வெள்ளி, 1 நவம்பர், 2019

தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்- 21

தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்

(Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

வெளிவண்ணம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியநாடு முழு மையும் பரவியிருந்த பண்பாடு, நெருங்கிய ஒற்றுமையு டையதாகும். பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படை யான அஃது, இன்னும் முழுமையாகக் கண்டறியப்பட்டிலது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகள் வீழ்ந்து கிடக்குமாயின் அடியிலுள்ளது அறியப்படாது. மேற்பரப்பே பலராலும் அறியப்பட்டுப் பேசப்படுமாறு போன்று நிலைமை உளது. அவ்வடிப்படை நாகரிகம் திராவிட நாகரிகமே என்ப தற்கு எட்டுணையும் அய்யமின்று. சமயம், மெய்ப்பொருள், சடங்குகள், மருத்துவம், நுண்கலை, இலக்கியம் போன்ற ஒவ்வொன்றிலும் சமற்கிருதப்படுத்துதல் (ஷிணீஸீsளீக்ஷீவீtவீக்ஷ்ணீtவீஷீஸீ) என்பது, மேற்பரப்பில் காணப்படும் மாற்றமேயாகும். பிறிதொரு வகையாகக் கூறினால் இவை பேரளவில் மட்டும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எனலாம். பேரளவில் என்பது மிகுதியையும் சுட்டும்; பேர் அளவில் என்று, பெயரளவில், கலைச் சொற்களின் அளவில், பெயர் மாற்றங்களின் அளவில், அவ்வத்துறை சார்ந்த நூல்களை ஆக்கிப் படைத்துக் கொண்ட அளவில் நிகழ்ந்தவற்றையும் சுட்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமயம், நுண்கலைகள், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலதன அடிப்படையின; அவை சமற்கிருத மொழியில் விளக்கப்பட்டுள்ளன-பெயர்த்தெழுதப் பட்டுள்ளன-பாதுகாக்கப்பட்டுள்ளன. அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா. இன்று ஆங்கிலம் போலச் சமற்கிருதம் ஆள்பவரின் மொழியாகவும் அதனால் பொதுமொழி நிலையிலும் செயற்பட்ட கால கட்டங்கள் பலவாகும். எனவே, பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் முதல் தீபாவளித் திருநாள்வரை எந்த ஒரு விளைவுக்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழடிப் படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது வண்ணத்தைக் காட்டுகின்றன.

பெரும்பாலானவற்றில் திராவிட உள்மூலமும் சமற்கிருத வெளிவண்ணமும் உள. ஒரு சொல் முதல் பெரும் புராணங்கள் வரை, சமுதாயக் கலைத்துறைகள் அனைத் திலும் இவ்விருசார்புமிருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்பிலே நின்று, தாம் கண்டதே காட்சி என வீண் வம்பில் காலந்தள்ள இடமேற்படுகிறது.

அறிவாளர் மனநிலை

நம் நாட்டில் கலைஞர்கள், கற்றறிந்தவர்கள், சமய வாதிகள், மருத்துவர்கள் எல்லோரும் தத்தமது கலை, கல்வி, சமய, மருத்துவ நுட்பங்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்துத் தமக்கும் தமக்கு வேண்டியவர்க்கும் மட்டும் உரிய மறைபொருளாக்கி-முதலீடாக்கிக் கொண்டு தமது வாழ்வினை உயர்த்திக் கொள்ளும் மனப்போக்கினராயிருந்தனர். அதற்காகத் தத்தமது அறிவுடைமைகளைப் பிறர் அறியா வண்ணம் முற்றிலும் மறைத்துக் காத்து, வேண்டும்போது மட்டும் வெளிப்படுத்திக் காசாக்கி வாழ்ந்து போயினர். இதனால் பற்பல நுட்பத் திறன்கள், அவ்வத்திற னுடையார் மறைந்தபோது, தாமும் மறைபொருளாயிருந்தே மறைந்தொழிந்தன. இத்தனியுடைமை மனப்போக்கிற்கு முன்பு சமற்கிருதம் கைகொடுத்தது; இப்போது ஆங்கிலம் உதவி செய்கிறது. அம்மொழிகளில் கலைச்சொற்கண்டு, எழுதி வைத்துப் பிறரறியாமல் மறைத்து அல்லது பேணிக் காத்து, வேண்டும்போது வெளியிடுவது, ஒருவர் தாம் திறனுடையவர் எனக் காட்டிக்கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. இதனாலும் இவை அறிவுடையோர் மொழிகளாக-கலைஞர்களின் கருவியாக-திறனுடையார் ஊடகமாக இந்நாட்டில் விளங்கின. இதனால் இவை அறிவுமொழி போலவும் தமிழ் அனைய தாய்மொழிகள் சாதாரணமாக-அன்றாட வாழ்வுக்கு மட்டும் பயன்படும் மொழிகள் போலவும் மொழிச்சாதிகள் உருவாயின. இதனை ஆரியச் சூழ்ச்சி என்பதை விட, அறிவுடையோர் அனைவரின் சூழ்ச்சி என்றால் மிகையாகாது.

கலை இங்கே; விளக்கம் அங்கே

பலவற்றில் நோக்குங்கால் வடிவம் தமிழாக இருக்கும்; வண்ணப்பூச்சு வடமொழியாக இருக்கும். அடித்தளம் திராவிடமாயிருக்கும்; மேற்பரப்பு வடமொழியாக இருக்கும் மேற்பூச்சைக் கண்டதும் எல்லாம் வடமொழியிலிருந்து வந்தன என்று தோன்றும்; மேற்பரப்பைப் பார்த்ததும் சர்வம் சமற்கிருதமயம் என்று கூறவே மனம் முந்தும். பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் தென்னாட்டில் தென்திசை நோக்கி வரவர அக்கலை வளர்ந்த வரலாறும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய உண்மைகள் புலனாகும். தமிழகக் கோயிற் சிற்பங்களில் நூற்று எட்டுக் காரணங்கள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தமிழகத்தே இதற் கெனத் தனி வகுப்பார் இருந்தமை, பொட்டுக் கட்டும் வழக்க மிருந்த அண்மைக்காலம் வரை நாடறிந்த செய்தியாகும். இந் நாட்டியம் எனப்படும் சதுர் தென்னாட்டுக் கலையாகும். தமிழர் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் நாட்டுப்புறவியல் ஆடல் வகைகளில் ஒன்றே அது. சதுர் ஆடுவதற்கென்றே ஒரு விரிப்புண்டு. அதைச் சதுர்ச்சமுக்காளம் என்பது ஒரு வட்டார வழக்கு. முன்பு சதுர் வைக்காமல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதே இல்லை. இறைவனையே ஆடற் கலை வல்லானாகக் கண்ட இக்கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுக்களிலும் சிற்பங்களிலும் குவிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பற்றி அய்ந்து, அறிந்து தொகுத்து, வகுத்துக் காட்டிக் காப்பார் இன்றைக்கு வரை எவருமிலர். ஆயின் இவற்றைக் காத்தருளிய பரதமுனிவர் காலத்திலேயே தமிழ் மூலங்கள் வடமொழிக் காப்புப் பெற்ற முயற்சிகள் தோன்றிவிட்டன. இதனால் அக்கலை வடமொழியிலிருந்து வந்தது என்றோ, வடவர்க்கு உரியது என்றோ விவாதிப்பது அறிவுடைமையாகாது. விந்தியத்திற்கு வடக்கே இக்கலை கால் கொண்டிருந்ததில்லை. காசுமீரத்திலிருந்து பரதர் இதை எழுதினாரெனில், அவர் எழுதிய வரலாறுதான் ஆராயப்பட வேண்டுமே தவிர, அக்கலை பல நூற்றாண்டுகளாக விளங்கி வருமிடத்திற்கு உரிமையு டையதாகாது என எழுதிவிடுதல் கூடாது. சங்க அக இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் ஆய்வேடுகள் பல தோன்றியுள்ளன. சில நூற்றாண்டுகட்குப் பிறகு இவ்வாங்கில ஏடுகளில் புகழ்பெற்ற ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருவர் அகத்திணை மரபு தமிழர் அய்ரோப்பியரிடமிருந்து கடன் பெற்றது என விவாதித்தால் எவ்வாறிருக்குமோ அவ்வாறே இதுவும் உளது. கலை ஓரிடத்தில் காலூன்றியிருக்க, அதற்கு விளக்கம் பிறிதொரு மொழியில் இருக்கு மானால், அவற்றிடையே ஏற்பட்ட உறவிற்குரிய காரணத்தை உண்மை காணும் மனப்போக்குடன் ஆராயவேண்டும். இதனை அறியாமல் ஒருவர் பரதக்கலை தமிழர்களுடை யதன்று என்று ஆய்வுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றுவிட்டால், அதைக்கண்டு நோவது மட்டும் போதாது. எவரேனும் ஒருவர் தம் வாழ்நாளையே இதற்கென ஒப்படைத்து இக்கலையைக் கற்றும், இதனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் தென்னாடு, வடநாடு எங்கும் அலைந்து தொகுத்தும் கல்வெட்டு, சிற்பம், சமூகம் அனைத் தையும் ஊடுருவி ஆராய்ந்தும் உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். இன்றைய டாக்டர் பட்டங்கள் நமக்கு உரிமங்களாக உதவுகின்றன. அது போதாது. பரதக் கலை எங்களுடையதே என உணர்ச்சிவயப்பட்டு வானதிர முழங்கினாலும் போதாது. தமிழுக்கு உயிரைக் கொடுப்பது என்றால் என்ன? இத்தகைய அடிப்படை ஆய்வுகட்கு வாழ்நாட்களையே துறக்கவும் துணியவேண்டும்.

கருதுகோள் யாது ?

தமிழ் வடிவங்கள் பல வடமொழி வண்ணப் புறப்பூச்சைப் பெற்றுள்ளன; தமிழ் மூலங்கள் பல வடமொழியில் வளர்ச்சி பெற்றுள்ளன என மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் காட்டலாம். இக்கருதுகோளை  (Hypothesis) நிறு விடும் அளவு சான்றுகள் இருப்பதால் நாம் உணர்ச்சி வயப்படத் தேவையில்லை. நமக்கு வடமொழியுடன் பகை இல்லை. எல்லாம் வடமொழியே; தமிழில் ஒன்றுமில்லை என்பார் நெஞ்சிற் போய் உறைக்குமளவு நாம் ஆய்வுரைகளை எழுதிக் குவிக்க வேண்டும்; ஆரவார உரைகளால் இனிப் பயனில்லை. உண்மையை இருசாராரும் ஒப்பும் வண்ணம் நம் ஆய்வுகள் காரண காரியத்துடன் அமைய வேண்டும்.

இந்தியப் பொதுப் பண்பாட்டிற்கும் தமிழ்ப் பண் பாட்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் திருக்கார்த்திகை, தீபாவலி (தீப+ஆவலி - விளக்கு வரிசை) என்ற இருபெரு விழாக்களுக் குமிடையே உள்ள ஒற்றுமை இதை மெய்ப்பிக்கும். இவ்விரண்டு விழாக்களும் ஒரு காலத்தில் ஒரே விழாவாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்தன என முடிவு கூறுதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.

விழாக்களின் அடிப்படை என்ன ?

இந்தியநாடு முழுவதும் தீபாவலி கொண்டாடப்படுகிறது. நாம் அதைத் தீபாவளி எனத் தவறாக ஒலிக்கின்றோம். இது வடநாட்டவர்-ஆரியரால் நம்மிடம் புகுத்தப்பட்ட விழா என்றும், நரகாசுரனைத் திருமால் கொன்று உலகைக் காத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றும் கருதப்படுகிறது. இதில் புத்தாடை பூண்டு, மத்தாப்பூக் கொளுத்தி வெடி வெடித்து, இனிப்புண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. வடநாட்டவர்கள் இதனைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கருது கின்றனர். வடநாட்டுத் தொழிலதிபர்கள் தீபாவளி பிறந்ததும் புதுக்கணக்கு எழுதுகின்றனர்.

நாம் இன்று சித்திரை வருடப்பிறப்பில் புதுக்கணக்கு எழுதுவது போன்றது இது. வடநாட்டவர்க்கே உரிய விழாவெனில் தென்னகமெங்கும்-தமிழக முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் இவ்விழா கொண்டாடப்படுவதேன்? ஒரு சமூகத்தின் பண்பாடு-சமயம்-உளவியல் இவற்றோடு தொடர்புடையன திரு விழாக்கள். ஒரு சமூகத்தின் மேல் ஒரு திருவிழாவை எளிதில் நுழைத்துவிட முடியாது. அங்கேயே நடைபெறும் விழாவைப் புறத்தாக்குரவால் சிறிது மாற்றியமைக்கலாம்.

அடிப்படையான சமய மாற்றத்தால் ஒருவர் புதிய விழாக்களை மேற்கொள்ளலாம். சமுதாயம் முழுவதும் கொண்டாடும் விழாவெனில், அது புறத்தேயிருந்து நுழைக்கப்பட்டதா என்பதைச் சற்றே தயங்கி ஆராய்ந்த பிறகுதான் சொல்ல வேண்டும்.

நவராத்திரி விழாவைத் திருமலை நாயக்கர் தமிழகத்தில் புகுத்தினார் எனக் கூறப்படுகிறது. அது முழு உண்மையன்று, முன்பு தொன்றுதொட்டு வழங்கி வந்த விழாவில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையை இவ்வாய்வாளர் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளார். பிறந்தநாள் விழாக் கொண்டாடும் மரபு மிகப் பழமையானது தமிழர்களுக்கு. புறத்திணையில் ஒரு துறையாகக் குறிக்கப் பட்டு பல பாடல்களால் அறியவரும் அதனை, ஒருவர் மேனாட்டார் பிறந்தநாளைக் கொண்டாடும் மரபின் தாக் குரவால் இது வந்ததென எழுதிவிடுவாராயின் அது முழு உண்மையாகி விடுமா? பிறந்த நாளில் கேக்கு வெட்டுவது வேண்டுமானால் நாம் பிறரிடமிருந்து கற்றதாக இருக்கலாம்.

ஒன்று இரண்டானது

திருக்கார்த்திகை விழாதான் தீபாவலி விழாவென்று ஆயிற்று. தீப+ஆவலி என்றால் விளக்கு வரிசை என்றுதான் பொருள். இரண்டும் இந்திய நாடு முழுவதும் ஒரே பண்பாடாயிருந்த தொன்மை மிக்க காலத்தில் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்பு பல்வேறு காரணங் களால் இரண்டு விழாக்களாகப் பிரிந்தன. இவற்றுள் தீபா வலியை மட்டும் வடவர் கொண்டாட, தீபாவலி, திருக் கார்த்திகை இரண்டையும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்; இந்த உண்மையை உணர்த்துவதே இங்குக் கருத்தாகும்.

தொன்மை மிக்கது திருக்கார்த்திகை

தென்னாடு முழுவதும், சிறப்பாகத் தமிழகத்திலும் கேரளத்திலும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருமயிலைத் திருப்பதிகத்தில்,

வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மறுகில்

துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்

தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

என்று குறிப்பிடுகிறார். இதில் விளக்கீடு என்பதே வடமொழியில் தீபாவளி எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இது தொல் கார்த்திகைத் திருநாள் எனப்படுமாயின், இது மிகப்பழங்காலந்தொட்டுக் கொண் டாடப்பட்டு வருவதென்பது தெள்ளிதிற் புலனாகும். இளம் பெண்களே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடும் விழாவென்ற குறிப்பும் உணரத்தக்கது.  இது மிகத் தொன்மையான விழா என்பதையும் இதில் விளக்குவரிசையே தீப ஆவலியே-இன்றியமையாச் சிறப்பு என்பதையும் சங்கப் பாடல்களி லேயே அறியலாம். அகநானூற்றில் அவ்வையார்,

இலையில மலர்ந்த முகையில் இலவம்

கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி

(அகம். 11)

என்று இலவம்பூ வரிசைக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாக்குகிறார். ஆரவாரத்தோடு மகளிர் மிகமகிழ்ந்து நீண்ட வரிசைகளில் விளக்கேற்றுவதை இதிற் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ கார்த்திகை நட்சத்திரத் திற்குரிய கார்த்திகை மாதத்தில் அழகிய நீண்ட விளக்கு வரிசைகளை வைப்பது போலக் கோங்கமலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கற்பனை செய்கிறார் :

அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்

செல்சுடர் நெடுங்கொடி போலப்

பல்பூங் கோங்கம் அணிந்த காடே

(நற். 202)

கார்த்திகை மாதம் அறஞ்செய் திங்கள் எனப்படுகிறது. அறுமீன்-கார்த்திகை நட்சத்திரம், செல்சுடர் நெடுங்கொடி, அஞ்சுடர் நெடுங்கொடி என்பன நீண்ட விளக்கு வரிசைகள் (கொடி - வரிசை) தீப ஆவலி இதன்மொழி பெயர்ப்பே என்பது வெள்ளிடைமலை. நக்கீரர் இவ்விழா முழுநிலவன்று - பவுர்ணமியில் கொண்டாடப்படும் என்ற கருத்தைத்

தருகிறார்.

- தொடரும்

- விடுதலை நாளேடு 29 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக