ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம்

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 16-30 2022

கழகத்தின் சார்பில் இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் 20.3.1999 அன்று திருத்தணி முதல் திருச்சி வரையிலான பயணம் மேற்கொண்டோம். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் முதல் நாள் திருத்தணி பேரூராட்சி திடலில் எழுச்சியோடு துவங்கியது. மக்கள் நல உரிமைக் கழகப் பொதுச்செயலாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் கழகத்தின் கொடியினை அசைத்து துவக்கி வைத்தார்.



புத்தர் தோற்ற இடத்தில் பெரியாரின் வெற்றி! நிச்சயம் அமையும் என்று கூறி, எழுச்சியுரை ஆற்றினேன். நூற்றுக்கும் மேற்-பட்ட கழகத் தோழர்கள் பெரும் பயணத்தில் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் வழிநெடுக கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பல்வேறு கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் உரையாற்றினேன். மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
திருநாகேசுவரத்தில் 25.3.1999அன்று கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அறிவாசான் பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நிறைவு விழா 29.3.1999 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் அரியலூர் மாவட்டம் செந்துறை சிங்காரவேல் _ ராசலெட்சுமி ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை முகம்மது அன்சாரி _ சர்புன்னிஷா ஆகியோரின் மகள் ரெஜினாவிற்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை பொதுமக்களின் முன்னிலையில் நடத்திவைத்தேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.நல்லகண்ணு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தோழர் நல்லகண்ணு அவர்கள் உரையாற்றுகையில், “உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து நிலைக்க வேண்டுமானால், அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் வீரமணி அவர்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், கடும் பகலிலும், இரவிலும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அவருடைய பிரச்சாரப் பயணத்தை _ இலட்சியப் பயணமாக நாங்கள் கருதுகின்றோம். ஜாதியை ஒழிக்க திராவிடர் கழக முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்’’ என உரையாற்றினார்.

எனது நிறைவுரையில், ஜாதி ஒழிப்புக்கான பத்து அம்சத் திட்டத்தினை விளக்கியும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிப்பு என்று திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினேன். இப்பெரும் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்தேன்.

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா


 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022

எம்.ஆர்.ராதா மன்றம்
அடிக்கல் நாட்டு விழா
கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா
எம்.ஆர்.இராதா மன்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி 23.12.1998 அன்று இரவு டில்லியிலிருந்து விமானம் மூலம் இரவு 10:20 மணிக்கு சென்னைக்கு வந்தார். நானும் தங்கபாலு அவர்களும் சால்வை போர்த்தி வரவேற்றோம். அவரை திராவிடர் கழகத் தோழர்களும், காங்கிரஸ் தோழர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சென்னை பெரியார் திடலில் 24.12.1998 அன்று தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பெரியார் பிஞ்சு காரைக்குடி ச.பிரின்சஸ் பேராண்டாள் (கல்விச் சாதனை), ‘தலித் முரசு’ பொறுப்பாசிரியர் புனிதபாண்டியன் (பத்திரிகையாளர்), முனைவர் பேராசிரியர் சிங்கப்பூர் கா.இராமையா (நூலாசிரியர்), பெரியார் பெருந்தொண்டர் சிங்கப்பூர் முருகு.சீனிவாசன் பொதுநலச் சேவையாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலக இயக்குநர் டி.பத்மநாபன், தொழிலதிபர் செவாலியர் எம்.ஜி.முத்து ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டினோம். நிறைவுரை ஆற்றுகையில், தந்தை பெரியார் கருத்துகளை ஏற்காதவர்கள் எல்லாம் இன்று ஏற்கிறார்கள் என்பதனை விளக்கி உரையாற்றினேன்.
மறுநாள் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் “சமூக நீதிக்கான வீரமணி விருது’’ (1998) வழங்கும் விழா _ பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அடிக்கல் நாட்டினார். அடுத்து நான் தலைமை உரையாற்றினேன். தொடர்ந்து பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் அதன் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், “சமூகநீதிக்கான வீரமணி விருதை’’ (1998) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம்கேசரி அவர்களுக்கு வழங்கி, பட்டாடை அணிவித்து, ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு மய்யப் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வி.நாராயணசாமி, அமெரிக்காவைச் சார்ந்த தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் ஏ.எம்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் பன்னாட்டு மய்யம் சீதாராம் கேசரி அவர்களுக்கு வழங்கிய ரூபாய் ஒரு லட்சத்தை அப்படியே புதுடில்லி பெரியார் மய்யத்திற்கு வழங்குவதாக சீதாராம் கேசரி அறிவித்தார்.
இறுதியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி உரையில், “சூத்திரர்கள் என்று சொல்லும் கடவுளை அழியுங்கள் என்று சொன்னவர் பெரியார். புதிய வடிவத்தில் உயர் ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் உருவாகியுள்ளது. பெரியாரின் சமூகநீதி என்பது சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. பெரியாரின் மிகச் சிறந்த சீடர் வீரமணியின் பெயரால் அளிக்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்! வேறு எப்பொழுதையும் விடப் பெரியார் இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறார்! “தந்தை பெரியார் உலகில் தனித்தன்மையான முதல் சிந்தனையாளர். தந்தை பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்’’ என்று அவர் உரையில் அழுத்தமாகக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி கூறினார்.


பீகார் மாநிலத் தொழில்துறை அமைச்சர் பாண்டேவும் அவருடைய துணைவியார் கிரிஜா அவர்களும் 11.1.1999 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்தனர். அவர்களை சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் வரவேற்றேன். தந்தை பெரியாரின் நூல்களை அமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிய பின், தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளச் செயலாளர் சிவஞானசம்பந்தம், கே.நம்பியார், ஜெகவீரபாண்டியன் மற்றும் ஜனதா தள அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

வைக்கத்திலிருந்து தொடங்கிய ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம்!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022


கி.வீரமணி


திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பேரணி எனது தலைமையில் 12.12.1998 அன்று மாலை வைக்கத்திலிருந்து துவங்கியது. இந்த வரலாற்று நிகழ்வினை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா கழகக் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தார். துவக்க விழாவில் கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் கிருட்டினன், வைக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் _ சி.பி.அய். வைக்கம் செயலாளர் சுசீலன், நாராயணன், பாரதிய சாமுக்ய நீதிவேதியின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் நூல்களை வழங்கினேன். இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயண நிகழ்ச்சிகள் தென் மாவட்டங்களில் _ ஜாதிக் கலவரங்கள் நடந்த பல சிற்றூர், பேரூர் நகரங்களில் சிறப்பான முறையிலும், கட்டுப்பாட்டுடனும் நடை-பெற்றன. செல்லும் ஊரெல்லாம் ஆண், பெண் (பொதுமக்கள்) திரளாகக் கூடிநின்று, கவனத்துடன் உரைகளைக் கேட்டனர். சில ஊர்களில் அடைமழையிலும் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மக்களும் மழையில் நனைந்தபடியே கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களும் இருந்து ‘இப்படிப்பட்ட பிரச்சாரத்தை அடிக்கடி வந்து செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர். எங்கள் கிராமத்திற்கு வர மாட்டீர்களா? என்ற ஏக்கத்துடன் கேள்விகள் வந்தன.

இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா 19.12.1998 அன்று மதுரை மாநகரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் நிறைவுரையுடன் நிறைவடைந்தது. இந்தப் பயணம் 1313 கி.மீ. கடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர்கள்: பழ.நெடுமாறன் (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கா.காளிமுத்து (துணைப் பொதுச்செயலாளர், அ.இ.அ.தி.மு.க.), பொன்.முத்துராமலிங்கம் (தென்மாவட்ட அமைப்புச் செயலாளர், தி.மு.க.), நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்), என்.வரதராசன் (நிருவாகக் குழு உறுப்பினர், சி.பி.எம்.), துரை.சக்ரவர்த்தி (உதவிப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.), ஏ.ஜி.எஸ்.இராம்பாபு (முன்னாள் எம்.பி., த.மா.கா.), க.ஜான் மோசஸ் (செயலாளர், ஜனதா தளம்) மற்றும் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இரா.குணசேகரன், க.பார்வதி, இரா.செயக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் புத்தாடை போர்த்தி ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அளித்து, நினைவுப் பரிசும் வழங்கினோம். விழாவில் சிறப்புரை யாற்றுகையில்,
“திராவிடர் கழக அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட தலைவர்களுக்கெல்லாம் நன்றி! நன்றி! நம்மிடையே வேறுபட்ட அரசியல் இருந்தாலும் தந்தை பெரியாரால் ஒன்றுபடுவோம் என்று இம்மேடை உணர்த்துகிறது.
இந்தப் பயணத்தின்போது மக்களிடம் நல்ல மாறுதலைக் கண்டோம் -_ அதுதான் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஜாதிப் பிரச்சினை, வெறும் சட்டப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை. நாங்கள் முன்னால் செல்வோம் _ சட்டம் பின்னால் வரட்டும்!
தீண்டாமை ஒழிப்பு மாநாடு வேண்டாம் _ ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள். தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. அதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மாற்றவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார் _ 1973 டிசம்பரில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில். 50 ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பிறகு சுடுகாட்டிலும் ஜாதி இருப்பது வெட்கக் கேடானது.

ஜாதித் தீயினால் வெந்தது போதும் _ மக்கள் மாண்டது போதும்! ஜாதியை ஒழிப்போம் _ சமத்துவத்தை உருவாக்குவோம். தென்மாவட்டங்களில் இந்தப் பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தக் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசு மற்ற மற்ற பணிகளைத் தொடரவேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மீ.அழகர்சாமி நன்றி கூறினார்.

- கட்டுரையின் ஒரு பகுதி...

சனி, 15 ஏப்ரல், 2023

நாகம்மையாரும் வைக்கம் போராட்டமும்

 

 

மே 1-15,2022

(அன்னை நாகம்மையார் நினைவு நாள் 11.5.1933)



1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற, நாகம்மையார் தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் தமிழகத்துப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்து சேர்ந்தார். வைக்கம் என்பது ஒன்றும் ஈரோட்டின் அருகே உள்ள ஊர் அல்ல. எர்ணாகுளம் வந்து வைக்கம் செல்ல வேண்டும். அன்றைய நாளில் இன்று போல் போக்குவரத்து வசதிகள் அவ்வளவு அதிகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேரள மாநிலத்து வைக்கம் அந்நிய நாடு போல. மொழி, உணவு, உடை அத்தனையிலும் வேறுபட்ட பகுதி. திருவாங்கூர் அரசரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதி. பெரியாருக்கு என்று உறவினர் எவரும் அங்கு இல்லை.

நாகம்மையார், எஸ்.ஆர்.கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார் நாகம்மையார் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதிகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தந்தை பெரியார் திரு.வி.க.வினால் ‘வைக்கம் வீரர்’ எனப் பெயர் பெற்றார் எனில் இதன் பின்னணியில் ஊக்க சக்தியாகத் திகழ்ந்தவர் நாகம்மையார் என்பதை மறந்துவிட முடியாது.

“இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபா காந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது. புறநானூற்று வீரத்தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப் பெறும் அத்தனை உயர் பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமானாலும், கணவர் வழி நின்று கற்றுக் கொண்டது ஏராளம். தொடக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார் அவையெல்லாம் தம் கணவருக்கும் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து தாமே நிறுத்திக் கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடைபோட்டார்.’’

[தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, கருணானந்தம் தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், பதிப்பு 2007, பக்கம் 2]

«««

1924ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கத்தில் போராட்டம் நடத்தி அந்த சமஸ்தான ஆட்சியிலும் திரு.ராமசாமி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது நாகம்மையார் அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம், ஒரு சிறிதும் பின்வாங்காது பிரச்சாரம் செய்து பொதுமக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார் அப்போது அவர்,

“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10:00 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பாட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்ல என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அவர் திரும்பத் திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டுமென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்துமா காந்தியையும் பிரார்த்திக்கின்றேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போவதாக நினைத்துக்கொண்டு போகிற வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கின்றேன்’’ என்றார்.

 – நாகம்மாள்

[ ‘நவசக்தி’, 12.9.1924, பக்கம் 8, ஈரோடு]

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தில் பெண்களை வழிநடத்திச் சென்று, பெரியார் மேற்கொண்ட அறப்போரை, வெற்றி பெறச் செய்தவர் அன்னை. அவர் ஏற்றிய போராட்ட தீபம் அணையாமல் தொடர்ந்து ஒளிவீசச் செய்தவர் நாகம்மையார்.

காங்கிரசு இயக்கத்தில் தந்தை பெரியார் அன்று இருந்த வேளையில் அன்னை நாகம்மையார் வைக்கம் கோவிலுக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தேவஸ்தானத்தவர் விதித்த தடையை மீறி பெண் தொண்டர்களுடன் நுழைந்த துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அன்னை நாகம்மையாரின் இந்த அறப்போர் பங்கேற்பும், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘மனிதனை நினை’ என்ற பெரியாரின் கொள்கையின் செயல் வடிவம் இது.

பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று சிறப்பிக்கப் பெற்றார் என்றால், ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னும் பெண் ஒருத்தி இருப்பாள் எனும் வாசகம் இந்த வைக்கம் வீரரைப் பொருத்தமட்டில் நிறைவேறச் செய்த வைக்கம்  வீராங்கனை நாகம்மையார் ஆவார். நாகம்மையாரின் பணிகளில் உழைப்பின் மேன்மை, அச்சமின்மை, விடாமுயற்சி ஆகியன எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

அரசியலில் சமத்துவமும், பொருளாதார விடுதலையும் இணைந்து வரும்போதுதான் தீண்டாமை அடியோடு ஒழியும் என்பது பெரியாரின் கொள்கைச் சிந்தனை. 20 மாதங்கள் ஏறக்குறைய நடைபெற்ற வைக்கம் அறப்போரில் வெற்றி முகட்டை நோக்கி இடையறாது ஏறிப் பயணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியார் மட்டுமல்லாது அவருடைய வாழ்விணையர் வீரத்தாய் நாகம்மையாரும் ஆவார்.

எனவேதான் பெரியார், “நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.ஸீ

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!


கட்டுரையின் ஒரு பகுதி...

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!

கி.வீரமணி

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து 4.10.1998 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கழகத் தோழர்களை, 6.10.1998 அன்று காலை 7:00 மணிக்கு புதுடில்லி இரயில் நிலையத்தில், சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.

84 தோழர்களையும் இரு பேருந்துகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மறுநாள் அடிக்கல் நாட்டு விழாவும் மாநாடும் நடக்கவிருப்பதால் தோழர்களுக்கு அன்று ஓய்வு அளிக்கப்பட்டது.

7.10.1998 விடியற்காலை 4:30 மணிக்கு தோழர்கள் எழுந்து பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டப்படும் பாம்னோலி (Bomnoli) இடத்திற்கு காலை 7:00 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

அடுத்து சந்திரஜித் யாதவ் அவர்கள் அங்கு வந்தார். அனைவரிடமும் கைகுலுக்கி அன்பொழுகப் பேசினார். நீலவானத்தின் கீழ் வெண் விதானமாய் விரிந்த துணிப்பந்தலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

காலை 9:20 மணிக்கு சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். 9:25 மணிக்கு பெரியார் மய்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழாப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். அனைவரும் மகிழ்வு பொங்க கையொலித்து, ஆரவாரம் செய்தனர்.

சந்திரஜித் யாதவ் உரை

அடுத்து, விழாவிற்குத் தலைமையேற்ற சந்திரஜித் யாதவ் அவர்கள் தமது தலைமை உரையை ஆற்றினார். “இன்று பெரியார் மய்யத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பெரியாரோ சமூகநீதிக்கான அடிக்கல்லை என்றோ நாட்டிவிட்டுச் சென்றார்’’ என்று பெருமை பொங்கக் கூற, அனைவரும் கையொலித்து மகிழ்ந்தனர்.

இன்று தம்பித்துரை அமைச்சராக இருக்கின்றார் என்றால் அவர் பெரியாரின் உருவாக்கம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.

பெரியார் அறக்கட்டளை பல தொண்டு-களைச் செய்துவருகின்றது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்றார். விதவை மணம் வேண்டும் என்றார். பெரியார் சமூகநீதிக் கொள்கையை மக்களிடையே விதைத்தார். இந்த பெரியார் மய்யம் ஒரு பிரச்சார நிலையமாக விளங்கும். இந்த மய்யத்தில் அமைக்கப்படும் இன்டர்நெட் வசதி பெரியாரை உலகெங்கும் அழைத்துச் செல்லும்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்துள்ள பெரியார் தொண்டர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உலகம் எங்கும் பெரியாரின் சீடர்கள் இருக்கின்றார்கள். உலகெங்கும் பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை வீரமணி பரப்பி வருகிறார். அடுத்து, வீரமணி அவர்களை வரவேற்புரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்’’ என்றார்.

9:45 மணியளவில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன்.

இன்று பத்திரிகைகள் எல்லாம், “பெரியார் டில்லி செல்கிறார்’’ என்று எழுதுகின்றன. செய்திகளில் எல்லாம் இன்று பெரியார் இடம் பெறுகின்றார். அவர் ஏற்றிய சுடரை நாங்கள் ஏற்றிச் சென்றுகொண்டே இருக்கிறோம். இதைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.

இந்தப் ‘பெரியார் மய்யம்’ அமைந்துள்ள நிலத்தை, சந்திரஜித் யாதவ் அவர்களின் உதவி கிடைத்திராவிட்டால் நாங்கள் வாங்கியிருக்க முடியாது. அவருக்கும் நன்றி உரியது. நம் அழைப்பின் பேரில் வந்துள்ள மத்தியப் பிரதேசத் துணை முதல்வர் சுபாஷ் யாதவ் அவர்களையும், அமைச்சர்கள் தம்பிதுரை, கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோரையும் வரவேற்கின்றேன் மற்றும் இங்கு வந்துள்ள பெருமக்களையும் வரவேற்கின்றேன்.

பெரியார் மய்யம் அமைந்துள்ள இடம் ஒரு கிராமமாகும். கிராம மக்கள் வாழ்கின்ற பகுதியில் இம்மய்யம் அமைக்கப்படுகின்றது. இந்தப் பெரியார் மய்யத்தில் கட்டப்படும் கட்டடம் மூன்று மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இது மட்டுமல்ல, பெரியார் கணினி மய்யம் ஒன்றும் இப்பெரியார் மய்யத்தில் அமைக்கப்படும். இதனால், இப்பகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

இன்று இங்கு வந்திருக்கும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இன்று மருத்துவமனை சென்று மருத்துவம் பெற வேண்டிய நாள். மருத்துவர் கட்டளைகளையும் மீறி இன்று இந்த விழாவிற்கு வந்துள்ளார். அவரை வரவேற்கின்றேன்’’ என்று எனது உரையில் கூறினேன்.

அமைச்சர் தம்பிதுரை

மத்திய சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை பேசும்போது, பெரியார் சமூகநீதிக்காகப் பாடுபட்டவர் என்றும், ஜாதிப் பட்டங்களை விட்டொழிக்க வேண்டும் என்று சொன்னவர் என்றும், ஜாதியற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபட்டவர் என்றும், இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் என்றும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

சுபாஷ் யாதவ்

மத்தியப் பிரதேச துணை முதல்வர் சுபாஷ் யாதவ் உரையாற்றுகையில், பெரியார் மய்யம் வளர்ந்தோங்கத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கடம்பூர் ஜனார்த்தனம்

மத்திய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் அவர்கள் உரையாற்றும்போது, 1939இல் பள்ளி மாணவனாக இருந்தபோது, தாம் தந்தை பெரியாரைத் தம் ஊரில் சந்தித்ததையும் 1948இல், தாம் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டமையையும் 1998இல் அமைச்சராக இருப்பதையும் எடுத்துக் கூறினார். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் இம்மய்யத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இம்மய்யம் அரும்பணி ஆற்றும் என்றார்.

ஜெகவீரபாண்டியன்

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் அவர்கள் பெரியாரின் பெருஞ் சாதனைகளால் தான் நாம் உயர்வு பெற்றோம். சமூகநீதியை நிலைநாட்டிய பெருமை அவரையே சாரும் என்றார்.

வி.பி.சிங் உரை

சரியாகக் காலை 10:22 மணிக்கு கொள்கைக்காகப் பிரதமர் பதவியையே உதறித் தள்ளிய ஒப்பற்ற வரலாற்று நாயகர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் உரையாற்றினார்.  உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேசினார். தனக்குச் சிறுநீரகம் வழங்க முன்வந்த 15 பேரில் தேர்வு செய்யப்பட்ட, ஒரத்தநாடு இராமகிருஷ்ணன், தஞ்சை காளிதாஸ், சிதம்பரம் சித்தார்த்தன் ஆகிய மூவரையும் அமர்ந்தபடியே கட்டித்தழுவி தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

“நண்பர் வீரமணி அவர்கள், நான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று பலமுறை என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். என் உடல்நிலை பயணம் மேற்கொள்ள இடம் தரவில்லை. அடுத்த பிறவியில் நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். இது என்னுடைய ஆசையாகும். பெரியார் கருத்துகள் மனித சமுதாயத்துக்கே உரியவை, அவர் கொள்கைகள், கருத்துகள் வடபுலத்தில் கிராமங்களிலும் பரவ வகை செய்ய வேண்டும். அவர் நாட்டு விடுதலைக்காகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர். அதன் பின்னர் சமுதாயத்தின் மாபெரும் விடுதலைக்காகப் போரிட்டார். நம் நாடு ஒரு வறிய நாடு, நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் திறக்கப்பட இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பெரியாரின் கருத்துகள் வடபுலத்திலுள்ள கிராமங்களிலும் பரவ வேண்டும்.

நாம் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிகள் நம்மைப் பிரிக்கலாம். ஆனால், இயக்கம் நம்மை ஒன்றுபடுத்துகின்றது. இந்த மேடையிலேயே பல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் வீற்றிருக்கின்றார்கள். ஆனால், நாம் இங்கு மனித நேயக் கொள்கைக்காக ஒன்றுபட்டிருக்கின்றோம்.

மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் வேறுபாடு உண்டு. ஒரு ரோடு ரோலர் என்ஜின் இருக்கிறது. அதன்மீது எச்சிலைத் துப்பினால் அது ஆத்திரப்படாது. மனிதன் மீது துப்பினால்  அவனிடமிருந்து மான உணர்வு கோபமாய் வெளிப்படும்.

என்ஜினுக்குச் சுயமரியாதை இல்லை. மனிதனுக்கு உண்டு. நமது சுயமரியாதை உணர்வுகள் எல்லாம் எதிரிகளால் கவரப்பட்டுவிட்டதால் நம் மக்கள் என்ஜின்களாக மாறிவிட்டார்கள். நம் மக்களுக்குள் பகைமை உணர்ச்சி மேலோங்குகின்றது. காரணம், ஜாதி முறை. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் ஒரு பக்கம் குவியும்போது, சிக்கல்களும் போராட்டங்களும் எழுகின்றன.

வீரமணியைக் கேளுங்கள்!

கல்வி நிலையங்களை எப்படிச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் தூதுக் குழுக்களை வீரமணி அவர்களிடம் அனுப்பித் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனக்குச் சீறுநீரகம் வழங்கத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் முன்வந்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் என் சிறுநீரகத்தை யாருக்கும் அன்பளிப்பாக நான் வழங்க முடியாது. ஆனால், இச்சிறுநீரகம் தவிர்த்த என் உடல் உறுப்பு ஒவ்வொன்றையும் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை என் வீட்டாரிடமும் சொல்லிவிட்டேன். இம்மாதிரி உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்கும் முறையையும் திராவிடர் கழகம் நடைமுறைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

உங்களுக்காக உயிரையே கொடுப்போம்!

வி.பி.சிங் அவர்கள் பேசி முடித்ததும், உரையாற்றிய நான், மேன்மைமிகு வி.பி.சிங் அவர்களே, உங்கள் உரை எங்களை நெகிழச் செய்துவிட்டது. இந்த இளைஞர்கள் செய்தது குறைவு! மண்டல் குழு அறிக்கையைச் செயலாக்கம் பெறச் செய்த தங்களுக்காக எங்கள் உயிரையே நாங்கள் கொடுப்போம் என்று நான் கூறியபோது, கூட்டத்தினர் கண்ணில் நீர்ப்பெருகி வழிந்தது!

சமூகநீதியைக் காக்க வி.பி.சிங் அவர்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று  வாழ்த்தினோம்.

உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்குவதற்கான திட்டத்தைத் திராவிடர் கழகம் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது என்று எடுத்துக் கூறினேன்.

சந்திரஜித் யாதவ் அவர்கள் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தாரையும் வாழ்த்த வேண்டும் என்றார்.

விழா சிறக்கப் பேருதவி புரிந்த பலரும் மேடையில் சால்வைகள் அணிவிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர். நன்றி உரையுடன் முற்பகல் 11:00 மணிக்கு விழா இனிது முடிவடைந்தது.

விழா முடிந்ததும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கழகக்  குடும்பத்தினர் 84 பேரும் “மாவ்லங்கர்’’ அரங்கில் நடைபெறும் தேசிய சமூகநீதி மாநாட்டிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர்.

7.10.1998 அன்று மாலை, சமூகநீதியின் தேசிய மாநாடு மாவ்லங்கர் மாளிகையில் தொடங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ் தலைமை தாங்கினார். நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடையிலே குழுமியிருந்தார்கள். சமூகநீதியில் பற்றுடையோர் அய்யாயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்தனர்.

பெரியார் மய்யம் விழா முடிந்து, புறப்பட்ட கழகத் தோழர்கள், அங்கிருந்து நேரே உந்து வண்டிகளில் மாவ்லங்கர் மாளிகை வந்தடைந்தனர். அப்போது மேடையிலிருந்து பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் _ வந்து நுழைந்து கொண்டிருக்கும் பெரியார் தொண்டர்களை வருக, வருக என வரவேற்கிறேன் என எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றார்.

யாதவ் மீண்டும் கூறினார்: தமிழ்நாட்டுப் பெருமக்களே, மண்டபம் நிரம்பி வழிகிறது. உங்களுக்கு அங்கு உட்கார இடம் இல்லை. இங்கு வந்திருக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் தலைவர்கள் வீற்றிருக்கும் மேடைக்கு வந்து எங்களுடன் அமர்க என்றார்.

வீரநடை போட்ட நம் மகளிர்

பெரியார் தர்பாரில் கொலு மண்டபத்தின் படியில், நமது மகளிர் உரிமையோடும், பெருமையோடும், பெருமிதத்துடனும் ஏறி, ராணுவ வீராங்கனைகளின் மிடுக்குடன் மேடைக்குச் சென்று அமர்ந்தனர்.

அந்த மாநாட்டிலே பதினைந்து பேர் உரையாற்றினர். தலைவராக வீற்றிருந்தவர் சந்திரஜித்யாதவ். முதன்மை விருந்தினராக  டில்லி நாடாளுமன்றத்தின் மேனாள் அவைத் தலைவர் பி.ஏ.சங்மாவும், நானும். தவிர மேற்கு வங்க டாக்டர் மாயாகோஷ், டில்லியைச் சேர்ந்த சோனி, மாநிலங்களவை உறுப்பினர் டி.பி.யாதவ், இராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் கரன்சிங், சையது சகாபுதீன், ஆஸ்கார் பெர்னாண்டஸ் எம்.பி., ராஜேஸ் பைலட், பிரசாத் வெராலா, கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி.காபாஸ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரெட்டி ஆகிய பதினைந்து பேர் உரையாற்றினார்கள்.

சங்மாவின் கர்ஜனை

“இடஒதுக்கீடு கேட்கிறோம் நாம். இடஒதுக்கீடு அளிக்கும்போது போதிய படித்தவர்கள் வேலைகளை ஏற்கக் கிடைக்கவில்லையே என் செய்வது? பீகாருக்குச் சென்றேன், உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றேன். அங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பள்ளிகளே இல்லை. என்னைச் சந்திக்க வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளிடம் நான் இதைச் சுட்டிக்காட்டி வற்புறுத்தினேன். பள்ளிகளைத் திறக்கச் செய்யுங்கள்; பள்ளிகளை திறக்குமாறு போராடுங்கள் என்றேன்’’ என்றார் சங்மா. பெரியார் கட்டளையை ஏற்றுப் பள்ளிகளைத்  திறக்கப் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் காமராசர்கள் இன்னும் தோன்றவில்லை. சங்மாவின் அறைகூவல் பள்ளிகளைத் திறக்கச்செய்யும் போர் அழைப்பாக அமைந்தது.

பெரியாரின் வைக்கம் போரை நினைவூட்டி பெரியாரின் தொண்டுகளைக் குறிப்பிட்டார்.

கே.சி.யாதவ் முழக்கம்

“வீரமணி அவர்கள் சமூகநீதிக்கு ஆற்றும் பணி குறிப்பிடத்தக்கது. அவர் என் சகோதரர். நாங்கள் இருவரும் ஒரே கருத்துடையவர்கள். நாங்கள் சகோதரர்கள். நாங்கள் ஒரே கருத்தை ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சகோதரர்கள் மட்டுமல்ல, தோழர்கள், ஒருங்கிணைந்து உழைப்பவர்கள் போர் முனையில் ஓரணியில் உள்ள போர் வீரர்கள்’’ என்று உணர்வுபொங்கக் குறிப்பிட்டார்.

நாம் பெரியார் மய்யத்தை புதுடில்லியில் அமைத்திட வேண்டும். புத்தரும் கபீரும் காந்தியாரும் ஜோதிபா பூலேயும் உற்சாக மூட்டியது போல் பெரியார் கருத்துகளும் உற்சாக மூட்டவல்லன.

பெரியார் என்றும் வாழ்வார்; எல்லாருடைய உள்ளங்களிலும் வாழ்வார்; எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்வார் என்றார்.

சந்திரஜித் யாதவ்

சந்திரஜித் யாதவ் அவர்கள், “ஒரு கோடி ரூபாயில் பெரியார் மய்யம் கட்டப்பட இருக்கிறது என்றார். வீரமணி உறுதியாக இந்த ஒரு கோடி ரூபாயும் மக்களிடமிருந்து திரட்டப்படும் என்ற அறிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் வீரமணியின் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்கள். அந்தத் தங்கம் முழுமையும் பெரியார் அறக்கட்டளையில் சேர்ந்துள்ளது. இந்த அறக்கட்டளை பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தி வருகின்றனது. டில்லியில் இன்று உருவாகும் பெரியார் மய்யம் இரண்டாம் விடுதலைப் போரை நடத்தும். பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் வரும் என்று வீரமணி அறிவிக்கிறார். டில்லியைச் சுற்றியுள்ள சிற்றூர் மக்களுக்கு இது பேருதவி நல்கும்’’ என்று தனது உரையை நிறைவு செய்து, என்னை உரையாற்ற அழைத்தார்.

சரியாக மாலை 4:00 மணிக்கு நான் உரையாற்றினேன். “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்; நாம் அலாரம் டைம்பீஸ் வாங்குகிறோம். ஒருமுறை மட்டும் அலாரம் அடிக்கும் டைம்பீஸ் உண்டு. ஆனால், தூக்கத்திலிருந்து விரைந்து விடுபட முடியாதவர்களுக்கு என்று புதுவகையான அலாரம் டைம்பீஸ் உண்டு. அது திரும்பத் திரும்ப அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். தூங்குகிறவன் எழுகின்றவரை அது அடித்துக் கொண்டே இருக்கும். இந்த இரண்டாம் வகை அலாரம் டைம்பீஸாக நாம் செயல்படுகிறோம்.

இன்று நாட்டின் நிலை என்ன? சமூக நீதியில் விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ இன்று எல்லோரும் சமூகநீதி வேண்டும் எனப் பேசுகின்றோம். பாரதீய ஜனதா கட்சிக்காரர்-கள்கூட சமூகநீதிக்காக மாநாடுகள் நடத்து-கின்றார்கள். ஆகவே, நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் யாரிடமும் சமூகநீதியைப் பிச்சையாகக் கேட்கவில்லை. சமநிலைமை வேண்டுமென்றுதான் வாதாடுகிறோம். (We do not want charity but we want parity) மண்டல் குழு அறிக்கை, நீதிமன்றத்தின் தீர்ப்பு, கிரீமிலேயர் போன்ற விவரங்களையெல்லாம் மக்களுக்கு விளக்குகிறோம். இத்துறைகளில் நாம் ஆற்றிய பணிகள் மிகக் குறைவு. இன்னும் செய்ய வேண்டியவை மிகப் பல. தனியார் நிறுவனங்களிலும், இடஒதுக்கீடு வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது செய்ய வேண்டும் என்றால், எனது பதில் இப்போதே செய்ய வேண்டும் என்பதே!

எனக்கு முந்திப் பேசியவர் கடவுளின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்றார். நான் பெரியாரியலைக் கொண்டவன். எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இது எங்களைப் பிரிக்க வேண்டியதில்லை. சமூகநீதிக்காக அவரும் நானும் ஒன்றுபடுகிறோம்.

தமிழ்நாட்டில் அரசு வரலாம்; போகலாம். ஆனால், சமூகநீதியின் இடஒதுக்கீட்டைக் கைவிடும் அரசு தமிழ்நாட்டில் ஒரு விநாடிகூட அரசுக்கட்டிலில் இருக்க முடியாது என்று உரையாற்றினேன்.

தலைநகர் டில்லியில் சமூகநீதி மாநாடு எதிர்பார்த்ததற்கும் மேல், சிறப்போடும், எழுச்சியோடும், மிகுந்த பயனளிக்கும் வகையிலும் நிறைவு பெற்றது.

(நினைவுகள் நீளும்…)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (291)

ஏப்ரல் 16-31,2022

    

சனி, 8 ஏப்ரல், 2023

எனக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட தஞ்சை மாநாடு - கி.வீரமணி (மனிதநேய மாநாடு)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (285)

ஜனவரி 16-31,2022

மனிதநேய மாநாட்டுக்கு இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சேனல் இடமருகு (டில்லி), இங்கிலாந்து நாத்திகர் மால்கம் ஒவன்ரீஸ், சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் எஸ்.டி.-மூர்த்தி, தி.நாகரத்தினம், தமிழ்மறையான், மலேசிய தி.க. தேசியத் தலைவர் ரெ.சு.முத்தய்யா, திராவிடமணி நல்லதம்பி, டத்தோ பாலகிருஷ்ணன், திருச்சுடர் கே.ஆர்.-ராமசாமியின் குடும்பத்தினர், கருநாடக மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் உறுப்பினர் என்.வி.நரசிம்மையா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பேராசிரியர் டாக்டர் இலட்சுமண் எஸ்.தமிழ் (இலக்குவன்தமிழ்), சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், இங்கிலாந்து நாட்டின் இணையற்ற பெரியார் பெருந்தொண்டர் செல்வநாயகம், பி.பி.சி. தமிழோசை புகழ் சங்கரமூர்த்தி இன்னும் பல வெளிநாட்டு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு கழகத்தின் செயல்பாடுகளையும், கழகம் செய்துவரும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் வாழ்த்திப் பேசினார்கள்.

கழகப் பொறுப்பாளர்களின் அன்புக்கிணங்க மேடையிலே ஒரு பெரிய தராசினைக் கொண்டுவந்து ஒரு தட்டில் என்னையும், மற்றொரு தட்டில் ரூபாய் நோட்டுகளும், தங்கமும் வைக்கப்பட்டன. தராசு முள் நடுவில் நேராக நின்றதும், நான் இறக்கி விடப்பட்டேன்.  அவ்வாறு கொடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.9 கோடி ரூபாயாகும். முதன்முதலில் எடைக்கு எடை தங்கம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அறிவித்தவர் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆவார். அவருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் கேட்டுக்கொள்ள வைரக்கல் பொறித்த தங்க மோதிரத்தை அணிவித்தேன். மாநாட்டில் நிறைவுரையில், “இந்த நிதி எனக்காக அளிக்கப்பட்டதல்ல! தந்தை பெரியாருக்கு நன்றிகாட்ட என் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மதவாத எதிர்ப்பு இளைஞர்களுக்குப் பயிற்சிப் பட்டறை, 100 புத்தக விற்பனை நிலையம், பல மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், புதுடில்லியில் நமது இயக்கம் பற்றிய உலகத் தகவல் மய்யம் போன்ற ஆக்கரீதியான பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றேன். நாங்கள் ஏதோ தன்னந்தனியராக இல்லை. உலகக் குடும்பமே எங்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதைத்தான் இந்த மனிதநேய மாநாடு காட்டியிருக்கிறது’’ எனப் பல கருத்துகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

மாநாட்டு மேடையில் நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. ஊற்றங்கரை திருவாளர்கள் அப்பாவு _ பச்சியம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திரன், சின்னக்கண்ணன் _ சந்திரா ஆகியோரின் செல்வி வேல்விழி; கோவில்தேவராயன் பேட்டை திருவாளர்கள் சங்கரலிங்கம் _ சகுந்தலா ஆகியோரின் செல்வன் சந்துரு, வல்லம் பிள்ளையார்பட்டி சிதம்பரநாதன் _ கலைமணி ஆகியோரின் செல்வி அஞ்சுகம்; தஞ்சாவூர் மாவட்டம் சாமிமுத்து _ அந்தோணியம்மாள் ஆகியோரின் செல்வன் லூர்துசாமி, அந்தோணிசாமி _ சவுரியம்மாள் ஆகியோரின் செல்வி தங்கமணி; கோவை மாவட்டம் சுந்தராபுரம் கே.எம்.சண்முகம் _ ருக்மணி ஆகியோரின் செல்வன் கதிரவன், கே.பழனிச்சாமி _ கவுசல்யா ஆகியோரின் செல்வி லாவண்யா ஆகிய நான்கு இணையரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

பூதனூர் திராவிடர் கழகத் தலைவர் இரா.இலக்குமணன் அவர்களின் பேரக் குழந்தையும், கவுதமன் _ சுமதி ஆகியோரின் மகளுமான பெண் குழந்தைக்கு ‘தங்கமணி’ எனப் பெயர் சூட்டினேன்.

மாநாட்டில் நான் எழுதிய Why I do not believe in God?” என்னும் ஆங்கில நூலை பார்பரா சுமோக்கர் வெளியிட, ஜெர்மானிய நாத்திக அறிஞர் டாக்டர் வால்கர் முல்லா பெற்றுக் கொண்டு _ தமிழ்நாட்டில் உள்ள இதுபோன்ற இயக்கத்தை ஜெர்மனியில் மட்டுமல்ல _ உலகில் வேறு எங்குமே காண முடியாது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு தஞ்சையில் அனைத்து தரப்பு மக்களையும் பகுத்தறிவுப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு கழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.

ஜெர்மனி நாத்திகக் குழுவினர் சென்னை பெரியார் திடலுக்கு 6.2.1998 அன்று இரவு ஏழு மணிக்கு வால்கர் முல்லருடன் இணைந்து நாத்திகச் சங்கத்தைச் சார்ந்த பத்து பேருடன் வருகை புரிந்தனர். அவர்களை பகுத்தறிவுக் கழகச் செயலாளர் கோ.அண்ணாவி வரவேற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மந்திரமா? தந்திரமா? நிகழ்வை ஜெர்மன் குழுவினருக்கு மெருல்கம்தார் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சி அவர்களை மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது. மலேசிய செல்வம் விழாக்குழு சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.

ஜெர்மனிய நாத்திகச் சங்க பிரதிநிதி வால்கர் முல்லருக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுச் சின்னத்தை வழங்கினேன். அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் 1932ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார். இன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாத்திகவாதிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு வந்திருக்-கின்றார்கள். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மேக்ஸ் முல்லர் அவர்கள் சமஸ்கிருதத்தைப் பரப்ப இங்கு வந்தார். இன்றைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வால்கர் முல்லரும் நாத்திகப் பிரதிநிதிகளும் தந்தை பெரியார் அவர்களது கருத்தை ஜெர்மனியில் பரப்ப இங்கு வந்திருக்கின்றனர். காலச் சக்கரம் சுழலுகின்றது! ஜாதி, மதம், கடவுள் ஒருபோதும் மக்களை இவை ஒன்றிணைக்காது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையான மனிதநேயம் மட்டுமே மனித குலத்தை ஒன்றிணைக்கும்’’ என பல்வேறு கருத்துகளைக் கூறினேன். இந்த நிகழ்வுக்கு கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.