முலைவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முலைவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2024

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி!



விடுதலை ஞாயிறு மலர்
Published February 25, 2023

“இது போன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, 

மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் 

இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது.”

நாம் இன்று எத்தனையோ விஷயங்களுக்காக அரசுக்கு வரி கட்டுகிறோம் அல்லவா… அதுபோலவே 18ஆம் நூற்றாண்டிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரிகள் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் அனைவருக்கும் சமமானதாக அல்லாமல் பலவிதமான பாகுபாடுகளுடனும், கொடூர ஒடுக்குமுறையுடனும் இருந்தன. மனிதகுல வரலாற்றில் மிக அவமானகரமான காலத்தின் சாட்சியமாக அந்த வரிகள் இருந்தன!

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்துவந்த சாணார்/நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான வரிகளை எதிர்கொண்டார்கள். வீட்டில் பசுமாடு வளர்த்தால் வரி, மண்வெட்டி-அரிவாள் வைத்திருந்தால் வரி, வளர்க்கும் பனை மரங்களுக்கு வரி, தலைப்பாகை கட்டினால் வரி, முகத்தில் மீசை வளர்த்தால் வரி, திருமணங்களில் தாலி கட்டினால் வரி, வீட்டுக்குக் கதவு இருந்தால் வரி, ஜன்னல் இருந்தால் வரி… என அன்றைய காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மட்டும் 110 விதமான அநியாயமான வரிகள் விதிக்கப்பட்டன. இவர்களின் வீட்டுக் கதவுகள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க உரிமையில்லை. வீட்டில் செம்புப் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தில் யாரையும் செல்லப்பெயர்களை வைத்து அழைக்கக் கூடாது. இவர்கள் வடிக்கும் சோற்றைக் கஞ்சி என்றே அழைக்க வேண்டும். இவர்கள் வசிப்பிடத்தைக் குடிசை என்றே அழைக்க வேண்டும். பெரிய கோயில்களில் உள்ள தெய்வங்களை வழிபடக் கூடாது என்பது போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளும் இருந்தன.

1754ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணுவச் செலவுகளுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது மட்டும் தலைஇறை வரி விதிக்கப்பட்டது. இந்த வரியின் சுமையைத் தாங்க முடியாமல், இனி இங்கே வாழ முடியாது எனக் குடும்பம் குடும்பமாக மக்கள் திருநெல்வேலி நோக்கிப் படையெடுத்தார்கள். 1807ஆம் ஆண்டு மட்டும் தலைஇறை வரியாக 88,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால் அதன் சுமையை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். மனிதாபிமானமற்றவர்கள் ஆட்சி செய்யும்போது, வரி என்பது ஒருவித தண்டனையாக மாறுகிறது, குடிமக்களை வறுமை நோக்கித் தள்ளுகிறது என்பதை வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம்.

இதையெல்லாம்விட முக்கியமானது அங்கு அமலில் இருந்த ஒரு வரி. உலகம் முழுவதிலும் எந்தவோர் அரசும் யோசித்துக்கூடப் பார்க்காத ஒரு வரி. அந்த வரியை எப்படித் திட்டமிட்டிருப்பார்கள், எப்படி நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நம்மால் யூகிக்கவே முடியவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பெண்களின் முலைகளுக்கு வரி போடப்பட்டது. தமிழில் `முலை வரி’ என்றும், மலையாளத்தில் அதை `முலைக்காரம்’ என்றும் அழைத்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஜாதி நம்பூதிரிகள் உள்ளிட்ட ஆதிக்க ஜாதிப் பெண்களும் ஒரு கட்டம் வரை மேலாடை அணியவில்லை. அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு, அய்ரோப்பியப் பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்து மேலாடை அணிந்திருப்பதைப் பார்த்து, இவர்களும் மெல்ல மெல்ல மேல் முண்டு அணிந்து நாகரிகமாகத் தங்களது மார்பகங்களை மறைத்துக் கொண்டார்கள். அப்படித் தங்களின் மார்பகங்களை மறைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர்கள், அந்தப் பழக்கத்தை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பின்பற்றி விடாதபடி தடைகளை விதித்தார்கள்.

அந்தத் தடைகள், கட்டுப்பாடுகள், பாகுபாடுகளுக்கிடையே பெண்கள் எவ்வளவு அவமானகரமான உணர்வுகளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் வலியாக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு, ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டுப் பார்த்தது. ஆனால் “இது எங்கள் நிலம், எங்கள் நிலத்தின் கலாசாரத்தில், சடங்குகளில், சம்பிரதாயங்களில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்று சமஸ்தானத்தின் ஆதிக்க ஜாதியினர் வைத்த வாதங்களில் குழம்பிப்போய், பின்வாங்கியது பிரிட்டிஷ் அரசு.

இதுபோன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது. ரொட்டிக்காக, அரிசிக்காக அல்ல, தங்களின் சுயமரியாதைக்காகவே மதமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் மதம் மாறிய பின்னரும் அவர்களுக்கு மேலாடை அணிய அனுமதியில்லை என்றார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார்கள், முதன்முதலில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக பலமாகக் குரல் எழுப்பினார்கள்; போராடினார்கள். தேவாலயங்களுக்கு வரும் பெண்களை மேலாடை அணிந்துவரும்படி கோரினார்கள். அதேசமயம், மேலாடை அணிந்து வந்த பெண்களைத் தெருவில்வைத்து அவர்களது மேலாடையைக் கிழித்து அவமானப்படுத்தினார்கள் ஆதிக்க ஜாதியினர். இந்த வன்முறைக்குப் பயந்து, பல பெண்கள் ஒரு மாற்று உடையுடன் தேவாலயம் நோக்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம், ‘கிறிஸ்தவம் தழுவியவர்கள் மட்டும் இனி மேலாடை அணியலாம்‘ என்று 

அறிவித்தது.

1822 முதல் 1859 வரை மேலாடை அணியும் உரிமைக்கான போராட்டம் இடைவிடாமல் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை, பாறசாலை, நெய்யூர், ஆத்தூர், திற்பரப்பு கண்ணனூர் அருமனை, உடையார்விளை புலிப்புனம் என்று போராட்டம் சூடுபிடித்தது. போராடிய பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்; அவமானப்படுத்தப்பட்டார்கள். மேலாடை அணிந்த பெண்களை ஏரில் பூட்டி உழவு செய்தார்கள். அய்யா வைகுந்தர் போன்றோர் போராடும் பெண்களுக்குத் துணை நின்றார்கள்; ஊக்கமளித்தார்கள். இந்தப் போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக மாறியது. தொடர் போராட்டத்துக்குப் பிறகு 1859, ஜூலை 26ஆம் தேதி, ‘அனைத்து சமயப் பெண்களும் மேலாடை அணியலாம்‘ என்கிற அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தது ‘சாணார் பெண்கள், கிறிஸ்தவப் பெண்கள் அணியும் குப்பாயம் அல்லது மீனவப் பெண்களைப் போன்று கட்டிச்சீலை உடுத்திக்கொள்ளலாம். ஆனால், ஆதிக்க ஜாதிப் பெண்கள் அணிவதுபோல் மேலாடை அணியாமல் வேறு விதங்களில் மார்பை மறைத்துக் கொள்ளலாம்’ என்றது. அப்போதும்கூட சமஸ்தானம் இந்தத் தீர்ப்புக்குப் புதிய விளக்கமளித்து, ‘இந்த உரிமை சாணார் சமூகப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு இந்த உரிமையில்லை’ என்று தனது பிரித்தாளும் சூழ்ச்சியையே செய்தது. உடையைவைத்து ஜாதியை அடையாளம் காணும் ஆணவ வெறியின் வெளிப்பாடாகவே இது கருதப்பட்டது.

‘ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்தச் சமரசம்‘ என்றும் மகாராஜா தரப்பு தெரிவித்தது. பின், 1865இல்தான் அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களும் மேலாடை அணிவதற்கான உரிமையைப் பெற்றனர். இத்தனை போராட்டங்களுக்குப் பின்புதான் ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்துக்கொள்ள முடிந்தது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, மார்பகங்கள் வளரத் தொடங்கியதுமே அரசாங்கம் அவர்களுக்கு முலை வரியை நிர்ணயம் செய்யும். வரியை வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீடாக வந்து பெண்ணின் மார்பகங்களை அளவெடுத்து அதன் அளவைப் பொறுத்து வரியை நிர்ணயிப்பார்கள்; வசூல் செய்வார்கள். நம்பூதிரி பிராமணர்களுக்கு முன்பாக இருக்கும்போது தங்கள் மார்பகங்களைப் பெண்கள் மறைக்க அனுமதியில்லை. ‘இது ஒடுக்கப்பட்ட ஜாதிகள், நம்பூதிரிகளுக்கு அளிக்கும் மரியாதை’ என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.

“ஜாதி அமைப்பு புனிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புனிதத் தன்மையை முதலீடாகக் கொண்டு இயங்கும். மதத்தையும், சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டும்” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.

சேர்த்தலை என்கிற கிராமத்தில் வசித்த நங்கேலிக்கு, இந்த முலை வரி விதிப்பின்மீது தீராத கோபம் ஏற்பட்டது. அதை அவளால் ஏற்கவே முடியவில்லை. 1803இல் அவளது வீட்டுக்கு வரி வசூல் செய்ய, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘பார்வதியார்’ என்கிற வரி வசூலிப்பவர்கள் வந்தார்கள். ‘இதோ உங்களுக்கு வரியைக் கொண்டுவருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, சற்று நேரம் கழித்து வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். தனது கைகள் இரண்டிலும் வாழையிலைகளை வைத்திருந்தாள். இலையில் தனது இரண்டு மார்புகளையும் அறுத்து வைத்திருந்தாள். ‘இதுதான் உங்களுக்கு நான் செலுத்தும் வரி’ என்று அதை நீட்ட, வரி வசூலிக்க வந்தவர்கள் தெறித்து ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தாள் நங்கேலி.

இன்று விதவிதமான ரவிக்கைகளை அணியும் பெண்கள், இந்தச் சுதந்திரத்தைத் தங்களின் முலைகளை அறுத்தெறிந்துதான் நங்கேலிகள் தங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்கிற சமூக வரலாற்றை அறிவார்களா… நம் பாடப்புத்தகங்கள் நமக்கு இந்தச் சமூக வரலாற்றை ஏன் கற்றுத் தரவில்லை?

(ஆதாரம்: அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய போராட்டங்களின் கதை என்ற நூலிலிருந்து, பக்கம் 109-114 வரை)

செவ்வாய், 1 ஜனவரி, 2019

வனிதா மதில்

இன்று கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் "வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற உள்ளது...!

நீதியற்ற முறையில், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற வெவ்வேறு காரணங்களால் ஒடுக்கபட்டு நீதிமறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அந்த அநீதியிலிருந்து விடுவிக்க நடக்கும் முயற்சிகள் அனைத்தும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்...!

ஜாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் இந்த கொடுமைகளை மிக அதிகமாக அனுபவித்து வரும் நிலை இந்தியாவில் இந்த நவீன காலத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது சமூக வளர்ச்சிக்கு முரணான விஷயங்கள் ஆகும்...

ஒரு காலத்தில் கேரளாவில்...இத்தகைய கொடுமைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக இருந்து வந்தன...

நாராயண குரு,இத்தகைய அநீதிகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளாக செயல்பட்டார்

பின்னாளில் காங்கிரசிலுள்ள  முற்போக்கு  எண்ணங் கொண்டவர்கள் இத்தகைய போராட்டங்களை தொடர்ந்தனர்...

அதற்கு அடுத்த காலகட்டத்தில் காங்கிரசில் இருந்து செயல்பட்ட சோஷலிஸ்டுகள் இந்த  செயல்பாடுகளை இன்னும் வேகத்தோடு முன்னெடுத்தார்கள்...

பின்னாளில் காங்கிரசில் உள்ள சோஷலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக மாறி செயல்பட ஆரம்பித்த பின்னர், அத்தகைய போராட்டங்கள் வர்க்க ரீதியான போராட்டமாக பண்பு வடிவான மாற்றமடைந்ததன் மூலம் நிலவுடமையின் நிழலில் சுகபோகமாக வாழ்ந்து வந்த ஜாதிய, சடங்கு, சம்பிரதாய, பெண்ணடிமைக் கொடுமைகள் என அனைத்து விதமான கொடுமைகளும் சொல்லத்தகுந்த அளவில் உடைதெறியப் பட்டன....

இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று வந்த சுவாமி விவேகானந்தர்...
கேரளத்தில் அக்காலத்தில் நிலவிய இத்தகைய கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்....கொடுங்கல்லூர் என்ற இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட அவரிடம் "நீ என்ன ஜாதி?" என்று கேட்ட கேள்வியின் கொடூரத்தால் ஆடிப்போன விவேகானந்தர்..."இந்த ஊர் பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று கேரளத்தை  வர்ணித்தார்....பல ஊர்களிலும் சுற்றிவந்த தான்,  இத்தகைய கொடுமைகளை வேறு எங்கும் காணவில்லை என்று மனம் வெதும்பினார்...இத்தகைய கொடுமைகளை மாற்றி  இந்த சமூகத்தை மீட்பது மிகவும் கடினம் என்று கருதினார்.

கேரளத்தின் நம்பூதிரி சமூகம் என்ற பிராமணீய ஆதிக்கம் நிறைந்த ஜாதி, மேல்ஜாதி என்று கருதப்படும் நாயர் சமூகம் உட்பட மற்ற அனைத்து ஜாதியினரையும், அதுபோலவே தங்கள் நம்பூதிரி சமூகம் உள்ளிட்ட எல்லா சமூக பெண்களையும், தங்களது  அடிமைகளாகவே நடத்தினர். 

நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் பாலியல் ரீதியாக பயன்படுத்தும் உரிமை உள்ளதாக சொல்லி, நாயர் சமூக பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடி வந்தனர்...நள்ளிரவில் தென்னை ஓலை இலக்குகளை சேர்த்து கட்டிய "ஓலைச் சூட்டு"  பந்தத்தை பிடித்துக்கொண்டு தனது எடுபிடி கணக்குப் பிள்ளை வழிகாட்டியவாறு முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து வரும் நம்பூதிரி, முன்கூட்டியே மனதில் நினைத்திருக்கும் ஏதாவதொரு நாயர் சமூத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் முன் நின்றால்...அந்த கணக்குப் பிள்ளை அந்  வீட்டின் கதவைத் தட்டுவார்...உடனே அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்துவிட்டு...வந்திருப்பவர் அந்த ஊரின் நிவுடமையாளரான நம்பூதிரி என்று அறியும் போது உள்ளே சென்று தனது பாயையும் தலயணையையும் எடுத்துக்கொண்டு வெளியில் உள்ள திண்ணையில் வந்து அமர்ந்து கொள்ளவேண்டும்...அதிகப்படியான  சலுகையாக கணக்குப்பிள்ளை கொண்டுவரும் வெற்றிலைப் பெட்டியில் உள்ள வெற்றிலையை அவருடன் அமர்ந்து   மென்றவாறே உரையாடிக் கொண்டு  நம்பூதிரியின் மிதியடியையும் குடையையும் காவல் காக்கும் நாயைப் போன்று கூனிகுருகி அமர்ந்து கொள்ளலாம்...

சமூக அந்தஸ்து பெற்ற நாயர் சமூகத்திற்கே இதுதான் தலைவிதி என்றால் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை எப்படி நடத்தி இருப்பார்கள்...?

இவாறான பாலியல் அத்துமீறல்களை நம்பூதிரி சமூக ஆண்கள், நாயர் சமூகப் பெண்களிடம் நடத்துவதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு, அந்த நம்பூதிரியை அப்பா என்று அழைக்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது...நம்பூதிரிகள் மூலம் நாயர் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா என்று அழைக்கும் உரிமையை கேட்டு நாயர் சமூகமும் போராடும் நிலைமையில் கேரளம் ஒருகாலத்தில் இருந்தது என்பதிலிருந்தே பிராமணீயத்தின் நச்சு வேர்கள் எப்படி ஆழப் பரவியிருந்தது என்பது விளங்கும்...

அதுபோலவே நம்பூதிரி சமூகப் பெண்களின் நிலை...

நம்பூதிரி குடும்பத்தில் உள்ள  மூத்த ஆண் மட்டுமே முறைப்படி ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்...அந்த பெண், தனது  கணவரின் உடன்பிறந்த அனைவருக்கும் பாலியல் ரீதியான தேவைகளை தீர்த்துவைக்க கடமைப்பட்டவர் என்ற அநீதியான நடைமுறை இருந்தது. தனது கணவரின் மற்ற சகோதரர்கள் யாரும் ஒரு நம்பூதிரிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. வேண்டுமென்றால்  நாயர் பெண்ணை புடவை கொடுத்து சமந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அது திருமணம் என்று அழைக்கப்படாது, மாறாக "சம்பந்தம்" என்றே அழைக்கப்படும்...அப்படியே ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது. அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது..அங்கீகரிக்கப்பட்ட வாரிசுகள் வேண்டுமெனில் மூத்தவரின் மனைவியின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்...அதுபோலவே நம்பூதிரி பெண்  குழந்தைகளை முதியவர்களுக்கு  திருமணம்  செய்து வைப்பது...அவ்வாறு நடக்கும் திருமணம் முடிந்து சிலகாலத்தில் அந்த கிழவன் இறந்து போனால் அந்த குழந்தை விதவையாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூலையில்  அடைபட்டுக் கிடக்கவேண்டும்.

ஆக நம்பூதிரிப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே சலுகை என்னவென்றால், தீண்டாமை என்னும் கொடுமையால் வீட்டிற்கு வெளியில் நிற்காமல் வீட்டிகுள்ளே பிரவேசிக்கலாம்...அதுவும் மாதவிலக்கு காலங்களில் நம்பூதிரி பெண்களும் தீண்டத்தகாதவர்கள் தான்...

அதுபோலவே இன்னொரு கொடுமை...நம்பூதிரி சமூகத்தில் இளம் கன்னிப்  பெண்கள் இறந்துபோனால்...அவர்கள் கன்னி கழியாமல்  தகனம் செய்யப்படக் கூடாது என்ற ஒரு கேவலமான மூடநம்பிக்கை...அதற்காக பரிகாரம் என்ற பெயரில் அநாகரிகமான சடங்கு ஒன்று இருந்தது...அந்த இளம் பெண்ணின் பிணத்துடன் சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உறவு கொள்ள வேண்டும்..."சவ போகம்"  என்று அழைக்கப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான சடங்கை நிகழ்த்த, தனியாக ஒரு ஜாதிப்  பிரிவினரை சண்டாளர் என்ற பெயரில் வைத்திருந்தார்கள். உயிருடன் இருக்கும் போது அந்த சண்டாளர் சமூகத்தில் உள்ள ஒரு ஆணுக்கு, சம்பந்தப்பட்ட நம்பூதிரிப் பெண்ணே விரும்பினால் கூட திருமணம் செய்ய முன்வராதவர்கள், அந்த பெண் இறந்த பிறகு சடங்கு என்ற பெயரில் பிணத்துடன் போகம் செய்ய கட்டாயப்படுத்தும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்க முடியாது...

அதுபோன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் மாராப்பு சேலையைப் பயன்படுத்த, வரிவிதித்த, மார்பின் அளவைப் பொறுத்து வரிவிதித்த கேவலமான அரசியலமைப்புச் சட்டம் வைத்திருந்த ஊராக ..."முலை வரி" என்ற  பெயரில் வசூலிக்கப்பட்ட வரியை செலுத்த முடியாமல் மாரப்பு இல்லாமல் இருந்த பெண்கள் நிறைந்த நிலையிலிருந்த கேரளம்... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நங்கோலி என்ற பெண் முலைவரி கேட்டு வந்தவர்களிடம் தனது மார்பை அறுத்து சேப்பம் இலையில் வைத்து கொடுத்துவிட்டு தன்னை மாய்த்த கொடூரம்...

மலையாள மொழியின் முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்த பெண் கலைஞரான ரோசி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கமுடியாமல் போன கொடூரம் நிகழ்ந்த கேரளம்...

விவேகானந்தர், மாற்றுவது மிகவும் கடினம் என்று கருதிய  கேரளம் இன்று...

பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இத்தகைய கொடுமைகள் யாவும் பெருமளவில் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, ஒப்பீட்டளவில் ஜாதிவேற்றுமைகள்  ஒழிக்கப்பட்ட  மாநிலமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்த மாநிலமாக  தலைநிமிர்ந்து நிற்கிறது...

ஆனாலும் பிற்போக்கு சக்திகள் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முயல்கின்றன...சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமுல்படுதவிடாமல் இரட்டை நிலைபாடுகளுடன் நின்று சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சங்க பரிவார் சக்திகள், தொடர்ந்து பிற்போக்குத்தனமான செயல்களை செய்ய முயல்கின்றன...

அவற்றை முறியடித்து...கேரளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை  செயல்படுத்த முன்னத்தி ஏராக கேரளம் எடுக்கும் ஒரு அரிய முயற்சியே...இந்த "வனிதா மதில்"

கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் உட்பட ஏராளமான முற்போக்கு எண்ணம் படைத்த அமைப்புகள் இந்த நிகழ்வை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீராகத் திட்டமிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்ட முயல்கின்றனர்...

கேரளத்தின் வட எல்லையான காசர்கோட்டில் துவங்கி தென் எல்லையான திருவனந்தபுரம் வரை நீண்டு கிடக்கும் சுமார் 640 கி.மீ தூரத்தை இடைவெளியின்றி, பெண்களை மட்டும், கைகளைக்கோர்த்து சங்கிலியாக அல்லாமல், தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக நின்று அணிவகுக்கச் செய்து சமத்துவம் என்ற சிந்தனையை சமூகத்தில் இன்னும் இன்னும் ஆழமாக விதைக்கச் செய்யும் இந்த முயற்சி உலக ஊடகங்களையும் கூட திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது...

BBC தொலைக்காட்சி மாலை அரைமணி நேரம் நேரலையாக ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளது...

பெண்கள் மட்டும் அணிதிரளும், உலகிலேயே மிகப்பெரும் இந்த நிகழ்வை பற்றி கேள்விப்பட்டவுடன் அதை  ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் செயலில் கின்னஸ் சாதனை அங்கீகரிக்கும் குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்...கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...இந்த வனிதா மதிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராய்ந்து இடைவெளி ஏதுமுள்ளதா என்று அறிய ஒரு கிலோமீட்டருக்கு ஒரு  ஒளிப்பதிவாளர் என்ற முறையில் சுமார் 640 ஒளிபதிவாளர்களை, கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 50 லட்சம் பெண்கள் நிகழ்வில் பங்கேற்பதுடன் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த செயல்பாடுகளுக்கு துணை நிற்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது....

சமூக சீர்திருத்தப் போராட்டம் உள்ளிட்ட எத்தகைய போராட்டமென்றாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பங்கேற்பு மிகவும் அவசியம்...அதிலும் அவர்களே அதுபோன்ற போராட்டங்களுக்கு  துவக்கப் புள்ளியாவது இன்னும் சிறப்பு...!

தமிழகம் உட்பட இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய முயற்சிகள் நடக்க இது ஒரு துவக்கப்புள்ளியாக அமையட்டும்...!

வெல்லட்டும் இந்த முயற்சி...!

  "வனிதா மதில்" வரலாறு படைக்கட்டும்...!

#LalSalam
#சமூக_சீர்திருத்த_இயக்கங்கள்_வெல்லட்டும்

- சிவக்குமார் சிவா முகநூல் பதிவு(1.1.19)