வியாழன், 12 ஜூலை, 2018

#திராவிடம்அறிவோம் (9)

பொது இடங்கள் எல்லாவற்றிலும் நுழையவும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவுமான அடிப்படையான மனித உரிமை தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் கோவில்களைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்தும் உரிமை, கோயில் நுழைவு உரிமை ஆகியவற்றுக்கான கிளர்ச்சிகளும் அடங்கும்.

நீதிக்கட்சித்தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அதற்கு மாறாக, 1939 இல் தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில், எம்.சி.ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோதாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில், அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டு ,மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவருடன் நுழைந்து சில தேசிய பத்திரிக்கைகளில் பெரும் ஆரவாரம் மிக்க அங்கீகாரம், ராஜகோபாலாச்சாரியிலிருந்து காந்தி வரை தேசியத்தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார் மதுரை ஏ.வைத்திநாதய்யர்.

தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.க.வின் ‘வாழ்க்கைக் குறிப்பு’களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்திநாதய்யர் நடத்திவைத்த ‘நுழைவும்’ கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக