ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (4) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

 


விடுதலை நாளேடு

மகளிரே முதன்மையானவர்கள்!

நான்கு நாள்கள் திட்டமிடப்பட்ட பயணத்தில், மூன்று நாள்கள் காலை உணவு தோழர்களின் இல்லத்தில் நடை பெற்றது. அங்கே இருந்த தோழர்களின் இணையர்களிடம் அவர்களின் பெயர், ஊர் போன்றவற்றை விசாரித்து அறிந்தார் ஆசிரியர். அவரவர் ஊரின் சிறப்புகள், தனக்கும், அந்த ஊருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் கூறிய போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேபோல ‘‘பரபரப்பான சூழலில், பல்வேறு உணவுகளைச் சிரமத்தோடும், அன்போடும் வழங்கினீர்கள், நன்றி!’’ எனத் தலைவர் கூறியபோது மெய்சிலிர்த்துப் போனார்கள்.
“ஜப்பானில் ஈரோட்டுப் பூகம்பம்” எனும் தமது நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூட தோழர்களின்‌ பெயர்களோடு, அவர்களின் வாழ்விணையர்கள் பெயரையும் இணைத்து எழுதி இருந்தார் ஆசிரியர். எல்லோருக்கும் உரிய பெரு மையும், அங்கீகாரமும் போய் சேர வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில்! அதேபோல குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலத் திட்டம் போன்றவற்றையும் விசாரித்து அறிந்தார். அப்படியான சூழலில் காயத்ரி – செந்தில்குமார் வீட்டிற்குச் சென்ற போது அவர்களின் மகன் கவின் அவர்களிடம் படிப்பு இல்லாமல், கூடுதலாக என்ன கற்று வருகிறீர்கள் என ஆசிரியர் கேட்டார். “மிருதங்கம் பழகி வருகிறேன்” என்றார் கவின்.

மிருதங்க கச்சேரி!


மகிழ்ந்து போன ஆசிரியர், மிருதங்கத்தை இசைக்கச் சொல்லிக் கேட்டார். சில நிமிடங்களில் அந்த இடமே அழகிய கச்சேரி மேடை ஆனது. “ஒரு பெரிய தலைவர், தம் மகனை அழைத்து, அவன் பயின்று வரும் மிருதங்கத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்கிறாரே”, என அவரின் அம்மா காயத்ரி நெகிழ்ந்து போனார். உடனே அருகில் இருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களிடம், ‘‘நீங்கள் அறிஞர் அண்ணா குறித்து ஒரு பாடல் பாடுங்கள், பிரின்சு, தந்தை பெரியார் குறித்து ஒரு பாடல் பாடட்டும், கவின் மிருதங்கம் இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கட்டும்’’ எனக் கூறி, ஒரு பத்து நிமிடத்தில் சூழலையே அழகாக்கி விட்டார் ஆசிரியர்!

ஆசிரியரின் கலகலப்பான நகைச்சுவைகள்!
அதேபோல திமுக மாநிலங்களவை உறுப்பினர்

எம்.எம்.அப்துல்லா, அவரின் வாழ்விணையர், ஜப்பான் வாழ் தோழர்கள் என அனைவருமே வியந்த ஒன்றும் இந்த நான்கு நாள்களில் இருந்தது. ஆசிரியருடன் நடைபெற்ற உரையாடலில் அரிய பல நினைவுகள், வரலாற்றுக் குறிப் புகள், சாதனை நிகழ்வுகள், சரித்திரம் படைத்த தலைவர்கள் என எண்ணற்ற மலரும் நினைவுகளை ஆசிரியர் பகிர்ந்து கொண்டார். இயல்பாக உரையாடும் போது ஆசிரியரின் பேச்சில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். அந்த அனுபவத்தை அவர்கள் அனைவரும் பெற்றனர்.

இந்த ஜப்பான் பயணத்தின் நான்கு நாள்கள் திட்டமிடல் தவிர, ஆசிரியரின் வழக்கமான எழுத்துப் பணிகள், வாசிப்புகள் என அதுவும் நள்ளிரவு கடந்து போனது!

பெரியார் – அண்ணா விழாக்கள்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் 15.09.2024 அன்று, ஃபுனாபொரி டவர் ஹால், இரண்டாவது மாடியில், Heian எனும் அரங்கில் தொடங்கியது. ‘அவர்தாம் பெரியார்’, ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்’ ஆகிய பாடல்களுக்குக் கவின் செந்தில்குமார் மிருதங்கம் இசைக்க நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் மகளிர் குரோகவா சான் தம் குழுவினருடன் மிகச் சிறப்பாகப் பறை இசைத்தார். தோழர் வி.குன்றாளன் வரவேற்புரை நல்கினார். ‘மெல்லிசை மொட்டுகள்’ குழுவினர் குழுப்பாடல் பாடினர். சிவ வருண்யா மற்றும் நிருத்யா நாட்டியப்பள்ளி மாணவர்கள் குழு நடனமும், கருவி இசையும் வாசித்தனர்.

‘மறக்க முடியாத ஜப்பான் நினைவுகள்’ எனும் தலைப்பில் வி.சி.வில்வம், ‘தமிழ்நாட்டில் உருவாகி வரும் பெரியார் உலகம்’ குறித்து ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினர். தொடர்ந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களைக் குறித்து தோழர் ச.கமலக்கண்ணன், ஆசிரியர் அவர்களைக் குறித்து தோழர் இரா.செந்தில்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.

ஆசிரியர் கி.வீரமணி –- எம்.எம்.அப்துல்லா உரைகள்!

நிகழ்வில் “அண்ணா கண்ட கனவு” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய எம்.எம்.அப்துல்லா அவர்கள், ‘‘அறிஞர் அண்ணாவிற்கு என்று தனி கனவு எதுவும் இருந்ததில்லை; பெரியாரின் கனவு தான், அண்ணாவின் கனவு! அதை நிறைவேற்றும் பொருட்டே அவர் பாடுபட்டார், வெற்றியும் பெற்றார்”, எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களோடு உருக்கமாகப் பேசினார்.

“பெரியாரின் சமூகப் பார்வை” எனும் தலைப்பில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “இந்தப் பிறந்தநாள் விழாக்கள் என்பது வேருக்கு விழுதுகள் எடுக்கும் நன்றிப் பெருவிழா”, என முத்தாய்ப்பாய் குறிப்பிட்டார். பெரியாரின் உழைப்பால் விளைந்த ஜப்பான் வாழ் தோழர்களை வெகுவாகப் பாராட்டினார். ஜாதிச் சங் கங்களை உருவாக்காமல், சாதிக்கும் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மகளிரின் சிறப்பு குறித்தும், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எவ்வளவு மகத்தானவை என்பதையும் நினைவு கூர்ந்தார். பழைமையை உரமாக்கி, புதுமையை உணவாக்குவோம்!”, எனப் பலத்த கரவொலிக்கிடையே ஆசிரியர் உரையை நிறைவு செய்தார்!

பாராட்டுப் பெற்றோர்!

2021 ஆம் ஆண்டு ‘‘பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்’’, ‘‘வைக்கம் போராட்டம்’’ ஆகிய இரண்டு நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தப் பணியைச் செய்தவர்கள் இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன்! இந்தப் பணிக்கு இவர்களுக்கு உதவிய ஜப்பானியர் “நகானோ” அவர்களுக்கு ஆசிரியர் பாராட்டிச் சிறப்பு செய்தார்.

அதேபோல பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாக்கள் சிறக்க நன்கொடை வழங்கிய உகானந்த் (சன்வெல் சொல்யூஷன்ஸ்), மோகன், ராஜேஷ் (நெக்ஸ்ஜென்), சுரேஷ் (கேரளா உணவகம்), சரவணன் (சரண் கார்ப்பரேஷன்), நடராஜன் (சோவாப்ளூ ஜப்பான்), ஜெயசீலன் (டெக் கான்சாஃப்ட்). கே.கே.செந்தில்குமார் (சங்கம் சாஃப்ட்வேர்),

இரா. செந்தில்குமார் (சில்வர்ஸ்கை ஜப்பான்), கோவிந்தபாசம் (ஜப்பான் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிளப்), குறிஞ்சி செல்வன்
(சிறீ பாலாஜி தென்னிந்திய உணவகம்), கண்ணன் (ருசி இந்திய பிரியாணி உணவகம்) ஆகியோரும் மேடையேற்றி சிறப்பு செய்யப்பட்டனர். இறுதியில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்வும் நடந்தேறியது. ஆம்! குடும்பம், குடும்பமாக ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர். சற்றொப்ப 1 மணி நேரத்தைக் கடந்துபோனது அது! நிறைவாக மோ.விஜய் நன்றி கூறினார்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் வி.குன்றாளன்,

இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, கணேஷ் ஏழுமலை, வி.ராஜா, இரா.அய்ஸ் வர்யாதேவி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!

நான்கு நாள்கள் போனதே தெரியவில்லை என்பது ஒருபுறம்; நான்கு நாள்களில் நான்காண்டுகள் பழகிய தோழமை உணர்வு மறுபுறம்! மொத்த அன்பையும் அனுபவித்த நிலையில், தோழர்கள் சூழ் பட்டாளம் 16.09.2024 இரவு ஜப்பான், நரிட்டா விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்கள்! ஆசிரியர் எவ்வளவு பெரிய தலைவர் என்பதை அவர்கள் அறிவார்கள். எனினும் ஒரு குழந்தையைப் போல அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! “பெரியார்” இளைஞர்கள் ஜப்பான் சென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்த நான்கு நாட்கள் ஜப்பானே பெரியார் மயம் என்றுதான் சொல்ல வேண்டும்! நன்றி தோழர்களே! ஜப்பானிய மொழியிலும் எங்கள் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துகிறோம்!

“மின்னாசான் கோன்னிச்சுவா! ஹஜ்மெமஸ்தே! தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!”

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (3) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

 


விடுதலை நாளேடு

நெருக்கமான ஜப்பான்!

ஜப்பான் நிஷிகசாய் பகுதியில்தான் ஆசிரியருக்கான தங்கும் விடுதி இருந்தது. புதுக் கண்ணாடியைத் திரும்பத் திரும்பத் துடைத்து வைத்தது போன்ற சாலைகள், அழகான கட்டட அமைப்புகள், 24 மணி நேரமும் செயல்படும் வணிக நிறுவனங்கள், எங்கும், எதிலும் பரபரப்பு, எனினும் எப்போதும் நிலவும் பேரமைதி! அதனால் ஏற்படுகிற பேரானந்தம்! அதுதான் ஜப்பானை மனதிற்கு நெருக்கமாக வந்து அமரச் செய்கிறது!
ஜப்பானைச் சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்று சொல்வதை விட, சுயமரியாதை மிக்க நாடு என்று சொல்லலாம். அதற்கான காரணங்களை ஆயிரமாயிரம் நாம் அடுக்கலாம்! பெரியார் காண விரும்பிய நாட்டில் வசிப்பதைப் போன்ற ஓர் உணர்வு!

தோழர்களின் திட்டமிடல்!

தங்கியிருந்த அறையில் இருந்து 10 நிமிடத் தூரத்திற்குள் சில தோழர்களின் வீடுகள் இருந்தன. விழா அரங்கமும் அவ்வாறே இருந்தது. ஆசிரியருக்கு ஏற்ற உணவை, தங்கள் உணர்வுகளால் பரிமாறினார்கள். தங்கியிருந்த நாள்களில் தினமும் ஒருவேளை உணவை, எங்கள் வீடுகளில் தான் என்கிற தோழமைகளின் அன்பை ஆசிரியர் மறுக்கவில்லை.

குறிப்பாகத் தோழர்களின் திட்டமிடல் கண்டு ஆசிரியர் வியந்து போனார். குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனம் வந்து நிற்கும். இந்த நாளில் இவர் வருவார்; அடுத்த நாளில் அவர் வருவார் என எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். ஆசிரியரை அருகில் அமரச் செய்து, அழைத்துச் செல்லும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் தானே! எல்லோருக்கும் எல்லாம்! அனைவருக்கும் அனைத்தும்! என்கிற தத்துவத்தின் பிரதிபலிப்பு தானே இந்தத் திட்டமிடல்!

தமிழ்நாட்டுப் பெண்கள்!

இப்படியான நிலையில்தான் தோழர் திவ்யா வந்தார். ஆசிரியரின் நகைச்சுவை இழையோடிய பகுத்தறிவுப் பேச்சிலும், பெண்ணுரிமைப் பாடிய பெரியாரின் பேத்தியுமாய் ஆசிரியரிடம் வந்தார். “அய்யா! என் காரில் வாருங்கள்! நான் நன்றாகக் கார் ஓட்டுவேன்!”, என்றார். நாளும் பொழுதும் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தும் தலைவரின் மகிழ்ச்சிக்குத் தடுப்பணையும் இருந் திடுமோ! ஆசியாவிலேயே மகளிருக் கென்று தனிப் பொறியியல் கல்லூரியை உருவாக்கிய தலைவர் அல்லவா!
தோழர் திவ்யா பிரமாண்ட கார் ஒன்றை ஆசிரியர் முன் கொண்டு வந்து நிறுத்தினார். “அக்கிஹாபாரா” என்று சொல்லக்கூடிய உலகின் முதன்மையான “எலக்ட்ரானிக்” நகரம் அது! அந்த நகரத்துச் சாலைகளில் ஆசிரியரைக் கம்பீரமாக அமர வைத்து அழைத்துப் போனார் திவ்யா! படிப்பு வராது, பாதம் பார்த்து நட, அடக்கமாய் கிட, அடுப்படியே கதி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன சாஸ்திரப் புராணங்கள்! அதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள்… என உலகம் முழுவதும் பறந்து சென்றுவிட்டார்கள் தமிழ்நாட்டு மகளிர்!

ஆகாயம் தொட்ட ஜப்பான்!

இப்படியான நிலையில் அருகில் இருந்த சுற்றுலா தலங்களுக்குத் தோழர்கள் அழைத்துச் சென்றனர். டோக்கியோ நகரத்தில் இருந்த “TOKYO SKYTREE TOWER” எனும் இடத்திற்குச் சென்றபோது வியப்பு மேலிட்டது. சற்றொப்ப 2080 அடி உயரத்தில் அது இருந்தது. உலகம் முழுவதும் உயரமான “டவர்” இருந்தாலும், இதில் எந்தக் கட்டடமும் இல்லாமல் மிக அதிக உயரம் கொண்டது எனக் கூறினார்கள். அவ்வளவு உயரத் தில் இருந்து பார்க்கும் போது, ஜப்பான் ஆகாயம் தொட்ட வரலாற்றை உணர முடிந்தது!
தொடர்ந்து கமாகுரா எனுமிடத்தில் 37 அடி உயரத்தில் இருந்த புத்தர் சிலையை ஆசிரியர் பார்வையிட்டார். அங்கிருந்த மூங்கில் காடுகள், கடற்கரைப் பகுதிகள் போன்றவை நேர்த்தியாகவும், நெஞ்சை அள்ளுவதாகவும் இருந்தன. டோக்கியோ நகரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் இருந்த கிராமப் பகுதி அது. காரிலும், சற்று நடைப் பயணத்திலுமாக அந்த அனுபவமே மறக்க முடியாதது!

தோழர்களின் அன்பு மிகுதி!

ஆசிரியரை ஜப்பான் தோழர்கள் எவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள் என்பதற்கு, இப்போது சொல்லப் போகும் நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு! கிராமப்பகுதி என்கிற போது அனைத்து உணவுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனினும் தோழர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். இணையம் மூலமாக உணவகம் தேடும் பணி தொடங்கியது. திடீரென அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி! ஆமாம்! சிறிய உணவகம் ஒன்று அவர்களின் கண்ணில் தென்பட்டது. வாகனங்கள் விரைந்தன! எனினும் அந்த உணவகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் அங்கேதான் எங்கேயோ அந்த உணவகம் ஒளிந்திருந்தது. ஒரு வழியாய் கண்டுபிடித்து உள்ளே சென்றால், பத்துக்குப் பத்து சதுரடியில், பத்து பேர் மட்டும் சாப்பிடும் அளவு சிறிய இடம். அதில் ஒரு பகுதியில் அடுப்படியும் இருந்தது. எல்லோரும் அமர்ந்த பிறகு என்ன இருக்கிறது எனத் தோழர்கள் கேட்டார்கள். சுடு சோறு, பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு, ஊறுகாய் எனப் பட்டியல் வாசித்தார்கள். நம்மவர்கள் மாறி, மாறிப் பார்த்துக் கொண்ட போது, மத்தி மீன் குழம்பும் இருக்கிறது என அந்த ஜப்பானியர் மகிழ்ச்சியை அதிகப்படுத்தினார்.

ஜப்பான் கிராமத்தில் தமிழ்நாட்டு உணவு!

இருவர் மட்டுமே பணிபுரியும் அந்த உணவகத்தில் தமிழ்நாட்டுப் பருப்பு வகைகள், மசாலா பொடிகள், சிகப்பு குண்டு மிளகாய் என நம் நாட்டு “மெஸ்” தோற்றத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து விசாரித்த போது, உணவக உரிமையாளர் பெயர் “கெந்தரோ”. தமிழ்நாட்டிற்கு 5 முறை வந்துள்ளார். நம் உணவுகள் சிறப்பாக இருக்கிறது என மகிழ்ந்து, அதேபோன்று தயார் செய்து ஒரு சிறிய நகரப் பகுதியில் நடத்துகிறார். உணவகத்தின் பெயர் கமாகுரா பவன். ஆசிரியரை அறிமுகம் செய்தபோது, ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை சென்னை வரும்போது, பெரியார் திடல் வாருங்கள் என ஆசிரியரும் அழைப்பு விடுத்தார். உரிமையாளர், உதவியாளர், ஆசிரியர் மூவரும் படம் எடுத்துக் கொண்டனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

தொடர்ந்து அன்றைய தினம் இரவு ஜப்பானின் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆசிரியர் அவர்கள் சந்தித்தார்கள். இந்நிகழ்வு “தொரானொமோன்” எனுமிடத்தில் உள்ள நந்தினி தென்னிந்திய உணவகத்தில் நடைபெற்றது. இந்த உணவகத்தைத் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா மாநில இளைஞர்கள் இணைந்து நடத்துகிறார்கள். இட்லி, தோசை வகைகளை சூடாகவும், சுவையாகவும் தந்தனர். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர்.

என் வயது 91 அல்ல; 19 தான்!

அடுத்த நாளில் “டீம்லேப்ஸ் ப்ளானட்” என்று சொல்லக்கூடிய, ஒளிவிளக்குகளால் ஆன புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி, “என் வயது 91 அல்ல; 19 தான்’’ என்பார்கள். அதை நேரடியாகப் பார்த்த பல தருணங்களில், இது முக்கியமான தருணம்! நன்றி ஜப்பான்! உங்கள் நாட்டில் 100 வயது என்பதும், 125 வயது என்பதும் ஒரு பொருட்டே அல்ல! எங்கள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்பது போல, இந்த உலகத்திற்கே ஜப்பான் மாடல் என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தலாம்! இதைவிட சிறப்பாக வேறொரு நாடு வந்தால் அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடலாம்! அதுதான் பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவு!
இந்த “டீம்லேப்ஸ் ப்ளானட்” அமைப்பைப் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் சென்ற ஆசிரியர், இது எப்படி செயல்படுகிறது, இதன் சிறப்பு என்ன என்று சில நிமிடங்களிலே கணித்தது நாங்கள் பழைய தலைமுறை, ஆசிரியர் தான் இளம் தலைமுறை என எங்களுக்கு ஓங்கி உரைத்தது. ‘‘பிரின்சு, இங்க வாங்க… இப்படி படம் எடுங்க’’ என்று சொன்ன போது, எம்.எம்.அப்துல்லா அவர்கள் அசந்து போனார்கள். எதை விடுவது, எதை தொடர்வது என்று நமக்கும் தெரியவில்லை.

கடலுக்கு நடுவில் மதிய உணவு!

நிறைவு நாளில் “உமிஹொத்தாரு” எனும் இடத்தில் கடலுக்கு அடியில் இருந்த பாலத்தில் பயணம் செய்தோம். இந்தக் கரையில் தொடங்கும் சுரங்கப் பாதை 9.6 கிலோ மீட்டரும், அந்தக் கரையை அடையும் மேம்பாலம் கடலுக்கு மேலே 4.4 கிலோ மீட்டர் தூரமும் இருந்தன. இடையில் கடற்கரையை இரசிக்கும் வண்ணம் இட அமைப்புகளும், வணிக வளாகங்களில் ஏராளமான உணவகங்களும் இருந்தன. அதாவது 10 கிலோ மீட்டர் தூரத்தில் கடலின் நடுவில் சென்று உணவருந்தி, பொழுதைக் கழித்து வரலாம். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள்! இந்த அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலும் ஆசிரியர் அவர்களுடன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் அவர்களின் வாழ்விணையரும் பங்கேற்றனர்.
நாளை நாம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம்!

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (2) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்


விடுதலை நாளேடு

 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) என்பது இந்தியத் தூதரகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்! அதில்தான் நமது தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இதில் ஓரளவு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். தமது குடும்பத்தார் நம்பிக்கைக்காகத் தமது இல்லத்தில் கடவுள் படம் வைத்திருப்போரும் உண்டு!

நாங்கள் திராவிடர்கள்!

“எனினும் நாங்கள் திராவிடர்கள்! எங்கள் தலைவர் பெரியார்! எங்கள் நாடு தமிழ்நாடு! சமூகநீதியும், இட ஒதுக்கீடும் எங்களிரு கண்கள்! எங்களையும், தந்தை பெரியாரையும் பிரிக்க முடியாது”, என்கிற தெளிந்த சிந்தனை கொண்டவர்கள்!இல்லாவிட்டால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்று தலைப்பிட்டு, ஜப்பானில் இப்பெரு விழாவை எடுக்க முடியுமா?

இதற்கு முன்னாலும் “டோக்கியோ தமிழ்ச் சங்கம்” எனும் பெயரில் அமைப்பு இருந்தது. ஆனால் அவை தமிழர் களுக்கும், தமிழர் தம் பிள்ளைகளுக்கும் பயன்படவில்லை. அதில் பெண்களுக்கு மதிப்பே இருந்திருக்காது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை! இப்படியான நிலையில் தான் நம்மவர்கள் தோன்றினர்!

தோழர்களின் அணிவகுப்பு!

தொடக்கத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை பொதுவான தலைப்புகளிலும், இலக்கியம் கலந்தும் கொண்டாடினர். ஒரு கட்டத்தில் நம் அரசியலை, நம் கொள்கைகளை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். அப்படியான சூழலில் தான் பெரியார், அண்ணா, கலைஞர் தொண்டர்கள் ஒன்று கூடினர். இவர்கள் தான் இன்றைக்கு “ஜப்பான் வாழ் திராவிடர்கள்” என மிளிர்கிறார்கள்.

இவர்கள் “NRTIA Japan” என்கிற வாட்சப் குழு ஒன்றையும் இயக்கி வருகிறார்கள். இதில் ஜப்பான் வாழ் தமிழர்கள் மட்டும் இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் திராவிட உணர்வு கொண்ட தமிழர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வி.குன்றாளன், இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, ஏ.கணேஷ், வி.ராஜா, இரா.அய்ஸ்வர்யாதேவி உள்ளிட்ட தோழர்கள் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்!

கொள்கைத் தங்கங்கள்!

சென்னையில் இருந்து ஜப்பான் செல்ல சற்றொப்ப 11 மணி நேர விமானப் பயணம். இரண்டு விமானங்கள் மாற வேண்டும். ஒரு நாள் நிகழ்ச்சிக்காக இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விகள் இருந்தாலும், கடல் கடந்து வாழும் நம் கொள்கைத் தங்கங்களுக்குப் பெருமைச் சேர்க்க வேண்டாமா? அந்த வகையில் தான் 13.09.2024 அன்று ஜப்பான் நரிட்டா விமான நிலையத்திற்கு காலை 8 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்றடைகிறார்.

இதற்கிடையில் “ஜப்பானில் பெரியார் பிறந்தநாள் விழாவா?”, என்கிற வினாக்கள் வியப்போடும், மகிழ்வோடும் வந்த வண்ணம் இருந்தன. அதேநேரம் செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் விழாவை தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஆக இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளுக்கு ஆசிரியர் தமிழ்நாட்டில் இல்லையா என்கிற ஆச்சர்யங்களும் மலர்ந்து கொண்டிருந்தன.

தனி முத்திரைப் பதித்த ஆசிரியர்!

25.10.1997ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற மத்தியக் கமிட்டி கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் ஒரு முழக்கத்தை வைக்கிறார்கள். அதாவது ‘‘வரும் 21 ஆம்நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே! பெரியாரை உலகமயம் ஆக்குவோம்‌’’ என்று அறிவித்தார்கள். ‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும்’’ நமது திராவிடர் இயக்கங்களுக்கே உரிய சிறப்பல்லவா! அந்த வகையில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஜப்பானுக்கே சென்று பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடி, வரலாற்றுச் சிறப்புமிக்க தனி முத்திரையைப் பதித்து வந்துவிட்டார் நமது தலைவர் அவர்கள்!

விமான நிலையத்தில் மலர்ந்த முகங்களோடும், மணம் வீசும் மலர்களோடும் காத்திருந்தனர் தோழர்கள்! மூன்று வாகனங்களில் அணிவகுத்து, உலகப் புகழ்பெற்ற டோக்கியோ நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆசிரியரை! ஒரு காலத்தில் ஜப்பான் செய்யாத போர்கள் இல்லை. கால மாற்றத்தில் முற்றிலும் மாறிப் போனார்கள். இன்றைக்கு உலகிற்கே எடுத்துக்காட்டாய் உச்சத்தில் இருக்கிறார்கள். மனிதர்களை மதிக்கும் விதத்தை, அந்த நாட்டில் கற்காமல் போனால், வேறு எங்குமே அதை நாம் அடைய முடியாது என்று சொல்லுமளவு உயர் ரக பண்பாடு அவர்களுடையது!

திராவிடர் இயக்கப் புரட்சி!

அந்த மக்களைப் போலவே, அந்த நாடும் அவ்வளவு அழகானது! மக்கள் திரளும், வாகனப் போக்குவரத்தும் கலந்த அந்தப் பரபரப்பில், ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவு அமைதி நிறைந்த நாடு! அப்படியான நாட்டில்தான் கிராமங்களிலும், சிற்றூர்களிலும் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, இன்றைக்கு மிக உயர்ந்த நிலையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

ஜப்பான் எப்படி அமைதிப் புரட்சி செய்ததோ, அதேபோல தமிழ்நாட்டிலும் திராவிடர் இயக்கங்கள் பெரும் புரட்சி செய்தன. இந்தியாவின் வட மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதையே, வெளிநாட்டிற்குச் செல்வதைப் போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். அப்பேற்பட்ட கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு! அந்த வகையில் கல்விக்காகத் திராவிடர் இயக்கங்கள் செய்த சாதனை தான், இன்றைக்குத் தோழர்கள் ஜப்பானில் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி!

நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அந்தளவு வரலாற்றுப் பெருமையும் உண்டு! நாம் நான்கு படிகள் மேலே ஏறினால், இரண்டு படிகள் கீழே இறக்கிப் போடும் வேலைகளைச் செய்வது ஆரியம். அப்பேற்பட்ட தொடர் போரில், நாளும் பொழுதும், 365 நாளும் கல்விச் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டு 91 ஆண்டுகளை நிறைவு செய்தவர் தலைவர் வீரமணி அவர்கள்!

9 ஆயிரம் வருமான உச்சவரம்பு பிரச்சினை, ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் 69 விழுக்காடு ஒதுக்கீடு போன்ற பெரும் போராட்டங்களில் சளைக்காமல் போர் செய்து, இன்றைக்கு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனச் சொல்லுமளவு வந்ததற்குத் திராவிடர் கழகத் தலைவரும் மிக முக்கியக் காரணம் அல்லவா! நீதிக்கட்சி தலைவர்கள், பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என அனைவரின் உழைப்பிலும் உருவான இந்த கல்வி வரலாற்றை, பன்மடங்கு உயர்த்தி வைத்திருப்பவர் ஆசிரியர் அவர்கள்! அப்பேற்பட்ட திராவிட இயக்கத் தலைவரை அன்போடு வரவேற்று “நிஷி கசாய்” எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தொடர்ந்து பயணம் செல்வோம்!

பெரியார்’ ஜப்பான் மயம் ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! (1) வி.சி.வில்வம்

 



தமிழர்கள் செழித்தோங்க! உயர்ந்தோங்க!!

பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், “உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும், உழைப்புமே அடித்தளம்!”, என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க வரியைப் பதிவு செய்திருக்கிறார்கள்!





ஆம்! தொடக்கக் கல்வி தொடங்கி, அதிகபட்ச உயர்கல்வி வரை தமிழர்கள் செழித்தோங்க, உலகம் முழுவதும் உயர்ந்தோங்க திராவிட இயக்கங்களின் ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பு தான் இதற்குக் காரணம்!

ஜப்பானில் தமிழர்கள்!

மலேசியா, சிங்கப்பூர், அய்ரோப்பா மற்றும் அரபுநாடுகளில் தமிழர்கள் வசித்தாலும், ஜப்பான் நாட்டில் வசிப்பதை மட்டும் பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக, தாங்கள் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெற்ற பார்ப்பனர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஜப்பானுக்குச் சென்றுவிட்டனர். எனினும் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக காலடி எடுத்த வைத்த தமிழர்கள், இன்றைக்குத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகிறார்கள் என்றால் இதன் வளர்ச்சி,

பரிணாமம் சாதாரணமானது அல்ல!

அந்தக் காலத்தில் பெரிய செல்வந்தராகக் கூட இருக்கலாம். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது. அந்த வாய்ப்புகள் இல்லை. ஆக அனைவருக்குமான உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவை திராவிட இயக்கங்கள்! இந்த வரலாற்றை அறிந்த காரணத்தால் எந்த நாட்டில், எந்த பதவியில், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அடித்தளமாகப் பெரியார் இருக்கிறார், அவரை நினைக்க வேண்டும், நன்றி பாராட்ட வேண்டும் என இளம் தலைமுறையினர் எண்ணுகிறார்கள்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவர்!

அந்த வகையில் “வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம்” (NRTIA) தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளை யும், அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளையும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தனர். அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து யாரை அழைப்பது என்கிற போது, ஒருமித்தக் குரலாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைப்பது என முடிவானது. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவராக, சாதனைகளின் உருவமாக, 10 ஆண்டுகளை வீட்டிற்கும், 80 ஆண்டுகளை நாட்டிற்கும் கொடுத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவராகத் திகழ்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

பெரியார் ஜப்பான் மயம்!

விழா ஒருங்கிணைப்பாளர்கள் “ஜப்பான் வாழ் திராவி டர்கள்” எனும் வாட்சப் குழு உருவாக்கி உறுதியோடும், தீர்க்கத்தோடும் செயல்படுபவர்கள். அந்தப் பக்கம் ஒரு கால், இந்தப் பக்கம் ஒரு கால் என்றல்ல; தாங்கள் யார்? தங்கள் கொள்கை என்ன? தங்கள் தலைவர்கள் யார்? என்பதைத் தெளிவோடு அறிவித்து, தீரத்தோடு செயல்படும் இலட்சிய வீரர்கள்! அப்படியான கொள்கைப் பிரகடனம் செய்து, டோக்கியோ நகரில் இவர்கள் நடத்திய விழாவிற்குத் தான் ஜப்பான் வாழ் தமிழர்கள் குவிந்துவிட்டனர்; அதுவும் குடும்பம், குடும்பமாகக் குழுமிவிட்டனர்!

பெரியாரை ஏதோ கடவுள் மறுப்பாளர், ஜாதி, மத வெறுப்பாளர், அதனைத் தவிர்த்து வேறொன்றுமில்லை என ஆதிக்கக் கூட்டம் நிலை நிறுத்தப் பார்த்தது. பலப்பல ஆண்டுகளாய், அந்தப் பணியை அவர்கள் செய்தார்கள். அதில் 100 விழுக்காடு அவர்கள் தோல்வியை எட்டினார்கள் என்பதற்கு நாம் நூறு உதாரணங்களைக் கூற முடியும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல; டோக்கியோ சென்று கூட அந்தச் சான்றுகளை நாம் நிரூபிக்க முடியும்!

ஜப்பான் தோழர்களின் சமூக உணர்வு!

நமது கொள்கை என்பது சமத்துவமானது; உண்மை யானது; நேர்மையானது; எதிரிக்கும் தீங்கு விளைவிக்காதது! அதனால்தான் நாம் வெற்றி பெறுகிறோம்! இந்த வெற்றியில் பெரியாருக்கு எதிராக இருப்பவர்களும், ஏன்… பார்ப்பனர்களும் கூட பயன்பெறுவார்கள் என்பதுதான்

உச்சபட்ச சிறப்பம்சம்!

இப்படியான மனிதநேயக் கொள்கைகளை உள்வாங்கிய தோழர்கள், தங்கள் அழைப்பிதழைத் தயார் செய்திருந்தனர். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் எதையும் உணர்ச்சி வசப்பட்டு செய்பவர்கள் அல்லர்; மாறாகப் பொறுப்பு ணர்ச்சியும், சமூகக் கவலையும் கொண்டவர்கள்! இதோ… அவர்களின் அழைப்பிதழ் வாசகங்களைப் பார்ப்போம்!

ஜப்பான் வாழ்
தமிழ்ச் சொந்தங்களே….

‘ஜப்பான் வாழ் தமிழ்ச் சொந்தங்களே வணக்கம்!

ஒரு சமுதாயம் வளர்ச்சி அடைந்த சமுதாயமாகக் கருதப் பட முக்கியமான காரணங்களில் ஒன்று சுயமரியாதை! ஒரு சமுதாயத்தில் வாழும் தனி மனிதர்களில் பெரும்பாலானோர் தன்மானத்தைப் போற்றினால் மட்டுமே அச்சமுதாயம் மானமும், அறிவும் மிக்கதாக உலகத்தால் பாராட்டப்படும்! அதுவே மனிதகுல வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, தொழில்களையும் அதன் வழி வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி, முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உலகையே வழிநடத்திச் செல்லும்!
கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக நம் தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி வெற்றிநடை போடுவதற்குக் காரணமாக அமைந்தது, ஒரு நூற்றாண்டு காலமாக திராவிடர் இயக்கத் தலைவர்கள் நம் முன்னோர்களுக்கு ஊட்டி வரும் சுயமரியாதை உணர்வே!
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற தன்னிகரற்ற தத்துவத்தைப் போதித்த நம் தமிழ்ச் சமுதாயம், வரலாற்றில் ஒரு கட்டத்தில் அந்நிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு தம் அடையாளங்களை இழக்கத் தொடங்கிய போது, நம் இனத்தை வீறு கொண்டு எழச் செய்தது தான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

சுயமரியாதையின் விரிந்த வடிவமான இம்மூன்று குணங்களையும் வாழ்வியலாக கொண்டு, நமக்காக வாழ்ந்து மடிந்த எண்ணற்ற திராவிடர் இயக்கத் தலைவர்களில் தலையானவர்களான தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் நாம் இன்று இருக்கும் உயர்ந்த நிலைக்காக நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! அதை நிறைவேற்றவே ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ்

இந்தியர்கள் சங்கம் தங்களை அன்புடன் அழைக்கிறது!

தமிழனின் முன்னேற்றத்திற்கு எது முட்டுக்கட்டையாக வந்தாலும் “பகுத்தறிவு” என்னும் தடி கொண்டு நொறுக்கிய தந்தையையும், அவரது முற்போக்கு சிந்தனைகளுக்கு எல்லாம் அரசாணை வழி செயல் வடிவம் கொடுக்கத் துணிந்த தனயனையும் போற்றுவோம் வாரீர்! வாரீர்!!’’
என முரசு கொட்டி, சங்கே முழங்கிய ஜப்பான் வாழ் இளம் தலைமுறையை நாம் நெஞ்சில் ஏற்றாமல் இருக்க முடியுமா!
அப்படியான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்குத் தான் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்திருந்தார்கள்! வாருங்கள்… அடுத்த தொடரில் நாமும் ஜப்பான் சென்று வருவோம்!
(தொடரும்)