வெள்ளி, 25 அக்டோபர், 2024

டிரஸ்ட் வழக்கு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 120 ஆம் தொடர்

டிசம்பர் 16-31

டிரஸ்ட் வழக்கு

அம்மா அவர்களால் கழகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் நான் பொதுச்செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்த எதிர் மனுவின் முக்கிய சாரங்களை 03.05.1978 விடுதலையில் வெளியிட்டோம். அதனை அப்படியே இங்கு தருகிறேன். ஏன் எனில் கழகத் தோழர்கள், கழகத்திற்கு எதிரான துரோக வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் அது பயன்படும் என்பதால்.

(திருவாளர்கள் டி.எம்.சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியவர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரம்.)

அடையாறு கஸ்தூரிபாய் நகர், 1ஆவது மெயின் சாலையிலுள்ள 13ஆம் எண் வீட்டில் வசிக்கும், கி.வீரமணியாகிய நான் கீழ்க்கண்டவாறு, உறுதிமொழி மூலம் கூறுவதாவது:

என்னுடைய தகப்பனார் பெயர் சி.எஸ்.கிருஷ்ணசாமி எனக்கு வயது 44 ஆகிறது.

(1)    நான் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி. இந்த உறுதிமொழிப் பத்திரத்தை என் சார்பிலும் முதல் எதிர்வழக்காளர் (நிறுவனம்) சார்பிலும் நான் சமர்ப்பிக்கிறேன்.

(2)    தாவா மனுவிற்கு ஆதாரமாக சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டவைகளுள் குறிப்பாக இங்கே ஒப்புக்கொள்ளப்படுபவைகளைத் தவிர, மற்றவற்றை நான் மறுக்கிறேன். பிராதில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்குப் பதில்கூற முழு விவரமான தனி ஒரு எழுத்தறிக்கை Written statement  தர எனக்குள்ள உரிமையைப் பிறகு பயன்படுத்துவேன் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(3)    நான் மிகவும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படிப் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன சட்ட விதிகளின் 21ஆவது பிரிவுப்படி, திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நான் எழுத்து மூலமாக ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த நியமனப் பத்திரம் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களினால் 2.1.1978இல் ஏழு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் எழுதி, கையெழுத்திடப்பட்டதாகும். (இதில் இனி நான் நிறுவனம் (ஸ்தாபனம்) என்று குறிப்பிடுவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தையே சாரும்).

(வழக்குத் தலைப்பில் மனுதாரர்கள் என்னை செயலாளர் என்று அழைக்கப்படுகிறவர் _என்று  குறிப்பிட்டுள்ளார்கள். நான் செயலாளராக இருக்க உரிமை உடையவன் அல்ல என்பது போன்று அவர்கள் கொண்டுள்ள கருத்து தவறான அடிப்படையில் அவர்களால் எடுக்கப்பட்டதொரு நிலையாகும்.)

அமலுக்கு வராத சட்டம்

(4) வாதிகளின் மனு ஒரு தவறான அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1975ஆவது ஆண்டு தமிழ்நாடு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் (சென்னை-_27 1975 என்கிற சட்டம்) தான் 1860ஆவது ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சொசைட்டிகளுக்குப் பொருந்தும். நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் சில 27/1975 சட்டத்துக்குப் புறம்பான விதிகளைக் கொண்டதாக இருப்பதாலும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 21ஆவது விதியானது தமிழ்நாடு சட்டம் 27/1975இல் உள்ள 15ஆவது விதிக்கு முரணானதாலும் இந்த 21ஆவது விதியின் அடிப்படையில் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை என்னை ஆயுள் செயலாளராக நியமித்துள்ளது செல்லத்தக்கதல்ல என்றும் இந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு தனிச் செயல் திட்டத்திற்கு (A Scheme) உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளார்கள்.

27/1975 என்ற இந்தத் தமிழ்நாடு சட்டம் அமலுக்கு வரும் தேதியை மாநில அரசு இதுவரையில் (வாதி மனுபோட்டு அதற்குப் பதில் தரும் இதுநாள் வரை) பிறப்பிக்கவில்லை என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு 1975 சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் இதுவரை அமலில் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கவைகளே. அந்த விதிமுறைகளுக்கு இணங்க நான் அந்த நிறுவனத்தின ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டப்படி சரியானதே ஆகும். வாதிகள் தங்களது மனுவில் கூறியுள்ள காரணங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையல்ல. எனவே மனுவும் தாவாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவையாகும். ஏனென்றால், அமலுக்கு வராத 27/1975ஆவது தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த தாவா மனு போடப்பட்டுள்ளது. சட்டமே அமலுக்கு  வராத நிலையில் இந்த மனுதாரர் வாதம் செல்லாதவைகளாகின்றன. மேலும் சட்டப்படி இந்த மனு செல்லத்தக்கதல்ல. காரணம், நிறுவனத்தின் மற்ற நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

உறுப்பினர்கள் அல்ல

(5)    இந்த மனுதாரர்கள் தாங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்றும், அந்த நிறுவனம் நிலைத்து நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அவர்கள் மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். அதனடிப்படையில்தான் பெரியார் அவர்கள் 1968இல் அவர்களை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் இவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர்களே அல்ல. அவர்கள் மனுவில் கூறியுள்ளவைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாததாகும். நிறுவனத்தின் சட்டதிட்டங்களின் 5ஆவது விதிப்படி, ஒரு குறிப்பிட்ட வயதடைந்தவர்களும் நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதோடு நிர்வாகக் கமிட்டியின் ஒப்புதலையும் பெற்றவர்கள்தான் உறுப்பினராக முடியும். மனுதாரர்களை நிறுவனத்தின் சாதாரண உறுப்பினர்களாகக்கூட நிர்வாகக் குழு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சாதாரண உறுப்பினர்களாகவே இல்லாத நிலையில், எப்படி நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கத் தகுதி படைத்தவர்களாக முடியும்? அவர்கள் 1968ஆவது ஆண்டில் நிர்வாகக் குழு உறுப்பினர்களானார்கள் என்பதை நான் மறுக்கிறேன். நிறுவனத்தின் கடந்தகால ஆதாரங்கள் மூலமே இது உரிய முறையில் நிரூபிக்கப்படும்.

(6)    மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் என்ற மனுதாரர்களின் கூற்று பொய்யானது என்பதே மனுதாரர்கட்கே தெரியும். சமுதாயத்தில் நிலவிய ஜாதி, மூடநம்பிக்கைகளின் அடிப்படையில், ஒரு பிரிவினர் கொண்டிருந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1925இல் மறைந்த பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்திலிருந்து முளைத்ததே இந்த நிறுவனமாகும். 1925இல் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்துக்கு 1944இல் திராவிடர் கழகம் என்று புதிய பெயரிடப்பட்டது. அந்த நிறுவனமானது அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆகும். சமுதாய சம்பந்தமான பணிகளுடன் அறநிலையப் பணிகளையும் இணைத்து நடத்தும் ஒரு நிறுவனமாகும். மறைந்த பெரியார் அவர்கள், இந்த நிறுவனத்தைத் தொடங்கி நீண்டகாலம் நடத்தி வந்தார்கள். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், இவற்றின் லட்சியங்களைப் பரப்புவதே இந்த நிறுவனத்தின் செயல் திட்டமாகும். இவைதான் இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும். இது இந்த நிறுவனத்தின் சட்ட விதிகளில் தெளிவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையில் பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் ஒரேவிதமான சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட அடிப்படையால் ஒன்றான இரு அமைப்புகளாகும். மறைந்த பெரியார் அவர்கள் ஆயுள் காலத்தில் இந்த இரண்டு ஸ்தாபனங்களும் (சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் ஒரு அமைப்பு; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றொரு அமைப்பு) அவருடைய அறிவுரை, மேற்பார்வையின் கீழ் நிர்வகித்து, நடத்தி வரப்பட்டன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கோ அல்லது பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகக் கொள்கைக்கோ உடன்பாடு இல்லாத யாரும் இந்த நிறுவனத்தின் லட்சியங்களையும் கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைப்-படுத்த முடியாது.

பெரியார் தந்த மறுப்பு

(7) மனுவில் கண்டுள்ள மூன்றாவது வாதியாகிய திருவாரூர் கே.தங்கராசு தன்னை ஆசிரியராகக் கொண்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 1963 ஆகஸ்டில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மறைந்த காமராசரால் தீர்மானிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அந்தக் கருத்து பெரியார் அவர்களுடைய கருத்துக்கு உடன்பாடு உடையதாக அமையவில்லை. எனவே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வமான ஏடான விடுதலையில் 17.8.1963 அன்று தங்கராசின் கருத்தை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:-_ தங்கராசால் பகுத்தறிவு ஏட்டில் வெளியிடப்பட்ட கருத்து தனக்கோ திராவிடர் கழகத்துக்கோ உடன்பாடானது அல்ல என்று பெரியார் தெளிவுபடுத்தினார். மேலே குறிப்பிடப்பட்ட பெரியாரின் அந்த அறிக்கையானது மூன்றாவது வாதி (தங்கராசு) மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவரல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மூன்றாவது வாதியுடன் இணைந்துள்ள மற்ற வாதிகளும் தங்கராசு போன்றே பெரியாருடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல.

(8)    (நான் மேலும் கூறுவது என்ன-வென்றால்) முதல் வாதியை (டி.எம்.சண்முகம்) 27.12.1974இல் கழகத்தின் தலைவராகிய ஈ.வெ.ரா.மணியம்மை திராவிடர் கழகத்திலிருந்து விலக்கிவிட்டார். ஏனென்றால் அந்த முதல்வாதி கழக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு கழக சம்பந்தமான முக்கிய நடவடிக்கைகளுக்குத் தன்னுடைய ஒத்துழைப்பைத் தராததுமே ஆகும். 27.12.1974இல் தன்னால் கையெழுத்திட்டு விடுதலையில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் மேற்கண்ட தனது முடிவை கழகத் தலைவர் மணியம்மையார் வெளிப்படுத்தினார். இரண்டாவது வாதியும் (சிதம்பரம் கிருஷ்ணசாமி) மற்றும் சிலரும் கழகத்திலிருந்து, கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக விலக்கப்பட்டார்கள். அவர்களை விலக்கிய செய்தி 17.10.1975 விடுதலையில் வெளியிடப்-பட்டுள்ளது. மூன்றாவது வாதியும் (தங்கராசு) அதுபோலவே அந்த விதமான கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக 23.9.1975இல் கழகத்திலிருந்து விலக்கப்பட்டார் இவரை விலக்கிய செய்தி கழகத் தலைவர் கையெழுத்தோடு 23.9.1975 விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது.

16.11.1975இல் திருச்சியில் கூடிய திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாக கமிட்டி திராவிடர் கழகத்திலிருந்து வாதிகளையும் மற்றும் சிலரையும் ஏற்கெனவே விலக்கியிருந்ததை ஒரு தீர்மானம் மூலம் தலைவரின் முடிவை ஒப்புக்கொண்டும் இருக்கிறது. (Ratified).

வாதிகள் தங்களைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டவுடன் வேறு ஒரு எதிர்ப்பு ஸ்தாபனத்தைத் தொடங்கினார்கள் என்று தெரிய வருகிறது. அந்த ஸ்தாபனத்திற்குக் குறிப்பிடத்தக்க ஆதரவாளர்களும் இல்லை. அந்த ஸ்தாபனத்திற்கு திராவிடர் கழகம் என்று அவர்களே பெயர் சூட்டிக் கொண்டார்கள். மூன்றாவது வாதியால் வெளியிடப்பட்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 4-.11.1975இல் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில் தங்களைத் திராவிடர் கழகத்தார் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் 26.10.1975இல் திருச்சியில் கூடி மறைந்த திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள். மற்றும், இரண்டாவது வாதி, திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையாருக்குப் பதிலாக திராவிடர் கழகத் தலைவராகவும், மூன்றாவது வாதி எனக்குப் பதிலாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தீர்மானமும், மற்றொரு தீர்மானத்தில் திராவிடர் கழகத்தினுடைய சொத்துக்கள், அது சம்பந்தமான தஸ்தாவேஜுகள், கணக்குகள், திராவிடர் கழக டெபாசிட்டுகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுத்தறிவு ஏட்டில் செய்தி வந்துள்ளது.

மேலே கூறப்பட்டவை எதைப் புலப்படுத்துகின்றன? வாதிகள் பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல என்பதோடு திராவிடர் கழகத்துடன் எல்லாவிதமான தொடர்பையும் மேற்கூறியவாறு அறுத்துக் கொண்டவர்கள் ஆவார்கள் என்பதும் புலனாகிறது. அது மாத்திரமல்லாது அவர்கள் திராவிடர் கழகத்தின்பாலும் நிறுவனத்தின்பாலும் விரோத மனப்பான்மை உடையவர்களும் ஆவார்கள்.

– நினைவுகள் நீளும்

வியாழன், 24 அக்டோபர், 2024

சுயமரியாதைத் திருமணம்-நாகரிமடைந்த மனிதர்களின் திருமணம் – திராவிடப் புரட்சி

 


ஜனவரி 16-31

குடும்பம், அரசு, பொருளாதாரம், சட்டம், வழக்கம், ஒழுக்கம், சமயம்,கல்வி போன்ற நிறுவனங்களே ஒரு மனித சமூகத்தை ஒருங்கிணைக்கும் காரணிகள். இவற்றில் குடும்பம் என்ற நிறுவனமே சமூகத்தின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கின்றது.

தமிழைப் பொறுத்தவரை கூடி இருக்கும் இடம் என்ற அடிப்படையில் குடும்பம் என்ற சொல் உருவாகியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பேமிலி (family) என்ற சொல் பேமுலஸ் (famulus) என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். பேமுலஸ் என்றால், வீட்டு அடிமை என்று பொருள். அதாவது, ஒரு தலைவனின்கீழ் இருக்கும் அடிமைகள் முறை என்று ஏங்கல்ஸ் தெரிவிக்கிறார்.

பொதுவாக, குடும்பம் என்பது திருமணத்தால் பிணைக்கப்பட்ட மனிதர்களின் குழு. இந்த குழுவில் உள்ள மனிதர்கள், ஒரே வீட்டில் இருப்பவர் களாகவும், உறவுத்தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். குடும்பம் என்பது சமூக அமைப்பிற்கு அடிப்படையாக இருப்பதோடு அல்லாமல், ஒருவருடைய காம உணர்விற்கு வடிகாலாகவும், அதனால் பிறக்கும் குழந்தைகள் மூலமாக ஒரு இனம் அழியாமல் நிலைக்கச் செய்யும் எற்பாடாகவும் இருக்கின்றது.

குடும்பம் என்ற நிறுவனத்திற்கு, அதாவது கணவன் மனைவி என்ற அமைப்பிற்குக் காரணமாக இருப்பது திருமணம். திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது.  திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு  குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். திருமண வாழ்க்கை முறை என்பது வரைமுறையற்ற பாலுறவில் தொடக்கி ஒருவன் ஒருத்தி பாலுறவு முறைவரை வந்துள்ளது. இன்னார் இன்னாரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நெறிமுறைகள் சமூக அமைப்புகளால் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் வரன்முறையற்ற பாலுறவு இருந்த காலத்தில், ஆண்களும் பெண்களும் யார் யாருடன் வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்ற நிலை இருந்துள்ளது. இதுபோன்ற முறைகள் இருந்ததைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

மேற்சொன்ன நிலை பிறகு மாறி, பெற்றோருடன் அவர்களது பிள்ளைகள் கொண்ட பாலுறவு முறை தடை செய்யப்பட்டு அல்லது மாறி, சகோதர சகோதரிகளுக்கு இடையே திருமண உறவு ஏற்பட்டது. இது இரத்த உறவு குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து, சகோதர சகோதரிகள் திருமண உறவு தடை செய்யப்பட்டு அல்லது மாற்றமடைந்து, ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ளும் முறை வந்துள்ளது. இந்த முறை அந்தப் பொதுவான கணவர்கள், அந்தப் பெண்களின் சகோதரனாக இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

தற்காலக் கண்ணோட்டத்தின்படி, வரன்முறையற்ற பாலுறவாகக் கருதப்படும் இந்த முறை மாறியதே, பின்னாளில், திருமண உறவு முறைகள் ஏற்பட வழிகோலியுள்ளன. இந்தத் தடைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் முன்வைக்கின்றனர். அவை,

வேட்டை மனிதர்களாக இருந்தவர்களுக்கு இடையே, அதாவது ஒரே குடும்பமாக இருந்தவர்களுக்கு இடையே, தந்தை மகன் மற்றும் சகோதரர்களுக்கு இடையே ஒரே பெண்ணிற்காக போட்டியும் சண்டையும் ஏற்பட்ட காரணங்களால், அதனால் ஏற்படும் பிளவைத் தவிர்க்க இப்படிப்பட்ட தடை வந்திருக்கக்கூடும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, சிறுவயதில் இருந்தே ஒன்றாய்ப் பழகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உளவியல் ரீதியாக பாலுணர்வு ஏற்படாத சூழலில் இப்படிப்பட்ட தடைகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.

பல்வேறு அழிவுகள் காரணமாக, தேவையான வயதொத்த ஆண் பெண்கள் இல்லாத சூழலில், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவரோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தடை வந்திருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.

தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளும் சூழல் வந்திருக்கக்கூடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்பின் தெரியாதவரைத் திருமணம் செய்யும் களவு முறையும், தனது இனத்தில் திருமணம் செய்யும் பெற்றோர் இசைவு மணமுறையும், ஜாதியில் நெருக்கமாக உள்ளவரோடு மட்டும் திருமணம் செய்யும் மணமுறையுமாக மூன்று வகைத் திருமண முறைகள் ஆதியில் இருந்துள்ளன. தம் இனத்தில் திருமணம் செய்வதை அகமணம் என்றும் வேறு இனத்தவரோடு திருமணம் செய்வதைப் புறமணம் என்றும் அழைக்கப்படுகிறது. குடும்பத் தலைமை உரிமை , தொழிலுரிமை, சொத்துரிமை ஆகிய மூன்றையும் காப்பாற்றிக் கொள்ள புறமணமுறை தடை செய்யப்பட்டு ஒரே இனக்குழுவுக்குள் மட்டும் திருமணம் செய்வதும், பெற்றோர் இசைவோடு மட்டும் திருமணம் செய்யும் முறையும் சமூகக் கட்டுப்பாடாக ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு மரபாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மரபு தொடர்ந்து மீறப்பட்டதை அதாவது, பெற்றோரை மீறி காதலர்கள் உடன்போக்கு மேற்கொண்டதையும், உடன்போக்கு நடைபெறு வதைத் தடுக்க பெண்களை வீட்டிலே வெளியில் விடாமல் வைத்திருக்கும் இச்செறித்தல் என்றும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

தொடக்கத்தில் தாய்வழித் தலைமை இருந்தது. அப்போது குடும்ப அமைப்பில் பெண்கள் சொத்துக்கு உரிமை உடையவராக இருந்தனர். ஆண்கள் மனைவியின் வீட்டில் தங்கி இருக்க வேண்டியிருந்தது. குழந்தை பெறுவதற்கு ஆணும் ஒரு காரணம் என்று அறியாமல் இருந்தகாலமாக அது இருந்திருக்கக்கூடும். காலப்போக்கில், பெண்கள் குழந்தை பெறுவதும், மாதவிடாயினால் பணி செய்யமுடியாமல் போவதாலும், குழந்தையைக் கவனித்துக்கொண்டு இல்லத்தைப் பராமரிப்பவளாகவும் மாற, ஆண்கள் உழைக்கும் மற்றும் அதிகாரவர்க்கமாக மாறியபோது, குடும்பத்தின் தலைமை தாய்வழியில் இருந்து தந்தை வழிக்கு மாறுகின்றது. தந்தைவழித் தலைமை, திருமண உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தலைமையைக் காப்பாற்ற புறமணத்தடை ஏற்படுகிறது. ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில் லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. இந்தச் சமூகக் கட்டமைப்பை யாரும் மாற்றிவிடாமல் இருப்பதற்காக, ஜாதிய அமைப்புகளை ஏற்படுத்தினர், ஜாதகம் பொருத்தம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை, கடவுள் புராணக் கதைகள் மூலமாகப் பலப்படுத்தினர்.

இதனால், மனிதர்களின் சமூக வளர்ச்சி சிந்தனை முழுவதுமாக முடக்கப்பட்டது, பெண்கள் அடிமையானர்கள். மனிதர்களுக்கு இடையே பிறப்பால் சமூக ஏற்றத்தாழ்வும், பிறப்பால் தொழில் ஏற்றத்தாழ்வும், அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் கல்வி மறுக்கப்பட்டது, அதனால் அறிவுடையோர் குறைந்தனர். புராண இதிகாச கடவுள் கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகளினால், இந்திய சமூகம் பின்தங்கிய அதாவது தேக்கநிலை அடைந்த ஒரு சமூகமாக மாறியது.   ஒரு சமூகத்தின் திருமண உறவுமுறை என்பது அந்தச் சமூகம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கிறது. உலகின் முன்னேறியுள்ள பல நாடுகளில் உள்ள நாகரிகமடைந்துள்ள சமூகங்கள், பழைய திருமண முறைகளான, அகமணமுறை மற்றும் பெற்றோர் இசைவு மணமுறை இரண்டையும் விட்டுவிட்டன. திருமணம் செய்ய விரும்பும் ஆடவரும் பெண்டிரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொள்ளும் வழக்கமே இப்போது உள்ளது. மனித சமூகம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. மனிதர்களின் அறிவியல் சிந்தனை, அவர்களைத் தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. அதன் விளைவாக, தங்களின் அனைத்துப் பணிகளையும் எளிதாக்கி வருகின்றனர், அவர்கள் அச்சப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்து அச்சம் விலகுகின்றனர், தொடர் தேடலினால் தொடர் முன்னேற்றத்தில் மனித சமூகம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது மற்றும் வருகிறது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது மற்றும் வைக்கப்படுகிறது.

இப்படிச் செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனதில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது மற்றும் இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தை பெரியா அவர்களால் 1929ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தந்தை பெரியாரும் அவரது கொள்கைவழி வந்தவர்களும் சுயமரியாதைத் திருமண முறையையே கடைப்பிடிக்கின்றனர்.

1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பெரியாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 17.-01.-1968இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 20.01.-1968இல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார்பேட்டையில் நடத்திய சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய உரையில், சுயமரியாதைத் திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்துக்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தப்பட்டதல்ல என்பதே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும் வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே நரகம் போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது

இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் இவ்விதத் திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை என்கிறார்.

எனவே, சுயமரியாதைத் திருமணம் என்பது நாகரிகம் அடைந்த மனிதர்களின் திருமண முறை என்பது தெளிவாக விளங்குகிறது.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், சுயமரியாதைத் திருமணமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே தங்களை நாகரிகமடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (4) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

 


விடுதலை நாளேடு

மகளிரே முதன்மையானவர்கள்!

நான்கு நாள்கள் திட்டமிடப்பட்ட பயணத்தில், மூன்று நாள்கள் காலை உணவு தோழர்களின் இல்லத்தில் நடை பெற்றது. அங்கே இருந்த தோழர்களின் இணையர்களிடம் அவர்களின் பெயர், ஊர் போன்றவற்றை விசாரித்து அறிந்தார் ஆசிரியர். அவரவர் ஊரின் சிறப்புகள், தனக்கும், அந்த ஊருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் கூறிய போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேபோல ‘‘பரபரப்பான சூழலில், பல்வேறு உணவுகளைச் சிரமத்தோடும், அன்போடும் வழங்கினீர்கள், நன்றி!’’ எனத் தலைவர் கூறியபோது மெய்சிலிர்த்துப் போனார்கள்.
“ஜப்பானில் ஈரோட்டுப் பூகம்பம்” எனும் தமது நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூட தோழர்களின்‌ பெயர்களோடு, அவர்களின் வாழ்விணையர்கள் பெயரையும் இணைத்து எழுதி இருந்தார் ஆசிரியர். எல்லோருக்கும் உரிய பெரு மையும், அங்கீகாரமும் போய் சேர வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில்! அதேபோல குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலத் திட்டம் போன்றவற்றையும் விசாரித்து அறிந்தார். அப்படியான சூழலில் காயத்ரி – செந்தில்குமார் வீட்டிற்குச் சென்ற போது அவர்களின் மகன் கவின் அவர்களிடம் படிப்பு இல்லாமல், கூடுதலாக என்ன கற்று வருகிறீர்கள் என ஆசிரியர் கேட்டார். “மிருதங்கம் பழகி வருகிறேன்” என்றார் கவின்.

மிருதங்க கச்சேரி!


மகிழ்ந்து போன ஆசிரியர், மிருதங்கத்தை இசைக்கச் சொல்லிக் கேட்டார். சில நிமிடங்களில் அந்த இடமே அழகிய கச்சேரி மேடை ஆனது. “ஒரு பெரிய தலைவர், தம் மகனை அழைத்து, அவன் பயின்று வரும் மிருதங்கத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்கிறாரே”, என அவரின் அம்மா காயத்ரி நெகிழ்ந்து போனார். உடனே அருகில் இருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களிடம், ‘‘நீங்கள் அறிஞர் அண்ணா குறித்து ஒரு பாடல் பாடுங்கள், பிரின்சு, தந்தை பெரியார் குறித்து ஒரு பாடல் பாடட்டும், கவின் மிருதங்கம் இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கட்டும்’’ எனக் கூறி, ஒரு பத்து நிமிடத்தில் சூழலையே அழகாக்கி விட்டார் ஆசிரியர்!

ஆசிரியரின் கலகலப்பான நகைச்சுவைகள்!
அதேபோல திமுக மாநிலங்களவை உறுப்பினர்

எம்.எம்.அப்துல்லா, அவரின் வாழ்விணையர், ஜப்பான் வாழ் தோழர்கள் என அனைவருமே வியந்த ஒன்றும் இந்த நான்கு நாள்களில் இருந்தது. ஆசிரியருடன் நடைபெற்ற உரையாடலில் அரிய பல நினைவுகள், வரலாற்றுக் குறிப் புகள், சாதனை நிகழ்வுகள், சரித்திரம் படைத்த தலைவர்கள் என எண்ணற்ற மலரும் நினைவுகளை ஆசிரியர் பகிர்ந்து கொண்டார். இயல்பாக உரையாடும் போது ஆசிரியரின் பேச்சில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். அந்த அனுபவத்தை அவர்கள் அனைவரும் பெற்றனர்.

இந்த ஜப்பான் பயணத்தின் நான்கு நாள்கள் திட்டமிடல் தவிர, ஆசிரியரின் வழக்கமான எழுத்துப் பணிகள், வாசிப்புகள் என அதுவும் நள்ளிரவு கடந்து போனது!

பெரியார் – அண்ணா விழாக்கள்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் 15.09.2024 அன்று, ஃபுனாபொரி டவர் ஹால், இரண்டாவது மாடியில், Heian எனும் அரங்கில் தொடங்கியது. ‘அவர்தாம் பெரியார்’, ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்’ ஆகிய பாடல்களுக்குக் கவின் செந்தில்குமார் மிருதங்கம் இசைக்க நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் மகளிர் குரோகவா சான் தம் குழுவினருடன் மிகச் சிறப்பாகப் பறை இசைத்தார். தோழர் வி.குன்றாளன் வரவேற்புரை நல்கினார். ‘மெல்லிசை மொட்டுகள்’ குழுவினர் குழுப்பாடல் பாடினர். சிவ வருண்யா மற்றும் நிருத்யா நாட்டியப்பள்ளி மாணவர்கள் குழு நடனமும், கருவி இசையும் வாசித்தனர்.

‘மறக்க முடியாத ஜப்பான் நினைவுகள்’ எனும் தலைப்பில் வி.சி.வில்வம், ‘தமிழ்நாட்டில் உருவாகி வரும் பெரியார் உலகம்’ குறித்து ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினர். தொடர்ந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களைக் குறித்து தோழர் ச.கமலக்கண்ணன், ஆசிரியர் அவர்களைக் குறித்து தோழர் இரா.செந்தில்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.

ஆசிரியர் கி.வீரமணி –- எம்.எம்.அப்துல்லா உரைகள்!

நிகழ்வில் “அண்ணா கண்ட கனவு” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய எம்.எம்.அப்துல்லா அவர்கள், ‘‘அறிஞர் அண்ணாவிற்கு என்று தனி கனவு எதுவும் இருந்ததில்லை; பெரியாரின் கனவு தான், அண்ணாவின் கனவு! அதை நிறைவேற்றும் பொருட்டே அவர் பாடுபட்டார், வெற்றியும் பெற்றார்”, எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களோடு உருக்கமாகப் பேசினார்.

“பெரியாரின் சமூகப் பார்வை” எனும் தலைப்பில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “இந்தப் பிறந்தநாள் விழாக்கள் என்பது வேருக்கு விழுதுகள் எடுக்கும் நன்றிப் பெருவிழா”, என முத்தாய்ப்பாய் குறிப்பிட்டார். பெரியாரின் உழைப்பால் விளைந்த ஜப்பான் வாழ் தோழர்களை வெகுவாகப் பாராட்டினார். ஜாதிச் சங் கங்களை உருவாக்காமல், சாதிக்கும் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மகளிரின் சிறப்பு குறித்தும், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எவ்வளவு மகத்தானவை என்பதையும் நினைவு கூர்ந்தார். பழைமையை உரமாக்கி, புதுமையை உணவாக்குவோம்!”, எனப் பலத்த கரவொலிக்கிடையே ஆசிரியர் உரையை நிறைவு செய்தார்!

பாராட்டுப் பெற்றோர்!

2021 ஆம் ஆண்டு ‘‘பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்’’, ‘‘வைக்கம் போராட்டம்’’ ஆகிய இரண்டு நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தப் பணியைச் செய்தவர்கள் இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன்! இந்தப் பணிக்கு இவர்களுக்கு உதவிய ஜப்பானியர் “நகானோ” அவர்களுக்கு ஆசிரியர் பாராட்டிச் சிறப்பு செய்தார்.

அதேபோல பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாக்கள் சிறக்க நன்கொடை வழங்கிய உகானந்த் (சன்வெல் சொல்யூஷன்ஸ்), மோகன், ராஜேஷ் (நெக்ஸ்ஜென்), சுரேஷ் (கேரளா உணவகம்), சரவணன் (சரண் கார்ப்பரேஷன்), நடராஜன் (சோவாப்ளூ ஜப்பான்), ஜெயசீலன் (டெக் கான்சாஃப்ட்). கே.கே.செந்தில்குமார் (சங்கம் சாஃப்ட்வேர்),

இரா. செந்தில்குமார் (சில்வர்ஸ்கை ஜப்பான்), கோவிந்தபாசம் (ஜப்பான் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிளப்), குறிஞ்சி செல்வன்
(சிறீ பாலாஜி தென்னிந்திய உணவகம்), கண்ணன் (ருசி இந்திய பிரியாணி உணவகம்) ஆகியோரும் மேடையேற்றி சிறப்பு செய்யப்பட்டனர். இறுதியில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்வும் நடந்தேறியது. ஆம்! குடும்பம், குடும்பமாக ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர். சற்றொப்ப 1 மணி நேரத்தைக் கடந்துபோனது அது! நிறைவாக மோ.விஜய் நன்றி கூறினார்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் வி.குன்றாளன்,

இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, கணேஷ் ஏழுமலை, வி.ராஜா, இரா.அய்ஸ் வர்யாதேவி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!

நான்கு நாள்கள் போனதே தெரியவில்லை என்பது ஒருபுறம்; நான்கு நாள்களில் நான்காண்டுகள் பழகிய தோழமை உணர்வு மறுபுறம்! மொத்த அன்பையும் அனுபவித்த நிலையில், தோழர்கள் சூழ் பட்டாளம் 16.09.2024 இரவு ஜப்பான், நரிட்டா விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்கள்! ஆசிரியர் எவ்வளவு பெரிய தலைவர் என்பதை அவர்கள் அறிவார்கள். எனினும் ஒரு குழந்தையைப் போல அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! “பெரியார்” இளைஞர்கள் ஜப்பான் சென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்த நான்கு நாட்கள் ஜப்பானே பெரியார் மயம் என்றுதான் சொல்ல வேண்டும்! நன்றி தோழர்களே! ஜப்பானிய மொழியிலும் எங்கள் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துகிறோம்!

“மின்னாசான் கோன்னிச்சுவா! ஹஜ்மெமஸ்தே! தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!”

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (3) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

 


விடுதலை நாளேடு

நெருக்கமான ஜப்பான்!

ஜப்பான் நிஷிகசாய் பகுதியில்தான் ஆசிரியருக்கான தங்கும் விடுதி இருந்தது. புதுக் கண்ணாடியைத் திரும்பத் திரும்பத் துடைத்து வைத்தது போன்ற சாலைகள், அழகான கட்டட அமைப்புகள், 24 மணி நேரமும் செயல்படும் வணிக நிறுவனங்கள், எங்கும், எதிலும் பரபரப்பு, எனினும் எப்போதும் நிலவும் பேரமைதி! அதனால் ஏற்படுகிற பேரானந்தம்! அதுதான் ஜப்பானை மனதிற்கு நெருக்கமாக வந்து அமரச் செய்கிறது!
ஜப்பானைச் சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்று சொல்வதை விட, சுயமரியாதை மிக்க நாடு என்று சொல்லலாம். அதற்கான காரணங்களை ஆயிரமாயிரம் நாம் அடுக்கலாம்! பெரியார் காண விரும்பிய நாட்டில் வசிப்பதைப் போன்ற ஓர் உணர்வு!

தோழர்களின் திட்டமிடல்!

தங்கியிருந்த அறையில் இருந்து 10 நிமிடத் தூரத்திற்குள் சில தோழர்களின் வீடுகள் இருந்தன. விழா அரங்கமும் அவ்வாறே இருந்தது. ஆசிரியருக்கு ஏற்ற உணவை, தங்கள் உணர்வுகளால் பரிமாறினார்கள். தங்கியிருந்த நாள்களில் தினமும் ஒருவேளை உணவை, எங்கள் வீடுகளில் தான் என்கிற தோழமைகளின் அன்பை ஆசிரியர் மறுக்கவில்லை.

குறிப்பாகத் தோழர்களின் திட்டமிடல் கண்டு ஆசிரியர் வியந்து போனார். குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனம் வந்து நிற்கும். இந்த நாளில் இவர் வருவார்; அடுத்த நாளில் அவர் வருவார் என எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். ஆசிரியரை அருகில் அமரச் செய்து, அழைத்துச் செல்லும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் தானே! எல்லோருக்கும் எல்லாம்! அனைவருக்கும் அனைத்தும்! என்கிற தத்துவத்தின் பிரதிபலிப்பு தானே இந்தத் திட்டமிடல்!

தமிழ்நாட்டுப் பெண்கள்!

இப்படியான நிலையில்தான் தோழர் திவ்யா வந்தார். ஆசிரியரின் நகைச்சுவை இழையோடிய பகுத்தறிவுப் பேச்சிலும், பெண்ணுரிமைப் பாடிய பெரியாரின் பேத்தியுமாய் ஆசிரியரிடம் வந்தார். “அய்யா! என் காரில் வாருங்கள்! நான் நன்றாகக் கார் ஓட்டுவேன்!”, என்றார். நாளும் பொழுதும் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தும் தலைவரின் மகிழ்ச்சிக்குத் தடுப்பணையும் இருந் திடுமோ! ஆசியாவிலேயே மகளிருக் கென்று தனிப் பொறியியல் கல்லூரியை உருவாக்கிய தலைவர் அல்லவா!
தோழர் திவ்யா பிரமாண்ட கார் ஒன்றை ஆசிரியர் முன் கொண்டு வந்து நிறுத்தினார். “அக்கிஹாபாரா” என்று சொல்லக்கூடிய உலகின் முதன்மையான “எலக்ட்ரானிக்” நகரம் அது! அந்த நகரத்துச் சாலைகளில் ஆசிரியரைக் கம்பீரமாக அமர வைத்து அழைத்துப் போனார் திவ்யா! படிப்பு வராது, பாதம் பார்த்து நட, அடக்கமாய் கிட, அடுப்படியே கதி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன சாஸ்திரப் புராணங்கள்! அதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள்… என உலகம் முழுவதும் பறந்து சென்றுவிட்டார்கள் தமிழ்நாட்டு மகளிர்!

ஆகாயம் தொட்ட ஜப்பான்!

இப்படியான நிலையில் அருகில் இருந்த சுற்றுலா தலங்களுக்குத் தோழர்கள் அழைத்துச் சென்றனர். டோக்கியோ நகரத்தில் இருந்த “TOKYO SKYTREE TOWER” எனும் இடத்திற்குச் சென்றபோது வியப்பு மேலிட்டது. சற்றொப்ப 2080 அடி உயரத்தில் அது இருந்தது. உலகம் முழுவதும் உயரமான “டவர்” இருந்தாலும், இதில் எந்தக் கட்டடமும் இல்லாமல் மிக அதிக உயரம் கொண்டது எனக் கூறினார்கள். அவ்வளவு உயரத் தில் இருந்து பார்க்கும் போது, ஜப்பான் ஆகாயம் தொட்ட வரலாற்றை உணர முடிந்தது!
தொடர்ந்து கமாகுரா எனுமிடத்தில் 37 அடி உயரத்தில் இருந்த புத்தர் சிலையை ஆசிரியர் பார்வையிட்டார். அங்கிருந்த மூங்கில் காடுகள், கடற்கரைப் பகுதிகள் போன்றவை நேர்த்தியாகவும், நெஞ்சை அள்ளுவதாகவும் இருந்தன. டோக்கியோ நகரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் இருந்த கிராமப் பகுதி அது. காரிலும், சற்று நடைப் பயணத்திலுமாக அந்த அனுபவமே மறக்க முடியாதது!

தோழர்களின் அன்பு மிகுதி!

ஆசிரியரை ஜப்பான் தோழர்கள் எவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள் என்பதற்கு, இப்போது சொல்லப் போகும் நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு! கிராமப்பகுதி என்கிற போது அனைத்து உணவுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனினும் தோழர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். இணையம் மூலமாக உணவகம் தேடும் பணி தொடங்கியது. திடீரென அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி! ஆமாம்! சிறிய உணவகம் ஒன்று அவர்களின் கண்ணில் தென்பட்டது. வாகனங்கள் விரைந்தன! எனினும் அந்த உணவகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் அங்கேதான் எங்கேயோ அந்த உணவகம் ஒளிந்திருந்தது. ஒரு வழியாய் கண்டுபிடித்து உள்ளே சென்றால், பத்துக்குப் பத்து சதுரடியில், பத்து பேர் மட்டும் சாப்பிடும் அளவு சிறிய இடம். அதில் ஒரு பகுதியில் அடுப்படியும் இருந்தது. எல்லோரும் அமர்ந்த பிறகு என்ன இருக்கிறது எனத் தோழர்கள் கேட்டார்கள். சுடு சோறு, பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு, ஊறுகாய் எனப் பட்டியல் வாசித்தார்கள். நம்மவர்கள் மாறி, மாறிப் பார்த்துக் கொண்ட போது, மத்தி மீன் குழம்பும் இருக்கிறது என அந்த ஜப்பானியர் மகிழ்ச்சியை அதிகப்படுத்தினார்.

ஜப்பான் கிராமத்தில் தமிழ்நாட்டு உணவு!

இருவர் மட்டுமே பணிபுரியும் அந்த உணவகத்தில் தமிழ்நாட்டுப் பருப்பு வகைகள், மசாலா பொடிகள், சிகப்பு குண்டு மிளகாய் என நம் நாட்டு “மெஸ்” தோற்றத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து விசாரித்த போது, உணவக உரிமையாளர் பெயர் “கெந்தரோ”. தமிழ்நாட்டிற்கு 5 முறை வந்துள்ளார். நம் உணவுகள் சிறப்பாக இருக்கிறது என மகிழ்ந்து, அதேபோன்று தயார் செய்து ஒரு சிறிய நகரப் பகுதியில் நடத்துகிறார். உணவகத்தின் பெயர் கமாகுரா பவன். ஆசிரியரை அறிமுகம் செய்தபோது, ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை சென்னை வரும்போது, பெரியார் திடல் வாருங்கள் என ஆசிரியரும் அழைப்பு விடுத்தார். உரிமையாளர், உதவியாளர், ஆசிரியர் மூவரும் படம் எடுத்துக் கொண்டனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

தொடர்ந்து அன்றைய தினம் இரவு ஜப்பானின் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆசிரியர் அவர்கள் சந்தித்தார்கள். இந்நிகழ்வு “தொரானொமோன்” எனுமிடத்தில் உள்ள நந்தினி தென்னிந்திய உணவகத்தில் நடைபெற்றது. இந்த உணவகத்தைத் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா மாநில இளைஞர்கள் இணைந்து நடத்துகிறார்கள். இட்லி, தோசை வகைகளை சூடாகவும், சுவையாகவும் தந்தனர். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர்.

என் வயது 91 அல்ல; 19 தான்!

அடுத்த நாளில் “டீம்லேப்ஸ் ப்ளானட்” என்று சொல்லக்கூடிய, ஒளிவிளக்குகளால் ஆன புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி, “என் வயது 91 அல்ல; 19 தான்’’ என்பார்கள். அதை நேரடியாகப் பார்த்த பல தருணங்களில், இது முக்கியமான தருணம்! நன்றி ஜப்பான்! உங்கள் நாட்டில் 100 வயது என்பதும், 125 வயது என்பதும் ஒரு பொருட்டே அல்ல! எங்கள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்பது போல, இந்த உலகத்திற்கே ஜப்பான் மாடல் என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தலாம்! இதைவிட சிறப்பாக வேறொரு நாடு வந்தால் அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடலாம்! அதுதான் பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவு!
இந்த “டீம்லேப்ஸ் ப்ளானட்” அமைப்பைப் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் சென்ற ஆசிரியர், இது எப்படி செயல்படுகிறது, இதன் சிறப்பு என்ன என்று சில நிமிடங்களிலே கணித்தது நாங்கள் பழைய தலைமுறை, ஆசிரியர் தான் இளம் தலைமுறை என எங்களுக்கு ஓங்கி உரைத்தது. ‘‘பிரின்சு, இங்க வாங்க… இப்படி படம் எடுங்க’’ என்று சொன்ன போது, எம்.எம்.அப்துல்லா அவர்கள் அசந்து போனார்கள். எதை விடுவது, எதை தொடர்வது என்று நமக்கும் தெரியவில்லை.

கடலுக்கு நடுவில் மதிய உணவு!

நிறைவு நாளில் “உமிஹொத்தாரு” எனும் இடத்தில் கடலுக்கு அடியில் இருந்த பாலத்தில் பயணம் செய்தோம். இந்தக் கரையில் தொடங்கும் சுரங்கப் பாதை 9.6 கிலோ மீட்டரும், அந்தக் கரையை அடையும் மேம்பாலம் கடலுக்கு மேலே 4.4 கிலோ மீட்டர் தூரமும் இருந்தன. இடையில் கடற்கரையை இரசிக்கும் வண்ணம் இட அமைப்புகளும், வணிக வளாகங்களில் ஏராளமான உணவகங்களும் இருந்தன. அதாவது 10 கிலோ மீட்டர் தூரத்தில் கடலின் நடுவில் சென்று உணவருந்தி, பொழுதைக் கழித்து வரலாம். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள்! இந்த அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலும் ஆசிரியர் அவர்களுடன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் அவர்களின் வாழ்விணையரும் பங்கேற்றனர்.
நாளை நாம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம்!

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (2) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்


விடுதலை நாளேடு

 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) என்பது இந்தியத் தூதரகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்! அதில்தான் நமது தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இதில் ஓரளவு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். தமது குடும்பத்தார் நம்பிக்கைக்காகத் தமது இல்லத்தில் கடவுள் படம் வைத்திருப்போரும் உண்டு!

நாங்கள் திராவிடர்கள்!

“எனினும் நாங்கள் திராவிடர்கள்! எங்கள் தலைவர் பெரியார்! எங்கள் நாடு தமிழ்நாடு! சமூகநீதியும், இட ஒதுக்கீடும் எங்களிரு கண்கள்! எங்களையும், தந்தை பெரியாரையும் பிரிக்க முடியாது”, என்கிற தெளிந்த சிந்தனை கொண்டவர்கள்!இல்லாவிட்டால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்று தலைப்பிட்டு, ஜப்பானில் இப்பெரு விழாவை எடுக்க முடியுமா?

இதற்கு முன்னாலும் “டோக்கியோ தமிழ்ச் சங்கம்” எனும் பெயரில் அமைப்பு இருந்தது. ஆனால் அவை தமிழர் களுக்கும், தமிழர் தம் பிள்ளைகளுக்கும் பயன்படவில்லை. அதில் பெண்களுக்கு மதிப்பே இருந்திருக்காது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை! இப்படியான நிலையில் தான் நம்மவர்கள் தோன்றினர்!

தோழர்களின் அணிவகுப்பு!

தொடக்கத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை பொதுவான தலைப்புகளிலும், இலக்கியம் கலந்தும் கொண்டாடினர். ஒரு கட்டத்தில் நம் அரசியலை, நம் கொள்கைகளை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். அப்படியான சூழலில் தான் பெரியார், அண்ணா, கலைஞர் தொண்டர்கள் ஒன்று கூடினர். இவர்கள் தான் இன்றைக்கு “ஜப்பான் வாழ் திராவிடர்கள்” என மிளிர்கிறார்கள்.

இவர்கள் “NRTIA Japan” என்கிற வாட்சப் குழு ஒன்றையும் இயக்கி வருகிறார்கள். இதில் ஜப்பான் வாழ் தமிழர்கள் மட்டும் இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் திராவிட உணர்வு கொண்ட தமிழர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வி.குன்றாளன், இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, ஏ.கணேஷ், வி.ராஜா, இரா.அய்ஸ்வர்யாதேவி உள்ளிட்ட தோழர்கள் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்!

கொள்கைத் தங்கங்கள்!

சென்னையில் இருந்து ஜப்பான் செல்ல சற்றொப்ப 11 மணி நேர விமானப் பயணம். இரண்டு விமானங்கள் மாற வேண்டும். ஒரு நாள் நிகழ்ச்சிக்காக இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விகள் இருந்தாலும், கடல் கடந்து வாழும் நம் கொள்கைத் தங்கங்களுக்குப் பெருமைச் சேர்க்க வேண்டாமா? அந்த வகையில் தான் 13.09.2024 அன்று ஜப்பான் நரிட்டா விமான நிலையத்திற்கு காலை 8 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்றடைகிறார்.

இதற்கிடையில் “ஜப்பானில் பெரியார் பிறந்தநாள் விழாவா?”, என்கிற வினாக்கள் வியப்போடும், மகிழ்வோடும் வந்த வண்ணம் இருந்தன. அதேநேரம் செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் விழாவை தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஆக இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளுக்கு ஆசிரியர் தமிழ்நாட்டில் இல்லையா என்கிற ஆச்சர்யங்களும் மலர்ந்து கொண்டிருந்தன.

தனி முத்திரைப் பதித்த ஆசிரியர்!

25.10.1997ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற மத்தியக் கமிட்டி கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் ஒரு முழக்கத்தை வைக்கிறார்கள். அதாவது ‘‘வரும் 21 ஆம்நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே! பெரியாரை உலகமயம் ஆக்குவோம்‌’’ என்று அறிவித்தார்கள். ‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும்’’ நமது திராவிடர் இயக்கங்களுக்கே உரிய சிறப்பல்லவா! அந்த வகையில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஜப்பானுக்கே சென்று பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடி, வரலாற்றுச் சிறப்புமிக்க தனி முத்திரையைப் பதித்து வந்துவிட்டார் நமது தலைவர் அவர்கள்!

விமான நிலையத்தில் மலர்ந்த முகங்களோடும், மணம் வீசும் மலர்களோடும் காத்திருந்தனர் தோழர்கள்! மூன்று வாகனங்களில் அணிவகுத்து, உலகப் புகழ்பெற்ற டோக்கியோ நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆசிரியரை! ஒரு காலத்தில் ஜப்பான் செய்யாத போர்கள் இல்லை. கால மாற்றத்தில் முற்றிலும் மாறிப் போனார்கள். இன்றைக்கு உலகிற்கே எடுத்துக்காட்டாய் உச்சத்தில் இருக்கிறார்கள். மனிதர்களை மதிக்கும் விதத்தை, அந்த நாட்டில் கற்காமல் போனால், வேறு எங்குமே அதை நாம் அடைய முடியாது என்று சொல்லுமளவு உயர் ரக பண்பாடு அவர்களுடையது!

திராவிடர் இயக்கப் புரட்சி!

அந்த மக்களைப் போலவே, அந்த நாடும் அவ்வளவு அழகானது! மக்கள் திரளும், வாகனப் போக்குவரத்தும் கலந்த அந்தப் பரபரப்பில், ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவு அமைதி நிறைந்த நாடு! அப்படியான நாட்டில்தான் கிராமங்களிலும், சிற்றூர்களிலும் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, இன்றைக்கு மிக உயர்ந்த நிலையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

ஜப்பான் எப்படி அமைதிப் புரட்சி செய்ததோ, அதேபோல தமிழ்நாட்டிலும் திராவிடர் இயக்கங்கள் பெரும் புரட்சி செய்தன. இந்தியாவின் வட மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதையே, வெளிநாட்டிற்குச் செல்வதைப் போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். அப்பேற்பட்ட கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு! அந்த வகையில் கல்விக்காகத் திராவிடர் இயக்கங்கள் செய்த சாதனை தான், இன்றைக்குத் தோழர்கள் ஜப்பானில் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி!

நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அந்தளவு வரலாற்றுப் பெருமையும் உண்டு! நாம் நான்கு படிகள் மேலே ஏறினால், இரண்டு படிகள் கீழே இறக்கிப் போடும் வேலைகளைச் செய்வது ஆரியம். அப்பேற்பட்ட தொடர் போரில், நாளும் பொழுதும், 365 நாளும் கல்விச் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டு 91 ஆண்டுகளை நிறைவு செய்தவர் தலைவர் வீரமணி அவர்கள்!

9 ஆயிரம் வருமான உச்சவரம்பு பிரச்சினை, ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் 69 விழுக்காடு ஒதுக்கீடு போன்ற பெரும் போராட்டங்களில் சளைக்காமல் போர் செய்து, இன்றைக்கு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனச் சொல்லுமளவு வந்ததற்குத் திராவிடர் கழகத் தலைவரும் மிக முக்கியக் காரணம் அல்லவா! நீதிக்கட்சி தலைவர்கள், பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என அனைவரின் உழைப்பிலும் உருவான இந்த கல்வி வரலாற்றை, பன்மடங்கு உயர்த்தி வைத்திருப்பவர் ஆசிரியர் அவர்கள்! அப்பேற்பட்ட திராவிட இயக்கத் தலைவரை அன்போடு வரவேற்று “நிஷி கசாய்” எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தொடர்ந்து பயணம் செல்வோம்!