கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஊக்கவுரை!
சென்னை, ஜன. 3 கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக் கொண்டு போக வந்திருக்கிறேன்; மாணவச் செல்வங் களே, சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது என்றவர் பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரி யின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘பெரியார் பிறந்திருக்காவிட்டால்’’....
மிகுந்த மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் மாணவச் செல்வங்களையும், பேராசிரியப் பெருமக் களையும் மற்றும் பேரன்பு கொண்ட தோழர்களையும் சந்திக்கக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பாக ஏற்பாடு செய்து, இங்கே மூடநம்பிக்கைகளையெல்லாம் அகற்றி, பிறவி பேதத்தையெல்லாம் எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்து, சமுதாயத்தில், சமத்துவமும், சம வாய்ப்பும் இருக்கவேண்டும் என்பதற்காக, தன்னுடைய 95 ஆண்டுகள் வாழ்க்கையில், பெரும்பகுதியை பதவி நாடாமல், புகழைத் தேடாமல், எதிர்ப்பை இன்முகத்தோடு ஏற்று, சிறப்பான வரலாறு படைத்துக்கொண்டு, மிகப் பெரிய அளவிற்குத் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று அழைக்கப்பட்ட அருமைத் தலைவர் பேராசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் - மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பாக நடத் தப்படக்கூடிய இந்த அருமையான கருத்தரங்கம்- இது ஒரு நன்றித் திருவிழா!
‘‘பெரியார் பிறந்திருக்காவிட்டால்’’ என்ற தலைப் பிலே கலைஞர் ஒரு கேள்வி கேட்டார். பெரியார் பிறந் திருக்காவிட்டால், நாமெல்லாம் இந்தக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருப்போமோ என்ற கேள்வியை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால், மிகப்பெரிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் வந்தமைக்கு நன்றித் திருவிழாவாக நடைபெறக்கூடிய இந்த அருமையான ஏற்பாட்டினால் - மாநிலக் கல்லூரி - எந்தத் தன்னாட்சிக் காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோமோ, அந்தத் தன்னாட்சியை மாநில அரசு கல்லூரி பெற் றிருக்கிறது என்கிற பெருமையோடு, இங்கே நாங்கள் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த ஆய்வாளர்களிலே ஒருவர் என்று சொன்னால், அவர் நம்முடைய பேரன்பிற்குரிய, உங்கள் முதல்வர் அவர்கள்தான். அந்தப் பெருமையை, வாய்ப்பை நான் அவரிடமிருந்து பெறுகிறேன்.
சம்பூகன் தவம் செய்தததற்காக தலையை வெட்டிய ராமனாக ஒருபோதும் நமது கல்லூரி முதல்வர் இருக்கமாட்டார்
இவர் பெயர் ராமன். உங்களுக்கெல்லாம் தெரியும். அறிமுகம் தேவையில்லை. ஆனால், இந்த ராமன், சம்பூகன் தவம் செய்தததற்காக தலையை வெட்டிய ராமனாக ஒருபோதும் இருக்க மாட்டார்.
மாறாக, சம்பூகனின் தவத்திற்கு இவர் துணை யாக நிற்கக்கூடிய காரணத்தினால்தான், மாநிலக் கல்லூரியிலே இவ்வளவு சிறப்புமிக்க முதல்வராக, உங்களுடைய அன்பைப் பெற்றவராக இருக்கிறார்!
காலங்கள் மாறுகின்றன; ''இராமன்களும்'' மாறுகின்றார்கள்
ஆகவே, காலங்கள் மாறுகின்றன; ‘இராமன்களும்‘ மாறுகின்றார்கள். இதுதான் இயற்கையானது.
அந்த வகையில் நண்பர்களே, இப்பொழுதெல்லாம் துரோணாச்சாரியார்களைக் கண்டுபிடிக்க முடியாது; அப்படியே துரோணாச்சாரியார்களே இருந்தாலும்கூட, அவர்கள் ஏகலைவனின் கட்டை விரல்களைக் கேட்க மாட்டார்கள்; வேண்டுமானாலும், இப்படிப்பட்ட ஆசிரி யர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று சொன் னால், உங்களுடைய அன்பை மாணவர்களுக்குத் தருவீர்கள்.
அப்படிப்பட்ட அருமையான முதல்வர் முனைவர் அய்யா ராமன் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரையாற்றிய தமிழ்த் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் அய்யா ஷேக் மீரான் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தமிழ்த் துறையின் துணைத் தலைவர் முனைவர் நண்பர் ஆதிநாராயணன் அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு என்னோடு வருகை புரிந்து இருக் கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவரும், ‘விடுதலை’ நாளிதழின் நிர்வாக ஆசிரியர் என்பதெல் லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கல்வி ரீதியாக இப்பொழுது அவர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அது பல பேருக்குத் தெரியாது.
வழிகாட்டு அறிஞர் குழு உறுப்பினர்
சென்னை பல்கலைக் கழகத்தில் திராவிட ஆய்வு மய்யத்தில், ஆய்வுக்கு வழிகாட்டு அறிஞர் குழு உறுப் பினராக அவர் இருக்கிறார் என்பது மிகப் பெருமைக்குரிய ஒன்று.
ஆகவே, கல்வி அறிஞர் என்ற முறையில்தான் அவர் மேடையில் அமர்ந்திருக்கிறார். வெறும் கழகத்துக்காரர் என்பதற்காக அல்ல. அதையும் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியவர்கள், பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பில், எண் ணற்ற பேராசிரியப் பெருமக்கள் எதிரில் அமர்ந்திருக் கின்றீர்கள். என்னருந் தோழர்காள் என்று நாங்கள் மகிழக்கூடிய மாணவச் செல்வங்களாகிய இருபால் தோழர்கள் இருக்கிறீர்கள்.
நான் இந்தப் பக்கத்தைப் பார்த்தவுடன், அந்தப் பக் கத்தைப் பார்த்தேன், எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. காரணம், உங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை நண்பர்களே, ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கேட்டார்கள். நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்களுடைய ஆட்சி வந்த காலத்திலே, ஊதுகின்ற அடுப்பே இல்லை - திருகியவுடன் எரிகின்ற அடுப்பைத்தான் உருவாக்கினார்கள்.
5 ஆயிரம் மாணவர்களில்,
2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர்...
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், நம்முடைய பெருமைக்குரிய முதல்வர் அய்யா ராமன் அவர்களிடத்திலே நான் கேட்டேன்; வர லாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்லூரியில் மாண வர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று.
அதற்கு அவர், 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகளிர்.
இதைவிட மிகப்பெரிய கல்விப் புரட்சி, சமூகப் புரட்சி வேறு கிடையாது.
பெரியார் அவர்களுக்கு எது மகிழ்ச்சி அளிக் குமோ, அந்த செய்தி அது.
நினைவு நாள் என்பது வரலாற்றுக் குறிப்பு
பெரியாருடைய நினைவு நாள் என்பது நமக்கு ஒரு சம்பிரதாயம் அல்ல; சடங்கு அல்ல; சனாதன சின்னமல்ல; சிரார்த்தம் அல்ல.
நினைவு நாள் என்பது வரலாற்றுக் குறிப்பு. அவர்கள் செய்த பணி என்ன? அவர்கள் செய்ய விரும்பிய பணி என்ன?
அந்தப் பாதையை நாம் மிகப்பெரிய அளவிற்குப் பற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன?
இன்னமும் பெரியார் விமர்சிக்கப்படுகிறார்; அதுதான் அவருடைய தனிச் சிறப்பு.
வாழ்ந்த காலத்தில் அவருக்கு எத்தகைய எதிர்ப்பு இருந்ததோ - அந்த எதிர்ப்பை - அவர் கொஞ்சம்கூட குறைத்துக் கொள்ளாத அளவிற்கு, அவருடைய வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர்
அன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்த அய்யா தமிழ்நாட்டினுடைய பேராசிரியராக, அண்ணா அவர் களால் முதல் பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்.
கல்லூரிக்கே போகாதவர், எப்படி பேராசிரியராக இருக்க முடியும்? என்று உங்களில் சிலருக்குச் சந்தேகம் வரும்.
தந்தை பெரியாரின், தலைமாணாக்கர் அண்ணா அவர்கள் சொன்னார், அந்தப் பேராசிரியருடைய வகுப்பு - கல்லூரி வகுப்பறைக்குள்ளே இருக்காது; அது மாலை நேரக் கல்லூரியாக அமைந்து- ஒவ்வொரு ஊரி லும், இரண்டு, மூன்று மணிநேரம் உரையாற்றுவார்கள்; மக்களைத் திருத்துவார்கள் என்று சொன்னார்.
அய்யா அவர்கள், மாணவச் செல்வங்களைப் பார்க்கின்றபொழுது மகிழ்ச்சியடைவார்.
கற்றுக்கொடுப்பதைவிட,
கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்!
இந்தக் கல்லூரிக்கு நாங்கள் வருவது, இது முதல் முறையல்ல; பல முறை வந்திருக்கிறோம். அதை விட இந்தக் கல்லூரியைப்பற்றி குறிப்பெழுதச் சொன்னார்கள்; அதில் நான், ‘‘இங்கே நான் கற்றுக்கொடுப்பதைவிட, கற்றுக்கொண்டு போக வந்திருக்கிறேன்’’ என்றுதான் எழுதியிருக்கிறேன்.
நீங்கள் நினைக்கலாம், ஒருவேளை அடக்கத் திற்காகச் சொல்கிறாரோ அல்லது மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காகச் சொல்கிறாரோ என்று.
பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகப் பேசி பழக்கமில்லாதவர்கள் நாங்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிகத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, இங்கே நான் உரிய நேரத்திற்கு வந்தபொழுது, என்னை என்.சி.சி. மாணவத் தோழர்களுடைய கட்டுப்பாடு மிகுந்த அன் பான வரவேற்பு உள்பட தந்து அழைத்து வந்தார்கள்.
ஏராளமான படிக்கட்டுகள் - படிக்கட்டைப் பார்த்த வுடன் எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது. இங்கே சொல்வதற்குப் பொருத்தமானது என்பதால், அதை உங்களுக்குச் சொல்கிறேன்.
பக்கத்தில் இருக்கின்ற சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருப்பீர்கள்.
நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு
அந்தப் பல்கலைக் கழகத்தில், நம்முடைய ஒப்பற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது, பல்கலைக் கழக துணைவேந்தராக, கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் இருந்தார்கள்.
இந்த மாநிலக் கல்லூரி பெருமையோடு நினைக்கின்ற பழைய மாணவர் அவர். அவர்தான் இந்த நாட்டிற்கே கல்வியைக் கொடுத்தார்.
கல்வி வள்ளல் காமராசர்
கல்வி வள்ளல், தமிழர்களுடைய இரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலே வர்ணிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்று, ‘நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை’ என்று சொல் லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு, அவர் அரசாங்கத்தினுடைய கல்வித் தலைவராக - இயக்குநராக இருந்து, அதன் பிறகு, டில்லியில் பெரிய பொறுப்பில் இருந்து - சென்னை பல்கலைக் கழகத்தினுடைய துணைவேந்தராகவும் இரண்டுமுறை இருந்து வரலாறு படைத்தவர் அவர்.
இந்தக் கல்லூரியினுடைய மாணவர் - இன்னுங் கேட்டால், இந்தக் கல்லூரியில் அப்பொழுது படித்தவர் களிலேயே குட்டையானவர் மட்டுமல்ல - எல்லாவற் றிலும் எளிமையான - காஞ்சிபுரத்தில் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்திலிருந்து வந்து படித்தவர்.
அவர், முதலமைச்சர் கலைஞரை அழைத்துக் கொண்டு மேடைக்குப் போகிறார்.
அங்கும் ஏராளமான படிக்கெட்டுகள் -
இப்பொழுது மாநிலக் கல்லூரி முதல்வரின் அறைக்கு எங்களை அழைத்து வந்தபொழுது, நிறைய படிக் கட்டுகள் இருந்தன; அதன்மீது ஏறித்தான் இங்கே வந்திருக்கிறோம். அத்தனைப் படிக்கெட்டுகளை ஏறித்தான் நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நகைச்சுவை!
அப்படி கலைஞர் அவர்கள் அன்றைக்குப் படிக்கட்டு களை ஏறி வருகின்றபொழுது, மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே வருகிறார்.
உங்களுக்கெல்லாம் தெரியும் கலைஞர் அவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
துணைவேந்தராக இருந்த சுந்தரவடிவேலு அவர்கள், கலைஞரை அழைத்துக்கொண்டு முன்னே வரும் பொழுது, ‘‘பார்த்துங்க, படிங்க, படிங்க!’’ (படிக்கட்டுகள் இருக்கின்றன) என்று சொல்கிறார்.
ஒவ்வொரு படிக்கட்டுக்கும் இதேபோன்று சொல்லிக் கொண்டே வருகிறார்.
மூன்று முறை, நான்கு முறை அவர் சொன்னவுடன்,
கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘‘என்னங்க, எங்க அப்பா அந்தக் காலத்தில் சொல்லியே கேட்கவில்லை; இப்பொழுது இந்த வயதில்தானா நான் என்னப் படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை’’ என்று சொன்னார்.
அதுபோன்று, ‘‘படி, படி, படி’’ என்று சொல்லக் கூடியதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.
அதைச் சொல்லுவதற்குக்கூட எங்களை அழைத்து வரும்பொழுது, ‘‘படி, படி, படியென்று’’ பல படிகளை ஏறித்தான் இங்கே வந்திருக்கின்றோம்.
சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது தோல்வி மனப்பான்மை வரக்கூடாது!
எனவே, நீங்கள் சலிக்காதீர்கள்; சங்கடங்களை எதிர்நோக்கும்பொழுது உங்களுக்கு சலிப்பே வரக்கூடாது; விரக்தியே வரக்கூடாது; தோல்வி மனப்பான்மை வரக்கூடாது.
அத்தனைப் படிக்கட்டுகளை ஏறித்தான், இந்தக் காலரியில் நீங்கள் இப்பொழுது அமர்ந்திருக்கிறீர்கள்.
இங்கேகூட பாருங்கள்; முன் வரிசையில் அமர்ந் திருப்பவருக்கும் வாய்ப்பு இருக்கிறது; கடைசி வரிசை யில் அமர்ந்திருப்பவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தான் சமூகநீதி நண்பர்களே!
சமூகநீதி என்று சொன்னால், ஒரு பெரிய பாடத்தைப் படிக்கவேண்டிய அவசியமே இல்லை.
தந்தை பெரியாரின் நினைவு நாள் என்று சொல் லக்கூடிய இந்த நிகழ்வைப்பற்றி சொல்லும்பொழுது, கல்லூரிக்குப் போகாத பெரியார். அதைத்தான் நம்மு டைய பேராசிரியர் அவர்களும், மற்ற நண்பர்களும் எடுத்துச் சொன்னார்கள்.
என்னுடைய உரையில் நான் சுட்டிக்காட்டியதை, முன்னுரையில் எடுத்துக்காட்டினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், கல்லூரிக்கே போகாதவர்; இன்றைக்கு அவர் பல கல்லூரிகளில் வருவதற்குக் காரணம் என்ன? பல்கலைக் கழகங்களில் அவரைப்பற்றி ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஏன்?
அவர் உருவத்தால், உடலால் மறைந்து 48 ஆண்டு கள் ஆனாலும், கொள்கையால், தத்துவத்தால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதுவும் இன்னமும் விமர்சிக்கப்படக் கூடிய ஒரு பெரியார் அவர்.
பேராசிரியர்கள் நன்னன் - வெள்ளையன்
மிக முக்கியமாக இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் திலேகூட, அவருடைய சிந்தனைகள் வளர்ந்திருக் கின்றன. இந்தக் கல்லூரியில் அய்யா அவர்கள் உரையாற்றி இருக்கிறார். நாங்களும் அவருடன் வந்திருக்கிறோம். இந்தக் கல்லூரியினுடைய ஆசிரியப் பெருமக்களே, பேராசிரியர் அய்யா நன்னனைப் போன்றவர்கள், எனதருமைத் தோழர் பேராசிரியர் வெள்ளையனைப் போன்றவர்கள் - ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தவர்கள். வரலாற்றுத் துறை என்று, ஒவ்வொரு துறையிலும் இருந்த ஆய்வாளர்கள் மட்டுமல்ல, வரலாறு படைத்தவர்கள்.
அப்படிப்பட்ட அருமையான கல்லூரி மாணவர் களாகிய உங்களை நான் பார்க்கின்றபொழுது, மகிழ்ச் சியைப் பெறுகிறேன். உங்களுடைய உற்சாகத்திற்கு முன், நான் கற்றுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன்.
(தொடரும்)
தந்தை பெரியாரின் சிந்தனை என்பது மானுடப் பார்வை - ‘‘ நான் சொன்னாலும் நம்பாதே - சிந்தித்துப் பார்'' என்றவர் பெரியார்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சென்னை, ஜன. 4 தந்தை பெரியாரின் தத்துவம் எந்தத் தனிப்பட்டவருக்கும் எதிரானதல்ல; தந்தை பெரியாரின் சிந்தனை என்பது மானுடப் பார்வை - நான் சொன்னாலும் நம்பாதே - சிந்தித்துப் பார் என்றவர் பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவனின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
28.12.2021 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்கள் நீங்கள்!
இதோ எங்கள் செல்வங்கள் வந்துவிட்டார்கள்; அவர்கள், நாளை நாட்டை வழிநடத்தக் கூடியவர்கள்; இன்று குழந்தைகள் நீங்கள் - இனி இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்கள்.
‘தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்’ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்; அதுபோலப் பார்க்கிறோம்.
5 ஆயிரம் மாணவச் செல்வங்களில், ஏறத்தாழ, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் இருக்கிறீர்களே அதுதான் இன்னமும் சிறப்பு.
முன்பெல்லாம் இந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடையாது, இந்தக் கல்லூரியினுடைய வரலாற்றில். அதற்கென்று இராணி மேரி கல்லூரி என்றெல்லாம் இருக்கும். ஆனால், இப்பொழுது அப்படியல்ல.
பெரியாரை ஏன் நாம் நினைவு கொள்ளவேண்டும் என்று சொன்னால், அது பெரியாருக்காக அல்ல - அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மருந்து சாப்பிடுகிறீர்களே ஏன் என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அருள்கூர்ந்து எண்ணிப்பார்க்கவேண்டும் நீங்கள்.
மருந்தைக் கண்டுபிடித்தவர் மேலே இருந்து பார்த் துக் கொண்டிருப்பார்; அவரைத் திருப்தி செய்வதற்காக என்றா நாம் சொல்வோம்; மாட்டோம்.
அல்லது மருந்து கடைக்காரர் வருந்தக்கூடாது என்ப தற்காக, அவருக்கு வியாபாரம் நடக்கவேண்டும் என்ப தற்காகத்தான் நாம் மருந்து சாப்பிடுகிறோம் என்றா, நாம் பதில் சொல்லுவோம்.
இல்லை, நம்முடைய நோய்க்காக -நம்முடைய வலிக் காக -நம்முடைய உடல்நலத்திற்காக மருந்து சாப்பிடு கிறோம்.
பெரியாரை நாம் பின்பற்றுவது,
பெரியாருக்காக அல்ல - நமக்காக..
அதுபோல ‘‘பெரியாரை நாம் பின்பற்றுவது இருக்கிறதே, பெரியாருக்காக அல்ல - நமக்காக - நம்முடைய தலைமுறைக்காக -நம்முடைய வளர்ச்சிக்காக -நம்முடைய முன்னோருக்காக.''
மருந்து சாப்பிடுகின்ற நேரத்தில்கூட, ஒன்றை நன்றாக நீங்கள் கவனிப்பீர்கள்; நாம் எல்லோருமே கவனிப்போம்.
மருத்துவர், மருந்தை எழுதிக் கொடுக்கிறார். அந்த மருந்தை வாங்கவேண்டும் என்று மருந்து கடைக்கு நாம் செல்கிறோம். உரிய கட்டணத்தைக் கொடுத்தவுடன், மருந்துக் கடைக்காரர் மருந்தை கொடுக்கிறார்; மருந்தை வாங்கிக்கொண்டும் வந்துவிடுகிறோம்.
ஆனால் நண்பர்களே, மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று மருந்தின் பெயரைப் பார்ப்போம். அதற்கடுத்து நாம் என்ன செய்வோம்? இன்னொன்றை மிக முக்கியமாகக் கவனிப்போம். எக்ஸ்பயரி டேட்டைப் பார்ப்போம்.
அவசரமாகவோ, சில பேர் வேண்டுமென்றோ, செலாவணி ஆகாத மருந்தையெல்லாம், இப்பொழுது செலாவணி செய்துகொண்டிருக்கிறார்களே பல பேர் - அதேபோன்று, வேக வேகமாக 10 மருந்துகளைக் கொடுக்கும்பொழுது, காலாவதியான மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால்,
உடனே நாம் என்ன செய்வோம், ‘இல்லீங்க, இது எக்ஸ்பயரி -டேட் முடிந்து போயாயிற்று’ என்று கையில் வாங்கிய மருந்தைக்கூட நாம் திருப்பிக் கொடுக்கிறோம்.
தயவு செய்து எண்ணிப் பாருங்கள், பெரியார் சொன்ன பகுத்தறிவு என்பது,
நம்முடைய நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்தை வாங்கும்பொழுது, காலாவதியாகிவிட்ட மருந்து என்று தேதியைப் பார்த்து நாம் உட்கொள்ளத் தயாராக இல்லையே - மருந்து குறிப்பிட்ட நோய்க்காக, குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிடுவதையே காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பதைக் கவனிக்கிறோமே - காலங்காலமாக நாம் பின்பற்றவேண்டிய கருத்துகள், கொள்கைகள் காலாவதியாகிவிட்டனவா? அல்லது செல்லுமா? அதை ஏற்கக்கூடியதா? என்று யாராவது பார்க்கிறோமா?
இல்லீங்க, நீண்ட காலமாக இருக்கிறது; இதுதான் சனாதனம் என்று சொன்னால் - அது நிரந்தரமானது - மாறாதது என்று சொல்வார்கள்.
மாற்றம் என்பதுதான் மாறாதது
ஆனால், உலகத்தின் முதல் பகுத்தறிவுவாதியாக இருக்கின்ற புத்தர் சொன்னார், அதையே, மிகப்பெரிய அளவிற்கு சமூக விஞ்ஞானியாக இருந்த காரல் மார்க்சும் சொன்னார் -
மாறாதது எது?
மாற்றம் என்பதுதான் மாறாதது என்று.
எனவே, பெரியார் அவர்களுடைய கருத்து என்று சொன்னால், யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை; அஞ்சவேண்டிய அவசியமில்லை; குழம்பவேண்டிய அவசியமில்லை.
தெளிவானது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்!
எந்த மாற்றம் - உன் அறிவை உரைகல் வைத்துப் பார்என்று சொல்வது.
இந்த நாட்டிலே உள்ள மதவாதிகளாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் என்ன சொல்வார்கள்?
நான் சொல்வதை நம்பு என்றுதான் சொல்வார்கள்.
மதங்களை ஏன் தந்தை பெரியார் அவர்கள் எதிர்த் தார் என்று சொல்லும்பொழுது, நம்பு, நம்பியாகவேண்டும்; இல்லாவிட்டால் நரகத்திற்குப் போவாய்; அந்த நரகத்தில் எண்ணெய்க் கொப்பரை இருக்கிறது; நீ நம்பாவிட்டால், அதில் உன்னைப் போட்டு துவைத்து எடுப்பார்கள் என்று அச்சுறுத்தித்தான் நம்ப வைக்கிறார்கள்.
பெரியாரைப் பார்க்காத தலைமுறை நீங்கள்
பெரியாரைப் பார்க்காத தலைமுறை நீங்கள் - ஆனால், பெரியாரை அவருடைய எழுத்துகள்மூலம் பார்க்கலாம்; அவருடைய லட்சியங்கள்மூலம் பார்க்க லாம்.
அவர் பேசாத இடமில்லை; மாணவர்களிடையே உரையாற்றும்பொழுது, கல்லூரிகளிலும், மற்ற இடங் களிலும் பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கு வதற்கு முன் என்ன கூறுவார்?
அறிவு என்பது ஆய்வு செய்வதற்கு,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
ஒரு பொருளை நிர்ணயிக்கவேண்டும் என்றால், எத் தன்மை, எப்பொருள், யார் யார் வாய்க் கேட்பது என்பதுதான் மிக முக்கியமானது.
எதையும் உங்கள் அறிவுகொண்டு சிந்தித்துப் பாருங்கள் என்றார்!
அய்யா அவர்கள் அப்படி சொல்லும்பொழுது, ‘‘எதையும் உங்கள் அறிவுகொண்டு சிந்தித்துப் பாருங்கள்’’ என்றார். நம்பாதே! என்று சொன்னவர்.
பெரியார் ஒருவர்தான் நம்பாதே என்று சொன்னவர். எல்லோரும் நம்புங்கள், நம்புங்கள் என்று சொன்னார்கள்.
இன்னுங்கேட்டால், கடவுள் நம்பிக்கையேகூட, அச்சுறுத்தல் வரும்பொழுது என்ன சொல்வார்கள்? கிராமங்களில் பழமொழியைச் சொல்வார்கள்.
‘‘நம்புகிறவனுக்கு நடராஜா -
நம்பாதவனுக்கு எமராஜா’’ என்றார்கள்.
எமன்கிட்ட எவன் போவான்? எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயப்படுவார்கள் அல்லவா? அப்படி ஒரு கற்பனையை சொன்னாலும்கூட, அச்சுறுத்தல், பயத்தை ஏற்படுத்தினார்கள்.
வன்முறையை விரும்பாத புரட்சியாளர் பெரியார்!
அந்த இடத்தில்தான் நண்பர்களே, பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் - வன்முறையை விரும்பாத புரட்சியாளர் - ஆயுதங்களை எடுத்து ரத்தம் சிந்தாத புரட்சியாளர் - அறிவுப் புரட்சியாளர்.
தந்தை பெரியார் ஒன்றைச் சொன்னார்.
எதையும் எடுத்தவுடன் நம்பாதே என்றார்.
எப்படி நம்புவது? என்று கேட்டார்கள்.
குடியாத்தத்தில் உள்ள அரசினர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்விற்கு நாங்களெல்லாம் பெரியாரோடு சென்றிருந்தோம்.
கூட்டத்தில் பெரியார் உரையாற்றும்பொழுது, ஒவ் வொரு கூட்டத்திலும் பெரியார் முதலில் இதைச் சொல்வார்.
‘‘நான் சொல்கிறேன் என்பதற்காக அதை நீங்கள் நம்பாதீர்கள்; என்னுடைய கருத்தை, என் மனதிற்குத் தோன்றியதை உங்களிடம் சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஒன்றரை மணிநேரம் உரையாற்றிவிட்டு, கடைசியாக என்ன சொல்வார் என்றால்,
‘‘நான் இவ்வளவு நேரம் சொன்னதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்; அதை நீங்கள் நம்பவேண்டாம்; உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி யோசனை செய்யுங்கள்; சிந்தித்துப் பாருங்கள், சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லையென்றால், விட்டுவிடுங்கள்’’ என்று எளிமையாகச் சொல்வார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
இப்படி தாராளச் சிந்தனையாளராக இருந்தவர் - லிபரல் திங்கர்: ப்ரி திங்கர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு தலைவர் - சுய சிந்தனையாளர்- அதனால்தான் மண்டைச் சுரப்பை உலகு தொழுகின்றது.
இங்கே உரையாற்றும்பொழுது அழகாக சொன்னார் நம்முடைய முதல்வர் அவர்கள்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் நான்கே வரியில் சொன்னார், பெரியாரைப் பார்க்காத உங்களுக்கு - பெரியாரைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
தொண்டு செய்து பழுத்த பழம் - தூய
தாடி மார்பில் விழும்- மண்டை சுரப்பை
உலகு தொழும் - மனக்குகையில்
சிறுத்தை எழும் - அவர்தாம்
பெரியார் பார்!
என்று மிகத் தெளிவாக - ஆழமாக எடுத்துச் சொன்னார்கள்.
மனக்குகையில் சிறுத்தை எழும் -
சாதாரண சிறுத்தையல்ல - மனக்குகையில் இருந்து அவருடைய கருத்துகள் சிறுத்தையைப் போன்று பாய்ந்து வரும். அப்படி கருத்துகளை சொல்லிவிட்டு, நம்பாதீர்கள் என்று சொன்னார் பெரியார்.
முதல் வரிசையில் இருந்த மாணவர் எழுந்து நின்றார்,
பெரியார் கேள்விகளைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவார். அவரைப் போன்று கேள்வி களுக்குப் பதில் சொன்ன தலைவர் வேறு யாரும் கிடையாது. அதிகமான கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன தலைவர் பெரியார் அவர்கள்; ஆனால், பெரியார் அவர்கள் கேட்ட கேள்விக்கு எவரும் பதில் சொல்லவில்லை.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த மாணவர் எழுந்து, ‘‘நம்பாதீர்கள் என்று சொன் னீர்களே, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண் டாமா?’’ என்று கேட்டார்.
மாணவர்களுக்குத்தான் எப்பொழுதும் துணிச் சல் அதிகம்; மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் கணக்குப் போட்டு யோசித்துத்தான் கேட்பார்கள்.
நான் சொல்வதையும் நம்பாதே!
உடனே பெரியார் சொன்னார், ‘‘நான் சொல்வதையும் நம்பாதே’’ என்று சொல்லி, கொஞ்சம் இடைவெளிவிட்டு, ‘‘உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு நம்பு; யார் சொல்வதையும் நம்பாதே!’’ என்றார்.
ஆய்ந்து பார்த்து, சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
இந்தப் பணி சாதாரண பணியல்ல - அதுதான் பெரியாருடைய சிறப்பாகும்.
நம்முடைய வளர்ச்சி என்பது அறிவியல் - இதோ நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேனே - ஒலிபெருக்கி அறிவியல் வளர்ச்சியால்தான் உண்டானது.
இப்பொழுது நம்மையெல்லாம் அச்சுறுத்திக் கொண் டிருக்கும் வைரஸ் ஒமைக்ரான் - கொடுந்தொற்றிலேயே பல வகைகளில் வருகிறது.
எப்படி ஜாதி நோயில் பல வகையான ஜாதி நோய் இருக்கிறதோ - ஒரு ஜாதி, இன்னொரு ஜாதியைத் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிற்கு விஷமமாக இருக்கிறதோ - அதுபோன்று, நோய்கள் எப்பொழுதுமே பல வகைகளில் இருக்கும். ஜாதியும் - நோயும் ஒன்றுதான் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
பிறப்பொக்கும் என்று சொல்லுவதற்கு அடிப்படையே பிறவியினால் பேதம் இருக்கக்கூடாது என்பதுதான்.
எந்த மனிதருக்கும் எதிரானதல்ல!
பெரியாருடைய தத்துவங்கள் தனி மனிதர்களுக்காக அல்ல - திராவிடர் கழகம் - திராவிடம் - திராவிடக் கலாச்சாரம் - திராவிடப் பண்பாடு என்பது எந்த மனிதருக்கும் எதிரானதல்ல.
சமூகநீதிக்கே அவர் சொன்ன தத்துவம் -
அனைவருக்கும் அனைத்தும் -
யாருக்கும் வாய்ப்பு மறுக்கக்கூடாது -
ஒருவர், இன்னொருவருடைய வாய்ப்பைப் பறிக்கக் கூடாது. அதுதான் முக்கியம். போராட்டமே அங்கேதான் இருக்கிறதே தவிர, வேறு கிடையாது.
பெரியாருடைய சிந்தனை - மானிடப் பார்வை!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான மனிதத்தைத் சொல்லும்பொழுது, பெரியாருடைய சிந்தனையே - மானிடப் பார்வைதான்.
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கிடையாது -
சிந்தனைக்கு எல்லைக் கோடு கிடையாது -
சுயமரியாதை எந்தத் தலைவருக்கோ அல்லது எந்தக் கட்சிக்கோ சொந்தமானதல்ல.
மனித குலத்திற்கே சொந்தமானது -
மனிதன் என்று சொன்னால், அவன் சுயமரியாதை யோடு இருக்கவேண்டியவன்.
தன்னை அவமரியாதை செய்துகொள்ளக்கூடியவன் அல்ல
எந்த மொழியிலும் சுயமரியாதை உண்டு.
பெரியார் இயக்கத்தினுடைய தனிச் சிறப்பு என்ன வென்று சொன்னால் நண்பர்களே, உலகத்தில் எந்த ஒரு இயக்கமாவது, மனிதர்களை மய்யப்படுத்தி இருக்கிறதா?
ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டவர்
தலைப்பிலேயே - பெரியாருடைய தனிச் சிறப்பு - பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் - ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டவர்.
பெரியாருக்குப் பெரிய துணையாளர்கள் யார்?
கல்லூரிக்குப் போகவில்லை - பாடங்களைப் படிக்கவில்லை பெரியார் என்று சொல்கிறார்களே, பிறகு யார் அவருக்குத் துணையாளர்கள்? எங்களைப் போன்றவர்கள் உதவியாளர்களாகத்தான் இருந்தோம்.
அய்ந்து பேர் - அய்ந்து கருவிகள்
பிறகு பெரியாருக்குத் துணையாளர்கள் யார் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, அய்ந்து பேர் - அய்ந்து கருவிகள் - போர்க்கருவிகளைப் போல.
அந்தக் கருவிகள் பெரியாருக்கு மட்டுமல்ல - உங்களுக்கும் பொருந்தும் - எனக்கும் பொருந்தும் - எல்லோருக்கும் பொருந்தும். அதில் ஜாதியில்லை- மதமில்லை - இனமில்லை - நாடு இல்லை.
பெரியார் சொன்னார், எனக்கு எதிலும் நம்பிக்கையில்லை - நான் எந்தப் பற்றும் உள்ளவன் அல்ல - எனக்குப் பற்று எது தெரியுமா? மானுடப் பற்றுதான்.
அந்த மானுடப் பற்றை சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியாருடைய பரந்துபட்ட அறிவு - மிகப்பெரிய அளவிற்கு மானுடத்தைத் தழுவிய ஒரு மானுடத் தன்மை.
அவர் சொல்லும்பொழுது,
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’
மனிதர்க்கு - இந்த மனிதருக்கு, அந்த மனிதருக்கு என்று அல்ல.
நம்மாட்கள் அழகுப் போட்டி நடத்துகிறார்கள் -
பெரியாருடைய பார்வையில் அழகு என்பதற்கு விளக்கத்தைப் பாருங்கள் -
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’
(தொடரும்)