செவ்வாய், 3 ஜூன், 2025

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)

 Published May 27, 2025

விடுதலை நாளேடு

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)
எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! – தந்தை பெரியார்

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக் கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தி யானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– “விடுதலை” நாளேடு 11-07-1953

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

 Published May 28, 2025

விடுதலை நாளேடு

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது பாரம்பரிய சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் நடந்தது. அந்த நிகழ்வில் ஒரே மேடையில் மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.

விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர்.

ஆடம்பரமான ஆடையோ, அணிகலன்களோ கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி கொண்டனர்.

அப்போது, “சுயமரியாதை வெல்க! வைக்கம் வீரர் வாழ்க!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று முதல் முறையாக மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

மதச்சடங்கு திருமணங்கள் பெரும்பாலும் ஜாதியப் பாகுபாட்டோடு இழிவுபடுத்தும் நிலையிலும் நடத்தப் பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த  அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.

பின்னாளில், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) நிறைவேற்றப்பட்டது. இது 1968 ஜனவரி 20 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

உலகமெங்கிலும் இன்றளவும் பல்வேறு வகைகளில் திருமண முறைகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏதாவது ஒரு மதச்சடங்கு அல்லது அச்சமூகத்திற்கான அடையாளமாக ஏதாவது ஒரு சடங்கு நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக இணையர்கள் உறுதிமொழி ஏற்க புரட்சிகர சுயமரியாதைத் திருமணம் நடத்திய தந்தை பெரியார் மனிதகுலத்திற்கு மேலும் ஒரு நவீன பாதையினை அமைத்துகொடுத்த நாள் இன்று.

சனி, 24 மே, 2025

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

 

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

இந்துக்கள் தெருவில் நடப்பது கூட

இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்
சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்ஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபசுவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது.

இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போராட்டம் போன்று சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பன போலீசு சுப்பிரண்டின் அடக்குமுறை வெறியாட்டம்
இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவ துடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த மனிதனும் பொறுத்துக் கொள்வானா?
இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர் களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி எது?
ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம்.
இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப் பட்டதாகும். அவ்வாக் குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.06.1930

செவ்வாய், 20 மே, 2025

1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம் - ‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள் முகப்பு அட்டை அமைப்பு

 1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில்

அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

கைவல்யம்
எஸ்.என்.எஸ்.சுந்தரம்
திருப்பத்தூர் வே.நாகலிங்கம்
சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி
என்.வி.நடராஜன்
மயில்வாகனனார்
ஜி.நாராயணன்
அருப்புக்கோட்டை எம்.எம்.சீனிப்பாண்டியன்
பள்ளத்தூர் சிதம்பரம்
அனுப்பப்பட்டி பி.ஆர்.சின்னகிருஷ்ணசாமி
கொந்தங்குடி ரா.ரத்தினசாமி
டபிள்யூ.எப்.தாமஸ் அபிராமன்
சிறுகுடி செ.ராமலிங்கம்
திருமங்கலம் மணிமாறன்
சித்தார்க்காடு கே.இராமையா
டாக்டர் சி.வா.பாலகிருஷ்ணன்
பி.மீனாட்சி
ஏ.ராதாம்மாள் ஆனந்தன்
ஏ.ஆர்.சிவானந்தம்
விருதை விதுரன்
தி.டி.கோபால்
எஸ்.லட்சுமிரதன்பாரதி
பட்டுக்கேட்டை கே.வி.அழகிரிசாமி
சிதம்பரம் பி.கே.நடேசன்
டி.ஆர்.வரதன்
நாகை காளியப்பன்
பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம்
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்
டி.என்.ஆர்.சந்திரன் (டி.என்.இராமச்சந்திரன்)
ம. சிங்காரவேலு
ஏ. சோமசுந்தரன்
டி.ஜி.வெங்கடாச்சலம்
பண்டிதர் திருஞானசம்பந்தர்
நாகை முருகேசன்
கொழும்பு சதாசிவம்
முத்துப்பேட்டை எம்.என்.கோவிந்தசாமி
இந்திராணி பாலசுப்ரமணியம்
கே.ஆர்.சுவாமி
சிவகாமி சிதம்பரனார்
டாக்டர் ஆர்.பி.பராஞ்சிபே
கே.எஸ்.டி.முத்துசாமி
பட்டுக்கோட்டை கோ.சண்முகம்
விருதுநகர் தோழர் சி.ச.சுப்பையா
ராஜரத்தினம் பிள்ளை
பட்டுக்கோட்டை தோழர் எம்.ராஜமாணிக்கம்
செய்கோன் தோழர் எம்.ராஜமாணிக்கம்
டாக்டர் அம்பேத்கர்
ஈ.வெ.நாயர் எம்.ஏ.எல்.எல்.பி.
என்.பி.கிருஷ்ணன்
தோழர் வைசு.ஷண்முகம்
எம்.ஏசுதாஸ்
தோழர் ராபின்
ஆர்.பி.நாதன்
தோழர் டி.கே.எம்.சாமி
தி.ராஜன்
உடுமலை கனகராஜன்
பச்சையப்பன்
எம்.என்.நாயர்
அருப்புக்கோட்டை வீர சு.பு.வீரய்யா
சென்னை என்.வி.நடராஜன்
ஈரோடு பி.வேலாயுதன்
டாக்டர் சி.ஆர்.ரெட்டி
சென்னை எஸ்.ரங்கநாதன்
தி.வே.அ.
பட்டுக்கோட்டை எஸ்.சோமசுந்தரம்
துறையூர் எஸ்.தனபாக்கியம்
திவான்பகதூர் ஆர்.சீனிவாசன்
சர்.ஷண்முகம்
தோழர் எஸ்.எம்.ராமையா
குமணன்
சிவானந்த அடிகள்
தோழர் கே.நாராயணம்மா
சிங்கை நேசன்
பள்ளத்தூர் எம்.அருணாசலம்
எம்.சி.ராஜன்
தோழர் அ.பொன்னம்பலம்
தோழர் செல்லத்தாயம்மாள்
சேலம் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி
நாகை தோழர் பி.அம்மைநாதன்
சிறீவில்லிபுத்தூர் ஞா.பி.ஞானதேசிகம்
குடியேற்றம் மு.அண்ணல் தங்கோ
தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார்
ஈரோடு வாணன்
மு.த.வேலாயுதம்
மறைமலையடிகளார்
தோழர் ஆர்.பி.டேவிஸ்
திரு.சொக்கையா
பாரதிதாசன்
எம்.பி.சாமி
இளவலூர் மறைமணி
சடகோபால்
புதுவை எஸ்.சிவபிரகாசம்
கூச்சூர் குழந்தை
பொன்னாகரம் வி.எஸ்.நடேசன்
புதுவை சாமி சித்தானந்த பாரதியார்
சந்தமல்லி அ.சிதம்பரநாத பாவலர்
நஞ்சையா
குஞ்சிதம்
கலிபுல்லா பி.தலைவர்
சி.என்.அண்ணாதுரை
உமா மகேசுவரம் பிள்ளை
போளுர் வி.சுப்பராயன்
எஸ்.ஏ.கே.உபயதுல்லா
அகதி ராயன்
எஸ்.கே.சிசுபாரதி
கே.எம்.பாலசுப்பிரமணியம்
பி.நடராஜன் எம்.ஏ.
சர்.கே.என்.ரெட்டி
சவுந்திரபாண்டியன்
இரண்ணியதாசன்
தோழர் பி.சிதம்பரம்
ராஜம்மாள்
திருவந்திபுரம் கே.கோவிந்தன்
தி.பொ.வேதாசலம்
வித்துவான் ஏ.எம்.குழந்தை
அட்வகேட் சுயம்பிரகாசம்
டி.எஸ்.ஸ்ரீனிவாசன்
பு.துரைராஜ்
ஹேரிகிலமெண்ட்ஸ்
ஆம்பூர் தோழர் கோ.ஜெயராமுது
எம்.என்.முத்துக்குமாரசாமி பாவலர்
பல்லடம் எம்.பொன்னுச்சாமி
தோழர் நானப்ப முதலியார்
சென்னை டி.தேவராஜன்
குகன்
கோவை எம்.ஏ.ரஹ்மான்
அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி
சர்.பன்னீர்செல்வம்
ம.சிங்காரவேலு
கோவை கே.எம்.ஹனீப்
ஜெ.க.வேலன்
எஸ்.க.முஹம்மத் ஹனீப் சாகப்
தோழர் எஸ்.ஜி.ரங்கராமானுஜன்
செ.ராமலிங்கம்
தோழர் காமத்
எஸ்.கே.பி.முத்துராஜா
பி.எம்.அப்துல் மஜீது
சந்தனாபுரம் எபிநேசன்
வைகோன் புரோவேன்ஸியலான்
ஸ்டாலின் ஜெகதீசன்
கோலாலம்பூர் க.ராஜகோபால்
கணேசபுரம் முருகோன்
பம்பாய் என்.சிவபாண்டியன்
சிங்கப்பூர் வி.எம்.முத்து
வி.பிச்சையன்
பூவை. அ.க.நவநீதகிருட்டிணன்
ஆசன் பொறையார்
கோவை கே.எஸ்.முஹம்மன் ஹுசைன்
ஏ.எம்.அஸ்லீம்
எ.எம்.யூசுப் மரைக்காயர்
டி.பி.வேலாயுதசாமி
கோவைக்குடியான்
ஜே.க.வேலன்
க. அய்யலிங்கம்
எஸ்.இக்நட்டோல்
உடுமலை பி.ரங்கநாத நாயுடு
கே.டி.ஆர்.

இது குறித்த 16. 7.1933 தேதியிட்ட குடிஅரசு ஏட்டில் வெளியான செய்தி

‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்

முகப்பு அட்டை அமைப்பு

(அ) அட்டைப்பட விளக்கம்:  துவக்கத்தி லிருந்து 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) வெளிவந்த இதழ்களில் காணும் அட்டைப் படத்தின் முகப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.

பாரதமாதா, ஏர் உழவன், நூல் நூற்கும் பெண், தச்சுத் தொழிலாளி,

மூட்டை சுமப்பவர், நெசவாளி, தேர் இழுத்து வரும் கூட்டம், தேர்ச் சக்கரத்தில் சிலர் நீண்ட கிட்டிபோட்டு தள்ளுதல், கிருஸ்துவக் கோயில், இந்துக் கோயில், முஸ்லீம் பிறை, ஓமகுண்டம் எரிதல், புத்தர், நீர்நிலை அருகில் ஆடுமாடுகள் நிற்றல், கரும்பு சோளம், கம்பு, நெல், கோதுமை முதலிய பயிர்கள் கதிர்களுடன் காணப்படுதல்.

18.12.1927 இதழுக்குப் பிறகு அட்டையில் படங்கள் இடம்பெறவில்லை.

ஆ) ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில் 18.4.1926 முதல் (மாலை 1: மலர் 47) 13.11.1927 இதழ் (மாலை 3:  மலர் 29) வரை காணப்படுகின்றன.

இ) ‘கதர் வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில், 20.11.1927 (மாலை 3:  மலர் 30) முதல் 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) காணப் படுகின்றன.

ஈ) தமிழ் ஆண்டுக் கணக்கு, இதழின் துவக்க காலம் முதல் 08.04.1944 (மாலை 17:  மலர் 26) வரை அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது.

உ)   இதழின் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் துவக்கம் முதல் 02.06.1929 வரை (மாலை 5:  மலர் 5)  இடப்பட்டு வந்தன.  அதற்குப் பின்னர் பக்கங்களுக்கு தமிழ் எண்கள்  குறிப்பது கைவிடப்பட்டது.

ஊ) நாயக்கர் பட்டம்:  இதழின் ஆரம்பம் முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) அட்டையில், ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன்பின் ‘நாயக்கர்’ என்ற ஜாதிப் பட்டம் விடப்பட்டுள்ளது.

எ) திருக்குறள்:  இதழின் அட்டையில்,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்,’ (972) என்ற குறளும்,

‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355) என்ற குறளும்,

‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) என்ற குறளும்,

13.01.1935 இதழ் முதல் (மாலை 9:  மலர் 23) 29.12.1940 வரை (மாலை 16:  மலர் 20) காணப்படுகின்றன.

அத்துடன் 27.12.1947 முதல் 03.04.1948 வரை அவ்வப்போது தலையங்கத்திற்கு மேல்

‘மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்’ (278)     (24.01.1948),

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்’ (611)    (14.02.1948),

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று’ (890)      (21.02.1948),

‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு’ (735) (28.02.1948),

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு’ (766) (03.04.1948)

ஆகிய திருக்குறள்கள் காணப்படுகின்றன.

ஏ.  பாரதியார்பாடல்:  துவக்கத்தில் (02.05.1925)  “எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஓர் குலம்”, “சாதிகள் இல்லையடி பாப்பா” ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் பல இதழ்களில் “எல்லோருமோர்குலம் எல்லோருமோர் இனம்”, என்ற பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது.  பாரதியார் பாடல் 25.10.1925 வரை காணப்படுகிறது.

திங்கள், 19 மே, 2025

1939 – 1943 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

 

1939 – 1943 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

சிங்கப்பூர் க.கோவிந்தசாமி பண்டிதர்
காயல் எல்.கே.சுலைமான்
எஸ்.வி.காமத்
நாகலிங்கம் பழனி
சிங்கப்பூர் வி.எம்.முத்து
ராதாபுரம் எஸ்.மல்லிகார்ச்சுனக் கவிராயர்
எஸ்.லட்சுமிரதன் பாரதி
ஆம்பூர் வி.எம்.ஆறுமுகம்
எஸ்.வி.பரன்
சி.ச.சுப்பைய நாடார்
தேனி ஏ.எஸ்.தங்கமணி
ஜெ.டேனியல்
வை.ம.பொன்னுசாமி
சைகோன் லோரான்
நாகூர் ஜராப் எஸ்.ஏ.முகம்மது ரஹியா மரைக்காயர்
கருவை சிறுவன் வி.ஆர்.வி.ராஜன்
குற்றாலம் ஆர்.கல்யாணசுந்தரம் பி.ஏ.,
புலவர் முருகிறையனார்
திருப்பத்தூர் ஏ.பி.பெரியசாமி புலவர்
தோழர் அ.ப.ஆதித்தா
கருவூர் கே.சி.ஆர்.சாமி
தோழர் துரைதாசன்
செங்களக்குறிச்சி எம்.செல்லையா
சோ.கோமதிநாயகம்
எட்டயபுரம் டாக்டர் ஜி.பக்தவத்சலம்
சோழகந்த சச்சிதானந்தன்
வி.எஸ்.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பெரியகுளம் அ.சுப்பையா
புதுவண்டிப்பாளையம் அ.சிவலிங்கம்
தோழர் ஆ.ஐ.ஆதிமூலம்
வெ.அண்ணாமலை
ந.ரே.முத்துகிருஷ்ணன்
மாணவன் செழியன் பட்டுக்கோட்டை
இளைஞூர் பி.வி.முத்துசாமி
கே.முஹம்மத் இஸ்மாயில், பழனி
ரா.மு.நாதமுனி
தோழர் ஏ.ஆ.சிவம்
சிறுத்தொண்டநல்லூர் தோழர் வ.சங்கரநாராயணன்
விருத்தாசலம் எஸ்.ஏ.ரஹ்மான்
கே.சி.கண்ணன் இரங்கூன்
கருவூர் இ.சி.அடிகள்
சி.பழனிக்குமாரன்
வித்வான் மறை.திருநாவுக்கரசர்
ஸ்ரீமதி ஜோகபத் மெத்துசலா அம்மாள்
மதுரை ஆ.சங்கையா
சி.முனிசாமி
தமிழாசிரியர் எ.ஆளவந்தார்
எஸ்.பி.வி.பி.பாலசுப்பிரமணியன்
த.கிருஷ்ணமூர்த்தி
பேட்டை சி.வி.சுப்பையா
சென்னை எ.முருகேசம்
திருவாரூர் பாவலர் எம்.என்.பாலசுந்தரம்
பி.வி.அனுமந்தராவ்
தோழர் ரா.பி.சேதுபிள்ளை
ஆர்.நாராயணி அம்மாள், சென்னை
கே.எம்.ஹெச்
இராசரத்தினம்
எஸ்.எஸ்.மரியசாமி
டாக்டர் இ.பாலசுப்பிரமணியம்
பி.கோதண்டராமன்
பெர்னார்ட் கிலிங்
தனக்கோட்டி பி.ஏ.
நிக்கலஸ் மரக்கீஸ்
இம்மானுவேல் டி.ஆஸ்மர்
நோயில் பேக்கர்
நிர்மலா சந்திரபாலர்
திவான்பகதூர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை
சி.வி.குப்புசாமி
சேலம் ஆ.மாணிக்கம்
கோ.ராமலிங்க தேவர்
வாடிப்பட்டி செங்கணன்
ஆம்பூர் சி.கோ.ஜெயராமுலு
ஆசிரியை பாப்பா இளவலூர் மணிமறை
வித்வான் அ.கிருஷ்ணமூர்த்தி
புரபசர் ரோஸ்லிங்
பண்டித மிஸ்ரா
தோழர் ஹாயிஷ் கிகோல்
ஆர்.அச்சுதன் தம்பி பி.ஏ.
தோழர் சுரேஷ் சந்தராய் எம்.ஏ.பி.எல்.
கரந்தை எஸ்.எம்.வாசகம்
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
ந.ரெ.முத்துக்கிருட்டிணன்
அசோக் மேத்தா
உழவன் சி.பழனிக்குமாரன்
வீரநாமநார்
ஆனைமலை ஆர்.நரசிம்ம நாயக்கர் பி.ஏ.
கோட்டாறு தோழர் கே.ராமையா
பண்டித டாக்டர் எஸ்.ஆனந்தம்
தோழர் எம்.என்.ராய்
எஸ்.சிவபிரகாசம்
ப.கண்ணன்
ஏ.பி.ஜனார்த்தனம் பி.ஏ.
பி.எஸ்.வேகன்
ராவ்பகதூர் சி.எம்.ராமச்சந்திர ரெட்டியார்
மனோன்மணி ஏகாம்பரம்
சம.பி.எஸ்.எம்.கொம்பையா
அ.ராமசாமி கவுண்டர்
குகை ந.வெங்கட்ராமன்

- Published May 17, 2025, விடுதலை நாளேடு

புதன், 7 மே, 2025

கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.

* கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
* இந்த காலகட்டம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி நடந்து,அதில் நடராசன் தாலமுத்து மரணமடைந்தனர்.

* தலைவர் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

* ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் கூட சிறைக் கொட்டடியில்.
* ஆச்சாரியார் ஆட்சி மீது கடுமையான அதிருப்தியின் உச்சம்.
* இந்தக் காலகட்டத்தில்தான் குள்ளநரி வைத்தியநாத அய்யரைக் கொண்டு நடத்தப்பட்டதே இந்த நாடகம்.
* காட்சிக்குள் செல்வோமா?
* கனஜோராய் விளம்பரம் படுத்தப்பட்டது வைத்தியநாத அய்யரின் கோயில் நுழைவுப்
* போராட்டம் என்று.
* கோயிலின் நடை திறக்கப்படாத நேரத்தில்
* அதற்கு முன்பாகவே சின்ன ஏற்பாட்டை குள்ளநரி வைத்தியநாத அய்யர் செய்து கொண்டார்.
* நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியின் அனுதாபி S.R.நாயுடு ,வைத்திய நாத அய்யருக்கு உதவினார்.இவரின் ஏற்பாட்டில்

* ஒரு பட்டர் பூஜை செய்வதற்காக உள்ளே நின்றார்.
* காலை 8-45-மணி
* இவர்கள் திமுதிமுவென்று கதவின் அருகில் போய் நின்றவுடன்- பயந்து விடாதீர்கள்
* பஞ்சமர் 5-பேர்+1 நாடார்(அன்றைக்கு நாடார்களுக்கு ஆலய பிரவேச உரிமை இல்லை)மொத்தம் ஆறு பேர்கள்.
* கதவு திறந்தது;பதிகம் பாடி அல்ல; உள்ளே இருந்த பட்டரின் புண்ணியத்தால்
* திருக்குளத்தில் நீராடி பூஜை புனஸ்காரங்கள் முடிந்து வெளியேறினார்கள்.

* பட்டருக்கு தெரியாது இவர்கள் பஞ்சமர்கள்,
* நாடார் என்று.
* வெளி உலகுக்கும் இப்படி சம்பவம் நடைபெற்றது யாருக்கும் தெரியாது.
* அன்றைக்கு இருந்த சட்டப்படி கோயில் அறங்காவலர் அனுமதியில்லாமல் இந்துக்களின் எந்த பிரிவினரும் கோயிலுக்குள் நுழைய விடுவது கிரிமினல் குற்றம்.
* இந்தச் சட்டப்படி வைத்தியநாத அய்யர் வகையறாக்கள் மீதும் நிர்வாக அதிகாரிகள் மீதும்
* கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
* இந்த இடத்தில் ஒருமுக்கியமான பிளாஷ் பிளாக்.
* இந்த நாடக சம்பவம் நடந்தது-8-7-39-
* இதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஶ்ரீமான் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதமர்.
* அன்றைக்கு ஆதி திராவிடத் தலைவர் எம்.சி.
* இராசா-15-8-38-அன்று சட்ட மன்றத்தில்
* ஆலய நுழைவு மசோதாவை கொண்டு வந்தார்.
* விடுவாரா குல்லூகபட்டர்.கங்கணம் கட்டி தோற்கடித்தார்.ஆதரவு-24-எதிர்ப்பு-130-
* மற்றுமொரு வரலாற்று சோகம் என்னவெனில் காங்கிரஸின் ஆதி திராவிட அமைச்சரும்
* மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
* பின் ஏன் வைத்தியாத அய்யரை கொண்டு இந்த நாடகம்?
* நாங்கள் தான் ஆலய பிரவேச உரிமைக்கு போராடினோம்!என்று வரலாற்றில் பதிந்து கொள்ளத்தான்?
* சுயமரியாதை இயக்கம் நடத்திய 1927-1928-களில் உண்மையாக நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தை இருட்டடிக்கத்தான்.

* இராசகோபாலாச்சாரிக்கு ஆதரவாக  நின்று கிரிமினல் வழக்கில் சிக்கிக் கொண்ட வைத்திய நாத அய்யர் வகையறாக்களை காப்பாற்ற வேண்டாமா?என்ன!

* பிரிட்டிஷ் கவர்னரை சந்தித்து-1935-இல் கவர்னருக்கு அரசியல் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழைந்தால்,அதற்காக அர்ச்சகர்கள்,அதிகாரிகள்,தர்மகர்த்தாக்கள் இவர்கள் மீது வழக்கு தொடர்வதை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

* வைத்தியநாத அய்யரையும் அர்ச்சகரையும் எஸ்.ஆர்.நாயுடுவையும் காப்பாற்ற வந்த சட்டமே ஒழிய ,ஆலய பிரவேச உரிமை சட்டம் அல்ல.

- [ ] ஆலய நுழைவு மசோதாவை, சட்டமன்றத்தில் தோற்கடித்தவர்களுக்கு.                வரலாற்றில்-போராடியவர்கள் பட்டம்.

- [ ] அன்றைக்கு பேப்பரும் பேனாவும் அவாள் கையில்.ஒரு பொய்யை தெரிந்தே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது வரலாறு ஆகி விடுகிறதே!

- [ ] உண்மையான ஆலய நுழைவுப் போராட்டத்தை துவங்கியவர்கள்-நாடார் குல பெருமக்கள்-அது19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

- [ ] இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை பெரும் திரளான மக்களுடன்,நடத்தியது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

- [ ] காண்போம்.அடுத்தடுத்த பதிவுகளில்
- [ ] முடிவுரையை எழுதாமல் விட்டு விட்டேனே?
- [ ] பின் எப்போது ஆலய கதவுகள் எல்லோருக்கும் திறந்தன.

- [ ] 1947-இல் ஓமந்ததூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த காலகட்டத்தில்
-பன்னீர்செல்வம் முகநூல் பதிவு, 08.05.2022

வியாழன், 20 மார்ச், 2025

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சேலம் மாநாடு -1944

 


விடுதலை நாளேடு
கட்டுரை

ஜஸ்டிஸ் கட்சி மாகாண மாநாடு 27.8.1944ஆம் தேதி சேலத்தில் விமரிசையாய் நடந்து வெற்றிகரமாய் பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது.

சேலத்துக்கு மாநாட்டை அழைத்தவர்கள் எதிரிகள் வயப்பட்டு கட்சியின் பேரால் மக்களை மிரட்டியும், ஏமாற்றியும் பிழைக்கும் சில மக்களுக்கு ஆளாகி, மாநாடு நடத்தாமல் விட்டுவிட முயற்சித்தார்கள் என்றாலும், சேலம் மகாஜனங்களுக்கு இருந்த ஆர்வத்தால் மாநாடு நடத்தத் தீர்மானிக்கவும், வரவேற்புக் கழகம் அமைக்கவும், நிதி திரட்டவும் ஆன காரியம் செய்யப்பட்டு விட்டது. இக்காரியத்தை மாநாடு நடத்தப் பயன்படுத்தாமல் மாநாடே எங்கும் நடத்தாதிருக்கப் பயன்படுத்தி, அதாவது தானும் நடத்தாமல் வேறு ஒருவரையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட பயன்படுத்தப்பட்டு வந்தது.

தோழர் அண்ணாதுரை
இந்த நிலையில் கட்சித் தலைவர் வரவேற்புத் தலைவரைக் கண்டு மாநாட்டைப்பற்றி கேட்கும் போதெல்லாம் நடத்திவிடலாம் என்று சொல்லுவதும், கட்சி பொதுக் காரியதரிசி தோழர் அண்ணாதுரை வரவேற்புக் காரியதரிசியைக் கண்டு கேட்கும்போது “மாநாடு எதற்கு! ஜஸ்டிஸ் கட்சி எங்கே இருக்கிறது? நான் இராஜிநாமா கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லியும் மாநாட்டை நடத்தாமல் இருக்க பல தந்திரங்கள் செய்தார்கள்!
கடைசியாக, 10.8.1944ஆம் தேதி பெரியார் சேலம் சென்று வரவேற்புக் கழக அங்கத்தினர் கூட்டம் ஒன்று கூட்டி, அதில் மக்கள் நிலை தெரிந்து வேறு சில காரியதரிசிகளை நியமித்து பணமும் சுமார் ரூ.2000 வசூலுக்கு ஏற்பாடு செய்து விட்டதை அறிந்த வரவேற்பு தலைவரும் காரியதரிசிகளும் பெரியார் ஜாகைக்கு வந்து, தாங்கள் அக்கூட்டத்திற்கு வராததற்கு ஒவ்வொருவரும் ஒரு சாக்குச் சொல்லி மாநாட்டை 20ஆம் தேதி நடத்தி விடுகிறோம் என்று உறுதி சொல்லி விட்டுச் சென்றார்கள். மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20ஆம் தேதி நடக்கிறது என்றும், தலைவர், திறப்பாளர், கொடியேற்றுபவர் இன்னார் இன்னார் என்றும் பத்திரிகைகளில் சேதிகள் காணப்பட்டன.

4000 பிரதிநிதிகள்
பிறகு, அத்தலைவர் தவிர கொடியேற்றுபவர், திறப்பவர் ஆனவர்கள் பெயரை மாற்றி வேறு பெயர்கள் வெளியாயின. இந்த நிலையில் அனேக காரியங்கள் திரைமறைவில் செய்யப்பட்டு, வேறு பல எண்ணங்களோடு பல இடம் சுற்றித் திரிந்தும் மாநாட்டை திடீரென்று 27ஆம் தேதி மாற்றி, எவ்வளவோ செய்து பார்த்தும், என்ன என்னமோ செய்யப்பட்டும் கடைசியாக மாநாடு 27ஆம் தேதி நடந்தே விட்டது. 4000 பிரதிநிதிகள் வெளியூர்களில் இருந்து மாத்திரம் ஏராளமாய் வந்து குவிந்துவிட்டார்கள்.

மாநாட்டை தங்கள் இஷ்டப்படி நடத்த தோழர் பாண்டியன் அவர்களை மலைபோல் நம்பி, மாநாட்டுக் கொட்டகைக்குள் யாரையும் விடாமல், தங்களுக்கு வேண்டியவர்களை மாத்திரம் விட்டுக் கொண்டு காரியம் நடத்த நேபாளத்து கூர்க்கர்களை மாநாட்டுப் பந்தலின் வாயில்களில் நிறுத்தி, அவர்களை இமயமலை போல் நம்பி கேட்டுக்கு காவல் வைத்து விட்டு, பிரதிநிதி டிக்கட் கொடுப்பதில் ஒவ்வொரு பிரதிநிதியும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்விண்ணப்பத்தின்மீது டிக்கட் கொடுக்க யோசிக்கப்படும் என்றும், மற்றும் என்ன என்னவெல்லாம் செய்யப்பட்டது என்றாலும், தோழர் பாண்டியன் அவர்கள் இக்காரியங்களை வெறுத்து மாநாட்டுக் காரியதரிசி முதலியவர்களுக்கு கையை விரித்து விட்டதனாலும், கூர்க்காக்கள் விரட்டப்பட்டு விட்டதினாலும், டெலிகெட் டிக்கட்டுகள் வழக்கம் போல் கொடுக்க வேண்டியதாகிவிட்டன.

மக்கள் பல இடங்களில் இருந்து பதினாயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருந்ததால் மரியாதையாகவும், நாணயமாகவும், ஒழுங்கு முறைப்படியும் மாநாடு நடக்க வேண்டியதாகி விட்டது.
தலைவர் ஊர்வலத்தில் ஊர் முழுவதுமே கலந்து கொண்டது. பெரியார் துதியும் பெரியார் பிரார்த்தனையுமே கொடியேற்று விழா, திறப்பு விழா, வரவேற்பு சொற்பொழிவு, காரியதரிசி தலை நாட்டுதல் ஆகிய எவையிலும் தலைசிறந்து விளங்கின. அப்படி விளங்க வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது!
மேற்கண்ட விழாவாற்றுவோர் பேச நினைத்து வேறு, குறித்து வந்தது வேறு, பேச நேர்ந்தது வேறு என்றும் ஆகிவிட்டது.

தோழர் டி. சண்முகம்
இந்த நிலையில் பெரியாரை தலைமைப் பதவிக்கு ஆதரித்துப் பேசியவர்களில் தோழர் டி. சண்முகம் அவர்கள் இவர்கள் குட்டை உடைத்துவிட்டார். அதாவது, “இந்த பேச்சு மேடைவரையில்தானா வீட்டுக்கு போயும் இருக்குமா?” என்றார். பிறகு தலைவர் எழுந்து மக்கள் ஆரவாரத்தைப் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, யாவர் கண்களிலும் நீர் ஊற்றை தருவித்து விட்டு, “தோழர்களே!” என்றதும் யாவரும் ஸ்மரணை அற்றுப்போய் விட்டார்கள். பெரியாரும் தன்னை தேற்றிக் கொண்டு “என் அருமை இளைஞர்களே” என்றதும் யாவரும் உணர்ச்சி பெற்று ‘பெரியார் வாழ்க’, ‘பெரியார் எங்கள் தலைவர்’, ‘சூழ்ச்சியாளரும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும் ஒழிக’ என்று ஒலித்தார்கள். பெரியார் கையை அமர்த்தினார். ஒலி மறைந்தது.
“எனது அன்பான பாண்டியன் அவர்களே!” என்று ஆரம்பித்ததும் தோழர் பாண்டியன் அவர் கண்களிலும் நீர் ஊற்றுக் கண்டு விட்டது.

தந்தை பெரியார்
பிறகு பெரியார் பேசியதாவது:
“நான் இந்த மாநாட்டிற்கு வருவதாக நேற்று மாலை 4 மணிக்கு தான் உறுதி செய்தேன். தலைமை உரை ஒன்றும் தயார் செய்யவில்லை; தலைமை உரையில் சொல்ல வேண்டியவைகளும் அதிகம் இல்லை. அதிலும் முக்கியமானது என்னவெனில் நான் தென் இந்திய நல உரிமைச் சங்க மாநாட்டு தலைவனாக தலைமை உரை நிகழ்த்துவது என்பது இது தான் கடைசித்தடவை. என்னைப் பலர் இக்கட்சியில் சர்வாதிகாரியாய் நடக்கிறேன் என்று கூறினார்கள். சிலர் சர்வாதிகாரியாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். சர்வாதிகாரத்தனம் குற்றமானது என்று நான் கருதுவதில்லை. பொறுப்பு உயர உயர அதிகாரம் உயர்ந்துதான் தீரும். அதிகப் பொறுப்பு ஏற்பட்டால் அதிக அதிகாரமும் எல்லாப் பொறுப்பும் நானே எடுத்துக் கொள்ள நேர்ந்தால் சர்வாதிகாரியாகத்தானே ஆகிவிட வேண்டியதாகும்.

நான் எந்த இயக்கத்தில் எந்த ஸ்தாபனத்தில் பங்கு எடுத்துக் கொண்டாலும், நானே பொறுப்பாளி என்றும், என் தலை மேலேயே எல்லாப் பாரமும் இருக்கிறது என்றும் கருதுவது என் இயற்கை. நான் வாலிப காலம் முதல் எந்தெந்த பொது வாழ்வில் ஈடுபட்டேனோ அனேகமாக அவைகள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருக்கும் போதும்கூட அப்படித்தான் நடந்து வந்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் யாரையும் அலட்சியம் செய்யவில்லை அவமதிக்கவில்லை. ஆகவே அதனால் ஸ்தாபனங்களுக்கு குற்றம் ஏற்பட்டு விடவில்லை.

5000 பேர்களை சிறைக்கனுப்பி…
நான் சீக்கிரம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். அதற்குள் “திராவிடர்கள் தியாகத்துக்கு பயந்தவர்கள், தனித்த சுயநலக்காரர்கள் சிறை செல்லப் பயப்படுபவர்கள்” என்று யாராலும் சொல்லுவதற்கு சிறிதுகூட இடமில்லாமல் இந்தி எதிர்ப்பைக் காட்டிலும் இன்னும் அதிகமாக 4000, 5000 பேர்களை சிறைக்கனுப்பி, நம் இயக்கத்திற்கு பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை முழு நேரத் தொண்டர்களாக இருக்கும்படி செய்துவிட்டுப் போக வேண்டுமென்பது என் ஆசை” என்பதாகச் சொல்லி அமர்ந்து, எழுந்து முக்கியமான தீர்மானங்கள் இம்மாநாட்டின் நடைபெற வேண்டி இருப்பதால் சீக்கிரம் உணவருந்தி விட்டு 3 மணிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மாநாட்டுக்கு உண்டி ஓய்வு கொடுத்துவிட்டார்.

மாநாடு 3 மணிக்கு கூடிற்று. தலைவர் 3.15 க்கு வந்தார் வந்ததும் விஷயாலோசனை கமிட்டிக்கு பிரதிநிதிகள் தெரிந்தெடுப்பதா? பிரதிநிதியாவரும் விஷயாலோசனை கமிட்டியாக இருப்பதா என்ற பிரச்சினையின்பேரில் பிரதிநிதிகள் யாவரும் விஷயாலோசனை கமிட்டியாகக் கொள்ளலாம் என்ற முடிவு ஏற்பட்டது. உடனே தலைவர் எழுந்து பத்திரிகையாளர்களும், பிரதிநிதிகள் அல்லாதவர்களும் விலகி இருக்க வேண்டும் என்றும், நடைபெறும் விஷயங்களைப் பத்திரிகைகாரர்கள் பதிவு செய்யக் கூடாதென்றும் கண்டிப்பாக கேட்டுக் கொண்டு, தீர்மானங்களைப் பற்றி பேசுமுன், காரியதரிசி தோழர் அண்ணாதுரை வரவேற்புக் காரியதரிசி தோழர் நெட்டோவை மாநாட்டுக்கு வந்து தீர்மானங்களைக் கொடுக்கும்படி ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கேட்டார். தோழர் நெட்டோ, தோழர் பாண்டியனைக் கேட்டுவிட்டு தருவதாகச் சொல்லி கடைசியாக சில தீர்மானங்கள் மாத்திரம் மேஜைக்கு வந்தன.
மற்றும், முக்கிய தீர்மானங்கள் மாத்திரம்தான் “பாசாக்க” நேரமிருக்கிறது. மீதி நேரமிருந்தால் பார்க்கலாம் என்று கூறி கூட்டத்தில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. முறைப்படி பிரரேபித்து ஆமோதித்து ஆதரித்து கைதூக்கிக் காட்டும்படி கேட்டு ஓட்டுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அவை முடிந்ததும் அக்கூட்டத்தை மாநாடு ஆக ஆக்கப்பட்டு முறைப்படி தீர்மானங்கள் பிரரேபிக்கப் பட்டு ஆமோதிக்கப்பட்டு ஆதரிக்கப் பட்டு எதிர்ப்புப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து விளக்கி ஓட்டுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை
தீர்மானம் முடிந்ததும் தலைவர் முடிவுரையில் 6 மாத காலம் என்பதை மறுபடியும் 6 மாதத்திற்குள் என்பதாக விளக்கி, அதற்குள் ஒவ்வொருவர் நடந்து கொள்ள வேண்டியதைப்பற்றிப் பேசினார். பிறகு ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வந்தனோபசாரம் கூற மாநாடு இனிது முடிந்தது.
இப்படி இருக்க மாநாட்டிற்குப் பின் பத்திரிகைகளில் பல அறிக்கைகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் நம் எதிரிகளான ஆரியர்களும் மற்றும் யோக்கியப் பொறுப்பற்ற பத்திரிகைகளும் நம் கட்சியை இழித்துக் கூறி, நம் நிலையை உலக மக்கள் கேவலமாய்க் கருத வேண்டும் என்பவர்கள் தங்கள் பத்திரிகைகளில் இடம் கொடுத்து இவ் விழி செயல்களை வரவேற்பதும் அதற்கு ஆக்க மளிப்பதுமேயாகும்.
இவ்வறிக்கைகளுக்கு சமாதானமாக பெரியார் முதலாவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவேறு பக்கம் இருக்கிறது.

யார் யார் வயிற்றுப் பிழைப்புக்கு
வழி அடைத்து விடுமோ…
தீர்மானங்கள் அமலுக்கு வந்தால் யார் யார் நிலை குலைந்து விடுமோ, யார் யார் வயிற்றுப் பிழைப்புக்கு வழி அடைத்து விடுமோ அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சகல காரியமும் செய்து விட்டுத்தான் அடங்குவார்கள். ஆதலால் அவர்கள் அறிக்கையை எவரும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.
தோழர்கள் பி. பாலசுப்பிரமணியம், நெட்டோ ஆகியவர்களின் தன்மையைப்பற்றி நாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

சர்க்காரிடம் பட்டம் சிபாரிசு செய்யவும், பப்ளிக் பிராசிகூட்டர் வேலை வாங்கிக் கொடுக்கவும் தோழர் பி. பாலசுப்பிரமணியத்திற்கு சக்தி இருக்கிறதென்று அவற்றில் ஆசையுள்ளவர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ற வண்ணம் தோழர் பி.பாலசுப்பிரமணியம் காட்டிக்கொள்கிறார். கவர்னரும் அட்வைசரும் பாலசுப்பிரமணியத்தினிடம் அதிக சிநேகம் என்றும், அதிகாரிகள் பாலசுப்பிரமணியத்தைக் கண்டால் நடுங்குகிறார்கள் என்றும் ஒரு செட்டு பிரசாரம் செய்து, பாலசுப்பிரமணியத்துக்கு பணமும், பத்திரங்களும் வாங்கிக் கொடுத்து பங்கு பெறுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது! பட்டத்திலும் உத்தியோகத்திலும் மக்களுக்கு உள்ள ஆசை யார் காதிலும் விழுகும்படி செய்வதில் அதிசயமில்லை. ஆதலால் இதன் பயனாய் ஏற்படுகிற கூட்டு அமைப்பையும் அந்த அமைப்பை தோழர் பாலசுப்பிரமணியம் பயன்படுத்திக் கொள்ளுவதையும் கவனிக்க ஆரம்பித்தால், எந்தக் கட்சிக்கும் மதிப்போ மானமோ இருக்க முடியாது. நம்மில் சில பெரிய மனிதர்கள் என்பவர்களும் “சண்டே அப்சர்வர்” பத்திரிகையை “சினிமா தூது” பத்திரிகை போல் கண்டு நடுங்கி கப்பம் கட்டி வருகிறார்கள். இவர்களுடைய தொல்லைகளும் நமக்கு இருந்துதான் தீரும்.

நம் பெரியார் எதற்கும் அஞ்ச மாட்டார் என்பதோடு, தனது குரலும் காலும் இருக்கும் வரை திராவிடர் கட்சியை நிலை நிறுத்தி தொண்டாற்றச் செய்து திராவிடர்களுக்கு மனிதத் தன்மையும், மானமும், வீரமும், வெற்றியும் தேடிக் கொடுக்க தொண்டாற்றுவார் என்பதிலும், அதற்கு யாராலும் எந்தவிதமான தடையும் ஏற்பட்டு விடாது என்பதும் உறுதி. ஆகவே, சுயநலத் துருத்திகளின் வசைக்கும் விஷமத்துக்கும், காதும் கருத்தும் கொடுக்காமல் தீர்மானங்களுக்கு மதிப்பும், ஆக்கமும், வெற்றியும் தரப்பாடுபட வேண்டியது உண்மைத் திராவிடர், பரிசுத்தத் திராவிடர் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 2.9.1944

புதன், 19 மார்ச், 2025

சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவு

 

பெரியார் வெற்றி

விடுதலை நாளேடு
வரலாற்றுச் சுவடுகள்

தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி வெற்றி பெற்றது. சென்ற வியாழனன்று திருவிதாங்கூரிலுள்ள சர்க்கார் ஆலயங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்துள்ள உத்தரவினால் பூராவும் வெற்றி பெற்று விட்டது. கேரளம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று கூறினார் காலஞ் சென்ற விவேகாநந்தர். அத்தகைய கேரளத்தில் ஒரு பகுதி திருவிதாங்கூர்.அது இதுவரை வைதீகக் கோட்டையாகவே இருந்து வந்தது. இம்மாதம் 12ஆம் தேதியோடு திருவிதாங்கூரிலே வைதீகம் ஒழிந்துவிட்டது; பகுத்தறிவு வெற்றி பெற்று விட்டது. ஹிந்து சமயம் வளர வேண்டுமென்று விரும்புவோரும், சீர்திருத்தக்காரர்களும், திருவிதாங்கூர் மகாராஜாவை வாழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய ஹிந்து சமஸ்தானங்களும் திருவிதாங்கூரைப் பின்பற்றுமானால் ‘ஹிந்து’ மத்தத்தைப் பிடித்திருக்கும் தீண்டாமைக் கறை ஒழிந்துவிடும் என்பது நிச்சயம்.

– ‘விடுதலை’ – 11.11.1936