வெள்ளி, 28 ஏப்ரல், 2017

மொழிப்போர் தியாகி ல.நடராசன்


தந்தை பெரியார் ஆணையை ஏற்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு  உடல்நிலை,

தன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரன் ல.நடராசனின் நினைவுநாள்

ஜனவரி 15 (1939)

உண்மை,1-15.1.17

திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமான கல்வெட்டு

கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற அண்மைக்கால சிலரின் குரல் -ஆழமான  வரலாற்றுப் புரிதல் இல்லாமையாலோ -திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால பணியையும், பங்களிப்பையும், தாக்கத்தையும் தாண்டிக் கடைபரப்ப முடியாத விரக்தியாலோ அதன் மீது ஏதாவது குற்றப் பத்திரிகை படித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியாலோ எழுந்த ஒன்றே!

திராவிட கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள் என்பதைக் கடந்து, கடந்த ஒரு நூற்றாண்டுக்கால திராவிடஇயக்கத்தின்பிரச்சாரங்களும்,போராட் டங்களும் ஆட்சியின் விளைவுகளும் சாதாரணமான தல்ல. இன்னும் சொல்லப்போனால் கவுதம புத்தர் தொடங்கிக் கொடுத்த ஆரிய வருணாசிரம, கலாச்சார போர்த்தொடுப்பு எதிர்ப்பின் தொடர் பணியைத் தூக்கிச் சுமந்து வருவதுதான்  திராவிடர் இயக்கம்.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை (20-12-1916) ஒருமுறை படித்தவர்களுக்குக்கூட அது தெளிவாகவே விளங்கும். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் இந்து மதம். உலகில் வேறு எங்கும் காணமுடியாத வெங்கொடுமை இது.

சென்னை மவுண்ட்ரோடு ஜார்ஜ் டவுன்களில் நாய்களும், குஷ்டரோகிகளும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பல கைகளை மாட்டி பிராமணாள் ஓட்டல்கள் நடத்தப்பட்டதே - அந்த செய்தியெல்லாம் தெரியுமா? -

பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கும் உரிமை, பொதுக் கிணறுகளில், குளங்களில் அவர்கள் புழங்கும் உரிமை, பேருந்துகளில் பயணிக்கும் உரிமை, பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் கட்டாய சேர்ப்பு, மதிய உணவுத் திட்டம் இவற்றை எல்லாம் கொண்டுவந்தது திராவிடர் இயக்கக் கட்சியான நீதிக்கட்சி அல்லவா? (1924)

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் தடையிருந்ததே. இவற்றையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் வேரோடு பெயர்த்து எறிந்த இயக்கம் எது?

இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடித்த தலைவர்கள் யார்? இயக்கம் எது? மடாதிபதிகளையும், சைவ மெய்யன்பர்களையும்கூட வீதிக்கு அழைத்து வந்து இந்தி எதிர்ப்புப் போர் நடைபெறுவதற்குக் காரணமாய் இருந்த இயக்கம் எது? அந்த இந்தி எதிர்ப்பு கொண்டுவந்த தமிழ் மறுமலர்ச்சியை மறுக்கத்தான் முடியுமா?  நமஸ்காரம் - வணக்கம் ஆனதே! உபந்நியாசம் -சொற்பொழிவு ஆனதே! அக்ராசனாதிபதி -தலைவர் ஆனாரே! வந்தனோபசாரம் -நன்றி என மறுமலர்ச்சி பெற்றதே!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்த சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை யைக் கொண்டு வருவதற்குக்கூட திராவிடர்  இயக்கம் போராட வேண்டியிருந்ததே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆட்சியில்தானே! புலவர்கள் மத்தியில் இருந்த திருக்குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய திருக்குறள் மாநாடு நடத்தியவர் திராவிடர் தந்தை பெரியார் அல்லவா! (1940)

1938இல் ஆச்சாரியார் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரா இல்லையா? 1952இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு அல்லாமல், அரை நேரம் படித்தால் போதும். மீதி அரைநேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்தால் போதும் என்ற குலக்கல்வித் திட்டத்தைப் பூண்டோடு ஒழித்து தமிழர்களின் வயிற்றில் பாலை வார்த்த தலைவரும் இயக்கமும் எது? நீதிக்கட்சி ஆட்சியில் 10,035 பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பது சாதாரணமா?

பார்ப்பனர் அல்லாதார் கல்வி உரிமைக்காக முதன்முதலில் வகுப்புரிமை ஆணை கொண்டுவந்தது நீதிக்கட்சியல்லவா? அந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தபோது தமிழ்நாட்டையே போராட்ட எரிமலையாக்கி முதன்முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ்நாட்டில் இன்று சட்டரீதியாகவே 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தச் செய்ததற்குக் காரணம் யார்? இந்திய அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு தர வரிசையில் தமிழ்நாட்டில் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனவே - முதல் 16 வரிசையில் 8 கல்லூரிகள் தமிழகக் கல்லூரிகள் என்பது திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனையில்லையா?

இந்தியா முழுமைக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் -நடத்திக் காட்டியவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை ஊரும் உலகமும் அறியுமே! அதற்கு வழிசெய்த பிரதமர் வி.பி.சிங் அவர்களே அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வழி செய்த 1929ஆம் ஆண்டு மாநாட்டின் தாக்கத்தை இன்றளவும் தமிழ்நாட்டில் காண முடி கிறதே! தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கமாகக் கருதும் நிலை வேறு மாநிலங்களில் உண்டா? மார்க்ஸியத் தலைவர்கள்கூட விதிவிலக்கு இல்லையே, இந்த அறிவுப் புரட்சியை நடத்தியது திராவிடர் இயக்கம் அல்லவா? இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை (இங்கிலாந்திற்கு முன்பாகவே கூட) 1921ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி அல்லவா?

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சொத்துரிமை, விவாக ரத்து உரிமை, விதவைத் திருமணம், இராணுவத்திலும்கூட பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்று அடுக்கடுக்கான தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றியதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு, முதலீட்டில் பங்கு என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் யார்? மூடப் பண்டிகைகளைக் கொண்டாடிவந்த நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல்நாளை பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடச் செய்த இயக்கம் எது?

தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதி வந்தது எந்த ஆட்சியில்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்டம் இயற்றியது எந்த ஆட்சி?

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான் என்று சட்டம் செய்தது முதல் அமைச்சர் அறிஞர் அண்ணாதானே! ஜாதி ஒழிப்பு இணையருக்குத் தங்கமும், ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையும், நாகம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், டாக்டர் தருமாம்பாள், டாக்டர் மீனாம்பாள், டாக்டர் முத்துலட்சுமி, மணியம்மையார், சத்தியவாணிமுத்து போன்ற மகளிர் வீராங்கனைகளின் பெயரில் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங் களைத் தொகுத்து மாலையாக்கிக் கொடுத்தவர் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா?

கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்ட தாரிகளுக்கு கூடுதல் சலுகைகள், குடிசைமாற்று வாரியம் என்று பொருளாதார வளர்ச்சித் திட்டத் திலும்கூட ஒரு சமூகநீதிப் பார்வை என்பது தி.மு.க. ஆட்சிக்கே உரித்தான தனித் தன்மையல்லவா?

தமிழர் வீட்டுத் திருமணத்திற்குத் தமிழர் தலைமை தாங்கும் அருகதையில்லை; தமிழுக்கும் ஆங்கு இடம் இல்லை என்றிருந்த அவல நிலைமைக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்திய தலைவர் யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த ஆட்சி எது? அந்தத் திருமணம் இந்தியாவையும் கடந்து சிங்கப்பூரிலும், மலேசிய நாட்டு அரசாங்கத்தாலும் சட்ட சம்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதே. இதனை இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் சாதிக்க முடிந்ததா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப் பட்ட நீதிபதி  ஏ.வரதராஜன் அமர்வதற்கு வித்திட்ட தலைவர் பெரியார் அல்லவா? அதற்கு செயலாக்கம் கொடுத்தவர்முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா? உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் அவர்தான் அன்றோ!

இந்துத்துவாமதவாதம்தமிழ்நாட்டில்தலை தூக்கமுடியாமைக்கானஅடித்தளத்தைஅமைத்த -அமைத்துக்கொண்டிருக்கிற, போட்ட போட்டுக் கொண்டிருக்கிற இயக்கம் எது? பாபர் மசூதி இடிக் கப்பட்டபோதும் இந்தியாவிலேயே அமைதி காத்த மாநிலம் தமிழ்நாடு தானே!- அந்த நிலைக்குக் காரணம் யாது?

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் இவற்றைவிட வேகமாக, மேலாகச் செய்த  இயக்கம் உண்டா? தலைவர்கள் உண்டா? வாழ்நாள் எல்லாம் திராவிடர் இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய  ம.பொ.சி. கூட கடைசியில் அந்தத் திராவிட இயக்கத்தை சார்ந்து நின்றுதானே பதவிப் பெருமைகள் பெற்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. என்ன வருத்தம் என்றால், “இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்றார் அறிஞர் அண்ணா. குறிப்பாக பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களுக்குப் பரப்புவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்காரர்களை பெரும்பாலும் ஆஷா டபூதிகளாக ஆக்கியிருக்க வேண்டாமே! அதுவும் அ.இ.அ.தி.மு.க. அக்மார்க் முத்திரை ஆன்மிக தி.மு.க.வாகவே அவதாரம்எடுத்துவிட்டதே! ஆட்சிக் காலத்தில் திராவிட இயக்கம், சமூகநீதி தொடர்பான பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்காததும் பெரிய குறைபாடே!

- நன்றி: ‘நக்கீரன்’, ஏப், 20-22, 2017

-விடுதலை,25.4.!7

புதன், 26 ஏப்ரல், 2017

திராவிடர் இயக்க சாதனை1

தெரிந்து கொள்வோம் சில வரலாறுகளை

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்று இருந்தது இதன்பொருள் பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தான் இதைமாற்றியது நீதிக்கட்சி

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை முதன்முதலாக அமைச்சர் பதவியிலமர்த்தியது நீதிக்கட்சி

ஆதிதிராவிடர் [பஞ்சமர்] பொதுத் தெருவிலும் சகலமான சாலைகளிலும் நடந்து போகலாம் என்று முதன் முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி

நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டிதியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில்தான் முதன்முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது

நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும் பார்வையற்றோர் பள்ளியும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன

தாழ்ந்தப்பட்ட சகோதரர்களை பறையன் என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து ஆதிதிராவிடர் என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர் சி.நடேசனார்

திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்க்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்திரவிட்டது

1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது

வேலை கேட்டு மனுச் செய்த ஓர் ஈழவ சமூகத்தைச் சார்ந்த டாக்டர் பல்புவுக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து குலத்தொழிலைச் செய்ய சொன்னவர் திருவாங்கூர் சமஸ்தான திவான் ராகவய்யா

கோவை சிங்காநல்லூரில் 1930 ஆம் ஆண்டுவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்க மறுத்தார்கள்

நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது

சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் கூட பார்ப்பன மனநோயாளிகளுக்குத் தனிப்பிரிவு இருந்து வந்தது

1943லும் குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் குடி தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தன

1918 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் படித்த 511 பேரில் 389 பேர் பார்ப்பனர் சட்டம் படித்த 54 பேரில் 48 பேர் பார்ப்பனர்

1937 ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி போதிய நிதி வசதியில்லை எனக்கூறி கிராமப்புறங்களில் இருந்த 2500துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடி அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக 12 லட்சம் செலவில் வேத பாடசாலைகளைத் துவக்கினார்

1952ல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்த ராஜாஜி அந்த சிறுவர்கள் சாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவு போட்டார்

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை உத்தரவு போட்டு ஒழித்தவர் ராஜாஜி

1952 ல் திருவாண்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜாஜி அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும் படிக்கக்கூடாது என பகிரங்கமாகவே பேசினார்

சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் முதலிய திராவிட மொழிகள் அறவே புறக்கணிக்கப்பட்டு படித்திட வாய்ப்பே தரப்படவில்லை சமஸ்கிருதம், உருது,அரபி,பாரசீகம் முதலியன மட்டுமே கற்பிக்கப்பட்டன 1926ல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்த நிலை மாற்றப்பட்டது

இவை அனைத்தும் திராவிடர் இயக்க போராட்டத்தினாலே இந்த உரிமை தமிழர்களுக்கு கிடைத்தது

தகவல் திராவிடர்கழக வெளியீடான திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்? நூலிலிருந்து

நன்றி!

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நீதிக்கட்சி நூறு சுயமரியாதை இயக்கம் தொண்ணூறு - கலி.பூங்குன்றன்


தாழ்ந்தவர் என்பர் உயர்ந்தவர்க்கு இம்மொழி இன்பம் - இந்தச்
சாத்திரத்தால் இந்த நாள்வரைக்கும் துன்பம்! - மண்ணில்
தாழ்ந்தவர் என்றொரு சாதியுரைப்பவன் தீயன் - அவன்
தன்னுடலைப் பிறர் சொத்தில் வளர்த்திடும் பேயன் - நீர்
தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் - இனிச்
சாக்குருவிச் சத்தம் நீக்கிடுவீர் மன வீட்டில் - இன்று
வழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் - வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்!
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

பிறப்பிலேயே பேதம் பேசும் நாடு இது. இந்தச் கேவலத்துக்குக் கடவுள் துணை _ மதம் பாதுகாப்பு _ சாத்திரம் சாய்கால் -_ ஏன் இந்த அரசமைப்புச் சட்டமே பாடுவது ஏற்றப் பாட்டு.
ஜாதி ஓர் அடையாளமாக இருந்தால் கூட இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும் என்று அலட்சியத் துடைப்பத்தால் தட்டி விட்டுப் போகலாம்.
அப்படியில்லையே! அவன் பிறப்பை இது மய்யப்படுத்தி, இழிவைத் துடைப்பத்தால் அல்லவா மொத்துகிறது.  தாசிமகன் என்றல்லவா, வைப்பாட்டி மகன்கள் என்றல்லவா முத்திரை குத்துகிறது.
உலகத்தில் எங்கும் கேள்விப்படாத பெருங்கொடுமை இது. ஆம்... கடாரம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் யார்? இமயம்வரை சென்று எதிரியின் தலையில் கல்லைச் சுமத்திக் கொண்டுவந்த மன்னவர்களின் பூமியாயிற்றே!
ஆனாலும் அந்த மன்னாதி மன்னர்கள் _ இங்குச் சூத்திரர்கள்தான் _ பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தான்.
இதன்மீது ஏன் கோபம் குமுறி எழவில்லை? ஆத்திரம் ஏன் அலைமோதவில்லை? அதுதான் பக்தி என்னும் போதை _ கடவுள் என்னும் மாத்திரை _ சாஸ்திரம் என்னும் சாத்துப்படி.
இழிவை ஏற்றதோடு அல்லாமல், அதனை ஏற்றமானதாகக் கருதினான்; தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக சொன்னதுபோல அவன் மூளையில் மத விலங்கு மாட்டப்பட்டுவிட்டது.
இந்த இன இழிவை ஒழிக்க வேண்டுமானால் அவன் கடவுளைக் கருவறுப்பவனாக இருக்க வேண்டும்; மதத்தை மரணக் குழிக்கு அனுப்பும் வீரனாக இருக்க வேண்டும். சாத்திரத்திற்கு நெருப்பு வைத்து சாம்பலாக்கும் சரித்திர நாயகனாக இருக்க வேண்டும்.
அந்த நாத்திகர்தான் _ அந்த மான வீரர்தான் _ அந்தச் சரித்திர நாயகர்தான் தந்தை பெரியார்.
திண்ணைப் பள்ளிக் கூடத்தில், தான் குடித்த தண்ணீர்க் குவளையை தண்ணீர்த் தெளித்து ஒர் உயர்ஜாதிப் பெண் எடுத்தபொழுது அந்த இள வயதில் அவர் உள்ளத்தில் பீறிட்டு எழுந்த அந்தச் சுயமரியாதைதான் _ நாட்டில் நிலவும் _ அவமரியாதைகள் _ ஏற்றத் தாழ்வுகள், உரிமை மறுப்புகளைக் கண்டபொழுது சுயமரியாதை இயக்கம் என்னும் சூறாவளியாகப் புறப்பட்டது.
கட்சி அரசியலுக்கு அவர் செல்லும் முன்பும் சரி, காங்கிரஸ் கட்சி அரசியலுக்குள் நுழைந்தபோதும் சரி, அவருக்கு உதித்த சிந்தனைகள் எல்லாம் அந்தச் சுயமரியாதைச் சூறாவளி என்னும் தாயின் கர்ப்பத்திலிருந்து வெடித்ததுதான்.
காங்கிரசில் இருந்தபோது வைக்கம்வரை சென்று போராடியதற்கும், காங்கிரஸ் நிதி உதவியோடு நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் காட்டப்பட்ட மேல்ஜாதி _ கீழ்ஜாதி நடவடிக்கைகளை எதிர்த்து, அதனை ஊற்றி மூடியதற்கும், ஒரு கட்டத்தில் தான் தலைவராக ஏற்றுக்கொண்ட காந்தியார் அவர்களையே முகத்துக்கு முகம் எதிர்த்ததற்கும் _ தன்னால் தமிழ்நாட்டில் கட்டிக் காப்பாற்றப்பட்ட காங்கிரசுக்கு முழுக்குப் போட்டதற்கும் _ எல்லாவற்றிற்குமே காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் தணலாக எப்பொழுதும் கனன்று கொண்டிருந்த சுயமரியாதையே!
கடவுள் இல்லை _ இல்லவே இல்லை _ கோயிலுக்குள்ளிருப்பது கல்லுதான் என்று கர்ச்சித்த தந்தை பெரியார், அந்தக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமை தாழ்த்தப்பட்டவர் முதல் அனைத்து ஜாதியினருக்கும் உண்டு என்று உரிமைக்குரல் கொடுத்தற்கும்கூட காரணம் அந்த மனித சுயமரியாதை உணர்வுதான்.
கடவுள்களைப் போட்டு உடைத்ததற்கும், புராண இதிகாசங்களைக் கொளுத்தியதற்கும், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியதற்கும் கூட காரணம் அந்தச் சுயமரியாதைதான்.
அந்தச் சுயமரியாதை என்பதன் மீது இந்தச் தலைவருக்கு அப்படி என்ன அதீதமான காதல்?
இதற்கு அந்தச் சுயமரியாதை ஞான சூரியனிடமே கேட்கலாம்.
இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டுவந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் _ அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது (குடிஅரசு 01.06.1930) என்கிறார் அந்த ஞானசூரியன்.
இரண்டு முறை கதவைத் தட்டி இந்தாருங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இம்மாநில முதல் அமைச்சர் பதவியை என்று வெள்ளைக்காரக் கவர்னர்கள் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தபோதும்கூட அட்ரஸ் தெரியாமல் என்னைத் தேடிவந்து விட்டீர்கள், அந்த முதல் அமைச்சர் பதவிக்கு ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் நாட்டில்; ஆனால், மக்களுக்குச் சுயமரியாதையை ஊட்டும் இந்தப் பணியைச் செய்வதற்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை! என்றாரே! அந்த அறிவிப்புக்கு எடையாக எந்தப் பொருளை ஈடு கொடுக்க முடியும்?    ஆம், அந்தச் சுயமரியாதைச் சொக்கத் தங்கம் பதவிக்குப் போகாததால்தான் இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட குடிமகன் முதல் தமிழர்கள் எல்லாம் பதவிக்குச் செல்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இழிவை ஒழிக்க இந்து மதத்திலிருந்து கரையேறி, புத்த மார்க்கத்திற்குப் போவோம்!  என்று தந்தை பெரியார் அவர்களை அழைத்தபோதுகூட, இழிவைச் சுமந்து கிடக்கும் மக்களைக் கைவிட்டுவிட்டு, நாம் மட்டும் இழிவு நீங்கி என்ன பயன்? இங்கிருந்துகொண்டே ஒருகை பார்க்கிறேன் என்று சொன்ன தந்தை பெரியார் இதில் பெரும்பாலும் வெற்றி பெற்றாரா? இல்லையா?
அய்யரை அழைத்து, அருந்ததி பார்த்து, அக்னியைச் சுற்றி, சப்தபதி எடுத்து வைத்தால்தான் கல்யாணம் செல்லுபடியாகும் என்ற நிலை இருந்த இந்தச் சமுதாயத்தில், அவற்றையெல்லாம் தூக்கிச் சாக்கடையில் வீசி எறிந்து, புரோகிதமற்ற புரட்சி மணக்கும் புதுத் திருமண முறையை அறிமுகப்படுத்தி அதற்குச் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரும் சூட்டி, நாட்டில் ஆயிரக்கணக்கான புரோகிதமற்ற புரட்சித் திருமணங்களை நடத்திக் காட்டினாரா இல்லையா?
சட்டப்படி அது செல்லாது என்று உயர்நீதிமன்றமே சொன்னது. இதன் பொருள் என்ன? சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் சட்டப்படியான தம்பதிகள் அல்லர்; அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படியானவர்களும் அல்லர் என்ற நிலை இருந்தும்கூட உங்கள் சட்டத்தைத் தூக்கி உடைப்பில் போடு! எங்கள் தலைவர் சொல்லுவதுதான் எங்களுக்குச் சட்டமே தவிர உங்கள் அரசியல் சட்டம் அல்ல என்று பல்லாயிரக்கணக்கானோர் திருமணங்களைச் செய்து கொண்டார்களே _ இந்த அதிசயம் _ புரட்சி இந்த உலகப் பந்தில் வேறு எங்குதான் நடந்திருக்கிறது என்று சொல்லட்டுமே பார்க்கலாம்.
தந்தை பெரியார் அவர்களின் சீடர் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து அய்யாவின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தாரே! (28.11.1967)
இதன் பிறகு நடக்கும் சுயமரியாதைத் திருமணம் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த சுயமரியாதைத் திருமணங்களும் (With Retrospective Effect)செல்லுபடியாகும் என்று சட்டம் செய்தாரே!
சட்டசபைக்கே செல்லாத தலைவருக்கு இந்தச் சட்ட சபையே காணிக்கை என்று அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தாரே, (20.6.1967) இந்த அதிசயம்தான் எங்கு நிகழ்ந்திருக்கிறது?
சூத்திரன் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுபோல் அழிந்து விடும் என்ற சாஸ்திரம் நங்கூரம் பாய்ச்சப்பட்ட இந்த இந்து நாட்டில் தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறேன் _ இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று (28.7.1971) ஒரு முதல் அமைச்சர் (மானமிகு மாண்புமிகு கலைஞர்) சட்டமன்றத்திலேயே முழங்கியதுகூட இந்தப் பாருலகில் எங்கு நடந்திருக்கிறது? எடுத்துக் காட்ட முடியுமா?
1929ஆம் ஆண்டு (பிப்ரவரி 17, 18) செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக மாறியுள்ளன. பெண்கள் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம் என்று அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களில் சொன்ன கருத்துகளும், திட்டங்களும்கூட சட்டங்களாகப் பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டன.
ஆட்சிக்குச் செல்லாத பெரியார் ஆட்சியை நடத்தினார் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.
சுயமரியாதை இயக்கம் என்கிறபோது அதற்கென்று தொடக்க விழா இல்லை; எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்றுகூட அறுதியிட்டுக் கூறமுடியாது. சமூகச் சூழலும், அந்தப் பருவத்தில் ஞான சூரியனாகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் வெடித்த கருத்துகளும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் சுயமரியாதை இயக்கம்.
காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் குடிஅரசு இதழைத் துவக்கினார்களே _ அந்த மே 2ஆம் தேதி (1925)யை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று கூறுவோரும், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் சமூக நீதிக் கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரே (22.11.1925) அந்த நாள்தான் சுயமரியாதை இயக்கம் பிறப்பெடுத்த நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு என்றாலும் 1925இல் தந்தை பெரியார் என்னும் பேராசானின் மூளையில் பிரசவிக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில்தான் 1975இல் தஞ்சையில் பொன்விழா அன்னை மணியம்மையார் அவர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. அதன் தொண்ணூறாம் ஆண்டு வரும் 18.ஆம் தேதி (18.11.2015) அன்று சென்னைப் பெரியார் திடலில் கொண்டாடப்படுகின்றது.
சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்துதான் சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற   வரலாற்றுத் திருப்பு முனையை உருவாக்கினார்! (27.8.1944)
இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! இது சமுதாயத்தில் மட்டுமல்ல. அரசியலையும் புரட்டிப் போட்டு இருக்கிறது. பொருளாதாரத் துறையிலும் புதிய சிந்தனை வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அதன் மாநாட்டுத் தீர்மானங்களை ஒரு கணம் கண்டாலே அதன் சகலப் பரிமாணங்களையும் அட்சரம் பிறழாமல் அறியலாமே!
சுயமரியாதை இயக்கம் குறித்து இங்கிலாந்தின் ஆர்.பி.ஏ. அமைப்பு ((Rationalist Press Association) 1931ஆம் ஆண்டிலேயே கணித்ததுண்டு.
இந்திய வரலாற்றில் வியக்கத்தக்கபடி சென்ற அய்ந்தாண்டுக் காலத்தில் ஒரு புதிய உணர்ச்சி வெள்ளம் இருகரையும் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் சென்ற அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநிலத்தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளும், உணர்ச்சிகளும் அடிப்படையிலே ஆட்டம் காணும்படிச் செய்துவிட்டது என்று குறிப்பிட்டது என்றால் இவ்வியக்கத்தின் வீறுகொண்ட தலைமையை அறியலாமே (ஆர்.பி.ஏ. என்னும் அமைப்பு பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம் _ லிட்டரரி கெய்டு (அறிவு விளக்கம்) என்னும் திங்களிதழில் _ 1931ஆம் ஆண்டு)
சுயமரியாதை இயக்கம் என்பதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.
மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது. (குடிஅரசு 20.9.1931) என்று சுயமரியதை இயக்கத்தின் கொள்கையைச் சுருக்கமாகக் கூறியுள்ளார் தந்தை பெரியார்.
சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வாழ்க்கை நெறிமுறை. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற அறிவு மொழியைக் கண்ணொளியாக அளித்த வாழ்வியல்! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதே அதன் இலக்கு.
நீதிக்கட்சி என்று சொல்லப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றம் 1916ஆம் ஆண்டு. அதனை மய்யப்படுத்தியே 2015ஆம் ஆண்டை நீதிக்கட்சியின் நூற்றாண்டுத் தொடக்கமாகக் கருதி விழாவினை திராவிடர் கழகம் எடுக்கிறது. (நவம்பர் 17, 18, 19, 20 _ 2015 -_ இடம்: பெரியார் திடல், சென்னை-_7).
இந்த அமைப்புத் தோன்றுவதற்கு மும்மூர்த்திகளாக இருந்த பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்கள் ஆவார்கள்.
1912ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக்கு முன்னோடியாக ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குரிய பெருமான் டாக்டர் சி.நடேசனார். அவ்வமைப்பின் பெயர் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League) 1913ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த நீதிக்கட்சி.
அதன் முதல் கொள்கை அறிக்கையை (Non-Bramin Manifesto) வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார். (20_12_1916) அந்த அறிக்கையை முழுமையாகப் படித்தால் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்துகொள்ள முடியும்.
இந்த அறிக்கை வெளிவந்தபோது பார்ப்பன இந்து ஏடு எழுதிய தலையங்கம் கவனிக்கத் தக்கதாகும். மிகவும் துயரத்துடனும், ஆச்சரியத்துடனும் நாங்கள் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம்.(It is with much pain and surprise we persued the documents) என்று எழுதியது என்றால் பார்த்துக் கொள்ளலாமே. அவாள் கண்ணோட்டத்தில் அது சரி தானே!
அந்த இயககம் அல்லவா பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறிந்தது, பார்ப்பனர் அல்லாதார் தலைதூக்கக் காரணமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்ற ஏடும், தமிழில் திராவிடனும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்று மூன்று ஏடுகள் தொடங்கப்பட்டன.
பார்ப்பனரல்லாத மக்களுக்காக சமுதாய நிலை, பொருளாதார நிலை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு ஆகியவற்றைக் கிடைக்கச் செய்வதே நீதிக்கட்சியின் நோக்கமாகும்.
1922, 1923 சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனைகளை பார்ப்பனர் அல்லாதார் சமுதாயத்திற்கு வாரி வழங்கியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டியது நீதிக்கட்சி அமைச்சரவையே. அந்த ஒன்றுக்காகவாவது பார்ப்பனர் அல்லாதார் ஒவ்வொருவரும் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை நன்றி உணர்வோடு நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
ஒரு கொடுமையை நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது என்றால் இதன் கொடுமையையும் ஆரிய சூழ்ச்சியையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதா?
தந்தை பெரியார் கொடுத்த குரலைச் செவிமடுத்த அன்றைய முதல் அமைச்சர் பனகல் அரசர் அவர்கள் அந்த நிபந்தனையை உடைத்துச் சுக்கல் நூறாக்கித் தூக்கி எறிந்தார்.
அதன் விளைவுதான் இன்று தொப்புளான் எம்.எஸ்., அமாவாசை எம்.டி., குப்பம்மாள் எம்.பி.பி.எஸ். என்ற கண்கொள்ளாக் காட்சி!
நீதிக்கட்சியின் சாதனைப் பட்டியல்களுள்  இதோ ஒரு சில:
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப் படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளை களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்-பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்-பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்-படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1.    பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.-1921.
2.    பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் _- ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25.-3.-1922
3.    கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.-5.-1922.
4.    கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.-6.-1923.
5.    தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.-2.-1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.
6.    இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.-01.-1925.
7.    சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-.5.-1922. (ஆ) 1880 நாள்15.-9.-1928.
8.    வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13.9.1928.
9.    சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-.10.-1929.
10.    தேவதாசி ஒழிப்புச் சட்டம். (1930).
நீதிக்கட்சி 1916 முதல் பார்ப்பனர் அல்லாதார் கல்விக்காகவும், உத்தயோகத்துக்-காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் காங்கிரசுக்-குள்ளேயிருந்த அதே கருத்துக்கான குரலை கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல சட்டங்களுக்குக் காங்கிரசுக்குள்ளேயிருந்தே ஆதரவுக் குரல் கொடுத்தார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய நிலையில் மிகவும் வெளிப்படையாக நீதிக்கட்சியை அரவணைத்தார். அதன் செவிலித் தாயாகவே இருந்தார்.
அதனால்தானோ என்னவோ தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தந்தை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் சாதனைகளில் கை வைக்க யாருக்கும் துணிவு கிடையாது என்பதிலிருந்தே அக்கட்சியின், ஆட்சியின் அருமையும் பெருமையும் விளங்கும்.
----------------
சுயமரியாதை இயக்கத்தின் சாதனை!

- அசோக் மேத்தா
1977 செப்டம்பரில் தமிழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும், பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.
தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்-பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள்.  தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக்-கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது! என்று அசோக் மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 16.09.1977)
-உண்மை இதழ்,16-30.11.15

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!

அய்யாவின் அடிச்சுவட்டில் - 142...

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!
அந்த வழக்கறிஞர் அனுப்பிய கடிதம் இதுதான்!
RAM RAIS & YAP
8th January 1981
To
Mr. K. Veeramani,
13, I Main Road,
Kasturiba Nagar,
MADRAS - 600 020.
INDIA.
Dear Sir,
You may recall that when you were in Malaysia in 1979, you had received correspondence from this firm. I was then acting on behalf of the devotees of Satya Sai Baba to stop you from making deregatory remarks against the said Satya Sai Baba. I had then in personal capacity held similar views, having been a deveotee myself of Satya Sai Baba.
However, of late it has come to light that the said Satya Sai Baba has carried out homosexual activities on the boys studying in his colleges in whitefiled and Puttaparthi. His biggest mistake was that he carried out such activities on Malaysian students studying there. These students have brought to the notice of the public in Malaysia this activity of Satya Sai Baba. It has become necessary for the people in Malaysia to have proper assessment of him. Unfortunately the written materials available are the propaganda stuff published by Satya Sai Baba and his devotees.
There is the urgent need to circulate in Malaysia, books, new cuttings and other printed matter in English and Tamil pertaining to the fraud being perpetrated by Satya Sai Baba and his devotees. I am willing to purchase all of them. If you do have them, please be free to send copies of the same and let me know the charges. If you do not have for distribution, you can let me have the sources and the addresses from where I can obtain the materials.
I read in our local news papers that an Atheist conference was held in Vijayawada recently. There is the need for me to get held of the proceedings of the conference so that they can be made available to the public in Malaysia.
I think it is possible for us to work together in exposing the said Saya Sai Baba in Malaysia and Singapore. Kindly let me hear from you.
Yours faithfully,
HARIRAM JAYARAM
அய்யா, 1979_ஆம் ஆண்டு நீங்கள் மலேசியாவில் இருந்தபோது, இந்த நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீசும், அது தொடர்பான கடிதங்களும் அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்போது நான் சத்ய சாய்பாபாவின் சீடர்களின் சார்பில் செயல்பட்டேன். சாய்பாபாவை குறைகூறி நீங்கள் கருத்து தெரிவிக்காமல் தடைபடுத்த முயன்றேன். அப்போது நான் சாய்பாபாமீது நம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன். ஆனால், சாய்பாபா- _ புட்டபர்த்தியிலும், ஒயிட் பீல்டிலும் (Whitefield) (சாய்பாபா பகுதி) நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடக்கூடியவர் என்பது பிறகுதான் தெரியவந்தது. அதைவிட, அவர் செய்த மிகப்பெரிய தவறு _- அங்கே படித்த மலேசிய மாணவர்களிடமும் அவர் இதுபோல நடந்துகொண்டதுதான். சாய்பாபாவின் இந்த செயலை, அந்த மாணவர்கள் மலேசிய மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். எனவே, சாய்பாபா எப்படிப்பட்டவர் என்பதுபற்றி, சரியான முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக _- சாய்பாபாவும், அவரது சீடர்களும் எழுதிய நூல்கள்தான் இங்கே கிடைக்கின்றன. இந்த நிலையில் சாய்பாபா மற்றும் அவரது சீடர்களின் மோசடிகளை விளக்கக்கூடிய தமிழ் _- ஆங்கில நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், அவசரமாக தேவைப்படுகின்றன.
நான் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அவை இருக்குமானால், அதை உடனே அனுப்பி வையுங்கள்; அதற்குரிய கட்டணத்தை அனுப்பி வைக்கிறேன். உங்களிடம் அப்படி ஏதும் இல்லையென்றால், அவை எங்கே கிடைக்கும் என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்.
அண்மையில் _- விஜயவாடாவில் _- ஒரு நாத்திக மாநாடு நடந்ததாக, இங்கு வெளியான பத்திரிகையில் செய்தி வந்தது. அந்த மாநாட்டு நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால், அவைகளை மலேசிய மக்களுக்கு தெரியப்-படுத்தலாம். சாய்பாபாவின் மோசடிகளை மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அம்பலப்படுத்த நாம் இணைந்து செயல்பட முடியும் என்று கருதுகிறேன். அன்புடன் எழுதுங்கள்.
உண்மையுள்ள ஹரிராம் ஜெயராம்
ஆக, நம்மை எதிர்த்து வழக்காட முனைந்தவர் நம்மோடு இணைந்து நம் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய முன்வந்தது எப்பேர்பட்ட மனமாற்றம். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா? * * * மலேசிய வானொலியில் எனது பேட்டி: மலேசியா வானொலியில் பூச்சரம் நிகழ்ச்சிக்கு நான் அளித்த பேட்டியும் எனது பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதோ அந்தப் பேட்டி! மலேசிய நாட்டுக்கு வருவதென்பது என்னைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது தடவையாகும். 1968லே ஒருமுறை மலேசிய நாட்டை சுற்றிப் பார்த்து திரும்பி இருக்கின்றேன். இப்போது இரண்டாவது முறையாக வந்து இருக்கின்றேன். 10 ஆண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு இருக்கின்ற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. பாராட்டத் தகுந்த விதமாகவும் விரும்பத் தகுந்த விதமாகவும் இருக்கின்றது. அவைகளைத் தெரிந்துகொள்வதற்கும், தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டான இந்த ஆண்டு அவர்களுடைய அறிவியல் கொள்கை-களையும் கருத்துக்களையும் மலேசிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இங்கு வந்து இருக்கின்றோம். பொதுவாக உலகம் ஒரு குலம் என்கின்ற வகையிலே யாவரும் கேளிர் என்கின்ற முறையிலே மக்களுக்குள் பிறவிபேதம் செயற்கையாக இல்லாத ஒரு நிலையிலே சமுதாயம் அமைய வேண்டும். உழைப்புக்கு மரியாதை கொடுக்கின்ற சமுதாயம் அமைய வேண்டும்; சமநீதியும், சமவாய்ப்பும் அந்த சமுதாயத்திலே இரு அம்சங்களாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் ஒவ்வொரு தமிழரும், திராவிடரும் உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதுதான் இன்றைக்கு விரும்பத்தக்க நெறி என்பது தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையாகும். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள் எந்த நாட்டிலே இருந்தாலும் அவர்களைப் பாராட்டுகிறோம். அதிலும் குறிப்பாக திராவிட மக்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று நான் குறிப்பிட்ட-போது, என்னிடம் வானொலி நிலையத்தார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்.
கேள்வி: சமூக சீர்திருத்தப் பணியில் தாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றீர்கள். இந்த பல ஆண்டுகாலப் பணியிலே பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். அவைகளை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பதில்: என்னுடைய பத்து வயது முதற்கொண்டே தந்தை பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய தொண்டனாக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தத்தின் மூலம்தான் ஒரு சிறப்பான திருப்பத்தினை உருவாக்க முடியும் என்று நம்புகின்றவன். தந்தை பெரியார் அவர்களின் சமுதாய சம்பந்தமான கருத்துக்கள் 5000 ஆண்டு காலத்துப் பழமையினை எதிர்த்துக் கிளம்பிய காரணத்தினாலே பலத்த எதிர்ப்புகளை ஆரம்ப காலக் கட்டத்திலே அவை சந்தித்தன. ஏனென்றால் பழமையாளர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும்போது எதிர்ப்புக் காட்டுவதும் கூக்குரல் இடுவதும் எங்கும் இயற்கை. எவ்வளவோ எதிர்ப்புக்களையும் ஏளனங்-களையும் தந்தை பெரியார் அவர்கள் தன் போராட்டத்தின்போது சந்தித்தார்கள்.
ஆனாலும், எந்த மக்கள் அவர்களது கருத்துக்களை ஒரு காலத்தில் வரவேற்காமல் எதிர்த்தார்களோ அந்த மக்கள் பிறகு உணர்ந்து திரும்பி அந்தக் கருத்துக்கள்தான் சமுதாயத்தினுடைய தேவை என்று உணர்ந்து திருந்திய ஒரு திருப்பம் ஏற்பட்டதை தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளிலே கண்டு மகிழக்கூடிய வாய்ப்பினையும் பெற்றார்கள். அது வரவேற்கத் தகுந்தது; பாராட்டத் தகுந்தது. இந்த மாற்றம் என்னை மிகவும் கவர்ந்தது. கேள்வி: பெரியார் அவர்கள் மக்களிடத்தில் மட்டும் அல்லாமல் மொழியைக்கூட சீர்திருத்தம் செய்து இருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். இதுபற்றி தங்களுடைய கருத்து என்ன? பதில்: மொழி என்பதற்கு எந்தவிதமான புனித தத்துவமும் தேவையில்லை. அது மக்கள் ஒருவருக்கு ஒருவர் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு கருவி அவ்வளவுதான். எப்படி போக்குவரத்துச் சாதனமோ, அதுபோல மொழியும் என்பது தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படைக் கருத்தாகும். ஒரு காலத்தில் மக்கள் கட்டை வண்டியில் பயணம் செய்தார்கள். ஆனால், இன்று 3 மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்ததைப் போல, மொழியிலும் மாற்றம் வேண்டும் என்று நினைத்ததால் தந்தை பெரியார் அவர்கள் வெறும் பழமையைப் பேசிக் கொண்டு மட்டும் இருந்தால் தமிழ்மொழி வளராது, அதனுடைய வளர்ச்சி உலக மக்களுக்குப் பயன்படாது என்று கருதிய காரணத்தினால் 45 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்தை ஆங்கில எழுத்துக்கள் சுருக்கமாக இருப்பதுபோல சுருக்கப்படலாம்; அதன் மூலம் தமிழ் தட்டச்சு, டைப்ரைட்டர் மாற்றி அமைக்கப்படலாம், தமிழ் அச்சு எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்படலாம்;


தமிழ் கற்கின்ற பலருக்கு எழுத்துக்கள் குறைவாக, சுருக்கமாக இருக்குமேயானால் அது ஆழமாக பரவலாகப் பயன்படலாம் என்று கருதி 247 எழுத்துக்கள் தேவை இல்லை. அதற்குப் பதிலாக 26 அல்லது 30 எழுத்துக்களுக்குள்ளாக அடக்கி விடலாம் என்று அவர்கள் நினைத்து, எழுதி, பேசி, அந்த சீர்திருத்தத்தை தாம் நடத்திய குடி அரசு, விடுதலை, உண்மை மற்றும் தாம் பதிப்பித்த இயக்க நூல்கள் இவைகளின் மூலமாக தொடர்ந்து கையாண்டு வந்தார்கள். இந்தக் கருத்தினை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்பெல்லாம் குறைந்த நிலையிலே தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி தமிழக அரசு தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு, அமலுக்குக் கொண்டுவந்து தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பினைச் செய்து இருக்கின்றது. அதன் காரணமாக தமிழ் மொழி ஏனைய பிறமொழி மக்களிடையே பரவுவதற்கும் எளிதாகக் கற்றுக் கொள்வதற்கும், எழுதப் படிக்கத் தெரியாத தமிழ் மக்கள்கூட எளிதில் கற்றுக் கொள்வதற்கும் சுலபமான ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. எதையும் பயன் கருதித்தான் நோக்க வேண்டும் என்று கருதுகின்ற தந்தை பெரியார் அவர்கள் ஓர் அழிவு வேலைக்காரர் என்று சொன்னதை மாற்றி ஆக்கரீதியாகவும் அவராலே சிந்திக்க முடியும், செய்து காட்ட முடியும் என்பதற்கு அவர்களுடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஒரு அருமையான நல்ல சான்றாகும்.
-உண்மை இதழ்,16-30.11.15