தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)
பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.
சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:
29.10.2019 அன்றைய தொடர்ச்சி...
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம
(அகம் - 141)
தெருவில் வரிசையாக விளக்கேற்றுவதை மறுகு விளக் குறுத்து என்கின்றார் நக்கீரர். இன்றும் தெருவில் முற்றம், வாசலிலும் மதிற்சுவர்கள் மேலும் தானே வரிசை வரிசையாக விளக்கேற்றிவைக்கிறோம். எல்லோரும் கொண்டாடும் மகிழ்ச்சி விழா என்பது இதிலும் சுட்டப்படுகிறது. பாலை வழியில் பொருள் வயிற்பிரிந்ததன் காதலர், நல்ல சகுனம் நேர்வதாலும் இனிய கனவுகள் தோன்றுவதாலும் கார்த்திகை விழாவைத் தன்னுடன் கொண்டாட விரைவில் வருவாராக! என்று தனது விழைவைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். கணவன், மனைவி இருவரும் உடனிருந்து கொண்டாடும் விழாவாக இது குறிக்கப்படுவது, இன்றும் தீபாவளியில் இளம் மணமக்களை உடனழைத்துக் கொண்டாடும் போக் கினை நினைவூட்டுகிறது.
இன்று நாம் காணும் விழாக்களில் இந்தியநாடு முழுவதும் பற்பல வகுப்பாரும் ஒருங்கு கொண்டாடும் விழாவாகத் தீபாவளி காணப்படுகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பிறிதொரு பாடலில் திருக்கார்த்திகையைப் பெருவிழா என்றே குறிப்பிடுகின்றார்.
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே
(அகம், 185)
இது முருகனுடன் தொடர்புடைய விழாவாக இருப்பது போலவே குறிஞ்சி நிலமலைகளுடனும் தொடர்புடைய விழாவாகத் திகழ்ந்தது என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. திருவண்ணாமலைக் கார்த்திகைதீபம் இன்று ஓங்கிய சிறப்புடையது. முத்தொள்ளாயிரத்தில் ஆபுகு மாலை அணி மலையில் தீயேபோல் என்று சொக்கப்பனை கொளுத்தப் படும் சிறப்புச் சுட்டப்படும். குன்றின் மேலிட்ட விளக்கு என்ற பழமொழி இவ்விழாவினின்றும் பிறந்ததேயாகும். சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியிலும் இக் குன்றின் மேல் வைக்கும் திருக்கார்த்திகை விளக்கு உவமை யாகக் கூறப்படுகிறது.
தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறுரைப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்....
கோங்கம்பூ, இலவம்பூக்களுடன் செங்குவளைப் பூக் களும் கார்த்திகை விளக்கு வரிசையுடன் பொருத்திப் பார்க் கப்படுகின்றன. களவழி நாற்பதிலும், கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றனவே என இவ்விளக்குவமை உளது (சாறு-விழா).
கொண்டாடும் கால ஒற்றுமை
திருக்கார்த்திகை, தீபாவளி இரண்டும் பெயரொற்றுமை வேறு சில ஒற்றுமைகளினாலேயே ஒன்றாகிவிடுமா?
தீபாவளி அய்ப்பசி மாத அமாவாசையை ஒட்டியும், திருக்கார்த்திகை அதைத் தொடர்ந்துவரும் கார்த்திகை மாதப் பவுர்ணமியை ஒட்டியும் கொண்டாடப்படுகின்றன.
தீபாவளியும் திருக்கார்த்திகையும் 1974, 1975 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் எவ்வெத் தேதிகளில் கொண்டா டப்பட்டன?
தீபாவளி 1974 13-11-74 ஆனந்த, உவாநாள்
அய்ப்பசி 27 ஒட்டியது
திருக்கார்த்திகை 1974 28-11-74 ஆனந்த, நிறைமதி நாள்
கார்த்திகை 13 ஒட்டியது
தீபாவளி 1975 2-11-75 இராட்சச, உவாநாள்
அய்ப்பசி 16 ஒட்டியது
திருக்கார்த்திகை 1975 19-11-75 இராட்சச, நிறைமதி
கார்த்திகை 13 ஒட்டியது
இரண்டு விழாக்களுக்கும் இடைவெளி பதினைந்து, பதினாறு நாட்களேயாதல் காண்க.
1984இல் 23-10-84-ரக்தாட்சி, அய்ப்பசி 7-உவாநாளை ஒட்டித் தீபாவளி கொண்டாடப்பட்டது. அடுத்த நிறைமதி அதே அய்ப்பசியில் வந்துவிட்டதால் திருக்கார்த்திகை 6-12-84 ரக்தாட்சி, கார்த்திகை 21இல் நிறைமதி நாளை ஒட்டிக் கொண்டாடப்பட்டது. அதனால் இடைவெளி ஒரு மாதமாகி விட்டது. மீண்டும் 1985இல் இவ்விரு விழாக்களும் கொண் டாடப்படப் போகின்ற நாட்கள் காண்க :
தீபாவளி 1985, 11-11-85 குரோத, அய்ப்பசி 26 உவாநாளை ஒட்டி
திருக்கார்த்திகை 1985, 26-11-85 குரோத, கார்த்திகை 11 நிறைமதியை ஒட்டி
இடைவெளி பதினைந்து நாட்களேயாதல் அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், தொடர்ந்து வரும் திருக்கார்த்திகைப் பவுர்ணமியில் திருக்கார்த்திகையும் ஏறத்தாழப் பதினைந்து, இருபது நாட்களுக்குள் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதல் உவாநாள், அடுத்த நிறைமதியை ஒட்டி இவை வருவதால், இவைகளிடை ஒற்றுமை ஏதும் இருக்குமோ என்ற அய்யம் எழுகிறது.
தமிழர்களின் மாதக்கணக்கு
தமிழர்கள் முழுமதியை வைத்தே மாதங்களைக் கணக் கிட்டனர். ஒவ்வொரு முழுமதியும் ஒருமாத நடுவாகக் கருதப்பட்டது. அற்றைத் திங்கள் என்றும், தொல்லைத் திங்கள் என்றும் கடந்த மாதம் குறிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையைக் கண்டதும் புதிய மாதம் பிறந்தமையையும் நாள் வளர்ச்சியையும் எண்ணத் தலைப் பட்டனர். எண்ணாள் பக்கத்துப் பிறை எனும்போது எட்டா வது வளர்பிறை நாள் குறிக்கப்பட்டது. இத்தகைய முறையில் மதியானது நட்சத்திரங்களைச் சாரும் முறையை வைத்து நாட்கள் குறிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில், வடநாட்டில் கங்கைக்கரையிலிருந்த காலத்தில், சேரன் செங்குட்டுன் ஒருமுறை வானத்தை நோக்கியபோது, அருகிலிருந்து கணிவஞ்சி நீங்கி எண்ணான்கு திங்கள் ஆயின என்றான். 32 மாதங்கள் கழிந்தமை அன்று அவ்வாறு உணர்த்தப்பட்டது.
கார்த்திகைக்கு முதலிடம்
இரண்டாம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) வராகமிகிரர் என்ற வானநூல் அறிஞர் தோன்றி இந்திய நாட்டுக் காலக் கணிப்பில் குறிப்பிடத்தக்க சில மாறுதல்களைச் செய்தார் என்பர்.
அதற்கு முன்பு 27 நட்சத்திரங்களையும் கொண்டு, கார்த் திகை முதலாக எண்ணுகிற பழக்கம் இருந்தது. மணிமேகலை யில்,
இருதிள வேனில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவ யின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
(11:40-44)
என்று புத்தர் தோன்றிய வைகாசி விசாக நட்சத்திரம் கூறப்படுகிறது. புத்தர் வடநாட்டில் பிறந்தார், அவர் பற்றிய கதையும் அங்கிருந்து பெறப்பட்டதே. இதில் இருந்து இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்கள் அடங்கியது. இரு மாதங்கள் கொண்டது. இருது இருழூஇருது ழூருது. வடமொழியில் இது ருதுவென வழங்கும். இரண்டு-ரெண்டு ஆவதுபோல் இருது ருதுவாகியிருக்க வேண்டும். தமிழர் ஆண்டுக் கணக்கு மேட-இராசியில் தொடங்கிய தாதல் வேண்டும். மேடம் என்பது யாடு, ஆடு என்றெல்லாம் தமிழில் கூறப்படும். அதிலிருந்துதான் யாண்டு, ஆண்டு என்பன மூக்கொலி பெற்றுப் பிறந்தன என்பர். பன்னீராட் டைப் பருவத்தாள், ஏழரையாட்டைச் சனி என்ற வழக்காறு களும் காணலாம். வருடை என்பதும் மலையாடு என்றே பொருள்படுமென்றும் அதிலிருந்து பிறந்ததுதான் வருடம் என்றும் டாக்டர் தே.ஆண்டியப்பன் கருதுவார். மேற்கண்ட மணிமேகலை அடிகளில் எரிகதிர் இடபம் என்பது சூரியன் வந்து நின்ற இடபராசி. அது வைகாசி மாதத்தைச் சுட்டும். 27நட்சத்திரங்களில் முன் பதின்மூன்றுக்கும் பின் பதின்மூன் றுக்கும் இடைப்பட்டது விசாகம் என்பது அடுத்த இரண்டடி கட்கும் தரப்பட்டுள்ள பொருள். கார்த்திகை முதலாக எண்ணினால்தான் பதினான்காவதாக விசாகம் வரும். இன்றைய வராகமிகிரர் முறை அசுவனி முதலாக எண்ணு கிறது. அதன்படி, எண்ணினால் பதினாறாவதாகத்தான் விசாகம் வரும். எனவே, மணிமேகலை குறிப்பிடும் முறை வராகமிகிரருக்கு முற்பட்டது என்பது போதரும்.
தமிழர்களும் முன்பு கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதத்தை எண்ணினார்களோ என்ற அய்யத்தைக் கார் நாற்பது ஏற்படுத்துகிறது. அதில் கண்ணங்கூத்தனார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி
தூ தொடு வந்த மொழி
இதில் தோன்றிப் பூக்கள் எங்கும் பூத்துக் காட்சியளிப்ப தற்குக் கார்த்திகை விளக்குகள் உவமை கூறப்பட்டுள்ளன. மேலும், கார்த்திகை நாள் இதன்கண் தலைநாள் எனக் குறிக்கப்பட்டிருத்தலால் அதுவே மாதத் தொடக்க நாளாக இருந்தது போலும் என்பர்.
இன்று ஞாயிறு முதலாக வாரத்திற்கு ஏழுநாளாக எண்ணுகிறோம். முன்பு வாரக்கணக்கு இன்றி, மாதத்திற்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27நாட்கள் எனக் கொண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டது என்பர் திரு. ந.ரா. முருகவேள். இன்று திங்கள், செவ்வாய் என்று நாட்பெயர் களைக் குறிப்பிடுவதுபோல முன்பு மகம், ஆதிரை, கார்த் திகை என்று நாட்களைக் குறிப்பிட்டனர். தமிழில் நாள் என்பதே நட்சத்திரத்தைக் குறிக்கும். நம் உரையாசிரியர்கள் மகத்திற்கொண்டான். ஆதிரையில் வந்தான், கார்த்திகையில் பெற்றான் என்பது போலக் காட்டும் எடுத்துக்காட்டுகளால் இதை உணரலாம் என்பர் டாக்டர் இரா. சாரங்கபாணி. கார்த்திகை நட்சத்திரம் மாதத் தொடக்க நாளாக இருந்ததுபோலக் கார்த்திகை மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்ததும் உண்டு.
வராகமிகிரரின் புதிய கணக்கு
இவ்வாறு நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கப்படுகிற சூரிய மாத முறை மாற்றி, வராகமிகிரர் சாந்திரமாத முறை யைப் புகுத்தினார். அவர் சந்திரனை மய்யமாக்கிக் கொண்டு வளர்பிறை, தேய்பிறைத் திதிகளை ஆதாரமாக்கி மாதக் கணக்கை வகுத்தார். அவர் கணக்கிற்கும் பழைய கணக்கிற் கும் ஒப்பிட்டபோது பழைய கணக்கில் 15 நாட்கள் கூடுத லாவது புலனாகிறது. எனவே, அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டு அவர் கணக்கிட்டதால், அவருடைய மாத முறை 15 நாட்கள் முன்னே போய்விட்டன. வடநாட்டில் வராகமிகிரர் முறையே பின்பற்றப்படுகிறது. திரு. எல்.டி. சுவாமிக்கண்ணு இவ்வாறு பதினைந்து நாட்கள் ஏன் தள்ளப்பட்டன என்ற காரணத்தை விளக்கியுள்ளார் சாந்திர மாதமுறைக்குத் திதி அடிப்படை. திதியும், நாளும் 64 என்ற எல்லையில் சிறிது வேறுபட்டன. திதி 64 கொண்டதற்கு நாளும் 64 என அமையாமல் சிறிது குறைந்து 63.001412384 மட்டுமே வருவதால், இவ்வாறு ஏற்படும் குறைவு, பலநூறு ஆண்டுகள் கழித்து நோக்கினால், 15 நாட்கள் குறையு மென்றே, வராகமிகிரர் அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டார். வராகமிகிரருக்குப் பிறகு வடநாட்டில் சாலி வாகன சகாப்தம் என்ற புதியமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி நமக்கு ஆனந்த ஆண்டு (1974- 75) நடந்தபோது, அங்கு சகஆண்டு 1896 நடைபெற்றது; இப்போது நமக்கு ரக்தாட்சி ஆண்டு (1984-85) நடக்கும்போது, அங்கு சாலி வாகன ஆண்டு அல்லது சகஆண்டு 1906 நடக்கின்றது. இதுபோலவே மாதக்கணக்கிலும் நமக்கும் வடநாட்டவர் கட்கும் சுமார் 15 நாட்கள் வரை இடைவெளியுளது. அஃதா வது வடநாட்டில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது நாட்கள் முன்னதாகவே பிறந்து விடுகிறது.
மாதங்கள் மாறியமை
1974-1975 பிரமாதீச, ஆனந்த ஆண்டுகளில்
நமக்கு மார்கழி 7 நடக்கும்போது அங்கு புஷ்யம் (தை) என்ற அடுத்த மாதம் பிறந்து விட்டது. நமக்குப் பங்குனி 9 நடக்கும்போது அங்கு சைத்திரம் (சித்திரை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.
நமக்கு அய்ப்பசி 6 நடக்கும்போது அங்கு கார்த்தீகம் (கார்த்திகை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.
1984-ராட்சச ஆண்டு
நமக்கு அய்ப்பசி 7 நடக்கும் போது அங்கு கார்த்தீகம் என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.
இவற்றிலிருந்து ஏறத்தாழ 22 அல்லது 23 நாட்கள் முன்னதாக அவர்களுக்கு மறுமாதம் பிறந்து விடுவது புலனாகிறது.
ஒருகணம் இப்போது சிந்தியுங்கள். நாம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் திருக்கார்த்திகையைத்தான் அவர் கள் இரண்டு, மூன்று வாரம் முன்னதாகத் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.
1984இல் அல்லது ராட்சச ஆண்டில் இங்கு அய்ப்பசி 7இல் (23-11-84) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார் கள். வடக்கேயும் அதே நாளில்தான் கொண்டாடினார்கள்.
ஆனால், அவர்கள் அவர்களுக்குரிய கார்த்தீகம் மாதத் தில் முதல்நாள் தீபாவளியைக் கொண்டாடினார்கள். 1985இல் அல்லது குரோத ஆண்டில் இங்கு அய்ப்பசி 26இல் (11-11-85) தீபாவளியைக் கொண்டாடும்போது, வடக்கேயும் கார்த்தீகம் 20ஆம் நாள் அதாவது அதே நாளில் - தீபாவளி யைக் கொண்டாடுவர்.
முடிவுகள் :
இவற்றிலிருந்து பல அடிப்படை உண்மைகள் புலனா கின்றன :
1. நாம் நம் கணக்குப்படி கார்த்திகை மாதத்தில் தான் (பவுர்ணமியை ஒட்டி) திருக்கார்த்திகையாகிய விளக்கீடு விழாவைக் கொண்டாடுகிறோம்.
2. வடக்கே அவர்களும் அவர்கள் கணக்குப்படி கார்த்தீகம் என்ற கார்த்திகை மாதத்தில்தான் (அமாவா சையை ஒட்டி) தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அஃ தாவது அவர்களுக்கும் இது திருக்கார்த்திகையே - விளக்கீட்டு விழாவேயாகும். கார்த்தீக மாதத்தில் கொண் டாடுவதை நினைவு கொள்க.
3. இங்கு முழுநிலவு நாளை ஒட்டியும் அங்கு உவா நாளை ஒட்டியும் கொண்டாடப்படும் வேறுபாடு கருதத் தக்கது.
4. நாம் நம்முடைய திருக்கார்த்திகையையும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கொண்டாடி வருவ துடன், அவர்களைப் பின்பற்றி அவர்கள் கொண்டாடும் தீபாவளியையும் வேறெனக் கருதிப் பிற்காலந்தொட்டுக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். இதனால் பண்டிகை நமக்கு இரண்டாகிவிட்டது.
5. இதனால் நாம் ஒன்றைப் புத்தாடை பூண்டு, வெடி வைத்து, இனிப்புண்டு மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற் குரிய ஒன்றாகவும், மற்றதை விளக்கு வைத்துக் கொண்டா டும் விழாவாகவும் வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். முன் னதற்கு நரகாசுரன் கதையைக் கூறி திருமாலை வழிபடும் விழாவாகவும், பின்னதற்கு முருகன் கதையைக் கூறி அவனது பெருமையைப் போற்றி வழிபடும் விழாவாகவும் பின்னணி கூறியும் இவற்றை வேறுபடுத்த முயன் றிருக்கிறோம்.
6. முருகனுக்குரியது கார்த்திகை நட்சத்திரம். வடநாட் டவர்கள் கார்த்திகை மாதத்திலேயே இதைக் கொண் டாடுவதால், என்னதான் நரகாசுரன் கதையைக் கூறினாலும் அவர்களுக்கும் தொன்மை மிக்க காலத்தில் முருகன் தொடர்பாலேயே இவ்விழா தோன்றியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை. மேலும் கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை நாளை மாதத் தொடக்கமாகவும் ஆண்டுத் தொடக்கமாகவும் கருதிய காலம் ஒன்றுண்டு என்பதைக் கார் நாற்பதால் முன்பு கண்டோம். வடநாட்டவர் தீபாவ ளியை ஆண்டுப் பிறப்புப்போல் கொண்டாடி, கடைகளுக் குப் புதுக்கணக்கு எழுதி வருவதை அறிவோம். சித்திரை முதல்நாள் புதுக்கணக்கு எழுதும் தென்னாட்டு மரபை ஒத்தது இதுவாகும்.
7. தெற்கே அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியைக் கொண்டாடினாலும் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசைக்குப் பிறகு, முருகனுக்குரிய சஷ்டி விரதம் தொடங்கி விடுகிறது. இக்கடும் விரதம் ஆறாம் நாள் முடிகிறது. அய்ந்தாம் நாள் முருகன் கோயில்கள் அனைத் திலும் சூரசம்மாரம் திருவிழா நடக்கிறது. முருகன் சூரனை வென்றதைக் கொண்டாடும் மக்கள்-நோன்பிருந்து விரதம் செலுத்தும் இக்கந்தர் சஷ்டி விழா, தீபாவளியைத் தொடர்ந்து வருவதால் தீபாவளிக்கும் முருகனுக்கும்கூடத் தொடர்புண் மையைச் சிந்திக்க வேண்டும். திருக்கார்த்திகை முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) என்பர். சேர நாட்டில் மன்னர் களுக்கு அவர்கள் - பிறந்த நாளின் பெயரே பெயராதலும் சுவாதித் திருநாள், மூலந்திருநாள் என அழைக்கப்படுதலும் அப்பிறந்த நாட்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட மையும் கருதத்தக்கன. இவ்வகையில் முருகனின் பிறந்தநாள் விழாவாகவும் வெற்றி விழாவாகவும் இத்திருநாட்கள் கொண்டாடப்பட்டுப் பலநூறு ஆண்டுகளாக மாறியும் வேறுபட்டும் அடிப்படையில் ஒற்றுமைப்பட்டும் விளங்கி வருகின்றன.
8. முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) ஆறு புள்ளியிட்ட கோலம்போல் அழகுற விளங்கும். அது விளக்கு வரிசைபோல் இருப்பதால், விளக்கு வரிசைகளை வைத்து வழிபடும் மரபு தோன்றியிருக்க வேண்டும். வடநாட்டவரும் விளக்கு வரிசையை வைத்தே வழிபடுவது, இதன் தொன்மை அடிப்படை முருக வழிபாடே என்பதை நிலை நிறுத்தும்.
9. கார்த்திகைத் தீபத்தன்று அல்லது அடுத்தநாள் சகல விஷ்ணுதலங்களிலும் கார்த்திகைத்தீபம் என்ற குறிப்பைப் பஞ்சாங்கம், நாட்காட்டிகளில் காணலாம். அதற்க டுத்த நாள் சிவாலயதீபம் எனவும் சுட்டப்படுகிறது. திருக் கார்த்திகை விழாவைத் திருமால் வழிபாட்டுடன் இணைத்து, நரகாசுரன் கதையைக் கொண்டுவந்ததற்கும் ஏதேனும் ஓர் அடிப்படை இருந்திருக்க வேண்டும். முல்லைக்குத் தெய்வம் மாயோன்; குறிஞ்சிக்குத் தெய்வம் சேயோன் முல்லையும் குறிஞ்சியும் ஒன்றையடுத்தொன்றாக அமைந்த நிலங்கள். இதனால் இவ்விரு வழிபாடுகளும் இணைய நேர்ந்த இடங்கள் பலவாகும். பரிபாடலிலும் இவ்விரு தெய்வங்கட்கே மிகுதியான பாடல்கள் காணப்படுகின்றன.
10. இவ்விழாவின் தோற்றம் வளர்ச்சியை உற்று நோக்கும்பொழுது, முதலில் தமிழ் மயப்படுத்துதல், திராவிட மயமாக்குதல்தான் நடந்துளது; பிறகுதான் சமற்கிருதமயமாக் கப்படுதல் நிகழ்ந்துளது. அங்ஙனம் சமற்கிருதமயமாக்கி னாலும் முன்னைய திராவிட மரபுகளை முற்றிலுமாக மறைக்க முடியவில்லை. இங்ஙனமிருக்கவும் உலக ஆய்வு கள் பலவும் மேற்பரப்பைக்கண்டு முடிவுகூறும் ஆய்வு களாகவே விளங்கி வருகின்றன.
இந்திய நாடு முழுமையும் சென்று, பல்வேறு மொழி களைப் பேசும் பல்வேறு மாநிலங்களிலும் ஊடுருவி ஆராய்ந்தால் இந்த ஒரு விழாவைப்பற்றி மேலும் பல உண்மைகள், தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கும் மெய்ம்மைகள்போல் கிடைக்கப்பெறும். சமற்கிருத மயமாக் கப்பட்டமை என்பது உள்ளீட்டிலன்று என்ற உண்மையும் உறுதிப்படும்.
- விடுதலை நாளேடு 31 10 19