சனி, 29 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 49

- பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல் -

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation)  பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

11.2.2020 அன்றைய தொடர்ச்சி

தமிழ்நாட்டில் ஈராயிரத்து அய்நூறு (2500) ஆண்டு களுக்கு முன்புகுந்த ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழியை உயர்தனிச் செம்மொழி என்றும், ஆண்டவனால் அநாதி காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டதென்றும், தேவபாஷை என்றும், ஆண்டவனை வழிபட அரசை நடத்த சமற்கிரு தந்தான் உகந்தது என்ற கருத்தைச் சிறுக சிறுக மக்களிடையே அரசர்களின் ஆதரவின் பேரில் புகுத்தினார்கள்.

சர் ஹென்றிமெயின் தன்னுடைய பழமை சட்டம் Ancient Law, என்ற நூலில் (பக்.14) குறிப்பிடுகிறார்,  The Hindu code called laws of Manu which is certainly a Brahmin compilation.“We can see that Brahminical India has not passed beyond a stage which occurs in the history of the families of mankind, the stage at which a rule of  law is not yet discriminated from a rule of religion.” பார்ப்பன இந்தியாவில் மதத்துக்கு அப்பாற்பட்ட எந்தவித சட்டங்களும் வகுக்கப்படவில்லை. உலகில் மற்ற பகுதிகளில் வாழும் மனித இன வரலாற்றில் படிப்படியாக மதத்திற்கு அப்பாற்பட்ட சமஉரிமை அளிக்கும் சட்டங்கள் வகுப்பதில் முன்னேறியது என்பது வரலாற்று உண்மையாகும்.

தமிழ்நாட்டு மன்னர்களை மனுஸ்மிருதியை செயல் படுத்துமாறு பார்ப்பனர்கள் தூண்டி தங்களின் சமூக மேலா திக்கத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநாட்டிக் கொண்டனர். பல்லவர்கள், களப்பிரர்கள், பிற்காலச்சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசுகள், நாயக்கர் ஆட்சி, மராட்டிய அரசுகள் பார்ப்பனர்களுக்கு முழுமையாக துணை நின்று தமிழ்நாடு முழுதும் பார்ப்பனப் பண்ணையங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்பதும் வரலாற்று உண்மைகள்.

வேதத்தில் சொல்லப்பட்டவை அநாதிகாலமானது, அழியாதது, மாற்றமுடியாதது என்ற எண்ண அலைகளை மக்கள் மனதில் வேர் ஊன்றச் செய்து அனைத்து மக்களையும் இந்து என்ற ஓர் அமைப்பின்கீழ் தந்திரமாகவும், அச்சுறுத்தி யும் கொணர்ந்தனர்.

திராவிடர்கள்-தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள். பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் - தாசிபுத்ரர் அடிமை கள், தொண்டூழியம் செய்யவென்றே ஆண்டவனால் படைக் கப்பட்டவர்கள் - பிரம்மனுடைய காலில் பிறந்தவர்கள் என்ற எண்ணங்களை வடமொழி இதிகாச - புராண கலாச்சாரத்தின் மூலமாகப் புகுத்திவிட்டனர். தமிழர்கள் தங்களது அடிமை வாழ்வைப்பற்றி சிந்திக்கமுடியாமல் செயலற்று இனஉணர் வற்ற மொழிப்பற்று அற்றவர்களாக வாழத்தலைப்பட்டனர். தமிழர்களை வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டனர். தமிழன் மொழியை மறந்ததால் தன்னிலை யில் தாழ்ந்தான். நிலை தாழ்ந்ததால் நினைப்பும் தாழ்ந்து தமிழினம் அழிந்து உருமாற்றம் பெற்றது.

வர்ணாஸ்ரம தர்மம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு சூத்திரர்களுக்கு கல்வி தரலாகாது, அவர்கள்தான் உழைக்க வேண்டும், பார்ப்பனர்கள்தான் இராஜகுருவாகவும், மந்திரி களாகவுமிருக்க தகுதி பெற்றவர்கள், அரசியலை வழிநடத்திச் செல்ல உரிமை படைத்தவர்கள் என்று அரசு சட்டத்தை வகுத்தான். அதை செயலும்படுத்தினான். பார்ப்பனர்கள் நிலம் வைத்துக்கொள்ளலாம், ஆனால் ஏர்பிடிப்பது பாபம் என்று எழுதி வைத்துள்ளான். நான்கு ஜாதி முறைகள் வகுக் கப்பட்டு அந்த விதிமுறைகளை மீறுபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென எழுதியுள்ளான். இந்தமுறைதான் இன்றைய வரையில் இந்நாட்டின் அரசியல் சட்டமாக உள் ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிலை மாறாமல் பார்ப்ப னர்கள் பார்த்துக்கொண்டார்கள். முகலாய ஆட்சியிலும் இந்து சட்டத்தை செயல்படுத்தினார்கள்.

இன்று நம் நாட்டில் செயலில் உள்ள இந்து சட்டம் மனு ஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்தவை என்று இந்து சட்டத்தை எழுதிய முல்லா கூறுகிறார். பக்கம் 36இல் “The Arthasastra was written when India was politically and administratively unified and there was consolidation of power in the hands of emperors whose writ ran in the whole country.”

அரசர்கள் அல்லது இருபிறப்பாளர் (பார்ப்பனர்)கள்தான் நீதிபதிகளாக இருக்கவேண்டும். அவர்கள் புனிதமான வேதத்தில் சொல்லப்பட்டவைகளை செயல்படுத்த வேண் டும். (பக்கம் 38 - Hindu Law By Mulla.) “Let the king  or  a member of twice Born caste affiliating as Chief Judge try causes acting on principles of equality or laey the doctrine of sacred cause.”

மனுவில் சொல்லப்படாதவை அல்லது அதற்கு மாறு பாடானவை எனப்படுபவை அரசரால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

புத்தமதக் கோட்பாடுகளின் தாக்கத்தின் காரணமாக மனுஸ்மிருதியில் சிறிது மாற்றியும், திருத்தியும் ஏற்பட்டதுதான் யாக்ஞவல்கியின் சட்டத்தொகுப்பு(Yajnavalkya) முதலாம் நூற்றாண்டு காலத்தில் சூத்திரர்களின் அந்தஸ்து குறித்தும், பெண்களின் சொத்துரிமை குறித்தும் விளக்கமாக வும், முறையாகவும் தொகுக்கப்பட்டது.

11 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் விக்னேஸ்வரா என்ற பார்ப்பனன் இந்து சட்டத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து இந்தியாவின் பல பாகங்களிலும் சட்டமாக மதிக்கப் பட்டு பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

(அ) பெனாரஸ் (ஆ) மிதிலா (இ) மகாராஷ்டிரா (ஈ) திராவிடா எனப்படும் இதற்கு மித்தாக்ஸ்காரா எனப்பெயர். வங்காளப் பகுதியில் தயாபாகா எனப்பெயர். இதன் அடிப் படையில் திராவிடம்-தமிழகம் உள்பட இந்தியா முழுமை யிலும் இந்து சட்டம்-மனுஸ்மிருதியின் மறுபதிப்பு நடை முறையில் செயல்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண் மைகள்.

17-ஆவது நூற்றாண்டில் யாக்ஞவல்கியாரின் சட்டத்துக்கு ஒரு விரிவுரையாக விராமித்ரோதயா எழுதியுள்ளார். முகலாயர்களின் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியப் பேரரசில் பார்ப்பனர்கள் தங்களுடைய வர்ணாஸ்ரமதர்ம-மனுஸ்மிரு தியை முற்றிலும் செயல்படுத்தினார்கள். “The Brahmin following the Maratha Chiefs into the newly Conquered Country naturally took their law a books with them” (Hindu Law-Mulla-Page-58). 12ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த தேவன்னாபட்டாவின் ஸ்மிருதிசந்திரிகா தென்னிந்தியா முழுவதிலும் செயல்பட்டது. விஜயநகரப் பேரரசின் ஆதரவில் இந்த சட்டப்பிரிவு செயலாக்கப்பட்டு அதனுடைய ஆட்சியில் முழுமையாக அமலாக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசில் தமிழ்நாடுமிருந்தது வரலாற்று உண்மை. பிறகு நாயக்கர், மராட்டியர்களின் ஆட்சியாலும் வடமொழியும், இந்து சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது அரசர்களால் நாயக்கர், மராட்டிய அரசர்கள் தமிழையே அழித்தனர் என்றால் மிகையாகாது.

இந்து சட்டம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்துக்கு எது உகுந்தது என நினைத்தார்களோ அதைச் சட்டமாக வகுத்தனர் பார்ப்பனர்களின் கற்பனையில் உருவானதே இந்து சட்டம், சமற்கிருத பார்ப்பனர்கள் எந்தவித சட்ட ஞானமுமில்லாமல் மனம் போன போக்கில் தங்கள் நன்மைக்கு எழுதியதே இந்து சட்டம் (பழமை சட்டம் பக்-64) என்று சர். ஹென்றி மெயின் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்டவுடன் இந்து சட்டம் பார்ப்பனர்களின் உதவியுடன் 1868 வரை செயல்படுத்தப் பட்டது. 1868இல் அந்த முறை ஒழிக்கப்பட்டதே ஒழிய மனுஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்த சட்டத்தைத் தான் வெள்ளைக்காரர்களும் செயல்படுத்தினர். “The Hindu law was first administered by the English Judges with the assistance of Hindu Pandits. The Institution of pandits as official referees of the Carts  was abolished in 1868” (Hindu Law by Mulla Page 77).

இன்றைய நடைமுறையில் உள்ள இந்து சட்டத்திற்கு ஆதாரம்: மனு அத்.11-12 வடமொழி வேதங்கள், ஸ்மிருதிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள் என்று இந்து சட்டம் கூறுகிறது. (பக்கம் 76, Hindu Law)

அதன் அடிப்படையில் இந்துக்கள் நான்கு ஜாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பிராமணர்-க்ஷத்திரியர்-வைசியர்-சூத்திரர், முதல் மூன்று வருணத்தாரும் இரு பிறப்பாளர்கள். இரண்டாவது பிறப்பு என்பது வேதம் படித்தல்-கல்வி கற்றல்-பூணூல் அணிதல் முதலியன. வேதக்கல்வி சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டது. திருமணம் தவிர வேறு எந்த சடங்குகளும் சூத்திரர்களுக்குக் கிடையாது. தமிழர்கள் அனைவரும் சூத்தி ரர்கள். இன்றைய வரையில் சூத்திரன் சந்நியாசி ஆகக்கூடாது என உச்ச நீதிமன்றம் 1980இல் தீர்ப்புக் கூறியுள்ளது.

- தொடரும்

- விடுதலை நாளேடு 13 2 20

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 47

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

4.2.2020 அன்றைய தொடர்ச்சி

20. பார்ப்பனரல்லாதவர் சமற்கிருதம் பயிலத் தடையெழுந்ததேன்? தேவ பாஷை என்ற போர்வையில் மத நம்பிக்கை மிகுந்த சூழலைப் பயன்படுத்தி சமூக ஏற்றம் பெற்ற வடமொழி, உலக வாழ்விற்கான பிற துறை நூல்களையும் தன்னகத்தே ஆக்கிக்கொண்டு கொழுத்தது. அத்தகு மொழியின் வழியே ஆன்மீக லவுகீக அறிவை தங்கள் முற்றுரிமை ஆக்கிக்கொள்ள முனைந்த பார்ப்பனர், மற்றவர்கள் சமற்கிருதம் பயிலக்கூடாது எனத் தடுத்தனர் ; அண்மைக்காலம் வரை வெற்றியும் கண்டனர்.

21.          ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் நிலை பெற்ற பின், ஆங்கிலத்தின் வழியே நவீன அறிவு தரப்பட்டது. முன்னேறிய புதிய உலக அறிவு ஆழ்ந்து விரிந்து நின்றது. அய்ரோப்பியர் வருகைவரை படிப்புத்துறையில் தனியுரி மையை நுகர்ந்ததால் ஏற்றம் பெற்றிருந்த பார்ப்பனர், ஆங்கிலேயருக்கு நிருவாகத்தில் துணைநின்று அவர் களுடைய ஆதரவைப் பெற்று அவர்களுடைய ஆட்சியிலும் தாங்களே புதிய அறிவுலக மேதைகளாக உயரவேண்டும் என்ற தன்னலப் போக்கில், சூத்திரப் பஞ்சமரை என்றும் படிக்காதவர்களாகவே வைத்திருக்கச் செய்த சூழ்ச்சிகளில் ஒன்று, கல்வித்துறையில் சமற்கிருதத்திற்குத் தனியான ஏற்ற நிலை பெற்றதாகும். மருத்துவக் கல்லூரியில் சேர சமற்கிருதம் பயில வேண்டும் என்ற விதியிருக்கும் ; ஆனால் அம்மொழியைப் பயிலச் சூத்திரப் பஞ்சமருக்கு வாய்ப்புகள் அரிதாகும்! தமிழ்ப் பண்டிதர் பட்டம் பெறு வதற்குக்கூட வடமொழி அறிவு தேவையென்ற விதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது! தமிழ் அறிஞர்களும் இனத்தலைவர்களும் போராடி, ஆங்கில ஆட்சியில் நியாயம் கோரி மேற்கண்டவை போன்ற அநியாய விதிகளைப் போக்கினர்.

22.          இந்துக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் தனி உரிமை வேதிய இரு பிறப்பாளருக்கே என்ற வருண தருமமும், அர்ச்சனை மொழியாகத் தெய்வ பாஷையாம் சமற்கிருதம் மட்டுமே இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கையும் நிலவும்வரை, தங்களுடைய சமுதாய மேலாண்மையைத் தக்க வைத்துக்கொண்டு அரசியல் பொருளாதாரத் தனியேற்றம் பெற முடியும் என்ற எண்ணம் பார்ப்பன வகுப்பாரின் பொது நடப்புகளின் அடிப்படையாக இன்னும் அமைகிறது. இதை மெய்ப்பிக்கும் போக்குகள் பலவற்றை அன்றாடம் நாம் காண்கிறோம். ஆயினும், இரண்டு எடுத்துக்காட்டுகள் சாலும் எனக்கருதி அவற்றை மட்டும் இங்குத் தருகிறோம்.

23.          திராவிடர் கழகம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியதைக்கண்டு, 27-06-1982 நாளிட்ட கல்கி வார இதழில் ஒரு கட்டுரை எழுதி, பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களை முறையின்றி கேலி செய்து, பார்ப் பனியம் எங்கும் இல்லை என்று முடிக்கிறார் ஆசிரியர் கி.இராஜேந்திரன். ஆனால் அதே இதழில், 1542 இல் ஸ்தாபிதம் என விளம்பரம் செய்துகொண்டு கும்ப கோணத்தில் உள்ள, ராஜா வேத காவிய பாடசாலை ஓர் அறிவிப்புத் தருகிறது ; உபநயனம் ஆன 7 வயதிற்கு மேற்படாத அந்தணச் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு ரிக், யஜூர், ஸாம வேத அத்யயனமும், காவ்யம், இங்கிலீஷ், தமிழ், கணிதம் முதலிய பாடங்களும் சொல்லி வைக்கிறோம். உபநயனம் செய்ய முடியாதவர்களுக்கு, இவ்விடமே உபநயனம் செய்விக்கிறோம். கோத்ரம், ஜூத்ரம், எந்த வேதம், உபநயனம் ஆகிவிட்டதா? முதலிய விவரங்கள் எழுதி விண்ணப்பித்துக் கொள்ளக் கோறுகிறோம். ( இந்த விளம்பரத்தில் கோறுகிறோம் என்பதில் வல்லின று அச்சுப்பிழையெனக் கொள்வோம். மகிழ்ச்சி தரும் திருமண அழைப்பிதழ்களின் முடிவில் கோருகிறோம் என்று முடிக்காமல், கொள்ளுகிறோம் எனும் பொருளில் கோறுகிறோம் என்று அச்சடிக்கிறவர்களும் இருக்கிறார்களே! என்று உடுமலை உயர் பள்ளித் தமிழ் ஆசிரியர் நயினார் முகமது அவர்கள் சொன்னது முப்பத்திரண்டு ஆண்டுகட்குப் பின்னும் நினைவிற்கு வருகிறது. ) இந்த விளம்பரத்தில் உபநயனம் எனும் சொல்லைத் தடித்த எழுத்தில் மூன்று இடங்களில் அச்சடித்துள்ளதன் உள்நோக்கத்தைப் பார்த்தால் வேதிய சமற்கிருத ஏந்துகளைக் கொண்டு வருண தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் வேகம் தெரியும். இந்த லட்சணத்தில் அய்யோ பாவம் பார்ப்பனியம் என்ற தலைப்பில் முன்னே குறிப்பிடப்பட்ட கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கெட்டிக்காரத்தனம்; வேறென்ன?

24.          இதே வகையில் 17-10-1984 இந்து ஆங்கில நாளேட்டில் கோவைப் பதிப்பில் ஓர் அறிக்கை. பள்ளி இல்லாத பின் நேரங்களில் உபாத்யாயம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வேதங்களும் சமற்கிருதமும் கற்றுத்தரப்படும் என்றும், உபநயனம் செய்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சிறீ காஞ்சி காமகோடி வித்யா மந்திர் டிரஸ்ட் அறிவிப்பு செய்திருக்கிறது. வேதமும் சமற்கிருதமும் உபநயனத்தோடு தனி நிலையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதில் மகந்துகள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், பிராமண சங்கங்கள் முதலியவை காட்டும் ஆர்வமும் தீவிரமும் சமுதாய சமனிய ஒற்றுமையை வேண்டுவோருக்கு வேதனை தருபவை அன்றோ?

25.          சமயச் சடங்குகள் மட்டுமின்றி, சமற்கிருதத்தை எங்கெல்லாம் நுழைக்க முடியுமோ அங்கெல்லாம் சதுர் வருணிய தருமத்தைப் புகுத்த வேதியர் தவறியதில்லை. இடைக்காலத்தில் தமிழோடு சமற்கிருதம் கலந்து புதிய நடையொன்று, இலக்கிய மரபொன்று பிறக்கிறது. இதைப்பற்றி பேராசிரியர் வி.டி. செல்வம், தமிழகம்-வரலாறும் பண்பாடும் எனும் நூலில் இப்படி எழுதுகிறார்:- "வடமொழி தென் மொழிகளின் அணுகல் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழ்மொழியில் வடசொற்கள் கலந்தன. புதிய தமிழ் நடை தோன்றியது. அதுவே மணிப்பிரவாள நடையாகும். அதற்குத் துணையாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நிகண்டு நூற்களின் காலமாக விளங்கியது. சேந்தன் திவாகரம், பிங்கலத்தை நிகண்டு போன்றவை தோன்றின. இவை இலக்கண வரைமுறைகளில் மாற்றம் காட்டின. இலக்கண நூல்களிலும் நால்வகை ஜாதிக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்." (பக்கம் 151) இத்தகு இலக்கியங்கள் உலவும் நாட்டில் சமூக நீதியும் சமனியமும் பெறுவது எப்படி?

26.          முறைசார் கல்விக்கான வாய்ப்புகளையும், முறைசாரா கல்விக்கான வாய்ப்புகளையும், இவ்வாறெல்லாம் சதுர்வருணிய தருமத்தின் வழியும், சமற்கிருத மயமாக்கத்தின் வழியும் தங்கள் முன்னுரிமை ஆக்கிக்கொண்டு பார்ப்பனியப் படிநிலை மேலாண்மைக்கு நல்ல பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள். தமிழாக இருந்து, காலப்போக்கில் நிலவழித் தொடர்பு பெருமளவு அருகிய காரணத்தால், வேறு வகையில் வளர்ந்து கன்னடம், தெலுங்கு என உருவாகியுள்ள மொழிகளில் இன்று பண்பாடு என்பதற்கான சொல் சமஸ்க்ருதி என்பதாகும்! ஆம்! தங்களுக்குச் சாதகமான பண்பாட்டு வலையை சமுதாயம் முழுமையும் அகல விரித்து மற்றவர்களை இறுக்கி வாழும் ருசி கண்ட வேதியப் பூனைகள், அறிவே ஆற்றல்(Knowledge is power)
என்ற உண்மையை விடாமல் பற்றி, நுணுக்கமான உளஇயல் தந்திரங்களைக் கையாண்டு நிருவாகப் பொருளாதாரக் கட்டுக்கோப்பைத் தங்களுடைய செல்வாக்கிலும், கட்டுப் பாட்டிலும் வைத்திருக்க இயலுகிறது. இந்த சூழலில் வாழும் சூத்திரப் பஞ்சமர்களில் பலர் தங்களுடைய சமுதாயம், பண்பாடு, கலை, மொழி போன்ற முன்னுரிமையை நிலைநாட்டி, உயரவேண்டும் என்ற துணிவு அற்றவர்களாக, மதத்தின் பேரால் தெரியாமை, புரியாமை, அறியாமை, தெளியாமை என்பனவற்றில் சிக்கி ஆமைபோல் அடங்கி வாழ்கிறார்கள். வேறு வழி அறியாதவர்களாய், தங்களைத் தாழ்த்தும் சமற்கிருத மயமாக்கப்பட்ட அமைப்பில், ஏதோ கிடைக்கின்ற மரியாதையையும், இடத்தையும் பெற முந்துகிறார்கள். பார்ப்பனர்கள் மெல்லிய பூணூல் போட்டுக்கொண்டால் மற்றவர்களும் வடக்கயிறு போல் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் திருநீறு இட்டுக்கொண் டால் இவர்கள் அதைப் பூசிக்கொள்கிறார்கள். அவர்கள் நாமம் போட்டுக்கொண்டால், இவர்கள் பட்டை நாமம் தீட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பிரம்மத்தோடு இணைத்துத் தங்களை பிராமணர் என அழைத்துக் கொண்டு, வேத முனிவர்களின் கால் வழியினர் எனக் கற்பித்துக் கொள் கிறார்கள். இவர்களும் தங்களுக்குச் சந்திர குல, சூரிய குல, தேவேந்திர குல மூலங்களையும், அருந்ததியர், விசுவகர் மாக்கள் பட்டங்களையும், தருகின்ற புராணக் கற்பிதங் களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உலகையே தாங்கிப் பிடிக்கக்கூடிய பாவனையில் அவர்கள் வேத மந்திரங்களை ஓத, அவற்றைப் புரியாமலேனும் கேட்டுக்கொண்டிருப்பது தங்களுக்குப் பெருமை தரும் என்றோ, உய்ய முடியும் என்றோ நினைத்து இந்தச் சூத்திரப் பஞ்சமர்கள் ஊமையராய் பவ்வியத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகு போலித்தனங்கள் போயொழியவேண்டும் என்பதற்காக தந்தை பெ ரியார் அறிவாயுதத்தை ஏந்தினார்கள். பொழுது புலர்கிறது ; பொய்மை இருள் விலகுகிறது ; மானுடம் வெல்கிறது!

-  பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

 -  விடுதலை நாளேடு, 6.2.20

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 48

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

சமுதாயம் என்றால் என்ன?

சமுதாயம் என்பது மனித இனம்தான் கூட்டு வாழ்க்கை வாழ்வதற்கென்று தன்னை ஒத்த மனிதர்களுடன் (உருவத் தில், மனநிலையில்) அமைத்துக்கொண்ட ஓர் அமைப்பாகும். தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஏற்ப ஏற்றுக் கொண்ட ஓர் அமைப்பாகும். எனவே, சமுதாயம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், அதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்ட ஆணைகள் அத்து ணையும் கொண்டது எனலாம்.

இவைகள் ஏற்பட மனித இனம் ஒரு மொழி, மக்கட் தொகை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்கின்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படி அமைகின்ற அமைப்பானது அந்தக் குழு மக்களுக்குரிய உரிமைகளை, உடைமைகளைக் காப்பாற்றக்கூடிய வலுவு டையதாகவுமிருக்க வேண்டும். எனவே, அந்தச் சமுதாயம், அந்த மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகள், தேவைகள், எண்ண ஓட்டங்கள் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

உலகில் பல சமுதாயங்கள் தோன்றுவதற்கும், மொழிகள் ஏற்படுவதற்கும் மேலே கூறியவைகள்தாம் காரணமாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

தமிழ்ச் சமுதாயம் மிகப் பழமையானதொரு சமுதாயமாக அறிஞர்களால் கருதப்படுகிறது.

பன்னெடுங்காலத்துக்கு முன் ஆஸ்திரேலியா, ஆப் பிரிக்க கண்டங்களை உள்ளிட்டு நில நடுக்கோட்டுப் பகுதி யில் நிலவிய இலமூரியா கண்டத்தின் ஓர் பகுதியாக, தென் னிந்தியா, தமிழகம் விளங்கியது.

ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திரா விடர்கள் வாழ்ந்தனர். அவர்களது பண்பாடு பரவி இருந்தது என்று பேரா. ஏ.சி. ஹாடன் கூறுகிறார்.

வரலாற்றில் உயர்வளமான சிந்து சமவெளி நாகரிகம்-திராவிட நாகரிகமென பல வரலாற்றுப் பேராசிரியர்கள் அறுதியிட்டுக் குறிப்பிடுகிறார்கள். எனவே, 5000 ஆண்டு களுக்குமுன் தமிழினம் சிந்து முதல் பஃறுளி ஆறுவரை பரவியிருந்த ஒரு தனி இனம் எனக்கொள்ளலாம். சிறப்பான நாகரிகத்தையும், செம்மொழியையும் பெற்றிருந்த ஓர் இனமாக தமிழினம் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் வட வேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் (தொல்-சிறப்புபாயிரம்) என்றும், 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த நன்னூல் காலத்தில் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கெல்லையின் எனக் குறுகியது. இன்று வேங்கடத்தையும் பறிகொடுத்துக் கூனிக்குறுகி வாழ்கின்ற நிலையிலுள்ளது.

ஆரியர்கள் (நடு) ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாக வடக்கிலேற்பட்ட படையெடுப்புகளின் காரண மாகத் தென்னகம் நோக்கி இடந்தேடியும், மன்னர்களின் ஆதரவைப் பெற்றும் தமிழகத்தில் குடும்பங் குடும்பமாக குடியேறினார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆரியர்கள் தமிழர்களுடன் போரிட்டதாக வரலாறில்லை. அவர்கள் ஊடுருவி, அடுத்துக்கெடுத்து, ஆரியக் கூத்தாடி அரசர்களை வீழச்செய்து, தங்களுக்கும் தங்கள் மொழிக்கும், கலாச்சா ரத்துக்கும் ஏற்றத்தைப் பெற்றார்கள். சமூகத்தில் பல மாறுதல் களைப் படிப்படியாக உண்டாக்கி உண்டு கொழுத்து வாழ்ந் தார்கள் - வாழ்கிறார்கள் என்பதும் வரலாறு மெய்ப்பிக்கும் பேருண்மை, கி.மு. 600க்குப் பிறகே வடநாட்டு ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும்.

சமணமும், பவுத்தமும், மூண்டெழும் காட்டுத் தீப்போல் தமிழகத்தில் பரவியதைக் கண்ட ஆரியப் பார்ப்பனர்கள் தம் வைதீக நெறியைத் தமிழகத்தில் பரப்ப வேண்டுமென தமிழகத்தில் நுழைந்தனர். அவர்களின் பெயரே அதைக் குறிப்பதாக உள்ளது. பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர் பிருகத்சரணர் என்பர். அதற்குப் பொருள் பெரும்பயணர் எனக்கொள்ளலாம். பெரும் பயணத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டில் குடியேறி யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழ்ந்த தமிழனை ஏமாற்றி ஏற்றங் கொண்டனர். ஏற்றங் கொண்டோர் இன்றுவரை புலிவேடம் போடுகிறார்கள்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? என ஆராய்வதுதான் இக் கட்டுரையின் நோக்கம். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகதப் பேரரசை ஆண்ட நந்தர்கள் தமிழகத்தின் மேல் படை யெடுத்தனர். பின்னர் மகதப் பேரரசைக் கைப்பற்றி மவுரியப் பேரரசு ஆட்சி புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஆரியப் பார்ப்பனர்களின் குடியேற்றமும், ஊடுருவலும் தொடர்ந்து ஏற்பட்டன எனலாம். இக்குடியேற்றம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நிகழ்ந்திருக்கலாம் எனப் பேராசிரியர் கே.எம். பணிக்கர் கருதுகிறார்.

மொழிக் கலப்புகள்; பண்பாட்டு ஊடுருவல்களால் பல தமிழ்ப் பெயர்கள் சிதைந்தும், மறைந்தும் போய்விட்டன. அவற்றுக்கேற்ப வடமொழிப் பெயர்களும், சொற்களும் வழங்கலாயின. அதன் விளைவாக ஆரிய நாகரிகம் தமிழகத் தில் வேரூன்றி பரவத் தொடங்கியது.

கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிவு கூட இல்லாத ஆரியர்களுக்கு அரசியல், சமூகவியல், பொருளியல், ஞான இயல் ஆகியவைகளில் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத் தையும் மறந்தான். தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான் என்று தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் 3-9-1939இல் குரல் எழுப் பினார்கள்.

தமிழ்நாட்டில் பலகாலமாக சமற்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் தேவ பாஷை எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம் சாத்திரம் ஆகி யவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும், பயன்படும் என்றுகாட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மை கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள். விடுதலை (15-2-1960)

திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுத்தி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்க ளுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும் படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகி விட்டது (விடுதலை 27-11-1948).

என தந்தை பெரியார் அவர்கள் வடமொழியின் கலப் பால், ஆரிய கலாச்சாரத்தின் கலப்பால் ஏற்பட்ட தீங்கினை நாட்டுக்கு எடுத்துரைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரியமாயையில் கூறு கிறார்கள்: ஒரு காலமிருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாக கருதியக் காலம், ஆரிய இனம் வேறு எனும் எண்ணம் மங்காதிருந்தக் காலம். ஆரியத்தைக் கேலிக்கூத்தாக கருதியக் காலம்.

இன்றோ ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை நடையுடை பாவனை, ஆசார அனுஷ்டானம், பூசை புனஸ்காரம் இருப் பதே தமிழருக்கு சீலத்தையும் சிலாக்கியத்தையும் தந்திடும் என்று தவறான கருத்து தழைத்துக் கிடக்கிறது. காலம் முளைக்கச் செய்த இந்தக்கள்ளி படர்ந்திருப்பதாலேயே நாச நச்சரவுகள் இங்கு நடமாடி தமிழர் சமுதாயத்தைத் தீண்டி தீய்த்து வருகின்றன.

பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரன் சரிந் ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும் ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு தெரிந்துகொள்ளவில்லை. ஆரியர்-திராவிட இனத் தினரிடையே கருத்திலே போதை மூண்டிட செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தைத் தாங்கும் சுமை தாங்கியானான், சோர்ந்தான், சுருண்டான். இந்த சூட்சுமத்தை அறியாதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

இந்தியாவில் ஆரிய ஆட்சி என்ற நூலில் ஹாவல் எழுதுகிறார். ஆரிய மதக் குழியிலே வீழ்ந்ததால், அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை திராவிடன் இழக்க வேண்டி நேரிட்டது.

தமிழ் முழக்கம் என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை எழுதுகிறார், (பக்கம் 75) திராவிடம் என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது. வட நூலாசிரி யரான குமாரியபட்டர் தம் காலத்தில் இக்குழுவில் திராவிடம், ஆந்திரம் என இரு பகுதிகளே இருந்தன எனக் குறிப்பர். கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் தம்முள் ஒத்து தமிழையே சார்ந்தும் நிற்கின்றன என்று காட்டுவார் கால்டுவெல்.

வகுப்பு பாராட்டாத தமிழரை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றிருந்த தமிழரை நான்கு வருணமாகப் பிரித்து அதில் நாலாயிரம் ஜாதியை உண்டாக்கி தமிழனை என்றென்றும் ஒன்றுபடாமல் செய்துவிட்டனர் ஆரிய பார்ப்பனர்கள்.

ஆரியர்கள் இலக்கியத்தில் நுழைந்து தங்கள் கொள்கை களைப் புகுத்திவிட்டனர். இடைக்கால நூலான கம்ப இராமா யணம் கொள்கையளவில் தமிழினத்திற்கு ஏற்புடையவை அல்ல. பார்ப்பனீயத்துக்கு கருவியாக பயன்பட்டிருக்கிறது. கவர்ச்சியான கவிதையில் ஆரிய நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. அவைகளால் வருணாசிரம தர்மங்கள் மூடப்பழக்க வழக்கங் கள் புகுத்தப்பட்டு தமிழின் தனித்தன்மைகள் அழிக்கப் பட்டன. எனவேதான் தந்தை பெரியார் கலாச்சார, பண்பாட்டு புரட்சிகளையெல்லாம் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தினார் கள்.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு உள்நாட்டு நாகரிகம் என்ப தில் சந்தேகமில்லை. அதன் வேர்களும், கிளைகளும் தென் னிந்தியாவில் காணப்படுகிறது. அது திராவிட நாகரிகமும், தென்னிந்திய கலாச்சாரமும் என்று பல அறிஞர்கள் கருது கின்றனர். (நேரு-இந்தியாவின் கண்டுபிடிப்பு-பக்கம்-72)

ஆரியர்கள் படையெடுப்பு சிந்து சமவெளி நாகரிகத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் நேர்ந்திருக்க வேண்டு மென்கிறார் நேரு இந்து என்ற சொல் பழமை இலக்கியங்களில் காணப்படவில்லை. (பக்கம்-74).

ஜாதி பாகுபாடுகள் ஆரியர்கள் திராவிடர்களிடையே கலப்பு ஏற்படாமலிருக்கச் செய்த செயல்பாட்டுத் திட்டம். (பக்-85)

இந்தியாவில் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கண்டுபிடித்த ஆயுதம்தான் ஜாதி. அதனால் அவர்கள் தங்களை பலம் பொருந்திய மேலாதிக்கக்காரர்களாக ஆக்கிக் கொண்டார்கள். (பக்-86)

மகாபாரதக் கதை வடபுலத்தில் ஆரியர்கள் இந்தியாவின் ஒற்றுமை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட முயற்சியே! அன் றைய நிலையில் ஆரியர்கள் விந்தியத்துக்கு வடக்கேதான் ஆதிக்கம் பெற்றிருந்தனர். இராமாயணம் ஆரியர்கள் விந்தி யத்துக்கு தெற்கேயும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய தைக் குறிப்பிடுவதுதான் (பக். 107)

மேலும் கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் எப்படி ஆரி யர்கள் திராவிடர்களிடையே ஊடுருவல் செய்தார்கள், இது ஓர் கலாச்சார அடிப்படையில் ஏற்பட்டதென்பதையும் குறிப் பிடுகிறது. அதில் சமூகத்தில் ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத் துவதையும் குறிப்பிட்டுள்ளது. (பக். 110)

ஜாதி பாகுபாடுகள் இந்திய சமூகத்தின் கழுத்தை நெரிக் கும் அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவிதி என்று சொன்னால் மிகையா காது. (பக். 121) அது இந்தியாவில் முன்னேற்றத்தைத் தடுத்து, தேக்க நிலையை உண்டாக்கியது.

குப்த பேரரசு பார்ப்பனர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை மய்யமாகக் கொண்டு இந்தியா முழுமையும் அரசோச்சியது. (பக்கம்-137)

மதத்தையும் ஆத்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அமைக்க அன்றைய பேரரசுகள் தீவிர மாக உழைத்தன. அவைகளை பார்ப்பனீயம் (Brahminism) எனலாம். அதனடிப்படையில் இந்து (Hinduism)  என்பது தேசியத்தின் (Nationalism) சின்னமாகிவிட்டது. (பக்-138)

அடிக்கடி வட இந்தியாவில் ஏற்பட்ட படை எடுப்புகளின் விளைவாக ஆரியர்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்து தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். (பக்-140)

எனவே இந்திய சமூக அமைப்பு ஜாதீய பாகுபாடுகளைக் கொண்ட அமைப்பாக பார்ப்பனர்கள் தங்களது சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் செய்துகொண்டார்கள். தாங்கள் அரசுகளில் நுழைந்து வடமொழியையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும் செயல்படுத்த அரசர்களை பணிய வைத்தார்கள் என்பது தேற்றம்.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டுமானால், அந்தச் சமுதாயத்தினுடைய மொழி அழிக்கப்பட வேண்டும். மொழியை அழிக்க சமுதா யத்தினுடைய பண்பாடுகள், நாகரிகம், கலை, பழக்கவழக் கங்கள் அழிக்கப்பட வேண்டும். அதை ஆரியப் பார்ப்ப னர்கள் செய்தார்களென்பதை நேருவின் கண்டுபிடிப்பு கருத் துகள் வலியுறுத்துகின்றன. தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் நிலை நாட்டப்பட்டது.

தொடரும்

- விடுதலை நாளேடு 11 2 20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமானை பாராட்டி தமிழர் தலைவர் உரை

வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் ஏழு முறை கேரளா சென்றார்

சமூகப் புரட்சி - அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாப் புரட்சியால்

வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது

முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்துப் பாராட்டு.

தஞ்சை,பிப்.28 வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் ஏழுமுறை கேரளா சென்றார். சமூகப் புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தா புரட்சியால் வைக்கம்  போராட்டம் வெற்றியடைந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருப்புக்கோட்டை து.கைலாசம் நினைவு டி.கே.சுப்ரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள் ளையன் பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக் கட்டளைகளின்  சார்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் ‘‘வைக்கம் பேராட்டம்'' நூலின் ஆசிரியர் பழ.அதியமான் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டமும் நடைபெற்றது. விழாவிற்குத் துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமை வகித்தார்.

‘‘வைக்கம் போராட்டம்'' நூல் சிறந்த நூலகத் தேர்வு செய்யப்பட்டு எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களுக்கு ரூபாய் 25,000/- பரிசு வழங்கி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

96 ஆண்டுகளுக்கு முன்பு....

நூல் ஆய்வாளர் பழ.அதியமானுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி சிறப்பு செய்தார்

வைக்கம் பேராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப்படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் பேராட்டம் நடைபெற்றது.  அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி,  ரத்தம் சிந்தாப் புரட்சி என்ற பெரு மைக்கு உரிய போராட்டம். போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் ஏழுமுறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண் டுள்ளார்.

கேரளாவில் 141 நாள்கள் தங்கி இருந்தார் என்றால் அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார். இரண்டுமுறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார்தான். மகத்தில் அண்ணல் அம்பேத்கர் போராட்டம் நடத்திட, வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டிருக்கிறது. பெரியாரின் அனுபவம் கொடுமையானது. பேசத் தடை, பிரவேசத் தடை, தங்குவதற்குத்தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, மற்றவர்களைவிட இருமடங்கு வேலை என துன்பங்களைக் சுமந்தவர் பெரியார்.

ஆய்வாளர் வேங்கடாசலபதி

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வுரையில். உண்மை  அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப் போகும் என்றார். காந்தியடிகள் திரும்பிய பின் முதல்முறையாக சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நடத்திய பேராட்டம் வைக்கம் போராட்டம் என்று குறிப்பிட்டார்.

எதிரிகளுக்கு எதிராக பேராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே பேராட்டம் நடத்தப்படுகின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாரயண குரு இந்து மதத்தைக் கேள்வி கேட்கவில்லை. சமூக மாற்றம் என்பது இருக்கக்கூடிய அதிகார கட்டமைப்புகளை நியா யப்படுத்தக்கூடிய சித்தாந்த கருத்தியல் கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்று வரை முற்போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படு கிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சினை சான்றாகும். ஆதிக்க சக்திகளின் எதிர்வினை பெரிய சவாலாக இருக்கிறது. பெரியார்தான் துணை நிற்கிறார் என்றார்.

வைக்கம் போராட்டம் என்றால்

சமுகநீதியின் அடையாளம்

நூலாசிரியர், எழுத்தாளர் பழ.அதியமான் தம் ஏற்புரை யில், படிக்கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர் எழுது வதற்கு, உழைப்பதற்கு சலிப்பதில்லை என்றார். மாணவர்கள் படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் அல்ல; வைக்கம் போராட்டம்தான். வைக்கம் போராட்டம் என்றால் சமுகநீதியின் அடையாளம் சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பதுபோல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தைகளுக்கு ‘‘வைக்கம்'' என்று பெயர் சூட்டியி ருக்கிறார்கள். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல; கோயிலைச்  சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமை கோரும் போராட்டம். இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் இல் லாத நிலையில் பெரியார் அழைக்கப்பட்டார். இவற்றை  எழுத ஆவணக் காப்பகமும், பத்திரிகைகளும் துணை புரிந் தன. மற்றத் தலைவர்களுக்குக் கடுங்காவல் தண்டனை கிடை யாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியும் கிடையாது. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் சொல்லவில்லை மற்றவர்கள் கூறிய பதிவுதான் பெருமைக்குரியது.

மாணவி பூந்தளிர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 28 2 20

வியாழன், 27 பிப்ரவரி, 2020

திருச்சி திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் - காப்பாளர்கள் - மாநிலப் பொறுப்பாளர்கள் - மண்டலக் கழகத் தலைவர்கள் - செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள் - செயலாளர்கள் - பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.

 விடுதலை நாளேடு 24 2 20

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்

திராவிடர் கழக மகளிரணி மாநில பொருளாளர்

அகிலா எழிலரசன்

திராவிடர் கழக பெரியார் சமூகக் காப்பு அணி

மாநில பொறுப்பாளர்

சோ.சுரேஷ்

திருவள்ளூர் மாவட்டம்

மாவட்ட தலைவர்:

ஆர்.கே.பேட்டை க.ஏ.மோகனவேலு

மாவட்ட செயலாளர்:

திருத்தணி கோ.கிருட்டினமூர்த்தி

அறந்தாங்கி மாவட்டம்

மாவட்ட தலைவர்: க.மாரிமுத்து

மாவட்ட செயலாளர்: கரம்பக்குடி க.முத்து

காப்பாளர்கள்

அறந்தாங்கி:

வல்லவாரி இரணியன், கீரமங்கலம் தங்கராசு

திருவள்ளூர்: பொதட்டூர்பேட்டை கணேசன்

பொதுக்குழு உறுப்பினர்கள்

அறந்தாங்கி :   த.சவுந்தரராஜன், குரும்பூண்டி சேகர்

திருவொற்றியூர் :  உமா செல்வராஜ், மணிவண்ணன்

திண்டுக்கல் :  இரா.நாராயணன்

தருமபுரி  :    கதிர்

திருப்பத்தூர் : மா.பன்னீர்செல்வம்,

ஜான்சிராணி ரவி

இராணிப்பேட்டை :  வேண்டா தீனதயாளன்

பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

ஈரோடு மாவட்டம்

மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு

மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன்

 

 

உண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கு உண்மையான இலக்கணம் என்ன?

திருச்சி பொதுக்குழுவில் கழகத் தலைவர் வகுத்த இலக்கணம்

திருச்சி, பிப்.23 திருச்சியில் கடந்த 21.2.2020 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தார். இதோ அவை:

தோழர்களே,

"நான் ஒரு உண்மையான பெரியார் தொண்டன்" என்று கூறுவீர்களானால்,

நீங்கள் எப்படிப்பட்ட தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும்; அல்லது இருக்க முயற்சிக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு நீங்களே சுயமாக கேள்வி கேட்டு விடை காண முயலுங்கள்.

'பதவி நாடாத பொதுத் தொண்டன்' என்று நீங்கள் கூறுவது முதல் பதில் என்றால், அது உலகறிந்த ஒன்றுதான்.

அதற்குமேலாக, பெரியாரின் துணிவை, தியாகத்தை, தன்னலமறுப்பை, சிறைவாசத்திற்கு அஞ்சாத பாய்ச்சலை அவரது வாழ்வின் பல பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பாடம் படியுங்கள்.

அவர் சொன்னவற்றில், நடந்துகாட்டிய பொதுவாழ்வில் புகழ் நாடா - முட்டாள்களாலும், மூர்த்தண்ய முரடர்களாலும், வஞ்சகர்களாலும், பக்குவமில்லாத பண்பற்றவர்களாலும் வர்ணிக் கப்படும் "கெட்ட பெயரை" எடுக்க - துணிந்து உண்மையைச் சொல்லி, நேரிய வழியில், லட்சியப் பாதையில் நடைபோடும்போது ஏற் படும் கெட்ட பெயரை எடுக்கத் துணிந்து நில்லுங்கள்.

அதன்மூலம் எதிர்ப்பை வெல்லுங்கள்!

இன்று, இயக்கப் பணி என்ன செய்தோம்? என்று படுக்கப் போகும்போது ஒரு மணித் துளியாவது சிந்தியுங்கள்!

எல்லோருடைய உழைப்பும், தொண்டும், ஒரே மாதிரி இருக்கவேண்டியதில்லை.

ஒவ்வொருவருக்குள்ள வாய்ப்பும், வசதியும், தியாகமும் நபருக்கு நபர் வேறுபடுவது இயல்பே. அதனால் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்!

நேரிடை உழைப்பைத் தர வாய்ப்பற்றவர்கள் - நிதி உதவி செய்யலாம்!

வாரத்திற்கு ஒரு 'விடுதலை', 'உண்மை ', 'மாடர்ன் ரேசனலிஸ்ட்', 'பெரியார் பிஞ்சு' சந்தா சேர்க்கலாம்!

மதவாதிகள் மாதந்தோறும் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் 10 விழுக்காடு அவரவர் மதத்திற்குத் தருவதுபோல, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் தேவைகளையெல்லாம் கணக்கிட்டு, ஒரு சிறு தொகையை 'பெரியார் பெருந்தகையாளர்' நிதியாகத் தரலாமே! என்ன தயக்கம்?

இளைஞர்கள், வாலிபர்கள், வேலை முடிந்த நேரங்களில் இயக்க நிகழ்ச்சிகளுக்குப் பொது மக்களிடம் சென்று துண்டேந்தலாமே!

நமக்காகவா 'பிச்சையெடுக்கிறோம்?' நன் கொடையே - அது ஒரு பிரச்சாரத் தொண்டு அல்லவா!

போராட்டம், சிறைச்சாலை என்று வருபவர் களுக்கு வெளியிலிருப்பவர்கள் தாங்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று "குற்ற உணர்வுடன்" எண்ணுபவரா நீங்கள்?

அப்படியானால், அபராதம்  உங்களுக்கு  - நீங்களே போட்டுக் கொள்ளலாமே! நம் கிளர்ச்சி யில் ஈடுபட்டு சிறை சென்றவர் குடும்பத்திற்கு உதவலாமே!

கூட்டம் நடத்த செயல் ஊக்கி'யாக இருக்க லாமே!

சந்தாக்களைச் சேர்த்து இயக்க ஏடுகளைப் பரப்பலாமே!

மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இயக்க நூல்களை - மலிவுப் பதிப்புகளை வாங்கி ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, மாண வர்களுக்குத் தந்து அவர்களைப் படிக்க வைத்து, அவர்களுக்கு மானமும், அறிவும் ஊட்டி, நல்ல மனிதர்களாக்கலாமே!

ஆங்காங்கு பயிற்சி வகுப்புகளை நடத்திட "எமது பங்களிப்பு இதோ" என்று அடக்கமாக அளித்து, ஆக்கப்பூர்வ பணி செய்யலாமே!

அதைவிட சிறப்பான பணி வேறு உண்டா?

தந்தை பெரியாரின் பக்கங்களை

புரட்டிப் புரட்டிப் படியுங்கள்!

* உண்மையைச் சொல்வதன் மூலம் 'கெட்ட பெயரை' எடுக்கத் தயங்காதீர் - துணிவு கொள்வீர்!

* உழைப்பைத் தர முடியாதவர்கள் நிதிஉதவி செய்யலாம்   -  பெரியார் பெருந் தகையாளர் பட்டி யலில் இணைத்துக் கொள்ளலாம்.

* வாரம் ஒரு முறை  இயக்க ஏடுகளுக்குச் சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபடலாம் - வாய்ப்புள் ளவர்கள் இயக்க நூல்களை வாங்கி இளைஞர்களுக்குத் தாருங்கள்.

* சிறை செல்ல முடியவில்லையா? சிறை சென்ற தோழர்களின் குடும்பங்களுக்கு உதவலாம்.

* உறங்கு முன் இன்று இயக்கப் பணி என்ன செய்தோம் என்று ஒரு மணித் துளியாவது சிந்தி யுங்கள் தோழர்களே!

- விடுதலை நாளேடு 23 2 20

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 50

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

13.2.2020 அன்றைய தொடர்ச்சி...

எனவே, வடமொழியில் பார்ப்பனரால் எழுதப்பட்ட வேத, ஸ்மிருதிகள் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 2300 ஆண்டுகளாகச் செயல்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம். கல்வி கற்றால் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும், வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி; மீறிக்கற்றால் சிரச்சேதம் செய்ய வேண்டுமென விதி செய்யப்பட்டு இராமாயணத்தில் சம்பூகவதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வடமொழியால் தமிழ் எந்த அளவு பாழ்படுத்தப்பட்டது என்பதை தந்தை பெரியார் பிறந்து, தமிழ் மொழி (இயல், இசை) போராட்டம் துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட திருமண அழைப்பிதழ்களே சான்று பகரும்.

ஸ்ரீ லக்ஷிமி வேங்கடேச பிரசன்னஹ விவாஹ சுப முஹூர்த்தப் பத்திரிகா.

மகா-ள-ள-ஸ்ரீ...................... அவர்களுக்கு உபயகுசேலபரி. நாளது வருஷம்......................................................தேதி ஆதித்தவாரம் ஸ்வாதி நக்ஷத்திரங் கூடிய சுபயோக சுபதினத்தில் ............................. மணிக்குமேல் ............................ உள் சிம்ஹ லக்கினத்தில் எனது ஜேஷ்ட குமாரத்தி சௌ...........................யை கிராமத்திலிருக்கும் மிராஸ்தார் மகா-ள-ள-ஸ்ரீ..................... கனிஷ்ட குமாரர் சிரஞ்சீவி..........................கன்னிகாதானஞ் செய்து கொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டு  சுப முஹூர்த்தம் எனது கிரஹத்தில் நடக் கிறபடியால் தாங்கள் இஷ்டமித்திர பந்து ஜன குடும்பேதராய் விஜயஞ்செய்து வதூரர்களை ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.

தங்கள் விதேயன் -

சமற்கிருதம் 75, தமிழ் வார்த்தைகள் 20 கொண்டதுதான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட இத் திருமண அழைப் பிதழ். இதற்கு மணிப் பிரவாளய நடை என்று பெயர். இன்றும் பார்ப்பன செய்தித்தாள்கள் இந்த நடையைத்தான் ஆங்கிலச் சொற்களும் சேர்த்துக் கையாளுகின்றன.

இன்றைக்கும் சங்கராச்சாரி தமிழை நீச பாஷை என்று தான் குறிப்பிடுகிறார். கோயில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்கிற விதிகளும் கர்ப்பகிரு ஹத்தில் பார்ப்பனன்தான் செல்லலாமென்கிற விதியும் உள்ளது.

இன்றும் சங்கராச்சாரியார் நடத்தும் மடங்களில், பள்ளிக ளில் சமற்கிருதம் தான் பயிற்றுவிக்கப்படுகிறது-பார்ப்பனப் பிள்ளைகளைத் தவிர சூத்திரப்பிள்ளைகளுக்கு அக்கல்விச் சாலையில் இடமில்லை என விதி ஏற்படுத்தியுள்ளனர். பார்ப்பான்தான் சங்கராச்சாரி ஆகலாம்.

பெரிய சீர்திருத்தக்காரர் எனப்படும் தமிழ்நாட்டு வைணவ சமயத் தலைவர் இராமானுசர் தாம் இயற்றிய நூலை வடமொழியிலேயே எழுதினார். 74 பார்ப்பனர் களையே குருமார்களாக்கிச் சென்றார். இன்றைய வரையிலும் பார்ப்பனர்கள்தாம் குருமார்களாகலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் விளைத்த குழப்பத்தாலும் பல்லவர்கள் படையெடுப்பாலும் தமிழகம் அல்லற்பட்டு நின்றது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் வேதக் கல்வியையும், சமற்கிருதக் கல்வியையும் இணைத்து சமயத்துக்கும் ஆட்சிக்கும் சமற் கிருதமொழி காஞ்சியில் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே    (குறுந். 40)

என்று வாழ்ந்த தமிழனை, அவனது கொள்கையை, கோட்பாடுகளை, பழக்க வழக்கங்களை கைநழுவ விட்டு, கோவலன் கண்ணகி இவ்விருவரின் பெற்றோரும் மண நிகழ்ச்சி காண மகிழ்ந்து மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி டத் தீவலம் வந்த காட்சியைச் சிலம்பில் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாதாபியைப் படையெடுத்து அங்கிருந்து கொணர்ந்த கணபதி இன்று எங்கும் நிறைநாதமாய், தெரு முனைகளில் எல்லாம் காட்சியளிக்கக் காண்கிறோம்.

மணவிழாவில் தாலி கட்டியதாகச் சங்க காலத்தில் சான்றுகள் கிடையா. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் தான் காணப்படுகிறது.

பார்ப்பனர் சிலப்பதிகார காலத்திலேயே ஏற்றம் பெற்றனர் என்பதற்கு கண்ணகி மதுரைமீது தீயை ஏவியபொழுது பார்ப்பனர்மீது செல்ல வேண்டாமெனக் கூறியதாகத்தானே உள்ளது. (சில. 21-53). சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அய்ம்பெருங்குழுவில் புரோகிதர் இடம் பெறுகின்றார்.

மேலும், தமிழகத்துச் சிந்தனையாளர்களாகிய சித்தர் களும் வெறுத்தனர், மறுத்தனர். நால்வருணம் ஆச்சிரமம் முதலாம் நலின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை வினை விளையாட்டே ஜாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம், சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம் என்றெல்லாம் கடிந்துள் ளனர். பார்ப்பனர்களுக்கு அரசு ஆதரவாக இருந்ததால் வெற்றிபெறவில்லை.

டாக்டர் கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் பண்பாடும் எனும் நூல் : பக்கம் 153இல் ஆரியரால் விளை விக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாலும், களப்பிரர்களால் நேர்ந்த அரசியல் புரட்சியினாலும் தமிழர் வாழ்வு சீர்குலைந் தது. அவர்களுடைய மொழிக்கும், நூல்களுக்கும், கலை களுக்கும், பண்பாட்டுக்கும் தீரா இன்னல்களும், இடையூறு களும் நேர்ந்தன. தமிழை வளர்த்த சங்கமும், தமிழ்க் கலை யும் அழிவதற்கு நெருக்கடி ஒன்று தோன்றிற்று என்கிறார். உதயேந்திரம் செப்பேடு-நந்திவர்மன் 108 பார்ப்பனர்களுக்கும் உதயசந்திர மங்கலம் என்கிற ஊரை நந்திவர்மனுடைய படைத் தலைவன் வடநாட்டிலிருந்து பார்ப்பனரைக் கொணர்ந்து குடியேற்றினான் என்று கூறுகிறது. அவர்களின் பெயர்களெல்லாம் வடமொழியில் உள்ளன.

கி.பி. 4-9ஆம் நூற்றாண்டு

தமிழகத்தில் வடமொழியும் ஆரிய சமயங்கள், தத்து வங்கள் ஆகியவையும் புராணங்களும் பெருமளவில் நுழைந்து தமிழர்களின் சமுதாய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன என வரலாறு கூறுகிறது. தமிழர்தம் பண்டைய பண்பாடுகளையும், அய்ந்திணை வாழ்வையும், இசையையும் மறந்து சங்க நூல்களில் காட்டிய அறத்தையும், வாழ்க்கை முறைகளையும் கைநழுவி விட்டனர். சமூகத்தில் குலப்பிரிவுகளும், பார்ப்பனீய மேம்பாடும், வடமொழியின் ஏற்றமும், தமிழ்மொழிக் கலப்படமும் தமிழரின் சமுதாயத்தில் தொடர்ந்து 500 ஆண்டுகள் துறைதோறும் ஏற்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

கடைக் கழகக் கால அளவிலேயே தமிழ் அரசர்கள் பலர் மானச்சூடு தணிந்தவர்களாய், பார்ப்பனர்க்கு அடிபணிந்து வணங்கி, மட முடவர்களாகவும் மத மடையர்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழ, பாண்டிய, பல்லவர் காலச் சமூக வாழ்க்கை காட்டுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில் (63ஆம் பாடல்) பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிந்திலையே என்று பாடி யுள்ள நிலையும், சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத் தான் என்னும் மன்னனை தாமரைபல் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவன் நின் முன்னோரெல்லாம் பார்ப்பனர் நோவனசெய்யலர் (புறம் 43) என்று குறித்தமையும் காண்க.

பாண்டியர்கள் தம் பெயருக்கு முன்னர் மாறவர்மன், ஜடாவர்மன் என்றும், சோழர் தம் பெயருக்கு முன்னர் ராஜகேசரி, பரகேசரி என்றும் பெயர் சூட்டிக்கொண்டு ஆரிய அடிமையாக அரசோச்சினர். யாகங்கள் செய்து பார்ப்பனர் களுக்குத் தானம் வழங்கினர். ஆரியர்களை தம் அரசவையில் ஆலோசகர்களாக, ராஜகுருவாக, புரோகிதர்களாக, மந்திரி களாக அமர்த்திக் கொண்டனர். வேத நெறி தவறாமல், மனு நீதி தவறாமல் அரசோச்சினார்கள் என்று பார்ப்பனர்களால் புகழப்பட்டார்கள். மனுநீதி என்றால் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பொருள்.

எனவே, ஆரியர்கள் நுழைவால் தமிழ்ச் சமுதாயம் சமற்கிருத மயமாக்கப்பட்டதோடல்லாமல் தன்னுடைய நாகரிகப் பண்பாட்டுகளையும் இழந்தது என்பதுதான் வரலாறு. இந்தியப் பாரம்பரியம் - மிஸீபீவீணீஸீ மிஸீலீமீக்ஷீவீtணீஸீநீமீ க்ஷிஷீறீ.மிமி-றிணீரீமீ 29இல் உள்ளதை ஆதாரமாக எடுத்துக் கூறுகிறேன்.

“Kautilya, the stern realist made no distinction between a dancer and a prostitute. The same rule apply to an actor, dancer ..................... that those who teach prostitutes, female slaves .................... and the art of attracting and captireating the minds of others shall be endowed with maintanence from the state.”

ஆண்டவன் பெயரால் ஆலயங்களை அமைத்து அங்கு கலையின் பெயரால் ஆடலழகிகள், பாடலழகிகளை கவர்ச்சிப் பொருளாக வைத்து மக்களின் மனதை கொள்ளை கொள்ளவும் கவர்ந்து ஈர்க்கவும் தேவதாசி முறையை கௌடில்யர் அரசு முறையாகக் கையாண்டார் எனக் கூறப்படுகிறது.

அதே வெளியீடு அதே புத்தகத்தில் முதல் பாகம் பக்கம் 3-இல் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் சமற்கிருதத்தையும், அதனுடைய பழமை, பழக்க வழக்கங்களும் காப்பாற்றப்பட வேண்டும்; இல்லை யேல் இந்தியாவின் ஒருமைப்பாடு சரிந்து வீழும் என்கிறது.

அதனால்தான் இன்றைய வரையில் பார்ப்பனீயம் தேசீயம் என்ற பெயராலும், தேசத்தின் ஒற்றுமை என்ற பெயராலும் வர்ணாஸ்ரம தர்மத்தையும் வடமொழி சமற்கிருதத்தையும் அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியின் ஆசியுடன் பிரிவு 25இல் புகுத்தி தமிழன் என்றென்றைக்கும் ஆரிய அடிமையாக வாழவேண்டும் என்று விதிகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல் தமிழன்-தமிழினம்-தமிழ் மொழி வாழமுடியாது என்பது உறுதி. 3000 ஆண்டு அடிமைத்தனத்தை ஓர் அறுபது ஆண்டுக்காலத்தில் ஆட்டங் காணச் செய்த தந்தை பெரியாரின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கை-கோட்பாடுகளை நிறைவேற்றி னால்தான் தமிழினம் மீளும்; இன்றேல் என்றைக்கும் அடி மைக்குழியில் நிலையாக வாழும்.

அரசியற் சிந்தனை மூன்றுடன் தொடர்புடையது. (1) மனிதனின் பண்புகள், செயல்கள், (2) புற உலகுடன் அவனது உறவு-வாழ்வின் பொருளாகவும் குறிக்கோளாகவும் அவன் கொள்வது, (3) இவ்விரண்டின் விளைவாகத் தோன்றுவதாகிய, மனிதன் பிற மனிதருடன் கொள்ளும் கூட்டுறவு. இவற்றுள் மூன்றாவது அரசின் ன்மை, நோக்கம், செயற்பாடு ஆகியன குதுப் பேசுவதாகும். ஏனெனில் மனதின் அவனது குறிக் கோள், அவனுடைய சமூகத் தொடர்புகள், செயற்பாடுகள் ஆகியன ஒன்றோடொன்று உறவுடையவை.

இக்கட்டுரை நிறைவு

-  விடுதலை நாளேடு 28 1 20

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!முரசொலி தலையங்கம்

'முரசொலி' தலையங்கம் [28.1.2020]

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!

1971-ஆம் ஆண்டு பெரியாரின் சேலம் மாநாடு தமிழ்நாட்டின் 'பெரு'மக்களாலும், ஏடுகளாலும் மறுமதிப்பு செய்யப்பட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன - மறுமதிப்புகள் ஒப்பாய்வுக்குரியன. ஒரு கனவானின் அந்த மாநாட்டு விமர்சனம் அத்தகைய தாய் இருந்தது. அதையொட்டி உத்திரமேரூர் அருகே பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம்? எவர் காரணம்? இதன் பின்புலம் என்ன என்று நாம் தெரியாதவர்கள் இல்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெரியாரைத் ‘தங்கத் தேரில் அறிவின் தேக்கம்' என்பார். அவர் ‘இடித்தாலும் வானம், எரிந்தாலும் மின்னல், அடித்தாலும் சூறை அனல்தான், பிடித்தாலும் குன்றான இவ்வீரன் குன்றான் - நிலைகுலையான்' என்றும் சொல்வார். பெரியார், வர்ணாசிரமத்தின் 5, 4 ஆம் படிகளுக்கான மக்களின் வழிகாட்டி, பஞ்சம, சூத்திர ஜாதிகளின் புருஷரில் உத்தமன் அவர்; அதாவது நமக்குப் புரு ஷோத்தமன்! நம் மக்கள், தொகையில் பெரும்பான் மையினராய் இருந்தும் மவுடீகிகளாய் இருக் கிறார்களே, என்று வருந்தியவர் அவர்.

பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பஞ்சம, சூத்திர மக்கள் உயர்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக அவர் அறிமுகம் இல்லாத மக்களுக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்; உயர்த்தியவர். ஓயாமல் அம்மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய் தவர். சொல்லடிகளுக்கு - கல்லடிகளுக்குக் கவலைப் படாதவர். தாக்குதல்களை ஏற்று இறுதி வரை - மரண பரியந்தம் வரை பொது வாழ்வைத் தொடர்ந்தவர்.

கடைசிக் கட்டத்தில் படுக்கையில் கிடந்த போதும் 'ஒரு நிகழ்ச்சிக்குத் தேதியைக் கொடுத்து விட்டேன், அதில் கலந்து கொண்டு விட்டு மருத்துவமனைக்கு திரும்பி விடுகிறேன்' என்று மருத்துவரிடம் அனுமதி கோரியவர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள் என வெள்ளைக்கார ஆளுநர் இருமுறை அழைத்தபோதும் மறுத்தவர். அதிகார ஆசை இல் லாதவர். அதிகாரத்தில் இருப்பவரை தம்வயப்படுத்தி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூக அமைப்பில் நாம் எங்கே சிக்கி இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர். நமக்கு வழங்கப்பட்ட இடத்தையும், அதற்குரிய உண்மையான பொருளையும் எடுத்துக் காட்டியவர். வெகுமக்களாக இருக்கிற நாம் - பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கிற நம் சக்தியை அறியாத ஆதிக்கவாதிகளுக்கு அதன் உன்னதத்தைத் தமது பரப்புரையின் மூலம் எடுத்தோதி திடுக்கிட வைத்தவர். ஒருகட்டத்தில் ‘வெளியேறு' என்று ஒரு பிரகடனத்தை முன்வைத்தவர்.

நமது எதிரிகள் எத்தகையவர்கள் என்பதை கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எடுத்துரைத்தவர். எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொண்டு எங்கள் இன மக்களைக் காப்பாற்றுங்கள் எனத் தீர்மானத்தின் மூலம் வெள்ளையனைக் கோரியவர். நமது சுதந்திரத்தை ஆதித்தாய் தீயை காப்பாற்றியது போல காக்க முயன்றவர். நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் - 'அவிசாரி' போயிருந்தால் உங்களுக்காகச் செய்து இருப்பேனே தவிர எனக்காக அல்ல என்று பகிரங்கமாக சொன்னவர்.

சமூகம் ஏற்றுக் கொண்ட முறைகளும், மரபுகளும் 'சமன்மைக்கு’ எதிராக உள்ளன, ஆகவே, அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை அழிக்க முற்பட்ட வர் தம்மை 'அழிவு வேலைக்காரன்' என்று தமது பொதுப்பணியை விமர்சனம் செய்தவர். வேத, உபநிடத, இதிகாச, புராண, இலக்கியங்கள் எதுவும் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். அதன் அறிவுரைகள் உண்மைக்கு மாறா னதாக - மனித குலத்திற்கு எதிராக இருக்குமானால் அவற்றை நிராகரியுங்கள் என்று அறிவைக் கொளுத்தியவர்.

பெரியார் தமது பரப்புரையின் போது இறுதியில் 'நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நான் சொல் வதைச் சீர்தூக்கி ஆராய்ந்துப் பாருங்கள், உண்மை இருப்பின் ஏற்று கொள்ளுங்கள்' என்றே சொன்னார். பெரியார் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மனிதராக இருந்தவர், அவருடைய எச்சங்களாகப் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றன. அவரின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள், பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால், அவரின் கொள் கைகளோ அல்லது அவரின் பணிகள் பற்றியோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.

ஏடுகளும், ஊடகங்களும், பேரிரைச்சல் இடு கின்றன. ஒரு குறிப்பிட்ட சாரார்கள் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரியார் கூறாததை, அவர் இயக்கம் செய்யாததைத் திரித்துச் சொல்கிறார்கள். அதற்குப் புதுப் பொருளைக் கற்பிக்கிறார்கள். வானமே இழந்து விழுமளவுக்கு அவர்கள் பேரொலி எழுப்பினாலும் நம் பக்கம் வெற்றி சங்கநாதம் ஊதப்படுகிறது. போர் முரசம் அதிருவது போல் பஞ்சம, சூத்திர மக்கள் மரித்தும் வாழும் அம்மானுடனுக்காக - அவரின் கொள்கைக்காக அணிவகுத்து நின்று விட்டார்கள்.

படை, இரண்டு அணிகளாக நிற்கின்றன. எள்ளும் பச்சையரிசியுமாக, பளிச் சென்றுத் தெரிகிறது. ஆக, ஒரு கனவான் இப்போது பெரியார் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசியதன் விளைவு - எவனோ ஒருவன் உத்திரமேரூர் பக்கம் பெரியாரின் சிலையை உடைத்துள்ளான். அதைச் சில மணி நேரங்களில் சரி செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தக் கனவான் முரசொலி ஏட்டையும் பேசினார். தி.மு.க.காரன் கையில் வைத்திருப்பான் முரசொலி ஏடு - என்று பேசினார். அடுத்து ‘அறிவாளி' வைத்திருக்கும் ஏடொன்றின் பெயரைச் சொன்னதன் விளைவு - முரசொலியை வைத்திருப்பவர் யார் என்று பொருள் ஆகிறது - அந்தக் கனவானின் பேச்சுப்படி! ஆகவே, 'திமிர் வாதக்காரர்களை' தோற்றுவிப்பதற்கு நமது எதிரி களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

நம்மை தஸ்யூக்கள், தாசர்கள், கருப்பர்கள், சூத்திரர்கள், அசுரர்கள் எனத் தொடங்கி 'திராவிடப் பொறுக்கிகள்' வரை ஏசி முடித்து இருக்கிறார்கள். அதாவது ‘இன' இழிவுப்படுத்தி இருந்தார்கள்; படுத்தியும் வருகிறார்கள். பின்னர் ‘ராட்சசர்கள்' வேறு; ‘அசுரர்கள்’ வேறு என்றார்கள். அசுரர்கள் ராட்சசர்கள் அல்ல என்றனர். அசுரர்கள் தேவர்களுக்குப் பகைவர் என்றனர். இவர்கள் இருவகை தேவர்களுக்கும் பகைவர்கள் என்றனர். அதே ஆட்டத்தை ‘அந்தக் காலத்திற்குப்’ பிறகு இந்தக் கனவான் மூலமாக நமது அரசியல் எதிரிகள் ‘இந்தக் காலத்தில்' மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்,

1971 - தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப் போது இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வரப் போகிறது, இப்போதும் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பி இருக்கிறார்கள். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது. நம் முன்னோர் வகுத்த சூத்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆட்சியாளர்கள்கூட கனவானை எதிர்க்கிறார்கள்.

நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் ஆசான்மார்கள் ‘அவர்களை'ப் பற்றி எல்லாவற்றை யும் நமக்குக் கற்பித்துச் சென்று இருக்கிறார்கள். முதன்முதலில் மான்கொம்பைக் கூர்தீட்டி எழுத்து களைப் பானை ஓட்டில் எழுதிய இனம் - நம் இனம்! சிந்து முதல் வைகையை தாண்டி ஏழ்பனை நாடு களும் நம் நாடுகளாக இருந்தவை. இந்தப் பரம் பரையில் வந்தவன் முரசொலிதான் வைத்திருப்பான்; அது அவனின் வெற்றி வேற்கை! (வேல் +கை),

பெரியாரும், அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை; ஏனெனில் ‘சநாதனம்' இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்! முரசொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- விடுதலை நாளேடு 28 120

சனி, 15 பிப்ரவரி, 2020

இப்ப முடியுமா?

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன ஆர்எஸ்எஸ் சங்கிகள். தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?
2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?
4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?
6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?
7) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?
8) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?
13) முன்பு ஆர்எஸ்எஸ் தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு என்று அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே! இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?
14) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?
15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
17) முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே! இன்று அதுபோல் வரி போட முடியுமா?
18) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?
19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?
21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
24) இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
25) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?
26) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?
27) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?
28) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?
29) அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?
30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?
31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?
32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?
33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?
34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?
35 இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது நீங்கள்தான் என்பது திண்ணம்! பெரியார் பெரும்படை அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

- பகிரி வழியாக

பட்டிணப் பிரவேசம் நிறுத்தம்!

https://youtu.be/UHL70cvyMhc

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா? அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா?

 நேயன்

ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர், அம்பேத்கர் இந்திய கலாச்சார ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்.

இது அந்தப் பித்தலாட்டப் பேர்வழியின் நான்காவது கண்டுபிடிப்பு (சிண்டுமுடிப்பு)

முதலில் இவர் இந்தியக் கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவாரா?

இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்: இந்தியாவை இனவழியாக, மொழிவழியாகப் பிரிப்பதை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர் அம்பேத்கர். ஆன்மிகக் கலாச்சார அடிப்படையில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் என்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு பொய்ச் செய்தியை _ புரட்டுச் செய்தியை இம்மோசடிப் பேர்வழி கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் அம்பேத்கர் கூறியது என்ன?

“நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால் நாம் பெரிய மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதியினராகப் பிரிந்துபோன மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. நாம் உண்மையில் ஒரு தேசியத்தை விரும்பினால் இவை அனைத்தையும் வென்றாக வேண்டும். (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல், பாகம்_13, பக்கம்_127)

இந்து இராஷ்டிரம் என்று ஒன்று அமைந்தால் அது இந்த நாட்டின் மிகப் பெரிய சோகமாக அமையும் என்கிறார். இந்துமதம் --_ விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கு -_ பெரும் இடராகத்தான் இருக்கும்; கேடாகத்தானிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவிற்கென்று ஒரு பொதுவான கலாச்சாரமே இல்லாத நிலையில், இந்துக் கலாச்சாரத்தை அம்பேத்கர் ஆழமாக நேசித்தார் என்பது அசல் பித்தலாட்டம் அல்லவா?

இந்தியாவில் தமிழருக்கு ஒரு பண்பாடு, ஆரியருக்கு ஒரு பண்பாடு, சீக்கியருக்கு ஒரு பண்பாடு, மராட்டியருக்கு, குஜராத்தியருக்கு, வங்காளிக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சாரம். இஸ்லாமியருக்கு ஒரு கலாச்சாரம், கிறிஸ்துவர்களுக்கு ஒரு கலாச்சாரம், சமணர்களுக்கு வேறு கலாச்சாரம், பவுத்தர்களுக்கு மாறுபட்ட கலாச்சாரம்.

உண்மை நிலை இப்படியிருக்க, இந்திய கலாச்சார ஒற்றுமையில் அம்பேத்கர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அயோக்கியத்தனமா? இல்லையா? மேலே சொன்னதுபோல பல கலாச்சாரம் இருக்கையில் இந்துக் கலாச்சாரம் என்பது எது?

இந்துக் கலாச்சாரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் ஆண்களையும், பெண்களையும் ஒன்றுகூட்டி புத்த மதத்திற்கு எப்படி மாறியிருப்பார்? -_ மாற்றியிருப்பார்? பொய்ப் பிரச்சாரமே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அடிப்படை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?

இந்த மதமாற்றத்தில் இணைந்த 3 இலட்சம் பேரும் பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்லர்; இந்துமதக் கேட்டை அறிந்ததால் வந்தவர்கள்.

ஆனால், அன்றைக்கு இந்துத்துவாவாதிகளும், காஞ்சி சங்கராச்சாரியும் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டார் ரூபாய் 9 கோடி செலவிட்டதாக வதந்தி பரப்பி அம்பேத்கரைக் கேவலப்படுத்தினர். இதை அண்ணா அவர்கள் 21.10.1956 ‘திராவிட நாடு’ ஏட்டில் விளக்கியுள்ளார்.

இந்துமதக் கேட்டைச் சகிக்க முடியாமல் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, அநியாயத்தைப் பொறுக்க முடியாமல், இழிவு நீக்கிக் கொள்ள அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பிரிந்து புத்த மதத்தை ஏற்றார்.

இதே காரணத்திற்காகத்தான் பெரியார் திராவிட நாடு கேட்டார். கடைசியில் தமிழ்நாடு தமிழருக்கு வேண்டும் என்று கேட்டார்.

ஆக, அம்பேத்கர் நோக்கமும், பெரியார் நோக்கமும் ஒன்றுதானே? இதில் என்ன வேறுபாடு?

மதமாற்றத்தைத் தீர்வாக அம்பேத்கர் எண்ணினார்; தனிநாடு தீர்வாக பெரியார் எண்ணினார். ஆனால், இருவரும் வெறுத்தது இந்து மதக் கொடுமையை, இழிவை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைத்தானே! கொள்கையில் ஒன்றாய் இருந்து பாதையில் வேறு. இதில் என்ன முரண்பாடு உள்ளது?

எல்லாவற்றையும்விட ஒரு முதன்மையான கருத்தை இங்கு நாம் அறிந்தோம் என்றால், இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எப்படிப்பட்ட திரிபு பேர்வழி, திசைதிருப்பும் பேர்வழி, அயோக்கிய சிகாமணி என்பதைத் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.

அது என்ன முதன்மையான கருத்து?

அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறுகிறாரே... உண்மை என்ன தெரியுமா?

பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ரீதியாக ஆரிய பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என்று ஒவ்வொன்றும் தனக்கென தனிப் பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்கிறார் அம்பேத்கர்.

(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_3, பக்கம்_267)

இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்று அம்பேத்கரே ஆணித்தரமாக அறிவித்துவிட்ட பின் அவர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்பது அயோக்கியத்தனமா? _ இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்!

தந்தை பெரியார் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார். அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறும் கூற்று மிகவும் தவறானது.

1953ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பேத்கர்,

“இந்த மண்ணில் பூர்விகக் குடிகளின் (மண்ணின் மக்களின்) கருத்துகளை மதிக்கும் வகையில் மாநில அரசமைப்பு இருக்க வேண்டும். மொழி உணர்வைவிட ஜாதி உணர்வு உயர்ஜாதியினரிடம் அதிகம் இருப்பதால், மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும்’’ என்று ஆந்திர மாநிலச் சிக்கல் பற்றிப் பேசுகையில் கூறினார்.

ஆக, அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாய் நேசித்தார் என்பதும் பொய்; மொழிவாரி மாநிலத்தை எதிர்த்தார் என்பதும் பொய். இந்தப் பொய்க் கூற்றின் அடிப்படையில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முரண்பாடு இருந்தது என்பதும் மோசடி என்று தெளிவாய் விளங்கும்!

ஆக, இருவரும் மொழிவாரி மாநிலம் வேண்டும் என்றனர். பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கம் வைத்தார். பின்னர் அதைக் கைவிட்டு எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை என்றார். இதில் என்ன தேச விரோதம் உள்ளது? எல்லாம் மக்கள் நலனுக்காகத்தானே!

- உண்மை இதழ், 16-31.8.19

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

91 ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதை இயக்கப் பணி... -ஒரு சான்று

நன்றி: தகவல்: கோவை ராமச்சந்திரன்

94 வயது பெரியார் பெருந்தொண்டர்

 - விடுதலை ஞாயிறு மலர் 25 1 20

உச்சநீதிமன்ற தீர்ப்பில் பெரியார்

மண்டல் குழுத் தொடர்பாக உச்சநீதிமன்றம் 16.11.92 அன்று ஒரு தீர்ப்பை அளித்தது. அத்தீர்ப்பில் நீதிபதி திரு எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு பகுதி.

in fact this is the realisation of the dream of BHARAT RATNA Dr. BR Ambedkar, of the great Periyar Ramaswamy and Dr. Ram Manohar Lohia.

- விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

சனி, 8 பிப்ரவரி, 2020

சேலம் சுயமரியாதை சங்க வழக்கில் வெற்றி: படிப்பகம் - நூலகம் - ஆய்வகம் தொடங்கப்படும்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சேலம், ஜன.25  சேலம் சுயமரியாதை சங்க வழக்கில், இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த இடத்தில்  படிப்பகம், நூலகம், ஆய்வகம் தொடங்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் நேற்று (24.1.2020) செய்தியாளர் களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

செவ்வாய்ப்பேட்டை -

சுயமரியாதைச் சங்கம்

பத்திரிகையாளர்களுடைய சந்திப்பின் முக்கிய நோக்கம்,  உங்களில் சிலருக்கு நினை விருக்கும், புதிதாக வந்துள்ளவர்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பில்லை. சேலம் சுய மரியாதை சங்கம் என்று தந்தை பெரியார் அவர்கள் காப்பாளராக இருந்து, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்ப்பேட்டையில் நடைபெற்ற சுயமரியாதை சங்கம் - மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஒரு சங்கத்தோடு சேர்த்து, திட்டமிட்டே அதை தாங்கள் இணைத்துக் கொள்கிறோம் என்று அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது நடைபெற்றது ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு. அதற்குப் பிறகு அவர்கள் யாரையும்பற்றி கவலைப் படாமல், வழக்கைப்பற்றி கவலைப்படாமல், அங்கே கடைகளை கட்டுகிறோம் என்ற நிலையை ஏற்படுத்தினர். அந்த இடம் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு உரிய ஒன்றாகும் அது.

சென்னை உயர்நீதிமன்றத்தின்

தெளிவான தீர்ப்பு

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைப்பு செல்லாது என்று, தெளிவாக அரசாங்கப் பதிவுத் துறை யிலேயே ஒரு உத்தரவை வாங்கி, சேலம் சுயமரியாதை சங்கம் என்பதை மீண்டும் புதுப்பித்து, அவர்களுடைய எண்ணப்படி, தெளிவாக அதற்கான அளவிற்கு ஆன முயற்சிகளை எடுத்து, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இங்கே நடத்திக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில்,  அந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய் தார்கள். அந்த  மேல்முறையீடு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அந்த சொத்து என்பது, பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனம் - சேலம் சுயமரியாதை சங்கத்திற்குத்தான் உரியது என்பதை மிகத் தெளிவாக சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருக்கிறது.

அந்தத் தீர்ப்பின்படி, எங்களுடைய வழக்குரைஞர் கள், பொறுப்பாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். கழகத் தோழர்கள், அதனுடைய உறுப்பினர்கள், தனி அமைப்பு அது.

ஆகவே, சேலம் சுயமரியாதை சங்கம் என்பது,  அது தெளிவாகவே இன்றைக்கு எங்களது பொறுப்பிலே வருகிறது என்பதை உங்களுக்குத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆய்வகம் - படிப்பகம்- நூலகம்

அங்கே புதிய வாசக சாலை, நூலகம், ஆய்வகம் மற்றவை வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எங்களுடைய பொறுப்புக்கு வந்தவுடன், சேலத்தில் ஒரு சிறந்த அளவிற்கு, திராவிட இயக்கத்தைப்பற்றியும், சமூக மாற்றங்களைப்பற்றியும் இருக்கக்கூடிய ஆய்வுகளை செய்யக்கூடிய ஒரு ஆய்வகமாகவும், படிப்பகமாகவும், பெரிய நூலகமாகவும் அதை உருவாக்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது என்பதை எல்லோருக்கும் தெரிவிப்ப தற்காகத்தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு.

ஏற்கெனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய் தோம். மூத்த செய்தியாளர்கள் இருந்தால், அவர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். நீங்கள் இங்கே வந்ததற்கு மகிழ்ச்சி, புத்தாண்டு வாழ்த்துகள்.

நீட்: சட்ட விரோதமான ஒரு சட்டம்

நீட் தேர்வு என்பது நம்முடைய பிள்ளைகளை யெல்லாம் மருத்துவப் படிப்பிற்கு லாயக்கற்றவர்களாக ஆக்கக் கூடிய மிகப்பெரிய ஒரு கேடான ஏற்பாடாகும். அது அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் விரோதமாக இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் அனிதாக்களும், சுபசிறீக்கள் உள்பட இதுவரை 8 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள் ளனர். அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில், கார்ப்ப ரேட்டுகள், கோச்சிங் சென்டர் பயிற்சி மய்யங்களை நடத்துகிறோம் என்று சொல்லி, கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்கிறோம் என்று கொண்டு வந்த நீட் தேர்வில், தேர்வு எழுதச் சென்ற பிள்ளைகளை உடல் பரிசோதனைகளையெல்லாம் செய்து, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளான சூழ்நிலையை ஏற்படுத்தி னார்கள்.

நீட் தேர்வில் ஊழல்கள் மலிந்திருக்கின்றன

இப்பொழுது நீதிமன்றங்களில் வந்த வழக்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆள்மாறாட்டம் செய்து, வேறொரு நபர் நீட் தேர்வை எழுதக்கூடிய அளவிற்கு, அங்கே அவ்வளவு ஊழல்கள் மலிந்திருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

எனவே, ஊழலை ஒழிக்கிறோம், தனியார் ஆதிக்கம் இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லி இவர்கள் ‘நீட்' தேர்வை கொண்டு வந்தார்களோ, அதற்கு மாறாக எந்த ‘நீட்' தேர்வில் ஊழல்கள் மலிந்திருக்கின்றன. கிராமப் பிள்ளைகள் மருத்துவப் படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை.

பிளஸ் டூ என்று சொல்லக்கூடிய மாநில கல்வி யைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல், அந்த மதிப் பெண்களை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட் டோம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

மத்திய கல்விக் கொள்கை என்ற ஒன்றை, புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே புகுத்திக் கொண் டிருக்கிறார்கள். அந்தப் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பே, மாநில அரசு ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியாக இருந்துகொண்டு, அமல்படுத்தவேண்டும் என்ற அளவிலே இறங்கியிருக்கிறார்கள்.

5 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு - இப்படி பொதுத் தேர்வு, பொதுத் தேர்வு என்று மாணவர்களை மன அழுத்தத்திற்கு உண்டாக்குகிறார்கள்.

குலக்கல்வியினுடைய மறு வடிவம் -

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!

கிராமப்புறத்தில் உள்ளவர்கள் ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளை சேர்ப்பதே கடினம். இதில் இடைநிற்றல் என்று சொல்லக்கூடிய ‘டிராப்அவுட்' ஏராளமாகும். நம்முடைய பிள்ளைகளின் கல்வியில் மண்ணைப் போட்டு, மீண்டும் பழைய குலக்கல்வி எப்படி கிராமப்புறத்தில் நம்முடைய பிள்ளைகளை படிக்க முடியாமல், ராஜகோபாலாச்சாரியார் ஆட்சி காலத்தில் ஆக்கிற்றோ, அந்தக் குலக்கல்வியினுடைய மறு வடிவமாக இருக்கிறது - மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது. அது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகத்தான் வருகிறது.

மீண்டும் நம்முடைய பிள்ளைகள் ஒரு இருண்ட காலத்திற்குப் போகக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து

தொடர் பிச்சாரப் பெரும் பயணம்!

எனவேதான், இவற்றை எதிர்த்தும், நீட் தேர்வை எதிர்த்தும் கன்னியாகுமரியில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய பயணம், ஒவ்வொரு இடங்களாகத் தொடர்ந்து, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில் பட்டி, சாத்தூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, இன்று சேலம் - ஆத்தூர், கள்ளக்குறிச்சி என்று வரிசையாகத் தொடர்ந்து 30 ஆம் தேதி இந்தப் பயணம் திருத்தணி - சென்னையில் முடிவடைகிறது.

‘நீட்' தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஜாதி, மத, கட்சிகளைக் கடந்தது. நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம், இருண்ட காலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதனைத் தடுப்பதற்கு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதுதான் இந்தப் பயணப் பிரச்சாரத் திட்டம். இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது.

‘நீட்' தேர்வு மூன்றாண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டபொழுது, படித்த சில பேர் என்ன நினைத் தார்கள் என்றால், ‘‘ஊழலை ஒழித்து ஒரு நல்ல திட்டம்'' என்று மேலெழுந்தவாரியாக நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அது எந்த அளவிற்கு, யாருக்கு, எந்த உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள்.

ஆகவேதான், இந்தப் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் செய்கிறது. அதற்காக சேலம் வழியாக செல்லக் கூடிய நிலையில், ஏற்கெனவே சேலம் சுயமரியாதை சங்க வழக்கில், இயக்கம் பெற்ற வெற்றியையும் உங்களுக்குச் சொல்லி, அதே நேரத்தில், இந்தப் பயணத் தைப்பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் இந்த சந்திப்பு.

மாநில அரசின் அதிகாரத்தைத் தொடர்ந்து பறித்துக் கொண்டு வருகிறது மத்திய அரசு

செய்தியாளர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது; ஆனால், அந்தத் திட்டத்தை செயல் படுத்துவதற்காக மத்திய அரசு முனைகிறதே?

தமிழர் தலைவர்: மத்திய அரசின் பிடிவாதம் மாநில அரசுகளுடைய உரிமைகளைப் பறிப்பது என்பது மட்டுமல்ல, ஒரு பக்கத்தில் விவசாயிகளுக்குப் புது வாழ்வை கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டு, எல்லா வகையிலும் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கிற கார்ப்பரேட் அரசு. ஒரு பக்கத்தில் உயர்ஜாதி அரசு, இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட் அரசு.

இதுவரையில் பல மாநில அரசுகள் அதனை ஆட் சேபிக்கின்றன. அந்த வகையிலேதான், மாநில அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறது. மாநில அரசினுடைய அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனை கிறது.

யார் வேண்டுமானால் உள்ளே நுழையலாம் என்று சொல்லக்கூடிய வகையில், மாநில அரசின் அதிகாரத் தைத் தொடர்ந்து பறித்துக் கொண்டு வருகிறது மத்திய அரசு.

தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று சொல்லுகிறார். கடிதம் எழுதினால் பயன்படாது; அதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு ஓர் அவசர சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்!

நம்முடைய கைகளில் அதிகாரம் இருக்கும்பொழுது ஏன் பயப்படவேண்டும்? மாநில அரசிற்கு உரிமை இருக்கிறது; அதனை நிலைநாட்டவேண்டும். மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை - அத்துறை அமைச்சரும் இருக்கிறார்.

எங்களுடைய சுற்றுச்சூழல் துறையில் அனுமதி வாங்காமல் உள்ளே நுழையக்கூடாது என்று அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டாமா? அப்படி செய்தால், அதுதான் சரியானது.

ஆகவேதான், தமிழக ஆளுங்கட்சியினர் இரட்டை வேடம் போடுகிறார்கள்; எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கொண்டுவருகிறோம் என்று அறிவித்து, அதனால் விவசாயிகள் பட்டபாடு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எட்டு வழிச்சாலை விவசாயிகளுக்கு நல்லது என்று இவர்கள் சொன்னதை, உச்சநீதிமன்றம் ஓங்கி அவர்களுடைய தலையில் குட்டிய பிறகுதானே நிறுத் தினார்கள். இன்னமும் அந்த முயற்சியை கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறார்கள்.

எனவே, விவசாய விரோதமான, தமிழகத்தையே பாலைவனமாக்கக் கூடிய அந்த முயற்சிகளை வன்மை யாகக் கண்டிப்பது என்பது விவசாயிகளின் நலனைப் பொருத்தது.

தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது. அதற்காக மாநில அரசே அதனைத் தடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு தனி சட்டத்தை - அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை!

செய்தியாளர்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையே இல்லை, தமிழகம் சிறப்பாக செயல் படுகிறது என்று முதலமைச்சர் சொல்கிறாரே?

தமிழர் தலைவர்: தமிழகத்தில் காவல்துறை அதி காரிக்கே பாதுகாப்பில்லை. நேற்று உயர்நீதிமன்றம்கூட என்ன சொல்லியிருக்கிறது? காவல்துறையில் இருப்பவர் களுக்குத் துப்பாக்கிக் கொடுங்கள் என்று அறிவுறுத்தி யிருக்கிறது.

ஆனால், பா.ஜ.க.வில் ஒருவர் சேர்ந்தவுடன், அவ ருக்குப் பக்கத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர் நிற்கிறார். அவருக்கு என்னவோ மிரட்டல் இருக்கிறது, தேசப் பிதாவிற்கு அடுத்தபடியாக அவர்தான் என்று சொல்கிற அளவிற்கு.

ஆகவே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கே தெளிவாகத் தெரியும். அவர் சொல்வது ஒரு கேலிக்கூத்து. எத்தனையோ நகைச்சுவைகள் இருக்கிறது, அதில் இதுவும் ஒன்று.

நீதிமன்றத்தில் சந்திப்போம்!

செய்தியாளர்: ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொல்லியிருப்பதுபற்றி....?

தமிழர் தலைவர்: அதுபற்றி எவ்வளவோ சொல்லியாயிற்று. ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், நீதிமன் றத்தில் சந்திப்போம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.

- விடுதலை நாளேடு 25 1 20

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 46

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

30.1.2020 அன்றைய தொடர்ச்சி

14.         சங்கப் பாடல்கள் பல்வேறு காலங்களில் இயற்றப் பட்டவை. அவற்றின் தொடக்கக் காலம் தெரியவில்லை; கி.மு. இரண்டாயிரம் ஆகக்கூட இருக்கலாம்; ஆனால் அவை இன்றைய வடிவில் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்பது நடுநிலை ஆய்வர் கருத்து. அப்பொழுதே வேதியக் கருத்துகளும் நடப்புகளும் தமிழகத்தில் நுழைந்திருந்தன, அறிமுகமாயிருந்தன. இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறம் 6) என்றும், பார்ப்பார்க் கல்லது பணிபு அறிய லையே (பதிற்றுப்பத்து 63) என்றும் அரசனே பணி புரியும் நிலைக்கு மறை ஓதிகள் உயர்ந்துவிட்டனர். (இங்கு சொல்லப் படும் பார்ப்பனர் தமிழரே என்றும், மறைகள் தமிழில் இருந்தவையென்றும் கூறுவார் உண்டு.) வேள்விகள் செய்து வெற்றியும் பெருமையும் பெறவேண்டும் என்ற ஆசை தமிழ் மன்னர்களைப் பற்றிக்கொண்டதால், அறுதொழில் அந்தணர் அறம் புரிந்தெடுத்த தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397) சுட்டப்படுவதையும், பெருநற்கிள்ளி எனும் சோழன் ராச சூயம் வேட்டனன் என்றும், முதுகுடுமிப் பெருவழுதி எனும் பாண்டியன் பல்யாகச்சாலை என்றும் சிறப்பு முன் அடைகள் பெறுவதையும், புரையில் நற்பனுவல் நால் வேதத்து அருஞ்சீர்த்தி (புறம் 15) பேசப்படுவதையும் காண்கிறோம்.

15.         வேதங்களும், வேள்விகளும் பார்ப்பனர்களும் மேல்மட்டச் செல்வாக்குப் பெற்றபின்பு, அச்செல்வாக்குக் கீழ் மட்டம் வரை பரவுவது அல்லது விரவுவது இயல்புதானே! வேதியச் செல்வாக்கு என்றால் கூடவே சமற்கிருத மொழியும் செல்வாக்குப் பெறுகிறது எனப்பொருள். மரபு வழியாகச் சமற்கிருதம் கற்ற பார்ப்பனர்கள் ஒலி நுணுக்கம் சற்றும் சிதையாமல் வேத மந்திரங்களை ஓதினாற்றான், அவற்றிற் குரிய பயன் கிட்டும் என்பது இந்து மதத்தினரால் இன்றும் வற்புறுத்தப்படுகிறது. இதன் விளைவு என்ன? செல்வாக்கான இடங்களில் தமிழ் தள்ளப்படுகிறது ; வடமொழி வரவேற்கப் படுகிறது. செல்வாக்குள்ள மேல் மட்டத்தாருக்கு வளவாய்ப்பு கள் இருப்பதால், அவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள், போற்றிய வடமொழி வளர்வதற்கான ஏந்துகள் ( வசதிகள் ) பெருகின.

16. தென்னவருக்குரிய நாட்டில் வடவாரிய மொழி செல்வாக்குப் பெறுவதால் ஏற்படும் சமுதாயத் தீங்கை உணர்த்த அறிஞர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர் களில் ஒருவரே இளங்கோவடிகள்! முடியுடை மூவேந்தர்கள் ஆண்ட தமிழரின் மண்ணை முழுவதும் இணைத்துக் காட்டி யதோடு, அவர்களின் முந்தைய நிலமான இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன் தமிழ் நில மங்கைக்கு கோயில் எழுப்பியதைப் பெருமையோடு குறிப்பிடும் கவிஞர், தென்புலத்தில் மட்டுமன்றி வடபுலத்திலும் தமிழ் பழிக்கப்படு வதை அனுமதிப்பது இனவீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும் என அறிந்த காரணத்தால், அவ்வாறு செய்த கனக-விசயர் மீது படையெடுத்து வென்ற செய்தியைச் சிறப்பித்துப் பாடினார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த களப்பிரர் தாக்குதலைத் தொடர்ந்து, தென்மொழியும் பண்பாடும் ஏற்றத்தை இழந்து, தமிழின உணர்வு மங்குவதற்கு முன் அக்காலத்தில் அஃது இறுதியாக ஒளி வீசியதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இருப்பினும், மொழி இன உணர்களை உள்ளடக்கியும், ஆரிய வடமொழி ஆதிக்கம் குறித்து மறைமுகமாக எச்சரித்தும் காவியம் இயற் றிய சேரனின் இளவல், நால்வேத நடைமுறைகள் செல்வாக் குப் பெறுவதைத் தடுக்கவேண்டும் என சுட்டிக்காட்டத் தவறிவிட்டார் என்பது வருந்தத்தக்கதே! அறிஞரும் பாவ லரும் இவ்வாறு குறைபட நடந்துகொண்ட காரணத்தாலும் பிற காரணங்களாலும் வருண தருமப் பரவலுக்கான சமற்கிருத மயமாக்கம், பல்லவர் காலத்திலும் விசய நகர, நாயக்க பாளையக்கார மற்றும் பிற குறுநில மன்னர் ஆட்சியிலும் செழித்தோங்கி நின்றது.

17.         சமற்கிருத மயமாக்கத்தின் மிகப் பெருங்கொடுமை தமிழ் புறக்கணிக்கப்பட்டதும், தமிழினத்தாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதும் ஆகும். தமிழக வரலாறு மக்களும் பண் பாடும் எனும் நூலில் பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம்பற்றி டாக்டர் கே.கே. பிள்ளை இவ்வாறு எழுதுகிறார்: உழைப் பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்க செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவை யாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும் தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வமிசங்களை யும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் ஜாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதையே தம் சீரிய கடமை எனக் கூறும் மெய்கீர்த்தி களைப் புனைந்துகொண்டனர். ஆரியப் பழக்க வழக்கத்தைப் பாராட்டிக்கூறும் சாஸ்திரங்களும், புராணங்களும் எழுந்தன. அவற்றைப் பிராமணர் பயில்வதற்கென அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர். (பக்கம் 318) மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணருக்கு மட்டும் வடமொழிப் பயிற்சியை அளித்து வந்தன. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றிவரவில்லை. அப்பள்ளிகளில்  புராணங்கள், இதிகாசங்கள், சிவதருமம், சோமசித்தாந்தாத்தம், இராமதனுச பாடியம், பிரபாகரின் மீமாம்மிசை, வியாகரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங்களையே பிராமணர்கள் புராணங்களில் பயின்று வந்தனர். (பக்கம் 320)

18. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போன்ற மன்னர்களும், சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பதுபோன்ற கருத்தைப் புலவர்களும், பொருட்பாலில் இறைமாட்சி எனும் முதல் அதிகாரத்தை அடுத்து நான்கு அதிகாரங்களில் கல்வியறிவின் தேவையை வலியுறுத்திய அறநெறியாளர் வள்ளுவரும் பிறந்த நாட்டில், அந்த மண்ணுக்குரிய மக்களுக்கே கல்வியை மறுக்கும் வேதனைக் காலமும் இடையில் வந்தது விந்தையே!

19.         முறைசார் (formal) கல்விக்கான வாயில்கள் சூத்திர பஞ்சமனுக்கு அடைபட்டன எனில், முறைசாரா (non-formal) கல்விக்கான வாய்ப்புகளேனும் இருந்தனவா எனக் காணவேண்டும். களப்பிரருக்குப்பின் பல்லவர் தொடங்கி அய்ரோப்பியர் ஆட்சி வரை  இடைப்பட்டது இந்திய வரலாற்றில் ஒரு நம்பிக்கைக் காலம் (age of faith) ஆகும். மதவழிச் சாத்திர சம்பிரதாய சடங்குகளுக்கான மந்திரங்கள், தோத்திரங்கள் முதலியன போற்றப்பட்டன. வடமொழி தேவபாஷை எனப் போற்றப்பட்டது. பிற, நீசபாஷை அல்லது பைசா மொழி என ஒதுக்கப்பட்டன. இறைவழிபாடு, சமயத் தேவைகள் ஆகியவற்றின் வழியே முதலிடத்தைப்பற்றிக் கொண்ட பின்பு, பிற துறைகளிலும் வடமொழியே வளம் சேர்க்கும் வாய்ப்புக்கள் பெற்றது. சிற்பம், ஓவியம், கட்டிடக் கலை, கணிதம், வானநூல், மருத்துவம் முதலியத் துறைகளில் கிட்டத்தட்ட அனைத்து நூல்களையும் சமற்கிருதத்திலேயே ஆக்கும் ஏற்பாடுகள் இருந்தன. வெகு மக்களின் மொழி புறக்கணிக்கப்பட்டது. மேற்கூறிய துறைகளில் உழைப்பவர்கள் தமிழர்கள், அந்தத் துறைகளின் அறிவைத் தருபவர்கள் வடமொழியாளர்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. சூத்திரத் தமிழர்கள் வருணதருமப்படி, சமற்கிருத சாத்திரங்களைக் கற்கக்கூடாது. ஆகையால், தாங்களாகவே அறிவைப் பெருக்கிக் கொள் ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம், இராமாயணம், பாரதம் என்பனவற்றுடன் இரு குரங்கின் கையொடித்து சாறுபிழியும் மருத்துவ இரகசியம், மாட்டுவாகடம், மனையடி சாத்திரம் என்ற வகையில் தமிழ் நொண்டி நடை போட்டது. (இரு குரங்கின் கை, முசுமுசுக்கை) உழைக்கும் மக்களின் மொழியில் அறம், ஆன்மீகம், அறிவு, பொருள், கலை தொடர்பாக நூல்கள் பெருகுவதற்கான வாய்ப்பைத் தரக்கூடிய ஆட்சியாளர்கள் வடமொழி வேதி யர் வயப்பட்டுவிட்டதால், சூத்திரப் பஞ்சமரின் மொழிகள் வளம் பெற்று வளருவது தடைப்பட்டது. ஆட்சியாளர் ஆதரவு பெற்றுச் செழித்துக் கொழுத்த சமற்கிருதத்தைக் கற்க சூத்திர பஞ்சமருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்நிலை அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. பத்தொன் பதாம் நூற்றாண்டில் மராத்தியத்தில் சதாரா பகுதியை ஆண்ட அரசர் பார்ப்பன எதிர்ப்புக்கு அஞ்சி இரவு நேரங்களில் பயில வேண்டியிருந்தது. ஆம், அரசருக்கே அப்படியொரு நிலை! மலையாள மொழியின் இணையற்ற மறுமலர்ச்சிப் பாவலர் குமாரன் ஆசான். இந்துமத தர்மத்தின்படி ஆளப்பட்ட திருவாங்கூரில் சமற்கிருதம் கற்க அனுமதிக்கப்படவில்லை; பெங்களூர் சென்று அவர் பயின்ற பள்ளியில் அவர் ஒருவரே பார்ப்பனர் அல்லாதவர்; பல இடர்களுக்கு இடையே பயின்ற அவரைத் தேர்வு எழுத வேதியர் கூட்டம் அனுமதிக்கவில்லை; சமற்கிருதத் தேர்வெழுதாமலேயே பெங்களூரை விட்டு வெளியேறினார். மாமேதை டாக்டர் அம்பேத்கர் உயர் நிலைப்பள்ளியில் சமற்கிருதம் படிக்க அனுமதிக்கப்படவில்லை; மாற்றாக பாரசீக மொழி பயின்றார்!

தொடரும்

- விடுதலை நாளேடு 4 2 20

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தமிழில் வழிபாடு செய்தால் கடவுள் தீட்டாகுமாம்!



25.12.1980 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது சீரிய தலைமையில் நடைபெற்ற தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டில் நான் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினேன். திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் வழிபாட்டு மாநாடு மக்கள் கடல்போல் காட்சியளித்தது.
இந்த மாநாடு புதுமையாகவும் புரட்சியாகவும் இருக்கிறது. இந்த மேடையிலே உருவத்திலே பலர் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்.

கடவுள் மறுப்பாளர்களாகிய திராவிடர் கழகத்தினர் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டை நடத்தலாமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். திராவிடர் கழகம் ஒரு மனிதாபிமான இயக்கம். அந்த அடிப்படையிலே தந்தை பெரியார் அவர்கள் இதே மேடையிலே  நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் 06.12.1962லே அவர்களே எழுதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். தமிழர்களை முன்னிட்டு கருவறைக்குள் செல்லும் உரிமையும் பூசாரிகளாகும் உரிமையும் தமிழ், அர்ச்சனை உரிமையும் வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதற்கான கிளர்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தினார்கள்.

தென்காசியிலே உள்ள சிவன்கோயிலிலே, தேவார வழிபாட்டை முடித்த பிறகுதான் விபூதி பிரசாதம் வழங்க வேண்டும் என்று அப்போது அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த பார்ப்பனர்கள் கிளர்ச்சிச் செய்தி 21.11.1926 ‘குடிஅரசு’லே வெளியிடப்பட்டுள்ளது. அதே இதழிலே ‘இதுகூட வகுப்பு துவேஷமா?’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு துணைத் தலையங்கம் எழுதியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுற்றுப் பயணமும் மேற்கொண்டார்கள்.

1926ஆம் ஆண்டிலே கோயிலுக்குள் தமிழை எதிர்த்தவர்கள் இந்த 1980லும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே தமிழர், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தின் சார்பில் மனமாற வரவேற்கிறோம் என்று கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.

வழிபாட்டு உரிமை மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் பேசுகையில் தமிழர் சமுதாயம் இன்னும் சொரனையற்று இருப்பதால்தான் உரிமைகளை இழக்க நேரிட்டது என்றார். ஏற்கனவே கோயில்களில் நடைமுறைக்கு வந்துவிட்ட, தமிழ் வழிபாட்டு உரிமையை தமிழர்கள் காப்பாற்றிக் கொள்ளாததால் இப்போது

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம்’’ ஏறிவிட்டது என்று குறிப்பிட்டார். அவர் மனித உரிமைகள் மதிக்கப்படுகிற நிலைக்கு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழன் கோயிலிலே தமிழ் மறுக்கப்படுவது கேவலமான நிலையாகும் என்றார்.

வழிபாடு என்பது கடவுளுக்காக அல்ல; மனிதன் தன்னையே உயர்த்திக் கொள்வதற்காக செழுமைப்படுத்திக் கொள்வதற்காக என்று குறிப்பிட்டார். அவர் தனக்காக மனிதன் செய்யும் வழிபாட்டை தனது மொழியிலே செய்வதுதான் சரியாகும் என்றார்.

மாநாட்டில் பங்கேற்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பேசுகையில், தமிழில் வழிபாடு இல்லாத கோயிலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன உணர்ச்சிப் பிழம்பாக முத்தமிழ்க் காவலர் ஆற்றிய உரை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

இனிப் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என்றும் செயல்திட்டத்தில் இறங்கியாக வேண்டும் என்றும் தாய்மொழி உரிமைக்காக தனது உயிரையே அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாகவும் கி.ஆ.பெ. கூறினார்.

பெரியார் இல்லை என்ற துணிவில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்த வந்திருப்பது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று மிரட்டுவதும் பார்ப்பன சமுதாயத்துக்குத்தான் கேட்டை உண்டாக்கும் என அவர் எச்சரித்தார்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றால் படுத்திருக்கும் பாம்பு படமெடுத்-தாடினால் என்னவாகும் என்பதைத் சிந்திக்க வேண்டாமா என்று அவர் கேட்டார்.

தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு தமிழ் தெரியவில்லை என்றால், தமினுக்கும் அந்த சாமிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று  கேட்டார். தமிழ்நாட்டிலே 13,200 கோயில்கள்  இருந்தும், இங்குள்ள தமிழன் இந்தச் சாமிக்குச் சக்தி இல்லை என்று திருப்பதிக்கும், கேரளாவிற்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேட்டார்.

பெரியார் தொண்டர்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாத அகிம்சைவாதிகள். இதில் காந்தியின் தொண்டர்களைவிட பெரியார் தொண்டர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு அத்தகைய தொண்டர்களை வன்முறைக்கு அழைக்கிறார்களா என்று கேட்டார்.

தமிழில் வழிபாடு இல்லாத கோயில்களைப் புறக்கணியுங்கள். வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்களே நேராகச் சென்று தமிழ் பக்திப் பாடல்களைப் பாடிவிட்டுத் திரும்புங்கள். கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று கேட்டுக்கொண்டார்.

மேலவைத் துணைத் தலைவர் புலமைப்பித்தன் பேசுகையில், தந்தை பெரியார் இல்லையே என்ற கவலையைவிட நன்றியுணர்வும் சிந்தனையும் இல்லாத இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தில் வந்து பிறந்தாரே என்பதுதான் என் கவலை.

‘இந்து’ப் பத்திரிகையில் எவனோ ஒரு ‘மாட்டுக்குப் பிறந்த மகன்’, ‘தமிழ், வழிபாட்டு மொழியானால் கோவில் தீட்டுப்பட்டுவிடும்’ என்று எழுதியிருக்கிறான்.
‘பார்ப்பான்’ என்று சொல்லக் கூடாது என்கிறான். இவன் பாட்டன் பாரதிகூட பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று ‘பார்ப்பான்’ என்றுதானே பாடியுள்ளான்.

‘பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே
பார்ப்பான் தின்னப் பார்ப்பான்’

என்று எச்சரித்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

“திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் என்ற ஊரில்’’ ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நாத்திகர்கள் கோருவது எவ்வாறு பொருந்தும் என்று முதல்வர் கேட்டார்’’ (‘தினமணி’ _ 26.12.1980, பக்கம் 3இல்) என்று ‘தினமணி’ச் செய்தி கூறுகிறது.

“கோயில் வேண்டாம் என்பது கொள்கை’’ கோயில்கள் இருக்கும்வரை, அதில் கருவறைவரை சென்று பூசை செய்திடும் உரிமை ஒரு ஜாதிக்கு மட்டும் இருக்கக் கூடாது. “அனைத்து ஜாதியினருக்கும் ஜாதி வேறுபாடு இன்றி, கிடைக்க வேண்டிய உரிமை’’ என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினோம்.
- 'அய்யாவின் அடிச்சுவட்டில் 'கட்டுரையின் ஒரு பகுதி
-ஆசிரியர் கி.வீரமணி

- உண்மை இதழ் 16-30.6.2017

சனி, 1 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 45

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

1.            உரிமை வாழ்வே வாழ்வு; உரிமை வேட்கை மனிதனுக்கு இருக்கும் தனி இயல்பு; உரிமை விழைவின் விளைவு சமனியச் சமுதாயம்; நாணயம் ஒன்றின் இரு வேறு பக்கங்களைப் போல், உரிமையும் சமனியமும் ஒரு நிலையின் இரு அடிப்படைக் கூறுகள். உரிமையை வேண்டாதவர் சமனியத்தைப் பெறுவதில்லை; சமனியம் அற்ற இடத்தில் உரிமை நிலைப்பதில்லை.

2.            இயக்கம் உலக இயல்பு. இயக்கத்திற்குத் தக ஏற்படும் சமுதாய மாற்றத்திற்கு ஈடுகொடுப்பவர்களே சமனிய உரிமை வாழ்வைப் பெற முடியும்; மற்றவர்கள் பின்தங்கி விடுவர். முற்போக்கான மாற்றத்தை மேற்கொள்ள அறிவுத் தெளிவும் அதற்கான கல்வியும் தேவை.

3.            நாகரிக வாழ்வில் நாளும் மேன்மையடைய, உடலையும் உள்ளத்தையும் வளர்க்க வேண்டியிருப்பதால், அவ்வளர்ச்சிக்கு ஆதாரத் துணையாகும் கல்வியைப் போற்றிப் பெறவேண்டியது, இன்றியமையாதது ஆகிறது. கல்வியும் அறிவும் பெறாதவர்கள் மாறுதலுக்குத் தக முன்னேறாமல் பின்தங்கிவிடுகிறார்கள். பின்தங்கித் தேங்கியவர்களை, முன்னேறியவர்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் முடிகிறது. இதனால் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஏற்றம் பெற்றவர்கள் தாழ்ந்துவிட்டவர்களின் உரிமையைப் பறித்து சுரண்டுகிறார்கள். இதன் விளைவு என்ன? ஜெனிவாவில் பிறந்து பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சு நாட்டில் வாழ்ந்த அறிஞன் ரூசோ சொன்னதுபோல், கட்டற்றதாகப் பிறப்பெடுத்த மனித இனம் இப்பொழுது எங்கும் கட்டுண்டு கிடக்கிறது. தன்னுடைய சமுதாய ஒப்பந்தம் எனும் நூலில் இக்கருத்தைக் கூறும் ரூசோ, இதற்குத் தீர்வு காணக் கல்வியின் தேவையை அறிந்த காரணத்தினாலோ என்னவோ, ஆய்மீல் (Emile) எனும் நூலில் புதுமைக் கல்வித் திட்டம் ஒன்றை 1762இல் வகுத்தளித்தான்.

4.            உரிமை, சமனியம், இயக்கம், மாற்றம், முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி எனும் வகையில் சுழலும் மனித வாழ்வில் அச்சாணியாக அமைவது கல்வி. ஏனென்றால் உரிமை முதலான அனைத்திற்கும் விளக்கம் தரும் அறிவு அதனால் பெறப்படுகிறது. இவ்வளவு முகாமையான கல்வியைப் பேணும் இனம் வாழும், உயரும்; பேணாத சமுதாயம் வீழும்; தாழும்! கடந்த சுமார் ஆயிரத்து அய்நூறு ஆண்டுகட்கு மேலாகத் தமிழர் தமக்குரிய கல்வியைத் துறந்ததால், இழந்ததால் வீழ்ச்சியுற்றனர். அப்படி அவர்கள் கல்வியைத் துறந்தது ஏன் எனும் வினாவிற்கு விடை காண, சமற்கிருத மயமாக்கம் எனும் போக்கினைத் தெரிவது பயன் தரும்.

5.            சமற்கிருத மயமாக்கம் எக்காலத்தில், ஏன் நிகழ்ந்தது? தமிழாக்கத்தைப் பொறுத்தவரை சங்க காலத்தில் சிறிதே தலைகாட்டிய சமற்கிருத மயமாக்கம், களப்பிரர் இடையீட்டிற்குப்பின், பல்லவர் காலம் முதல் அய்ரோப்பியர் ஆட்சி தொடங்கும் வரை மெல்ல மெல்லப் பரந்த அளவிலும் ஆழமான முறையிலும் இங்கு கால்கொள்ள முற்பட்டது. செல்வாக்கோடு நிலவியும் வந்தது. அய்ரோப்பிய - ஆங்கிலேய புதிய கல்வி நிருவாக சமூக அமைப்பின் தாக்கத்தாலும், இந்நாட்டில் தோன்றிய மறுமலர்ச்சி, தன்மானப் பகுத்தறிவு இயக்கங்களாலும் அதன் பிடி மெல்லத் தளர்ந்து வருகிறது. இன்னும் மறைந்து வரவில்லை.

6. ஆரியர், இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழும் இடத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறையும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் அடிப்படையில் சமூக அமைப்பும் பகுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆரியர் வருகைக்குப்பின், வருண தருமத்தின் அடிப்படையில் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடுகள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. ஆரிய, திராவிடர் இடையே நாளடைவில், குருதிக்கலப்பு ஏற்பட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் அனுபவித்தவர்கள், பார்ப்பன ( பிராமண ) மேலாண்மையின் கீழ் அமைந்த ஜாதி ஏற்பாட்டின் மேல்-கீழ் படிநிலைகளை விட்டுவிடாமல் உறுதியாக நிலைப்படுத்துவதற்கான சமய, சமூக, அரசியல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்கள். சமற்கிருத மயமாக்கம் என்பது இந்த ஏற்பாடுகளின் ஒரு வடிவமே ஆகும்.

7. சமூகவியல் அறிஞர் எம்.என். சீனிவாசன் அவர்கள், சமற்கிருத மயமாக்கம் என்னும் பொருள்படும் Sanskritization என்னும் சொல்லை ஆக்கினார் என்பர். அவர் எப்பொருளில் அச்சொல்லை பயன்படுத்தியிருப்பினும், சமற்கிருத மய மாக்கம் எனும் சொற்றொடரை இக்கட்டுரையில் பயன் படுத்தும் பொருளை வரையறை செய்தல் முறையாகும். பண்டிதப் பார்ப்பனச் சிறுபான்மையர்கள் மதம், சாத்திரம், சடங்கு, பழக்க வழக்கம், கலை, இலக்கியம் போன்றவற்றைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களின் மனங்களை நல்ல கல்வி அறிவு பெறாத, தெளிவற்ற மயக்க நிலையில் நிறுத்தி, அவர்களை என்றும் பாமரர்களாகவே வைத்து, சூத்திர பஞ்சமராகத் தாழ்த்தி, ஆட்சியாளரின் வலிமையைத் துணை கொண்டு, சமூகப் பொருளாதார மேலாண்மையை நிலைப் படுத்திக்கொள்ள உதவும் ஒரு பண்பாட்டு ஏற்பாடுதான் சமற்கிருத மயமாக்கம் ஆகும்.

8.            சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் ( A particular frame -work) முகம் ஒன்றாகச் சமற்கிருத மயமாக்கம் அடைகிறது. உழைப்பிற்கு உரிய மதிப்பளிக் காமையும் பிறப்பின் அடிப்படையில் ஜாதி உயர்வு-தாழ்வு கற்பிப்பதும், வெகு மக்களின் கல்வியையும், மொழியையும் புறக்கணித்து அவர்களை ஒதுக்குவதும், கருத்தையும் காரியமாற்றுதலையும்,  (Theory and Practice) வெவ்வேறு பகுதியினருக்கு உரியனவாகப் பிரித்து அமைத்தலும் இந்துமதம் எனப்படுவதின் நடப்புக்கூறுகள் ஆகும். வருண தருமம், சதுர்வருணியம், பிராமணியம், சனாதன தருமம், வைதிக மதம், சண்மதம் போன்ற பெயர்களால் பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் அழைக்கப்படும் இந்து மதத்திற்குத் தெளிவான கோட்பாடுகள் இல்லை என்பதோடு, முரண்பாடான கோட்பாடுகள் இருப்பினும், மேற்சொல்லப் பட்ட சமுதாயத் தாழ்வு நடைமுறைகள் அந்த மதத்துடன் அன்றும் இன்றும் பிணைந்தே இருக்கின்றன.

9.            இந்த நடைமுறைகளை நிலைப்படுத்திக்கொள்ளப் பின்பற்றப்படும் ஏற்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தவையாயினும், அவற்றின் உள்நோக்கத்தைப் பாமரர் பல காலம் புரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். ஸ்மிருதிகளாகிய வேதங்களை இறையளிப்பு எனவும் ஆய்விற்கு அப்பாற்பட்ட ஆதார ஏற்புகள் எனவும் கொண்டு அவற்றை அடியொற்றி வந்தனவாகப் போற்றப்படும் ஸ்மிருதிகளாகிய தரும சாத்திர இதிகாசங்கள் புராணப் புனைவுகளின் மூலம், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் கொள்கை, மாற்றமுடியா தெய்வீகத்தன்மைத்து என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. உபநயனம் செய்து பூணூல் அணிவித்து சமற்கிருத மந்திரம் ஓதுவித்து, இருபிறப்பாளர் (துவிஜர்) ஆக்குதல், தீமூட்டி வேள்வி செய்தல், ஜாதித்தொழில் நிர்ணயித்தல், குடியிருப்புப் பகுதிகளை ஒதுக்குதல், தெருவில் செல்லுதல், கோயில் நுழைவு, ஏரி, குளம், கிணறு ஆகிய பொது இடங்களைப் பயன்படுத்துதல், ஆடை அணிகலன்கள் அணிதல், கல்வி பயிலுதல், பண்டிகை, திருவிழா, வழிபாடு, சடங்கு, சம்பிர தாயம், பழக்க வழக்கம் போன்றவற்றை வகைப்படுத்துதல், மேற்சொன்ன நடப்புகளிலும் அமைப்புகளிலும் காணப்படும் பிளவுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்தக் கதைகளைப் புனைந்து நம்பவைத்தல், அதற்குத்தக ஆன்மா, மறுபிறப்புக் கோட்பாடுகளைத் திணித்தல் போன்ற எல்லாவற்றிலும் வேதியச் சதுர்வருணிய ஜாதிய வழிசார்ந்த பார்ப்பனிய மேலாண்மையும், பிறப்பினடிப்படை மேல் கீழ் சமூகப்படி நிலைகளும் கவனமாகப் பாதுகாக்கப்படுவதைக் காணலாம்.

10.         நாயம், சமனியம், விழுமிய மனித இயல்புகளுடன் இணக்கம் என ஆக்கம் சேர்க்கும் சீரிய சமூக நெறிமுறைகள் செழுமையடைந்து நிலைபெற்று உறுதிப்படுவதற்குக் கல்வி அறிவு அடிப்படைத் தேவையாகும். மாறாக, சீரிய சமூக நெறிமுறைகளை மறுத்து ஒதுக்கும் சதுர்வருணிய மனுதரும அமைப்புகளும் கொள்கைகளும் நீடிக்கவேண்டுமெனில் பொதுக் கல்வியை இல்லாமல் செய்து, பாமரர்கட்கு அறிவுத் தெளிவு வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும். சமற்கிருத மயமாக்கப்பட்ட முறையின் மூலம் வெகுமக்களை, உழைப்பாளர்களை, படிக்காத, தெளியாத மூடநம்பிக்கையா ளர்களாகப் பல நூற்றாண்டுக் காலம் வைத்திருக்க முடிந்தது.

11.         சமற்கிருத மயமாக்கம் கல்வியை எப்படி மறுத்தது? பாமரர்களை அறிவுத் தெளிவு அற்றவர்களாக எப்படி ஆக்கியது?

சிறு வயதிலும், இளமையிலும் சமுதாயத்தால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதற்குப் பழக்கப்பட்ட வகையில் குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் அதற்கான கூடங்களில் (இடங்களில் ) பயில்வது முறைசார் ((Eommal) கல்வியாகும். இத்தகைய வாய்ப்பினை விரும்பியோ, விரும்பாமலோ பெறாதவர்கள், அறிவை வளர்த்துக்கொள்ளும் வேட்கையில், ஏடுகளைக் கொண்டோ, கேள்வி ஞானத்தின் வழியோ, பட்டறிவின் மூலமாகவோ பயில்வது முறைசாராத (Non-Eommal) கல்வியாகும். இந்த இருவகைக் கல்வி வாய்ப்பு களும் சமற்கிருத மயமாக்க நெறியில் மறுக்கப்பட்டன.

12. பாட்டாளி மக்களாகிய சூத்திரரும் பஞ்சமரும் கற்கக்கூடாது என்பது வேதிய மனுதருமச் சமுதாயச் சட்டம். அதற்குத்தகவே இராமாயணத்தில் சம்புகனின் தலையை இராமன் கொய்து விடுகிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டைவிரலை துரோணன் கட்டணமாகப் (குரு தட்ச ணையாகப்) பெறுகிறான். ஆக உழைப்பாளிகளான வெகுமக்கள் கற்றுக்கொள்ள இந்துமத அரசு அனுமதிக்க வில்லை; ஆசிரியர்களும் கற்றுத்தர முன்வரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின், இந்தக் கொள்கை மாற்றப்பட்டதாயினும், அவர்களின் நேரடி ஆட்சிக்குட்படாத, இந்துமதக் கொள்கையின்படி ஆளப்பட்ட திருவிதாங்கூர், கொச்சி போன்ற சிற்றரசுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட தாழ்ந்த ஜாதியார் எனப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அனுமதிக்கப் பட்டாலும் தொல்லைகட்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் தற்கால வரலாறு தெரிவிக்கிறது.

13.         ஒரு இனத்தின் விலைமதிக்க முடியாத உளவியல் கருவியாக, ஆன்மீகச் செல்வமாக, மனங்களைப் பிணைக் கும் உணர்வுப் பசையின் கொள்கலனாக, அறிவுத் தேக்கத்தைப் புதுப்பித்து நிறைக்கும் கருத்து ஓடையாக இலங்குவது மொழியெனில் அது மிகையன்று. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழியை ஒவ்வொரு இனமும் போற்றிப் பாதுகாத்து உயர்த்தி, அதனால் தானும் உயர்வு பெறல்வேண்டும். அவ்வாறு செய்யாத இனம் நாகரிகப் பண்பாட்டு நிலையில் வளர்ச்சி குன்றியதாக அறிவுத் தெளிவு குறைந்ததாக நின்றுவிடும். இந்த உண்மையை நன்கு அறிந்த பார்ப்பனக்கூட்டம், பண்பாட்டு வழியான தங்களின் சமூகப் பொருளாதார மேலாண்மையை (ஆதிக்கத்தை) தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சமற்கிருதத்திற்கு உயர்வான நிலையையும், மக்கள் புழங்கும் மொழிகட்கு அடுத்த நிலையையும் ஏற்படுத்தி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

தொடரும்

- விடுதலை நாளேடு 30 1 20