திங்கள், 16 டிசம்பர், 2024

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரும், கண்ணம்மாவும்!

 


விடுதலை
பகுத்தறிவுக் களஞ்சியம்

‘1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற அய்ந்து பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமாலயப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறிச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடைவிதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் ‘‘நீங்கள் என்ன ஜாதி?’’ என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார், ‘‘எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து மற்றவர்களை அனுமதிக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.

தடையை மீறி வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணிநேரம் அதே இடத்திலேயே இருந்தனர்.
இறுதியாகப் பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். பெண்கள் என்பதற்காகத் தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம். ஆண்களை எப்படி நடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள் என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார். கிளர்ச்சியில் பங்குகொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம் இந்த கிளர்ச்சியில் முதலில் பங்குபெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்து பெண்கள் என்பது விளங்குகிறது’ (தந்தை பெரியார் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் வந்ததாக வளர்மதி தன் நூலில் இப்பகுதியை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்).

நாகம்மையார் வைக்கத்தில் இருந்தவாறு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார். பிரச்சாரங்களை நிகழ்த்தி வந்தார். சிங்கோலி, முட்டம், கொல்லம், மய்ய நாடு, நெடுங்கனா, திருவனந்தபுரம், கோட்டாறு முதலிய இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரின் பங்களிப்பினை அவர் மறைந்தபோது தனது இரங்கல் அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிட்டு இருக்கிறார். நாகம்மையாரின் படத்திறப்பு விழாவில் பேசிய திரு. வி.கல்யாணசுந்தரனார், “வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாக்கிரகப் போரிற் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார்” என்று பேசியிருக்கிறார்.

திராவிட இயக்க வேர்கள் நூலில்
க.திருநாவுக்கரசு

பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டித்து ராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கை

 



பகுத்தறிவுக் களஞ்சியம்

தற்போது திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் சத்தியாக்கிரக கைதியாக இருக்கும் இவி. ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாக்கிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன்; அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார், பெரும்பாலான நம்மைப் போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்தவேண்டியதில்லை.

உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கொண்டவர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பதவியும் அந்தஸ்தும் என்பது ஆங்கிலேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது.

கடைசியாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும்போது, வைக்கம் சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புகார் சொல்ல எதுவும் இல்லை. உண்மையில் நாகரிகமாக அவர்கள் நடத்தப்படுவதாக நான் பெருமை அடைந்தேன். ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்திற்காக இந்திய சமஸ்தானத்தில் சிறை செல்ல நேர்ந்தவர்கள் நடத்தப்பட்டமுறை நன்றாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் நேரும் அனுபவங்களுக்கு முற்றிலும் மாறானது அது. ஆனால், நாயக்கர் விஷயத்தில் ஏதோ காரணங்களுக்காக திருவாங்கூர் தவறு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதியைப் பற்றிய அறியாமை அதற்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காக அதை மன்னிக்க முடியாது.

இருக்கலாம். ஆனால், அதற்காக அதை மன்னிக்க முடியாது.

நாயக்கர் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகுந்த அமைதியுடன் அவர் அதை மதிக்கவில்லை. இந்தத் தண்டனை முற்றிலும் சட்ட விரோதமானது. வன்முறையைத் தூண்டவோ அதைப் போன்ற எதையும் செய்யாமலோ இருக்கும்போது, கீழ்ப்படியாமை மட்டுமே குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காரணமாக இருக்க முடியாது. எந்த சட்ட நடைமுறையாக இருந்தாலும் வெளியேற்ற ஆணையின் நோக்கம், குற்றவாளி தன் பாதுகாப்பில் இருக்கும்போது மட்டுமே செயற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன், நான் தவறாகவும் இருக்கலாம்.

அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும் இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாக்கிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவைகளை அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாதவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தைரியமிக்க தலைவருக்கு என் பாராட்டுக்கள்.”

– ராஜகோபாலாச்சாரியார்
– ‘தி இந்து’ – 27.8.1924

வைக்கம் போராட்டம் பற்றி காமராசர்

 


விடுதலை
பகுத்தறிவுக் களஞ்சியம்

முதலமைச்சர் காமராசர் 08.04.1961 அன்று திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்தார்.

திருச்சி நகரசபைத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி (பிள்ளை! காமராசரை வரவேற்றுப் பள்ளத் தெரு என்றிருப்பதை மாற்றி, `பெரியார் நகர் எனப் பெயரிட கவுன்சில் தீர்மானித்ததாகவும் அதைத் திறந்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காமராசர் அந்த வாயிலைத் திறந்து வைத்துப் பேசுகையில்.

”என் மதிப்பிற்குரிய பெரியார் பெயரை வைத்துள்ளீர்கள் ‘பள்ளத் தெரு’ என்ற பெயரை மாற்றிப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காண. பாடுபட்டு வருபவர் நமது ஈரோட்டுப் பெரியார்தான்! எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே! பெரியார் காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே அவர் ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்றார்.

“பெரியார் காங்கிரசிலிருந்தபோது ஜார்ஜ் ஜோசப் விருப்பப்படி கேரளத்தில் போராடினார். வைக்கம் என்னும் ஊரில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களைத் தெருவிலும் நடக்க விடாதபடி கொடுமை செய்து வந்தனர். பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார். அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான். பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது; அவர் பெரிய தலைவர். இப்போதும் அவரை எனக்குத் தெரியாது. ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன். வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தியதற்காகத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாருக்குப் பட்டத்தைச் சூட்டினார். தள்ளாத வயதிலும் ஜாதி ஒழிப்புக்கும் பாடுபட்டு, தன் வாழ்நாளிலேயே அதைக் காண வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கிறார் பெரியார்” என்று மனம் திறந்து பாராட்டினார்.

தந்தை பெரியாரின் போராட்ட பங்களிப்பு பற்றி ஆங்கிலேய அதிகாரி (வைக்கம்)

 


விடுதலை நாளேடு
பகுத்தறிவுக் களஞ்சியம்

இந்தியாவின் பொது ஆளுநருக்குச் சென்னை மாகாணத்தில் pana (Agent to the Governor-General, Madras). இ.காட்டன் எனும் அய்சிஎஸ் அதிகாரி. அவர் சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு 1924 ஏப்ரல் 21இல் எழுதிய மடலில் உள்ள வரிகள்:

‘சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கா திருந்தால் அது வெகு நாட்களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈவெ ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது’ பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்துவிட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: ‘வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடுமாற்றமுள்ளவர் கனைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றியதுடன் எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிரகத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார், பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச்சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார் ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது எனவே அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்” என்று எழுதுகிறார்.

-கு.வெ.கி.ஆசான் எழுதிய “வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்” நூலில் இருந்து

வைக்கம் வீரருக்கு விழா அதனால்தான் அவர் பெரியார்!- முரசொலி’ – 11.12.2024

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்?

‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி
வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்!

– என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு பெரியாருக்கு வைக்கத்தில் மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பி நாளை 12ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

வைக்கத்தில் ஏற்கெனவே இருந்த நினைவகமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அறிவாசான் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்அவர்களும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் என்பது 1924ஆம் ஆண்டு நடைபெற்றது. இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைமறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.

30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹுலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது காந்தியாருக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே.வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.

தந்தை பெரியார் தலைமையில்

கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தியார் கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை.

கோட்டயம் மாவட்டத்துக்குள் நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப் பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார். மே 22 ஆம் தேதி கைதான தந்தை பெரியார் ஜூன் 21இல் விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31இல் விடுதலை செய்யப்பட்டார்.

காந்தியார் வருகை

1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி காந்தியார் வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார். உயர் வகுப்பு பிரதிநிதிகளையும் சென்று சந்தித்தார். மூன்று திட்டங்களை வைத்தார். அதனை உயர் வகுப்பினர் ஏற்கவில்லை. உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது. திருவிதாங்கூர் மகாராணியின் பிரதிநிதியையும் காந்தியார் சந்தித்தார். நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் உடன் இருந்தனர். ராணியையும் சந்தித்தார் காந்தியார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.

வைக்கம் போராட்ட (1924-1925) காலத்தில் 114 நாட்கள் தந்தை பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம்74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக் கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார். வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டவர் அல்ல பெரியார்!

வெற்றிக்குக் காரணம்

1933ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் சொன்னார்:

“என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடத்துவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன்.

வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” (‘குடிஅரசு’ – 1.10.1933) என்று பேசினார் பெரியார்.
அதனால்தான் அவர் பெரியார்!

– நன்றி: ‘முரசொலி’ – 11.12.2024

‘‘அதனால்தான் அவர் பெரியார்’’ வைக்கம் வீரருக்கு விழா (2)

தந்தை பெரியார்

அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார். கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் சித்திரவதைக்கு உள்ளானதைக் கண்டு, ‘தீரரைத் தமிழ்நாடு போற்றுகிறது’ என்றும் இராஜாஜி அறிக்கை வெளியிட்டார். அவரது தியாகத்தை முதலில் பாராட்டிய இராஜாஜியே, பின்னர் கடுமையாகக் கண்டித்து அவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார். ஆனால் பெரியார் அதனை ஏற்கவில்லை. இறுதி வரை உறுதியாகப் போராடினார். முடிவில் பேச்சுவார்த்தை நடக்கும் போது பெரியாரை கழட்டி விட்டார்கள். முழுப் பெருமையும் அவருக்கு போய்விடக் கூடாது என்பதில் சிலர் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஆனாலும் வைக்கம்வெற்றி விழா கூட்டத்தை பெரியார், நாகம்மையாரை வைத்தே கேரள சீர்திருத்தவாதிகள் நடத்தினார்கள்.

அப்போது என்ன நடந்தது என்பதை இதோ பெரியாரே சொல்கிறார்…

“திருவிதாங்கூர் ராணியோடு காந்தியார் பேசினார். அப்போது ராணி, ‘நாங்கள் ரோடுகளைத் திறந்துவிட்டு விடுகிறோம். ஆனால், அதைத் திறந்து விட்டவுடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்று கேட்டுள்ளார்.

உடனே காந்தியார், அரசாங்க விடுதியில் தங்கியிருந்த என்னை வந்து சந்தித்தார். ராணி சொன்னதைச் சொல்லி ‘என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது’ என்றார். நான் சொன்னேன், “Public ரோடு திறந்து விடுவது சரி! ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று நாம் எப்படி உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் – எனது இலட்சியம் அதுதானே, கோயிலை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்; ‘இப்போதைக்கு இது மாதிரி கிளர்ச்சி எதுவும் இருக்காது. கொஞ்ச நாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும், என்று சொல்லுங்கள்’ என்று நான் சொன்னேன்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’’ – நூற்றாண்டு நிறைவு விழாவில் பதாகைகள், சுவரொட்டிகள்

 


இந்தியா


தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே! -தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை




ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா! (1924-2024)

* சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தைக் கடந்து, அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக எடுத்துச் சொல்லும்!
* வைக்கம் போராட்டத்தின் வெற்றி அதற்கொரு நற்சாட்சியமாகும்!
இந்தச் சாதனைகளுக்குக் காரணமான அனைவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் வெற்றி பெற்ற நூற்றாண்டையொட்டி, வைக்கத்தில் எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களுக்குக் காரணமாக இருந்த தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கும், முதலமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
நூறாண்டு நிறைவைக் காணும் முதல் ஜாதி – தீண்டாமை, பாராமை, நெருங்காமை போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக வெடித்த வைக்கம் ‘சத்தியா கிரகத்தினை’யொட்டி, நாளை (12.12.2024) காலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும் விழா நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய, வரலாற்றுச் சாதனையாக காலம் உள்ளவரை கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும்!
வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு அரசும் – கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் மூன்றாவது விழா – நாளை நடப்பது!

வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்திடும் வைக்கம் சத்தியாகிரக வெற்றியின் மூன்றாவது விழா இது!
1. ஓராண்டுக்கு முன் கேரள மாநிலம் வைக்கத்தில் தொடக்க விழா!
2. சென்னையில் நிறைவு விழா (சென்னை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் – தமிழ்நாட்டில், எளிய முறையில்).
3. இப்போது (12.12.2024) வைக்கத்தில் சிலை புத்தாக்கம், நினைவகம், நூலகம் திறப்பு விழாக்கள் (மீண்டும் கேரளத்தில்).
அரசியலைத் தாண்டி, அகிலம் வியக்கும் அற்புதத் திருவிழா – பெருவிழா!
1924 இல் கேரள பெருமக்களால் தொடங்கி, தந்தை பெரியார் தலைமையில் அவர்களும், தமிழ்நாடு போராளிகளான அன்னை நாகம்மையார், கண்ணம்மை யார், கோவை சி.ஏ.அய்யாமுத்து, நாகர்கோவில் டாக்டர் நம்பெருமாள் போன்றவர்கள் பங்கேற்றனர்.
(பெருந்தலைவர் காமராஜர் தனது இளவயதில் அதில் கலந்துகொள்ளச் சென்று, தனது வீட்டாரால் மீட்டு அழைத்துக் கொண்டு போகப்பட்டவர் என்பதை அவரே வெளியிட்டுள்ளார்கள்)

அடக்குமுறைகளை எதிர்த்து
ஓராண்டு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம்!
ஓராண்டு காலம் தொடர்ந்து நடைபெற்ற அந்த அறப்போராட்டத்தின் இறுதிவரை, அடக்குமுறை, துன்புறுத்தல்கள் போன்றவை ஏவப்பட்டன.
கேரளத்தில் டி.கே.மாதவன் அவர்களின் முன்னெ டுப்பினால் தொடங்கப்பட்டு, ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பலரும், ஏராளமான ‘சத்தியாகிரகிகளும்’ போராடினர்.
அண்ணல் காந்தியார் தொடக்கத்தில் இதற்கு இணக்கமாக இல்லாவிட்டாலும், வைதீக நம்பூதிரி யார்களிடம் – அவர்களது ஜாதி, தர்ம சம்பிரதாயத்தை மதித்தே கட்டடத்திற்கு வெளியே அமர்ந்தே பேசிய சமரசமும் தோற்றுப் போன பின்பு, தந்தை பெரியார் தலைமைக்குப் பின்னரே, அது வீறுகொண்ட போராட்டக் களமாகி, ஓராண்டு சளைக்காமல், பல்வேறு தடைகளைத் தாண்டி கள வெற்றிகளைப் பறித்தது!
தந்தை பெரியாரின் ஆயுளை முடிக்க எதிரிகள் நடத்திய ‘சத்ரு சங்கார யாகம்’
இடையில் தந்தை பெரியார் ஆரம்பித்ததை முடிக்க வைதீகபுரி வர்ணாசிரமவாதிகளின் ‘சத்ரு சங்கார யாகம்’ எல்லாமும் நடந்து, அது பலிக்காமல், மன்னர் மறைந்த பரிதாபம் ஏற்பட்ட பிறகு பொறுப்பேற்ற, ராணியாரின் அருமுயற்சியினால் வைக்கம் போராட்டத்திற்குப் பல கட்ட வெற்றிகளாக – தெருவில் நடக்கும் உரிமையை அம்மக்கள் பெற முடிந்தது என்பது வரலாற்றில் வைர வரிகள் ஆகும்!

இதற்கான நினைவுச் சின்னமாக முதல் கட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பி, நினைவக ஏற்பாட்டினை 30 ஆண்டுகளுக்குமுன் (31.1.1994) வைக்கத்தில், எனது (கி.வீரமணி) தலைமையில், அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அன்றைய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் தென்னவன் அவர்கள் வரவேற்க, கேரள மாநில அமைச்சர்கள் பலரும், தலைவர்களும் பங்கேற்றனர்!
நினைவகம், பெரியார் சிலை, நூலகம் என்று பொலிவுடன் நினைவுச் சின்னங்கள்!

அந்த நினைவகம் – சிலை – சிதிலமடைந்த நிலையில், இன்றைய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, இதில் தக்க முனைப்பு காட்டி – உரிய நிதி ஒதுக்கி, விரிவாக்கம் செய்து, பொலிவுடனும் அமைத்து, நாளை (12.12.2024) கேரள முதலமைச்சர் மாண்பமை திரு.பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நினைவகத்தையும், விரிவாக்கப்பட்ட நூலகத்தையும் திறப்பு விழா நடத்திடவிருக்கும் நிலையில், தந்தை பெரியாரின் திராவிடர் (தாய்) கழகத்துக்கு உரிய பெருமையும், பிரதிநிதித்துவமும் தருவது முக்கியம் என்ற பெரு நோக்கோடு, நம்மையும் (கி.வீரமணி) அழைத்து, முன்னிலை ஏற்கச் செய்துள்ளதைப் பாராட்டி, நன்றி செலுத்த வார்த்தைகளே இல்லை.

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி!
‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு” என்றாரே நம் அறிவாசான் தந்தை பெரியார். அதனை நாம், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல, கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில், கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.
இது ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் வெற்றி – நன்றிக்குரிய சின்னங்களின் திறப்பு விழா என்று கருதி, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் சுருக்கிவிடக் கூடாது!
சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் காலம், எல்லைகளைக் கடந்து, இனிவரும் தலைமுறைகளுக்கும் உணர்த்தக் கூடியவை!

1. சமூகக் கொடுமைகள், அநீதிகள், ஜாதி, தீண்டாமை போன்ற சமூகப் புற்றுநோய்களை அகற்ற – ‘‘மண் எல்லை பார்க்காமல், களமாடத் தயாராகுங்கள்; மானிடப் பரப்பே – மனித உரிமைப் போருக்கான எல்லைகள்” என்ற அரிய வலராற்றுப் பாடத்தை இவ்விழாக்கள் உலகுக்கும், இன்றுள்ள இளைய – இனிவரும் தலைமுறைகளுக்கும் பறைசாற்றுகின்றன!
2. அறப்போராட்டங்களை அடக்குமுறைகளும், ஒடுக்குமுறை அதிகாரங்களும் ஒருபோதும் அடக்கி வெற்றி கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்கவேண்டியவர்களுக்குக் கற்றுத்தரும் வரலாற்றுக் காட்சிப் படிப்பினை வகுப்புகளாகும்!
3. கடமையாற்றும் முற்போக்கும் ஆட்சிகள் எப்படி சமூக வரலாற்றுப் போராட்டங்களை அங்கீகரித்து வரலாற்று ஆவண அங்கீகாரங்களாக படைக்கும்; வருங்கால சந்ததிகளுக்கான களப் பாசறை முகாம்க ளாக்கும், புதியதோர் சமத்துவ, சுயமரியாதை புது உலகைப் படைக்க மாநில எல்லைகளையும், அரசியலையும் ஒதுக்கி, மானிட உரிமைகளுக்கே முன்னுரிமை என்ற பாடம் போதிக்கும்; அதற்கு உணர்வுகளின் ஒத்துழைப்பு வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு, தக்கதோர் சான்றாவணமாகும் – இந்தத் திறப்பு விழாக்கள் என்ற சிறப்பு விழாக்கள்!
மீண்டும் அனைவருக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
வைக்கம் நினைவிடத்தின் ஒரு பகுதியை திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்ப ளிப்பாக அளித்துள்ளார் என்பது பாராட்டி நினைவு கூரத்தக்கதாகும்.
அத்துணைப் பேருக்கும் எமது கனிவு மிகுந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
11.12.2024 

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இயக்கம் போட்ட எதிர்நீச்சல்கள்

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! இயக்கம் போட்ட எதிர்நீச்சல்கள்

வ்விடுதலை நாளேடு
கட்டுரை

[ஆரியத்தின் ஆணவப்பிடியாலும் மூடநம்பிக்கையின் முற்றுகையாலும் சிதைக்கப்பட்ட திராவிட இனத்திற்குப் புதுவாழ்வு தந்திட புறப்பட்ட நமது இயக்கம் பிறந்தநாள் தொட்டு பீடுநடை எடுத்துவைக்கும் இன்றைய நாள்வரை அது சந்தித்த அடக்குமுறைகள், ஆட்சியாளர்கள் அதன்மீது ஏவிய சட்டத்தின் தீய நாக்குகள் ஏராளம்! ஏராளம்!! அத்துனையும் எடுத்துரைத்தால் அது ஒரு நூலாகவே முடிந்துவிடும- இங்கு ஒரு சில மட்டும் எடுத்துக்காட்டிற்காக வைக்கப்படுகிறது.)

கருஞ்சட்டையும் தடை உத்தரவும்
பெரியார் ஈ.வெ. ரா. அறிக்கை
கருஞ்சட்டை பற்றி சர்க்காரின் தடை யுத்தரவு சம்பந்தமாகப் பெரியார் ஈ வெ. ராம்சாமி அடியிற் கண்ட அறிக்கையை விடுத்துள்ளார்.
‘நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள்ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்ட தானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவு நீக்கிக்கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆகும். இதைக் கழக அங்கத் தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாக, கருஞ்சட்டை அணி பவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ, எந்த வித ரிஜிஸ்டரோ, சேனை போன்ற உடையோ, யூனிபாரமோ, அணிவகுப்போ, ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஓர் சேனைக்கோ, படைக்கோ, உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.
இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒரு அமைப்பாகக் கருதிச் சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும், நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவது போல் இது விஷயத்தில் நம் கழக அங்கத்தினரும் திராவிடப் பொது மக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும், சமாதானமுமாய் நடந்துவர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்குமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாகக் கருத வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’
ஈ.வெ. ராமசாமி – சென்னை, 4-3-1948.
“திராவிட நாடு ” (அண்ணா) 7-3-1948 தலையங்கம்

தடை உத்தரவு
திராவிடப் பெருங்குடி மக்கள் பல காலமாகச் சமுதாயத் துறையில் மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் முறையில், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் ரிெயார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் இப்போது சில காலமாகத் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பலர், தங்கள் குறைபாட்டைத் தெரிவிக்கும் முறையில் கருப்புச் சட்டை அணியும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனை, இப்போது சர்க்கார் ‘சட்ட விரோத ஸ்தாபனம்’ என்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கருப்புச் சட்டைக்கென ஒரு தனி ஸ்தாபனமே கிடையாது. திராவிடர் கழகத் திட்டங்களிலும் கருப்புச் சட்டை அணிவதை ஒரு ஸ்தாபனமாகக் கொள்ள வேண்டுமென்ற விதியும் கிடையாது. திராவிடர்கள் தங்களுக்குள்ள குறைகளைத் தெரிவிக்கும் முறையில், கருப்புச் சட்டை அணிவதை ஒரு அடையாளமாகக் கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.
கருப்புச் சட்டை அணிபவர்களுக்கென ஒரு தனிப் பயிற்சி முகாமோ. படை அணி வகுப்போ, ஆயுதம் தாங்கும் முறையோ, பலாத்கார முறைகளைக் கையாள வேண்டு மென்ற திட்டமோ எதுவும் கிடையாது.
திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் கருப்புச் சட்டை போட்டுக்கொள்ள வேண்டுமென்று, பெரியார் அவர்கள் எப் போது சொன்னாரோ, அன்றே சர்க்காருக்கும் இது சம்பந்தமாக எல்லாம் தெரிந்தே இருக்கும். ஆனால், இவ்வளவு காலமும் சர்க்கார் அது சம்பந்தமான நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல், இப்போது திடீரென்று கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு ‘ஸ்தாபனம்’ இருப்பதாகவும், அது, சட்ட விரோதமானதென்றும் கருதும்படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஒரு சமுதாயம். தனக்குள்ள குறைகளைக் தெரிவிக்கக் கூடாதென்ற முறையில் ஒரு சர்க்கார் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாயின், அதனை ஜனநாயக அடிப்படையைக் கொண்ட சர்க்கார் என்று எப்படி கூற முடியும்? ஒரு சமுதாயம், தன்னுடைய குறைகளை எடுத்துக்காட்டி, அவைகளை நிவர்த்தி செய்து கொள்வது கூடத் தவறு என்பதைத் தானே சர்க்காரின் இந்த தடை உத்தரவு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இல்லையேல், எந்தவிதமான பலாத்காரச் செயலை யும் அடிப்படையாகக் கொள்ளாத கருப்புச் சட்டையினர்மீது சர்க்கார் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?
கருப்புச் சட்டை அணிவது என்பது ஒரு ஒழுங்கு முறை; அதாவது தாங்கள் திராவிடர்கள், தங்களுடைய குறைகள் போக்கப்படவேண்டும், அவை போக்கப் படும் வரையில் துக்க அறிகுறியாகக் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென் பதைத் தவிர, கருப்புச் சட்டை அணிவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றா லும், இதனை சர்க்கார் – ‘ஒரு சட்ட விரோத மான ஸ்தாபனம்’ என்று கருதக்கூடிய அளவுக்குக் கருப்புச் சட்டை அணிவதைப் பற்றிச் சர்க்கார் தெரிந்திருக்கிறதென்றால். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்தக் காரியத்தைச் சர்க்கார் செய்திருக்கிற தென்று பொருள்படுமேயன்றி, உண்மை யாகவே சர்க்கார் கருப்புச் சட்டையைத் திராவிடர்கள் ஏன் அணிய முற்பட்டனர் என்பதனை அறியவோ, அல்லது அதன் அமைப்பு முறை எப்படி, என்னென்ன காரணங்களுக்காக அந்த முறை ஏற்பட்டதென்பதைத் தெரிந்து அதன்படி இந்தத் தடை உத்தரவை விடுத்துள்ளதென்று கூறவோ முடியாது.

பெரியார் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கருப்புச் சட்டை அணிவதன் காரணத்தை வெளிப்படை யாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணத்தையே, சுருப்புச் சட்டையைத் திராவிடர்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்று சொன்ன காலத்திலும் பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு பெரும் பொறுப்பைத் தன் மீது போட்டுக் கொண்டு, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள ஒரு சர்க்கார் விஷய விளக்கம் இல்லாத முறையில் எதேச்சதிகார மனப்பான்மையோடு காரியங்களைச் செய்வது, பொது மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இழப்பதற்கு அடிகோலுவதாகவே முடியும்.
எனவே, சர்க்காரின் இந்தப் போக்கைக் கண்டு, திராவிடர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, அமைதி குறைவுக்கும் கிளர்ச்சிக்கும் இடமளிக்காமல், தங்களுடைய பெரு தன்மையைக் காட்டிக்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பெரியார் வீடும், “குடி அரசு” ஆபீசும்
சோதனை யிடப்பட்டது
3-3-1948 இரவு ஈரோட்டில், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்கள் – வீட்டைப் போலீசார் சோதனையிட்டுச் சில புகைப் படங்களை எடுத்துச் சென்ற தோடு, “குடிஅரசு” ஆபீசையும் சோதனை போட்டுச் சில பைல்களையும் எடுத்துச் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் சோதனை
3-3-1948இல் பெரிய காஞ்சிபுரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் வி. கண்ணப்பர் அவர்களையும், தோழர் C.V.M.அண்ணாமலை அவர்களையும், உள்ளூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் சில கான்ஸ்டேபிள்களுடன் சந்தித்து, நகரிலுள்ள திராவிடர் கழகங்களைச் சோதனையிட்டு, கருப்புச் சட்டை சம்பந்த மான ரிக்கார்டுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். அவர்கள் ஆட்சேபனையில்லை என்று கூறவே, புத்தேரித் தெருவிலுள்ள திராவிடர் கழகத்தையும், பிள்ளையார்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், சின்ன காஞ்சிபுரம் திராவிடர் மறுமலர்ச்சி கழகத்தையும் சோதனையிட்டுக் கருப்புச் சட்டைகளையும், கழக ரசீதுப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
திராவிடர் ஆராய்ச்சிக்
கழகத்தில் சோதனை
சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள திராவிடர் ஆராய்ச்சிக் கழகமும் சோதனையிடப் பட்டு, கழக மினிட் புத்தகத்தைத் தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பா அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றனர்.
கருஞ்சட்டைக்குச் சர்க்கார் தடை உத்தரவு
பல இடங்களில் சோதனை
(7-8-1948 திராவிட நாடு)
2-3-1948இல் சென்னை சர்க்கார், இம் மாகாணத்திலுள்ள கருஞ்சட்டை ஸ்தாபனத்தையும், ராஷ்ட்ரிய சேவாதளத்தையும் தடை விதித்து, கிரிமினல் சட்ட திருத்தத் தின் 16ஆவது பிரிவின்கீழ் அறிக்கை விட்டுள்ளனர்.
நகரில் சோதனை
சென்னை சுங்குராமச் செட்டித் தெரு 6ஆம் எண்ணுள்ள கட்டிடத்தில் இருக்கும் “திராவிடன்” பத்திரிகாலயத்தைப் போலீசார் 2-3-1948 மாலை 4-30 மணிக்கு சோதனையிட்டு, சில கடிதங்களையும், “திராவிடன் ” பத்திரிகைப் பைலையும் எடுத்துச் சென்றனர்.
பார்க் டவுன், பொம்மு செட்டித் தெருவிலுள்ள தோழர் C.D.T.அரசு அவர் கள் வீட்டையும், வண்ணாரப்பேட்டை மாடசாமி நாடார் தெருவில் இருக்கும் தோழர் K.அண்ணாமலை அவர்கள் வீட்டையும், வட சென்னைத் திராவிடர் கழகத்தையும்,மயிலாப்பூர், பிராடீஸ் தெருவிலுள்ள தோழர் M.K.தங்கவேலர் அவர்களுடைய வீட்டையும். பெரிய மெட்டு ஏகாம்பர குமரகுரு தெருவிலுள்ள தோழர் K.ஆரியசங்காரன் அவர்கள் வீட்டை யும், சைதாப்பேட்டை, கூத்தாடும் பிள்ளை யார் கோயில் தெருவிலுள்ள திராவிட இளைஞர் கழகத்தையும் போலீசார் சோதனையிட்டு, சுருப்புச் சட்டைகளையும்,கழக மினிட் புத்தகங்களையும் எடுத் துச் சென்றனர்.
கோவில்பட்டியில்
2.-8- 1948இல் காலை 4 மணிக்கு D.S.P. அவர்களும், சர்க்கின் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டேபிள்களும் கோவில்பட்டியி லுள்ள திராவிடர் கழகர் செயலாளர் தோழர் S. அருணாசலம் வீட்டையும், தோழர் வள்ளமுத்து பால்ராஜ் வீட்டையும் சோதனை செய்து, திராவிட கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
மதுரையில்
3-3-1948இல் மதுரையிலுள்ள திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சோதனை செய்ததோடு, தோழர்கள் செந்தியப்பன், எஸ் முத்து, எஸ். பழனிவேலு, கே.எஸ். இராசமான், எம். எஸ். இராமய்யா, ஆ. சங்காய்யா. தங்கராஜ். ல.வ.கிருஷ்ணன் ஆகியோரைப் போலீஸ் அழைத்துச் சென்று, கருப்புச் சட்டை சம்பந்தமாக விசாரித்த பின்னர் விட்டு விட்டனர் என்று தெரிகிறது.
திருச்சியில்
2-3-1948 இரவு. திருச்சியிலுள்ள ஜில்லாத் திராவிடர் கழகக் காரியதரிசி தோழர் எஸ். பிரான்ஸிஸ் வீட்டை ரிசர்வ் போலீசார் சோதனையிட்டு. கருப்புச் சட்டைகளும், அங்கத்தினர்கள் சேர்க்கும் பாரங்களையும் எடுத்துச் சென்றனர்.
பொன்மலையில்
2-3-1948இல் இரவு 12-மணிக்கு பொன் மலைத் திராவிடர் வாலிப கழக அங்கத்தினர் தோழர் கைலாசம் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.
சேலத்தில்
3-3-1948இல் சேலம் D. S. P. அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டையிலுள்ள சுய மரியாதைச் சங்கத்திற்கு வந்து, கருப்புச் சட்டை சம்பந்தமான ரிக்கார்டுகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை யிட்டதில், அது சம்பந்தமாக ஒன்றுமே இல்லையென்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டு போய் விட்டனர்.
அரிசிப்பாளையத்தில்
3-3-1948இல் சேலம் அரிசிப்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், அங்கு எந்தவிதமான ரிக்கார்டுகளும் கிடைக்கவில்லையென்று ரிப்போர்ட் எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
விருதுநகரில்
3-3-1948இல் விருதுநகரிலுள்ள தோழர்கள் ஏ. வி. பி. ஆசைத்தம்பி. என். ராமசாமி. வி. ஏ. எம். வெள்ளையப்பன், பி. இரத்ன சாமி ஆகியோர்களின் வீடுகளைச் சோதனையிட்டதில், தோழர்கள் ஆசைத் தம்பி. இராமசாமி ஆகியோர் வீடுகளி லிருந்து மட்டும் சில கடிதங்களைக் கைப் பற்றிச் சென்றனர்.
கடலூரில்
3-3-1948இல் கடலூர் ஓ.டி. யிலுள்ள பகுத்தறிவுக் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், கழகத் தலைவர் தோழர் எம்.கே. வேலு அவர்கள் பெயரையும், செயலாளர் தோழர் பி. ஏ. இளங்கோ அவர் கள் பெயரையும் குறித்துக்கொண்டு சென்றனர் .
வேலூரில்
4-3-1948இல் வேலூரிலுள்ள தோழர்
வி.திருநாவுக்கரசு அவர்கள் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, சில கருப்புச் சட்டைகளை எடுத்துச் சென்றதோடு, தோழர் சி.பி. சின்னராசு அவர்கள் வீட் டையும் சோதனையிட்டு, கருப்புச்சட்டை யையும், “தீப்பொறி” பத்திரிகையையும் எடுத்துச் சென்றனர்.
செங்கற்பட்டில்
4-3-1948 செங்கற்பட்டிலுள்ள தோழர் எம்.சின்னையாஅவர்கள் வீட்டை போலீசார் சோதனையிட்டு, அங்கு எதுவும் கிடைக்காமல் போகவே, பிறகு தமிழர் உணவு விடுதியிலுள்ள ஒரு அறையைச் சோதனையிட்டதில், ஒரு கருப்புச் சட்டையையும் சில புத்தகங்களையும்’ எடுத்துச் சென்றனர்.
சோழவந்தானில்
4-3-1948இல் சோழவந்தானிலுள்ள தோழர் T. ஆவுடையப்பன் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆலந்தூரில்
4-3-1948இல் ஆலந்தூரிலுள்ள திரா விடர் கழகச் செயலாளர் தோழர் எம். கண்ணப்பன் அவர்கள் வீட்டைச் சோதனையிட்டதில், போலீசார், கருப்புச் சட்டைகளையும் கழகக் கொடிகளையும் சந்தாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
துறையூரில்
3-3-1948இல் துறையூரில் தோழர்கள் தூ.வி. நாராயணன் அவர்கள் வீட்டையும், டி. எம். பாலசுந்தரம் வீட்டையும், கு.கிருஷ்ணசாமி வீட்டையும், டி.ஆர். வீரண்ணன் வீட்டையும் சோதனையிட் டனர்.
திருப்பூரில்
3-3-1948இல் திருப்பூர்த் திராவிடர் கழகத்தைப் போலீசார் சோதனையிட்டு, அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
திண்டிவனத்தில்
4-3-1948 திண்டிவனத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், தோழர்கள் அப் பாண்டகாதன், பழனி ஆகியவர்கள் வீடுகளையும், சோதனையிட்டு கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
வாணியம்பாடியில்
போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனது பரிவாரத்துடன் வாணியம்பாடி ‘திராவிடர்கழகம் கட்டிடத்தில் சோதனை செய்தார். அவ்விடமிருந்து யாதொன்றும் பறிமுதல் செய்யப்பட வில்லை. அதன் பிறகு மாலை 5 மணிக்கு தோழர் சி.கோவிந்தராஜன் வீட்டில் சோதனை போடப்பட்டதில் ஒன்றும் வில்லை. கிடைக்க
விழுப்புரத்தில்
விழுப்புரம் டாக்டர் தியாகராசன் வீடு – போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மூவர், போலீஸ் கான்ஸ்டேபிள் சிலருடன் சோதனை இடப்பட்டது. கழக சம்பந்தமான ரசீதுகள், சில கடிதங்கள், மாநாட்டு சம்பந்தமான குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். 1-15 மணி நேரம் சோதனையிட்டார்கள். நடராசன் வீடு சோதனை இடப்பட்டது; ஒன்றும் கிடைக்கவில்லை.
ப.நடராசன் வீடும் சோதனையிடப்பட்டது.
இராசிபுரத்தில்
3-3-1948 இரவு சுமார் 7 மணிக்கு இராசிபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ‘பெரியார் மாளிகை” என்ற வீட்டுக்கு வந்து இயக்க கமிட்டி உறுப்பினர்கள் யார் யார் என்பதை விசாரித்துச் சென்றார்.
சேலம் குகையில்
சேலம் – குகை திராவிடர் கழகத்தை 3-3-1948இல் சேலம் நகர போலீஸ் அதிகாரி கள் சோதனையிட்டனர். இயக்க புத்தகங் களும் பத்திரிகைகளும் மட்டும் இருந்தன. ஒன்றும் எடுத்துக்கொண்டு போகப்பட வில்லை.
தர்மபுரியில்
தருமபுரி நகர திராவிடர் கழக தலைவர் திரு.
பி.பொன்னுசாமி வீட்டையும், அச்ச கத்தையும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
திராவிடர் கழக மினிட் புத்தகத்தையும் சில கழக மீட்டிங் விளம்பரத் துண்டு களையும் எடுத்துச் சென்றனர்.
சிதம்பரத்தில்
4-3-1948 காலை 8-மணிக்கு சிதம்பரம் திராவிடர் கழகத்தை சோதனை செய்வ தாய் போலீசார் ‘டவுன் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.கே.சுந்தரம் வீட்டையும், பக்கத்தில் 4 மைலில் உள்ள சாலியந் தோப்பு கிராமத்தில் சிதம்பரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. கிருஷ்ணசாமி வீட்டையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதிய சகாக்களுடன் வந்து சோதனைபோட்டு, விசாரித்துச் சென்றார்கள். யாதொரு ஆட்சேபகரமான பொருளும் கிடைக்கவில்லை.