ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

வைக்கத்திலிருந்து தொடங்கிய ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம்!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022


கி.வீரமணி


திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பேரணி எனது தலைமையில் 12.12.1998 அன்று மாலை வைக்கத்திலிருந்து துவங்கியது. இந்த வரலாற்று நிகழ்வினை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா கழகக் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தார். துவக்க விழாவில் கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் கிருட்டினன், வைக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் _ சி.பி.அய். வைக்கம் செயலாளர் சுசீலன், நாராயணன், பாரதிய சாமுக்ய நீதிவேதியின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் நூல்களை வழங்கினேன். இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயண நிகழ்ச்சிகள் தென் மாவட்டங்களில் _ ஜாதிக் கலவரங்கள் நடந்த பல சிற்றூர், பேரூர் நகரங்களில் சிறப்பான முறையிலும், கட்டுப்பாட்டுடனும் நடை-பெற்றன. செல்லும் ஊரெல்லாம் ஆண், பெண் (பொதுமக்கள்) திரளாகக் கூடிநின்று, கவனத்துடன் உரைகளைக் கேட்டனர். சில ஊர்களில் அடைமழையிலும் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மக்களும் மழையில் நனைந்தபடியே கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களும் இருந்து ‘இப்படிப்பட்ட பிரச்சாரத்தை அடிக்கடி வந்து செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர். எங்கள் கிராமத்திற்கு வர மாட்டீர்களா? என்ற ஏக்கத்துடன் கேள்விகள் வந்தன.

இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா 19.12.1998 அன்று மதுரை மாநகரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் நிறைவுரையுடன் நிறைவடைந்தது. இந்தப் பயணம் 1313 கி.மீ. கடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர்கள்: பழ.நெடுமாறன் (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கா.காளிமுத்து (துணைப் பொதுச்செயலாளர், அ.இ.அ.தி.மு.க.), பொன்.முத்துராமலிங்கம் (தென்மாவட்ட அமைப்புச் செயலாளர், தி.மு.க.), நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்), என்.வரதராசன் (நிருவாகக் குழு உறுப்பினர், சி.பி.எம்.), துரை.சக்ரவர்த்தி (உதவிப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.), ஏ.ஜி.எஸ்.இராம்பாபு (முன்னாள் எம்.பி., த.மா.கா.), க.ஜான் மோசஸ் (செயலாளர், ஜனதா தளம்) மற்றும் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இரா.குணசேகரன், க.பார்வதி, இரா.செயக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் புத்தாடை போர்த்தி ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அளித்து, நினைவுப் பரிசும் வழங்கினோம். விழாவில் சிறப்புரை யாற்றுகையில்,
“திராவிடர் கழக அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட தலைவர்களுக்கெல்லாம் நன்றி! நன்றி! நம்மிடையே வேறுபட்ட அரசியல் இருந்தாலும் தந்தை பெரியாரால் ஒன்றுபடுவோம் என்று இம்மேடை உணர்த்துகிறது.
இந்தப் பயணத்தின்போது மக்களிடம் நல்ல மாறுதலைக் கண்டோம் -_ அதுதான் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஜாதிப் பிரச்சினை, வெறும் சட்டப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை. நாங்கள் முன்னால் செல்வோம் _ சட்டம் பின்னால் வரட்டும்!
தீண்டாமை ஒழிப்பு மாநாடு வேண்டாம் _ ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள். தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. அதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மாற்றவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார் _ 1973 டிசம்பரில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில். 50 ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பிறகு சுடுகாட்டிலும் ஜாதி இருப்பது வெட்கக் கேடானது.

ஜாதித் தீயினால் வெந்தது போதும் _ மக்கள் மாண்டது போதும்! ஜாதியை ஒழிப்போம் _ சமத்துவத்தை உருவாக்குவோம். தென்மாவட்டங்களில் இந்தப் பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தக் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசு மற்ற மற்ற பணிகளைத் தொடரவேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மீ.அழகர்சாமி நன்றி கூறினார்.

- கட்டுரையின் ஒரு பகுதி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக