நூற்றாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூற்றாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2024

தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே! -தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை




ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா! (1924-2024)

* சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தைக் கடந்து, அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக எடுத்துச் சொல்லும்!
* வைக்கம் போராட்டத்தின் வெற்றி அதற்கொரு நற்சாட்சியமாகும்!
இந்தச் சாதனைகளுக்குக் காரணமான அனைவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் வெற்றி பெற்ற நூற்றாண்டையொட்டி, வைக்கத்தில் எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களுக்குக் காரணமாக இருந்த தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கும், முதலமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
நூறாண்டு நிறைவைக் காணும் முதல் ஜாதி – தீண்டாமை, பாராமை, நெருங்காமை போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக வெடித்த வைக்கம் ‘சத்தியா கிரகத்தினை’யொட்டி, நாளை (12.12.2024) காலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும் விழா நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய, வரலாற்றுச் சாதனையாக காலம் உள்ளவரை கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும்!
வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு அரசும் – கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் மூன்றாவது விழா – நாளை நடப்பது!

வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்திடும் வைக்கம் சத்தியாகிரக வெற்றியின் மூன்றாவது விழா இது!
1. ஓராண்டுக்கு முன் கேரள மாநிலம் வைக்கத்தில் தொடக்க விழா!
2. சென்னையில் நிறைவு விழா (சென்னை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் – தமிழ்நாட்டில், எளிய முறையில்).
3. இப்போது (12.12.2024) வைக்கத்தில் சிலை புத்தாக்கம், நினைவகம், நூலகம் திறப்பு விழாக்கள் (மீண்டும் கேரளத்தில்).
அரசியலைத் தாண்டி, அகிலம் வியக்கும் அற்புதத் திருவிழா – பெருவிழா!
1924 இல் கேரள பெருமக்களால் தொடங்கி, தந்தை பெரியார் தலைமையில் அவர்களும், தமிழ்நாடு போராளிகளான அன்னை நாகம்மையார், கண்ணம்மை யார், கோவை சி.ஏ.அய்யாமுத்து, நாகர்கோவில் டாக்டர் நம்பெருமாள் போன்றவர்கள் பங்கேற்றனர்.
(பெருந்தலைவர் காமராஜர் தனது இளவயதில் அதில் கலந்துகொள்ளச் சென்று, தனது வீட்டாரால் மீட்டு அழைத்துக் கொண்டு போகப்பட்டவர் என்பதை அவரே வெளியிட்டுள்ளார்கள்)

அடக்குமுறைகளை எதிர்த்து
ஓராண்டு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம்!
ஓராண்டு காலம் தொடர்ந்து நடைபெற்ற அந்த அறப்போராட்டத்தின் இறுதிவரை, அடக்குமுறை, துன்புறுத்தல்கள் போன்றவை ஏவப்பட்டன.
கேரளத்தில் டி.கே.மாதவன் அவர்களின் முன்னெ டுப்பினால் தொடங்கப்பட்டு, ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பலரும், ஏராளமான ‘சத்தியாகிரகிகளும்’ போராடினர்.
அண்ணல் காந்தியார் தொடக்கத்தில் இதற்கு இணக்கமாக இல்லாவிட்டாலும், வைதீக நம்பூதிரி யார்களிடம் – அவர்களது ஜாதி, தர்ம சம்பிரதாயத்தை மதித்தே கட்டடத்திற்கு வெளியே அமர்ந்தே பேசிய சமரசமும் தோற்றுப் போன பின்பு, தந்தை பெரியார் தலைமைக்குப் பின்னரே, அது வீறுகொண்ட போராட்டக் களமாகி, ஓராண்டு சளைக்காமல், பல்வேறு தடைகளைத் தாண்டி கள வெற்றிகளைப் பறித்தது!
தந்தை பெரியாரின் ஆயுளை முடிக்க எதிரிகள் நடத்திய ‘சத்ரு சங்கார யாகம்’
இடையில் தந்தை பெரியார் ஆரம்பித்ததை முடிக்க வைதீகபுரி வர்ணாசிரமவாதிகளின் ‘சத்ரு சங்கார யாகம்’ எல்லாமும் நடந்து, அது பலிக்காமல், மன்னர் மறைந்த பரிதாபம் ஏற்பட்ட பிறகு பொறுப்பேற்ற, ராணியாரின் அருமுயற்சியினால் வைக்கம் போராட்டத்திற்குப் பல கட்ட வெற்றிகளாக – தெருவில் நடக்கும் உரிமையை அம்மக்கள் பெற முடிந்தது என்பது வரலாற்றில் வைர வரிகள் ஆகும்!

இதற்கான நினைவுச் சின்னமாக முதல் கட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பி, நினைவக ஏற்பாட்டினை 30 ஆண்டுகளுக்குமுன் (31.1.1994) வைக்கத்தில், எனது (கி.வீரமணி) தலைமையில், அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அன்றைய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் தென்னவன் அவர்கள் வரவேற்க, கேரள மாநில அமைச்சர்கள் பலரும், தலைவர்களும் பங்கேற்றனர்!
நினைவகம், பெரியார் சிலை, நூலகம் என்று பொலிவுடன் நினைவுச் சின்னங்கள்!

அந்த நினைவகம் – சிலை – சிதிலமடைந்த நிலையில், இன்றைய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, இதில் தக்க முனைப்பு காட்டி – உரிய நிதி ஒதுக்கி, விரிவாக்கம் செய்து, பொலிவுடனும் அமைத்து, நாளை (12.12.2024) கேரள முதலமைச்சர் மாண்பமை திரு.பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நினைவகத்தையும், விரிவாக்கப்பட்ட நூலகத்தையும் திறப்பு விழா நடத்திடவிருக்கும் நிலையில், தந்தை பெரியாரின் திராவிடர் (தாய்) கழகத்துக்கு உரிய பெருமையும், பிரதிநிதித்துவமும் தருவது முக்கியம் என்ற பெரு நோக்கோடு, நம்மையும் (கி.வீரமணி) அழைத்து, முன்னிலை ஏற்கச் செய்துள்ளதைப் பாராட்டி, நன்றி செலுத்த வார்த்தைகளே இல்லை.

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி!
‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு” என்றாரே நம் அறிவாசான் தந்தை பெரியார். அதனை நாம், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல, கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில், கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.
இது ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் வெற்றி – நன்றிக்குரிய சின்னங்களின் திறப்பு விழா என்று கருதி, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் சுருக்கிவிடக் கூடாது!
சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் காலம், எல்லைகளைக் கடந்து, இனிவரும் தலைமுறைகளுக்கும் உணர்த்தக் கூடியவை!

1. சமூகக் கொடுமைகள், அநீதிகள், ஜாதி, தீண்டாமை போன்ற சமூகப் புற்றுநோய்களை அகற்ற – ‘‘மண் எல்லை பார்க்காமல், களமாடத் தயாராகுங்கள்; மானிடப் பரப்பே – மனித உரிமைப் போருக்கான எல்லைகள்” என்ற அரிய வலராற்றுப் பாடத்தை இவ்விழாக்கள் உலகுக்கும், இன்றுள்ள இளைய – இனிவரும் தலைமுறைகளுக்கும் பறைசாற்றுகின்றன!
2. அறப்போராட்டங்களை அடக்குமுறைகளும், ஒடுக்குமுறை அதிகாரங்களும் ஒருபோதும் அடக்கி வெற்றி கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்கவேண்டியவர்களுக்குக் கற்றுத்தரும் வரலாற்றுக் காட்சிப் படிப்பினை வகுப்புகளாகும்!
3. கடமையாற்றும் முற்போக்கும் ஆட்சிகள் எப்படி சமூக வரலாற்றுப் போராட்டங்களை அங்கீகரித்து வரலாற்று ஆவண அங்கீகாரங்களாக படைக்கும்; வருங்கால சந்ததிகளுக்கான களப் பாசறை முகாம்க ளாக்கும், புதியதோர் சமத்துவ, சுயமரியாதை புது உலகைப் படைக்க மாநில எல்லைகளையும், அரசியலையும் ஒதுக்கி, மானிட உரிமைகளுக்கே முன்னுரிமை என்ற பாடம் போதிக்கும்; அதற்கு உணர்வுகளின் ஒத்துழைப்பு வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு, தக்கதோர் சான்றாவணமாகும் – இந்தத் திறப்பு விழாக்கள் என்ற சிறப்பு விழாக்கள்!
மீண்டும் அனைவருக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
வைக்கம் நினைவிடத்தின் ஒரு பகுதியை திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்ப ளிப்பாக அளித்துள்ளார் என்பது பாராட்டி நினைவு கூரத்தக்கதாகும்.
அத்துணைப் பேருக்கும் எமது கனிவு மிகுந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
11.12.2024 

ஞாயிறு, 12 மே, 2024

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!


ராஜன் குறை கிருஷ்ணன்

பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.

9

வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டு களுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறு நூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற் றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது.

இரண்டு முதலமைச்சர்கள்

5

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா வுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். தமிழ் நாட்டு முதல் வர் சென்று கலந்துகொண்டார். இரண்டு முதல்வர்கள் நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மதவாத சக்திகளை முறியடிக்க உறுதி பூண்டார்கள். திராவிட, பொதுவு டைமை சித்தாந்த ஒருங்கிணைப்பின் வெளிப்பாடாக, முற்போக்கு இயக்கங்களின் ஒருமிப்பாக இந்த நிகழ்வு அமைந்தது சிறப்பானது.

இவ்வாறு தமிழ்நாட்டு முதல்வரை அழைக்க முக்கிய காரணம், தமிழ்நாட்டிலிருந்தும் பலர் அந்தப் போராட்ட த்தில் பங்கெடுத்தது. அதில் மிக முக்கிய பங்கினை செலுத்தியவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அந்த ஆண்டு பதவி வகித்த பெரியார். வைக்கம் போராட்டத்துக்கு அவர் செய்த தீரமிக்க பங்களிப்புக்காக அவர் “வைக்கம் வீரர்” என்று அழைக் கப்பட்டார்.  

அக்காலத்தில் அவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டார்கள். அவர் ஜாதிப்பட்டத்தை துறந்ததுடன், தமிழ்நாட்டில் யாருமே ஜாதிப் பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் சூழலையும் உருவாக் கினார். அவருடைய தன்னலமற்ற தொண்டுக்காக பெரியார் எனப் பெண்கள் மாநாட்டில் அழைக்கப் பட்டார். அந்தப் பெயரே இன்று அவரைக் குறிப்பிடும் பெயராக விளங்கி வருகிறது.  

பெரியார் பங்கேற்பு

பெரியாரின் வைக்கம் பங்கேற்பு அவரை ஜாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் கூர் மைப்படுத்தியது. அதன் பிறகுதான் அவர் காங்கிரஸி லிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக பார்ப்பனீய, ஜாதீய கருத்தியலுக்கு எதிரான கடுமையான, ஓய்வில்லாத பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பெரியாரின் அந்த இயக்கமே தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை மக்கள் பேரியக்கமாக காலப்போக்கில் வடிவமைத்து, இன்று திராவிட மாடல் ஆட்சி என இந்தியாவே வியந்து நோக்கும் வரலாற்று திசைவழியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது. அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடும் என அறிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவம் என்பது என்னவென்றால் முதன் முறையாக இந்தியாவில் நவீன அரசியல் சக்தி பார்ப்பனீய சனாதன சக்திகளை, தர்ம சாஸ்திர ஒடுக்குமுறைகளை நேரடியாகப் போராட்டக் களத்தில் சந்தித்தது என்பதுதான்.

நவீன அரசியலின் அடிப்படை பாரதியின் வார்த்தைகளில் “எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந் நாட்டு மன்னர்” என்பதாகும். பார்ப்பனீயம், சனாதனம் என்பது என்னவென்றால் அது பிறப்பின் அடிப் படையில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிரித்து உயர்வுதாழ்வு கற்பிப்பதாகும்.

வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்து பழ.அதியமான் “வைக்கம் போராட்டம்” என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அது மலையாள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரின் முக்கிய பங்களிப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் அந்த நூலில், ஒரு சுவாரஸ்ய மான பகுதி உள்ளது.

காந்தியாரின் கண்டனம்

அது என்னவென்றால் வைதிகர்கள் எனப்படும் சனாதன சக்திகளுடன் காந்தியார் 1925 மார்ச் 10 அன்று இந்தன் துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி இல்லத்தில் சந்தித்து உரையாடிய சம்பவம். அந்த உரையாடலில் காந்தியார் ஓர் இடத்தில் முக்கியமான கருத்தைக் கூறுகிறார். ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டயர் எவ்விதமான மனப்போக்கில் இயங்கினானோ, அதே மனப்போக்கில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கக் கூடாது என்று கூறுகிறீர்கள் என காந்தியார் சொல்கிறார்.

ஜெனரல் டயர் இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்கு சமமான மனிதர்களாக மதிக்கவில்லை. அதேபோலத் தான் பார்ப்பனீய மனோபாவமும், ஒடுக்கப்பட்ட ஜாதிகளை சமமான மனிதர்களாகவே நினைப்பதில்லை. இதை நாம் பார்ப்பனீய மனோபாவம், ஆரிய சிந்தனை என்று சொல்ல முக்கிய காரணம் சமஸ்கிருத நூல்களில் தான் இந்தக் கருத்துகள் வலுவாக எழுதப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது என்பதால்தான். மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட பூசாரி வர்க்கம், இதை கடவுளின் சித்தமாக மக்களிடையே பரப்பியது.

உதாரணமாக காந்தியாரிடம் வாதிடும் நம்பூதிரி, முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் ஒருவர் தாழ்ந்த ஜாதியில் பிறக்கிறார். அதனால் கடவுளின் எண்ணப்படி அவர்களுக்கு உரிமைகளை மறுப்பது தான் சரியானது என வாதிடுகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிறவியே ஒரு தண்டனை தான், அதை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என் பதுதான் கடவுளின் எண்ணம் என்பதே பார்ப்பனீயத் தின் பார்வையாகும். அதையே அனைவரும் ஏற்கும் படி பரப்பியதைத்தான் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கம் (Brahmin Hegemony)  என்று அழைக்கிறோம்.

வைக்கம் வீரர்

6

இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராகத்தான் பொங்கியெழுந்தார் பெரியார். ஆனால், அவர் பண்டிதர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கவில்லை. வைக்கத்திலும் சரி, அதன் பிறகும் சரி, நேரடியாக பாமர மக்களிடம் சென்றார். அவர்களுக்குப் புரியும் எளி மையான மொழியில் இந்தக் கருத்தியலில் அடங்கியுள்ள சூதினை எடுத்துச் சொன்னார். பார்ப்பனர்களின் புராணங்களை கேலி செய்தார். கடவுள் நம்பிக்கைக்கு சவால் விடுத்தார்.

பெரியாரை வைக்கம் வீரர் என்பது வைக்கம் சத்தியாகிரகத்தில் அவர் என்ன பங்களித்தார் என்பதற் காக மட்டுமல்ல. அவர் வைக்கத்தில் ஏந்திய தீப்பந் தத்தை, சுயமரியாதை சுடரொளியை அதன் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து விடாமல் ஏந்தி வந்தார் என்பதற்காகவும், தொடர்ந்து பார்ப்பனீய, ஜாதீய, சனாதன கருத்தியலுக்கு எதிராக நவீன முற் போக்கு சிந்தனையை தளராமல் உயர்த்திப்பிடித்தார் என்பதற்காகவும்தான்.  

பார்ப்பனீயத்தின் வெறுப்பு

சூத்திர, பஞ்சம மக்களுக்கு பிறப்பே அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்துக்கு தண்டனைதான் என்றும், தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங் களை அவர்கள் அனுபவிப்பதுதான் கடவுளின் சித்தம் என்றும் கூறிய பார்ப்பனீயம் எவ்வளவு கடுமையான வெறுப்பை உழைக்கும் மக்கள் மீது செலுத்தியது என்பதை இன்று யாரும் பேசுவதில்லை. இன்றைக்கும் அந்த வெறுப்பு ஜாதீயவாதிகள் மனதிலே கனன்று கொண்டுதான் இருக்கிறது.

பெரியார் அத்தகைய உறைநிலை வெறுப்பை, மனிதனை மனிதனே கீழமைப்படுத்தும் வெறுப்பை, பெண்களை ஆண்கள் கீழ்மைப்படுத்தும் வெறுப்பை கடுமையாக இகழ்ந்தார், அந்த வெறுப்புக் கருத்தியலை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக பெரியாரை பார்ப்பன வெறுப்பாளர் என்று இன்றும் கூசாமல் சொல்கின்றனர்.

இன்றுவரை இந்து மத சாமியார்கள், குருமார்கள், பண்டிதர்கள் எனப்படுபவர்கள் வர்ண தர்மம் என்பது தவறான கற்பனை, நவீன காலத்துக்குப் பொருந்தாது, பிறப்பினால் யாரும் எந்த சமூக அடையாளத்தையும் பெற முடியாது என்று அறிவித்துள்ளார்களா?

இன்றும் கூட பிறப்பிலேயே ஒருவர் பார்ப்பனர், மற்றொருவர் இந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையைத்தானே ஆதரிக்கின்றனர்? அவ்வாறு பிறப்பிலேயே அடையாளம் இருக்க வேண்டும் என்றுதானே அகமணமுறையை தீவிரமாக ஆதரிக் கின்றனர்? இன்றும் இந்தியாவின் அதிகார மய்யங்களில் பார்ப்பன, பனியா குடும்பங்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன?

ஏற்றத் தாழ்வு

திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக சொன்னாரே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” என்று, அதுதான் இந்து மத தர்மமும் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? முடியாது. ஏனெனில் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே இந்தப் பிறவி அமைகிறது. எனவே பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு தீர்மானிக்கப்படுகிறது என்பதே பார்ப்பனீய சிந்தனை. இதைத்தான் நம்பூதிரி காந்தியிடம் வைக்கத்தில் சொன்னார். இன்றும் பலர் நம்புகிறார்கள்.

பிறவியே தண்டனை என்பதால் பலவித தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை சூத்திர வர்ணத்தவரும், பஞ்சமரும் அனுபவித்துதான் தீர வேண்டும் என்றும் முற்பிறவியில் செய்த புண்ணியங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் பிராமணப் பிறவி என்றும் அதனால் அவர்களை உயர்ந்தவர்களாக நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம சாஸ்திரம். அதை எழுதியது பார்ப்பனர்கள்தான்.

உண்மையில் பெரியார் வெறுப்பை விதைக்க வில்லை. கடுமையாகப் பேசினாலும், மூட நம்பிக்கை களைக் களைந்து சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கவே பேசினார். சுயமரியாதை கொடுத்த வலிமையில் ஒடுக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்டார்களே தவிர, யாரும் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. சுயமரியாதை என்பதே ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலுக்கு மரியாதை அளிப்பதுதான்.

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

7

வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு இரண்டு உலகப் புகழ் பெற்ற ஆளுமைகள் இணைந்து பெரியாரை சிறப்பிக்கும் வகையில் ஒரு கர்னாடக இசைப்பாடலை வெளியிட்டிருப்பதுதான். ஒருவர் இந்த பாடலை பாடிய கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மற்றொரு வர் இந்த பாடலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் பெரியா ரின் இயக்கத்தை வெறுப்பியக்கமாகச் சித்திரிக்கும் இந்துத்துவ சக்திகளை மறுத்து பெரியாரின் இயக்கத்தை அறிவியக்கமாக அறிமுகம் செய்வதுதான். “சிந்திக்கச் சொன்னவர் பெரியார், சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலின் பல்லவி எப்படி பெரியார் தமிழ் அறிவொளிக்காலத்தின் சுடரொளி என்பதை தெளிவாக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஜாதிப் பிரிவினைகள் ஏன்

சாத்திர விதிமுறைகள் ஏன்

ஆதிக்க நடைமுறை ஏன்

அநீதித் தீண்டாமை ஏன்

பாதிக்கப்படுவோர் யார்

பலனடைந்து வாழ்வோர் யார்

ஏதும் அற்றோர் யார்

ஏமாற்றிப் பிழைப்பவர் யார்

மோதி உடைத்து முழுதாய் இங்கே

மாற்றம் காண முருகாய் எதையும்

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாய் வைக்கத்தில் தொடங்கிய பெரியார் இயக்கத்தின் அடிப்படைகளை விளக்கிவிடுகின்றன.

பெரியார் பெருமை

இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்னவென்றால் இரண்டு முக்கியமான புலங்களை சார்ந்தவர்கள் பெரியாரின் பெருமையை பாடியுள்ளதுதான். ஒன்று நவீன தமிழ் இலக்கியப் புலம். நவீன தமிழ் இலக்கியம் என்ற புலம் திராவிட இயக்க இலக்கியம், பொதுவு டைமை இயக்க இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நுட்ப மொழி இலக்கிய புலமாகும்.

இந்தப் புலத்தினை சார்ந்தவர்கள் பலர் காந்திய வாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பார்கள். முற்போக் காளர்களாக இருப்பார்கள். நவீன சிந்தனைகளை ஆதரிப்பார்கள். மேல் நாட்டு இலக்கியங்களை, சிந்தனையாளர்களை கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெரியாரை கொண்டாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால், பெரியார் கடுமையான மொழியை பயன்படுத்தினார், பாமரர்களுக்கான மொழியைப் பேசினார் என்பதுதான்.

இந்தப் புலத்தினை சார்ந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய பேராசிரியருமான பெருமாள் முருகன் பெரும் இலக்கிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவருடைய நாவல்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பன்னாட்டு அங்கீகாரமும், விருதுகளும் இவரைத் தேடி வருகின்றன. அப்படியான ஓர் எழுத்தாளர் பெரியாரின் இயக்கத்தை வியந்து கொண்டாடும்படியான கருத்தாழம் மிக்க பாடலை எழுதியுள்ளது சிறப்பு.

அதைவிட அபூர்வமான நிகழ்வு கர்னாடக சங்கீத புலம் சார்ந்தது. கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகிய இரண்டையுமே இசை வேளாளர்கள், பிற பிற்பட்ட சமூகத்தினரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட பார்ப்பன சமூகம் இருபதாம் நூற்றாண்டில் அவர்களது கலாச்சார அடையாளமாகவே இவற்றை நிறுவுவதில் பெருமளவு வெற்றி பெற்றது எனலாம். குறிப்பாக சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழா என்பது பார்ப்பன சமூக விழாவாகவே கடந்த நூறாண்டுகளில் உருவெடுத்துள்ளது எனலாம்.

அத்தகைய கர்னாடக சங்கீத புலம்சார்ந்த பாரம் பரியமான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.கிருஷ்ணா. தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்படி இசையானது ஒரு ஜாதியின் வட்டத் திற்குள் சுருக்கப்படுவதை ஏற்கவில்லை. அதனால் கர்னாடக இசையை மக்களிடையே எடுத்துச் செல் வதை ஓர் இயக்கமாக மேற்கொண்டார். துணிகரமாக ஜாதீய மனோபாவத்தை எதிர்த்துப் பேசினார். அவரு டைய முற்போக்கான கலாச்சார முயற்சிகளுக்காக மகஸேஸே விருது பெற்றார்.

பெரியாரின் அறிவியக்கம்

8
அடுத்த கட்டமாக கர்னாடக இசைப்பாடல்கள் இறைவனைத்தான் பாட வேண்டும் என்ற விதியையும் தகர்க்க முற்பட்டார். சூழலியல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் தமிழ் தனிப்பாடல்கள், பல்வேறு பொருட்களை குறித்த தமிழ் தனிப்பாடல்கள் என்று பாடி வெளியிட்டார். இந்து மத தெய்வங்களைத்தான் பாட வேண்டுமா என கிறிஸ்துவையும், அல்லாவையும் குறித்தும் பாடினார்.  இதுபோன்ற முயற்சிகளுக்காக இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பினை ஈட்டினார்.  

இசை என்பது ஒரு சாராரின், ஒரு மதத்தின், ஜாதியின் பிடிக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக தன் கலை வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணா. சமீபத்தில் புதுடெல்லி அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அசோகர் கல்வெட்டு வரிகளையும் பாடி வெளியிட்டார்.

இத்தகைய முற்போக்கு சிந்தனை கொண்ட இசைக்கலைஞர் வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு பெரியார் குறித்த பெருமாள் முருகன் பாடலைப் பாடி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். பெரியாரின் அறிவியக்கம் என்பது ஜாதீயக் கருத்தியலுக்கு எதிரானது, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்பதும், கொண்டாடுவதும் அவசியமானதாகும்.

இதனை முன்னிட்டே ஆசிரியர் வீரமணி டி.எம். கிருஷ்ணாவை, எழுத்தாளர் வ.ராமசாமி குறித்து அண்ணா கூறிய வார்த்தைகளில் “அக்ரகாரத்தின் அதிசய மனிதர்” என்று கூறியுள்ளார்.

வைக்கம் நூற்றாண்டில் பெருகும் பெரியார் பெருமையைக் கொண்டாடுவோம். சனாதான சக்திகளின் மீட்புவாத அரசியலை முறியடிப்போம்.

நன்றி: ‘மின்னம்பலம்' (இணையதளம்)


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

“வைக்கம் போராட்டம்” நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் இரண்டாண்டுக் காலம் நடைபெற்று அது வெற்றி பெற்ற வரலாற்றை நாள்வாரியாக தொகுத்து அளிக்கப்படுகிறது.

“வைக்கம்” என்பது வெறும் ஊரின் பெயரல்ல; அது அடையாளம், தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தந்தை பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று சமூகநீதியின் அடையாளமாக இருமுறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். வைக்கத்தில் 141 நாளில் 74 நாள் சிறையில் இருந்தார். தான் மட்டும் அல்ல; தம் துணைவியாரையும், தங்கையையும் அப்போராட்டத்தில் ஈடுபடுத்தி வெற்றி பெற்ற வரலாறே இவைகள்…

வைக்கம் போராட்ட வரலாறு

6 பிப்ரவரி 1924

கொல்லம், சுயராஜ்ய ஆசிரமத்தில் தீண்டாமை விலக்குக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. சுதந்திர நடமாட்டத்துக்கும், கோயில் நுழைவுக்கும் ஆதரவாகத் தீவிர பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

29 பிப்ரவரி 1924

தீண்டாமை விலக்குக் குழு சார்பில் காங்கிரஸ் கட்சி வைக்கத்தில் பொதுக்கூட்டம் நடத்தியது.

30 மார்ச் 1924

வைக்கம் போராட்டம் தொடங்கியது. குன்னப்பி (புலையர்), பாஹுலேயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிறு, தொடங்கிய நாள் தவிர, மற்ற ஞாயிற்றுகிழமைகளில் சத்தியாகிரகம் நடைபெறவில்லை.

31 மார்ச் 1924

ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1 ஏப்ரல் 1924

கே.பி. கேசவ மேனன் அனுப்பியிருந்த சத்தியாகிரகத் தொடக்கம் பற்றிய செய்திகள் அடங்கிய தந்தியை காந்தியார் பெறுகிறார். சத்தியாகிரகிகள் இன்னும் சிறிது காலம் பிரச்சாரம் செய்யவும் சமாதானப் பேச்சுக்குத் தயார் செய்து கொள்ளவும் ஏதுவாகச் சிறிதுகாலம் போராட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என காந்தியார் யோசனை அளித்தார்.

7 ஏப்ரல்

இரண்டு நாட்கள் நடந்து பின்னர் ஆறு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் இன்று மீண்டும் துவங்கியது. கே.பி. கேசவ மேனன், டி.கே. மாதவன் தடைப்பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

9 ஏப்ரல்

ஏ.கே. பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே. கேளப்பன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

10 ஏப்ரல்

இன்று முதல் சத்தியாகிரகிகளைக் கைது செய்வதில்லை. என்று காவல்துறை முடிவு செய்தது. சத்தியாகிரகிகள் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்,

11 ஏப்ரல்

ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

13 ஏப்ரல் 

பெரியார் வைக்கம் வந்தார்.

14 ஏப்ரல்

பட்டினிப் போரை நிறுத்துங்கள் என்ற காந்தியாரின் செய்தி சத்தியாகிரகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு தன் ஆதரவைத் தந்தி மூலம் தெரிவித்தார்.

15 ஏப்ரல்

அய்யாமுத்து வருகை

17 ஏப்ரல்

எஸ்.சீனிவாச அய்யங்கார் வைக்கத்தில் குறிப்பிட்ட வீதிகளைச் சுற்றிப்பார்த்தார்.

21 ஏப்ரல்

டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் கைது.

29 ஏப்ரல்

நாராயண குருவிற்குச் சொந்தமான இடத்திற்குச் சத்தியாகிரகிகள் குடிபெயர்ந்தனர், காந்தியார், வெளியாட்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தடைவிதித்தார்.

3 மே

இலவச உணவு அளிக்க அகாலியர் வைக்கம் வருகை.

8 மே

சிரத்தானந்தர் சத்தியாகிரகத் தலைவர்களுடன் சந்திப்பு.

13 மே

கோட்டயம் மாவட்டத்தில் நுழைய பெரியாருக்குத் தடை.

22 மே

பெரியார் முதன்முறை கைது.

26 மே

ராஜாஜி வைக்கம் வருகை.

21 ஜூன்

சத்தியாகிரகிகளின் ராட்டினங்களைக் காவல்துறை கைப்பற்றியது.  பெரியார் அருவிக்குட்டி சிறையிலிருந்து விடுதலை.

ஜூன் – ஆகஸ்ட்

மழை பெய்து வைக்கம் வெள்ளத்தால் நிரம்பியது. சத்தியாகிரகிகள் கழுத்தளவு நீரில் நின்று போராடினர். காவல்துறையினர் படகுகளில் காவலிருந்தனர்.

சத்தியாகிரகத்திற்கு ஆதரவாய் மக்கள் திரண்டனர்.

13 ஜூலை

நாகம்மையார் போராட்டத்தில் கலந்துகொள்ளல்.

18 ஜூலை

பெரியார் இரண்டாம் முறை கைது.

7 ஆகஸ்ட்

மகாராஜா காலமானார், துக்கம் அனுசரித்து போராட்டம் மூன்று நாளைக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

31 ஆகஸ்ட்

பெரியார், கேபி. கேசவமேனன் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து விடுதலை.

1 செப்டம்பர்

சேதுலட்சுமி பாய் பொறுப்பு அரசியாக (Maharani Regent) பதவி ஏற்றார். இன்று சத்தியாகிரகம் இல்லை.

28 செப்டம்பர்

நாராயண குரு சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வருகை.

2 அக்டோபர்

ஈழவர் தலைவரும், திருவாங்கூர் சட்டசபை நியமன உறுப்பினருமான என். குமாரன் வைக்கம் கோயில் தெருக்களை எல்லா ஜாதியினருக்கும் திறந்துவிடவேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

1 நவம்பர்

கோயில் தெருக்களில் தீண்டாதாரை அனுமதிப்பதற்குத் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிப்பதோடு அதற்கு அரசு அனுமதியளிக்கக் கோரும் நோக்கத்துடன் உயர்ஜாதியினர் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவான சவர்ணர்களின் இந்த ஊர்வலம் வைக்கத்திலிருந்து சமஸ்தான தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டது. மன்னத்து பத்மநாபன் இதன் தலைவர். திருவனந்தபுரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இத்தகைய இன்னொரு ஊர்வலம் சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு தலைநகரம் நோக்கி வந்தது. இதன் தலைவர் எம்பெருமாள் நாயுடு- இன்று சத்தியாகிரகம் இல்லை.

11 நவம்பர்

உயர் ஜாதியினரின் பேரணிகள் திருவனந்தபுரத்தை அடைந்தன.

12 நவம்பர்

மகாராணி ரீஜண்டிடம், 12 பேர் அடங்கிய குழுவினர் பெரிய மகஜரை அளித்தனர். கோயில் தெருக்களை அனைவருக்கும் திறந்துவிட ஆதரவு தெரிவித்து 25,000 ஜாதி இந்துக்கள் அதில் கையொப்பம் இட்டிருந்தனர். மாலை திருவனந்தபுரம் கடற்கரையில் பெரும் பொதுக்கூட்டம். இன்றும் சத்தியாகிரகம் இல்லை.

7 பிப்ரவரி 1925

சுதந்திர நடமாட்டத்திற்கென சட்டசபையில் 2 அக்டோபர் 1924இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 22 – 21 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அது தோற்றது. அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்தது எனச் சந்தேகிக்கப்பட்டது.

9 மார்ச்

காந்தியார் வைக்கம் வந்தார்.

10 மார்ச்

காந்தியார் சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார், மதியம் 2:30 மணிக்கு உயர் ஜாதியினரைச் சென்று சந்தித்தார், மூன்று திட்டங்களை முன்னுரைத்தார். உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது.

12 மார்ச்

காந்தியார் மகாராணி ரீஜண்டை வர்க்கலையில் சந்தித்தார். பிறகு நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு.அய்யர் உடன் இருந்தனர்.

13 மார்ச்

காந்தியார் ராஜமாதாவைத் திருவனந்தபுரத்தில் சந்தித்தார். அப்போது பெரியார் திருவனந்தபுரத்தில் இருந்ததாக உறுதிப்படுத்த இயலாத தகவல் உண்டு.

17 மார்ச்

காந்தியாரை உயர் ஜாதிக்குழு சந்தித்து, சங்கர ஸ்மிருதியை ஆதாரமாகத் தந்தது. காந்தியார் வள்ளத்தோல் சந்திப்பு வைக்கத்தில் நிகழ்ந்தது.

18 மார்ச்

காந்தியார் வைக்கத்திலிருந்து புறப்பட்டார். அரசு விருந்தினராக காந்தியார் திருவாங்கூரில் சுற்றுப்பயணம் செய்தபோது உடனிருந்தவர் காவல்துறை ஆணையாளர் பிட் ஆவார். அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் வைக்கம் கோயில் பாதையில் மார்ச் 1924 முதல் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை நீக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல்: திருவாங்கூர் அரசாங்கம் 1924 மார்ச் 24ஆம் தேதி பிறப்பித்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றது.

24 ஜூன்

சத்தியாகிரக செயலாளர் கே.கேளப்பன் அறிக்கை.

17 நவம்பர்

தீண்டாமை விலக்குக் குழு தீர்மானம்

23 நவம்பர்

பல மாதங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்து அரசாங்கம் கோயிலைச் சுற்றியிருந்த மூன்று பாதைகளை அனைவருக்குமெனத் திறந்துவிட்டது. ஒரு துணைப் பாதையையும் உருவாக்கிக்கொண்டது. இது தீர்வு எனப்பட்டது (தேதி ஆதாரம்: மேரி எலிசபெத் நூல்)

29 நவம்பர்

பெரியார் தலைமையில் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

 

 தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

என்னென்ன திட்டங்கள்?

9

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்கிறேன்.  வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகிய வற்றின் கூட்டு வெளியிடாக இது வெளியிடப்படவுள்ளது.  இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். 

5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடு பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமை கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். 

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத் தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்...

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப் புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.

இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

10

சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று (30.3.2023) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள்.  1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.  (மேசையைத் தட்டும் ஒலி)  

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, (மேசையைத் தட்டும் ஒலி) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல்

நிமிர்கின்ற பார்வை உண்டு


செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு

வெண் சங்கொத்த கண்களிலே

விழியிரண்டும் கருவண்டு

அதில் சாகும்வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் 

இவரோ, படுகிழமாய்ப் போன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார்; (மேசையைத் தட்டும் ஒலி)

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.

இவை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள்.

தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார்  பேரறிஞர் அண்ணா.  (மேசையைத் தட்டும் ஒலி) உடனடியாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.  

“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி  வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப்  போராட்டங்கள் பற்பல.  அவற்றில் மிக முக்கியமான போராட்டம்தான் வைக்கம் போராட்டம். 

சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்!

1924-1925 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.  1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.  அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார்.  முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும் விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார். 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார்.  வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டினார்.  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரைப் பாராட்டினார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்கள்.  'திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது' என்று சுதேசமித்திரன் இதழில் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரையே உடன் அழைத்துச் சென்றார்.  கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.  1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.  இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.   (மேசையைத் தட்டும் ஒலி)

ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து,  பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய  பெருமை.  அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போது, வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமான ஒன்று.    சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது.  அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இதுபோன்ற கடந்தகால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் 

சொந்தமானவர் அல்ல!

பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.  சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள்.  நேற்றைய கிளர்ச்சிக்கும், இன்றைய  முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் கருத்தியல்கள்.  அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என்பதைத் தெரிவித்து, அமைகிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்ற 

அனைத்துக் கட்சியினர்!

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா முதலமைச்சர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினர் வரவேற்பு.

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுவது குறித்து சட்டமன்றத்தில் இன்று (30.3.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற விதி 110இன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசியதை வரவேற்று தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன்திருமலைக்குமார் (மதிமுக), இராமச்சந்திரன் (சிபிஅய்), நாகை மாலிக் (சிபிஎம்), சிந்தனைசெல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக). ஒ.பன்னீர்செல்வம் (மேனாள் முதலமைச்சர்), ப.தனபால் (அதிமுக), செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழிமொழிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையாற்றினர்.