
வைக்கத்து வீரர் என யாரைச் சொன்னோம்?
‘வை கத்தி!’ தீண்டாமைக் கழுத்தில் என்று
வரிப்புலியாய்க் களம் சென்று வாகை சூடி
வைத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்!
– என்று எழுதினார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு பெரியாருக்கு வைக்கத்தில் மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பி நாளை 12ஆம் தேதியன்று திறந்து வைக்க இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
வைக்கத்தில் ஏற்கெனவே இருந்த நினைவகமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அறிவாசான் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்அவர்களும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.
வைக்கம் போராட்டம்
வைக்கம் போராட்டம் என்பது 1924ஆம் ஆண்டு நடைபெற்றது. இது நூற்றாண்டு விழா ஆண்டு. நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாடிய தமிழ்நாடு அரசு, வைக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைமறுசீரமைப்பு செய்யவும் திட்டமிட்டது. எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று திறப்பு விழாக் காண்கிறது வைக்கம். வெற்றி விழா காணப்போகிறது பெரியாரின் போராட்டம்.
30 மார்ச் 1924 அன்று வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும்.
குன்னப்பி (புலையர்), பாஹுலயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மறுநாள், ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியானது காந்தியாருக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தைச் சிறிது காலம் தள்ளி வைக்கலாம் என்று அவர் தந்தி அனுப்புகிறார். ஆனால் அதனை கே.பி.கேசவ மேனன் ஏற்கவில்லை. கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஏ.கே.பிள்ளை, கே.வேலாயுத மேனன், கே.கேளப்பன், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றனர். அடுத்து வழிநடத்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அவர் ஏப்ரல் 13 அன்று வைக்கம் வருகிறார்.
தந்தை பெரியார் தலைமையில்
கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். கோவை அய்யாமுத்து உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அகாலிகள் வருகிறார்கள். போராட்டம் மிகத் தீவிரமாகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், மற்ற மாநிலத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்று மதத்தவர் கலந்து கொள்ளக் கூடாது என்றும் காந்தியார் கட்டுப்பாடுகள் விதிக்கிறார். ஆனால் அதனை சத்தியாக்கிரகிகள் ஏற்கவில்லை.
கோட்டயம் மாவட்டத்துக்குள் நுழைய பெரியாருக்கு தடை விதிக்கப் பட்டது. அதை மீறிச் சென்றார், கைது செய்யப்பட்டார். மே 22 ஆம் தேதி கைதான தந்தை பெரியார் ஜூன் 21இல் விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர், மீண்டும் போராடினார். ஜூலை 18 அன்று இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் பெரியார். ஆகஸ்ட் 31இல் விடுதலை செய்யப்பட்டார்.
காந்தியார் வருகை
1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி காந்தியார் வைக்கம் வந்தார். சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார். உயர் வகுப்பு பிரதிநிதிகளையும் சென்று சந்தித்தார். மூன்று திட்டங்களை வைத்தார். அதனை உயர் வகுப்பினர் ஏற்கவில்லை. உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது. திருவிதாங்கூர் மகாராணியின் பிரதிநிதியையும் காந்தியார் சந்தித்தார். நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் உடன் இருந்தனர். ராணியையும் சந்தித்தார் காந்தியார். 1925 மார்ச் 18 தடைகள் நீக்கப்பட்டு சாலைகள் திறந்து விடப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டச் சுருக்கம் ஆகும்.
வைக்கம் போராட்ட (1924-1925) காலத்தில் 114 நாட்கள் தந்தை பெரியார் அங்கு இருந்திருக்கிறார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு மொத்தம்74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துச் சாலைகளும் திறந்து விடப்பட்டதால், போராட்டங்களை நிறுத்துவது என்று முடிவெடுக் கப்பட்ட 17.11.1925 அன்றும் பெரியார் வைக்கத்தில் இருந்தார். வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். ஆனாலும் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டவர் அல்ல பெரியார்!
வெற்றிக்குக் காரணம்
1933ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கெடுத்தார். அப்போது பெரியாருக்கு முன் பேசிய சிலர், வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் சொன்னார்:
“என்னைப் பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாகிரகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதை நடத்துவித்ததும், அது வெற்றியாய் முடிவு பெறக் காரணமாய் இருந்ததும் நானே ஆவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக் கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன்.
வைக்கம் சத்தியாகிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும், அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத் தன்மையும் கட்டுப்பாடுமே காரணமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” (‘குடிஅரசு’ – 1.10.1933) என்று பேசினார் பெரியார்.
அதனால்தான் அவர் பெரியார்!
– நன்றி: ‘முரசொலி’ – 11.12.2024
‘‘அதனால்தான் அவர் பெரியார்’’ வைக்கம் வீரருக்கு விழா (2)

அன்றைய காங்கிரசு கமிட்டித் தலைவரான பெரியார், இராஜாஜிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் வைக்கம் சென்றார். ‘நான் திரும்பி வரும் வரையில் கமிட்டி வேலைகளைப் பார்த்துக் கொள்ளவும்’ என்று சொல்லி விட்டுத் தான் சென்றார். இராஜாஜியும் வழி அனுப்பி வைத்தார். கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் சித்திரவதைக்கு உள்ளானதைக் கண்டு, ‘தீரரைத் தமிழ்நாடு போற்றுகிறது’ என்றும் இராஜாஜி அறிக்கை வெளியிட்டார். அவரது தியாகத்தை முதலில் பாராட்டிய இராஜாஜியே, பின்னர் கடுமையாகக் கண்டித்து அவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார். ஆனால் பெரியார் அதனை ஏற்கவில்லை. இறுதி வரை உறுதியாகப் போராடினார். முடிவில் பேச்சுவார்த்தை நடக்கும் போது பெரியாரை கழட்டி விட்டார்கள். முழுப் பெருமையும் அவருக்கு போய்விடக் கூடாது என்பதில் சிலர் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஆனாலும் வைக்கம்வெற்றி விழா கூட்டத்தை பெரியார், நாகம்மையாரை வைத்தே கேரள சீர்திருத்தவாதிகள் நடத்தினார்கள்.
அப்போது என்ன நடந்தது என்பதை இதோ பெரியாரே சொல்கிறார்…
உடனே காந்தியார், அரசாங்க விடுதியில் தங்கியிருந்த என்னை வந்து சந்தித்தார். ராணி சொன்னதைச் சொல்லி ‘என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது’ என்றார். நான் சொன்னேன், “Public ரோடு திறந்து விடுவது சரி! ஆனால், அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று நாம் எப்படி உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் – எனது இலட்சியம் அதுதானே, கோயிலை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்; ‘இப்போதைக்கு இது மாதிரி கிளர்ச்சி எதுவும் இருக்காது. கொஞ்ச நாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படும், என்று சொல்லுங்கள்’ என்று நான் சொன்னேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக