செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 46

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

30.1.2020 அன்றைய தொடர்ச்சி

14.         சங்கப் பாடல்கள் பல்வேறு காலங்களில் இயற்றப் பட்டவை. அவற்றின் தொடக்கக் காலம் தெரியவில்லை; கி.மு. இரண்டாயிரம் ஆகக்கூட இருக்கலாம்; ஆனால் அவை இன்றைய வடிவில் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்பது நடுநிலை ஆய்வர் கருத்து. அப்பொழுதே வேதியக் கருத்துகளும் நடப்புகளும் தமிழகத்தில் நுழைந்திருந்தன, அறிமுகமாயிருந்தன. இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறம் 6) என்றும், பார்ப்பார்க் கல்லது பணிபு அறிய லையே (பதிற்றுப்பத்து 63) என்றும் அரசனே பணி புரியும் நிலைக்கு மறை ஓதிகள் உயர்ந்துவிட்டனர். (இங்கு சொல்லப் படும் பார்ப்பனர் தமிழரே என்றும், மறைகள் தமிழில் இருந்தவையென்றும் கூறுவார் உண்டு.) வேள்விகள் செய்து வெற்றியும் பெருமையும் பெறவேண்டும் என்ற ஆசை தமிழ் மன்னர்களைப் பற்றிக்கொண்டதால், அறுதொழில் அந்தணர் அறம் புரிந்தெடுத்த தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397) சுட்டப்படுவதையும், பெருநற்கிள்ளி எனும் சோழன் ராச சூயம் வேட்டனன் என்றும், முதுகுடுமிப் பெருவழுதி எனும் பாண்டியன் பல்யாகச்சாலை என்றும் சிறப்பு முன் அடைகள் பெறுவதையும், புரையில் நற்பனுவல் நால் வேதத்து அருஞ்சீர்த்தி (புறம் 15) பேசப்படுவதையும் காண்கிறோம்.

15.         வேதங்களும், வேள்விகளும் பார்ப்பனர்களும் மேல்மட்டச் செல்வாக்குப் பெற்றபின்பு, அச்செல்வாக்குக் கீழ் மட்டம் வரை பரவுவது அல்லது விரவுவது இயல்புதானே! வேதியச் செல்வாக்கு என்றால் கூடவே சமற்கிருத மொழியும் செல்வாக்குப் பெறுகிறது எனப்பொருள். மரபு வழியாகச் சமற்கிருதம் கற்ற பார்ப்பனர்கள் ஒலி நுணுக்கம் சற்றும் சிதையாமல் வேத மந்திரங்களை ஓதினாற்றான், அவற்றிற் குரிய பயன் கிட்டும் என்பது இந்து மதத்தினரால் இன்றும் வற்புறுத்தப்படுகிறது. இதன் விளைவு என்ன? செல்வாக்கான இடங்களில் தமிழ் தள்ளப்படுகிறது ; வடமொழி வரவேற்கப் படுகிறது. செல்வாக்குள்ள மேல் மட்டத்தாருக்கு வளவாய்ப்பு கள் இருப்பதால், அவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள், போற்றிய வடமொழி வளர்வதற்கான ஏந்துகள் ( வசதிகள் ) பெருகின.

16. தென்னவருக்குரிய நாட்டில் வடவாரிய மொழி செல்வாக்குப் பெறுவதால் ஏற்படும் சமுதாயத் தீங்கை உணர்த்த அறிஞர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர் களில் ஒருவரே இளங்கோவடிகள்! முடியுடை மூவேந்தர்கள் ஆண்ட தமிழரின் மண்ணை முழுவதும் இணைத்துக் காட்டி யதோடு, அவர்களின் முந்தைய நிலமான இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன் தமிழ் நில மங்கைக்கு கோயில் எழுப்பியதைப் பெருமையோடு குறிப்பிடும் கவிஞர், தென்புலத்தில் மட்டுமன்றி வடபுலத்திலும் தமிழ் பழிக்கப்படு வதை அனுமதிப்பது இனவீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும் என அறிந்த காரணத்தால், அவ்வாறு செய்த கனக-விசயர் மீது படையெடுத்து வென்ற செய்தியைச் சிறப்பித்துப் பாடினார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த களப்பிரர் தாக்குதலைத் தொடர்ந்து, தென்மொழியும் பண்பாடும் ஏற்றத்தை இழந்து, தமிழின உணர்வு மங்குவதற்கு முன் அக்காலத்தில் அஃது இறுதியாக ஒளி வீசியதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இருப்பினும், மொழி இன உணர்களை உள்ளடக்கியும், ஆரிய வடமொழி ஆதிக்கம் குறித்து மறைமுகமாக எச்சரித்தும் காவியம் இயற் றிய சேரனின் இளவல், நால்வேத நடைமுறைகள் செல்வாக் குப் பெறுவதைத் தடுக்கவேண்டும் என சுட்டிக்காட்டத் தவறிவிட்டார் என்பது வருந்தத்தக்கதே! அறிஞரும் பாவ லரும் இவ்வாறு குறைபட நடந்துகொண்ட காரணத்தாலும் பிற காரணங்களாலும் வருண தருமப் பரவலுக்கான சமற்கிருத மயமாக்கம், பல்லவர் காலத்திலும் விசய நகர, நாயக்க பாளையக்கார மற்றும் பிற குறுநில மன்னர் ஆட்சியிலும் செழித்தோங்கி நின்றது.

17.         சமற்கிருத மயமாக்கத்தின் மிகப் பெருங்கொடுமை தமிழ் புறக்கணிக்கப்பட்டதும், தமிழினத்தாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதும் ஆகும். தமிழக வரலாறு மக்களும் பண் பாடும் எனும் நூலில் பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம்பற்றி டாக்டர் கே.கே. பிள்ளை இவ்வாறு எழுதுகிறார்: உழைப் பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்க செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவை யாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும் தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வமிசங்களை யும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் ஜாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதையே தம் சீரிய கடமை எனக் கூறும் மெய்கீர்த்தி களைப் புனைந்துகொண்டனர். ஆரியப் பழக்க வழக்கத்தைப் பாராட்டிக்கூறும் சாஸ்திரங்களும், புராணங்களும் எழுந்தன. அவற்றைப் பிராமணர் பயில்வதற்கென அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர். (பக்கம் 318) மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணருக்கு மட்டும் வடமொழிப் பயிற்சியை அளித்து வந்தன. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றிவரவில்லை. அப்பள்ளிகளில்  புராணங்கள், இதிகாசங்கள், சிவதருமம், சோமசித்தாந்தாத்தம், இராமதனுச பாடியம், பிரபாகரின் மீமாம்மிசை, வியாகரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங்களையே பிராமணர்கள் புராணங்களில் பயின்று வந்தனர். (பக்கம் 320)

18. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போன்ற மன்னர்களும், சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பதுபோன்ற கருத்தைப் புலவர்களும், பொருட்பாலில் இறைமாட்சி எனும் முதல் அதிகாரத்தை அடுத்து நான்கு அதிகாரங்களில் கல்வியறிவின் தேவையை வலியுறுத்திய அறநெறியாளர் வள்ளுவரும் பிறந்த நாட்டில், அந்த மண்ணுக்குரிய மக்களுக்கே கல்வியை மறுக்கும் வேதனைக் காலமும் இடையில் வந்தது விந்தையே!

19.         முறைசார் (formal) கல்விக்கான வாயில்கள் சூத்திர பஞ்சமனுக்கு அடைபட்டன எனில், முறைசாரா (non-formal) கல்விக்கான வாய்ப்புகளேனும் இருந்தனவா எனக் காணவேண்டும். களப்பிரருக்குப்பின் பல்லவர் தொடங்கி அய்ரோப்பியர் ஆட்சி வரை  இடைப்பட்டது இந்திய வரலாற்றில் ஒரு நம்பிக்கைக் காலம் (age of faith) ஆகும். மதவழிச் சாத்திர சம்பிரதாய சடங்குகளுக்கான மந்திரங்கள், தோத்திரங்கள் முதலியன போற்றப்பட்டன. வடமொழி தேவபாஷை எனப் போற்றப்பட்டது. பிற, நீசபாஷை அல்லது பைசா மொழி என ஒதுக்கப்பட்டன. இறைவழிபாடு, சமயத் தேவைகள் ஆகியவற்றின் வழியே முதலிடத்தைப்பற்றிக் கொண்ட பின்பு, பிற துறைகளிலும் வடமொழியே வளம் சேர்க்கும் வாய்ப்புக்கள் பெற்றது. சிற்பம், ஓவியம், கட்டிடக் கலை, கணிதம், வானநூல், மருத்துவம் முதலியத் துறைகளில் கிட்டத்தட்ட அனைத்து நூல்களையும் சமற்கிருதத்திலேயே ஆக்கும் ஏற்பாடுகள் இருந்தன. வெகு மக்களின் மொழி புறக்கணிக்கப்பட்டது. மேற்கூறிய துறைகளில் உழைப்பவர்கள் தமிழர்கள், அந்தத் துறைகளின் அறிவைத் தருபவர்கள் வடமொழியாளர்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. சூத்திரத் தமிழர்கள் வருணதருமப்படி, சமற்கிருத சாத்திரங்களைக் கற்கக்கூடாது. ஆகையால், தாங்களாகவே அறிவைப் பெருக்கிக் கொள் ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம், இராமாயணம், பாரதம் என்பனவற்றுடன் இரு குரங்கின் கையொடித்து சாறுபிழியும் மருத்துவ இரகசியம், மாட்டுவாகடம், மனையடி சாத்திரம் என்ற வகையில் தமிழ் நொண்டி நடை போட்டது. (இரு குரங்கின் கை, முசுமுசுக்கை) உழைக்கும் மக்களின் மொழியில் அறம், ஆன்மீகம், அறிவு, பொருள், கலை தொடர்பாக நூல்கள் பெருகுவதற்கான வாய்ப்பைத் தரக்கூடிய ஆட்சியாளர்கள் வடமொழி வேதி யர் வயப்பட்டுவிட்டதால், சூத்திரப் பஞ்சமரின் மொழிகள் வளம் பெற்று வளருவது தடைப்பட்டது. ஆட்சியாளர் ஆதரவு பெற்றுச் செழித்துக் கொழுத்த சமற்கிருதத்தைக் கற்க சூத்திர பஞ்சமருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்நிலை அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. பத்தொன் பதாம் நூற்றாண்டில் மராத்தியத்தில் சதாரா பகுதியை ஆண்ட அரசர் பார்ப்பன எதிர்ப்புக்கு அஞ்சி இரவு நேரங்களில் பயில வேண்டியிருந்தது. ஆம், அரசருக்கே அப்படியொரு நிலை! மலையாள மொழியின் இணையற்ற மறுமலர்ச்சிப் பாவலர் குமாரன் ஆசான். இந்துமத தர்மத்தின்படி ஆளப்பட்ட திருவாங்கூரில் சமற்கிருதம் கற்க அனுமதிக்கப்படவில்லை; பெங்களூர் சென்று அவர் பயின்ற பள்ளியில் அவர் ஒருவரே பார்ப்பனர் அல்லாதவர்; பல இடர்களுக்கு இடையே பயின்ற அவரைத் தேர்வு எழுத வேதியர் கூட்டம் அனுமதிக்கவில்லை; சமற்கிருதத் தேர்வெழுதாமலேயே பெங்களூரை விட்டு வெளியேறினார். மாமேதை டாக்டர் அம்பேத்கர் உயர் நிலைப்பள்ளியில் சமற்கிருதம் படிக்க அனுமதிக்கப்படவில்லை; மாற்றாக பாரசீக மொழி பயின்றார்!

தொடரும்

- விடுதலை நாளேடு 4 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக