ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா


 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022

எம்.ஆர்.ராதா மன்றம்
அடிக்கல் நாட்டு விழா
கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா
எம்.ஆர்.இராதா மன்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி 23.12.1998 அன்று இரவு டில்லியிலிருந்து விமானம் மூலம் இரவு 10:20 மணிக்கு சென்னைக்கு வந்தார். நானும் தங்கபாலு அவர்களும் சால்வை போர்த்தி வரவேற்றோம். அவரை திராவிடர் கழகத் தோழர்களும், காங்கிரஸ் தோழர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சென்னை பெரியார் திடலில் 24.12.1998 அன்று தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பெரியார் பிஞ்சு காரைக்குடி ச.பிரின்சஸ் பேராண்டாள் (கல்விச் சாதனை), ‘தலித் முரசு’ பொறுப்பாசிரியர் புனிதபாண்டியன் (பத்திரிகையாளர்), முனைவர் பேராசிரியர் சிங்கப்பூர் கா.இராமையா (நூலாசிரியர்), பெரியார் பெருந்தொண்டர் சிங்கப்பூர் முருகு.சீனிவாசன் பொதுநலச் சேவையாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலக இயக்குநர் டி.பத்மநாபன், தொழிலதிபர் செவாலியர் எம்.ஜி.முத்து ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டினோம். நிறைவுரை ஆற்றுகையில், தந்தை பெரியார் கருத்துகளை ஏற்காதவர்கள் எல்லாம் இன்று ஏற்கிறார்கள் என்பதனை விளக்கி உரையாற்றினேன்.
மறுநாள் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் “சமூக நீதிக்கான வீரமணி விருது’’ (1998) வழங்கும் விழா _ பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அடிக்கல் நாட்டினார். அடுத்து நான் தலைமை உரையாற்றினேன். தொடர்ந்து பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் அதன் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், “சமூகநீதிக்கான வீரமணி விருதை’’ (1998) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம்கேசரி அவர்களுக்கு வழங்கி, பட்டாடை அணிவித்து, ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு மய்யப் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வி.நாராயணசாமி, அமெரிக்காவைச் சார்ந்த தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் ஏ.எம்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் பன்னாட்டு மய்யம் சீதாராம் கேசரி அவர்களுக்கு வழங்கிய ரூபாய் ஒரு லட்சத்தை அப்படியே புதுடில்லி பெரியார் மய்யத்திற்கு வழங்குவதாக சீதாராம் கேசரி அறிவித்தார்.
இறுதியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி உரையில், “சூத்திரர்கள் என்று சொல்லும் கடவுளை அழியுங்கள் என்று சொன்னவர் பெரியார். புதிய வடிவத்தில் உயர் ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் உருவாகியுள்ளது. பெரியாரின் சமூகநீதி என்பது சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. பெரியாரின் மிகச் சிறந்த சீடர் வீரமணியின் பெயரால் அளிக்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்! வேறு எப்பொழுதையும் விடப் பெரியார் இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறார்! “தந்தை பெரியார் உலகில் தனித்தன்மையான முதல் சிந்தனையாளர். தந்தை பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்’’ என்று அவர் உரையில் அழுத்தமாகக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி கூறினார்.


பீகார் மாநிலத் தொழில்துறை அமைச்சர் பாண்டேவும் அவருடைய துணைவியார் கிரிஜா அவர்களும் 11.1.1999 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்தனர். அவர்களை சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் வரவேற்றேன். தந்தை பெரியாரின் நூல்களை அமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிய பின், தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளச் செயலாளர் சிவஞானசம்பந்தம், கே.நம்பியார், ஜெகவீரபாண்டியன் மற்றும் ஜனதா தள அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக