ஜாதிக்கு முட்டுக்கொடுப்பதற்கும் - பேதத்தை நியாயப்படுத்துவதற்கு கடவுள் பயன்பட்டார்; மதம் பாதுகாப்பாகப் பயன்பட்டது என்பதற்காகத்தான்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சென்னை, ஜன. 5 யாருடைய கடவுள் நம்பிக்கையையும் சங்கடப்படுத்த வேண்டும் என்பது பெரியாருடைய எண்ணமல்ல. ஜாதிக்கு முட்டுக்கொடுப்பதற்கு, பேதத்தை நியாயப்படுத்துவதற்குக் கடவுள் பயன் பட்டார்; மதம் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுதுதான் மதத்தையும் ஒழிக்கவேண்டும் என்று பெரியார் அவர்கள் சொன்னார்; நாம் எதை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அது இன்னொரு கட்டுப்போட்டு, பலமாக முடிச்சுப் போட்டு இருக்குமேயானால், அந்த முடிச்சை அறுக்காமல் எப்படி நான் உங்களை சுதந்திரமாக வெளியே கொண்டுவர முடியும்? இதுதான் பெரியார் கேட்ட கேள்வி. எனவே, பெரியார் சமூகத்தினுடைய வளர்ச்சியைப் பார்த்தார்; மக்களுடைய வளர்ச்சியைப் பார்த்தார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரி யின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நான் என்ன மானம் கெட்டவனா?
நெருக்கமாக நண்பர்களாக இருந்த இரண்டு பேரில், ஒருவரிடம் , இன்னொருவர், ‘‘இவ்வளவு நாள் பழகியிருக்கிறீர்கள்; அவருடைய இல்லத்தில் திருமணம் நடைபெறுகிறதே, நீங்கள் போகவில்லையா?’’ என்று கேட்டால்,
‘‘ஏங்க, எனக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையே? நான் என்ன மானம் கெட்டவனா? எனக்கு நெருங்கிய நண்பர்தான் - ஆனால், என்னை அழைக்கவில்லையே?’’ என்கிறார்.
அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்களை, சில நேரங்களில் மறந்துவிடுவதும் இயல்புதான்.
ஆனால், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தி - ஆறறிவு படைத்த மனிதனை - அதுவும் எந்த மனிதனு டைய உழைப்பு இல்லாவிட்டால், இந்த சமுதாயம் நடக்காதோ - அந்த மனிதனை கீழ்ஜாதிக்காரன், தொடக் கூடாதவன், நெருங்கக்கூடாதவன், பார்க்கக்கூடாதவன் என்று சொல்கிறதே - இதைவிட ஒரு காட்டுமிராண்டி சமுதாயம் உலகத்தில் வேறு இருக்க முடியுமா? என்று கேட்டார் பெரியார்- விடை காண வேண்டியது நாம்.
அதுதான் பெரியாருடைய நினைவு நாளில் தேவை - அதை நாங்கள் செய்வதைவிட, உங்களை நம்புகிறோம்.
ஏன் தெரியுமா? மாணவச் செல்வங்களே, நீங்கள் கையிலே எடுக்கவேண்டியது - அந்த ஆயுதங்களே நீங்கள்தான்.
நம்பிக்கையோடு உங்களிடத்திலே சொல்லுகிறோம்.
நம்மால் முடியுமா? என்று அவர் நினைக்கவில்லை
இந்த இயக்கத்தைப் பெரியார் அவர்கள் தன்னந் தனியாகத்தான் தொடங்கினார். ஒரே ஒருவர் - நம்மால் முடியுமா? என்று நினைக்கவில்லை அவர்.
நான் எழுதியதை எடுத்துச் சொன்னார்கள் நம்மு டைய பேராசிரியர் இங்கே வரவேற்புரையில்.
நீங்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையினுடைய சிகரங்களாக இருக்கவேண்டும்; தன்மானத்தினுடைய பிழம்புகளாக இருக்கவேண்டும்.
நம்மால் முடியாதது - வேறு எவராலும் முடியாது
தன்மானத்தினுடைய சிகரம் என்று சொல்லும்பொழுது வேறொன்றும் செய்யவேண்டிய அவசியமில்லை -
‘‘நம்மால் முடியாதது - வேறு எவராலும் முடியாது
வேறு எவராலும் முடியாதது - நம்மால் மட்டுமே முடியும்‘‘ என்று 10 முறை சொல்லிப் பாருங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வெற்றி உங்கள் காலடியிலே வந்து விழும். அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.
ஏன் பெரியார் தேவைப்படுகிறார் -
மூடநம்பிக்கைகள் நம்மை சூழ்ந்திருப்பதினால்தான்-
நம்மை அறியாமல் காலங்காலமாகப் பீடித்துள்ள மதக் கருத்துகள் - சனாதனக் கருத்துகள் - வைதீக கருத்துகள்.
எதுவும் நம் கையில் இல்லீங்க!
எல்லாம் அவன்விட்ட வழிங்க!
அவனின்றி ஓரணுவும் அசையாது!
எதுவும் என் கையில் இல்லை என்றால், பிறகு நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்?
யாருடைய கடவுள் நம்பிக்கையையும் சங்கடப்படுத்த வேண்டும் என்பது பெரியாருடைய எண்ணமல்ல.
ஜாதிக்கு முட்டுக்கொடுப்பதற்கு,
பேதத்தை நியாயப்படுத்துவதற்குக் கடவுள் பயன்பட்டார்; மதம் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
பெரியார் சமூகத்தினுடைய வளர்ச்சியைப் பார்த்தார்; மக்களுடைய வளர்ச்சியைப் பார்த்தார்
அப்பொழுதுதான் மதத்தையும் ஒழிக்கவேண் டும் என்று பெரியார் அவர்கள் சொன்னார்.
நாம் எதை அழிக்கவேண்டும் என்று நினைக் கிறோமோ, அது இன்னொரு கட்டுப் போட்டு, பலமாக முடிச்சுப் போட்டு இருக்குமேயானால், அந்த முடிச்சை அறுக்காமல் எப்படி நான் உங் களை சுதந்திரமாக வெளியே கொண்டுவர முடியும்?
இதுதான் பெரியார் கேட்ட கேள்வி.
எனவே, பெரியார் சமூகத்தினுடைய வளர்ச் சியைப் பார்த்தார்; மக்களுடைய வளர்ச்சியைப் பார்த்தார்.
என்னோடு பிறந்தவன் - என்னோடு உழைக் கின்றவன் - அவனை கீழ்மைப்படுத்தலாமா?
வளர்ச்சியினுடைய தத்துவம் - பெரியாருடைய தத்துவம் அதுதான்.
மிக வேகமாகக் கேட்டார், என்னய்யா, என் னால் முடியாதா?
இல்லீங்க,
நம்மாள் சொல்றான், ‘‘காரணம் என் தலை யெழுத்து’’ என்று சொல்கிறான்.
உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலேயும் இந்த சொற்கள் கிடையாது. வேறு எந்த சமுதாயத் திலேயும்!
பகுத்தறிவினுடைய பெருமை!
ஏன் மற்ற நாட்டுக்காரர்கள் வளர்ச்சி அடைகிறார்கள்?
பகுத்தறிவினுடைய பெருமையை நினைத்துப் பாருங்கள்.
இதைக் கண்டுபிடித்தவன் யார்?
அதைக் கண்டுபிடித்தவன் யார்?
முதலில் ஆடியோ (ஒலி) - சத்தம்
பிறகு, ஒளி (வெளிச்சம்) -
அதன் பிறகு, ஒலியோடு -ஒளியும் சேர்ந்தால் சிறப் பாக இருக்கும். அதுதான் ஒளியும் - ஒலியும் சேர்ந்தது தான் காணொலி.
முப்பது முக்கோடி தேவர்களில் ஒருவருக்காவது தெரியுமா இதுபற்றி? நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை - யோசிக்கவேண்டும்.
நாம் வளரவேண்டாமா?
நம் நாட்டினுடைய பாரம்பரியம், இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று சொல்கிறார்களே,
இன்றைக்குக் கரோனா தொற்று வந்தால், தடுப் பூசியைத்தானே நாம் நம்புகிறோம்; கைதட்டினால் கரோனா தொற்று போகாது என்பது புரிந்துவிட்டதே!
எல்லோரும் சத்தம் போட்டால் கரோனா தொற்று போகாது.
ஓமைக்ரான் வந்தால், பூஸ்டர் ஊசி போடலாமா? என்றுதான் நினைக்கிறார்கள். அதுதான் அறிவு - இதை யார் கண்டுபிடித்தது?
மனிதன்தான் கண்டுபிடித்தான்.
ஏன் உனக்குத் துணிவு வரக்கூடாது?
நமக்கும் ஆறறிவு - மருந்தைக் கண்டுபிடித்தான் பாருங்கள் அவனுக்கும் ஆறறிவு.
அவன் ஏன் மருந்தைக் கண்டுபிடித்து நமக்குக் கொடுக்கிறான்; நாம் ஏன் தடுப்பூசி போடுவதற்குக்கூட யோசிக்கிறோம்.
காரணம், நமக்குத் துணிவில்லை! தெளிவில்லை. அறிவு இருக்கிறது - பயன்படுத்தவில்லையே!
அதைத்தான் பெரியார் கேட்டார்.
ஏன் உனக்குத் துணிவு வரக்கூடாது? என்றார்.
மின் விசிறியைக் கண்டுபிடித்தது யார்? இன்றைக்கு வசதியாக அமர்ந்திருக்கிறோம், மின் விசிறியின் கீழ்.
‘வாயு பகவான்’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்
ஆதி மனிதனுக்கு இதுபற்றித் தெரியாது - ஆகவே அவன் என்ன சொன்னான் என்றால், ‘வாயு பகவான்’ என்றான். அவன்மீது தவறில்லை; அந்தக் காலத்து அறிவு அவ்வளவுதான்.
ஒன்றுமே புரியாத காலத்தில், பெருங்காற்றடித்தவுடன், கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
ஆனால், இன்றைக்கு அப்படியில்லையே, பக வானை பெட்டிக்குள் வைத்துவிட்டோமே - சுவிட்சைப் போட்டால், வாயு பகவான் சுற்ற ஆரம்பிப்பார்; சுவிட்சை ஆஃப் செய்தால், வாயு பகவான் சுற்றுவதை நிறுத்தி விடுவார்.
மின்விசிறியை வாங்கும்பொழுதுகூட, அது நன்றாக சுழலுமா? ரெகுலேட்டரோடு இருக்கிறதா? என்று பார்ப்போம். ஏன் ரெகுலேட்டர், வாயு பகவானைக் கண்ட்ரோல் செய்வதற்குத்தான்.
பகுத்தறிவு என்பது அதுதான்.
நாவலர் நெடுஞ்செழியன்
நம்முடைய நாவலருக்கு நேற்றுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிலை திறந்து வைத்தார். திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் நாவலர் அவர்கள்.
அந்த நாவலர் அவர்கள் கூட்டத்தில் உரை யாற்றும்பொழுது, பகுத்தறிவு விளக்கம் சொல்வார்.
ஆதி மனிதன் சிக்கி முக்கி கல்லைத் தேய்த்துத்தான் நெருப்பை உண்டாக்கினான்.
அந்தக் காலத்து தாமஸ் ஆல்வா எடிசன்
பெரியார்தான் சொன்னார், சிக்கி முக்கி கல்லைத் தட்டி நெருப்பை உண்டாக்கினான் பாருங்கள்; அவன் அந்தக் காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசன். அவன் ஒன்றும் அறிவில் குறைந்தவன் அல்ல - அவனைப் பாராட்டவேண்டும்.
ஆனால், அதிலிருந்து வளர்ந்திருக்கிறோமோ என்பதுதான் கேள்வி.
பெரியார் அதைத்தான் கேட்டார்.
இன்றைக்கு அப்படியில்லை - லைட்டர் வைத்துக் கொள்கிறார்கள்; ‘அக்னி பகவானை’ அழைத்ததும் உடனே வருகிறார்.
இது அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலம்; ஆனால், அறிவியல் வளராத காலத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?
இடுகாடு - புதைத்துக்கொண்டே சென்றால், இடம் போதாது; ஆகவே, சுடுகாடு - இறந்து போனவர்களை சுடுகாட்டில் எரிப்பார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சுடுகாடு இருக்கும். அங்கே இறந்தவர்களின் உடலை எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள்?
எங்கே பார்த்தாலும் மூங்கில்கள் இருந்தன; இரண்டு பக்கமும் மூங்கிலை வைத்துப் பாடையைக் கட்டினான். தூக்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக நான்கு பக்கமும் நான்கு பேர் நின்றார்கள்.
நான்கு பேரையே சடங்காக்கிவிட்டார்கள்
இப்பொழுது நான்கு பேரையே சடங்காக்கிவிட்டார் கள். உனக்கு நான்கு பேர் இருக்கிறானா? என்று கேட்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் நான்கு பேர் தேவையில்லை - ஓட்டுநர் ஒருவர் இருந்தாலே போதும்.
அந்தக் காலத்தில் தீப்பெட்டி கிடையாது என்பதினால், கெட்டிக்காரத்தனமாக நெருப்பை உருவாக்கி அடுப்பில் போட்டான்; நெருப்பை கையில் எடுத்துச் செல்ல முடியாது என்பதற்காக, ஒரு சிறு சட்டியில், உமி போன்ற வற்றைப் போட்டு, கனன்று கொண்டிருந்த நெருப்பை அதன்மேல் போட்டு, அதை நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக - வாழைப் பட்டையில் வைத்து, கயிறு கட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். இவர்களை விட பெரிய விஞ்ஞானி, அந்தக் காலத்தில் யாரும் இருக்க முடியாது.
விளக்கெண்ணெய் குடிக்கவேண்டியதில்லை; வேப்பெண்ணை குடிக்க வேண்டியதில்லை!
இவையெல்லாம் அந்தக் காலத்திற்குச் சரி.
இப்பொழுது என்ன செய்கிறார்கள் - மின்சார சுடுகாட்டிற்குப் போகிறார்கள் - அதுவும் யாரும் நடந்து செல்வதில்லை - எல்லோரும் காரில்தான் செல்கிறார்கள். அப்படி இருந்தாலும், ஒருவர் நெருப்புச் சட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறார் அல்லவா -அதுதான் மூடநம்பிக்கை நண்பர்களே, இதை மாற்றவேண்டும் என்று சொல்வதுதான் பெரியாருடைய கருத்து.
பெரியாருடைய பகுத்தறிவு என்றால், யாரும் விளக்கெண்ணெய் குடிக்கவேண்டியதில்லை; வேப்பெண்ணை குடிக்க வேண்டியதில்லை.
பெரியாருடைய பகுத்தறிவு என்பது, வசதி, வாய்ப்பு, சிந்தனை, வளர்ச்சியாகும்.
இங்கே நம்முடைய முதல்வர் அவர்கள் வரவேற்புரையாற்றும்பொழுது இராகு காலத்தைப்பற்றி சொன்னார்.
நோபல் பரிசு வாங்கியவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்
நாங்கள் பி.எல். படித்துக்கொண்டிருந்தபொழுது, பிராட்வேயில் ஹாஸ்டலில் தங்கியிருந்தோம். அங்கே இருந்தவர்களில் நாங்கள் கொஞ்சம் பேர் பகுத்தறிவுவாதிகள்; எங்களைவிட மெஜாரிட்டியில் வைதீக நம்பிக்கை உள்ளவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
ஏனென்றால், நோபல் பரிசு வாங்கியவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள் உலகத்தில்.
இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரைக் கும்தான் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் என்று அறிவித்திருப்பார்கள். உங்கள் கல்லூரியில் கொடுப்பது போன்று.
ராகுகாலத்தில்தான் ஹால்டிக்கெட் வாங்கச் செல்வோம்!
ஹால்டிக்கெட் வழங்கும் அலுவலகத்தில் இப் பொழுது நேரம் என்ன ஒருவர் கேட்பார்; 9 மணி என்பார். 9 மணியிலிருந்து 10 மணிவரை கொழுத்த இராகு காலம். ஆகவே, இந்த நேரத்தில் நிறைய மாணவர்கள் ஹால்டிக்கெட் வாங்க வர மாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், நாங்கள் ஒரு நாலைந்து நண்பர்கள், அந்த நேரத்தைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்து ஹால் டிக்கெட் வாங்கச் செல்வோம்.
காரணம், காலம் பொன் போன்றது - தேர்வு நேரம் என்பதால், நிறைய படிக்கவேண்டும் - நேரத்தை வீணாகக்கூடாது என்பதால்.
நடைமுறைக்கு உகந்தது;
வாழ்க்கைக்கு உகந்தது
பெரியாருடைய பயன் - பகுத்தறிவின் பயன் நடை முறைக்கு உகந்தது; வாழ்க்கைக்கு உகந்தது.
அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்பொழுது, எப்பொழுது ராகுகாலம் என்று விசாரிப்போம்; மற்ற நண்பர்களிடம் கேட்போம், வாங்க போகலாம், ஹால் டிக்கெட் வாங்கலாம் என்று.
இல்லை, இல்லை - இது இராகுகாலம், நாங்கள் வர வில்லை; இராகுகாலம் முடிந்து நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்பார்கள்.
நாம் போகலாம் என்று நாங்கள் ஒரு நாலைந்து பேர் ஹால்டிக்கெட் வாங்கச் செல்வோம். அப்போது சென் றால், வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை; 5 நிமிடத்தில் ஹால்டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்து விடுவோம்.
ராகுகாலத்தில் ஹால்டிக்கெட் வாங்கிய நாங்கள்தான் பாசாகியிருக்கிறோம்; நல்ல நேரம் பார்த்த நண்பர்கள், தேர்வில் வெற்றி பெறவில்லை
இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்கிறேன், ராகுகாலம் பார்க்காமல் போனதால், பாசாகிவிட்டோம் என்று இன்னொரு மூடநம்பிக்கையை நீங்கள் கற்பிக்கக் கூடாது.
(தொடரும்)