திங்கள், 29 மே, 2023

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே! ( பிள்ளையார் உடைப்பு)

 


கி.தளபதிராஜ்

3

1952ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்த இராஜாஜி 1953 மார்ச் மாதம் குலக்கல்வித்திட்டத்தை அறிவித்தார். அப்பன் தொழிலை பிள்ளை கற்கவேண்டும் என்று சொல்லி மனுதர்மத்திற்கு வக்காலத் துப்போட்ட இராஜாஜியை குல்லூகப்பட்டர் என்றே அழைத்தார் பெரியார்.

நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும் முடிவான கொள்கையும் ஜாதி ஒழிப்பே என்ற பெரியார், அதற்காக எதையும் செய்யலாம்; பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கிறானோ, அது போல நம்முடைய இழிவை, கீழ் ஜாதித் தன்மையை மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது. இந்த நாட்டில் மனிதன் பார்ப்பனருக்கு தாழ்ந்தவனாக, சூத்திரனாக எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால் மதத்தால் தான் இருக்கிறான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கியிருக்கிறான். தீண்டத்தகாதவனை உண்டாக்கி யிருக்கிறான். பார்ப்பானை உண்டாக்கி யிருக்கிறான் என்று சொல்லி மூல வேரில் கை வைத்தார்.

தஞ்சை மாவட்டம் வல்லம் படுகை அருகே வடக்குமாங்குடி என்ற ஊரில் 28.4.1953ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜாதி வேற்றுமைகளுக்கு காரணமாகவுள்ள கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும். கடவுள்களை உடைக்கும் இயக்கம் விரைவில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

திராவிடர் கழக தோழர்களே தயாராக இருங்கள்! கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு விரைவில் நாள் தரப்போகிறேன். இப்போதே அட்வான்சாக அந்த உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே, நடு ரோட்டிலே, முச்சந்தியிலே, பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய் போட்டு, "இன்ன காரணத்திற்காக இந்த பொம்மையை உடைக்கிறேன். என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்! என்னை சூத்திரன் வேசிமகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்!" என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும். உடைப்பதற்கு முதல் கடவுளாக, எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன். தோழர்களே! தயாராய் இருங்கள் என்று அழைப்பு விடுத்தார். விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன் கோயிலிலே இருக்கிற விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றார். (விடுதலை 4.5.1953)

மே 6 ஆம் தேதி விடுதலை இதழில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட தேதி அறிவிக்கப்பட்டது. 27.5.1953 மாலை கணபதி உருவ பொம்மையை தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய் கலக்கி விடுங்கள்! என அறிக்கை விடுத்தார் பெரியார்.

1.சூத்திரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சூத்திர வகுப்பு உரிமை அரசியல் சட்டத்தின் மூலம் நீக்கப் பட்டு, அய்க்கோர்ட் தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து சூத்திரர்கள் (தமிழர்கள்) உத்யோக உரிமை அற்றவர்களாக ஆக்கப் பட்டு விட்டார்கள்.

 2. பெரிய கிளர்ச்சி செய்து சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஓர் அளவிற்கு சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3. கல்வித்துறையில் உத்தியோகத்திற்குத் தகுதியாகும் மேல்வகுப்பு படிப்புதான் சூத்திரன்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பது கூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப் படைக் கல்வி எனும் பெயரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது.

2

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசய முறையானது பார்ப்பன நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்காகவுமே ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தர்ம  புதுப்பிப்புக்காகவே இந்த ஜனநாயக ஆட்சி என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்காகவே ஆகும். ஆகவே என் சொந்த பொறுப்பில் முன்பு பல தடவை கூறியிருப்பது போல் வர்ணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக நாளது மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை புத்தர் விழா கொண்டாடி மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தில் வர்ணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் முதல் தெய்வம் என்று கருதப்படுகிறதற்கென்று உருவாக்கியிருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதற்காக பொதுமக்களை அதாவது மனு, வர்ணாசிரம தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களை, திராவிடர் கழக தோழர்களை, சிறப்பாக இளைஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

சர்க்கார் 144 தடை உத்தரவு போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள். அவரவர் கழக காரியாலயத்தில் அல்லது அவரவர் வீட்டில் உடைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். நரகாசுரனை கொன்றதற்காகப் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதுபோல் உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள். 

உண்மையில் விநாயகன் என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் சாஸ்திரங்களில் காணப்படவில்லை.வடநாட்டு ஆரியப் புராணங்களில்தான் காணப்படுகிறது. அதுவும் சமீப காலத்தில் தான் திராவிட நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறப்பு : வெகு ஆபாசம். நடப்பு : வெறும் சூது, கொலை, கூடா ஒழுக்கம். திராவிடர்களை அசுரர்களைக் கொன்றதே அதன் வீரம். இதை வைணவர்கள், சங்கர மதக்காரர்கள், ஆரிய சமாஜிகள் மற்றும் பலர் ஒப்புக் கொள்வதில்லை. ஆனதால் பிள்ளையாரை ஒழித்துவிட்டால் கடவுள் ஒழிந்ததாக ஆகாது. பயப்படாதீர்கள்! ஆத்திரப்படாதீர்கள்! கலவரத்திற்கு இடமில்லாமல் சாந்தமாய் சமாதானமாய் நடந்து கொள்ளுங்கள்! (விடுதலை 6.5.1953)

அதனைத் தொடர்ந்து ஒவ்வொருநாளும் பிள்ளையார் பிறப்பின் யோக்கியதையை தோலுரித்து விடுதலை செய்தி வெளியிட்டது. 7ஆம் தேதி விடுதலையில் ஆனைமுக தெய்வ உருவ பொம்மை வேண்டுமானால் கோயிலுக்குப் போகாதீர்கள். அரச மரம், வேப்ப மரம் அடியிலோ, கல்லுக்கட்டு மேடைக்கோ போகாதீர்கள். கண்டிப்பாய் போகாதீர்கள். கிட்ட நெருங்காதீர்கள். இது கண்டிப்பான வேண்டுகோள் உத்தரவாகும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அன்றைய தேதியில் பெரியார் விடுத்த அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அந்த அறிக்கையில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமின்றி கடவுள் தன்மை அறிந்த ஆத்திகர்களுக்கும் இந்த கடவுள் ஏற்புடையதல்ல என்றும் அவர்களும் உண்மை அறிந்து மனிதத் தன்மை பெற்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தார்.  

"கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை. கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான். அதற்கு கோயில், பூஜை,நெய்வேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும், முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் பக்தி நாஸ்திகமாகிறது." 

"கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை. அறிவுள்ள, மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல. பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. காட்டுமிராண்டி காலத்தில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த உணர்ச்சியேதான் இந்த 1953 விஞ்ஞான ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?"

"ஆற்றங்கரையில் மூக்கைப்பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பார்ப்பனர் இன்று சக்கரவர்த்தியாக அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருக்க உரிமை அடையும் படி தனது நிலையை மாற்றிக் கொண்டு இருக்கும் போது, கல்லை செம்பை மண்ணை அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம், மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் கண்டுபிடித்து மண் பொம்மைகளை அழிக்கப்படாதா?" என்று கேட்டார் 

9.5.1953 அன்று வெளிவந்த விடுதலையில், கடவுள் ஒழிப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 50 ஆண்டுகளாக இவைகளுக்கு எதிராக, ஒழிப்பாளராக இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய 30 ஆண்டுகால சொற்பொழிவுகளை எழுத்துகளை கவனித்தவர்களுக்குத் தெரியும். நான் இப்படிப்பட்டவன் என்பது காந்தியாருக்கும் தெரியும். இராஜாஜிக்கும் தெரியும். பல பிரபலஸ்தர்களுக்கும், முக்கியமானவர்களுக்கும் தெரியும்.

மதுரையில் 1922ல் தோழர்கள் வைத்தியநாத அய்யர், சீனிவாச அய்யங்கார், ஆச்சாரியார்  முதலியவர்கள் முன்னிலையில் மதுரை சொக்க நாதனையும்,மீனாட்சியையும் புரட்டிக் கழுவி குளத்துப் படிக்கட்டில் வேஷ்டி துவைக்கப் போடுங்கள் என்றேன். சீனிவாச அய்யங்கார் என்னை ராஜரிஷி என்றார்.மற்றவர்கள் கர்மவீரர் என்றனர். எனவே எனது கருத்தில் புதுமை என்ன? தவறு என்ன? என்று கேட்டார்.

சென்னையில் மே 10ஆம் தேதி நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அடுத்தநாள் விடுதலையில் தோழர் கே.வீரமணி உரை எனக்குறிப்பிட்டு வெளிவந்தது.

"தோழர்களே! மிக முக்கியமான நேரத்திலே நாம் கூடியிருக்கிறோம். பலமான மதப் பிரச்சாரம், வைதீகப் பிரச்சாரம், வேதப் பிரச்சாரம், வரலாற்றினை மாற்றியமைக்கும் பிரச்சாரம் முதலியவைகள் நாடுதோறும் பலமான முறையிலே நடைபெறுகிற நேரத்திலே கூடியிருக்கிறோம். அது மட்டுமல்ல. போர்க்களத்திலே இறங்க தேதி கொடுத்து தலைவர் அழைப்பு விடுத்திருக்கிற நேரத்திலேதான் நாம் கூடியிருக்கிறோம். களத்திலே இறங்கும் முன் பாசறையிலே திட்டம் வகுக்க கூடுவது போல. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசாதவர்கள், அதன் கொள்கையை மறைத்தவர்கள், கேலியும் கிண்டலும் செய்தவர்கள், அலட்சியப்படுத்தியவர்கள் எல்லோரும் இன்று நம்மைக் கண்டு அலறுகிறார்கள்!" என்றார்.

பெரியார் தனது உரையில், "இந்தக் கடவுள்களை உடைக்க வேண்டும் என்று ஏன் சொல்லுகிறோம்? எங்களுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? கணபதி, கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களால் தானே நாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்கிறோம்? இந்தக் கடவுள்கள் இல்லாத நாட்டில் சூத்திரன் பஞ்சமன் இருக்கிறானா? சொல்லுங்களேன்! எங்களை சூத்திரனாக பஞ்சமனாக ஆக்கிய கடவுள்களை ஒழிக்க நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டது எப்படித் தவறாகும்?"

"27ஆம் தேதி விநாயகர் லட்சக்கணக்கில் உடைபட வேண்டும்! வீதியிலே விற்கிற பொம்மைகளை வாங்குங்கள்; அங்கேயே போட்டு உடையுங்கள்! அடுத்த வீதிக்கு ஒரு பொம்மை, பக்கத்து வீதிக்கு ஒரு பொம்மை என்று வரிசையாக வாங்கி வைத்துகொள்ளுங்கள். லட்சக்கணக்கிலே உடைத்துத் தள்ளுங்கள். இப்போது விநாயகர்; இதைத் தொடர்ந்து ராமன், கிருஷ்ணன், சுப்பன் இத்யாதி! இத்யாதி...! கடவுள்கள் உடைக்கப்பட வேண்டும். இப்படியாக ஒரு வருஷத்திற்குள் இந்தக் கடவுள்கள் உடைப்பு வேலை தீர்ந்து விட வேண்டும். வரிசையாக பட்டியல் தருகிறேன். வருஷத்திற்குள் புராண பகவான்களை ஒழித்துக் கட்டுங்கள்!" என்று ஆணையிட்டார்.

27ஆம் தேதி மட்டும் விநாயகர் சரியாக உடைக்கப்பட்டு நாடெங்கும் நல்ல முறையில் இந்த உடைப்பு விழா நடைபெறட்டும். ஆச்சாரியார் கொண்டுவந்திருக்கிற புதுமுறை ஆரம்ப கல்வித் திட்டத்தை மாற்றுகிறாரா? இல்லையா? என்று பாருங்கள். தானாகவே மாற்றிக் கொள்வார். என்றார்.

மேலும் விநாயகக் கடவுளின் பிறப்பு ஆபாசங்களைப் புராணத்திலிருந்து எடுத்துக்கூறிய பெரியார், தான் கொண்டுவந்திருந்த பெரிதும் சிறிதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகனை எடுத்துக்காட்டி இதைப்போன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, வேண்டுமானால் சாம்பிளாக, அட்வான்ஸாக இந்த சின்ன விநாயகரை தூளாக்குவோமா? என்று கழகத் தோழர்களைப் பார்த்துக் கேட்டார். கூடியிருந்த மக்கள் உற்சாகப் பெருகெடுத்து உடையுங்கள்! உடையுங்கள்! என்று ஆர்வத்தோடு ஆவேசக் குரல் எழுப்பினர். மேடையிலேயே பிள்ளையார் பெரியாரின் கைத்தடியில் உடைபட்டு தூள் தூளானார். 

"சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன், நம்மை சூத்திரனாக்கிய கடவுள் உருவம் உடைக்கப்பட்டது மேடையில் மேசையின் மேல் புரட்சி வேந்தர் புத்துலகச் சிற்பிதன் கையால்!" என்று விடுதலை செய்தி போட்டது.

மாநாட்டை ஒட்டி 10,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலத்தின் முன்னே நடிகவேள் எம்.ஆர்.ராதா குதிரை மீது அமர்ந்து சென்றதும் பெரியார் உருவம் பெரிதாக வரையப்பட்ட சித்திரத்தை கோச் வண்டியில் கொண்டு சென்றதும், பகுத்தறிவு இலட்சிய முழக்கங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை தாங்கி கருப்புடை வீரர்கள் அணிவகுத்ததும், தோழர்களின் கொள்கை முழக்கமும் கண்ணையும் கருத்தையும் கவருவதாக இருந்தது என விடுதலை வர்ணித்தது.

அதே நாள் விடுதலை தலையங்கத்தில், "இந்தக் கிளர்ச்சியானது, இன்று இந்த நாட்டில் தன்னை தமிழன், திராவிடனுக்கு தமிழனுக்குப் பிறந்த தமிழன் என்று கருதிக் கொண்டிருக்கும் எல்லா சூத்திரன் என்பவர்களுக்கும் உரிமையான கிளர்ச்சியாகும். சூத்திரத்தன்மை நமக்கு இருந்து வருவதற்கும் அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவதற்கும் மதமும், அது காப்பாற்றப்படுவதற்கு வேத சாஸ்திரப் புராணங்களும், நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பிராமணர்களாகவும், ஆதிக்கக்காரர்களாகவும் வாழ்வதற்கு கடவுள்களும் கோவில்களுமல்லவா காரணம்? என்று கேட்கிறேன். ஆம் என்றால் இவைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டாமா? என்று தமிழர்களை, சூத்திரர்களைக் கேட்கிறேன்!"

"நான் இதுதான் சரியான வழி. சூத்திரத் தன்மை ஒழிவதற்கும், நம் ஏழை, தாழ்ந்த ஜாதி எனும் பாமர மக்கள் தங்கள் இழிவு நீங்கி, விகிதப்படி கல்வி பதவி பெற்று முன்னேறுவதற்கு இதுதான் அதாவது இந்த இந்து மதம், இந்து வேத சாஸ்திர புராண இதிகாசங்களுடன், இந்துக் கடவுள்கள் என்னும்உருவ வழிபாடுகள், கோயில், பூஜை, உற்சவம், முதலியவை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்று கருதுகிறேன். திராவிடர் கழகமும் அப்படியே கருதுகிறது. திராவிடர்களில் பலரும் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களில் அநேகரும் அப்படியே கருதுகிறார்கள். சித்தர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற பெரியவர்கள் பலரின் கருத்தும், ஆதாரமும், ஆதரவாய் வழிகாட்டியாய் இருக்கின்றன. வள்ளுவர் குரல் இருக்கிறது. புத்த தன்மம் இருக்கிறது." என்று குறிப்பிட்ட பெரியார் மேலும் அத்வைதம், வேதாந்த ஞானம் போன்றவைகளிலும் ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி இது மூடர்களுக்கு அல்லாமல், சுயநல சூழ்ச்சிக்காரர்களுக்கு அல்லாமல் மற்ற எவருக்கும் குற்றமாகத் தோன்றாது என்று கூறி பிள்ளையார் சிலை உடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

தென்சென்னை மாநாட்டு மேடையிலேயே பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் தந்தை பெரியார் பிள்ளையார் உருவத்தை சுக்குநூறாக்கியதை சுட்டிக்காட்டி 13.5.1953 அன்று மீண்டும் விடுதலை தலையங்கம் வெளிவந்தது.

"பிள்ளையார் சிலை உடைப்பு - சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பு இரண்டு விநாயக உருவங்களை மாநாட்டில் உடைத்தே காட்டிவிட்டார் தலைவர் பெரியார். சட்டம் அவரை என்ன செய்துவிட்டது? இதுவரையில் அவரை என்ன செய்தது? இனித்தான் அவரை என்ன செய்ய முடியும்? ஆதலால் 27ஆம் தேதி அன்று செத்த பாம்பை அடிப்பது போல் மற்றவர்களும் அடித்து ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். அதாவது சட்டம் என்ற பாம்பை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தலை நசுங்கும்படி நன்றாக அடித்துவிட்டார் பெரியார். தன்மானம் என்ற கைத்தடியால் அடித்துவிட்டார். இனி அது செத்த பாம்பு தான். இதைக் கூட 27 ஆம் தேதி அடிப்பதற்கு மற்ற தமிழர்கள் முன் வர வேண்டாமா? ஆரிய கற்பனைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்ட ஆரம்பித்தால் தான் அடுத்த கட்டம் பூணூல் அறுப்பு கிளர்ச்சியாக இருந்தாலும் இருக்குமோ? என்று அக்கிரகாரம் சிந்தித்துப் பார்க்கும்." என்று எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்....)


   

13

பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது பார்ப்பனர்களின் விஷமப்பிரச்சாரத்திற்கு தீனி போட்டதாகிவிடும் என்பதை உணர்ந்த பெரியார் அவர்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 14.5.1953 அன்று வெளிவந்த விடுதலை தலையங்கம் அதை தெளிவு படுத்தியது.

14

"திராவிடர் கழகத்தில் ஏராளமான முஸ்லிம் கிறிஸ்தவ தோழர்கள் உறுப்பினர்களாகவும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் இத்தனை ஆயிரம் நபர்களும் பெரும்பாலும் நாஸ்திகர்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும். மசூதிக்குச் செல்லாத முஸ்லிம் இளைஞர்களும், மாதா கோயிலுக்கு செல்லாத கிறிஸ்தவ இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். திராவிடர் கழக உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர அனுதாபிகளாக இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பகுத்தறிவாளர்களான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏராளமாய் இருக்கின்றனர்.

ஆனால் 27ஆம் தேதி அன்று நடைபெறப் போகும் கிளர்ச்சியில் மட்டும் இவர்கள் நேரடியாக பங்கு பெறாமல் இருப்பது தான் நல்லது என்பது நம் கருத்து. ஏனெனில் இத்தகையோர் ஆரிய மத ஆபாசங்களை உதறித் தள்ளி விட்டு வெளியேறியவர்களின் சந்ததிகளாவார்கள். குறிப்பாக கிருஷ்ணன், விநாயகர், ராமன், சிவன் போன்ற ஆபாச கடவுள்களின் லீலைகளை கேட்க சகிக்காமல் ஆரிய மதத்தை விட்டு வெளியேறியவர்களே பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆதலால் இத்தகையோர் விநாயகர் உருவ உடைப்பு கிளர்ச்சியில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று தெரிவித்துக் கொள்கிறோம். இது அவசியம் இல்லாதது என்பதுடன், எதிரிகள், வைதீகர்கள், அக்கிரகாரவாசிகள் ஆகியோரின் விஷமப் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டு விடக் கூடும் என்றும் கருதுகிறோம். ஆதலால் பிற மதத்தவர்கள் என்று கூறப்படுகின்ற திராவிட கழகத் தோழர்கள் அனைவரும் கருத்து ஆதரவு கொடுத்தால் போதும். பொதுக்கூட்டங்களில் ஏராளமாக கலந்து கொள்வது மட்டும் போதும்." என்றது.

பிள்ளையார் உடைப்பு போராட்டத்திற்கு ஒரு வார கால இடை வெளியே இருக்க, மே 20ஆம் தேதி வெளிவந்த விடுதலையில், தஞ்சை தாலுக்கா சுயமரியாதை மாநாடு மே 24ஆம் தேதி நடைபெறும் என்றும் சாமி கைவல்யம் படத்தை தந்தை பெரியாரும், பட்டுக்கோட்டை அழகிரி படத்தை ஏ.பி.ஜனார்த்தனமும், சிங்காரவேலர் படத்தை ஜீவாவும் திறந்துவைக்க உள்ளதாகவும் செய்தி வெளியிட்டது. விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வோரின் பட்டியல் ஊர் வாரியாக தினந்தோறும் விடுதலையில் வெளிவந்தது. 

"விநாயகர் உடைப்பு - ஆஸ்திக உலகின் பெரும் கலக்கம்! தங்கள் தெய்வத்தின் தெய்வீகத்தை நம்பாது சர்க்காரிடம் அபயம்!" என்று 21 ஆம் தேதி விடுதலை தலைப்பு செய்தியோடு வெளிவந்தது. ஆச்சாரியார் குட்டிக்கதைகள் கூறி மக்களை கண் துடைக்க முற்படலாம். ஆனால் ஆஸ்திக உலகமோ இந்த விநாயக உடைப்பு நடவடிக்கையை கண்டு தங்கள் ஆஸ்திக கோட்டையில் தீப்பற்றிக் கொண்டது போல் கலங்குகின்றனர்; பதறுகின்றனர். ஆனால் பிள்ளையாருக்கு ஏற்பட்ட ஆபத்தை தடுக்க அந்த விநாயக ரிடமும் அல்லது மற்ற பக்தவச்சலா தெய்வங் களிடமும் முறையிடாது ஆட்சியாளரிடமே அபயம் அடைகின்றனர் ஆத்திக சிகாமணிகள்! என்று கிண்டலடித்தது.

23ஆம்  தேதி விடுதலை தலையங் கத்தில், புத்தர் பிறப்பு மற்றும் பிள்ளையார் வருகை வரலாற்று ரீதியாக விளக்கி எழுதப்பட்டிருந்தது. 

"27ஆம் தேதி புதன் கிழமை அன்று ஆரிய எதிர்ப்பு வீரரான கவுதம புத்தர் பிறந்த நாள். இவர் சத்திரிய வகுப்பில் பிறந்தவர் என்று பார்ப்பனர் கூறுகின்றனர். புத்தர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 653 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அதாவது 2576 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக வரலாறு கூறுகிறது. ஆரிய இந்து மதத்தை ஒழித்து ஜாதியையும் ஒழிப்பதற்காகவே இவர் தம் அரச பதவி, மனைவி, மக்கள் ஆகியோரைத் துறந்து 45 ஆண்டுகள் பிரச்சாரம் செய்து இந்தியாவெங்கும் தம் கொள்கையைப் பரப்பிவிட்டு எண்பதாவது வயதில் நேபாள பகுதியில் கூசிநாகரா என்ற இடத்தில் காலமானார்.

15

தமிழ்நாட்டில் இன்று காணப்படும் சைவ வைணவக் கோவில்கள் முழுவதும் முன்பு பவுத்தப் பள்ளிகளாக இருந்ததை எல்லா சைவ வைணவ பக்தர்களும் ஒப்புக் கொள்வது மட்டுமல்ல இன்றைக்கும் தஞ்சை காஞ்சிபுரம் போன்ற பல ஊர்களிலும் கோயில்களிலேயே காணலாம். இதற்கு ஏராளமான அகச்சான்று புறச்சான்றுகள் இருக்கின்றன.

ஆரியமதமான பார்ப்பனீயமும் அதன் பிள்ளைகளான சைவ வைணவ மதங்களும் புத்தக் கொள்கைக் காரர்களை எதிர்த்து ஒழிக்காதிருந்திருந்தால் இந்த நாட்டில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் மருந்துக்குக் கூடக் கண்டுபிடித்திருக்க முடியாது. ஓரளவேனும் முற்போக்கு கருத்துகளைக் கொண்ட மேற்கண்ட இரு மதங்களும் வேரூன்றியிருக்கின்ற சமுதாயத்திடையே ஆரிய மதம் பரவுவது எப்படி முடியாத காரியமோ அது போல், இவ்விரு மதங்களை விடப் பல மடங்கு முற்போக்குக் கருத்துகளை கொண்டிருப்பதான பவுத்த இயக்கம் பரவியிருக்கும் இடங்களில் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆரியம் ஆகிய மூன்று மதங்களும் பரவ முடியாது.

கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல் ஒழுக்கம் எதையும் கிறிஸ்து புதிதாகக் கூறவில்லை என்று பெர்ரண்ட் ரஸ்ஸல் என்ற பேரறிஞர் 1927 ஆம் ஆண்டிலேயே லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் கூறியிருக்கிறார்.

இப்பேற்பட்ட அறிவு இயக்கத்தை அறவே ஒழித்துக் கட்டிவிட்டது இந்த நாட்டில் புகுந்த ஆரியம். இந்த ஆரியத்தை ஒழிப்பதற்கு கச்சையை வரிந்து கட்டி நிற்பது தான் திராவிடர் கழகம். ஆரியத்தைச் சுட்டுப் பொசுக்கிய சாம்பலில் அறிவு நீர் பாய்ச்சி, அதில் பொதுவுடைமை விதையை ஊன்றினால் தான் அது செடியாக மரமாக வளர்ந்து, ஏழை மக்களுக்கு பலன் தரும். இல்லாவிடில் ஆரிய வெப்பம் தாங்காது கருகிப்போகும். ஆதலால் தான் 27ஆம் தேதி என்று ஒரு சிறு ஒத்திகை நடக்கப்போகிறது பிள்ளையார் உருவ உடைப்பு கிளர்ச்சி மூலம்!

இந்த கிளர்ச்சியை கண்டு அறி வுள்ளோர் ஆத்திரப்பட மாட்டார்கள். ஏனெனில் பிள்ளையார் தமிழர்களின் கடவுள் அல்ல. சங்க இலக்கியங்களில் பிள்ளையார் இல்லை. குறிப்பாக தமிழரின் திருமறை என்று கூறப்படுகின்ற திருக்குறளில் விநாயகர் காப்போ, கணபதி வணக்கமோ கிடையாது. இந்தப் பிள்ளையார் தமிழ்நாட்டில் புகுந்த ஆண்டு கி.பி 650 ஆகும். அதாவது 1330 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி அய்ந்தாம் நூற்றாண்டில் விநாயக வழிபாடு வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. மராட்டிய நாட்டிலும் சிறிது பரவி இருந்தது.

பல்லவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற பேரரசனின் மகன் நரசிம்மவர்மன் அவனுடைய தளபதி நரசிம்மன் இவனது ஆட்சி காலம் கிபி 630 முதல் 668 வரையில். பரஞ்சோதி என்ற சிறு தொண்டன் மலைச்சாமி மீது படையெடுத்து அவர்களது தலைநகரான வாதாபியை அழித்தது 642 ஆம் ஆண்டில். அக்காலத்து வழக்கப்படி தோல்வியுற்றோரின் நாட்டில் இருந்த கடவுள் உருவங்களில் ஒன்றாகிய யானை முகம் கொண்ட விநாயகரை கொண்டு வந்து தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் (தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கின்ற சிற்றூர்) நாட்டினார் பரஞ்சோதி. இது நடந்தது 650 ஆம் ஆண்டு. இவர்தான் வாதாபி கணபதி என்று அழைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் என்ற கிராமத்தில் உள்ள குன்றின் குகைகள் ஒன்றில் காணப் படுகின்ற விநாயகர் உருவமும் அது பற்றிய கல்வெட்டும். மகேந்திரவர்மன் (615 - 630) காலத்தில்தான் முதன் முதல் விநாயகர் தமிழ்நாட்டில் புகுந்தார் என்பதை காட்டுவதாக வேறு சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

ஆகவே கி.பி.630 அல்லது 650ஆம் ஆண்டில் புகுந்த இந்த ஆபாச உருவத்தை காப்பாற்றுவதற்காக இத்தனை ரத கஜ துரக பதாதிகள் புறப்படுவானேன்? இதை உடைத்து நொறுக்குவதில் உண்மை தமிழர்கள் பின்வாங்கலாமா?

புத்தருக்குப் பின்னால் 1273 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நுழைந்தவர் விநாயகர். புத்தர் உலகம் போற்றும் உத்தமர்! விநாயகர் உலகத்தார் காரி உமிழ்கின்ற உருவத்தைக் கொண்டவர்! புத்தரைப் பின்பற்றும் மக்களிடையே ஜாதி கிடையாது!  விநாயகரை வழிபடுகின்ற மக்களிடையே பல்லாயிரம் ஜாதிகள்! புத்தர் ஒப்பற்ற தியாகி! விநாயகர் (புராணக் கதைகளின்படி) கோட்சே பார்ப்பனரைவிட படு மோசமான கொலைகாரன்! புத்தர் வரலாறு கண்ட கர்ம வீரர்! விநாயகர் காளிகள் கட்டிவிட்ட கற்பனையின் பிறப்பு! புத்தர் பார்ப்பனியத்தின் கோடரி! விநாயகர் பார்ப்பனியத்தின் பாதுகாப்பு அரண்!

இப்பேர்ப்பட்ட ஆபாச கற்பனை உருவத்தை உடைக்க வேண்டும் என்பது திராவிட கழகத்தார் முடிவு. போலித் தமிழர்கள் விநாயகர் வரலாறு தெரியாத தமிழர்கள் அக்கிரகார ஆரியர்கள் 27ஆம் தேதி அன்று எப்படியோ நடந்து கொள்ளட்டும்.  உண்மை தமிழர்களே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறுகின்ற ஆஸ்திக தமிழர்களே! 27ஆம் தேதி அன்று உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! செய்கையில் காட்டுங்கள்! என்று எழுதி சிந்திக்கத் தூண்டியது.

மே 24 ஆம் தேதி தஞ்சையில் சுயமரியாதை மாநாடு ஊர்வலத்தோடு தொடங்கியது. ஊர்வலத்தில் அக்னி சட்டி ஏந்தியும், தீமிதித்தும் தெய்வீக பித்தலாட்டத்தை கழக தோழர்கள் அம்பலப்படுத்தினர். மாநாடு தொடக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கழகக் கொடியேற்றி உரையாற்றினார்,  

அவர் தனது உரையில், "இந்நாட்டில் கழக லட்சியம் வெற்றியடைய வேண்டுமானால், கழகக் கொள்கையில் தோழர்கள் உறுதியாக நின்று திராவிட தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஒன்றுபட்டு கட்டுப்பாடாக நின்று பணியாற்ற வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார். "மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்படாமல் கொள்கையில் உறுதியுடன் நின்று கருஞ்சட்டை அணிந்து கொள்கைப் பிடிப்பைக் காட்ட வேண்டும்!" என்று வற்புறுத்தினார். "பெரியார் ஆணையை என்றும் ஏற்று அதன்படி தான் நடக்கத் தயார்!" என்பதாக உறுதி கூறியதுடன் கழகத் தோழர்களும் இந்த படி உறுதியாக இருக்க வேண்டும் என்றார். மாநாட்டில் புத்தர் மாநாடு, உருவ வழிபாடு ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

விடுதலையில் வந்த மற்றோர் செய்தி, "பிள்ளையார் உடைப்பு போராட்டத்தினால் பொது ஜன அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் ஆகவே இந்தப் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதுரை திருவருள் தவநெறி மன்றத்தின் சார்பாக ஒரு மனு கொடுத்திருப்பதாக தெரிகிறது" என்றது. "பிள்ளையார் சிலை உடைப்பு போராட்ட நாளான 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆஸ்திக அன்பர்கள் யாவரும் அவரவர்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் விநாயகர் அகவலை பாராயணம் செய்ய வேண்டும்" என்று மாயூரம் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டியார் வேண்டுகோள் விடுத்திருந்ததை 'விநாயகரை வைதீகம் காப்பாற்றுகிறது" என தலைப்பிட்டு மற்றொரு செய்தியும் வெளியிட்டிருந்தது.

பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை எதிர்த்து சிலர் பெரியார் உருவத்தை உடைக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வர அப்படி ஒரு வேளை நடந்தால் அதற்கு தோழர்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என திராவிடர் கழக செயலாளர் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை 24 ஆம் தேதி விடுதலையில் வெளியானது.

பிள்ளையார் சிலை உடைப்பைக் கண்டித்து சென்னை சிவனடியார் கூட்டம் சுதேசமித்திரனில் 21ஆம் தேதி எழுதியதற்கு விடுதலை மறுநாளே பதிலடி கொடுத்தது. 

"விநாயகர் உருவ உடைப்புக்கு எதிராக அன்று பெரியார் உருவம் உடைக்கப் போவதாக சில பத்திரிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. சில பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர்களும் பார்ப்பன கூலிகளும் இந்தப் படி செய்யும்படி தூண்டி வருகிறதாகவும் தெரிய வருகிறது. அந்தப் படி 27 ஆம் தேதி எங்காவது பெரியார் உருவம் உடைக்கப்படுமானால் கழகத் தோழர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதுடன் அதை மதிக்கவும் தேவையில்லை என்பதோடு அந்தக் காரியத்திற்கு எவ்வித சிறு தடை கூட செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும் அந்த மாதிரியான கூட்டத்திற்கு கழகத் தோழர்கள் கண்டிப்பாக வெறும் காட்சியாளர்களாகக் கூட செல்லக்கூடாது என்பதோடு எவ்வித கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் காரணஸ்தர்களாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு சமயம் குழப்பத்திற்கும் கலவரத்திற்கும் கழகத் தோழர்கள் யாராவது காரணஸ்தர்களாக இருந்தார்கள் என்று தெரிய வருமானால் அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!" என்று எச்சரித்தது.

'விடுதலை' 25.5.1953ஆம் நாள், "27ஆம் தேதி பற்றிய முக்கிய குறிப்புகள்!" என்ற தலைப்பில், "பிள்ளையார் உடைப்பு பிரச்சார கிளர்ச்சியை 27 ஆம் தேதியான புத்தர் பிறந்த நாள் தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இக் கிளர்ச்சியில் மட்டும் முஸ்லிம் கிறிஸ்தவ பகுத்தறிவு தோழர்கள், சுயமரியாதை தோழர்கள் ஒதுங்கி நிற்கும்படி வேண்டுகிறேன். ஆரிய மதத்தில் பிறந்த கழகத் தோழர்களும் பொதுமக்களும் மட்டுமே கலந்து கொள்வதுதான் எதிரிகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு இடம் தராமல் இருக்கும்!" என்ற ஒரு அறிவிப்பு மத்திய திராவிடர் கழக செயலாளர் பெயரில் வெளிவந்தது.

திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் 27ஆம் தேதி புதன் மாலை 6 மணிக்கு டவுன்ஹால் முன் நடைபெறும். தி.போ.வேதாச்சலம் தலைமையில் பெரியார் ஈவெரா அவர்கள் மற்றும் பலரும் பேசுவார்கள். மாலை 5 மணிக்கு மணிக்கூண்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு டவுன்ஹால் முன்பு பிள்ளையார் பொம்மை உடைப்பு நடைபெறும் என்ற செய்தியும் வெளியானது.

திட்டமிட்டபடி 27 ஆம் தேதி தமிழகத்தின் மய்யப் பகுதியில் புகழ் மிக்க உச்சிப்பிள்ளையார்  கோயில் என்றழைக்கப்படும் மலைக்கோயில் அமர்ந்துள்ள திருச்சி மாநகரில் படு  களேபரமாக நிகழ்ச்சி தொடங்கியது!  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட களம்காண தோழர்கள் கருஞ்சட்டையுடன் திருச்சி நோக்கித் திரண்டனர். 

புத்தர் நினைவுநாள்! அதோடு கூடிய வினாயகர் சிலை உடைப்பு! தோழர்களிடையே உற்சாகம் கரை புரண்டது. திருச்சி மணிக்கூண்டிலிருந்து மாபெரும் ஊர்வலம்! பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் அணிவகுக்க, ஆரியத்தின் வேரறுக்கப் பிறவி எடுத்து வந்த ஆரிய வைரி புத்தர் பெருமானின் உருவம் வரையப்பட்ட பெரும் பதாகை பொருத்திய வாகனம் முன்னே ஊர்ந்து சென்றது.  ஓர்வல வழி நெடுகிலும் புத்தர் வகுத்த வழிபாடுகள் ஓங்குக! புத்தர் கொள்கைகள் ஓங்குக! உருவ வழிபாடுகள் ஒழிக! சிலை வணக்கம் ஒழிக! பெரியார் வாழ்க! எனத் தோழர்கள் தொடர் முழக்கமிட்டனர். கழகத் தோழர்களைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பேரணியில் அணிவகுத்தனர். தெருக்களின் இரு மருங்கிலும் பார்வையாளர்களாக திரண்டிருந்த மக்களும் ஊர்வலத்தைத் தொடர்ந்த படி மேடை நோக்கிக் குவிந்தனர். 

பேரணி டவுன்ஹாலை சென்ற டைந்தது. கணபதி ஒழிக! உருவ வழிபாடு ஒழிக! என லட்சம் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை முட்ட பல்லாயிரக் கணக்கான பிள்ளையார் சிலைகள் சுக்கு நூறாகி தெறித்தன. 

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் காட்சியை,  "பெரியார் பிள்ளையார் சிலை உடைத்த காட்சி - மக்கள் கடலின் மகிழ்ச்சி!" என விடுதலை மிகுந்த உற்சாகத்தோடு செய்தி வெளியிட்டது.

பிள்ளையார் சிலை உடைப்பைத் தொடர்ந்து பெரியார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோழர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த திருச்சி நீதிபதி, களிமண் கடவுள்களை உடைப்பது தவறல்ல! என்று சொல்லி தள்ளுபடி செய்தார்.  வழக்கு அப்பீல் போகவே, "சம்பந்தப்பட்ட பிள்ளையார் உருவம் வழிபாட்டில் உள்ள கடவுள் உருவமல்ல. அது அவருடைய சொந்த சொத்து ஆகிறது. அதை அவர் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தவோ அல்லது அழிக்கவோ செய்யவும் உரிமை உண்டு" என்று அப்பீல் மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிபதி மீண்டும் வழக்கைத் தள்ளுபடி செய்தார். (விடுதலை 13.1.1954)

ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்த கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்!! என்று சொல்லி பெரியார் தானே முன்னின்று நடத்திக் காட்டிய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல். பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட நாளை (மே 27!) மனதில் நிறுத்துவோம்!

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே

தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

வெள்ளி, 26 மே, 2023

புத்தம் மதமா?- பெரியார்

தத்துவ விசாரணை!

1959 ஆம் ஆண்டில் வடநாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் தந்தை பெரியார். வரும் வழியில் டில் லியில் அம்பேத்கர் பவனத்தில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை தெரிவாக நடத்தினார்.

பெரியார் தங்கி இருந்த இடத்தில் (டில்லியில்-15.2.1959) சென்னை மெயில் ஆங்கில நாளேட்டின் நிருபரான பார்ப் பனர் ஒருவர் தந்தை பெரியா ரைச் சந்தித்தார். (தந்தை பெரி யாரை யாரும் எந்த நேரத்தி லும், எந்த இடத்திலும் எளிதில் சந்திக்கலாம் - அதுதான் அவர் மக்கள் தலைவர் என்பதற்கு மகத்தான அடையாளம்).

அந்தப் பார்ப்பனர் தந்தை பெரியாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.‘‘நீ மதத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசு கிறாயே, புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம்தானே?'' என்று கேட்டார்.

அதற்குத் தந்தை பெரியார்  சொன்ன பதில்: ‘‘பித்தலாட்ட மாக மக்களிடம் நீங்கள் சொல்லி (பார்ப்பனர்கள்) அப் படி அவர்களை ஆக்கி வைத் திருக்கிறீர்கள்'' என்று கூறி னார்.

அதற்கு அந்தப் பார்ப்பனர் மறுபடியும் ஒன்றைக் கேட்டார். ‘‘புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி'' என்று சொல் கிறார்களே என்று கேட்டார்.

அதற்கு தந்தை பெரியார் சொன்ன பதில்: ‘‘புத்தம் சரணம் கச்சாமி'' என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதில்லை! ‘நீ யாரை தலைவனாக ஏற்றுக்கொண்டு இருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதி யோடு பின்பற்று' என்பதாகும். ‘நீ தலைவனைத் தேர்ந் தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து, ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு, அவனது கட்டுப் பாட்டுக்கு அடங்கி, அவனைப் பின்பற்றவேண்டும்' என்ற நல்லொழுக்கத்தைத்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண் டால் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பது தானே ஒழிய வேறில்லை. மேலும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதாகும்.

அதுபோலவே, ‘தம்மம்' சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் ‘நீ ஏற்றுக் கொண் டுள்ள கர்மங்களை - கொள்கை களை (Principles) உண்மை யான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்; அந்தக் கொள்கை களுக்கு மாறாக நடக்கக் கூடாது, உறுதியாக அவை களைப் பின்பற்றவேண்டும்' என்பதுதான்.

மூன்றாவதாக ‘சங்கம்' சரணம் கச்சாமி என்பது, ‘நீ நல்லபடி யோசித்து சேர்ந்தி ருக்கிற ஸ்தாபனத்தை மரியா தைப் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்.''

நீ உன் தலைவனை மதி!

உன்னுடைய கொள்கை களை உறுதியாகப் பின்பற்று!

உன் ஸ்தாபனத்துக்கு மரி யாதை செய்து பாதுகாத்து வா!

- இதுதான் தந்தை பெரியா ரின் தத்துவ விசாரணை.

(ஆதாரம்: ‘விடுதலை' 22.2.1959)

இவை நமக்கும்தானே!

 - மயிலாடன்
27.05.2020, விடுதலை நாளேடு

சனி, 6 மே, 2023

தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்

"குடிஅரசு" தரும் வரலாற்றுச் சுவடுகள்

  

 தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருவிழாவுக்குப் பாட வந்த தோழர் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் அவர்களை, “அய்யர்வாள். இது தமிழர் பண்டிகை; இங்குள்ளவர்கள் தமிழர்கள்; தங்களுக்குக் கொடுக்கும் பணம் தமிழர்களுடையது; தயவு செய்து தமிழில் பாடுங்கள்" என்று ஒரு தமிழ்த் தொண்டன் பணிந்து வேண்டிக் கொண்டால், அதை லட்சியம் செய்யாமல் அய்யர் தெலுங்கில் பாட்டை ஆரம்பித்துவிட்டு, பிறகு அந்தத் தமிழ் தொண்டர், "ஓ அய்யரே, நான் சொல்லுவது உமக்குக் காதில் படவில்லையா” என்று உரத்துச் சொன்ன பிறகு அய்யர், "எனக்குத் தமிழ் மீது துவேஷமில்லை; தமிழில் பாடத் தெரியாது" என்று சொல்லியதற்குப் பதிலாக தமிழ்த் தொண்டர் உடனே எழுந்து, “ஏங்காணும், 12,000 ரூபாய் பெற்றுக்கொண்டு நந்தனார் நடிப்பில், தோழர் சுந்தராம்பாள் அம்மையார் (நந்தன்) காலில் விழுந்து தமிழ் பாடின நீர், எவ்வளவு தைரியமாய் இங்கு இவ்வளவு பேர் முன்னிலையில் தமிழ் தெரியாது என்கிறீர்" அன்றியும்,

"திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தமிழ் வித்துவானைக்கூட தமிழில் பாட இடந்தராமல் தடுத்த நீர், எனக்குத் தமிழினிடத்தில் துவேஷமில்லை என்று எவ்வளவு துணிவாகப் பேசுகிறீர்? தமிழில் பாடுவதானால் பாடும்; இல்லாவிட்டால் நாங்கள் போய் விடுவோம்" என்று சொன்ன பிறகு, அதுவும் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள், “ஓ அய்யரே! தமிழில் தான் பாடித் தொலையுமே" என்றும் கூட்டத்தில் இருந்த டிப்டி கலெக்டரும், டிப்டி சூப்ரண்டும் தமிழ்த் தொண்டனைப் பார்த்து "இந்தப் பாட்டு தெலுங்கில் துவக்கப் பாட்டாய்விட்டது. இது முடிந்தபின் அய்யர் தமிழில் பாடுவார்' என்றும் சொன்ன பிறகு தமிழ்த் தொண்டர்.

"அதுவரை நான் வெளியில் இருந்துவிட்டு தமிழ் பாட்டு தொடங்கியவுடன் வருகிறேன்" என்று சொல்லி அதிகாரிகளிடம் வணக்கமாக அனுமதி பெற்று வெளியில் போய் இருந்துவிட்டு தமிழ்ப் பாட்டு துவக்கிய உடன் உள்ளே வந்து உட்கார்ந்த பிறகு அய்யர்வாள் முழுவதும் தமிழிலேயே பாடி மக்களைக் களிப்பித்தார் என்றால். இதை சுயமரியாதை மக்களின் காலித்தனமென்றோ கலாட்டா என்றோ சொல்லுவதா, அய்யர்வாளின் ஆரியப்புத்தி இவ்வளவு தொல்லை கொடுத்தது என்று சொல்லுவதா?

இது நடந்த பிறகு பட்டுக்கோட்டை அக்கிரகார ஆரியர்கள் பலர் சேர்ந்து பாகவதருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி தமிழ்த் தொண் டர்கள் பலர் மீது 107 கிரிமினல் புரசிஜர்படி ஜாமீன் கேசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது எப்படியோ நடந்து போகட்டும்.

- "குடிஅரசு" -  தலையங்கம் - 20.5.1944


சுவரெழுத்து சுப்பையா

  

9

1960ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது...

சீர்காழி சியாமளா பெண்கள் உயர் நிலைப் பள்ளி வாசலில் ஆவேசத் துடன் திரண்டு நின்று கொண்டிருந்தனர் பெற் றோர்கள்.

பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட் டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந் தளிக்க வைத்திருந்தது. என்ன, பள்ளிக்கு முன்பு இவ்வளவு கூட்டம்? என்று ஆர்வத் துடன் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக் களும் சுவரில் எழுதியிருந்தைப் படித்து விட்டு கோபத்துடன் பெற்றோர்களுடன் இணைந்து கொள்ள...எல்லோரையும் சமா தானப்படுத்த வழிதெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை யாசிரியர்.

"பொம்பளப் புள்ளைங்க படிக்கிற இடத்தில இப்படி எழுதலாமா?"

"ஏதோ நாலெழுத்து தெரிஞ்சுக்குனும் தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறோம்...இப்படி எழுதி வச்சா எப்படி அனுப்பறது?" 

"இதப் படிச்சிட்டு பொம்பளப் புள் ளைங்க இதுக்கு ஆசைப்பட்டா குடும்பம் குட்டிச்சுவராயிடாதா..?" என்கிற பொதுமக் களின் கேள்விகளைச் சமாளிக்க இயலாத தலைமையாசிரியர் அந்தச் சுவரை வெறித்துப் பார்த்தார்.

அதில்...

"சைக்கிள் ஓட்டும் பெண்கள்;

செந்தமிழ்நாட்டின் கண்கள்!"

என்று எழுதப்பட்டிருந்தது.

தலைமையாசிரியருக்கும் கூட்டத்தில் இருந்த விவரம் தெரிந்த ஒருசிலருக்கும் இதை எழுதியது யாரென்று புரிந்துவிட்டது.

பிரஷ் இல்லாமல்,பெயிண்ட் இல்லா மல் ரோடு போடப் பயன்படும் தாரை உருக்கி, விரலில் துணியைச் சுற்றிக் கொண்டு தாரில் தொட்டு முத்து முத்தாக சுவர்களில் எழுதி வைப்பவர் சுற்று வட்டா ரத்தில் ஒருவர்தான். அவர்...சுவரெழுத்து சுப்பையா!

பெண்கள் விமானம் ஓட்டுகிற காலத் தில் இந்தச் செய்தி உங்களுக்கு வேடிக்கை யாக இருக்கலாம். ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் நிலை இதுதான்.

அவ்வளவு ஏன்? 

தொண்ணூறுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களின் கேலி, சமூகத் தின் கிண்டல்களை எதிர்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தனர் பெண்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் அன் றைய ஆட்சித்தலைவர் ஷீலாராணி சுங்கத் அவர்களின் தீவிர முயற்சியால், அறிவொளி இயக்கத்தின் மூலமாக 1990-1992 காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டனர் என்பது நம்மில் பலரின் கவனத்தை ஈர்க்காத மிகப் பெரும் சாதனைதானே!

//முகநூல் பகிர்வு//

நன்றி: தோழர் நலங்கிள்ளி


வெள்ளி, 5 மே, 2023

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

  

தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

என்னென்ன திட்டங்கள்?

9

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்கிறேன்.  வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகிய வற்றின் கூட்டு வெளியிடாக இது வெளியிடப்படவுள்ளது.  இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். 

5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடு பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமை கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். 

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத் தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்...

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப் புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.

இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

10

சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று (30.3.2023) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள்.  1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.  (மேசையைத் தட்டும் ஒலி)  

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, (மேசையைத் தட்டும் ஒலி) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல்

நிமிர்கின்ற பார்வை உண்டு


செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு

வெண் சங்கொத்த கண்களிலே

விழியிரண்டும் கருவண்டு

அதில் சாகும்வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் 

இவரோ, படுகிழமாய்ப் போன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார்; (மேசையைத் தட்டும் ஒலி)

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.

இவை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள்.

தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார்  பேரறிஞர் அண்ணா.  (மேசையைத் தட்டும் ஒலி) உடனடியாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.  

“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி  வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப்  போராட்டங்கள் பற்பல.  அவற்றில் மிக முக்கியமான போராட்டம்தான் வைக்கம் போராட்டம். 

சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்!

1924-1925 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.  1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.  அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார்.  முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும் விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார். 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார்.  வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டினார்.  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரைப் பாராட்டினார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்கள்.  'திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது' என்று சுதேசமித்திரன் இதழில் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரையே உடன் அழைத்துச் சென்றார்.  கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.  1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.  இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.   (மேசையைத் தட்டும் ஒலி)

ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து,  பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய  பெருமை.  அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போது, வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமான ஒன்று.    சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது.  அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இதுபோன்ற கடந்தகால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் 

சொந்தமானவர் அல்ல!

பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.  சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள்.  நேற்றைய கிளர்ச்சிக்கும், இன்றைய  முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் கருத்தியல்கள்.  அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என்பதைத் தெரிவித்து, அமைகிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்ற 

அனைத்துக் கட்சியினர்!

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா முதலமைச்சர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினர் வரவேற்பு.

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுவது குறித்து சட்டமன்றத்தில் இன்று (30.3.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற விதி 110இன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசியதை வரவேற்று தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன்திருமலைக்குமார் (மதிமுக), இராமச்சந்திரன் (சிபிஅய்), நாகை மாலிக் (சிபிஎம்), சிந்தனைசெல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக). ஒ.பன்னீர்செல்வம் (மேனாள் முதலமைச்சர்), ப.தனபால் (அதிமுக), செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழிமொழிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையாற்றினர்.

வியாழன், 4 மே, 2023

இதோ பெரியாரில் பெரியார்!

  

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

4

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

 அன்புமிக்க தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால் அது லேசான வேலை அல்ல என்பதான எண்ணங் கொண்டு அப்படிப்பட்ட கஷ்டமான வேலையை எனக்கு அளிக்க வேண்டு மென்று கருதியே, எனக்குப் பெரியார் அவர்களின் படத்தைத் திறந்துவைக்கும் பணியை, வரவேற்புக் கமிட்டியினர் அளித்திருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதெப்படிக் கஷ்டமென்று நீங்கள் நினைக்கக் கூடும்.

நான் பெரியாரை நன்கு அறிவேன்

சாதாரணமாக நாம் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வோமானால் அங்குள்ள நம் தோழர், இது சூர்யகலா, இது சந்திரகலா, இது பாதுஷா, இவை இனிக்கும். இது சவ் சவ், இது கவ் கவ் இவை புளிக்கு மென்றால், நமக்கு முன்னாடியே இவை அறிமுகமாகாத பண்டங்களாயிருப்பதால் புளிக்குமோ தித்திக்குமோ என்று சந்தேகிக்க இடமிருக்கலாம். ஆனால், இது லட்டு, இது ஜிலேபி, இவை கசக்கும் என்று கூறினால் நாம் சும்மா இருப்போமா? “அட போடா போ, எனக்குத் தெரியும் லட்டு தித்திக்குமென்று" என உடனே சந்தேக மின்றி கூறி விடுவோம். காரணம் இப்பண்டங்களை நாம் நன்கு அறிந்திருப்பதால், அதே போல் பெரியாரைப் பற்றி நான் நன்றாய் அறிந்தவனாதலால் 30 ஆண்டு களாக நான் நெருங்கி அறிந்திருக்கும்போது அவரைப் பற்றி நானென்ன கஷ்டப்பட்டுக் கூறவேண்டியிருக்கும்? அன்றியும் அவரைப்பற்றி உங்களிடம் பேசுவதென்றால் அது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகத்தான் முடியும்.

அறிவை அளக்க அறிவுமானி உண்டா?

நவமணிகள் என்று கூறப்படும் மரகதம், மாணிக்கம், வைடூரியம், பச்சை, நீலம் கெம்பு, புஷ்பராகம், கோமேதகம் முதலியவற்றிற்கும், பவளம், முத்து இவைகளுக்கும், அவற்றின் ஒளி, நிறை இவற்றைக் கொண்டு ஓரளவுக்கு மதிப்புக் கூறிவிடலாம். ஆனால் அறிவின் உச்சியையோ, சிந்தனையின் சிகரத்தையோ, பகுத்தறிவின் எல்லையையோ ஒருவனால் அள விட்டுக் கூறமுடியுமா? அதற்கு ஒரு அளவுகோலோ துலாக்கோலோ உண்டா? ஏதாவது மீட்டர் தான் உண்டா? தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்! ஆலோ சித்துக் கூறுங்கள்! அறிவை அளக்க எங்காவது அறிவு மானி உண்டா? அப்படி இருக்க அறிவின் ஜ்வாலையா கவும், சிந்தனையின் பெட்டகமாகவும், ஆற்றலின் சிகரமாகவும், எல்லை காணமுடியாத பகுத்தறிவின் இருப்பிடமாகவும் இருந்துவரும் பெரியாரை நாம் எந்தக் கோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்ப்பது? வயது ஏற, ஏற திறனும் ஏறிக் கொண்டேதான் போகிறது. கோகலே ஹாலில் ஒரு சாண் நீண்டதென்றால் சேலத் தில் ஒரு முழம் நீளுகிறது. சேலத்தில்தான் ஒரு முழம் என்றால், திருவண்ணாமலையில் ஒரு கெஜம் நீளு கிறது. இப்படியாக இவரது பகுத்தறிவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது.

பகுத்தறிவும் அன்பும் வகுத்த வழி 

இத்தகைய ஒரு பகுத்தறிவின் காரணமாகத்தான் என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகளும்கூட, அவரை நாடி வரவேண்டியிருக்கிறது. அவரது தெளிந்த பகுத்தறிவுத் தேனின் ருசியை ஏற்கெனவே அனுபவித்ததன் காரணமாகத்தான், அந்த ருசியில் மயங்கித்தான், இன்று மதுதேடி அலையும் வண்டு களைப்போல், நாம் இங்கு கூடியுள்ளோம். ஒளி கண்டு மயங்கிக் கிடக்கும் விட்டில் பூச்சிகளைப்போல், நாமும் அவரது கருத்துக்கள் என்னும் பிரசங்கத்தேனையுண்டு இன்று திளைத்திருக்கிறோம். அவரது பகுத்தறிவு, நுண்ணிய நுண்ணறிவுக்கும் மிக நுண்மையானது. ஆகவேதான் நம்மைப் பிற நாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம்மை விட "அதிர்ஷ்டசாலிகள்?" இவ்வுலகில் வேறொரு மக்கள் கூட்டம் இருக்கமுடியாது உண்மையாகத்தான் கூறுகிறேன். 

பொல்லாத கொடிய விரியன் என்று கூறத் தோன்றுகிறது.. பாம்புகள் நம்மை ஆட்சிபுரிந்து வரும் போது, ஒரு பக்கம் இவ்வற்பர்களின் அடக்குமுறைத் தொல்லையும், மற்றொரு பக்கம் அன்பர்களின் பட்டி னிக் கூப்பாடும் நம்மை வாட்டிவரும் போது. பெரியா ரைப் போன்ற உருவங்கள் நம்மிடையே இருந்து சற்று ஆறுதல் ஊட்டி வருவதால்தான் நாம் உயிரோடு இந்நாட்டில் வாழ முடிகிறது. இன்றேல் நாம் என்றோ இறந்திருப்போம் அல்லது இந்நாட்டை விட்டேனும் எங்காவது ஓடிவிட்டிருப்போம். ஆம். பெரியார் ஒரு வர்தான் நம்மை இந்நாட்டோடு இணைத்து வைத் திருக்கிறார். அவரது பகுத்தறிவும் அன்பும் தான். நம்மை அவர்பால் இழுத்து அவர்வழிச் செல்லத் தூண்டுகிறது. அன்னாரையோ அல்லது, அன்னாரது இயக்கத்தின் வளர்ச்சியையோ சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். இந்தப் பதவி வேட்டை உருவாரங்கள். ஆகவேதான் சில சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து விஷமம் செய்து பார்க்கிறார்கள்.

எண்ணினார் பனகல், 

இயற்றினார் பெரியார்

இவர் தமது இயக்கத்தை ஆரம்பித்த காலம் 1925 அல்லது 1926 ஆக இருக்கவேண்டுமென்று நினைக்கி றேன். அந்தக் காலத்தில் நம் மாகாண அமைச்சராக இருந்தவர், நமது மதிப்பிற்குரிய பனகல் அரசர் ஆவார்கள். அவர் தலைசிறந்த அறிவாளி, கைதேர்ந்த ராஜதந்திரியும்கூட, அவர் “பொதுப்பணம் ஏராளமாகக் கோவில்களில் வீணாக்கப்படுகிறது, அனைத்தும் பார்ப்பனின் வாழ்வுக்கே உபயோகப்பட்டு வருவதோடு, நம் மக்கள் வேறு-மடையர்களாக்கப்பட்டு வருகிறார்கள்; அதைக் கட்டுப்படுத்த கோவில்கள் தம் வரவு செலவுக் கணக்குகளைச் சர்க்காருக்குக் காட்ட வேண்டும் என்று சட்டம் செய்யத் தீர்மானித்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டம் செய்வதற்கு அவசியம் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். அவருடைய அன்றைய ஜஸ்டிஸ் கட் சியோ, மிட்டாதார், மிராஸ்தார், ஜமீன்தார் இவர்களின் கூட்டமாக இருந்ததால் தன் கட்சித் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கஷ்டமென்று கண்டு கொண்டார். அத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை யாராவது திரட்டிக் கொடுத்தால் நலமாக இருக்குமென்று கருதி, அப்பணியை யாரிடம் ஒப்புவிப்பதென்று யோசிக்கலா னார். அவருடைய யோசனைக்குப் பெரியார் ஒருவர் தான் பிடிபட்டார். பெரியாரிடம் வந்து இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பெரியார்அவர்களுடன் கலந்து பேசினார். காங்கிரசிலிருந்த போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும். சமுதாயச் சீர்திருத்தத்திற்கா கவும் பாடுபட்டு, அதன் காரணமாக அதைவிட்டு வெளியேறி விலகியிருந்த பெரியார் அவர்களும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழ்நாடெங் கனும் இப்பொல்லாத பிராமணியத்தை எதிர்த்துப் பிரச் சாரம் செய்யத் துவங்கினார். "சாமிக்கு அரிசி பருப்பு ஏன் படைக்க வேண்டும்? அந்தச் சாமி சாப்பிடுவதாக எந்த டாக்டராவது சர்டிபிகேட் எழுதிக் கொடுப்பாரா? அப்படியிருக்க சாமிக்கென்று கூறிச் சோம்பேறிப் பார்ப்பனர்கள்தானே அதை உண்டு வயிறு வளர்க் கிறார்கள். பாடுபட்டு பட்டினி கிடக்கும் நீங்கள்தானே அதற்கும் படி அளந்து வருகிறீர்கள்” என்கின்ற பல்லவி யைத் துவக்கி, "சாப்பிடட்டும்! தொலைந்து போகிறார் கள். அதற்குக் கணக்காவது காட்டி தொலைக்கட்டுமே! கணக்கில்லாவிட்டால் அவர்கள் பொது சொத்துக் களையெல்லாம் நாளா வட்டத்தில் தமது சொந்தச் சொத்தாக்கிக் கொள்வார்களே! நீங்கள் அழ, அழ, அவர்கள் உங்களைக் கொள்ளையடிப்பதா?” என்பதாக இன்னும் இப்படிப் பல விஷயங்களைக் கிளப்பி ஆங்காங்கு கர்ஜித்து வந்தார். அந்தச் சமயம் பார்ப்பனர் “ஜஸ்டிஸ் கட்சி சாமிகள் தலையில் கைவைத்துவிட்டது” என்று விஷமம் செய்து, மக்களை ஜஸ்டிஸ்கட்சி மீது வெறுப்படையச் செய்து இருந்தனர் என்றாலும் பெரியார், பேச்சைக் கேட்ட பிறகு சட்டம் அவசியம் தான்; கணக்கு வழக்கு கவனிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டார்கள். பனகல் அரசருக்கும் இந்து மத பரிபாலனச் சட்டம் இயற்றுவது சுலபமாக முடிந்தது.

எதிர்ப்பின் விளைவு சுயமரியாதை இயக்கம்

அந்த இந்து மத எதிர்ப்புப் பிரசாரத்தில் சேர்ந்த வர்கள் தான், நாங்கள் ஏழெட்டுப் பேர்கள். சட்டமியற்று வதற்கு ஆதரவு தேடித் தந்ததும், பெரியார் அவர்கள் சிந்திக்கலானார். அவர் பெரிய தூரதிருஷ்டியுடையவர். ஆதலால் யோசித்துப் பார்த்தார். இந்த 'ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ பணக்காரர்கள்: பணத்தைக் காப் பாற்ற தம் பதவியை நீடிக்க எதையும் செய்ய இவர்கள் துணிவார்கள். இவர்களை நம்பி நம்மால் என்ன செய்ய முடியும்? இவர்களது வேலை முடிந்ததும் நம்மை இவர்கள் கைவிட்டு விடுவார்களானால் நாம் என்ன செய்வது; நாம் மக்களிடையே செய்த இவ்வளவு பிரச் சாரத்தையும் வீணாக்குவதா? கூடாது! கூடாது! தனி இயக்கம் ஒன்று கண்டே தீரவேண்டும். அவ்வியக்கத் திற்கு என்ன பெயர் கொடுப்பது' என்று சிந்தித்தார். தம் ஆபீஸ் அகராதிகளையெல்லாம் புரட்டிப் பார்த் தார். அப்போது கண்டெடுத்த வார்த்தைதான், 'சுயமரி யாதை' என்பது. அப்போது தோற்றுவித்ததுதான் சுய மரியாதை இயக்கமும் ஆகும்.

சுயமரியதை வளர்ப்பினால் 

தோன்றிய பேருண்மைகள் 

அவ்வியக்கத்தின் மூலம் பிராமணியத்தை தாக்க ஆரம்பித்தோம். அவர்கள் சாஸ்திரத்தை ஆதாரமாக காட்டினார்கள். அதை ஆராய்ந்து பார்த்து, அதை ஆரியம் தமக்காக எழுதி வைத்துக் கொண்டதென் றோம்! பரசாரார் வாக்கு மனுவாக்கு என்று கூற ஆரம் பித்தார்கள். அவற்றிற்கும் தக்க மறுப்புகள் கூறினோம். புராணங்களையும் உபநிஷத்துக்களையும் காட்ட ஆரம்பித்தார்கள். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்துக்கூற ஆரம்பித் தோம். முடிவில் கடவுளை ஆதாரமாகக் காட்ட ஆரம்பித்ததும், “நிறுத்து! தம்பி அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது; எமக்கும் ஒன்றும் தெரியாது" என்று பதில் கூறினோம்! இவற்றையெல்லாம் எங்களுக்குக் கூறித்தந்தவர் பெரியார்தான். சுயமரியாதைத் தத்துவத் தையே நமக்கும் நமது இவ்வுலகத்திற்கும் அளித்தவர் பெரியார் தான். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததும் அவரேதான். அந்தப் பெருமையில் பங்கு கொள்ள வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.

அவர் தமது சுயமரியாதைத் தத்துவத்தின் மூலம், நமக்கு எதையும் எளிதாக்கித் தந்தார். நமது அறியா மையை அகற்றி நமக்குப் பகுத்தறிவு ஊட்டினார். நமது ஏழ்மையையும் தாழ்மையையும்கூட மறக்கச் செய்தார். ஏழை பணக்காரன் என்பதில்லை. தொழிலாளி முதலாளி என்பதில்லை! அனைவரும் தோழனுக்குத் தோழன்தான் என்ற மனப்பான்மையை ஊட்டினார்; அதை வளர்த்தார். ஜமீன்தாரர்களை முரட்டுப் பணக் காரர்கள் என்றார். கடவுள் வெறும் உருளைக்கல் என்றார். பிராமணியம் அந்தக் கடவுளுக்குத் தூண். அத்தூணைச் சுக்கு நூறாக்கினால்தான் நாம் இன்ப வாழ்வு வாழ முடியும் என்றார். இவற்றைக்கூறிட ஒரு சிறிதும் அஞ்சினாரில்லை. யாரோ ஒரு அன்பர் சற்று முன் அஞ்சா நெஞ்சம் படைத்த அழகிரிசாமி என்று என்னைப் பாராட்டினார். எனக்கு அஞ்சா நெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான். அவர் எனது அறிவிலிட்ட வித்துத்தான் என்னை அஞ்சா நெஞ்சமுடையவனாக் கியது. அவரது அஞ்சா நெஞ்சத்துக்கு ஒரு சான்று கூறுகிறேன் கேளுங்கள்.

பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!

ஒரு சமயம் விருது நகரில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியா ரைக் குத்திவிட ஓடிடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலீசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான், இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாது காப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.

அச்சத்தை ஓட்டி 

அறிவை வளர்த்தவர் பெரியார்!

கடவுளென்றால் அதெல்லாம் “வெறும் புருடா" என்று கூறினார். "மதம் மடமையின் விருந்தென்று" புகன்றார். “புராணம் ஒரு ஏமாற்றுவித்தை” என்றார். “பிராமணியம் ஒரு படுமோசப் பாதகம்' என்றார். “சாஸ்திரங்களைக் குப்பை" என்று குறித்தார். எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ. எதற்கு நாமெல் லாம் அடிபணிந்திருந்தோமோ, எதை நம்மவர்கள் சிலர் பெருமை என்றுகூட நினைத்து வந்தார்களோ, அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார்.

படித்தவர் - படியாதவர்கள், ஜமீன்தாரர்கள் - குடியானவர்கள், உத்யோகஸ்தர்கள் - குமாஸ்தாக்கள், பணக்காரர்கள் - ஏழைகள் ஆகிய சகலரையும் காணும் நமது கண்களையும் ஒரே மட்டமாக்கினார். எம்.பி. பி.எஸ். டாக்டரையும் நமது அம்பஷ்ட வைத்தியரையும் அவர்களது படிப்பைக் கொண்டல்ல. அவர்களது அனுபவத்தைக் கொண்டு, அவர்களது செயலாற்றும் திறனைக்கொண்டு கணக்கிடும்படி செய்தவர் அவர் தான். “எப்படி பெரிய ரோட்டு உருளையானது. ரோட் டில் பரப்பப்பட்டுள்ள சிறுகல். பெருங்கல் அனைத் தையும் தன் பளுவால் சரிமட்டமாக்குகிறதோ, அப்படித் தம் அறிவுருளையால் அனைத்தையும் சமமாக்கித் தந்தார்" நமது அறிவின் தந்தை பெரியார். முகத்து ரோமத்தை நீக்க உதவுவது கூரிய கத்தி, அதைக் கூர்மைப்படுத்தித் தருவது சாணைக்கல். அதே போல் பகுத்தறிவுதான் நமது மடைமையைப் போக்கும் கத்தி. அப்பகுத்தறிவுக்குச் சாணைக்கல் போல் உதவி செய்வதுதான் கல்வி. ஆகவே கல்வியைக் கல்லடா தம்பி! அது அறிவைக் கூர்மைப்படுத்தும் தம்பி என்று நமக்குக் கூறினார். நெடுங்காலமாகவே நாம் நமது அறிவை உபயோகப்படுத்தாததால் அது மழுங்கி விட்டது. ஆதலால் அதைக் கல்வியென்னும் சாணைக் கல்லால் தீட்டுடா தம்பி! என்று கூறினார்.

நலிவை ஒழித்து நமக்கு 

வாழ்வளித்தவர் பெரியார்! 

படித்தவர் என்றால் ஒன்றும் பிரமாதம் இல்லை. படித்து விட்டால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிட மாட்டான். அறிவாளிகள் எல்லாம் படித்துத்தான் அறிவாளிகள் ஆனார்கள் என்று கூறுவதற்கும் இல்லை. அல்லது படித்திருப்பதினாலேயே ஒருவன் சகல காரியங்களிலும் நிபுணன் ஆகிவிடமுடியாது. நன்றாகப் படித்துள்ள ஒரு நீதிபதி, ஒரு நல்ல நாற்காலி மேஜையைச் செய்துவிட முடியாது. அது தச்சன் தொழில், ஆகவே அவன்தான் அதைத்திறம்படச் செய்வான். அந்த நாற்காலி செய்ய முடியாததால், அந்த நீதிபதியை அறிவற்றவன் என்று கூறிவிடமுடியுமா? அந்தத் தச்சனையே நாம் ஒரு உளியடித்துக் கொடு என்றால், அதைத் திறம்பட அவனால் செய்து தர முடியுமா? அவனால் செய்து தர முடியாது? உளி செய்பவன் கருமான். அவனுக்குத் தான் உளி செய்யும் பக்குவம் தெரியும். ஆகவே அவனவனுக்கு அந்தந்தத் தொழிலில் தேர்ச்சியுண்டு என்று கூறலாமே தவிர, ஒருவன் மற்றவனைவிட அறிவில் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நம்மால் கூற முடியாது. வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.

நமது எத்திராஜும் வக்கீல் படிப்புப் படித்தவர்தான். நமது வெங்கடரத்தினமும் வக்கீல் படிப்புப் படித்தவர் தான் ஆனால், அவர் நாளொன்றுக்கு ரூ 2000, 3000 வாங்குகிறார். இவர் ஒரு பெட்டீஷனுக்கு ரூ 0-8-0 பீசுக்குக் கோர்ட்டில் லாட்டரி அடிக்கிறாரே, படிப்புத் தான் அறிவானால், இவர்களிருவரும் சரிவிகிதத்தி லன்றோ பணம் சம்பாதிக்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்களின் படிப்பல்ல, அறிவுதான் மூலக்காரணம் என்பதை அறிய முடிகிறதா? இல்லையா? இப்படி எல் லாம் விளக்கிக்கூறி, பகுத்தறிவுதான் உலகை ஆளும் என்று காட்டி நமக்கு வாழ்வளித்தவர் பெரியார்தான்.

தேவையை எண்ணு! 

செலவையும் சிக்கனமாக்கு!

செழுமையில் ஆசைப்படாதே! உன்னுடைய தேவையை அனாவசியமாக அதிகரித்துக் கொள் ளாதே! மற்றவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு. அவ்வாடம்பரத்தில் மோகம் கொள்ளாதே! இன்று வெறும் ஆசைக்கென்று விருப்பப்படும் பொருளானது நாளைக்கு அடைய முடியாமற் போனால் நமக்குத் துன் பத்தையே விளைவிக்கும்! ஆனதால் அவசியமில்லாத பொருளைத் தேவையென்று கருதிவிடாதே! எளிய வாழ்க்கை நடத்து! ஏமாந்து போகாதே! என்று எச்சரிக்கை செய்து நம் வறுமையை மறக்க வழிசெய்து தந்தவரும் பெரியார்தான்.

அவரது பொருளாதார சிக்கனமும் சற்று அலாதி யானதுதான். முழுக்கைச் சட்டையில் மோகம் கொள் ளாதே! நாலு முழுக்கைச் சட்டைகளுக்கு வேண்டிய துணியில், 5 அரைக்கைச் சட்டைகள் தைத்துக் கொள் ளலாமே! வேலை செய்யவும் சவுகரியமாயிருக்குமே! என்று கூறிச் சட்டை தைத்துக் கொள்வதில்கூடச் சிக்கனத்தை அனுஷ்டிக்கும்படி செய்வார். அதனால் தான் அவர் எப்போதும் அரைக்கைச் சட்டைகளை அணிந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

அவரது சிக்கனத்திற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன் கவனித்துக் கேளுங்கள். அவர் ஒரு சமயம் கும்பகோணம் சென்றிருந்தபோது தோழர் சின்னத் தம்பி வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றிருந்தாராம். அவர் வீட்டில் ஒரு ரேடியோ இருக்கக் கண்டு என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்று கேட்டாராம். அவர் ரூபாய் எண்ணூறுக்கு வாங்கியதாகச் சொன்னாராம். அதைக் கேட்தும் அவர் பாத்தீங்களா, இந்த திருட்டுப் பசங்க செய்கிற வேலையை! சாதாரண நாட்டுக் கள்ளிப் பலகையில் இந்தப் பெட்டியைச் செய்தால், இன்னும் 200 ரூபாய் குறைய விற்கலாமே! இந்தப் பளபளப்புக்காக நாமும் 200, 300 அதிகம் தர வேண்டியிருக்கிறதே! விலை சரசமாயிருந்தால் இன்னும் அதிகம் பேர்கூட வாங்கச் சவுகரியமாக இருக்குமே! என்று கூறினாராம். மலர் மாலை அணிவதும் வாழை இலையிலுண்பதும் மக்கள் உழைப்பை மதிக்கும் செயலன்று.

இப்படி எதற்கெடுத்தாலும் சிக்கனந்தான். ஆம்! மண்ணும் விண்ணும்கூட இவருக்குச் சிக்கனம் செய்யப்பட வேண்டியவை தான். காரணமின்றி அவர் நமக்குச் சிக்கனம் போதிக்கவில்லை. சிக்கனம் அனைவருக்கும் அவசியமானது; அதுவும் நம்மைப் போன்ற ஊதாரி மக்களுக்குச் சிக்கனக் கருத்து மகா மகா அவசியமானது. எதையும் வேஸ்ட் செய்வதுதான், வீண்செய்வதுதான் நமது பழக்கம். பாருங்கள்! இந்த மேஜைமீது குவிந்து கிடக்கும் இம்மலர் மாலைகளால் யாருக்கு என்ன லாபம்? இம்மாதிரி எத்தனை மாலைகள் அன்றாடம் பழாகின்றன? நம் நாட்டில் மாலை அணிவித்தல் என்ற அர்த்தமற்ற சடங்கால், தினம் எத்தனை ஆயிரம் ரூபாய்கள் பாழாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை ஏக்கர் பூமிகள் வீணாக்கப்படுகின்றன என்பதுபற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அடுத்த அதிசயம் என்னவென்றால், வேறெந்த நாட்டிலும் இல்லாத வாழை இலையில் உண்பதென்ற பழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கோப்பையில் சாப்பிடுவது அநாசாரம். வாழை இலையில் உண்பது நமக்குப் பெருமை. இப்பெருமைக்காக லட்சக்கணக் கான ரூபாய் பெறுமான இலைகள், அன்றாடம் வீதியில் எறியப்பட்டு வீதியை அசிங்கப்படுத்தி வர வேண்டி யதா? பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டாமா நீங்கள்? வாழைத் தோட்டங்கள் இல்லையானால், அவ்விடங்களில் எவ்வளவு அவசியமான உணவுப் பொருள்கள் பயிரிடக்கூடும்? வாழைக்காயென்ன அத்யாவசியப் பொருளா? வாழையிலை அறுப்பதால், வாழைக்காய் அதிகம் காய்க்கப்படுவதில்லை. ஆகவே இலைக்கென்று தனித்தோட்டங்கள் சிலர் வைத்து வருகிறார்கள். வாழையுற்பத்தி குறைக்கப்பட வேண் டும். மலர்கள் உற்பத்தியும் குறைக்கப்பட வேண்டும். மக்களும் வாழையிலையில் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுத் தட்டுகளில் உண்ண வேண்டும். மலர் மாலை அணிவித்தலை விட்டுத் துணி மாலையாவது நூல் மாலையாவது அணிவித்தல் வேண்டும். மற்றவர் கள் செய்யாவிட்டாலும், பகுத்தறிவுப் பாதை வழிச் செல்லும் நாமாவது, நாசகரமான இப்பழக்கங்களைக் கைவிடல் வேண்டுவது முக்கியம். இவற்றையெல் லாம்கூட நமக்கு விளக்கிக்காட்டியவர் பெரியார்தான்.

இதை நான் கூறாவிட்டாலும் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். நமது தற்கால ஆசிரியர்கள் கூறாவிட்டாலும் பிற்கால ஆசியர்களாவது, இந்நாட்டில் பகுத்தறிவொளியை வீசியவர் பெரியார் என்பதை மறக்காமல் பொறிப்பார்கள். அவர்கள் பொறிக்க மறந்து விடுவார்களானால், அவர்களைச் சரித்திர ஆசிரியர்கள் என்று உலகம் மதிக்காது.

(தொடரும்)

18

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (27.3.2023) தொடர்ச்சி...

பெரியார் வேறு! 

ஈ.வெ.இராமசாமி வேறு!

இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு - ஈ.வெ.ராமசாமி வேறுதான். ஈ.வெ.ராவுக்கு மாட மாளிகைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நஞ்சை புஞ்சைகளும் உண்டு. ஓரளவு ரொக்க ரூபாயும் பாங்கியில் உண்டு. ஆனால், பெரியாருக்கு அதெல்லாம் இல்லை. அவ ருக்கு உலகெல்லாம் சொந்த ஊர்தான். உலக மக்க ளெல்லாம் அவருக்குச் சகோதர சகோதரிகள்தான்.

நம் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பண மிருக்கிறது என்று மற்றவர் பாராட்ட வேண்டுமென்பதற் காகவே சம்பாதிப்பார்கள். சிலர் பணமூட்டைகளை அடுக்கி அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதற் காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், எந்தப் பணக் காரனும், அவன் எந்நாட்டவனாயினும் சரியே, அவன் தன் சுயநலத்திற்காக, சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்ற எவனும் பொது வாழ்வில் ஈடுபடமாட்டான். ஆயுள் முடிந்து ஓய்வு பெற வேண்டிய காலத்தில்கூட, தான் சம்பாதித்த பொருளின் முழுப்பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது. தன் எஞ்சிய காலத்தைப் பொது வாழ்வுக்குச் செலவழிக்க இசையான். ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறுபட்டவர் பெரியார். இவரும் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையோடு தான் ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக்குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். இவருக்கு மனைவி யில்லை. மக்களில்லை. தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுகமாக வாழலாம். எப்படித் தன் பணத்தை வாரி இறைத்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படி இருந்தும் பெரியார் என்ன செய்கிறார்? அவர் இப்படி சுகவாழ்க்கை அனுபவிப்பதைவிட்டு இத் தள்ளாத வயதில்கூட, தனது நேரம் பூராவையும் பொதுநல ஊழியத்திலேயே செலவழித்து வருகிறார். ஆகவே தான் பெரியாரில் ஒரு பெரியார் என்று இவரை அழைக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை. இனியும் காணப்போவ தில்லை என்பது தான் எனது அபிப்பிராயம் - ஆகவேதான் நான் முதலிலேயே திராவிட நாடு 'அதிர்ஷ்டம்' பொருந்திய நாடு; நாம் அதில் பிறந்திருப்பதால் 'அதிஷ்டசாலி'கள் ஆனோம் என்றேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள்ளோம். ஆத லினால்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால் இயக்கத்தை பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்து விட்டாலும் உளம் பொறார்.

சுலபத்தில் ஆத்திரம் கொள்வார். தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம் பேறிப் பயல் என்றெல்லாம் கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப்பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை “பெரியார் வாழ்க வாழ்க" என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

இன்னும் அனுபவம் பெற வேண்டும்-இதுவே இளைஞர்க்கு உணர்த்தும் ஒரு பொருள்

வாலிபர்கள் என்றாலே பெரியாரின் அகராதியில் அனுபவம் அற்றவர்கள் என்றுதான் பொருள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அகராதியிலோ, அவர்கள்தான் நிகழ் காலச் சிற்பிகள், எதிர்கால மன்னர்கள், தமது இஷ்டப்படி தண்டவாளத்தைப் பெயர்த்துத் தம்மைப் பதவியில் உட்கார வைக்கக் கூடியவர்களும் அவர்கள் தான் என்பார்கள். ஆனால் இதைப் பெரியார் ஒப்புக் கொள்ளமாட்டார். ஒப்புக்கொள்ளாமலிருக்கக் காரணமும் உண்டு. எனது அனுபவமும் அதுதான். நான் ஒரு சமயம், தோழர் அய்யப்பன் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதற்குச் செல்லும்போது ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன். வண்டி ஈரோட்டைத் தாண்டிச் சென்ற பிறகுதான் விழித்துக் கொண்டேன். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிவர மணி 11 ஆகிவிட்டது. நான் பேச வேண்டிய கட்டமும் வந்துவிடவே, நானும் எனது பேச்சைத் துவங்கி விட்டேன். தலைவர் ஏதோ அவசர வேலையாக 1 மணி வண்டிக்கே போகவேண்டியிருந் ததால், பெரியார் அவர்கள் 12.30 மணிக்கே கூட்டத்தை முடித்துவிட விரும்பி 12.15 க்கே எச்சரிக்கை செய்தார். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே தலைவரை எழுப்பி அழைத்துச் சென்று விட்டால், நான் எங்கே கோபித்துக் கொள்வேனோ என்ற பயம் ஒரு புறம் தன்னை வாட்ட, அவரைக் காலா காலத்தில் அனுப்பி வைக்கவேண்டிய தமது பொறுப்பு ஒருபுறம் வேதனை செய்ய, என்னை நிறுத்திக் கொள்ளும்படி ஜாடையாகக் கேட்டார். எனக்கு அப்போது மண்டைக் கர்வம் ரொம்ப அதிகம். ஆகவே. இவரென்ன நம்மைத் தடை செய்வது என்று நினைத்து 'இது என்ன சர்வாதிகாரமா' என்று கேட்டு விட்டு எதிரிலிருந்த தோழர்களைப் பார்த்தேன். அவர்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா? “நிஷீ ஷீஸீ” என்று, அதாவது, "நிறுத்தாதீர்கள், தொடர்ந்து பேசுங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

நானும் விடாப்பிடியாகப் பேசிக்கொண்டே இருந்தேன். குறிப்பிட்ட நேரம் வரவும் பெரியார், தோழர் அய்யப்பன் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் பேசி முடிந்ததும், ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதுபோல நினைத்துக் கொண்டு, மாநாட்டு உணவைக் கூடச் சட்டை செய்யாமல் கோபத்தோடு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டேன். தோழரை வழியனுப்பிவிட்டு வந்த பெரியார் அவர்கள், திருட்டுப்பூனை கருவாட்டுத் துண்டுக்காக மோப்பம் பிடித்துத் திரிவதுபோல், கடைத் தெருவில் திரிந்துகொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்து விட்டார். நான் பாராததுபோல் கொஞ்சம் “ரப் அண்ட் டப்" ஆக, சற்று அசட்டையாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவரா விடுகிறார். “என்னங்க, சாப்பிட்டீங்களா?” என்று உரக்கக் கேட்டுவிட்டார். எனது சப்த நாடிகளும் தளர்ந்து விட்டன. அதைக் கேட்டதும், எனக்கு ரொம்ப அவமானமாகி விட்டது. நாம்தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே தான் வாலிபத் தோழர் களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

'ஏமாற்றலாம்!' 

- இதனை எண்ணாதீர்!

17

பெரியார் உங்களை நன்கு அறிந்துள்ளார். ஆகவே, அவரை உங்களால் ஏமாற்ற முடியாது. அவரும் உங்கள் நன்மைக்காகத்தான் பாடுபட்டு வருகிறார். ஆதலால், அவர் வழி நடவுங்கள்; நடந்தால் இன்புற்று வாழலாம். இன்றேல் 'வெங்கட ரமண கோவிந்தா' வென்று கூவிக்கொண்டு தெருவில் உருளவேண்டியதுதான்.

பெரியார்தன்னில், தானொரு வீரர், தான் மட்டும் வீரராக இருக்க விரும்புபவரில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள அத் தனை பேரையும் வீரராக்க வேண்டுமென்ற விருப்பமும் அதற்கேற்ற ஆற்றலும் படைத்தவர் பெரியார் ஆவார். அவர் ஒரு வீர புருஷர் மட்டுமல்ல. எளிய வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் அநேகமாக மூன்றாவது வகுப்பில்தான் பிரயாணம் செய்வார். அதுவும் அந்த வண்டியில் ஒரு 4 ஆவது வகுப்பு இல்லாத குறையால்தான்.

இலட்சிய நோக்கு! 

இடையறா உழைப்பு!

அவரது குற்றச்சாட்டுக்கு ஆத்திரப்படும் தோழர்கள் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். அனுபவிக்க வேண்டிய பொருள் இருக்கும்போது. இவர் ஏன் இப்படி ஓய்வு ஒழிச்ச லின்றிச் சுற்றித் திரிகிறார் என்பதை?

இன்றும் நாளையும் திருவண்ணாமலை, மறுநாள் 15ஆம் தேதி பனமலை, 16ஆம் தேதி காட்டுமன்னார் கோயில் 17ஆம் தேதி விழுப்புரம், 13ஆம் தேதி அரசூர் இப்படி எல்லாம் இவர் ஏன் சுற்றியலைகிறார் என்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவரது குறிக்கோளின் தன்மை அத்தகையது. அதில் அவருக்குள்ள விருப்பம் அவ்வளவும் அதிகமானது. அந்த லட்சியம் நிறைவேற அவர் அல்லும் பகலும் உழைக்கத் தயங்கார். உனக்கொரு கொள்கை கிடையாது. கொள்கையிருக்குமானால் அதில் போதிய பற்றுதல் இருக்காது. போதிய பற்றும் இருந்தாலும் அதற்காக உழைக்க உன் மனம் ஒப்புக் கொள்ளாது. உன் மனம் இன்பத்தையே நாடும்.

அவர் மனமோ இலட்சியத்தை நாடும் அவருக்குக் கறுப்பைக் கண்டால் திராவிட இனத்தின் இழிவு ஞாபகத் திற்கு வரும். உனக்கோ கறுப்பைக் கண்டால் காரிகையரின் கருங்கூந்தல் ஞாபகத்திற்கு வரும். சிவப்பைக் கண்டால் அவருக்கு இழிவு நீக்க முயற்சி ஞாபகத்திற்கு வரும். ஆனால், உனக்கோ உன் காதலியின் பவளச் செவ்வாய் ஞாபகத்திற்கு வரும். அதற்கு யாரென்ன செய்தல் கூடும்?

ஏற்பட்ட விரோதம்! 

எதிர்ப்படும் குரோதம்!

அன்பர்களே, அன்னாரின் இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை, இல்லை, இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனது ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டைக் கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தாலென்ன? அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு. அத்தனை பேரும் அழிந்து போனால் என்ன? அப்படி நாசமடைந்தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழி பிறக்குமே இப்பெரியாரின் உழைப்பை யாரே மறக்க முடியும்? தம் உழைப்பின் பலனை இவர் காண்பதெப்போது என்று நீங்கள் துடிக்க வேண்டாமா? உங்கள் சக்திகளையெல்லாம் இப்பெரியாருக்கு நீங்கள் அடிமைப்படுத்த வேண்டாமா? அப்படித்தான் செய்யாவிட்டாலும். இவரது உழைப்பின் சிறப்பை உணருமளவுக்கு உன் அறிவு மாற்றானுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், அல்லது அறிவு மடமையிருளில் மழுங்கிக் கிடந்தாலும் சற்று ஒதுங்கியாவது இருக்க வேண் டாமா? இவரை ஏசுபவர் எத்தனை பேர்! இவரைப் பழிப்ப வரும் தூற்றுபவரும் எத்தனைப்பேர்? நமக்குள்ளாகவே “கக்கிரி புக்கிரி” என்று பூசல் விளைவிப்பவர்கள் எத்தனை பேர்? இத்தனையையும் சகித்துக் கொண்டு இவர் இன்னும் உயிரோடும் இருக்கிறார் என்றால் அதன் பொருளென்ன? இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இவற்றை எல்லாம் சட்டை செய்யாது வாழ இவரென்ன சிங்கமா? கரடியா? அல்லது நகராது கொத்தும் பாம்பா? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

எதற்கும் தளராத 

இவரின் கருத்தெழுச்சி!

உடல் இவ்வளவு தளர்ந்திருந்தாலும், இத்தளர்வு, இவரது பேச்சில் காணமுடியவில்லையே! கூட்டம் முடிந்ததும், இன்று கூட்டம் மிக அருமை என்று கூறிவிடுங்களேன்! எவ்வளவு உற்சாகத்தோடு எவ்வளவு பெருமிதத்தோடு சற்றுக் கனைக்கிறார் பாருங்கள்! தோள் தட்டி, தொடை தட்டித் தொண்டாற்ற வாருங்கள் என்றழைக்கும் இளங் குமரனைவிடச் சற்று அதிகமாகவே கர்ஜிக்கிறாரே இவ்வீர புருஷர். இதற்குக் காரணம் என்ன! இவரது உணர்ச்சி, உணர்ச்சியின் வேகம் இவைதான் காரணம். இவரது உணர்ச்சியின் வேகத்தை, கருத்தெழுச்சியின் ஆழத்தை, அவற்றின் அறிவை நம்மால் என்றுமே சரியாக அளக்க முடியவில்லையே. நாம் எவ்வளவுதான் ஆழத்துக்குச் சென்று துளாவினாலும், ஆழமறியாத முத்துக் குளிக்கும் தோழன் ஏதோ ரொம்ப ஆழத்தில் சென்றுவிட்டோம் என்று கருதித் தன் வலையை வீசிக் கிடைத்தவற்றைப் பிடித்து அதை மேலிழுக்க, அதன் பளுவைக் கண்டு ஏதோ நிறைய கொணர்ந்துவிட்டதாகக் கருதி மகிழ, கடைசியில் அவை அத்தனையும் முத்துச்சிப்பிகள் பாம்பும், நண்டுமாக இருக்குமானால், அவன் எப்படி அவதியுறுவானோ -தன் அறியாமைக்கு வருந்தி, அதே போல் நாமும் பெரியாரின் ஆழத்தை நம்மால் உணர முடியவில்லையே வருந்தியழுவ தோடு, அவரது ஆழ்ந்த கருத்துக்களை அப்படியே என்று பின்பற்ற வேண்டியது அவசியம் என்ற முடிவுக்குத் தானே வர வேண்டியிருக்கிறது. அவரது கருத்துக்கள் கடலினுள் முத்துச் சிப்பி போன்றன. நம்முடைய கருத்துக்களோ கடலினுள் நண்டு நத்தை போல்வனவே ஆகும்.

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங் களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத் தான். அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் அனுப்பியிருக்க மாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்து விட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

ஆயிரம் கரிபால்டியாயினும் 

அழித்திருக்குமே ஆரியம்! 

இத்தாலி ஒரு மாஜினியையும், ஒரு கரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், பிரான்ஸ் ஒரு ரூஸோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா ஒரு லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால் அவர்களது சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப்போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கரிபால்டிகள் தோன்றியிருந்தாலும்கூட, இந்த ஆரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும். காந்தியாரின் வர்ணாஸ்ரமப் பிரச்சாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சக சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவரின் உடைமையிலுள்ள விருப்பத்தையும் மடமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒருநாள்கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத் தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார் களில்லை.

ஆகவேதான் அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல. "அவனன்றி ஓரணுவும் அசையாது காண்" என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை; சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம்; புராணங்களை நம்பாமல் இருத்தல்; நரகத்திற்கு வழிசெய்து கொள்ளல், அயோக்கிய அன்னக்கா வடிப் பார்ப்பனர்கள் தான் இந்நாட்டில் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்கும்படிச் செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மை தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார். இத்தகைய பெரிய வேலையை இதே சூழ்நிலையில் இந்நாட்டிலோ. அன்றி வேறு நாட்டிலோ யாரேனும் சாதித்திருக்கிறார்களா என்ப தைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மவர் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்துக் கொடுத்த பெரியார் வாழுங்காலத்தில், வாழ்கின்றோம் என்பதற்காகத்தான் நம்மைப் பாக்கியசாலி களாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று முன்னரே குறிப்பிட்டேன். நம் முயற்சியின் முழுவெற்றியை நாம் இன்னும் காணவில்லையானாலும், வெற்றியின் நிச்சயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலாவது நாம் இன்று இருப்பதால்தான் நாம் பாக்கியசாலிகள் ஆகிறோம்.

நாளொரு மேனி 

பொழுதொரு வண்ணமாய் வளர்ச்சி 

பெரியார் நம் இயக்கத்தை எப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சிறுக சிறுக வளர்த்து வந்தார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். சுயமரியாதை இயக்கம் கண்டு அதற்கோர் திட்டத்தை ஏற்படுத்திய பெரியார், அத்திட்டத்தை நடைமுறையில் கொண்டுவரத் தம்முடன் ஒத்துழைக்க முன்வரும் கட்சி எது என்று கேட்டார். காந்தியார் தலைமையைப் பெற்ற காங்கிரசு சுயமரியாதைத் திட்டத்தை ஏற்க மறுத்தது. ஜஸ்டிஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. ஆகவே, அத்துடன் சேர்ந்தார். அதன் மூலம் தாழ்த்தப்பட் டோரும் உத்தியோகம் பெறுவதற்கான வகுப்புவாரி உத்தியோக நியமன உரிமையை வாங்கிக் கொடுத்தார். உத்தியோகம் பெறுவதால் மட்டும் தம் திட்டம் வெற்றிபெற முடியாதென்பதைக் கண்டார்.

ஆகவே, இனப்பெயரால் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன்மூலம் ஆரியர் வேறு, திராவிடர் வேறு என்ற பிரச்சினையைக் கிளப்பினார். ஆரிய நாகரிகம் வேறு, திராவிடர் நாகரிகம் வேறு, ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு, ஆரியப் பண்புகள் வேறு, திராவிடப் பண்புகள் வேறு என்றெல்லாம் ஆதாரங்களோடு விளக்கிக் கூறினார். இவ்விளக்கம் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வலுத்துவிடவும், திராவிடர்கள் தம் கலைகளையும் தம் நாகரிகத்தையும் வளர்த்துக் கொண்டு ஏனைய நாட்டினருடன் சரி சமானமாக வாழ்வதற்காக திராவிட நாட்டுப் பிரிவினை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது பிரச்சாரத்தின் வெற்றி காரணமாகத்தான், இன்று மாதந்தோறும் கழக மாநாடுகளும், பிரிவினை மாநாடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவரது பிரச்சாரத்தின் காரணமாகத்தான் இன்று ஆயிரக் கணக்கான இளைஞர்கள் நாடு பிரிவினைக்காகத் தூக்கு மேடை ஏறவும் தயாராக இருந்து வருகிறார்கள்.

மோட்சமும் நரகமும் -

முடிச்சுமாறிகளின் கற்பனை ஏன்?

கடவுளை சந்தேகித்தால் பாபம், சாஸ்திரங்களை நிந்தித்தால் நரகம் என்று நம்பி, சிந்தனையற்ற ஏமாளிகளாயிருந்த நம்மை எப்படி இந்நிலைக்கு அழைத்து வந்தார் தெரியும்? முதலில் கடவுளின் உற்பத்தி மார்க்கத்தையே அவர் விளக்கிக் காட்டினார். எப்படி? ஆதியில் மக்களி டையே ஒழுக்கம் கற்பிக்கப் புகுந்த பெரியார்கள் ஒழுக்கத் தின் பலனாக மோட்சத்தையும், ஒழுக்க ஈனத்தின் பயனாக நரகத்தையும் அடைவோம் என்று மக்களுக்குச் சொன்னார் கள். மோட்சமென்றால், அங்கு உழைக்காமலே உண்டு களித்து, ஊர்வசி, ரம்பை போன்ற அழகிய மங்கைகளைக் கூடிக்காலங் கழிக்கலாமென்றும், நரகத்திற்குச் செல்வோமா னால், நாம் இங்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அங்கு கொதிக்கும் எண்ணெய்யிலிட்டுப் பொரிக்கப்படுவோ மென்றும், செந்தணலின்மீது போட்டு எரிக்கப்படுவோமென் றும், கொடிய பாம்புகளும், விலங்குகளும் நம்மைக் கடித்துத் துன்புறுத்துமென்றும் கற்பனை செய்து காட்டினார்கள். மோட்ச இன்பத்திற்காகச் சிலர் ஒழுக்கமாக நடந்து கொண் டார்கள் என்றாலும், இயற்கை இச்சையின் காரணமாகச் சிலர் பிரத்தியட்ச இன்பத்தை விடமுடியாதவர்களாய், பிறர் காரணமின்றி ஒழுங்கீனமென்று கருதிவந்த காரியங்களில் தாராளமாக ஈடுபட்டனர். ஆனாலும், அவர்களுக்கு நரகத் திற்குப் போக நேர்ந்து விட்டால், என்ன செய்வதென்பது புரியவில்லை. அங்குள்ள கொடுமைகள் அவர்களை மேலும் பயமுறுத்தவே, அவர்கள் கோழைகளாகி அதி லிருந்து ஏதாவது தப்பித்துக் கொள்ள மார்க்க முண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் கோழைத்தனத்தை வாழ்க்கை வசதியாகச் செய்து கொள்ளலாம் என்று நினைத்த ஒரு கூட்டம், "அதற்கென்ன, கடவுளைத் தொழுதால் பாவமன்னிப்புப் பெறலாம். அவர் பாவிகளை மன்னித்து மோட்சத்திற்கு அனுப்பி வைப்பார்" என்று கூறியது. அவர்களும் எப்படி யாவது நரகத்திலிருந்து கடவுளை நம்பி அவரைத் தொழ ஆரம்பித்தனர். பாவிகளே எப்பொழுதும் அதிகமாதலால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், கோழைத்தனம்தான் கடவுளின் உற்பத்திக்குக் காரணம் என்றும், கடவுளும், மோட்சமும், நரகமும் யாவும் கற்பனைதான் என்றும் விளக்கிக் கூறினார் பெரியார்.

பாழான சூனியம் 

நம்மைப் பாழ்படுத்த வேண்டுமா?

இதை அறிவுள்ள மக்கள் ஒப்புக்கொண்டு இவரைப் பின்பற்றினார்கள். அண்ட பிண்ட சராசரம் அத்தனையும் உற்பத்தி செய்த அக்கடவுள் இருக்குமிடம் எங்கென்று பார்த்தால், அவர் முப்பாழுக்கும் அப்பாலாய் இருப்பவர் என்று கூறப்படுகிறது. "அப்பால்தான் என்னப்பா இருக் கிறது?” என்று கேட்டால், "அதுவும் பாழடா” என்று தான் என்று கூறப்படுகிறது. வெறும் சூனிய வெளிதான் கடவுள் அதாவது "முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்" இருக்கும் என்று கூறப்படுகிறது. பாழான இந்தச் சூனிய வெளி ஏன் இப்படி நம்மைப் பாழாக்க வேண்டுமென்பதுதான் நமக்குப் புரியவில்லை!

(தொடரும்)

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

6

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (28.3.2023) தொடர்ச்சி...

நாசமாய் போகும் நம்பிக்கைக்கும் 

ஒரு எல்லை இல்லையா?

இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை என்றால், 33 கோடி தேவர்கள், 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் என்று இன்னும் எத்தனை எத்தனை தெய்வங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தெய்வங்கள் ஒரு தேசம் போதாது போல் இருக்கிறது.

இப்படியிருந்தும் இவர்கள் தொழும் தெய்வங்களின் உருவ லட்சணங்களைப் பாருங்கள். "பல்லோ ஒரு காதம், பல்லிடுக்கோ முக்காதம்" - ஒரு பல்லின் அகலம் 10 மைல், ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையேயுள்ள வெளி 30 மைல். அப்படியானால் அவனுடைய வாயின் அகலம் மட்டும் 610 மைல். அதாவது 16 பல் இடம் 160 மைல் 15 இடைவெளியின் இடம் 450 மைல். ஆக 610 மைல் ஆகியது. அவன் வாய் மட்டும் இவ்வளவு அகலமானால் அவனுடைய கை எவ்வளவு? அவனுடைய கால் எவ்வளவு நீளம்? அவனுடைய உடல் எவ்வளவு பருமன் என்று சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய வாயில் மட்டும் எத்தனை நகரங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வளவும் எழுதியிருந்தால்கூட நமக்குக் கவலை இருக்காது. ஏதோ கதையென்று தள்ளி விடலாம். ஆனால், அதை நம்பித்தான் ஆகவேண்டும். அதை நம்பாவிட்டால் நரகம் என்றல்லவோ கூறிவிடுகிறார்கள் இந்த ஆஸ்திக கோடிகள். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்றால், கேட்டால் - இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும்?

சரி, இதுதான் போகட்டும் என்று தள்ளிவிட்டு மலை எப்படியப்பா உண்டாயிற்றென்றால், மலையெல்லாம் ஒரு காலத்தில் இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தனவாம். அவை தேவேந்திரனை ரொம்பவும் துன்புறுத்தவே, அவன் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்ள அவர் அந்த இறக்கைகளை அறுத்துவிட்டாராம். இறக்கை அறுந்துபடவே அவை பூமியின் மீது விழுந்து மலைகளாயிருக்கின்றனவாம்.

சரி சமுத்திரம் எப்படியப்பா ஏற்பட்டதென்றால், அவை எல்லாம் தோண்டப்பட்டனவாம். இவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தோண்டியவர்கள் யாரோ. அவர்கள் எங்குதான் அந்த மண்ணை எல்லாம் போட்டார்களோ தெரியவில்லை. இப்படியெல்லாம் அண்டப் புளுகு, ஆகாயப் புளுகெல்லாம் எழுதிவைத்துவிட்டு, இப்படி சாஸ்திரம் கூறுகிறது; இதை நம்பித்தான் ஆக வேண்டு மென்று கூறினால், "நீ நாசமாகப் போக! இப்படிப்பட்ட சாஸ்திரங்களைக் கொளுத்தித் தொலை" என்றுதானே கூறத்தோன்றும். இப்படிக் கூறுவதா மதத்துவேஷம்? பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக் கொள்வானா இதை?

நான் ஓர் ஊரில் கடைத்தெருப்பக்கம் போயிருந்த போது கணபதி விலாஸ் சைக்கிள் ஷாப் என்ற போர்டைப் பார்த்தேன். அதன் கீழ் வேகமாகப் போகும் புது சைக்கிள் இங்கு வாடகைக்குத் தரப்படும் என்று எழுதியிருந்தது. பேர் வைப்பதில் கொஞ்சமாவது அறிவை உபயோகப்படுத்த வேண்டாமா இவர்? கணபதி விலாஸ் சைக்கிள் என்றால் அது எதற்கு? நகரவா? டயர் தேயவா? டியூப் வெடிக்கவா? அல்லது பார் நொறுங்கவா? கணபதி விலாஸ் சைக்கிள் எங்காவது வேகமாய்ப் போகுமா? உன் சைக்கிள் வேகமாகப் போகும் என்றால், அதற்குப் பறக்கும் சைக்கிள் வண்டி என்று பேர் கொடேன்! கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா பெயருக்கு? இந்த 1947ஆம் ஆண்டிலா இப்படி ஒரு பெயர் வைப்பது?

எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு 

எப்படித் தம்பி பிடிக்கும்?

புராணத்தில் கூறப்படும் உலகங்கள் எத்தனை தெரி யுமா? ஈரேழு பதினாலு லோகங்கள், அதாவது மேலேழு, கீழேழு; அவற்றின் பெயர்களே அதல, விதல, சுதல, தராதல பாதாள, கேதாள என்று போகும். எல்லாம் தலதளா தான். இந்த 14 லோகங்களிலுமுள்ள ஈ. எறும்பு, பொட்டு, புழு ஆகிய சகல ஜீவராசிகளுக்கும் எஜமானன் எமன் ஒருவன் தான். ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவனும் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால், தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம் பாசக் கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். 

இதையெல்லாம் கேட்பது மதத்திற்கு விரோதமென்றால், அப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மதத்தைத் தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன். வீணாக எங்கள் மீது சுமத்தி ஏன் எங்கள் உயிரையும் வாங்குகிறாய் என்றுதான் கேட்கி றோம். இப்படி எல்லாம் பேசுவது நமது அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லையாம். பின் எப்படிப் பிடிக்கும் ஒரு எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு இச்சீர்திருத்தக் கருத் துக்கள்?

அறிக்கை அனுப்புகிறார்களாம் பள்ளி ஆசிரியர்களுக்கு, புராணங்களிலுள்ள ஆபாசங்களைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறாதே! மதத்தைப் பழிக்காதே என்று! அத்து மீறினால் தண்டிப்பார்களாம் இவர்கள், “அத்துமீறினால்" என்றால் என்னப்பா அர்த்தம்? அத்து என்பதற்கு அள வென்ன? அதற்கு அளவு ஏற்படுத்துவது நீயா! நானா? ஏனப்பா அரைகுறை சுயராஜ்யத்தை வைத்துக் கொண்டே ஆனமட்டும் பதைக்கிறாய்?

உஷாராய் இருங்கள்! இல்லாவிட்டால் என்ன செய் வோம் தெரியுமா? பத்திரம். ஆட்சி எங்களிடம் இருக்கிறது எச்சரிக்கிறார்களாம். ஏம்பா எங்களை இப்படிப் பயமுறுத்து கிறாய்? என்று நாங்களென்ன சின்னப் பொடிப்பசங்களா, உன் பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓட? இல்லையானால் எங்களை என்ன முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு பேசுகிறாயா? உங்கள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இவ்வளவு ஆணவமாக உளறிவருகிறீர்கள்? ஏதோ பதவிபெற்றுவிட்டதால் கொஞ்சம் பணக்காரர்களாகி வருகிறீர்கள் என்றால், தாராளமாய், பணக்காரர்களாகுங்க ளேன்! நாங்களொன்றும் அப்படி உங்களிடம் பங்கு கேட்க வரவில்லையே! கொஞ்சம் ஜாக்கிரதையோடு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிழையுங்கள். கோவிலுக்கும் குளத்திற்கும் கொடுத்துக் குட்டிச் சுவராகாதீர்கள் என்று தானே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இதுவா பாபம்! உங்கள் சிந்தனைக்கு விண்ணப்பம் செய்து கொள்வதா பாபம்? நீங்களே சிந்தித்து விடைதாருங்கள்.

மதம், கடவுளை, 

பணமே படைத்தது 

மதம் என்றால் என்ன? அது மனிதத் தன்மைக்கு மாறு பட்டுத்தானா இருக்கவேண்டும்? மதத்தின் கொடுங்கோன் மையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது முகம், நமது உடலிலேயே மிகப் பிரதானமான ஓர் அங்கம். அதன் தோல் மிக மென்னையானது அதன்மீது வளரும் ரோமமோ அதைவிட மென்மையானது. அந்த ரோமத்தை அப்படியே வளரவிட்டால் நாம் ஏதோ கரடி மாதிரி அல்லது குரங்கு மாதிரிக் காட்சியளிப்போம். நம்மை அப்படி இருக்க விடாமல், ஒரு பளபளப்பான கண்ணாடி முன் உட்கார வைத்து, நமது தோலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாதபடி, மகா கூர்மையான கத்தி கொண்டு நமது ரோமத்தை வழித்து, தமது தலையை எண்ணெயிட்டு சீவி, நம் முகத்துக்கு ஸ்நோவும் பவுடரும் போட்டு, நம்மை அழகுற அலங்கரித்து ஒரு மாப்பிள்ளை மாதிரி அனுப்பு கின்றான் நமது தோழன். அவனோர் அம்பட்டப் பய.

நமது அழுக்குப் படிந்த, நாற்றமடைந்த துணிகளைத் துவைத்து அவற்றிற்கு நீலமும் கஞ்சியும் போட்டுச் சலவை செய்து, கண்ணாடி போல் பெட்டி போட்டு, நாமும் நம் மக்களும் உடுத்துக்கொண்டு, மெல்லிய தென்றல் காற்று வாங்க உல்லாசமாய்ச் செல்ல உதவும் தோழன், நமக்கோர் வண்ணாரப் பய.

பங்குனி வெயிலில் பாதம் எங்கு கொப்பளித்து விடுமோ, அல்லது கல்முள் குத்திக் காலைக் கெடுத்து விடுமோ என்று நாம் பயப்படாமல் இருக்க, நமது காலுக்கேற்ற செருப்பைத் தைத்துக் கொடுக்கும் தோழன், நமக்கோர் சக்கிலிப் பய.

நமது வீடு மலஜல மூத்திரத்தால் நாற்றமெடுக்காமல் இருக்கும் படி, நமது தெருக்கள் நாற்றமெடுக்காமல் இருக்கும்படி, நமது கக்கூசைக் கழுவி நமது சாக்கடையைச் சுத்தம் செய்து, நமது தெருக்களிலுள்ள குப்பைகளை அகற்றி நமக்கு அசுத்தத்தால் நோய்கள் முதலியன வராமல் இருக்க நமக்கு உதவுபவனும், நமது வீட்டில் ஒருவர் இறந்தால் அவரது பிணம் அழுகிப் புழுக்கள் ஏற்படாமல் இருக்க, அதைச் சுட்டெரிக்க நமக்கு உதவுபவனுமாகிய தோழன் நமக்கோர் தோட்டிப் பய.

உண்மை உழைப்பாளிகளுக்கு இழி பட்டம் அளிப்பது தான் மத தர்மம்.

அதேபோல் பணம் ஏற ஏற அதனுடைய பட்டமும் சற்று உயர்ந்து கொண்டே போகும்; ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன், மதக்குருக்களுக்கு ஒரு சாதாரண பணக்காரன். லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன் அவனுக்குப் பிரபு. கோடிக்கணக்கு பெறுமான சொத்துடையவன் அவனுக்கு மதசம்பிரதாயப்படி, ஈஸ்வரன். ஆகவே பணம்தான் கடவுள். கடவுளையும் மதத்தையும் உற்பத்தி செய்ததே அந்தப் பணம்தான்!

ஏ மதமே! உனது ஈனத் தன்மை வெளியாகிவிட்டது. இனி உன்னால் இந்நாட்டில் வாழ இயலாது. உனக்கோர் எச்சரிக்கை விடுகிறோம். நாம் மேலே கூறியவற்றிற்கு நேர்மையான சமாதானங் கூற முடியுமானால் கூறுக! இன்றேல் "ஏ மதமே! மதவாதிகளே! நீங்கள் அழிந்துபடுங்கள்” என்று எக்காளமிட்டு வருபவரும் பெரியார்தான். திராவிடர் நாடு பிரிந்து திராவிடர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒழுக்கமான நாகரிக வாழ்வு வாழ நமக்கு வழிவகுத்துத் தந்து வருபவரும் பெரியார்தான்.

அப்படிப்பட்ட பேரும் புகழும் மிக்க பெரியாரின் படத்தை நான் உங்கள் முன் திறந்து வைக்குமுன் உங்களுக் கோர் விண்ணப்பம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். இப்படத்திலுள்ள ஓவியத்தின் நிறம் இன்று பளபளப்பாக இருக்கும். ஆனால் நாளையோ மறுநாளோ கொஞ்சம் மங்கித்தான் போகும். ஆகவே பெரியாரை உங்கள் நெஞ்சத்தில் ஓவியமாகத் தீட்டுங்கள்! நெஞ்சகச் சித்திரத்திற்கு என்றுமே தேய்விருக்காது. மேலும் நீங்கள் உயிருள்ள வரை, அவரது கருத்துகள், கருத்துகளினூடே பொதிந்து கிடக்கும் தனியான சிறப்புகள் ஆகியவைகள் உங்களை மேன்மைப் படுத்திக் கொண்டே வரும். ஆகவே உங்கள் இருதயத்தில் அவரைச் சித்தரித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக நான், இப்பெரியார் படத்தை மூடியிருக்கும் திரையை விலக்குகின்றேன். அதே போல் நீங்களும் உங்கள் மடமைத் திரையை விலக்கிப் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள்.

(முற்றும்)