ஜாதி ஒழிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதி ஒழிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம்

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 16-30 2022

கழகத்தின் சார்பில் இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் 20.3.1999 அன்று திருத்தணி முதல் திருச்சி வரையிலான பயணம் மேற்கொண்டோம். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் முதல் நாள் திருத்தணி பேரூராட்சி திடலில் எழுச்சியோடு துவங்கியது. மக்கள் நல உரிமைக் கழகப் பொதுச்செயலாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் கழகத்தின் கொடியினை அசைத்து துவக்கி வைத்தார்.



புத்தர் தோற்ற இடத்தில் பெரியாரின் வெற்றி! நிச்சயம் அமையும் என்று கூறி, எழுச்சியுரை ஆற்றினேன். நூற்றுக்கும் மேற்-பட்ட கழகத் தோழர்கள் பெரும் பயணத்தில் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் வழிநெடுக கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பல்வேறு கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் உரையாற்றினேன். மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
திருநாகேசுவரத்தில் 25.3.1999அன்று கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அறிவாசான் பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நிறைவு விழா 29.3.1999 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் அரியலூர் மாவட்டம் செந்துறை சிங்காரவேல் _ ராசலெட்சுமி ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை முகம்மது அன்சாரி _ சர்புன்னிஷா ஆகியோரின் மகள் ரெஜினாவிற்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை பொதுமக்களின் முன்னிலையில் நடத்திவைத்தேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.நல்லகண்ணு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தோழர் நல்லகண்ணு அவர்கள் உரையாற்றுகையில், “உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து நிலைக்க வேண்டுமானால், அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் வீரமணி அவர்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், கடும் பகலிலும், இரவிலும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அவருடைய பிரச்சாரப் பயணத்தை _ இலட்சியப் பயணமாக நாங்கள் கருதுகின்றோம். ஜாதியை ஒழிக்க திராவிடர் கழக முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்’’ என உரையாற்றினார்.

எனது நிறைவுரையில், ஜாதி ஒழிப்புக்கான பத்து அம்சத் திட்டத்தினை விளக்கியும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிப்பு என்று திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினேன். இப்பெரும் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்தேன்.

வைக்கத்திலிருந்து தொடங்கிய ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம்!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022


கி.வீரமணி


திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பேரணி எனது தலைமையில் 12.12.1998 அன்று மாலை வைக்கத்திலிருந்து துவங்கியது. இந்த வரலாற்று நிகழ்வினை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா கழகக் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தார். துவக்க விழாவில் கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் கிருட்டினன், வைக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் _ சி.பி.அய். வைக்கம் செயலாளர் சுசீலன், நாராயணன், பாரதிய சாமுக்ய நீதிவேதியின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் நூல்களை வழங்கினேன். இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயண நிகழ்ச்சிகள் தென் மாவட்டங்களில் _ ஜாதிக் கலவரங்கள் நடந்த பல சிற்றூர், பேரூர் நகரங்களில் சிறப்பான முறையிலும், கட்டுப்பாட்டுடனும் நடை-பெற்றன. செல்லும் ஊரெல்லாம் ஆண், பெண் (பொதுமக்கள்) திரளாகக் கூடிநின்று, கவனத்துடன் உரைகளைக் கேட்டனர். சில ஊர்களில் அடைமழையிலும் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மக்களும் மழையில் நனைந்தபடியே கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களும் இருந்து ‘இப்படிப்பட்ட பிரச்சாரத்தை அடிக்கடி வந்து செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர். எங்கள் கிராமத்திற்கு வர மாட்டீர்களா? என்ற ஏக்கத்துடன் கேள்விகள் வந்தன.

இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா 19.12.1998 அன்று மதுரை மாநகரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் நிறைவுரையுடன் நிறைவடைந்தது. இந்தப் பயணம் 1313 கி.மீ. கடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர்கள்: பழ.நெடுமாறன் (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கா.காளிமுத்து (துணைப் பொதுச்செயலாளர், அ.இ.அ.தி.மு.க.), பொன்.முத்துராமலிங்கம் (தென்மாவட்ட அமைப்புச் செயலாளர், தி.மு.க.), நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்), என்.வரதராசன் (நிருவாகக் குழு உறுப்பினர், சி.பி.எம்.), துரை.சக்ரவர்த்தி (உதவிப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.), ஏ.ஜி.எஸ்.இராம்பாபு (முன்னாள் எம்.பி., த.மா.கா.), க.ஜான் மோசஸ் (செயலாளர், ஜனதா தளம்) மற்றும் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இரா.குணசேகரன், க.பார்வதி, இரா.செயக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் புத்தாடை போர்த்தி ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அளித்து, நினைவுப் பரிசும் வழங்கினோம். விழாவில் சிறப்புரை யாற்றுகையில்,
“திராவிடர் கழக அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட தலைவர்களுக்கெல்லாம் நன்றி! நன்றி! நம்மிடையே வேறுபட்ட அரசியல் இருந்தாலும் தந்தை பெரியாரால் ஒன்றுபடுவோம் என்று இம்மேடை உணர்த்துகிறது.
இந்தப் பயணத்தின்போது மக்களிடம் நல்ல மாறுதலைக் கண்டோம் -_ அதுதான் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஜாதிப் பிரச்சினை, வெறும் சட்டப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை. நாங்கள் முன்னால் செல்வோம் _ சட்டம் பின்னால் வரட்டும்!
தீண்டாமை ஒழிப்பு மாநாடு வேண்டாம் _ ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள். தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. அதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மாற்றவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார் _ 1973 டிசம்பரில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில். 50 ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பிறகு சுடுகாட்டிலும் ஜாதி இருப்பது வெட்கக் கேடானது.

ஜாதித் தீயினால் வெந்தது போதும் _ மக்கள் மாண்டது போதும்! ஜாதியை ஒழிப்போம் _ சமத்துவத்தை உருவாக்குவோம். தென்மாவட்டங்களில் இந்தப் பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தக் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசு மற்ற மற்ற பணிகளைத் தொடரவேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மீ.அழகர்சாமி நன்றி கூறினார்.

- கட்டுரையின் ஒரு பகுதி...