சனி, 29 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 48

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

சமுதாயம் என்றால் என்ன?

சமுதாயம் என்பது மனித இனம்தான் கூட்டு வாழ்க்கை வாழ்வதற்கென்று தன்னை ஒத்த மனிதர்களுடன் (உருவத் தில், மனநிலையில்) அமைத்துக்கொண்ட ஓர் அமைப்பாகும். தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஏற்ப ஏற்றுக் கொண்ட ஓர் அமைப்பாகும். எனவே, சமுதாயம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், அதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்ட ஆணைகள் அத்து ணையும் கொண்டது எனலாம்.

இவைகள் ஏற்பட மனித இனம் ஒரு மொழி, மக்கட் தொகை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்கின்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படி அமைகின்ற அமைப்பானது அந்தக் குழு மக்களுக்குரிய உரிமைகளை, உடைமைகளைக் காப்பாற்றக்கூடிய வலுவு டையதாகவுமிருக்க வேண்டும். எனவே, அந்தச் சமுதாயம், அந்த மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகள், தேவைகள், எண்ண ஓட்டங்கள் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

உலகில் பல சமுதாயங்கள் தோன்றுவதற்கும், மொழிகள் ஏற்படுவதற்கும் மேலே கூறியவைகள்தாம் காரணமாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

தமிழ்ச் சமுதாயம் மிகப் பழமையானதொரு சமுதாயமாக அறிஞர்களால் கருதப்படுகிறது.

பன்னெடுங்காலத்துக்கு முன் ஆஸ்திரேலியா, ஆப் பிரிக்க கண்டங்களை உள்ளிட்டு நில நடுக்கோட்டுப் பகுதி யில் நிலவிய இலமூரியா கண்டத்தின் ஓர் பகுதியாக, தென் னிந்தியா, தமிழகம் விளங்கியது.

ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திரா விடர்கள் வாழ்ந்தனர். அவர்களது பண்பாடு பரவி இருந்தது என்று பேரா. ஏ.சி. ஹாடன் கூறுகிறார்.

வரலாற்றில் உயர்வளமான சிந்து சமவெளி நாகரிகம்-திராவிட நாகரிகமென பல வரலாற்றுப் பேராசிரியர்கள் அறுதியிட்டுக் குறிப்பிடுகிறார்கள். எனவே, 5000 ஆண்டு களுக்குமுன் தமிழினம் சிந்து முதல் பஃறுளி ஆறுவரை பரவியிருந்த ஒரு தனி இனம் எனக்கொள்ளலாம். சிறப்பான நாகரிகத்தையும், செம்மொழியையும் பெற்றிருந்த ஓர் இனமாக தமிழினம் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் வட வேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் (தொல்-சிறப்புபாயிரம்) என்றும், 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த நன்னூல் காலத்தில் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கெல்லையின் எனக் குறுகியது. இன்று வேங்கடத்தையும் பறிகொடுத்துக் கூனிக்குறுகி வாழ்கின்ற நிலையிலுள்ளது.

ஆரியர்கள் (நடு) ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாக வடக்கிலேற்பட்ட படையெடுப்புகளின் காரண மாகத் தென்னகம் நோக்கி இடந்தேடியும், மன்னர்களின் ஆதரவைப் பெற்றும் தமிழகத்தில் குடும்பங் குடும்பமாக குடியேறினார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆரியர்கள் தமிழர்களுடன் போரிட்டதாக வரலாறில்லை. அவர்கள் ஊடுருவி, அடுத்துக்கெடுத்து, ஆரியக் கூத்தாடி அரசர்களை வீழச்செய்து, தங்களுக்கும் தங்கள் மொழிக்கும், கலாச்சா ரத்துக்கும் ஏற்றத்தைப் பெற்றார்கள். சமூகத்தில் பல மாறுதல் களைப் படிப்படியாக உண்டாக்கி உண்டு கொழுத்து வாழ்ந் தார்கள் - வாழ்கிறார்கள் என்பதும் வரலாறு மெய்ப்பிக்கும் பேருண்மை, கி.மு. 600க்குப் பிறகே வடநாட்டு ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும்.

சமணமும், பவுத்தமும், மூண்டெழும் காட்டுத் தீப்போல் தமிழகத்தில் பரவியதைக் கண்ட ஆரியப் பார்ப்பனர்கள் தம் வைதீக நெறியைத் தமிழகத்தில் பரப்ப வேண்டுமென தமிழகத்தில் நுழைந்தனர். அவர்களின் பெயரே அதைக் குறிப்பதாக உள்ளது. பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர் பிருகத்சரணர் என்பர். அதற்குப் பொருள் பெரும்பயணர் எனக்கொள்ளலாம். பெரும் பயணத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டில் குடியேறி யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழ்ந்த தமிழனை ஏமாற்றி ஏற்றங் கொண்டனர். ஏற்றங் கொண்டோர் இன்றுவரை புலிவேடம் போடுகிறார்கள்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? என ஆராய்வதுதான் இக் கட்டுரையின் நோக்கம். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகதப் பேரரசை ஆண்ட நந்தர்கள் தமிழகத்தின் மேல் படை யெடுத்தனர். பின்னர் மகதப் பேரரசைக் கைப்பற்றி மவுரியப் பேரரசு ஆட்சி புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஆரியப் பார்ப்பனர்களின் குடியேற்றமும், ஊடுருவலும் தொடர்ந்து ஏற்பட்டன எனலாம். இக்குடியேற்றம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நிகழ்ந்திருக்கலாம் எனப் பேராசிரியர் கே.எம். பணிக்கர் கருதுகிறார்.

மொழிக் கலப்புகள்; பண்பாட்டு ஊடுருவல்களால் பல தமிழ்ப் பெயர்கள் சிதைந்தும், மறைந்தும் போய்விட்டன. அவற்றுக்கேற்ப வடமொழிப் பெயர்களும், சொற்களும் வழங்கலாயின. அதன் விளைவாக ஆரிய நாகரிகம் தமிழகத் தில் வேரூன்றி பரவத் தொடங்கியது.

கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிவு கூட இல்லாத ஆரியர்களுக்கு அரசியல், சமூகவியல், பொருளியல், ஞான இயல் ஆகியவைகளில் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத் தையும் மறந்தான். தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான் என்று தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் 3-9-1939இல் குரல் எழுப் பினார்கள்.

தமிழ்நாட்டில் பலகாலமாக சமற்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் தேவ பாஷை எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம் சாத்திரம் ஆகி யவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும், பயன்படும் என்றுகாட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மை கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள். விடுதலை (15-2-1960)

திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுத்தி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்க ளுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும் படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகி விட்டது (விடுதலை 27-11-1948).

என தந்தை பெரியார் அவர்கள் வடமொழியின் கலப் பால், ஆரிய கலாச்சாரத்தின் கலப்பால் ஏற்பட்ட தீங்கினை நாட்டுக்கு எடுத்துரைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரியமாயையில் கூறு கிறார்கள்: ஒரு காலமிருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாக கருதியக் காலம், ஆரிய இனம் வேறு எனும் எண்ணம் மங்காதிருந்தக் காலம். ஆரியத்தைக் கேலிக்கூத்தாக கருதியக் காலம்.

இன்றோ ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை நடையுடை பாவனை, ஆசார அனுஷ்டானம், பூசை புனஸ்காரம் இருப் பதே தமிழருக்கு சீலத்தையும் சிலாக்கியத்தையும் தந்திடும் என்று தவறான கருத்து தழைத்துக் கிடக்கிறது. காலம் முளைக்கச் செய்த இந்தக்கள்ளி படர்ந்திருப்பதாலேயே நாச நச்சரவுகள் இங்கு நடமாடி தமிழர் சமுதாயத்தைத் தீண்டி தீய்த்து வருகின்றன.

பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரன் சரிந் ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும் ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு தெரிந்துகொள்ளவில்லை. ஆரியர்-திராவிட இனத் தினரிடையே கருத்திலே போதை மூண்டிட செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தைத் தாங்கும் சுமை தாங்கியானான், சோர்ந்தான், சுருண்டான். இந்த சூட்சுமத்தை அறியாதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

இந்தியாவில் ஆரிய ஆட்சி என்ற நூலில் ஹாவல் எழுதுகிறார். ஆரிய மதக் குழியிலே வீழ்ந்ததால், அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை திராவிடன் இழக்க வேண்டி நேரிட்டது.

தமிழ் முழக்கம் என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை எழுதுகிறார், (பக்கம் 75) திராவிடம் என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது. வட நூலாசிரி யரான குமாரியபட்டர் தம் காலத்தில் இக்குழுவில் திராவிடம், ஆந்திரம் என இரு பகுதிகளே இருந்தன எனக் குறிப்பர். கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் தம்முள் ஒத்து தமிழையே சார்ந்தும் நிற்கின்றன என்று காட்டுவார் கால்டுவெல்.

வகுப்பு பாராட்டாத தமிழரை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றிருந்த தமிழரை நான்கு வருணமாகப் பிரித்து அதில் நாலாயிரம் ஜாதியை உண்டாக்கி தமிழனை என்றென்றும் ஒன்றுபடாமல் செய்துவிட்டனர் ஆரிய பார்ப்பனர்கள்.

ஆரியர்கள் இலக்கியத்தில் நுழைந்து தங்கள் கொள்கை களைப் புகுத்திவிட்டனர். இடைக்கால நூலான கம்ப இராமா யணம் கொள்கையளவில் தமிழினத்திற்கு ஏற்புடையவை அல்ல. பார்ப்பனீயத்துக்கு கருவியாக பயன்பட்டிருக்கிறது. கவர்ச்சியான கவிதையில் ஆரிய நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. அவைகளால் வருணாசிரம தர்மங்கள் மூடப்பழக்க வழக்கங் கள் புகுத்தப்பட்டு தமிழின் தனித்தன்மைகள் அழிக்கப் பட்டன. எனவேதான் தந்தை பெரியார் கலாச்சார, பண்பாட்டு புரட்சிகளையெல்லாம் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தினார் கள்.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு உள்நாட்டு நாகரிகம் என்ப தில் சந்தேகமில்லை. அதன் வேர்களும், கிளைகளும் தென் னிந்தியாவில் காணப்படுகிறது. அது திராவிட நாகரிகமும், தென்னிந்திய கலாச்சாரமும் என்று பல அறிஞர்கள் கருது கின்றனர். (நேரு-இந்தியாவின் கண்டுபிடிப்பு-பக்கம்-72)

ஆரியர்கள் படையெடுப்பு சிந்து சமவெளி நாகரிகத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் நேர்ந்திருக்க வேண்டு மென்கிறார் நேரு இந்து என்ற சொல் பழமை இலக்கியங்களில் காணப்படவில்லை. (பக்கம்-74).

ஜாதி பாகுபாடுகள் ஆரியர்கள் திராவிடர்களிடையே கலப்பு ஏற்படாமலிருக்கச் செய்த செயல்பாட்டுத் திட்டம். (பக்-85)

இந்தியாவில் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கண்டுபிடித்த ஆயுதம்தான் ஜாதி. அதனால் அவர்கள் தங்களை பலம் பொருந்திய மேலாதிக்கக்காரர்களாக ஆக்கிக் கொண்டார்கள். (பக்-86)

மகாபாரதக் கதை வடபுலத்தில் ஆரியர்கள் இந்தியாவின் ஒற்றுமை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட முயற்சியே! அன் றைய நிலையில் ஆரியர்கள் விந்தியத்துக்கு வடக்கேதான் ஆதிக்கம் பெற்றிருந்தனர். இராமாயணம் ஆரியர்கள் விந்தி யத்துக்கு தெற்கேயும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய தைக் குறிப்பிடுவதுதான் (பக். 107)

மேலும் கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் எப்படி ஆரி யர்கள் திராவிடர்களிடையே ஊடுருவல் செய்தார்கள், இது ஓர் கலாச்சார அடிப்படையில் ஏற்பட்டதென்பதையும் குறிப் பிடுகிறது. அதில் சமூகத்தில் ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத் துவதையும் குறிப்பிட்டுள்ளது. (பக். 110)

ஜாதி பாகுபாடுகள் இந்திய சமூகத்தின் கழுத்தை நெரிக் கும் அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவிதி என்று சொன்னால் மிகையா காது. (பக். 121) அது இந்தியாவில் முன்னேற்றத்தைத் தடுத்து, தேக்க நிலையை உண்டாக்கியது.

குப்த பேரரசு பார்ப்பனர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை மய்யமாகக் கொண்டு இந்தியா முழுமையும் அரசோச்சியது. (பக்கம்-137)

மதத்தையும் ஆத்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அமைக்க அன்றைய பேரரசுகள் தீவிர மாக உழைத்தன. அவைகளை பார்ப்பனீயம் (Brahminism) எனலாம். அதனடிப்படையில் இந்து (Hinduism)  என்பது தேசியத்தின் (Nationalism) சின்னமாகிவிட்டது. (பக்-138)

அடிக்கடி வட இந்தியாவில் ஏற்பட்ட படை எடுப்புகளின் விளைவாக ஆரியர்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்து தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். (பக்-140)

எனவே இந்திய சமூக அமைப்பு ஜாதீய பாகுபாடுகளைக் கொண்ட அமைப்பாக பார்ப்பனர்கள் தங்களது சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் செய்துகொண்டார்கள். தாங்கள் அரசுகளில் நுழைந்து வடமொழியையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும் செயல்படுத்த அரசர்களை பணிய வைத்தார்கள் என்பது தேற்றம்.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டுமானால், அந்தச் சமுதாயத்தினுடைய மொழி அழிக்கப்பட வேண்டும். மொழியை அழிக்க சமுதா யத்தினுடைய பண்பாடுகள், நாகரிகம், கலை, பழக்கவழக் கங்கள் அழிக்கப்பட வேண்டும். அதை ஆரியப் பார்ப்ப னர்கள் செய்தார்களென்பதை நேருவின் கண்டுபிடிப்பு கருத் துகள் வலியுறுத்துகின்றன. தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் நிலை நாட்டப்பட்டது.

தொடரும்

- விடுதலை நாளேடு 11 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக