்றோரை மறக்கக்கூடாது என்று சொல்வார். அதன் அடிப்படையில் தன்னுடைய புதிய இல்லத்திற்கு அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு சீ.தமயந்தி இல்லம் என இளந்திரையன் பெயர் சூட்டியிருக்கிறார். தமிழின மொழி உணர் வின் காரணமாக சிவா எனும் இயற்பெயரை இளந்திரையன் என மாற்றிக் கொண்டார். கழகத்தில் நகரச் செயலாளராக, மாநில மாணவர் கழக துணைச் செயலாளராக, மாநில மாணவர் கழக செயலாளராக, மாணவர் கழக இணைச் செயலாளராக பணியாற்றிய இளந்திரையன் தற்போது, திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
2013ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் விருத்தாசலம் பகுதியில் அதிக இளைஞர்களை பங்கேற்கச் செய்து முதல் பரிசினை பெற்றனர். 2014 ஆம் ஆண்டு புரட்சிகரமான திருமணத்தை செய்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற திருமணம் எனப் பாராட்டப் பெற்றவர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தாலி அகற்றும் விழாவில் கலந்துகொண்டு, காவிகள் ஏற்படுத்திய தகராறில் கழகத் தோழர்களோடு வேலூர் மத்திய சிறையில் இருந்தவர். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளில் இருந்து நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பெரும் பயணத்தின் நிறைவு விழாவை விருத்தாசலத்தில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர்.
இந்த விழாவில் குறுகிய காலத்தில் அனைத்து தலைவர் களையும் அழைத்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வீரம் செறிந்த தலைவர் சிலையை
போர்வாள் தானே திறக்க முடியும்:
நீதிக்கட்சித் தலைவர்கள் படங்களை திறந்துவைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் பேசியதாவது:
பொதுவாக திராவிடர் கழக நிகழ்வுகளில் தலைப்புகள் வித்தியாசமாக இருக்கும். வீடு திறப்பு என்பதை இல்ல அறிமுகவிழா என்ற வடிவம் கொடுத்தது திராவிடர் கழகம்தான். இல்ல அறிமுக விழாவை கொள்கைப் பரப்பு நிகழ்வாக நடத்தி தனி முத்திரை பதித்திருக்கிறார். இது கழகக் கொள்கைக்கு வலு சேர்க்கக் கூடியதாகும் புதிய இளைஞர்களை ஈர்க்கக் கூடியதாகும்.
15 ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் நானும், இறையனாரும் பங்கேற்றோம். பயிற்சி வகுப்பில் துடிப்புமிக்க, கவிதை எழுதும் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞரை அடையாளம் கண்டோம். அந்த இளைஞர்தான் திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கக்கூடிய இளந்திரையன்.
இளந்திரையன் துணிச்சலாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிலையை நிறுவி இருக்கிறார். இதில் ஆசிரியரிடம் அனுமதி பெற்றார்களா என்கிற கேள்வி என்னிடத்தில் எழுந்து கொண்டிருந்தது. இருப்பினும் இது மகிழ்ச்சிக்குரியதாகும். பிறந்த நாளில் கூட நம்முடைய தலைவர் அவர்கள் கண்ணில் படமாட்டார். இந்நிலையில்தான் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலைஞரிடம் ஒரு துண்டு சீட்டை நான் கொடுத்தேன். அதில் நம்முடைய தலைவர் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற இருக்கிறது. அதில் கட்டாயம் ஆசிரியரை பங்கேற்க செய்ய உதவிட வேண்டும் என எழுதிக் கொடுத்தேன். அதனைக்கண்ட கலைஞர் அவர்கள் பவள விழாவில் நான் பங்கேற்பேன் என கூறியதை அடுத்துதான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் முதன்முதலாக 75ஆம் ஆண்டு பவள விழாவில் பங்கேற்றார்.
வீரம் செறிந்த தலைவரின் சிலையை ஒரு போர்வாள் தானே திறக்க முடியும். இது மட்டற்ற மகிழ்ச்சி ஆகும். திராவிட இயக்கம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் நடேசனாரும், டி.எம்.நாயரும், தியாகராயரும் ஆவார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற களத்தில் நின்றபடி உயிர் துறந்தார் நம் அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளோடு அவரைப் புதைத்து விட்டோம் என்று கண்ணீர் வடித்தார் கலைஞர் அவர்கள். இன்று நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியிருக்கிறார். நன்றிக்கடனாக தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்திருக்கிறார். நாம் செல்லவேண்டிய தூரமும், அடைய வேண்டிய இலக்கும் இன்னும் ஏராளமாக இருக்கிறது நாம் பயணிப்போம் என்று பேசினார்.
இளந்திரையன் - உஷா இணையரின் 7 ஆம் ஆண்டு வாழ்க்கை இணையேற்பு விழாவை பாராட்டி தொண்டறச் செம்மல் அகர்ச்சந்த் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
கூட்டத்தில் கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், அரியலூர் மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந்தராஜ், கடலூர் மாவட்டச் செயலாளர் தென். சிவகுமார், சிதம்பரம் மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பரணிதரன், தென்காசி மாவட்டச் செயலாளர் வே.முருகன், திராவிடப் பத்திரி கையாளர் சங்கத் தலைவர் மாய.முனுசாமி, ஊடகவியலாளர் ரெங்கப் பிள்ளை, ரூபநாராயண நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.கிருட்டிணமூர்த்தி, விருத்தாசலம் மாவட்ட அமைப் பாளர் புலவர் இளவரசன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் பொன்.செந்தில்குமார், புதுவை மண்டல இளைஞரணிச் செயலாளர் கோ.அல்போன்ஸ், கடலூர் மண்டல மாணவர் கழக செயலாளர் ப.பண்பாளன், பெரியார் பெருந்தொண்டர் க.நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் இராசமாணிக்கம், விருத்தாசலம் நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், நகரச் செயலாளர் த.சேகர், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், பெண்ணாடம் நகரச் செயலாளர் செ.கா.ராஜேந்திரன், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன், பெண்ணாடம் நகர அமைப்பாளர் ந.சுப்பிரமணியன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ.அறிவு, வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி, வட்டாரச் செயலாளர் அ.பன்னீர்செல்வம், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் நா. பாவேந்தர் விரும்பி, ஒன்றியச் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், மங்களூர் ஒன்றியச் செயலாளர் சி.சுப்பிரமணியன், ஒன்றிய அமைப்பாளர் மு.நடராசன், நல்லூர் ஒன்றியத் தலைவர் ஆசைமணி, மாவட்ட வழக்குரைஞரணித் தலைவர் அ.பழநியாண்டி, மாவட்ட ப.க. தலைவர் க.இராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சே.பெரியார்மணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் செ.சிபிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.ராசா, நகர இளைஞரணித் தலைவர் கு.பிரவீன்குமார், கழுதூர் இளங்கோவன், முதனை செந்தில் குமார், மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமி, மகளிர் பாசறை தலைவர் கோமதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வெற்றிச் செல்வி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிரணி செயலாளர் சரண்யா, ஜெகன்ராஜ், அறிவழகன், உத்தண்டி, தே.சுதாகர், இராஜபாளையம் சிவகுமார், பாண்டி முருகன், தஞ்சை விஜயகுமார், கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் உதயசங்கர், செயலாளர் வேலு, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அரவிந்தகுமார், விழுப்புரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பகவான்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் 'ஜும்' இணையம் வழியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
நிறைவாக மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் உஷா நன்றி கூறினார்.
தொகுப்பு: திராவிடப்பொழிலன், திருமுதுகுன்றம்