புதன், 4 ஜூலை, 2018

பல்லாவரப் பொதுநிலைக் கழகக் கூட்டம்

15.02.1931 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத் திருக்கின்றன.  அவை ஒர் அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக்கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக் கூடியதாகவுமிருப்பதால் அதைப் பற்றி சில குறிப்பிடுகின்றோம்.

இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக்கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம் கொடுக்கின்றன.

பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுறை திருப்பனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளுக்கும், வாக்குறுதி களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் தீர்மானங்களும், தமிழுக்கும், சைவத்திற்கும் மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டுமென்னும் வேண்டுகோள் தீர்மானமும் மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்பந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும்.  அவையாவன,

கோவிலுக்குள் செல்ல எல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும்,

கோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிகச் செலவானதும் சமயக் கொள்கைக்கும்  அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிடவேண்டும்.

சாரதா சட்டத்தை உடனே அமலில் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வழங்க வேண்டும்.

ஜாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம்.

விதவை விவாகம் செய்யப்பட வேண்டும்.

இவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது.  அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்றவையாகும்.

என்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது மத நூலாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ, வேத கட்டளையாகவோ இருந்தாலும்) அதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாகவும் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது.  இது அதாவது பகுத்தறிவையும், (நியாயமாகிய) ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கை கள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத (மறை)க் கட்டளைக்கும் விரோத மானாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானிப்பதிலிருந்து மாறுதல் வேண்டும் என்பவர்களுக்குக் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.  இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிக கவலையில்லை.  ஏனெனில், அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் பொருத்தமானவை களை ஒப்புக்கொள்வதும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளி விடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டு விட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினிடமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராறு இல்லை.  மற்றபடி இனிமேல் அறிவு எது? ஒழுக்கம் எது? நியாயம் எது? என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.  இவைகள் மனிதனுக்கு மனிதன் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறு படத் தோன்றலாம் வேறுபட லாம்.  ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனித சமுக மொத்தத் திற்கும் பொருத்தமானதே ஒழிய, சைவத்திற்கு மாத்திரமோ ஒரு தனிக் கூடத்திற்கு மாத்திரமோ ஏற்படக் கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக்  கருதி அவர் களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், சௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.

முடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமல்லாமல் ஒப்புக் கொள்ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

பல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர்களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை.  அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும்முற்கூறிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த  உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால்,  பண்டிதக் கூட்டத்தார்களில் எவருக்காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால், அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்கும் என்றும் கருதியிருந்ததோடு நாம் எவ்வெத் துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்புகின்றோமோ அத்தனைக்கும் அடிகள் ஆதரவளிப்பார் என்னும் நம்பியும்  இருந்தோம்.  எரிதல் காரணமாய் சிலர் பல காரணங்களால் பல சூழ்ச்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள் எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கிவிடாமல் தன் ஆற்றலையே பிடித்துச் சமாளித்துக் கொண்டார்.  இதற்கு உதாரணம் வேண்டியவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப் புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருப்பாதிரிப்புலியூரில் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம்.  எனவே, இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொதுநிலைக் கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக் கொண்டு  கொண்ட அபிப்பிராயகும்.

மற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விவரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம்.

-  விடுதலை நாளேடு, 30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக