ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?

எழுத்தாளர்: மே.கா.கிட்டு பிரிவு:பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014வெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2014

தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?


 


திராவிடம்


நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு


தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்றுஉண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சிலநாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தநாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளியிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்துசெய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றைஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே. கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார்.

‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக்கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவுசெய்கிறது. கடந்த 08. 07. 2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி. கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலயபிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருடனும் அந்நாளில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்களுடனும் வைத்தியநாத ஐயர் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து சாமி தரிசனம்செய்தார்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்.

இப்பொழுது மட்டுமல்ல, 23. 02. 1997 ஆம் ஆண்டு‘தினமணி’யில் “ஆலயப் பிரவேசத்தின் முன்னோடி”என்ற தலைப்பிலும் மதுரை மீனாட்சியம்மன்கோவிலில் நடந்ததுதான் முதல் கோவில் நுழைவுப்போராட்டம் என்றும், போராட்டத்தின் முன்னோடிவைத்தியநாதர் அய்யர் என்றும் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் பற்றியஉண்மைகளைத் தெரிந்தே திட்டமிட்டு மறுத்து வி. கே. ஸ்தாணுநாதனால் எழுதப்பட்ட கட்டுரைக்குமறுப்புத் தெரிவித்து உண்மையான வரலாற்றை எழுதி, கடிதமாக பெரியாரியக்கத் தோழர்கள் அனுப்பினார்கள்.

மறுப்புக் கட்டுரையை ‘தினமணி’ நாளேடு வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாசகர் கடிதம் பகுதியிலும்கூட மறுப்பை வெளியிடவில்லை. மீண்டும் ‘தினமணி’ 08. 06. 2005 இல் அதே ஸ்தாணுநாதன் எழுதிய “வரலாறு படைத்த நிகழ்ச்சி” என்ற கட்டுரையில் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிப் பற்றிய செய்தியை வெளியிட்டது. முன்பு எழுதிய கட்டுரையில் இருந்த அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரையும் அமைந்திருந்தது. இதையெல்லாம் மறுத்து பெரியாரியக்கத் தோழர்களால் 2005 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பெரியார் பாசறை வெளியீட்டின் மூலம் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நினைவாக ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்கள்.

கட்டுரையாளரின் பொய் வரலாறு ‘தினமணி’யிலிருந்து ‘தினத்தந்தி’க்கு மாறியிருக்கிறது அவ்வளவுதான். தொடர்ந்து ஒரே பொய் வரலாற்றை மாறி மாறி எழுதுகிறார். ஈழத் தமிழர் வரலாற்றை பிரசுரித்து அதை நீங்கள் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். இங்குள்ள தமிழர்களின் வரலாற்றை தவறாக உங்கள் இதழ்களில் இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01. 1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07. 02. 1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும்மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமுன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர். மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (‘கேசரி’ 71, 73 ஐசளஉhமை, 339)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில்1927இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழை வாயிலையும்கருவறையையும் கோவில் நிர்வாகிகள்பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள்சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25. 06. 1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும்12. 08. 1928இல் திருவானைக்கோவிலிலும்அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

•தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர்காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு - பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதி திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரதேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளேபெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கியதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள்இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.

இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்கமறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ. 60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர்ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்றுபாராட்டி எழுதியது.

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடுநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ. முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில்‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல்டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவுமசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939 ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
யார் இந்த வைத்தியநாத அய்யர்?

வைத்தியநாத அய்யர், திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் (1922) பெரியார் கொண்டு வந்த தீண்டப்படாதார் கோவில் நுழைவுத் தீர்மானத்தைஎதிர்த்தவர். இதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இவர் நடத்திய ஆலயப்பிரவேசம், அன்று நடக்கவிருந்த மதுரை,இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

கோவிலில் யாருக்கும் தெரியாமல், இரவு நேர கடைசிபூஜைக்குப் பிறகு, சில தாழ்த்தப்பட்டவர்களுடன் உள்ளே நுழைந்தார். இதற்கு உறுதுணையாக இருந்ததோடு கருவறையை பூட்டிவிட்டு ஓடிய பார்ப்பனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தவர், கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர். வரலாற்றுப் பிழையான கட்டுரைக்கு வரலாற்று ஆதாரங்களோடு எழுதியுள்ளேன்.

தமிழ், தமிழ்நாடு, தமிழனுக்காக பத்திரிகை நடத்துபவராகிய நீங்கள் தமிழனுடைய வரலாற்றைத் தவறாகப் பிரசுரித்ததற்காக அந்த களங்கத்தைத் துடைக்கும் வண்ணம் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கழகத் தோழர் மே.கா.கிட்டு ‘தினத்தந்தி’ ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

- கீற்று 2014 இணையத்தில்

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பஞ்சமர்களுக்கு டிக்கட்டு இல்லை. .

இது கமிஷனுக்குத் தெரிய வேண்டாமா?


12.02.1928-குடிஅரசிலிருந்து...

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது; பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத் திருக்கிறாராம் - துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.

கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதிதிராவி டர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே! பெண்ணே! என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடு வதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்குத் தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம்.

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்
12.02.1928- குடிஅரசிலிருந்து... 

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக் கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

- விடுதலை நாளேடு, 27.4.18


வியாழன், 19 ஏப்ரல், 2018

சுயமரியாதை இயக்கச் சாதனை

குடிஅரசு தரும் அரிய தகவல்கள்-10

சுயமரியாதை இயக்கச் சாதனை

  தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு பார்ப்பனர் ஒருவரால் 1944இல் எழுதப்பட்ட மொட்டைக் கடிதமும், அதையொட்டிய தோழர் மாப்பிள்ளையன் கடிதமும், அந்நாளில் இயக்கம் ஏற்படுத்திய எதிரொலி எத்தகையது என்பதை தெளிவாக விளக்குவதாக உள்ளது. சுவைமிக்க இவ்விரு பழைய கடிதங்களும் தந்தை பெரியார் அவர்கள் வசமிருந்தவைகளிலிருந்து இங்கு வெளியிடப்படுகிறது.

ராமசாமி நாயக்கருக்கு பட்டுக்கோட்டை வாசி எழுதிக் கொண்டது. தாங்கள் 12.3.1944இல் இவ்வூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தாங்கள் காலித்தனமான செய்கையில் இறங்கி வேலை செய்யுமாறு இவ்வூர் சு.ம.காரர்களை ஏவிவிட்டு விட்டீர்கள். அவர்கள், தாங்கள் போனது முதல் பார்ப்பனர்களைச் செய்யும் இம்சை சொல்லி முடியாது. இதில் எழுதியும் மாளாது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சுமார் 500பேர்கள் கொண்ட கூட்டம் அக்கிரகாரத்தில் புகுந்து குறிப்பிட்ட பெரிய மனுசர் வீட்டின் முன் நின்றுகொண்டு அவர்களைப் பேசிய வார்த்தை சொல்லி முடியாது. பிரபல வக்கீல் சாமிநாத அய்யரை அன்று இந்தக் கூட்டம் கண்டிருந்தால் கொலை செய்திருப்பார்கள். சில பிராமணர்கள் போலீஸ் அதிகாரியிடம் முறை யிட்டதற்கு அவர்களும் தலையிடமாட்டேன் என்கிறார்கள். இப்படியே தினம் நடந்து கொண்டு இருக்கிறது. பிராமணர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு சில கள்ளர்களை பணம் கொடுத்து இவ்வூரில் இருக்கும் சங்கராச்சாரியார் மடத்திற்கு காவலாக வைத்திருந்தார்கள். அதற்காக ஏன் அவர்களை வைத்தாய்? வைத்து எங்கள் தமிழர்களை எங்கள் மீதே ஏவி விட்டாய் என்று மிரட்டுகிறார்கள். நீங்கள், இங்கே இருக்கக் கூடாது என்றால், இங்கிருக்கும் பிராமணர்கள் எங்கு போவது? எங்கள் நாட்டில் உனக்கென்ன வேலை என்றால் அவர்கள் எங்கு போவது? இது அடுக்குமா? மேலும் ஸ்ரீராமநவமி அன்று சில பறையர்களை தப்புடன் மடத்திற்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டு காலித்தனம் செய்கிறார்கள்.

தாங்கள் இது விஷயத்தை நேரில் வந்து பார்த்தாவது அல்லது கடிதம் மூலமாவது இவ்வூர் சு.ம. சங்கத்தைக் கண்டித்து வைத்தால் தான் நன்மையாக இருக்கும். அல்லாவிட்டால் இன்னும் சில தினங்களுக்குள் கண்டிப்பாய் கொலை நடந்துவிடும் போலிருக்கிறது. நேற்று ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளையிடம் ஒரு தூது கோஷ்டி போனோம். அவரிடம் சொன்னதற்கு, நான் ஒன்றும் தலையிட முடியாது. வேண்டு மானால் ராமசாமி நாயக்கரைஅழைத்துவந்து ராஜி செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார். ஆகையால் தயவுகூர்ந்து இவ்விடம் வந்தால் நாங்கள் தைரியமாக தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து எங்களுக்குள்ள குறைகளைச் சொல்லி தங்களுக்குண்டாகும் சில விளக்கங்களையும் கொடுத்துவிடுகிறோம். அல்லது தங்கள் காரியதரிசியாம் அண்ணாதுரை அவர்களையாவது அனுப்பி வைக்கவும்.

8.4.1944இல் இவ்வூர் நாடியம்மன் உற்சவத்திற்காக மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி செய்ய வந்தார். அப்பொழுது ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளை, போலீஸ் ஜில்லா சூப்பிரிண்டண்ட், டிப்டி கலெக்டர், ஸ்பெஷல் கலெக்டர், சப்மாஜிஸ்டிரேட், டிஸ்டிரிக்ட் முன்சீப் இன்னும் இவ்வூர் பிரபலஸ்தர்களும் வீற்றிருந்தார்கள். அப்பொழுது இவ்வூர் சு.ம.சங்க காரியதரிசி என்று நினைக்கிறேன். மாப்பிள்ளையன் தமிழில்தான் பாடவேண்டும் என்று சொன்னார். அவர் தமிழில் தெரியாது என்றார். மீண்டும் பாடினார். நிறுத்து என்று மறுபடியும் சொன்னார். உடனே நாடிமுத்துப் பிள்ளை மாப்பிள்ளையனை வெளியே பிடித்துத் தள்ளச்சொன்னார். நாடிமுத்துப் பிள்ளையையைப பார்த்து மாப்பிள்ளையன் சொல்கிறார், கொலை விழும் ஜாக்கிரதை என்று. இதுதானா தங்களின் கட்சிக் கொள்கை? போலீஸ் சூப்பிரிண்டண்டும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறார்.

உடனே டிப்டி கலெக்டர், தமிழில் பாடும் என்று பாடகரைச் சொன்னார். பிறகு பாடினார் தமிழில். அதில் வெற்றிதான். அதுமாதிரி காரியங்களில் தலையிடலாம். முறையுங்கூட. பிராமணர்கள் இருக்கக் கூடாது என்றால் அவர்கள் எங்கு போவது? முட்டாள்தனமான கிளர்ச்சி செய்கிறார்கள். இதற்காவன செய்வதே தலைவர் கடமை. எங்கே பார்ப்போம். -_ 15.4.1944

சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலர்-1975, பக்கம்: 92

(தொடரும்...)

- உண்மை இதழ்,16-31.3.18

புதன், 18 ஏப்ரல், 2018

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

குடியரசு தரும் அரிய தகவல்கள் - 6

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

கன்னியாகுமரிப் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அங்கு ஜமாபந்தி எனப்படும் வழக்கு விசாரணைக்காக கன்னியாகுமரி வந்தபோது, விசாரணைக்கு வந்த பார்ப்பன மாஜிஸ்திரேட் பொதுவாக ஜமாபந்தி நடத்தப்படும் சத்திரத்தில் நடந்தால் தாழ்த்தப்பட்டோர் வந்துவிடுவார்கள் என்பதால், விசாரணை நடைபெறும் இடத்தை காவல் நிலையத்திற்கு மாற்றினார். இந்தக் கொடுமையைக் கண்டித்து ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திக் கட்டுரை.

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.  ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டி ருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளு மாயிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று “இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்’’  என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளையும், நாற்காலி களையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்தி வந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக் காரணம் ஏதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மை தெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்க வில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற்கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப் பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர் களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக்கின்றது. ஜாதி இந்துக்களுக் கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது -_ நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று “சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம்’’ என்று சொன்னாராம்.  நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லை யென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பல மேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

‘குடிஅரசு’

- செய்திக்கட்டுரை - 11.10.1931

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.1.18

பிராமணரல்லாதாரே பூஜை செய்ததால் மக்களின் குதூகலம்

குடிஅரசு’ தரும் அரிய தகவல்கள்-11

ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் 
அதிகாரிகள் பிரவேசமும்

மதுரை, பிப்ரவரி. 1- நேற்றிரவு 8-மணி முதல் நடுராத்திரி 12-மணி வரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலின் வாயிற் கதவுகளெலெல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பஸ்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததனால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோவில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என்.ராமநாதன் பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனைகளையும் கவனியாமல் கணேசருக்கு தாமாகவே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீமீனாட்சி கோயிலுக்குச் சென்றதாகவும் சொல்லப்பட்டது, அவர்கள் ஸ்ரீமீனாட்சியம்மனின் கர்ப்பக்கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடி விட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும் அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபனைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற் கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட  உள்ளிருந்தவர்கள் இரவு 9-:30 மணிவரை வெளியே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை  செய்தார்கள்.

ஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்த பொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோச  ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள்  அவ்வாறே ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12-:30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்யாசம் செய்தார்.

‘திராவிடன்’
‘குடிஅரசு’, 06.02.1927
ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் 
அதிகாரிகள் பிரவேசமும்

ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகு நேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.

இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ.295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்குவதாய் மாஜிஸ்ட்ரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ளமாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னாராம்.

எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம். உடனே மேஜிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்தரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார்களாம். திங்கட்கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது!

ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகுலமாகவும் இருக்கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாகிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

எதற்கும் திரு.ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு  காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக்காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும், மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரச்சாரம் செய்வதும் பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலயபிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன. அதாவது சமய சம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரஸ்கள் சுய ராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி பூரண, சுயேட்சை கட்சி ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடிசபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக்கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம்  என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யாதாதுக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் எண்டோமெண்ட்போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர் மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

- ‘குடிஅரசு’ - கட்டுரை - 21.04.1929
(தொடரும்)

- உண்மை இதழ், 1-15.4.18