வியாழன், 28 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 12

May 28, 2020 • Viduthalai • 

பெரியார் தலைமையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற ஊர்வலம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

1950 ஆகஸ்டு - 1951 மே காலத்திய “விடுதலை” யைப் படித்தால் இதற்காக நடந்த போராட்டங்களையும், இதற் கான வலுவான வாதங்களை அது விடாது சொல்லி வந்த தையும் அறிய முடிகிறது. சேலத்திலே ஊர்வலம், அண் ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு, நெல்லைக் கல்லூரி மாணவர்கள் தீர்மானம், விருதைக் கல்லூரி ஆதரவு, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி ஸ்டிரைக், குடந்தை சர்க்கார் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் என்று இந்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது. இதற்கெல்லாம் முத் தாய்ப்பானது 1950 ஆகஸ்டு 14இல் சென்னையில் நடை பெற்ற எழுச்சிகரமான ஊர்வலம். அன்று “வகுப்புவாரி உரிமை நாள்’’ கடைப்பிடிக்கப்பட்டது.

20 ஆயிரம் பேர் பங்கு கொண்ட இந்த ஊர்வலத்தைப் பெரியார் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இதுபற்றிய “விடுதலை”யின் (14-8-50) வர்ணனை- “எல்லா கட்சி களும் தங்கள் தங்கள் கட்சிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகக் கொடி, முன்னேற்றக் கழகக் கொடி, தொழிலாளர்கள் கட்சிக்கொடி, கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி, தமிழ்க் கொடி, ஜஸ்டிஸ் கொடி ஆகிய கொடிகளுடன் உரிமை முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர்”. சகல எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இந்தப் போராட்டத்திற்கு இருந்தது. ஏன் காங்கிரசாரும் இதில் கலந்து கொண்டார்கள்.

ஊர்வலத்தின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சு இது. “ஊர்வலம் நடத்த வேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு சகல கட்சி யாரும் ஒத்துக் கொண்டு இன்றைய தினம் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ்காரர்கள் பலரும் நம்முடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கையிலே காங்கிரஸ் கொடி ஏந்தி வரவில்லை. இந்து மகாசபைக்காரர்கள் என்போர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாரி உரிமைக்கு எதிரிகள். ஆனால், அவர்களும் அக்கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சியே பேச்சளவில் வகுப்புவாரிக் கொள்கையை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள். காங்கிரஸ்காரர்களையம் சேர்த்துக் கொள்வது என்பதோடு மாத்திரமல்லாமல் கம்யூனிஸ்ட் முதலியவர்களையும் நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். வகுப்புவாரி உரிமைக் கிளர்ச்சியில் அவர்களுக்கும் மாறுபட்ட அபிப்பிராயம் இருக்க முடியாது”

இந்து மகாசபை என்பது பிராமணிய சபை என்பதை யும், அவர்கள் இடஒதுக்கீட்டின் பரமவைரிகள் என்பதை யும், ஆனால் ஊரை ஏமாற்ற அவர்களும் அதை ஒப்புக் கொள்வதாய் நடிக்க வேண்டி வந்ததையும் பெரியார் பளிச்சென்று சொன்னது குறிக்கத்தக்கது. அன்று முதல் இன்றுவரை இது விஷயத்தில் இந்துத்துவாவாதிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இடஒதுக்கீட்டை முடிந்த அளவு தடுக்கப் பார்ப்பார்கள், முடியாத பட்சத்தில் தாங்களும் ஆதரிப்பதாக வாய்ப்பந்தல் போடுவார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

இத்தகைய எழுச்சிகரமான சூழலில்தான் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்று சென்னை சர்க்கார் முடிவு செய்தது. எனினும், இயக்கத்தை தளர்த்தி விடவில்லை பெரியார். இது போன்ற விஷயங்களில் நீதிபதிகளை நம்புவதைவிட மக்களை நம்புவது உத்தமம் என்று அவர் தெளிவாக இருந்தார். 1950 டிசம்பர் 3இல் திருச்சியில் “வகுப்புவாரி உரிமைப்போர் மாநாடு” நடை பெற்றது. மாநாட்டின் தலைவர் எம்ரத்னசாமி. இவர் யாரென்றால் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் முன்னாள் தலைவர், வகுப்புவாரிப்படி உத்தியோகங்களைத் தர முடி யாததற்குக் காரணம் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப் பட்டோரும் தொழில் நுட்பக் கல்வியைப் பெறாததே என்று சுட்டிக்காட்டினார். அதற்காக அந்தக் கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்றார். அப்படித்தான் அங்கும் அது வந்தது. அதற்கு இப்போது ஆபத்து என்றதும் அவரும் பொங்கி எழுந்தார். “டில்லி மூலவர்களுக்கு எட்டுமாறு கிளர்ச்சி நடத்துங்கள்’’ என்றார் தனது தலைமை உரையில், பெரியாரோ “எல்லாப் பதவிகளிலும் நமக்குரிய விகிதப் பங்கை பெற்றே தீருவோம்“ என்று முரசறைந்தார்.

ஒவ்வொரு மாதம் 14ஆம் தேதியையும் வகுப்புரிமை நாளாகக் கடைப்பிடித்தது தி.க. “விடுதலை” ஏட்டில் அதுபற்றிய பெட்டிச் செய்தி வந்து கொண்டேயிருந்தது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அந்த பிராமண மாணவர்களுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடினார். இந்த மனிதர் அரசியல் நிர்ணய சபையி லிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் களில் ஒருவர் என்பதை அறிவோம். வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு அங்கே பாதுகாப்புத் தரப்படவில்லை என்பதை அவர் நன்கு அறிவார். எனவே, வலுவாக வாதாடினார் வகுப்புரிமைக்கு எதிராக. இதற்கிடையில் முனிசிப் வேலைக்கு மனுச் செய்திருந்த பி. வெங்கட்ராமன் என்பவர் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தார். அதையும் பரிசீலித்தது உச்ச நீதிமன்றம். முடிவில் குண்டைத் தூக்கிப் போட்டது. கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் சென்னை மாகாணத்தின் வகுப்புரிமை அரசாணை செல்லாது என்று உற்சாகமாக அறிவித்தது.

1951 மார்ச் 27ஆம் தேதியிட்ட “விடுதலை” தந்த செய்தி இது - “கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் விதிக்கு முரணா னது. 1950 ஜனவரிக்கு முன் அது நியாயமானதாக இருக் கலாம். ஆனால் இன்று பொருந்தாது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறிவிப்பு. அக்ரகாரத்தின் அமோகத் தீர்ப்பு”.

அதே நாளைய “விடுதலை”யின் தலையங்கம் இப்படிக் குமுறியது - “கொலை! கொலை! வகுப்புரிமை படுகொலை! படிப்பு - பதவி இரண்டிலும் அக்ரகாரம் உச்சநிலைக்கு போகப் போகிறது. மீண்டும் நம்மவர்கள் பழைய நிலைக்கே வரப்போகின்றனர். மத்திய சர்க்கார் பணிமனைகளைப் போலவே இனி மாகாண சர்க்கார் பணிமனைகளும் ஆகப் போகின்றன. சர்க்கார் ஊழியர், மாணவர் இந்த இரு சாராரும் இறுதித் துணிவுடன் இனி இறங்க வேண்டிய கட்டம் நெருங்கி விட்டது. நமது சந்ததிகளின் கதியை விரைவிலே முடிவு கட்டியாக வேண்டும்“

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே மத்திய அரசில் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லை. அங்கே உயர் சாதியினரே - குறிப்பாக பிராமணர்களே - நிறைந்திருந் தார்கள். சென்னை மாகாணத்தில் தான் இட ஒதுக்கீடு காரணமாக பிராமணரல்லா தாரும் இடம் பெற்றிருந்தார் கள். இப்போது அதற்கும் ஆபத்து என்றால் டில்லியைப் போலவே சென்னையும் ஆகிப் போகும் என்று சரியா கவே எச்சரித்தது “விடுதலை”.

தி.க.களத்திலும் இறங்கியது. வகுப்புவாரி உரிமை பெற தமிழ் நாடெங்கும் மந்திரிகளுக்கு கருப்புக்கொடி பிடிக்கப் படும் என்றும், மந்திரிகளின் ராஜினாமா வற்புறுத்தப்படும் என்றும் ஏப்ரல் துவக்கத்தில் அறிவித்தது அதன் மத்திய நிர்வாகக் குழு. அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. ஏப்ரல் 22ஆம் நாள் “காங்கிரஸ் ஒழிப்பு நாளாக” அனுஷ் டிக்கப்படும் என்று அறிக்கை விட்டார் பெரியார். மாவட் டம் தோறும் வகுப்புரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.

இப்படி விடாமல் போராட்டங்கள் நடத்தியது மட்டு மல்லாது, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமையின் நியாயத்தையும் தனது பத்திரிகை மூலம் சொல்லி வந்தார் பெரியார். வகுப்புரிமையை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் கோஷ்டியார் தங்களுக்குள்ள பத்திரிகை பலத் தைக் கொண்டு எதிர்த்து வந்தபோது “விடுதலை” (7.8.50) எழுதியது- “1941இல் தென்னிந்திய மக்கள் எண்ணிக்கை விபரம் வருமாறு: பிராமணர் 2.7%, ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிராமணரல்லாதார் 84%, முஸ்லிம்கள் 7.8%, கிறிஸ்தவர் 3.7%. இந்த வருஷம் இன்ஜினியரிங், வைத்தி யக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்த ளிக்கப்பட்டன: பிராமணர் 20%, பிராமணரல்லாதார் 58%, கிறிஸ்தவர் 8%, முஸ்லிம் 7%, ஹரிஜன் 7%. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரிஜனங்களுக்கு இன்னும் அதிகமான சதவிகிதம் கிடைத்திருக்க வேண்டும். அதற் குத் தோதாக ஹரிஜன மாணவர்கள் இல்லையாதலால் காலி ஸ்தானங்களைப் பெரும்பாலும் பிராமணப் பிள்ளை களுக்கே தந்திருக்கிறார்கள்” வகுப்புவாரி உரிமை அரசாணை நடைமுறையில் இருந்த போதே இந்த கதி என்றால் . அதுவும் ஒழிந்தால் என்னாகும் என்று கேட்டது “விடுதலை” ஏடு. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் பிராமணியவாதிகளால்?

- தொடரும்


தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 11

May 27, 2020 • Viduthalai •

வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

சமூக சீர்திருத்தம் - பெரியார்

முஸ்லிம் லீக் கேட்ட பாகிஸ்தான் கிடைத்து, பெரியார் கேட்ட திராவிடஸ்தான் கிடைக்காத நிலையில் இந்துஸ் தானுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்றைய சென்னை மாகாணத்தை “திராவிட நாடு” என அழைத்து பிரிவினை கேட்டார் பெரியார். அது காரிய சாத்தியமற்றதாக இருந்தது. மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் எனும் மொழிவழிப்பட்ட தேசிய இன உணர்வுதான் இருந்ததேயொழிய “திராவிட இனம்“ எனும் வழிப்பட்ட உணர்வு இல்லை. பிராமணரல்லா தாரைத்தான் திராவிடர்கள் என அழைத்து வந்தார் பெரியார். அப்படிப் பார்த்தால் அவர்கள் இந்தியா முழுக்க இருந்தார்கள். அவர்களுக்காகச் சென்னை மாகாணத்தை மட்டும் தனி நாடாகக் கேட்டது அர்த்தமற்றதாக இருந்தது. பிராமணியத்தை எதிர்க்க இந்தியா முழுவதிலுமிருந்த பிராமணரல்லாதாரைத் திரட்ட முனைவதும், அதற்கு அச்சாரமாகச் சென்னை மாகாணத்தில் அந்தப் பணியைச் செய்வதுமே காலப் பொருத்தமுடையதாக இருந்தது. இந்திய ஒற்றுமையோ, இந்திய சுதந்திரமோ இதற்கு இடையூறாக இல்லை. பெரியாரோ இந்திய சுதந்திரத்தை வரவேற்கவில்லை .

திராவிடர் கழகத்தின் நிர்வாகக்குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் 1947 ஜூலை 25 அன்று வெளியிட்ட அறிக்கையில் வரவிருக்கிற சுதந்திர நாள் “திராவிட மக்களுக்கு ஒரு துன்ப நாளாகும்“ என்று குறிப்பிட்டார். ஆகஸ்டு 6 அன்று பெரியாரே வெளியிட்ட அறிக்கையில் “சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர் - பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்ளவில்லை என்கிறோம்“ என்றார்.

இது கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணாவுக்கு ஏற்புடையதாக இல்லை. பெரியாரின் நிலைபாட்டை எதிர்த்து ஆகஸ்டு 10 அன்று விரிவான அறிக்கை வெளியிட்டார். காங்கிரசுக்கு மாற்றான ஓர் அரசியல் கட்சியாக தி.க.வை மாற்ற வேண்டும் என்கிற நினைப்பில் இருந்தார் அண்ணா . சமூகத் தளத்திலும், அறிவுத் தளத்திலும் இயங்குவதையே பெரியார் பெரிதும் நம்பியிருக்க, இவரோ அரசியல் தளத்திற்கு இதைக் கொண்டு செல்ல விரும்பினார், அதற்கான சில சமரசங் களுக்கும் தயாராக இருந்தார். தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையிலான இந்த அடிப்படை முரண்பாடே 1949இல் தி.க. உடைந்து திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாவதற்கு காரணமாய் அமைந்தது. பெரியார்- மணியம்மை திருமணத்தை அதற்கு மிக லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அண்ணா.

1949 செப்டம்பரில் தி.மு.க. பிறந்த போது தாய்க் கழ கத்திற்கும் இதற்கும் இடையே புகைச்சலும், கோபதாபங் களும் இருந்தன. 1967இல் தி.மு.க சென்னை மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். கூட சமூகத் தளத்தில் இயங்குவதையே பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், அரசியல் தளத்தைப் புறக்கணிக்கவில்லை . 1957ல் ஜனசங்கம் என்கிற கட்சியை உருவாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அறிவோம். அத்தகையதொரு உத்தியை ஏனோ பெரியார் கடைப்பிடிக்கவில்லை.

காங்கிரசை எதிர்த்து நீதிக்கட்சியைப் பயன்படுத்தி யவர், பின்னர் அதை திராவிடர் கழகம் என்று மாற்றியவர் அதை சமூக இயக்கமாக மட்டுமே நடத்த முயன்றதில் உள்ளார்ந்த முரண் இருந்தது. இதைச் சுமூகமாகத் தீர்த்திருக்கலாம்ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்த அந்த உத்தியில். அதைச் செய்யத் தவறிய வேளையில் அண்ணா அறுவைச் சிகிச்சை மூலம் அதைச் செய்ய வேண்டி வந்தது. அதனால் ஏற்பட்ட கோபதாபம் வெகு காலம் நீடித்தது என்பது மட்டுமல்ல, தி.மு.க. வானது தி.க.வின் கட்டுப்பாட்டிற்குள் வராமலே போனது.

ஆக, சென்னை மாகாணத்தில் தி.க என்றும், தி.மு.க என்றும் இரு அமைப்புகள் இயங்கத் துவங்கின. ஆரம்பத் தில் தி.மு.க.வும் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டது. திராவிட இயக்கம் என்ற பெயரில் பிராமணியத்தின் மீது இருமுனைத் தாக்குதல் பிறந்தது.

வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து

இந்தக் கட்டத்தில்தான் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. ஜாதி எதிர்ப்பு நோக்கில் அங்கு எழுதி வைக்கப்பட்ட சில சரத்துகளை சென்னை மாகா ணத்திலிருந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பயன்படுத்த முனைந்தார்கள் பிராமணியவாதிகள். கல்வி நிறுவனங் களிலும், அரசுப் பணிகளிலும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்படுவார்கள் என இருப்பதைச் சுட்டிக்காட்டி வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஆணை அரசியலமைப்புச் சட்டப்படி விரோதமானது என்று புறப்பட்டார்கள்.

சென்னை மாகாணத்தில் மருத்துவக் கல்லூரியில் 330 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 395 இடங்களும் இருந்தன. அன்று இந்தப் படிப்புகள் எவ்வளவு அரிதா னவை என்பது விளங்கும். இவை இங்கிருந்த வகுப்புவாரி அரசாணைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டன. இதனால் தங்க ளுக்கு இடம் கிடைக்காமல் போனது என்று மருத்துவப் படிப்புக்கு மனுப்போட்ட செண்பகம் துரைச்சாமி, பொறியியல் படிப்புக்கு மனுப்போட்ட சி.ஆர். சீனிவாசன் என்கிற பிராமண மாணவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

இதன் மீது 1950 ஜூலையில் தீர்ப்புத் தந்த நீதிபதிகள் “பிரஸ்தாப வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு வகுப்பு துவேஷத்தை வளர்க்கக் கூடியதாய் இருக்கிறது. தனிப்பட்டோரின் உரிமைகளில் சர்க்கார் தலையிட்டு ஏதாவது செய்யாமலிருக்க வேண்டும் என்றே அரசியல மைப்பை வகுத்தவர்கள் அதற்குப் போதுமான பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள்” என்று கூறி வகுப்புவாரி ஆணையை ரத்து செய்துவிட்டார்கள். இங்கு காலங்கால மாய் சாதிய ஒடுக்குமுறை நிலவுவது வகுப்பு துவேஷம் இல்லையாம், அதை முறியடிக்க சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தந்ததுதான் வகுப்பு துவேஷத்தை வளர்க்கு மாம்! இப்படிக் கோணல் புத்தியோடு தீர்ப்புத் தந்தார்கள், அப்படித் தரும் வகையில்தான் அரசியலமைப்புச் சட்டமும் இருந்தது.

இந்தத் தீர்ப்பு கண்டு பெரியார் கிளர்ந்தெழுந்தார். பிளவால் துவண்டு போயிருந்த அவரது கழகத்தை மீண்டும் தூக்கிநிறுத்த  பிராமணியவாதிகளே மறைமுக மாக உதவி செய்தது போலானது. இப்படியொரு வழக்கும், இப்படியொரு தீர்ப்பும் அவரது இயக்கத்திற்குள் புதிய ஆக்ரோஷத்தை ஊட்டியது. 1950 ஆகஸ்டு 2ஆம் தேதியிட்ட “விடுதலை” தலையங்கம் பேசியது “கம்யூனல் ஜி.ஒ. மீண்டும் உயிர் பெற வேண்டுமென்றால் மூன்று வழிகள்தாம் உண்டு - 1) மாகாண மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும் பதவியை விட்டு விலகி அரசியல் நெருக்கடியை உண்டாக்க வேண்டும். 2) வயது வந்தோர் வாக்குரிமை பெறாத நிலையில், ஏதோ ஒரு கும்பலினால் வகுக்கப்பட்ட இந்த அரசியல் திட்டத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். 3) கம்யூனல் ஜி.ஓ. வுக்காகவும் நம் நாட்டிற்கேற்ற தனி அரசியலை வகுத்துக் கொள்வதற்காகவும் எல்லாத் திராவிட மக்களும் ஒன்று சேர்ந்து பெருங்கிளர்ச்சி செய்தாக வேண்டும். இந்த மூன்றில் எதைக் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று செய்யலாம்? ஆணிவேர் அறுபட்ட மரமாகி விட்டது நம் திராவிட சமுதாயம். இனி சல்லிவேர் தான் பாக்கி. அதுவும் அறுக்கப்படலாம். அதன்பின் நம் கதி என்ன? வர்ணாசிரம முறைப்படி அவனவன் பார்க்க வேண்டியதுதானா? பார்ப்பனர் மட்டும் தங்கள் வர்ணத் திற்கேற்ற தொழிலை விட்டு நம்மை அடக்கியாளும் தொழில்களில் ஈடுபட வேண்டியதுதானா? திராவிடப் பொதுமக்களைக் கேட்கிறோம். விரைவில் முடிவு செய்யுங்கள்”

இத்தகைய ஆவேசமான, அர்த்தபாவமிக்கத் தலையங்கத்திற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சென்னையில் மாணவர் போராட்டம் வெடித் தது. ஆகஸ்டு 1 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள், திரு வல்லிக்கேணி கடற்கரைக்கு நீண்ட ஊர்வலமாகச் சென்ற வர்கள், அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசாங்கத்தைக் கோரி னார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் அரசியல மைப்புச் சட்டத்தையே திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். முடிவில் அதுதான் நடந்தது என்பது வரலாறு. ஆனால், அதற்காக பெரியாரும் அவரது தி.க.வும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும் இந்திய சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்.

 

- தொடரும்

திங்கள், 25 மே, 2020

திரிக்காதே ‘தினமலரே!'


May 25, 2020 • Viduthalai •

‘தினமலர்' (23.5.2020) நாளேட்டில் ‘பட்டம்' என்ற பகுதியில் ஒரு பொய்யான தகவல் பதிவாகியுள்ளது. பாரதியாரின் பாடல்களை அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி தடை செய்தது என்பதுதான் அந்தச் செய்தி.

திரிபுவாதம் செய்வதில் திரிநூல் ‘தினமலரை' ஜெயிக்க யார் இருக்கிறார்கள்?

அந்தக் காலகட்டத்திலும் இரட்டை ஆட்சி முறை செயல்பாட்டில் இருந்தது. சில துறைகள், சில உரிமைகள், அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சரவைக்கு உண்டு.

முக்கிய பல துறைகள் வெள்ளக்கார கவர்னர் கவுன்சிலுக்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பாரதியார் பாடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பொழுதே ‘குடிஅரசு' இதழில் (30.9.1928) தந்தை பெரியார் தலையங்கம் பகுதியில் தோலுரித்துக் காட்டினார்.

‘‘பழியோரிடம் பாவமோரிடம்'' என்பது அதன் தலைப் பாகும். சென்னை அரசு தடை செய்ததற்கு முன்பே பர்மா அரசு பாரதியார் பாடல்களைப் பறிமுதல் செய்தது என்று குறிப் பிட்டு விட்டு, அப்பொழுது ‘சுதேசமித்திரன்' ஏடு எழுதியிருந் ததையும் ‘குடிஅரசு' தலையங்கம் எடுத்துக்காட்டியிருந்தது.

‘‘பர்மா அரசு பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்யவேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால், மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார்தான் காரணம் என்று ‘சுதேசமித்திரன்' பத்திரிகையும் கூட சொல்லி யிருக்கிறது! ஆகவே, இந்தப் பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்தவிதத்திலும் காரணமாயிருக்கவில்லை'' என்று ‘குடிஅரசு' இதழில் இன்றைக்கு 92 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரி யாரால் மறுக்கப்பட்டது - ‘‘இதெல்லாம் யாருக்குத் தெரியப் போகிறது?'' என்ற மனக் கிறுக்கில், திமிரில் திராவிட இயக்கத் திற்கு எதிராக எதையும் கிறுக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறதா?  அந்த முகத்திரையைக் கிழிக்க என்றும் ‘‘கருஞ்சட்டைக் குத்தீட்டி'' உண்டு என்று எச்சரிக்கிறோம்.            - கருஞ்சட்டை

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 10


May 25, 2020 • Viduthalai • 

சைவர்களை மிரட்டிய பெரிய புராண எதிர்ப்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

“இந்த விடுதலை விழாக் கொண்டாட்டத்தைக் கொண்டாடும்படி நானே ஓர் அறிக்கைவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்காகப் பல ஏற்பாடுகளும் செய்து வந்தேன். ஆனால், ஜனாப் ஜின்னா அவர்கள் முந்தி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார். ராஜாஜி மந்திரி சபை வழிந்ததில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்ததில் நியாயம் உண்டு என்றார் பெரியார். இதற்கு உதாரணமாக “வந்தே மாதரம்“ பிரச்சனையை எடுத்துச் சொன்னார். அது - “காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன் எதற்காக ‘வந்தே மாதரப்’ பாட்டைப் பாட வேண்டும்? ஒரு மதஸ்தர்களின் மனத்தைப் புண்படும்படி செய்யும் என்று தோழர்கள் லால்ஜானும், அமீத்கானும் ஆட்சேபித்தால் அவர்களை வெளியில் போகும்படி சொன்னது எவ்வளவு ஆணவ மான செயல் என்பதைப் பாருங்கள்! வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ‘ஆனந்த மடம்‘ என்ற புத்தகத்தில் முஸ்லிம்களை எவ் வளவு இழிவாகவும் கேவலமாகவும் எழுதி இருக்கிறார் என்பதைப் பாருங்கள். அந்தப் புத்தகத்தில் முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்தும் படியான பல பாகங்கள் இருக் கின்றதுடன், முஸ்லிம்களைத் தாடிக்காரப் பன்றிகள் என் றும், அவர்களைக் கண்ட விடங்களில் எல்லாம் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களை சட்ட சபையில் பாட வேண்டாம் என்று கூறினால், சட்ட சபையைவிட்டு வெளியில் போகும்படி கூறினால் அவர் கள் சும்மா இருப்பார்களா? நான் கேட்கிறேன் - இன்று சைவர்களில் ஒருவர் விஷ்ணு மதத்தையும் புராணத் தையும் விஷ்ணு கடவுளையும் பற்றி இழிவாகப் புத்தகம் எழுதினால் விஷ்ணு பக்தர்கள் சும்மா இருப்பார்களா? அதே போல் சைவ மதத்தையும் புராணத்தையும் கட வுளையும் பற்றி - புராணங்களில் உள்ளது போல் கூட - வைணவர்கள் எழுதினால் சைவர்கள் சும்மா இருப் பார்களா?”

இந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முஸ்லிம் அல்லாத வேறு ஒரு தலைவர் அன்று தமிழகத்தில் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல இந்தப் பேச்சின் ஊடே “வந்தே மாதரம்” விவகாரத்தில் சென்னை மாகாண சட்டசபையில் முஸ் லிம் உறுப்பினர்களை வெளியே போகும்படிச் சொன் னதும் தெரிய வருகிறது.

அதுபோல வேறு சில செய்திகளும் நமக்குத் தெரி கிறது. அவை - “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப் பட்ட மக்கள் ஆகியவர்களுக்கு இருந்துவந்த சில உப காரச் சம்பளத்தில் கையை வைத்துக் குறைத்து விட் டார்கள். ஆரம்பப் பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடி விட்டார்கள். இதையெல்லாம் கேட்டால் முதல் மந்திரி யார் ‘வாய்க்கால் கரைகளில் அட்டைகளில் எழுதிப் படித் துக் கொள்ளும்படி’ கூறுதி. இது அரசியல் கொள்கையா, பார்ப்பனீயக் கொள்கையன் தமிழ்நாட்டில் ‘உயர்திரு’ ‘திருவாளர்’ போன்ற தமிழ்ப் பதங்கள் வைத்து அழைத்து வந்ததை நீக்கிவிட்டு ஆரியப் பதமாகிய ‘ஸ்ரீ’ என்ற பதத்தை உபயோகிக்கும்படி உத்தரவிட்டார்கள். இப்படி இவர்கள் செய்தது அரசியல் வேலையா, பார்ப்பன மத வேலையா என்று கேட்கிறேன். ‘விஸ்வப் பிராமணர் கள்’ என்றிருந்தால் இவர்களுக்கு குத்துகின்றதா? குடை கின்றதா? அதை எடுத்து ‘விஸ்வகர்ம’ என்று போட வேண்டும் என்று உத்தரவிட்டார். இது அரசியலா? பார்ப் பனீயமா? இப்படியொரு ஆட்சி நடந்தால் அது தொலைந்தது என்று கேள்விப்பட்டதும் கொண்டா டாமல் என்ன செய்வார்கள்?’’

இப்படியாகப் பெரியார் அன்று உருவாக்கிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை வெகு ஆதாரமான சமூகக் கூறாகத் தமிழகத்தில் இருந்தது. வட இந்தியா போல இங்கே மதக் கலவரங்களை அவ்வளவு எளிதில் பிராமணியவாதிகளால் உருவாக்க முடியாமல் இருந்ததற்கு இதுவொரு முக்கிய மான காரணமாகும். முஸ்லிம்களோடு பெரியார் கொண் டிருந்த நல்லுறவின் நீட்சியாகத்தான் பம்பாயில் 1940 ஜனவரியில் லீக் தலைவர் ஜின்னாவோடு அவரது சந்திப்பு நடந்தது. அப்போது அம்பேத்கரும் உடனிருந் தார். இந்த மூவரின் கலந்துரையாடல் பிற்காலத்தில் பிராம ணரல்லாதர் - முஸ்லிம்கள் - தாழ்த்தப்பட்ட மக்களின் உறவு வலுவடையக் காரணமாக இருந்தது. குறிப்பாகப் பெரியார் - அம்பேத்கர் உறவு கடைசிவரை மிக நெருக்க மாக இருந்தது. இதுவெல்லாம் பிராமணியத்திற்கு உள் ளார்ந்த எரிச்சலையும் ஆத்திரத்தையும் தந்தது..

திராவிடநாடு தீர்மானம்

தனது பம்பாய் மற்றும் வடநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய பெரியார் நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டு வேலைகளில் இறங் கினார். இப்போது சுயமரியாதை இயக்கம் என்று தனியாக இல்லை. அவர்கள் எல்லாம் நீதிக்கட்சியில் இருந்தார்கள். நீதிக்கட்சி இப்போது பெரியாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது. அதனுடைய 15வது மாகாண மாநாடு திருவாரூரில் 1940 ஆகஸ்டில் நடைபெற்றது. இங்குதான் புகழ்பெற்ற திராவிட நாடு தீர்மானம் நிறைவேறியது. “திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் நேர்ப்பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அந்தத் தீர்மானம் கோரியது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் பி. பாலசுப்பிரமணியம், வழி மொழிந்தவர் அண்ணா . இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து அண்ணா மாநாட்டில் நீண்டதொரு சொற்பொழிவு ஆற்றினார்.

பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனையானது சாதியப் பிரச்சனையாகவும், வாழ்க்கை நடப்பாகவும், எவருக்கும் எளிதில் புரியத்தக்கதாகவும் இருந்தது. “திராவிடர்கள்” என்பது இனப் பிரச்சனையாகவும், வரலாறு சம்பந்தப்பட்டதாகவும், அறிவுஜீவிகளின் விவ காரமாகவும் இருந்தது. இதுவரை பெரியாரின் இயக்க மானது பிராமணிய எதிர்ப்பு எனும் சமூகநீதிப் போராட்ட இயக்கமாக இருந்தது. இப்போது தனிநாடு கேட்கும் அரசியல் கட்சியாகிப் போனது. அப்போதுதான் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கேட்கத் துவங்கியிருந்தது. இவர்கள் திராவிடஸ்தான் கேட்க ஆரம்பித்தார்கள். குடிமைச் சமூகத்தில் - கருத்தியல் தளத்தில் - இயங்குவதையே பெரிதும் விரும்பிய பெரியார் இப்போது ஒரு பிரிவினை கேட்கும் அரசியல் கட்சியின் தலைவராகிப் போனார். இப்போது திராவிட நாடு கோரிக்கையின் நியாயத்தை விளக்குவதில் நேரத்தைச் செலவிட வேண்டி வந்தது. அது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாக இருந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை எழுந்திருந்தது மொழிவாரி மாநிலத்திற்கான தேசிய உணர்வு தானேதவிர, ஆரிய-திராவிட இனவாரி தனிநாட்டு உணர்வு அல்ல. இல்லாத ஒன்றுக்காய் பிரயாசைப்பட்டார் பெரியார். பிராமணியம் உள்ளூரச் சிரித்திருக்கும்.

சைவர்களை மிரட்டிய

பெரிய புராண எதிர்ப்பு

இதன்பொருள் கருத்தியல் தளத்தில் இயங்குவதைப் பெரியார் கைவிட்டுவிட்டார் என்பதல்ல. அதையும் செய்தே வந்தார். ஆனால் முக்கியத்துவம் இப்போது திரா விட நாடு கோரிக்கைக்கு என்றாகிப் போனது. அதற்கு அக்கம்பக்கமாக இதிகாச எதிர்ப்பு தொடர்ந்தது. கூடவே பெரிய புராணம் எதிர்ப்பும் கந்த புராண எதிர்ப்பும் நடந்தது. இது இந்தி எதிர்ப்பில் பெரியாரோடு இருந்த சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் போன்றோரை அந்நியப்படுத்தியது. அவர்கள் “தமிழருக்கென்று மதம் உண்டு, அது சைவ வைணவமுமே” என்று சொல்லத் துவங்கினார்கள்.

(தொடரும்)

ஞாயிறு, 24 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9


May 24, 2020 • Viduthalai • மற்றவை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல வகுப்பாரின் ஆதரவு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

தமிழறிஞர்களின் ஆதரவு மட்டுமல்ல, பல வகுப்பா ரின் ஆதரவும் இந்தி எதிர்ப்புக்கு இருந்தது. முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா, தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றோரின் ஆதரவைப் பெற்றார் பெரியார். 1938 மே மாதத்தில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. சோம சுந்தர பாரதியார் தலைமையில் 112 உறுப்பினர்களைக் கொண்ட “சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர்கள் சங்கம்“ அமைக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த டி.பி. வேதாச்சலம் தலைமையில், “சென்னை மாகாணத் தமிழர் மகாசபை’’ என்பது இருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஒரு பெரும் இயக்கத் திற்கு திட்டமிட்டன. இதற்கான தலைவர்கள் குழுவில் சோமசுந்தர பாரதியார், தவே. உமாமகேசுவரம் பிள்ளை, சவுந்திரபாண்டியன், கி.ஆ.பெ. விசுவநாதம், கே.எம். பாலசுப்பிரமணியன், பெரியார் ஆகியோர் இருந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் சென்னையை நோக்கிப் பயணங்கள் நடந்தன. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டே மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ராஜாஜி வீட்டு முன்பு தொடர்மறியல் நடைபெற்றது. காங்கிரஸ் எதிர்த்து வந்த பிரிட்டீஷாரின் கொடூரமான சட்டங்களை இப் போது காங்கிரஸ் ஆட்சி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர் கள் மீது பிரயோகித்தது. பிராமணியம் தனது நிலையைக் காக்க எதுவும் செய்யும் என்பது மீண்டும் நிரூபணமானது. எனினும் போராட்டம் சலிக்காமல் நடந்தது. செப்டம்பரில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கூட்டத்திற்கு வந்ததாக “குடி அரசு” தெரிவித்தது. இதில் பங்கு கொண்டவர்களில் மறைமலையடிகள், கே.வி. ரெட்டி நாயுடு, பெரியார், சோமசுந்தர பாரதியார், பி.டி. ராஜன், மீனாம்பாள் சிவராஜ், மவுலான மவுல்வி ஷர்புதீன், பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார், ரெவரண்ட் அருள் தங்கையா, திருப்பூர் முகைய்தீன், அ. பொன்னம் பலனார், டாக்டர் தர்மாம்பாள் போன்றோரும் இருந் தார்கள் பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்கு எதிராக முதன்முதலாக தலைவர்களது ஒரு விரிந்த அணிவகுப்பும், பிரம்மாண்டமான வெகு மக்கள் திரளும் நடந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை இப்படியொரு இயக்கத்தைப் பிராமணியம் இதுவரை சந்தித்ததில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த இந்தக் காலத்தில் சென்னையில் “தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு” நவம்பரில் நடைபெற்றது. இங்கும், அதற்கு முன்பும் பெரியார் பேசிய பேச்சுக்களுக்காக அவருக்கு ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார். அப்படிச் சிறை யில் இருந்த போதுதான் நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிமைச் சமுதாயத்தில் இயங்கு வதையே பெரிதும் விரும்பிய அவர் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு இயக்கம் அத்தகைய சூழலை உருவாக் கியது. டிசம்பரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரியாரின் தலைமை உரை படிக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறையிலிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எல். நடராஜன் 1939 ஜனவரியில் மரணமடைந்தார்; முதல் களப்பலியானார். நாடார் வகுப்பைச் சார்ந்த தாளமுத்து இதுபோல மார்ச்சில் காலமானார். சிறையில் வாடிய பெரியாரின் உடல்நிலையும் மோசமானது. அவரை விடுதலை செய்யச் சொல்லியும் பொதுக்கூட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தன. நிலைமை மோசமாவதை அறிந்த ராஜாஜி அரசாங்கம் அவரை மே மாதம் விடுதலை செய்தது. ஆனால் கட்டாய இந்தியை வாபஸ் வாங்கவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காரண மாக ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்த பிறகே - ஆங்கிலேய கவர்னர் ஆட்சியாலேயே - வாபஸ் பெறப் பட்ட து.

மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு

மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு காங் கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததை சத்தியமூர்த்தி அய்யரின் 1939 ஜூலை பேச்சு உணர்த்தியது. அது - “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தி மட்டுமில்லாமல்) சமஸ்கிருதத் தையும் கட்டாயமாகப் படிக்கும்படி செய்வேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன். காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராம ராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்று மிக ஆவலாய் இருக்கிறேன். ராமராஜ்யம் என்பது வர்ணச்சிரம முறைப் படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ராமர் காலத்தில் இந்த வர்ணாச்சிரம முறைப்படியே, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்து கொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்படவில்லை.’’ எத்தகைய வர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தார்கள் என்பதை இது நன்கு புரிய வைக்கிறது. நல்ல வேளையாக இந்த மனிதர் கைக்கு அதிகாரம் வரவில்லை. ஆனால் இவரைப் போன்றவர்கள் நாணயமாகத் தங்களின் உள் ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதால் பிராமணிய எதிர்ப்பு இயக்கம் சென்னை மாகாணத்தில் கிளர்ந்தெழுந்தது!

தமிழகத்தின் வரலாற்றில் பிராமணியம் செய்த மிகப் பெரும் தவறாக இந்தித் திணிப்பு இருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் - மத எதிர்ப்பானது அதற்கு ஒரு தீவிர முகத்தைத் தந்தாலும் அதன் மக்கள் தளத்தை அக லப்படுத்தவில்லை. ஆனால், இந்தி எதிர்ப்பு இயக்கமோ அதற்கு ஒரு போராட்ட முகத்தைத் தந்ததோடு அல்லாமல் அதன் மக்கள் தளத்தை விரிவுபடுத்தியது. பின்னாளில் திராவிட இயக்கம் ஒரு பெருந்திரள் இயக்கமானதற்கான வலுவான அடித்தளம் இந்த மொழிப் போராட்டத்தில் உருவானது. அது பிராமணியத்திற்கு மிகப் பெரும் சவாலாக எழுந்தது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக.....

இந்தக் காலத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்ததில் சுயமரியாதை இயக்கத்திற்கு தனித்த பங்கு இருந்தது. இது பிராமணியத்தின் நோக்கிற்கு நேர் எதிரானது. அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை வளரவிடாமல் செய்ய முஸ்லிம்கள் மீது இந்துக்களை ஏவிவிடப் பார்த்தார்கள். பெரியாரின் இயக்கமோ சமூக நீதியை வென்றெடுக்க பிராமணரல்லாதார் - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முனைந்தது. முஸ்லிம்களின் வகுப்புவாரிக் கோரிக்கையை அதரித்தார், அது நடை முறைக்கு வந்தபோது வரவேற்றார் பெரியார். 1930 சைமன் குழு அறிக்கை வெளிவந்தபோது அதில் “7.5 கோடி மகமதியருக்கு வகுப்புரிமை. தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை - இது போதுமானதல்ல. 10,000 இந்துக்க ளுக்கு ஒரு பிரதிநிதி என்றால் 1,00,000 தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒரு பிரதிநிதி என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. எனினும் தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை என்பது கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பெண் களுக்கு மொத்த இடங்களில் 5 முதல் 10 வரை தரப்பட்டுள் ளது. இது போதுமானதல்ல. எனினும் அவர்களது உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டி அதை வரவேற்றார். இதில் முஸ்லிம்களுக்கு வகுப்புரிமை தரப்பட்டதை முதலில் சொல்லி வரவேற்றிருப்பதை நோக்க வேண்டும்.

சென்னை மாகாணத்தில் ராஜாஜி மந்திரிசபை அமைந்த ஒரு மாதத்திலேயே இந்தியைத் திணித்தது என்றால், இரண்டு மாதத்திலேயே “வந்தே மாதரம்“ பாடலைச் சட்டசபையில் பாட வேண்டும் என்று விதித் தது. இது எப்படி முஸ்லிம்களுக்கு மதரீதியில் சிக்கலானது என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். இதைப் புரிந்திருந்த பெரியார் அரசாங்கத்தைக் கண்டித்தார். “விடுதலை” ஏடும் கண்டித்தது. “வந்தே மாதரம்“ பாடலை எதிர்த்து 1938 மார்ச் 5 முதல் சத்தியாக்கிரகம் இருக்கப் போவதாக எஸ்.எஸ். பாமினி சாயுபு என்பவர் அறிக்கை விடுத்தார். உடனே ராஜாஜி அரசாங்கம் பின்வாங்கியது, அது சட்டசபையில் பாடப்படுவது நிறுத்தப்பட்டது.

1937-39ல் மாகாணங்களில் நடந்த காங்கிரஸ் அரசாங் கங்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்ததைக் கண்டு வந்தோம். அவை ராஜினாமா செய்தபோது அதை வரவேற்றுக் கொண்டாடும்படி அறிக்கை விடுத்தார் முஸ்லிம் லீக்கின் ஜின்னா. ராஜாஜியின் அடக்குமுறை அரசாங்கம் ஒழிந்ததில் பெரியாரின் இயக்கமும் மகிழ நிறைய காரணங்கள் இருந்தன. குறிப்பாக இந்தித் திணிப்பு. ஆகவே அந்த ஆண்டு டிசம்பரில் ஈரோட்டில் அதற்காக நடந்த கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 24.5.20

சனி, 23 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 8


May 23, 2020 • Viduthalai • மற்றவை

மூடநம்பிக்கைகளை எதிர்க்க “பகுத்தறிவு” இதழ் துவக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

பிராமணாள் காபி ஹோட்டலில் முதலாளியாய் இருந்தாலும் சூத்திரர் என்றால் வெளியிலிருந்துதான் காபி குடிக்க முடியும். அவரிடம் வேலைபார்ப்பவர் தொழிலாளி என்றாலும் பிராமணர் என்றால் உள்ளே போய் இட்லி சாப்பிடுவார். இதுதான் 1936 நவம்பர் மாதத்து நிலைமை. இங்கே இந்த இருதரப்பாரின் சுயராஜியம் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? நியாயமான கேள்விதான். முதலாளி - தொழிலாளி எனும் வர்க்கப் பிணக்கோடு இங்கே வருணப் பிணக்கும் தொடர்ந்தது. இரண்டையும் இணைத்து நடத்தும் போராட்டம் தேவையாக இருந்தது. பெரியாரைப் பொறுத்தவரை இரண்டையும் ஏக காலத்தில் நடத்த ஏதுவான காலமோ சக்தியோ இல்லை என்று நினைத்தார். அதை வெளிப் படையாகச் சொல்லவும் செய்தார். வருணப் பிணக்கிற்கே முக்கியத்துவம் கொடுத்து தனது இயக்கத்தைத் தொடர்ந்தார்.

மூடநம்பிக்கைகளை எதிர்க்க “பகுத்தறிவு”

இதே காலத்தில் - 1935 மே திங்களில் - “பகுத்தறிவு” எனும் மாத இதழைத் துவக்கினார் பெரியார். இதில் பிராமணியம் உருவாக்கியிருந்த விதவிதமான மூடநம்பிக் கைகளை எதிர்த்து விடாமல் எழுதினார். சோதிடத்தை எதிர்த்து அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது. பிராமணி யத்தை எதிர்த்துப் போராடிய பலரும் சாதிப் பிரச்சினை, மாதர் பிரச்சினை போன்றவற்றைத் தான் எடுத்துக் கொண்டார்களே தவிர சோதிடம், குறி சொல்லுவது, திதி கொடுப்பது, தீபாவளி கொண்டாடுவது போன்ற விஷயங் களை எதிர்த்துப் பேசியது, எழுதியது கிடையாது அல்லது மிக அபூர்வமாக இருக்கும். பெரியாரோ இதற்கும் சரி முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை இவரைப் போலப் பரவலாக நடத்தியவர்கள் மிகமிக அரிது.

“பகுத்தறிவு” துவங்கப்பட்ட அதே ஆண்டில் சோதிடம் பற்றிப் பெரியார் எழுதியதில் அவரது அபார மான கூர்ந்த மதி வெளிப்பட்டது. “மனிதன் செய்யுங் காரியங்கள் எல்லாம் சாதகப் பலன்படியும், சாதகப் பலன் கள் எல்லாம் விதிப்படியும் விதி எல்லாம் முன்ஜென்ம கர்மத்தின் பலன்படியும் நடப்பதாய் இருக்கையில் பாவ புண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை துர்ச் செய்கை என்கிற பெயரும் எப்படிப் பொருந்தும்? மோட்சத்திற்கும் நரகத்திற்கும் அவசியம்தான் ஏது?’’ என்று கேட்டார் பெரியார். இதுவொரு நுணுக்கமான வாதம். இவன் சாதகப்படி இவன் கொலை செய்வான் என்றும், அவன் சாதகப்படி. அவன் கொலையுண்டு போவான் என்றும் இருந்தால் இது எப்படிக் கொலைக் குற்றமாகும்? எல்லாம் சாதகப்படி நடப்பது! அந்தத் தனிமனிதனுக்குப் பங் கில்லை எல்லாம் கிரக பலன்களால் முன்கூட்டியே நிச்ச யிக்கப்பட்டது! அப்படியெனில் அவன் எப்படி பொறுப்பா வான்? அவனுக்கு ஏன் தர வேண்டும் தண்டனை? யோசித்தால் நற்செய்கை அல்லது துர்ச்செய்கை என்கிற பாகுபாடே அர்த்தமில்லாமல் போகத்தானே செய்கிறது! சோதிட நம்பிக்கை சமுதாய ஒழுங்குமுறைக் கோட்பாட் டையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது என்பதைப் பிரமாதமாகச் சுட்டிக் காட்டினார். இப்படி தர்க்கவாதத்தால் பல மூடநம்பிக்கைகளின் வெறுமைத்தனத்தை அடை யாளம் காட்டினார்.

ராஜாஜி அரசாங்க எதிர்ப்பு

1936-1937 தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். பிராமணியத்தின் ஆளுமை தொடர்ந் திருந்த காலத்தில், அதே நேரத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஓங்கியிருந்த காலத்தில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பிராமணிய எதிர்ப்பில் உறுதியில்லாத, அதே நேரத்தில் பிரிட்டீஷ் ஆட்சியை முழுமையாக ஆதரித்து வந்த நீதிக்கட்சி படுதோல்வி கண்டது. பிராமணிய எதிர்ப்பில் உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பை வெளிப்படுத்தாத பெரியார் ஆதரித்தும் தோல்வி கண்டது. அதன் பாடம் பிராமணிய எதிர்ப்பை யும் பிரிட்டீஷ் எதிர்ப்பையும் ஒருசேரச் செய்ய வேண்டும் என்பதுதான். இந்தப் படிப்பினையைப் பெரியார் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 1937 மத்தியில் ராஜாஜி தலை மையில் சென்னையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைந் தது வசதியாகிப் போனது. பிராமணிய எதிர்ப்பையும் அரசாங்க எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இப்போது குவிக்க முடிந்தது.

ராஜாஜி அமைச்சரவை வெளிப்படுத்திய பிராமணி யப் போக்குகளைப் பெரியார் எதிர்க்கத் துவங்கினார். எட்டு மந்திரிகள், ஒரு மேலவைத் தலைவர், ஒரு சட்டசபைத் தலைவர் என மொத்தம் இருந்த பத்து பதவி களில் பிராமணர்களுக்கு ஆறு கொடுக்கப்பட்டிருந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட் டிருந்த பள்ளிகளில் 2,200 அய் போதிய நிதி வசதி இல்லை என்று சொல்லி மூடினார் ராஜாஜி. அதே சமயம் 12 லட்ச ரூபாய் செலவில் வேதபாடசாலை ஒன்றைத் துவக் கினார். அதில் பிராமண ஆசிரியர்களுக்கு கொழுத்த சம்பளம் தரப்பட்டது. பொற்கொல்லர், கருமர் போன்ற வர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் “ஆச்சாரி” என்று சேர்த்துக் கையெழுத்துப் போட்டால் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதாவது அவர்கள் எல்லாம் ஆசாரிகளே தவிர, தம்மைப் போல ஆச்சாரிகள்-ஆச்சாரியார்கள்-அல்ல என்று கூசாமல் அறிவித்தார். இதற்கெல்லாம் உச்சமென சில பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்த பல தேசிய மொழிகளுக்கு மாற்றாக தங்களது சொந்த மொழி யாம் ஆங்கிலத்தை ஆக்கி வந்தார்கள். பிராமணிய வாதிகளோ அதற்குப் பதிலாக இந்தியைக் கொண்டுவர முடிவு செய்தார்கள். மொழி பற்றிய சாவர்க்கரின் சிந்த னையை அறிவோம். காங்கிரசும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்த மாபெரும் நாட்டிற்கு ஒற்றை மொழியைத் திணிப்பதில்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும் காங்கிரஸ் பிராமணியமும் குறியாக இருந்தன. அந்த ஒற்றைமொழி எது என்பதில்தான் வித்தியாசமே தவிர, இந்த இருபெரும் சக்திகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழி களையும் போற்றத் தயாராக இல்லை. இதிலே இந்தி என்பது சமஸ்கிருதத்திற்கு மிகவும் நெருங்கியது எனும் உண்மையும் இருந்தது.

இதுவரைப் பிரச்சார இயக்கமாக இருந்து வந்த சுயமரியாதை இயக்கம் ஒரு நேரடிப் போராட்டக்களத்தில் குதித்தது இந்தித் திணிப்பை எதிர்த்துத்தான். ராஜாஜி மந்திரி சபையானது அது அமைந்த ஒரே மாதத்தில் - 1937 ஆகஸ்டில் - தேர்ந்தெடுக்கப்பட்ட சில உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், தாய்மொழியோடு 6,7,8ஆம் வகுப்புகளில் இந்தியையும் கட்டாயப்பாடமாக்கியது. அதாவது, மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டு மொழிகள் படிக்கவே சூத்திர-பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் மூன்று மொழி என்றால் அவர்கள் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங் காமல் போய்விடக் கூடும். பிராமணர் வீட்டுப் பிள்ளை களுக்கே அது ஏகபோகமாகி விடக்கூடும். காரணம், இந்தியானது சமஸ்கிருதத்தோடு தொடர்புடையது என்பதால் அவர்களுக்கு அதில் சிரமம் அதிகமில்லை. ஆகவே இந்தியைக் கட்டாயமாக்கியதை பிராமணியத் தின் ஒரு சதிவேலையாகக் கணித்தார் பெரியார். “குடி அரசில்” இந்தித் திணிப்பை எதிர்த்து வன்மையாக எழுத ஆரம்பித்தார். இது பிராமணிய எதிர்ப்பாளர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் ஒருங்கே திரட்ட அவருக்கு உதவியது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

பல ஊர்களில் இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் நடந்தன. நீதிக்கட்சிக்காரரான கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை முதல் காங்கிரஸ்காரரான அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலை வர் நாவலர் சோமசுந்தர பாரதியார் வரை இந்த இயக் கத்தில் பங்கு கொண்டார்கள். மகத்தான தமிழறிஞரான உ.வே. சாமிநாதய்யர் இந்தித் திணிப்பை எதிர்த்தார். தமிழறிஞர் கா.சு. பிள்ளை எதிர்த்தார். பிற்காலத்தில் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்ட அண்ணா துரை, கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோர் இந்த இயக்கத் தின்போது முன்னணிக்கு வந்தார்கள். பிராமணியத்திற்கு எதிரான ஒரு விரிவான அணிவகுப்பு தமிழகத்தில் முதன் முதலாக எழுந்தது. இதற்கான அஸ்திவாரத்தை ராஜாஜி மந்திரிசபை போட்டுக் கொடுத்தது என்றால், சத்திய மூர்த்தி-கல்கி-’தினமணி’ டி.எஸ். சொக்கலிங்கம் போன் றோர் அரசாங்கத்தை ஆதரித்துத் தங்களை அம்பலப் படுத்திக் கொண்டார்கள்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 23 5 20

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 7


May 22, 2020 • Viduthalai • மற்றவை

"கீதையை நம்புகின்றவன் தீண்டாமையையும், ஜாதியையும் ஒழிக்க முடியுமா?"- பெரியார் தொடுக்கும் வினா

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

“பெண் ஏன் அடிமையானாள்?”

இந்தக் காலத்தில் - குறிப்பாக 1934இல் - நிறைய சிறு நூல்களை வெளியிட ஆரம்பித்தார் பெரியார். மாதர் விடுதலை பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரைகளின் தொகுப்பு “பெண் ஏன் அடிமையானாள்?’’ எனும் தலைப்பில் வெளிவந்தது. பெரிதும் போற்றப்பட்ட திருக் குறளிலும் ஆணாதிக்கச் சிந்தனைகள் இருந்ததை அதில் வெளிப்படுத்தினார். கர்ப்பத்தடையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இது விஷயத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரே தடுமாறிப் போயிருந்ததை நாசூக்காக எடுத்துக் காட்டினார். முத்தாய்ப்பாகப் பெண்கள் விடு தலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும் என்றார். ஆண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கருத்தியலையே தகர்க்க வேண்டும் என்றார். “பெண்களால் ஆண்மை‘ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்க ளுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந் திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ‘ஆண்மை‘க் குத்தான் உண்டென்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என்கிற வரலாற்று உண்மையை அம்பலப்படுத்திய ஆண்மகன் பெரியார்.

இந்தக் காலத்தில் சுயமரியாதை அல்லது சமூக சீர்திருத்தச் சங்கங்கள் எனப் பல ஊர்களில் உருவாயின. 1935 ஜூனில் கோபிச்செட்டிப்பாளையம் சமூகச் சீர்திருத் தச் சங்கத்தில் பெரியார் பேசிய பேச்சு முக்கியமானது. அதில் தனது சுயமரியாதை இயக்கத்தின் தனித்தன்மை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். அது - “இன்று இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் ஜாதிமத பேதத்தால் ஏற்பட்டுள்ள கொடுமை களுக்கு அஸ்திவாரமான மதங்களையும் சாஸ்திரங்களை யும் கடவுள்களையும் அழிக்கவும் ஒழிக்கவும் தைரியமாய் வேலை செய்கிறது. இதனாலேயே இது இன்று இந்தி யாவில் எவருடைய ஆதரவையும் பெற முடியாமல் தன் காலிலேயே நின்று தள்ளாடிக் கொண்டிருக்க வேண்டிய தாகின்றது.’’ இந்த இரண்டு வாக்கியங்களும் உண்மையின் இரண்டு முகங்களைக் காட்டின. பிராமணியத்தை எதிர்க்க கடவுள் - மத நிராகரிப்பை யும் கைக் கொண்டவர் பெரியார். இதுவரையில் சுயமரியாதை இயக்கம் தனித்து வமானது. ஆனால், இதனாலேயே பிராமணிய எதிர்ப்புக் கான ஒரு விரிந்த அணிவகுப்பை உருவாக்குவதில் பெரும் சிரமங்களும் ஏற்பட்டன. இதையெல்லாம் தாண் டியே அவர் போராடினார்.

கீதையை, சங்கராச்சாரியாரை விமர்சித்தார்

இதே பேச்சில் பகவத் கீதையை அவர் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். திலகர் காலத்திலிருந்து இந்த கீதையைப் பிராமணிய வாதிகள் எப்படித் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் என்பதை அறிவோம். காந்திஜியும் கூட இதைப் பயன்படுத்தினார். பெரியாரோ அந்த அடி மடியிலேயே கை வைத்தார். அது - “நாலு வருணம், சூத்திரன் என்பது கீதையிலேயே இருக்கிறதே. ‘நாலு வருணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன்’ என்று ‘பகவானே’ கீதையில் திருவாய் மலர்ந்தருளுகிறாரே’ ஆகவே, இந்து மதத்தையும் பகவத் கீதையையும் கிருஷ்ண பகவானையும் உண்மை என நம்பிக்கொண்டு இருக்கும் ஒருவன் தீண்டாமையையும் சூத்திரப் பட்டத் தையும், பாதத்தில் இருந்து உற்பத்தியான வருணத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கிறேன், இன்று காந்தியார் முதல் கொண்டு சத்தியமூர்த்தியார் ஈறாக உள்ள எந்த அரசியல்வாதியாவது இதை ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் பொப்பிலிராஜா முதல் ஏ. ராமசாமி முதலியார் ஈறாக உள்ள தலைவர்கள் இவற்றை ஒப்புக் கொள்ளு வார்களா என்று கேட்கிறேன்.”

சுயமரியாதை இயக்கம் எப்படித் தனித்துவமானது, அது ஏன் சென்னை மாகாணத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியாமல் தனித்து நின்றது என்பதை இது புரிய வைக்கிறது. ஆனால், பிராமணியத்திற்கு மிகப் பெரிய சவாலையும் இதுவே தந்தது. மற்றவர்கள் தயங்கிய வேத-இதிகாச-புராண-கீதா விமர்சனத்தை இதுவே தந்தது. அதனாலேயே இந்த இயக்கத்தவரை “சூனாமானாக்கள்’’ என்று இளிவரலோடு பேசினார்கள் பிராமணியவாதிகள். சென்னை மாகாணத் தைப் பொறுத்தவரை பிராமணியம் தனது வாழ்வில் முதன்முதலாக ஒரு வலுவான பிரச்சார இயக்கத்தைச் சந்தித்தது. குடிமைச் சமுதாயத்தில் அதற்கிருந்த சித்தாந்த பலம் கேள்விக்குறியானது.

கீதையை மட்டுமல்ல சங்கராச்சாரியாரையும் ஒரு பிடி பிடித்தார். அவரை இப்படிக் காட்டமாக விமர்சித்த வேறு எந்த வெகுமக்கள் தலைவராவது அன்று இருந்திருக்க மாட்டார் எனலாம். சங்கராச்சாரியார் பற்றி அப்படியொரு புனித பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இதே ஆண்டு ஜூலையில் “குடி அரசு” எழுதிய தலையங்கம் இது - “சங்கராச்சாரியார் என்னும் ஒரு பார்ப்பனர் ‘பார்ப்பன னுக்கும் பறையனுக்கும் பிறவியிலேயே சரீரத்தில் ரத்த பேதம் இருக்கிறது’ என்றும், ‘பறையன் ரத்தத்தையும் பார்ப்பனன் ரத்தத்தையும் வேறு வேறாய் பரீட்சித்துப் பார்த்தால் பறை ரத்தம் இன்னது என்றும், பார்ப்பனன் ரத்தம் இன்னது என்றும் தெரிவித்து விடலாம்‘ என்றும் அபிப்பிராயம் கொடுத்தார். இதைப் பற்றி எந்தக் காங் கிரஸ் பார்ப்பனராவது - தீண்டாமை விலக்குக் கமிட் டிக்குத் தலைவராய் இருந்து தீண்டாமைக் கமிட்டி நிதியை சுவாஹா- செய்கின்ற பார்ப்பனனாவது - ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை கழுதையோ குதிரையோ யாராய் இருந்தாலும், சங்கராச்சாரியார் வாயிலிருந்து வந்தது என்று சொன்னால் அது மதிக்கத்தக்க வார்த்தை யாகத்தானே மக்கள் நினைத்திருக்கிறார்கள்.”

இதுதான் அன்றிருந்த நிலைமை. இப்படி சங்கராச்சாரி யார்கள் போன்ற வைதீகத் தலைவர்களைக் கொண்டு - “நடமாடும் தெய்வங்கள்” எனச் சொல்லப்பட்டவர்களைக் கொண்டு - பிராமணியம் தனக்கான கருத்துருவாக்கத்தைக் கட்டியமைத்து வந்தது. இதை எதிர்கொண்டு தகர்க்கிற வேலையைப் பெரியார் செய்தார். சரியாகச் சொல்வ தென்றால் தென்னிந்தியாவில் அவரது இயக்கம் மட்டுமே செய்தது.

திகைக்க வைக்கும் செய்திகள்

இந்தக் காலத்தில் பெரியார் பேசிய பேச்சுக்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து இந்தக் காலத் தலைமுறையினருக்கு அதிர்ச்சிதரத்தக்க சில செய்திகள் கிடைக்கின் றன. “எந்தக் காங்கிரஸ் கூட்டத்திலாவது பிராமணர்கள் வேறு மற்றவர்கள் வேறு என்கிற பிரிவு இல்லாமல் உட் கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்களா? சமீபத்தில் நடந்த காங் கிரஸ் கூட்டங்களில்கூட பார்ப்பனரல்லாதவர்களை வெளியில் வைத்து சாப்பாடு போடவில்லையா? காங்கி ரஸ் கான்பரன்ஸ் முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப் பனர்களைக் கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார் களே ஒழிய மற்ற ஜாதிக்காரர்களைச் சமையல் வீட்டில் நுழைய விட்டிருக்கிறார்களா?’’ - இப்படி அவர் கேட்டது 1936 ஜனவரியில் சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில். 1936 பிறந்த பிறகும் கூட “இந்திய தேசிய காங்கிரஸ்’ எனப்பட்டதன் மாநாடுகளிலேயே சமபந்தி போஜனம் இல்லையென்றால் சமுதாயம் எவ்வளவு கேவலமாக இருந்தது, பிராமணியம் எவ்வளவு வலுவாக இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இந்தக் காங்கிரசிடம் அரசியல் அதிகாரம் போனால் பிராமணரல் லாதாரின் நிலைமை இன்னும் மோசமாகப் போகாதா எனும் கேள்வி பெரியார் போன்றவர்களின் நெஞ்சில் எழுந்திருந்தால் அதில் ஆச்சரியம் என்ன?

மற்றொரு திகைக்க வைக்கும் செய்தி - “நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவண்டை போய் வெளியே நின்று கொண்டு ‘சாமி! சாமி!’ என்று கையை ஏந்திக் கொண்டு ஆருத்ரா தரிசனத் தில் விபூதி வாங்குவது போல் கத்துகிறான்! இந்த முதலா ளியின் ஆளாக இருக்கக் கூடிய மோட்டார் ட்ரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு ராஜா மாதிரி வெளியே போகிறான் எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது? எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப் படுவது? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா? ஆகவே பார்ப்பன சுயராஜ்யமும் நம் சுயராஜ்யமும் ஒன்றாய் இருக்க முடியுமா?’’

(தொடரும்)

- விடுதலை நாளேடு 22 5 20

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 6


May 21, 2020 • Viduthalai • மற்றவை

சுயமரியாதை இயக்க சமதர்ம கட்சியாரின் உத்தேச திட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாகாண மாநாடு விருதுநகரில் 1931 ஆகஸ்டில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட கீழ்வரும் தீர்மானங்கள் புது மையானவை - “(1) எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டும். மதம் வழியும் வரை சகோதரத்துவம் வளராது (2) வருணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் எந்த இயக் கத்தையும் இம்மாநாடு எதிர்க்கிறது. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் பிராமணியம் ஒழிய வேண்டும். (3) கலப்பு மணங்கள் பெருகிட வேண்டும். (4) தேசியத்தின் பெயரால் ஹிந்தி பாஷையைக் கற்றாக வேண்டும் என்பது வருணாசிரமத்திற்கு ஆதரவு கொடுப்பதாய் இருப்பதால் ஹிந்திக் கொள்கையைக் கண்டிக்கிறது.”

மத எதிர்ப்பு தீவிரமானதை முதல் தீர்மானம் உணர்த் துகிறது. கலப்புத் திருமணத்திற்குப் பெரும் ஊக்கம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு அப்போதே கால்கோள்விழா எடுக்கப் பட்டது. இந்த மாநாட்டை ஒட்டியும் பெண்கள் மாநாடு தனியாக நடந்தேறியது. அதில் “பெண்களை போலிஸ் இலாகாவிலும் இராணுவத்திலும் எடுக்க வேண்டும்“ எனும் படு தீவிரமான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இளைஞர்கள் மாநாடும் அவ்வமயம் நடத்தப் பட்டது. அதில் “சமதர்ம தத்துவமும் பொதுவுடமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது லட்சியமாய் இருக்கின்றபடியால் விதி, கடவுள் செயல் போன்ற உணர்ச்சிகள் மக்களை மனதிலிருந்து ஒழிக்கப் பட வேண்டும்“ எனும் பரபரப்பான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. அந்தக் காலத்தில் சமதர்மம் - பொது வுடமை என்று பேசுவது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஆகாத விஷயம். அதை கடவுள் மற்றும் விதி மறுப்புக் கோட்பாட்டோடு சேர்த்து சாதுரியமாக போட்டார்கள் எனலாம். கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலருடன் பெரியார் கொண்டிருந்த நட்பு இத்தகைய சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாய் இருந்தது.

சத்தமில்லாமல் நடந்த சீர்திருத்தங்கள்

சுயமரியாதை இயக்கத்தின் இந்த மாநாட்டில் தாழ்த்தப் பட்டோர்கள் பிரச்சனைகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. “ஆதி திராவிடர் துயரம் (இராமநாத புரம் - தேவகோட்டை) சம்பந்தமாக விசாரணை கமிஷன் நியமிக்க வேண்டும்“ என்று தீர்மானித்தது மாநாடு. 1930 டிசம்பரில் தேவகோட்டையில் நடந்த “கள்ளர்கள் சாதி மாநாட்டில்” தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பள்ளர்கள் மீது கொடுமையான சமூகத் தடைகள் விதிக்கப்பட்டன. இதை எதிர்த்தே இப்படித் தீர்மானம் போடப்பட்டது.

இதன் இளைஞர் மாநாட்டிலும் “ஸ்தல ஸ்தாபனங் களின் பொதுக்குளம், பொதுப்பள்ளி, பொதுவழி முதலிய வைகளில் சுயமரியாதை உணர்ச்சியுடைய இளைஞர்கள் அடைய வேண்டிய உரிமைக்காக திருச்சி பெரம்பலூரில் தாழ்த்தப் பட்ட மக்களால் ஆரம்பிக்கப்படப் போகும் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு வேண்டிய ஆதரவு கொடுக்க வேண்டுமாய் இம்மகாநாடு கேட்டுக் கொள் கிறது” என்கிற தீர்மானமும் நிறைவேறியது. சூத்திரர்-பஞ்சமர் ஒற்றுமையை வலியுறுத்தும் மனப்பான்மை விடாது வெளிப்பட்டு வந்தது.

சுயமரியாதை இயக்கம் பிறந்து ஆறாண்டுகளாகி விட்டன, மூன்று மாகாண மாநாடுகளும் நடந்து விட்டன. ஆனால் போராட்டங்கள் எதற்கும் அறைகூவல் விடவும் இல்லை, நடத்தவும் இல்லை . ஒரு பிரச்சார இயக்கமாகவே நடந்து வந்தது. எனினும், சத்தமில்லாமல் சில சமூகசீர் திருத்த செயல்கள் நடந்து வந்ததாக பெரியார் அழுத்த மாகக் கூறினார். 1931 செப்டம்பரில் அவர் எழுதியது - “ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை இயக்க எதிரிகளும் கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் பார்ப்பனரல்லாத - சைவர்களல்லாத நாடார்கள் சமையல் செய்தார்கள். ஈரோட்டில் பறையர்கள் முதல் எல்லா ஜாதியினரும் எல்லா மதக்காரரும் பரிமாறினார்கள்... எந்த அரசியல் மகாநாட்டிலும் பார்ப்பனரல்லாதார் சமையல் செய்ததோ, தீண்டா ஜாதியார் பரிமாறியதோ, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் எல்லாரும் ஒரு பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இது வரையில் நாம் அறிய நடந்ததே இல்லை. மற்றும் பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக தங்களைக் கருதிக் கொண்டதும் மற்றும் அவர்கள் நிர்ப்பந்தங்கள் ஒழிந்ததுமான சம்பவங்கள் இவ்வியக்கத்தின் பயனாய் காணப்பட்டது போல் வேறு எதிலாவது காணப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.”

காங்கிரஸ் மாநாட்டில் இல்லாத சமபந்தி போஜனத்தை தங்கள் மாநாடு சர்வசாதாரணமாக நடத்திக் காட்டியதாகப் பெரியார் கூறினார். பெண்களுக்கு ஏற்பட்ட சமத்துவ உணர்ச்சியைக் குறிப்பிட்டார். காங்கிரஸ் நடத்திய சத்தியாக் கிரகப் போராட்டங்களைவிட இவை முக்கியம் என்றார். இந்தத் தலையங்கத்திற்குத் தலைப்பே “சத்தியாக் கிரகம்“ என்பது.

1931 டிசம்பரில் பெரியார் மேலை நாடுகளுக்குப் பயணமானார். 1932 பிப்ரவரி - மே மாதங்களில் சோவியத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் சென்றார். இங்கிலாந்தில் கம்யூ னிஸ்டு தலைவர் சக்லத்வாலாவைக் கண்டு பேசினார். அப்படியெனில் கம்யூனிஸ்டு சிங்காரவேலரின் உதவி இந்தப் பயணங்களுக்கு இருந்திருக்க வேண்டும். பின்னர் இலங்கை வழியாக 1932 நவம்பரில் ஈரோடு வந்து சேர்ந்தார்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பெரியார் இந்தியாவில் இல்லை. இந்தக் காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி முறையை எதிர்த்து காந்திஜி உண்ணா விரதம் இருந்தார். “குடி அரசு” ஏடு “காந்தியின் வைதீக வெறி” எனச் சாடி தலையங்கம் எழுதியது. “தீண்டாதாருக் குத் தனித் தொகுதி கிடைத்துவிட்டால் அவர்களுக்காகத் தேர்ந்தெடுக் கப்படும் பிரதிநிதிகள் வேறு எந்த உயர்ந்த வகுப்பாருடைய தயவையும் எதிர்பாராமல் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உண் மையாகவும் தைரியமாகவும் போராடலாம்“ என்று கூறியது. அதுமட்டுமல்ல, காந்திஜியின் உண்ணாவிரதத் தைக் கண்டித்தும் அம்பேத்கருக்கு ஆதரவாக வும் சுயமரியாதை இயக்கம் பெரியதொரு பொதுக்கூட்டத்தை ஈரோட்டில் நடத்தியது. முடிவில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டதை அறிவோம். அது தொடர்பாக அம்பேத்கர் விடுத்த அறிக்கையை “அம்பேத்கரின் வெற்றி” என்ற தலைப்பில் “குடி. அரசு” வெளியிட்டது.

சுயமரியாதைச் சமதர்மக்கட்சித் திட்டம்

சோவியத் நாடு சென்று வந்த பெரியார் பொதுவுட மைச் சிந்தனையின்பால் மேலும் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸ்டு சிங்காரவேலர் கொடுத்திருந்த “சுயமரியாதை இயக்க சமதர்ம கட்சியாரின் உத்தேச திட்டம்” என்பதை 1932 டிசம்பரில் “குடி அரசில்” வெளியிட்டார். அது பற்றி விவாதிக்க ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணிச் செயல்வீரர்கள் சுமார் முந்நூறு பேர் கூடினார்கள். அந்த விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ள “சுய மரியாதை இயக்க லட்சியமும் சுயமரியாதை சமதர்மக்கட்சி வேலைத் திட்டமும்‘‘ ப்பட்டது 1933 ஜனவரியில் “குடி அரசில்” வெளியிடப்பட்டது. இதுவே “ஈரோடு திட்டம்” என்று பிரபலமானது.

இதைப் படித்துப் பார்த்தால், அதன் லட்சியமானது அன்றைய காலத்திற்குப் பொருந்தாத அதிதீவிரப் போக் குடையதாக இருந்தது புரிபடுகிறது. “எல்லா தொழிற் சாலைகளையும் பொது மக்களுக்கு உரிமை ஆக்குவது” போன்ற சோசலிச திட்டமெல்லாம் அதில் இருந்தது. அப்படியே “எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்க ளையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமை ஆக்குவது” என்றெல்லாம் இருந்தது. ஆனால், கட்சி வேலைத் திட்டமானது காரி யார்த்தமான தாகவும் காலத்திற்கேற்றதாகவும் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிற திட்டமே இது. குடிமைச் சமூகத்தில் தீவிரமாக இயங்குவது எனும் பெரியாரின் தாகத்திற்கு இது நேர்விரோதமானது. சோவியத் பயணத் திற்குப் பிறகு எழுந்த உணர்ச்சியிலும் உத்வேகத்திலும் தனது பழைய நிலைபாட்டிலிருந்து அவர் மாறியிருந்தார். இதுவொரு உள் முரண்பாடு என்றால், இது தெரிவித்த லட்சிய சமுதாயம் சுயமரியாதை இயக்கத்திலிருந்த நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு சிறிதும் உடன்பாடான விஷயம் அல்ல. ஆகவே அவர்கள் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள். எனினும் தனது பத்திரிகைகளில் பொதுவுடமைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார் பெரியார்.

“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காகப் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார் அந்த ஆண்டு இறுதியில். 1934 மே மாதத்தில்தான் அவர் விடுதலையானார். இப்படிச் சிறையில் இருந்த காலத்தில் ராஜாஜியைச் சந்திக்க நேர்ந்தது. பெரியாரைக் காங்கிரசில் மீண்டும் ஈர்க்க ஒரு முயற்சி செய்தார் அவர். அதற்குப் பெரியார் தன் தரப்பில் கடவுள் - மத எதிர்ப்பு விஷயங்களை தனது தனிப்பட்ட கொள்கையாக வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டவர், காங்கிரஸ் தரப்பில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். காங்கிரசின் பிராமணியவாதிகள் இதை ஒப்புக் கொள்ளாத தால் அந்த முயற்சி அப்போதே செத்துப் போனது பிராம ணிய எதிர்ப்பிலும் சமூக நீதியிலும் பெரி.... உறுதியாக இருந்ததை இது காட்டுகிறது. இந்தக் கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தடை செய்திருந்தார்கள். இது நடந்தது அந்த ஆண்டு ஜூலை யில்.

இப்போது பெரியாருக்கு ஓர் இக்கட்டான நிலைமை வந்தது. தொடர்ந்து கம்யூனிசப் பாதையில் சென்றால் அவரது சுயமரியாதை இயக்கமும் தடை செய்யப்படக் கூடிய ஆபத்து இருந்தது. பரவாயில்லை என்று அந்தப் பாதையில் செல்வதா அல்லது பிராமணிய எதிர்ப்போடு நிறுத்திக் கொள்வதா என்பதே அது. அவர் பின்னதைத் தேர்வு செய்தார். இதற்காக நீதிக் கட்சியை அணுகினார். அவர்களோ இவரது செயல்திட்டத்தை வெட்டிக் குறுக்கியே ஏற்றுக் கொண்டார்கள். இப்போது பெரியார் தனது பழைய நிலைக்குத் திரும்பி விட்டார். அதாவது சுயமரியாதை இயக்கம் எனும் சமூக சீர்திருத்த இயக் கத்தை நடத்திக் கொண்டே அரசியலைப் பொறுத்தவரை நீதிக் கட்சியை ஆதரிக்கிற அந்தப் பழைய நிலை.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 21 5 20 

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 5


May 20, 2020 • Viduthalai • மற்றவை

பெண்கள் சொத்துரிமைப் பற்றி செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

 

அப்போதே மாதர் விடுதலைக்காக.....

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டி லேயே மாதர் விடுதலைக்கான தீர்மானங்களையும் நிறைவேற்றச் செய்தார் பெரியார். வருணாசிரம எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு எனும் சமூக சீர்திருத்தத்தின் இரு பிரதான கூறுகளும் தொடக்கத்திலிருந்தே அவரது சுயமரியாதை இயக்கத்தில் இடம் பெற்றன. “பெண்களின் கல்யாண வயது பதினாறுக்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி - புருஷன் இருவரில் ஒருவருக் கொருவர் ஒத்துவாழ இஷ்டமில்லாதபோது தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்றும், விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும் பெண்களும் ஜாதிமத பேதமின்றி தங்கள் தங்கள் மனைவி புருஷர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்« கற்றவாறு கல்யாணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டும் என்றும்“ அந்த மாநாடு தீர்மானம் போட்டது. விதவா விவாகம் பற்றிப் பேசினால் இந்து மகாசபை மாநாட்டிற்கே வரமாட்டேன் எனச் சொன்ன மதன்மோகன் மாளவியா இருந்த காலத்தில் இப்படித் தீர்மானங்கள். சம்மத வயதுச் சட்டத்தை பத்திலிருந்து பனிரெண்டாக உயர்த்தியதற் காகப் பெரும் ரகளை செய்த திலகர் பெருமான் சிறிது காலத்திற்கு முன்புதான் காலமாயிருந்தார். அதற்குள் அந்தப் பிராமணியச் சிந்தனை களைக் காலாவதியாக்கு வேன் எனப் புறப் பட்டார் பெரியார்.

இதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் பெண்களின் திருமண வயது பற்றியது. டில்லி மத்திய சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சாரதா மசோதா வானது அந்த வயதை பதினாலு என ஆக்கச் சொன்னது. அதற்கே வைதீகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ் நாட்டிலிருந்து அங்கே சென்றிருந்த எம்.கே. ஆச்சாரியார் என்கிற புண்ணியவாளர் “பால்ய விவாகம் இல்லா விட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை” என்று பேசினார். இதே போன்றதொரு சட்டம் சென்னை மாகாண சட்டசபையில் முன் மொழியப்பட்டபோது நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ.பி. பாத்ரோ எதிர்த்தார். இந்த இருவரையும் தாக்கி 1928இல் “குடி அரசில்” எழுதினார் பெரியார். பெண் விடுதலைக்கு இடையூறாக எவர் வந்தாலும் - அவர் காங்கிரஸ் சனாத னியோ அல்லது நீதிக்கட்சி பிரமுகரோ - அவர்களைக் கண்டனம் செய்யாமல் விட்ட தில்லை பெரியார். இந்தச் சூழலில்தான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என அவர்கள் பதினாலை எதிர்த்தால் இவர் பதினாறு என்று முன்மொழிந்தார்.

இந்தியாவின் பிறபகுதிகளைப் போல சென்னை மாகாணத்திலும் தேவதாசிமுறை என்ற சட்டப்பூர்வமான, சமய அங்கீகாரம் பெற்ற விபச்சாரப் பழக்கம் இருந்தது. இதை ஒழித்துக்கட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் மசோதா ஒன்றைக் கொண்டு வந்ததை அறிவோம். இதற்கு காந்திஜியின் ஆதரவு இருந்ததையும் கண்டு வந்தோம். ஆனால் சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்களாகிய சத்தியமூர்த்தி அய்யரும், முத்துரங்க முதலியாரும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார் கள். பிராமணியத்தின் ஆணாதிக்கச் சிந்தனை இவர் களை ஆட்டிப் படைத்தது. ஆனால், பெரியாரோ இந்த மசோதாவை உற்சாகமாக வரவேற்றார். அப்போது ஆட் சியிலிருந்த நீதிக்கட்சி இந்த மசோதாவை பெரியாருக்கு அனுப்பி அவரின் கருத்தைக் கேட்டது.

இது தொடர்பாக 1930இல் பெரியார் எழுதினார். அதில் இது விஷயமாக முத்துலெட்சுமி ரெட்டியார் வெளியிட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தின் சுருக்கத்தைத் தந்தார். இதற்கான போராட்டம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறு கிறது என்பதை விளக்கினார். அப்படியும் இந்த மசோதாவை நிறைவேற்றவிடவில்லை ஆணாதிக்கவாதிகள். பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்று விஷயத்தை ஒத்தி வைத்தார்கள். இப்படி “அபிப்பிராயம் கேட்பது கோமாளிக் தனம் என்பதே நமது அபிப்பிராயம்“ என்று பளிச்சென்று சொல்லவும் செய்தார். என்ன காரணம்? தொடர்ந்து எழுதினார் - “ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளு டைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரின அரசாங்க மாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம், கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்து வர ஒரு கண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காது என்று சொல்லுவோம்.”

முதன்முதலாக “மாதர் மாநாடு”

இப்படி எழுதியது மட்டுமல்லாது அப்போது ஈரோட் டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் “மாதர் மாநாடு” என்று தனியாக நடத்தி அதில் கீழ்வரும் தீர்மானங்களையும் நிறைவேற்றச் செய்தார் - “(1) சிறு வயதுப் பெண் குழந்தைகளைத் தேவடியாள் களாகத் தயாரித்து பொதுவில் ஆடவும் பாடவும் விட்டுப் பொருள் சம்பாதிப்பதற்காகத் தயாரிக்கும் வழக்கத்தை இம்மாநாடு கண்டிப்பதோடு இந்திய சட்டசபையில் திரு. ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக்கட்டும் வழக் கம் (தேவதாசி முறை) மறுப்பு மசோதாவையும், சென்னை சட்டசபையில் இருக்கும் டாக்டர் முத்துலெட்சுமி அவர் களின் மசோதா வையும் முழுமனதாய் ஆதரித்து அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. (2) கடவுளின் பேரால் பொட்டுக்கட்டியுள்ள தேவதாசி சகோதரிகள் தங்கள் பொட்டை அறுத்தெறிந்து விட்டு மனதிற்கிசைந்த ஒரு கணவனை மணந்து கொள்ள வேணுமாய் இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

அந்த இரண்டாவது தீர்மானம் அபாரம். இப்படி வேறு எந்த இயக்கமாவது அந்த 1930இல் தீர்மானம் போட்டிருக் குமா என்பது சந்தேகமே. தமிழ்நாட்டில் பெண்களுக்காகக் கூட்டப்பட்ட முதல் மாநாடும் அதுவாகவே இருக்கக் கூடும்.

இதே ஆண்டு “குடி அரசில்” அவர் எழுதிய ஒரு துணைத் தலையங்கம் குறிப்பிடத்தக்கது. செங்கற்பட்டு மாநாட்டிலேயே பெண்களுக்குச் “சமமாகச் சொத்துரிமை களும் வாரிசு பாத்தியதைகளும்“ கொடுக்கப்பட வேண் டும் என்று தீர்மானம் போட்டவர் பெரியார். உபன்யாசகர் நாராயண குரூப் மற்றும் மாஜி அட்வகேட் ஜெனரல் டி.ஆர். வெங்கிட்ராம சாஸ்திரியார் ஆகியோர் பெண் களுக்குச் சொத்துரிமை தருவதை வரவேற்றிருந்தார்கள். இது கண்டு பூரிப்போடு அவர்களை அந்தத் தலையங் கத்தில் பாராட்டியிருந்தார். மாதர் விடுதலைக்கு ஆதர வான கருத்து யாரிடமிருந்து வந்தாலும் அதைப் பெரியார் வரவேற்கத் தயங்கியதில்லை என்பது புலனாகிறது.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வேர் பிடிக்கத் துவங்கி விட்டதை முகர்ந்துவிட்ட பிராமணியவாதிகள் அவரை வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தார்கள். இதே 1930இல் சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்தப் பகுதி சத்தானது - “உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி, எங்கள் அபிப்பிராயங் களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சஹாயஞ் செய்து அநுக்கிரகிக்க வேண்டு மென்று தேவதா பிரேரணை உண்டாக்கியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும் இந்த சமஸ் தானத்திற்கு வந்து ஸ்ரீசாரதா சந்திர மௌளீதர சுவாமிகள் பிரசாத அநுக்ரகம் பெற்று, இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள்.’’

சங்கர மடங்களும் சங்கராச்சாரியார்களும் எதற்கு உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை இது புரிய வைக் கிறது. பிரம்ம சமாஜத் தலைவர்களை ராமகிருஷ்ணர் வளைத்துப் போட்டு அந்த இயக்கத்தை சிதைத்ததை அறிவோம். அதே வேலையைத்தான் சிருங்கேரி மடாதி பதி செய்யத் துடித்தார். பெரியாரோ இந்தக் கடிதத்தைத் தனது பத்திரிகையில் அப்படியே வெளியிட்டு, நண்பர் களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய இருப்பதாக ஒரு குறிப்பும் எழுதினார். அவரைப் போய்ச் சந்திப்பது வீண் வேலை என்று நண்பர்கள் பலரும் கூறவும் பெரியார் அவ்விடம் செல்லவில்லை. சங்கராச்சாரி யாரின் முயற்சி பலிக்கவில்லை.

சுயமரியாதைத் திருமணம்

பிராமணிய எதிர்ப்பின் ஒரு வடிவமாக சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன. ஆரம்பத்தில் சாதி வித்தியாசம் பாராட்டாத திருமணங்கள் என்பதைவிட பிராமண புரோகிதர்களை அழைத்து நடத்தாத திருமணங்கள் என்பதற்கே அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் திருமணங்களிலிருந்த பிராமணியத் தன்மைக்கும், சமஸ்கிருத மந்திரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கப்பட்டது. 1930களில் பிராமணியச் சடங்குகள் மட்டுமல்ல தாலிகூட இல்லாத திருமணங்கள் நடக்கத் துவங்கின. விருதுநகரில் மாணிக்கவாசகம் நாடாருக்கும், நாகரத்தினம்மாளுக்கும் இத்தகைய திருமணம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக நடந்த முழுமையான சுயமரியாதைத் திருமணம் என்று பெரியார் இதை அழைத்தார்.

வெவ்வேறு விதமான மீறல்களுடன் திருமணங்கள் நடந்தன. நாயுடு வகுப்பைச் சேர்ந்த நீலாவதிக்கும், நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ராமசுப் பிரமணியத்திற்கும் திருமணம் நடந்தது. செட்டியார் சமூகத்திலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு. அவர்களது பத்திரிகையாகிய “சிவ நேசன்” இதைக் கண்டித்து எழுதியது.

பெரியாரின் வாழ்க்கை வரலாறை எழுதிய சாமி சிதம்பரனார் ஒரு விதவையான சிவகாமியை மணந்தார். பொன்னம்பலத்தை மணந்த சுலோசனாவின் முடிவு வித்தியாசமானது. சுலோசனா ஏற்கெனவே திருமணமான பெண்மணி. தனது முதல் கணவரிடமிருந்து விடுதலை பெற்றும், அவரது அனுமதியோடும் இந்த இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். 1931 மே மாதக் “குடி அரசு” இந்தச் செய்தியை உற்சாகத்தோடு வெளியிட்டது. சில ஜமீந்தார்களும் வியாபாரிகளும்கூட சுய மரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். 1932 ஜூலை “குடி அரசில்” வந்த ஒரு செய்தியின்படி சிங்கவனம் ஜமீந்தார் ஒரு தேவதாசி குடும்பத்துப் பெண்ணை மணந்தார்.

கட்டுப்பெட்டியாய் இருந்த தமிழ்ச் சமுதாயத்தில் இவையெல்லாம் தீர்மானமான கலகங்கள். “தேசபந்து” எனும் பத்திரிகை அந்நாளில் இந்தத் திருமணங்களைக் கடுமையாக எதிர்த்தது. நாட்டில் விபச்சாரத்தை வளர்ப்ப தாக அது மிகவும் வருத்தப்பட்டது. இதிலிருந்து எத்த கைய எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள் ளலாம். இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுயமரியா தைத் திருமணங்களை ஊக்கப்படுத்தி வந்தார் பெரியார்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு 20.5. 20

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 4


May 19, 2020 • Viduthalai • மற்றவை

"மனுதர்மத்தை அறிந்த பார்ப்பனரல்லாத ஓர் இந்து பார்ப்பனர்களை

சகோதரர்களே என்று அழைக்க முடியுமா?" -  தந்தை பெரியார்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.

அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!

நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

மத-சாஸ்திர விமர்சனம்

“தனித் தமிழ்க் கட்டுரைகள்” என்று ஓர் அம்மையார் நூல் எழுதியிருந்தார். அதை அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பு வெளியிட்ட பெரியார் அதை இப்படி முடித்திருந் தார் - “இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள் அநுக்கிரகம், இச்சகோதரிக்குக் கிடைக்குமாக.” இது 1926 ஜனவரியில் பெரியார் எழுதியது. வழமையான, சாதாரணமான கடவுள் நம்பிக்கை அப்போதிருந்தது. அந்த ஆண்டு மே மாதத்திலேயே இதிலொரு முக்கிய மாறுதல் ஏற்பட்டது. ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர் அங்கே இப்படிப் பேசினார் - “மதத் திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற் கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நகரத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது. பெரியவர்கள் கோவிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டு அர்த்தமில்லாமல் வழங்கப் படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் கடவுள் தொண்டு; அம்மக்களின் விடு தலைதான் மோட்சம்; அச் ஜீவன்களிடம் கருணை காட்டு வதும் அவைகள் வேதனைப் படாமலிருப்பதும்தான் அஹிம்சை.”

ஒரு புதிய சிந்தனை இந்தக் கட்டத்தில் பெரியாருக்குள் மலர்ந்தது. வழமையான கடவுள் சிந்தனை விடைபெற்றுக் கொண்டது. “அன்பே சிவம்“, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’’ எனும் மனித சேவையையும் கடவுள் நம்பிக்கை யையும் இணைக்கிற ஒரு மனிதநேயக் கோட்பாடு வந்தது. சக மனிதர்களின் துன்பம் போக்கப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்தார். இந்தத் துணிவு சமுகநீதிப் போராட்டத்தில் அவரை மேலும் நிலைநிறுத் தியது..

தர்மசாஸ்திரங்கள் பற்றிய விமர்சன பார்வையையும் இந்தக் கண்ணோட்டம் தந்தது. அவை கடவுளின் படைப் புகள் எனும் மாய்மாலம் காற்றாய்ப் பறந்தது. அவை மனி தனின் தயாரிப்புகள் என்பது உறுதியானது. அப்படி யெனில் அவை சக மனிதர்களுக்குச் சகாயமானதா அல்லது ஒடுக்கி வைப்பதா எனும் ஆராய்ச்சி மனப் பான்மை எழுந்தது. இதே மே மாதத்தில் இப்படி எழுதி னார் - “சுயமரியாதை உள்ள ஒரு இந்து பிராமணரல்லாத வன் மனுதர்ம சாஸ்திரத்தைப் படித்துப் பார்த்தால் பிராமணர்களை சகோதரர்கள் என்று சொல்ல மனம் வருமா? சூத்திரன் என்பவன் பிராமணனின் வைப்பாட்டி மகன்; பிராமணனுக்கு வேலை செய்யவே பிறந்தவன்; அவன் சொத்து வைத்திருக்க உரிமையில்லை; உரிமை மீறி வைத்திருந்தாலும் பிராமணர்கள் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம்; பிராமணரல்லாத இந்துக்கள் எல்லாம் சூத்திரர்கள்; சூத்திரஸ்திரீகள் பிராமணர்களுக்கு உரியவர்கள்; பிராமண ஸ்திரீகளை சூத்திரர்கள் மனதில் நினைத்தாலே அவனது உயிர்நிலையை அறுத்துவிட வேண்டும் என இம்மாதிரி இன்னும் பலவாறாக எழுதி வைத் திருப்பதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமாய் இருக்கிறது.”

பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கமானது வகுப்பு வாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை, தீண்டாமை ஒழிப்பு எனும் காரியார்த்தமான செயல்பாடுகளை மட்டுமல்லாது, மதசாஸ்திர விமர்சனம் என்று பிராமணியத்தை சித்தாந்த ரீதியாக அம்பலப்படுத்துவது என்பதையும் கொண்டிருந் தது. அதற்கான துவக்கம் அதன் ஆரம்ப காலத்திலேயே இப்படியாக எழுந்தது. பிறகு என்ன? வண்டி இதே தடத்திலேயே படுவேகமாகச் சென்றது. அவ்வப்போது சற்றே தயங்கி நின்றாலும், பாதை மாறவில்லை.

1927 ஜூலையில் “சமூகத் தொண்டும் அரசியல் தொண்டும்“ எனும் தலைப்பில் அவர் எழுதியது குடி மைச் சமுதாயத்தில் தீவிரமாக இயங்கவே அவர் ஆசைப் பட்டார் என்பதைப் புரிய வைக்கிறது. அரசியல் மீது அவருக்கு வெறுப்பு வந்திருந்தது. காங்கிரஸ், நீதிக்கட்சி இரண்டின் மீது ஓர் உள்ளார்ந்த வெறுப்பு உருவாகியிருந்தது. “அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம்... அதை விட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும், அடிக்கடி சறுக்கி அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாசதோஷமே அல்லாமல் வேறல்ல” - என எழுதியது இதைத் தெளிவாக உணர்த்துகிறது. அரசியல் தளமா, சமூகத் தளமா எனும் கேள்வி இது முதற்கொண்டு பெரியாரின் நெஞ்சில் விடாமல் எழுந்து வந்தது. பின்னர் ஒரு பெரும் பிளவிற்கு அது வழி வகுத்தது. அது பிந்தைய கால வரலாறு.

சுயமரியாதை இயக்கத்தின்

முதல் மாநாடு

இப்போதைக்கு அவர் இரண்டிலுமாகவே செயல் பட்டார். காங்கிரசை ஆதரிக்கிற பேச்சுக்கே அன்று இடமில்லை. ஆகவே நீதிக்கட்சியிடம் அனுதாபமாக இருந்தார். ஆனால் அதில் போய்ச் சேரவில்லை. மாறாக சுயமரியாதை இயக்கம் என்று தனித்த சமூக இயக்கத்தைத் துவக்கினார். 1926 நவம்பரில் இப்படிப் பேசினார் - “சென்ற வருஷம் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாகப் பலமுறை பேசியும் எழுதியம் வந்திருக்கிறேன்.” இப்படி ஒரு தனி இயக்கம் கண்டார். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அதன் ஆரம்ப கட்டத்திலேயே அந்த மூன்று தன்மை களையும் கொண்டு சுயமரியாதை இயக்கம் புறப்பட்டது. அதன் முதல் மாகாண மாநாடு செங்கற்பட்டில் 1929 பிப்ர வரியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல புதுமையான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றில் முக்கியமானவை இவை - “(1) இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக்கொள்ளப்பட வேண் டும் என்ற கொள்கையை வற்புறுத்துகிறது. (2) மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை எல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக்கூடாது என்றும், வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவு களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லாப் பொது ரஸ் தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங் கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங் களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது.’’

நாம் குறிப்பிட்ட அந்த மூன்று கூறுகளும் இந்த இரண்டு தீர்மானங்களில் அழுத்தமாக வெளிப்பட்டிருப் பதைக் காணலாம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அகில இந்திய அளவில் கேட்டது மாநாடு. தீண்டாமையை ஒழிக்கச் சொன்னது. பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரமத்தை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை நிராகரிக்கச் சொன்னது துணி வோடு.

இந்த மாநாட்டிற்குப் பிறகுதான் “குடி அரசு” ஏட்டில் இது தொடர்பான எழுத்துக்கள் அதிகம் வெளிப்படத் துவங்கின. அந்த ஆண்டு ஆகஸ்டில் எழுதப்பட்ட ஒரு தலையங்கம் இப்படி முடிந்தது - “உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவரக் குறைந்து கொண்டுதான் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவ்விதக் குருட்டு நம்பிக்கையும் மூடப் பிடிவாதமும் ஒழிந்த காலத்தில்தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.” கடவுள் மறுப்பு நிலைக்கு - அதுவும் சமத்துவத்தை நிலைநாட்ட அந்த நம்பிக்கை இடையூறாக இருப்பதால் அதை மறுக்கும் நிலைக்கு - பெரியார் வந்து கொண்டிருந்தார்.

இதேபோல பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மதத்தை நிராகரிக்கும் இடத்திற்கும் அப் போதே வந்தார். இதே ஆண்டு மே மாதத்தில் பாலக் காட்டில் பேசும் போது முழங்கினார் - “பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும், ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும்சரி - அது, கடவுளை நேரே கொண்டு வந்து காட்டி, மோட்சத்திற்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி - அதை அழிக்க வேண்டியதும், அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கி றேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாய்த் தெரிவித்துக் கொள்கிறேன்.” சாதிக்கொரு நீதியை மட்டுமல்ல பாலுக்கொரு நீதியைக் காக்கும் மதத்தை ஒழிப்பேன் எனச் சொன்னது கவனிக்கத் தக்கது. அப்படியென்றால் உலகின் எந்த மதமும் தப்பாது. எந்த மதமும் பெண்ணுக்குச் சமநீதி வழங்கியதில்லை. அத னால்தான் பெரியார் மத மறுப்பாளராக வளர்ந்தார்.

செங்கற்பட்டு மாநாடு முடிந்த கையோடு - அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் ராமாயணம் பற்றி எழு தினார். ஜைன ராமாயணம் பற்றியும், பவுத்த ராமாயணம் பற்றியும் எழுதினார். ராவணன் பக்கத்து நியாயத்தைச் சொல்லும் போக்கும், ராமன் தரப்பு அநீதியும் அடை யாளங் காட்டப்பட்டது. “தபசு செய்ததற்காகச் சம்புகன் வதைக்கப்பட்டது” பற்றிக் குறிப்பிட்டார். பள்ளிப் படிப்புக்கூட முடிக்காதவரின் அருமையான ஆராய்ச்சி மனப்பான்மை அப்போதே வெளிப்பட்டது. சமூக நீதிக்கான தாகம் அந்த ஆராய்ச்சி மனப்பான்மையை அவருக்குள் உற்பத்தி செய்திருந்தது. பெரியார் எழுதிய “இராமாயண ஆபாசம்” எனும் நூலும் இந்தக் காலத்தில் வெளியானது.

(தொடரும்)

விடுதலை நாளேடு 19 5 20

வியாழன், 21 மே, 2020

தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?


திராவிடம்
நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்றுஉண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சிலநாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தநாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளியிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்துசெய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றைஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே. கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார்.

‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக்கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவுசெய்கிறது. கடந்த 08. 07. 2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி. கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலயபிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருடனும் அந்நாளில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்களுடனும் வைத்தியநாத ஐயர் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து சாமி தரிசனம்செய்தார்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்.

இப்பொழுது மட்டுமல்ல, 23. 02. 1997 ஆம் ஆண்டு‘தினமணி’யில் “ஆலயப் பிரவேசத்தின் முன்னோடி”என்ற தலைப்பிலும் மதுரை மீனாட்சியம்மன்கோவிலில் நடந்ததுதான் முதல் கோவில் நுழைவுப்போராட்டம் என்றும், போராட்டத்தின் முன்னோடிவைத்தியநாதர் அய்யர் என்றும் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் பற்றியஉண்மைகளைத் தெரிந்தே திட்டமிட்டு மறுத்து வி. கே. ஸ்தாணுநாதனால் எழுதப்பட்ட கட்டுரைக்குமறுப்புத் தெரிவித்து உண்மையான வரலாற்றை எழுதி, கடிதமாக பெரியாரியக்கத் தோழர்கள் அனுப்பினார்கள்.

மறுப்புக் கட்டுரையை ‘தினமணி’ நாளேடு வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாசகர் கடிதம் பகுதியிலும்கூட மறுப்பை வெளியிடவில்லை. மீண்டும் ‘தினமணி’ 08. 06. 2005 இல் அதே ஸ்தாணுநாதன் எழுதிய “வரலாறு படைத்த நிகழ்ச்சி” என்ற கட்டுரையில் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிப் பற்றிய செய்தியை வெளியிட்டது. முன்பு எழுதிய கட்டுரையில் இருந்த அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரையும் அமைந்திருந்தது. இதையெல்லாம் மறுத்து பெரியாரியக்கத் தோழர்களால் 2005 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பெரியார் பாசறை வெளியீட்டின் மூலம் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நினைவாக ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்கள்.

கட்டுரையாளரின் பொய் வரலாறு ‘தினமணி’யிலிருந்து ‘தினத்தந்தி’க்கு மாறியிருக்கிறது அவ்வளவுதான். தொடர்ந்து ஒரே பொய் வரலாற்றை மாறி மாறி எழுதுகிறார். ஈழத் தமிழர் வரலாற்றை பிரசுரித்து அதை நீங்கள் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். இங்குள்ள தமிழர்களின் வரலாற்றை தவறாக உங்கள் இதழ்களில் இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01. 1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07. 02. 1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும்மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமுன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர். மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (‘கேசரி’ 71, 73 ஐசளஉhமை, 339)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில்1927இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழை வாயிலையும்கருவறையையும் கோவில் நிர்வாகிகள்பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள்சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25. 06. 1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும்12. 08. 1928இல் திருவானைக்கோவிலிலும்அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

•தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர்காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு - பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதி திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரதேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளேபெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கியதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள்இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.

இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்கமறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ. 60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர்ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்றுபாராட்டி எழுதியது.

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடுநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ. முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில்‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல்டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவுமசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939 ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
யார் இந்த வைத்தியநாத அய்யர்?

வைத்தியநாத அய்யர், திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் (1922) பெரியார் கொண்டு வந்த தீண்டப்படாதார் கோவில் நுழைவுத் தீர்மானத்தைஎதிர்த்தவர். இதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இவர் நடத்திய ஆலயப்பிரவேசம், அன்று நடக்கவிருந்த மதுரை,இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

கோவிலில் யாருக்கும் தெரியாமல், இரவு நேர கடைசிபூஜைக்குப் பிறகு, சில தாழ்த்தப்பட்டவர்களுடன் உள்ளே நுழைந்தார். இதற்கு உறுதுணையாக இருந்ததோடு கருவறையை பூட்டிவிட்டு ஓடிய பார்ப்பனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தவர், கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர். வரலாற்றுப் பிழையான கட்டுரைக்கு வரலாற்று ஆதாரங்களோடு எழுதியுள்ளேன்.

தமிழ், தமிழ்நாடு, தமிழனுக்காக பத்திரிகை நடத்துபவராகிய நீங்கள் தமிழனுடைய வரலாற்றைத் தவறாகப் பிரசுரித்ததற்காக அந்த களங்கத்தைத் துடைக்கும் வண்ணம் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கழகத் தோழர் மே.கா.கிட்டு ‘தினத்தந்தி’ ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்(தோழர் கந்தசாமி சபாபதி)
- செல்வராஜ் சாந்தா முகநூல் பதிவு

பார்ப்பானுக்கு பயந்து, முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம்

"பார்ப்பானுக்கு பயந்து, முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு, மலத்தின் மீது கால் வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது!"
என்று சொன்னாரா பெரியார்?
ஆமாம். சொன்னார்!
பி.ஜே.பி பிரமுகர் எச்.ராஜா போன்று ஒரு கருத்தை பதிவிட்டு பின்னர் அது அட்மின் வேலை என்று ஒளிந்துகொண்டவரில்லை பெரியார். இந்தக்கருத்தை வெளியிட்டபோது தார்மீகப் பொறுப்பேற்று தன் கையெழுத்துடன் வெளியிட்டார் பெரியார்.
ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று சொன்னவர் பெரியார்.
அம்பேத்கர் இஸ்லாத்திற்கு மாறாலாமா என உத்தேசித்துக் கொண்டிருந்தபோது ஒரு லட்சம் பேரோடு செல்லுங்கள். நான் பத்து, இருபதாயிரம் பேர் தருகிறேன் என்று சொன்னவர் பெரியார்.
பாக்கிஸ்தான் பிரிவினை கோரிக்கை எழுந்தபோது ஜின்னாவுக்கு ஆதரவாக இருந்தவர் பெரியார்.
இஸ்லாமியருக்கு எதிராக அப்படி அவர் எழுத வேண்டிய அளவிற்கு என்ன நடந்தது? வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்!
இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா பெரியார்?
1952 ம் ஆண்டு தமிழகத்தில் முதலமைச்சரான ராஜாஜி 'பகுதிநேரம் படிப்பு' 'பகுதி நேரம் தொழில்' என்ற புதிய நடைமுறையை புகுத்தியதோடு 6000 பள்ளிகளை இழுத்து மூடினார்.
இராஜாஜியின் இந்த திட்டத்தை பெரியார் குலக் கல்வித் திட்டம் என்று விமர்சித்து அவரது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
தோழர்களே கையில் பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அக்ரஹாரத்திற்கு நாள் குறிக்கிறேன் என்றார்.
நாகையிலிருந்து குலக்கல்வி எதிர்ப்புப்படை புறப்பட்டது. பெரியாரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத இராஜாஜி ஆட்சியை விட்டே ஓடினார்.
முதலமைச்சர் பதவியை ஏற்க தயங்கிய காமராஜரை நேரில் சந்தித்து சமுக நலன் கருதி ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினார் பெரியார்.
பெரியாரின் ஆதரவோடு 1957ல் காமராஜர் ஆட்சிக்கு வந்தார். மூடிய பள்ளிகளைத் திறந்ததோடு மேலும் கிராமப் புறங்களில் பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கும் காரணம் பெரியார்! காரியம் காமராஜர்! என பத்திரிக்கைகள் எழுதியது.
'கல்வி வள்ளல்' 'பச்சைத்தமிழர்' என காமராஜரை பலவாறு புகழ்ந்து அவர் ஆட்சிக்கு பாதுகாப்பு அரணாக விளங்கினார் பெரியார்.
அந்த காலகட்டத்தில், அரசியலில் ஈடுபட முடிவெடுத்து, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உதயமான திராவிட முன்னேற்றக் கழகம், காமராஜரை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பல்வேறு அரசியல் யுத்திகளைக் கையாண்டது.
அப்போது காமராஜருக்கு எதிராக காங்கிரஸிலிருந்து விலகிய இராஜாஜி சுதந்திராக் கட்சியை நடத்திகொண்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அண்ணா இராஜாஜியோடு மறைமுகக் கூட்டுவைத்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.
இந்த சதிவலையில் இந்திய முஸ்லீம் லீக்கும் விழுந்தது.
இதைக்கண்டு வெகுண்ட பெரியார் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான அறிக்கை விடுத்தார்.
பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. அவனது பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. முஸ்லிம்கள் துரோகம் செய்யக் காரணம் என்ன? என்று கேட்டார்.
அந்த அறிக்கையின் சில வரிகளை உருவி எடுத்துத்தான் பெரியார் இஸ்லாமியர்களுக்கே எதிரானவர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் விரிவான செய்தியினை #விமர்சனங்களுக்குஅப்பாற்பட்டவராபெரியார்?" புத்தகத்தில் அறிந்துகொள்ளலாம்.
- தளபதிராஜ், முகநூல் பக்கம், 11.5.20