துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூலை, 2019

'தந்தை பெரியாரும், இந்தி எதிர்ப்பும்'

துண்டுதுண்டாய் செய்திகளை வெளியிட்டு


துக்ளக் ஏட்டின் பித்தலாட்டப் பிரச்சாரம்


மஞ்சை வசந்தன்


எத்தனை முறை மொத்துப்பட்டாலும் மூக்குடைபட்டாலும் சூடு சொரணை இல்லாமல் தொடர்ந்து பித்தலாட்டப் பிரச்சாரத்தை செய்து வருகிறது துக்ளக் ஏடு! அதுவும் கோயங்கோ கணக்குப் பிள்ளை குருமூர்த்திக்கு பித்தலாட்டம் தான் மொத்தக் குத்தகை!


26.6.2019 துக்ளக் ஏட்டில், ஹிந்தி எதிர்ப்பு மேலும் சில உண்மைகள் என்ற தலைப்பில் பெரியாரின் பெருமையை, பித்தலாட்டப் பிரச்சாரம் மூலம் குலைக்க துக்ளக் ஏடு முயன்றுள்ளது.


இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.


என்று பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளது.


இந்தி எதிர்ப்புப் போரில் இறுதியில் இணைந்தவரா பெரியார்?


1938இல் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டனர். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார்தான் துவக் கினார் என்பது தவறு.


1937 - தேர்தலில் சென்னை மாகா ணத்தில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்ற சைவத் தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி.ஆ.பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போது மொழிப் போர் தியாகிகள் என்று கூறப்படுகிற தாள முத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும் அண்ணாதுரையும் சேர்ந்தனர்.


1965இல் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, ஈ.வெ.ரா. பெரியார் 3.3.1965 விடுதலை இதழின் தலையங்கத்தில்...


இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்ற பல வாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கிற எண் ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்று எழுதியுள்ளார் என்கிறது துக்ளக் ஏடு.


மேலே கண்ட இரண்டு செய்திகளும் பித்தலாட்டத்தின் உச்சம். அப்படியானால் உண்மை என்ன?


மாநாடு நடத்தி இந்தியை முதலில் எதிர்த்தது யார்?


1937 ஆகஸ்ட் 27ஆம் நாள் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரையாற்றிய அண்ணா, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க, இந்தியை எதிர்த்துப் போராட முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.


ஆனால், திருச்சியில் நாவலர் சோமசுந்தர முதலியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு 1937 திசம்பர் 26ஆம் நாள்.


இதில் சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுதான் முதலில் நடந்தது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து திருச்சி மாநாடு நடைபெறுகிறது.


அது மட்டுமல்ல திருச்சி மாநாட்டில் பெரியார் கலந்துகொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிட மாட்டோம் என்று முழங்கினார்.


அது மட்டுமல்ல, இந்த இரண்டு மாநாடுகளுக்கும் இடையில் 1937 செப்டம்பர் 5ஆம் நாள் சென்னையில் நாவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தி எதிர்ப் பிற்கான காரணங்களை விளக்கி அண்ணாதான் பேசினார்.


1938 ஆகஸ்டு முதல் நாள், சீருடை அணிந்த 100 தொண்டர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்புத் தமிழர் படை, தளபதி கே.வி.அழகிரிசாமி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்த்தத்தம்மாள், ஐ.குமாரசாமி பிள்ளை ஆகியோர் தலைமையில், திருச்சி-உறையூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. ஏறத்தாழ 400 கி.மீ தொலைவை 234 ஊர் களின் வழியே 42 நாட்களில் நடந்தே கடந்து வந்த இந்தத் தமிழர் படை, வழியில் 82 இடங்களில் கூட்டங்கள் நடத்தித் தமிழ் மொழியையும் பண்பாட் டையும் காக்க வேண்டியதன் அவசி யத்தை விளக்கிய வண்ணம் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. தமிழர் படைக்குத் திருவல்லிக் கேணி கடற்கரையில் ஆரவாரமான வரவேற்பு அளிக் கப்பட்டது. அங்கு மறை மலை யடிகள் தலைமையில்   நடை பெற்ற கூட்டத்தில் பெரியா இந்தியை எதிர்த்து முழங்கினார்.


செப்டம்பர் 16ஆம் நாள் சென்னை ஜார்ஜ் நகரில் (George Town) இருந்த இந்து தியாலாசிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் தமிழர் படைத் தொண்டர்கள் நாற்பது பேர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.


சென்னை மாநிலத்தில் உள்ள பல நகரங்களிலும் பல்வேறு நாட்களில் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. அக்காலத்தில் தஞ்சை மாவட்டடம் திருவரூரில் 14 வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மு.கருணாநிதி, கையில் தமிழ்க் கொடியை ஏந்தி, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய வண்ணம், தன்னுடைய பள்ளித் தோழர்களுடன் சேர்நது இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். அதனால், மறுநாள் அவர் வகுப்புக்கு வந்த இந்தி ஆசிரியரிடம் அடிவாங்க நேரிட்டது. 1938 சூன் 10ஆம் நாள் சென்னை - கதீட்ரல் சாலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், அரசின் ஆணைகளை மீறுமாறு மக்களைத் தூண்டிப் பேசினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, அண்ணா செப் டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப் பட்டார். ஐந்து நாட்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின், அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.


அது மட்டுமல்ல,


நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை தலைமையில் தமிழகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. மீனாம்பாள் சிவராசன் தமிழ்க் கொடியை ஏற்றினார். நாராயணி மாநாட்டைத் தொடங்கி வைத் தார். இம்மாநாடு ஈ.வெ.இராமசாமியின் தொண்டினைப் பாராட்டி அவருக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மொழி காக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்த தலைவர்களுக்கும் தொண்டர் களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறுநாள் டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்த்தத்தம்மாள், மலர்முகத்தம் மையார், பட்டம்மாள், மூன்று வயதே யான மகள் மங்கையர்க்கரசி மற்றும் ஒரு வயதேயான மகன் நச்சினார்க்கினி யனுடன் சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாசிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் கலந்து கொண் டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். அவர் களைத் தொடர்ந்து ஏராளமான மகளிர் மறியலில் கலந்துகொண்டு சிறை புகுந் தனர். காங்கிரஜ்க் கட்சித் தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராசனின் துணை வியார் புவனேசுவரி இரண்டு வயதே யான மகன் சோமசுந்தரத்துடன் மறியலில் கலந்துகொண்டார். அவர் கைது செய் யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண் டனை விதிக்கப்பட்டார். அந்தஇரண்டு வயதுக் குழந்தை சோமசுந்தரம் பிற்காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், மைய அமைச்சராகவும் ஆனார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகம். மொத்தம் 73 பெண்களும் 32 குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்.


தமிழகப் பெண்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிற்காகப் பெரியார் மீது இ.பி.கோ.117ஆவது பிரிவின் கீழும், குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7(1)ன் கீழும் குற்றம் சுமத்தப்பட்டது. 1938 திசம்பர் 5ஆம் நாள் வழக்கை விசாரித்தத நீதிபதி மறுநாள் பெரியாருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். பெரி யாருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண் டனையைக் கேள்வியுற்ற ஆளுநர் மிகவும் வருத்தப்பட்டதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட கடுங்காவல் தண் டனையை சாதாரண தண்டனையாக மாற்றியும், அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு வழங்கியும் ஆணை பிறப்பித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்ட செய்திகளை வெளியிட்ட இதழ்கள் மீதும் காங்கிரசு அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. விடுதலை இதழ் வெளியீட்டார்ளர் ஈ.வெ.கிருட்டிணசாமி, ஆசிரியர் முத்துச்சாமி ஆகியோர் அக்டோபர் 7ஆம் நாள் கைது செய்யப் பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். மேலும் விடுதலை, குடிஅரசு, பகுத்தறிவு ஆகிய இதழ்கள் கூடுதல் வைப்புக் கட்டணம் உரூ.1000/- செலுத்த வேண்டுமென்று 1938 ஜனவரி 4ஆம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது.


இப்படி பெரியாரும் திராவிட இயக்கத் தொண்டர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் தியாகங் களும் ஏராளம் ஏராளம். உண்மை இப்படியிருக்க, இந்தப் பார்ப்பன ஏடு(துக்ளக்) பெரியாரும் அண்ணாவும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஓடி ஒட்டிக் கொண்டார்கள் என்கிறது. இதைவிட பித்தலாட்டம் வேறு உண்டா?


அடுத்து, 3.3.31965 விடுதலை தலையங்கத்தில் பெரியார் எழுதியதில் ஒரு பகுதியை துண்டாக எடுத்துப் போட்டு, இந்தி எதிர்ப்பில் பெரியாருக்கு அக்கறையில்லை என்பது போல காட் டியுள்ளது. ஆனால், தலையங்கத்தில் பெரியார் உண்மையில் எழுதியது என்ன?


இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க் கிறேன். ஆனால், தமிழ் கெட்டுவிடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள். மற்றபடி தமிழ் கெடுவதற்கு சில புராணங்கள் அதுவும் பார்ப்பனர் நலனுக்கு பார்ப்பனர் சமய - தர்ம - கலாசார - ஆத்மார்த்த ஆஸ்திகத்திற்கு ஆகவே உண்டாக்கப் பட்ட தத்துவங்களை வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்த பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் முதலிய குப்பை கூளங்கள் தான் இனி கெட்டால் கெடலாமே ஒழிய பகுத்தறிவு விஞ்ஞானம் புதிய நாகரீக வளர்ச்சி வகைகளுக் கேற்றவை தமிழில் எதுவும் இல்லை, கெடப்போகிறதில்லை.


பழைய அரசர்கள் தமிழைக் காத்தார்கள் என்றால் என்ன அருத்தம். புலவர்கள் புளை வளர்த்தார்கள் என்பதுதான் பொருள். சமயாச்சாரிகள் தமிழைக் காத்தார்கள் என்றால் என்ன பொருள்? மத மூடநம்பிக்கை குப்பை கூளங்களையும் மாசு பட்டுக் கிடந்த முட்டாள்தனமான கடவுள்களையும் புளிபோட்டு விளக்கி பிரகாசமாக்கினார்கள் என்பது தவிர வேறு என்ன கருத்து  காண முடியும்?


ஆனதினால் நான் தமிழ் கெட்டுவிடுமே என்று இந்தியை எதிர்க்கவில்லை. மற்றெதற் கென்றால் ஆங்கிலமே அரசியல் மொழியாக, சரித்திர மொழியாக, விஞ்ஞான மொழி யாக, தொழில் மொழியாக, இயந்திர சாதன மொழியாக, பெரியோர்கள், அறிஞர்கள், விஞ்ஞானகர்த்தாக்கள் வாழ்க்கைச் சரித்திர மொழியாக சட்டமொழியாக, சம்பிரதாய மொழியாக ஆகவேண்டும் என்பதற் காகவே இந்தியை எதிர்க்கிறேன்.


ஆச்சாரியார் நோக்கம் தமிழர் கல்வியை ஒழிப்பதே


பதவி கிடைத்தபோதெல்லாம் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்துவதையே முக்கிய கொள்கையாகவும், தமிழர் படிப்பை ஒழிப்பதையே இன்றியமையாத கொள்கையாகவும் கொண்டு ஆட்சி செலுத்தவில்லையா?


1938இல் இந்தியை கட்டாயமாகப் புகுத்தினார். கவர்னர் ஜெனரலாக இருக் கும்போது இந்தியை ஆட்சி மொழியாக் கினார்; மற்றும் மத்திய அரசாங்க மந்திரி யாக இருக்கும்போது இந்தி படித்தவனுக் குத்தான் உத்யோகம் என்று உத்தரவு போட்டார். உத்யோகம் போனபின்பு தமிழ்நாட்டில் இங்கிலீஷ் ஆட்சி மொழி யாக இருக்க வேண்டும் என்ற சாக்கில் தமிழ்மக்கள் நட்பைக் கொண்டார்.


இந்தி திணிக்க இடந்தர மாட்டோம்


இந்தி நம் மீது திணிக்கப்படுமானால் அதை ஒழிக்க இந்த நாட்டில் மருந்து நம் கையில்தான் இருக்கிறது; அதை இப் போது வீணாக்கிக் கொள்ளக்கூடாது.


இந்தியை புகுத்தினவர்கள் அரசி யலுக்கு ஆகப் புகுத்தவில்லை; கலாச்சார மாற்றத்திற்காகவே இன உணர்ச்சியை மறக்கடிப்பதற்கு ஆகவே புகுத்தி னார்கள்; காந்தியின் கருத்தும்; ஆச்சாரி யாரின் கருத்தும் வெறியர்களின் கருத் தும் இதுவேயாகும்.


ஆதலால் இந்தி விஷயத்தில் நான் -திராவிடர் கழகம் அசமந்தமாக இருப் பதாக யாராவது கதினால் அது தவறான கருத்தாகும்.


காமராஜர் ஆட்சியே கஷ்டங்களைப் பரிகரிக்கவல்லது


நான் சுமார் இரண்டாண்டுக்கு முன்னாலேயே பொதுமக்களுக்கு என் கருத்தை தெரிவித்திருக்கிறேன். அதா வது:


காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்ற என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராஜர் ஆட்சி நிலைத் தால் இந்தியை மாத்திரமல்ல; மற்றும் அனேக காரியங்களை ஒழித்துக் கட்டலாம்.


இதுவே பெரியார் கூறியது:


இந்தத் தலையங்கத்தில் கடைசி பாராவில், கடைசி வரியை நீக்கிவிட்டு காமராசர் ஆட்சிதான் அவசியம்! என்பதை மட்டும் எழுதியுள்ளது துக்ளக் ஏடு. இதைவிட மோசடி வேறு உண்டா?


கடைசி வரிதானே முக்கியம்.


காமராசர் ஆட்சிதான் எனக்க அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராசர் ஆட்சி நிலைத்தால் இந்தியை மாத்திரமல்ல, மற்ற அனேக காரியங்களை ஒழித்து விடலாம் என்று பெரியார் எழுதினார். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? காமராசர் ஆட்சி மூலம் இந்தியை ஒழிப்பேன் என்பது தானே? கடைசி வரியை நீக்கிவிட்டு இந்தி ஒழிப்பில் பெரியாருக்கு அக்கறை யில்லையென்பது பித்தலாட்ட மல்லவா?


- விடுதலை நாளேடு 25. 6 .19

வியாழன், 20 ஜூன், 2019

வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்



மின்சாரம்


பார்ப்பனர்களின் கண்களை திராவிடர் கழகமும் அதன் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் கருவேல் முள்ளாக உறுத்திக் கொண்டு இருக்கிறது.

'துக்ளக்' குருமூர்த்தி மூலமாக அதனை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சதா இவர்களைப் பற்றிய நினைப்பு தான் - அரண்டவர்களின் கண்கள் அவை. எதைப் பார்த் தாலும் 'அய்யோ வீரமணி வீரமணி" என்று அலறுகிறார்கள்.

நல்லது வரவேற்போம் - பாம்பு விறுவிறுத்தால் யாரையோ கூப்பிடும் என்பார்கள் அல்லவா - அதற்கும் நாம் தயார் தான்.

1949ஆம் ஆண்டுக்குப் பின் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டமே நடத்தவில்லை என்று உளறியதற்கு 'விடுதலை' தேதி வாரியாக  தந்தை பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வெளியிட்டு, சாட்டையைக் சுழற்றி முதுகை வீங்க வைத்தது.

பதில் எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். 'விடுதலை'யின் எந்தக் கட்டுரைக்கும் அவாள் பதில்  எழுதியதாக வரலாறு இல்லை.

'விடுதலை'யின் சவுக்கடிக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் உடனே என்ன செய்வார்கள்? வேறு ஒரு பிரச்சினைக்குத் தாவி விடுவார்கள். அறிவு நாணயம் என்பது எந்தக் காலத்தில் இருந்தது இந்த நாடு மாறிகளுக்கு?

இந்த வாரம் 'துக்ளக்' இதழில் (26.6.2019) எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் (பக்கம்6) தொடக்கமே இவ்வாறு இருக்கிறது.

"ஈ.வெ.ரா.பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில்தான் கலந்துகொண்டு தலைமையேற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டம் பெருமை முழு வதும் அவருக்கே தரப்படுகிறது" என்று எழுதப்பட்டுள்ளது.

ஒன்றை எழுதும் போது ஆதாரப்பூர்வமாக எந்த வருடம்; எந்தத் தேதியில் என்ன  நடந்தது என்று எழுதும் யோக்கியதை இந்தக் கூட்டத்திற்கே கிடையாது. காரணம் - உண்மையாக இருந்தால் தானே அவ்வாறெல்லாம்  ஆதாரப் பூர்வமாக எழுத முடியும்.

போகிற போக்கில்  அள்ளித் தெளிக்கும் கோணல் புத்தி அந்தக் கும்பலின் குருதியில் எப்பொழுதுமே கொப்பளிப்பது வழக்கமே!

அவர்களுக்குச் சொல்லா விட்டாலும் வாசகர்களுக்கு உண்மை விவரம் போய்ச் சேர வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நாம் சொல்லத்தான் செய்வோம்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில்தான் போனார் என்கிறதே 'துக்ளக்' அது உண்மையா?

ஒரு வழக்கு விசாரணைக்காக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் நீதிமன்றம் சென்றார்.

நீதிமன்றமோ திருவிதாங்கூர் மன்னரின் கொட்டாரத்தில் (அரண்மனையில் ஓரிடம்) இருக்கிறது. அப்பொழுது மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காக எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டு இருந்தது. நீதிமன்றம் உள்ள இடமும் பந்தலுக்குள் அடக்கம். அரசருக்காக முறை ஜெபம் தொடங்கப் பெற்றது.

இந்த நிலையில் மாதவன் ஈழவர் (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்  அவர் நீதிமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையின் தொடக்கப் புள்ளி இதுதான்.

இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் நடத்த வேண்டும் என்று ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்தார்கள். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவமேனன் முதலியோர் இணைந்தனர்.

கொல்லம் சுயராஜ்ஜிய ஆசிரமத்தில் கேரள காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நாள் 16.2.1924.

கிளர்ச்சி தொடங்கப்பட்ட நாள் 30.3.1924. வைக்கம் கோயிலைச் சுற்றி  நான்கு வீதிகள் இருப்பதால் சத்தியாக்கிரம் செய்ய வைக்கத்தைத் தேர்வு செய்தனர்.

கிளர்ச்சி தொடங்கியது முதல் கைது செய்யப்பட்டனர். கைது  செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம்   தண்டனை அளிக்கப்பட்டது. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உட்பட 19 முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிளர்ச்சியினைத் தொடர்ந்து நடத்திட தலைவர்களும் இல்லை - கிளர்ச்சியில் ஈடுபட தொண்டர்களும் இல்லாத கையறு நிலை.

அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சமுக சீர்திருத்த கிளர்ச்சிக்குத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்த வல்லவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.ரா.தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி பெரியாருக்கு தந்திகளைக் கொடுத்தார். (4.4.1924 மற்றும் 12.4.1924).

ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரிஸ்டர் கேசவமேனனும் கையொப்பமிட்டுக் கடிதமும் எழுதுகிறார்கள். அந்த நிலை யில் பெரியார் வைக்கம் புறப்பட்டு அடைந்த தேதி 13.4.1924.

இந்த இடத்தில் மிக மிக முக்கியமாகக் கோடிட்டுக் கவனிக்கத்தக்கது என்ன? கிளர்ச்சி தொடக்கப்பட்டது மார்ச் முப்பது - தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தது. 13.4.1924 இரண்டே வாரத்தில் வைக்கம் சென்று போராட்டத் துக்குத்  தலைமை தாங்குகிறார்.

உண்மை இவ்வாறு இருக்க, 'துக்ளக்' என்னும் துப்புக்  கெட்ட இதழ் ஒரு  கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது"

"ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசி கட்டத்தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார் என்று எழுதுகிறது என்றால், இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதைநம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."

கிளர்ச்சிக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கியதும் போராட்டம் சூடு பிடித்து விட்டது. அவர் உரையைக் கேட்க மக்கள் பெரும் அளவில் திரள ஆரம்பித்தனர்.

"கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்து அப்பனை (கடவுள் மகாதேவனை) கீழே போட்டு வேட்டித் துவைக்கணும்" என்றார்.

"நாயும், கழுதையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் தாராளமாக நடமாடுகின்றனவே, அவை சத்தியாக்கிரகம் நடத்தியா அவ்வுரிமைகளைப் பெற்றன?" என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு நச்சு நச்சென்று நாப்பறை கொட்டினார்.

பத்து நாள்கள் அரசு ஒன்றுமே செய்யவில்லை; காரணம் அரசர் தந்தை பெரியாருக்கு நண்பர். அவர் வடக்கே செல்லும் பொழுதெல்லாம் அவர் தங்குவது ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகையில்தான். அரசரின் பரிவாரங்கள் தங்குவது தந்தை பெரியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் தான். அதனால் தொடக்கத்தில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

தந்தை பெரியார் பேச்சைக் கேட்க பெரு வாரியாக மக்கள் திரளுகிறார்கள். கிளர்ச்சி பெரும் அளவில் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்ட சூழலில் கைது செய்து,ஒரு மாதம் அருவிக் குத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்.

விடுதலையான நிலையில்  முன்னிலும் தீவிரமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரை இனி வெளியில் விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்து திருவிதாங்கூர்  சிறையில்  6 மாதத் தண்டனை அளிக்கப்பட்டார்.

பெரியாரோ சிறையில்! போராட்டத்தின் கெதி என்ன என்ற நிலையில்  தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை யாரும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தலைமை தாங்கி நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் குடுமி குருமூர்த்தி கூட்டத்திற்குத் தெரியுமா?

அல்லது தெரிந்திருந்தும் பார்ப்பனீயத்துக்கே உரித்தான பித்தலாட்டத்தில் அரங்கேற்றமா என்பதை வாசகர்களின்  அறிவார்ந்த முடிவுக்கே விட்டு விடுவோம்!

தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது அவரை சாகடிப் பதற்கு  சவுண்டிகளான  நம்பூதிரிகள்  சத்துரு சம்ஹார யாகம் நடத்தினார்கள்;  எதிரியை  (பெரியாரை) சாகடிப்பதற்கான யாகமாம்.

என்ன வேடிக்கையென்றால் மன்னர் மண்டையைப் போட்டு விட்டார். பட்டம் சூட்டிக் கொண்ட இராணி சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.

தந்தை பெரியாருடன் இராணி பேசினால், பெரியாருக்கு மரியாதை கூடி விடும் என்று - அதுவரை வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவாக பெரிய அளவில் எதையும் செய்யாத  காந்தியாரை, இராணியுடனான சமரசப் பேச்சுக்குக்  கொண்டு வந்தது குல்லுகப் பட்டர் ராஜாஜியே. இன்னும் சொல்லப் போனால் போராட்டத்தை இடையில் நிறுத்தி விடுமாறு கூறியவர்தான் காந்தியார்.  வைக்கத்தில் தந்தைபெரியார் தலைமை தாங்கி கிளர்ச்சி நடத்திக் கொண்டிருந்த முக்கியமானகால கட்டத்தில் சீனிவாசய்யங்காரை வைக்கத்திற்கே  இவர் அனுப்பி, சென்னைக்குத் திரும்பி விடுமாறு சொன்னவர் ராஜாஜி.

"எனக்குக் காரியம் தான் முக்கியமே தவிர, வீரியமல்ல" என்ற கருத்துடையவர் தந்தை பெரியார். காந்தியார்  இராணியுடன் பேசியே நாங்கள் கோரியது நடக்கட்டும் என்றார்.

முதற்கட்டமாக ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக எல்லா வீதிகளும் திறந்து விடப்பட்டன என்பதுதான் வரலாறு. வைக்கம் வெற்றி விழா 29.11.1925 இல் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவரே பெரியார்தான்.

வைக்கம் போராட்டத்தின் உண்மை வரலாற்றை, தந்தை பெரியார் அவர்களின் பங்கினைத் தெரிந்து கொள்ள வேண் டுமானால் இரு நூல்கள் முக்கியமானவை. பாரிஸ்டர்  கே.பி. கேசவமேனன் எழுதிய கழிஞ்ச காலம் (கடந்தகாலம்)  பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் எழுதிய (பிறகு துணைவேந்தர்)  Vaikam Satya Graha and Gandhi என்ற நூல் முக்கியமானது இரண்டாவது பதிப்பில்  Hundred Yards to Freedom என்று தலைப்பு மாற்றப்பட்டது.

இன்னொரு முக்கிய ஆதாரம்: இந்தியாவின் பொது ஆளுநருக்கு சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த (Agent  to  the Governor - General, Madras)    சி.டபுள்யூ  இகாட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி, சென்னைதலைமைச் செயலாளருக்கு 1924 ஏப்ரல் 21  நாளிட்டு எழுதிய மடல் முக்கியமானதாகும்.

"சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால், அது வெகு நாட் களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது." பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்து விட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவ ருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடு மாற்றமுள்ளவர் களைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றிய துடன், எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிர கத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார். பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச் சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ் வேறு இடங்களுக்குச் சென்றார். ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. எனவே, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்"

இதற்கு மேல் என் ன ஆதாரம் வேண்டும் - உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறீர்கள். குருமூர்த்திகளே!

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் அப்பொழுது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் என்ன எழுதினார் என்பதாவது  குருமூர்த்தி வகையறாக்களுக்குத் தெரியுமா?

வைக்கம் வீரர் என்று தலைப்பிட்டு திரு.வி.க. எழுதுகிறார் - படியுங்கள், படியுங்கள்.

"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அமர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல் எளிய உடை தரித்து எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?" என்று நவசக்தியில் தீட்டினாரே (24.5.1924).

எவரே அறியார் என்று திரு.வி.க. 95 ஆண்டுகளுக்கு முன் கேட்டார். ஆனால் அப்படி கேட்கும் இனத்துவேஷ  விரியன்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இன்னும் உண்டு கேளுங்கள், கேளுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த எம். கோவிந்தன் நாயர் எழுதுகிறார் (1929).

"உலகத்தில் உள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்தவர் காலஞ்சென்ற பெரியார் திரு நாராயண குருசாமி அவர்கள். மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்தவர் திரு கே. அய்யப்பன். என்றும் பிறர்க்கு என வாழும் வாலிபர். அவர் இவ்வுதேசத்தைப் பரப்பி வருகிறார். மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு ஈ.வெ. ராமசாமியார், மற்றெவரையும்விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன் வந்துள்ளார். வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவ ருடன் முதன் முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற் படும்படியான முடிவிற்குக் கொண்டு வந்து விட்டுத் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. (சிறி நாராயண குரு தர்ம பரிபாலன்) மாநாட்டில், 10000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளிதாகவும், நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிகுந்த கவனத்தோடு மக்கள் கேட்டனர் .களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு இந்நாட்டில் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடையை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற் றமடைய வாய்ப்பும் வசதியும் அளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும், திரு இராமசாமியார் சுயமரியாதை  இயக்கத்தைத் துவக்கினார்"

வைக்கம் வெற்றி விழாவில் உரையாற்றிய மன்னம் பத்மநாபன் பேசுகிறார். நாகம்மையார் அனைவருக்கும் தாய் என்றும் போராட்டக் காலத்தில் மக்களின் இன்னலைப் பகிர்ந்துகொள்ள வந்த அவர் வெற்றி விழாவிற்கும் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வந்திருக்கிறார் என்று நெகிழ்ந்து கூறியதுண்டே!

சென்னை மாநகர மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினரா கவும் அண்ணல் அம்பேத்கருக்கு உற்ற தோழராக இருந்தவருமான வழக்குரைஞர் ராவ்சாகிப் என். சிவராஜ் என்ன கூறுகிறார்? (1928).

"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு நாயக்கர் அவர்களை எங்கள் சமுகத்தார் என்றும், மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் மிதவாதக் கொள்கை உடையவராக  இருந்தார். சமுக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர்" என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத் தலைவர் படம் பிடித்துக் காட்டி கோணல் புத்திக்காரர்களின் செவிளில் அறைந்துள்ளாரே - இதற்குப் பிறகாவது புத்தி வருமா?

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. மாகத் என்னும் ஊரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டத்துக்கே தூண்டுகோலாக இருந்தது என்பது கூடுதல் தகவல். தகர டப்பாக்களே இனி மேலாவது  உளறுவதை நிறுத்திக் கொள்க!

திருவாங்கூர் சிறைச்சாலையில் பெரியார்


வைக்கம் போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் பாரிஸ்டர் கேசவ மேனன் ஒருவராவார். தமது சிறைவாசம் எப்படி இருந்தது என்பதுபற்றி எழுதுகிறார்.

"சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும், எனக்கும் படுத் துறங்கக் கட்டில்கள் போட்டிருந் தார்கள். குளியலறையும், எழுது வதற்கும், படிப்பதற்கும் வசதி யுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக் குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந்த னர். செய்திப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். உற வினருக்கும், நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர் களிடமிருந்து வரும் பதில் கடி தங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித்தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவ தற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர மற்ற வாழ்க்கை வசதி களைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளி தாகவே கிடைத்தன."

என்று கூறுகிறார் பாரிஸ்டர் கேசவ மேனன். அதே கே.பி. கேசவமேனன் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட் டார்? அவர் அனுபவித்த கொடுமை என்ன என்பதையும் எழுதியுள்ளார். அதைப் படித்த பிறகாவது படமெடுத்தாடும் பார்ப்பனர் கூட்டத்தின் கடும் நஞ்சினைப் பார்ப்பனர் அல்லா தார் புரிந்து கொள்ள வேண்டும்.

"கால்களில் விலங்குச்சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப் பட்ட ஒரு மரப்பட்டை, இவற் றோடு ஈ.வெ.ராமசாமி கொலை காரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண் டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.

ஒரு 'ஜாதி இந்து' என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்ப தற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத் திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடு மையை நீக்க வேண்டும் என்பதற்காக - தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டு மானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே - அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி யெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?"

- கே. பி. கேசவமேனன் (மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108)

இதனைப் படிக்கும் பொழுது - ஒரு செல்வச் சீமான் தீண் டாமை ஒழிப்புக்காக எத்தகைய விலையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டாமா?

அட, வெட்கம் கெட்ட குருமூர்த்திகளே! உங்களுக்கு அறிவு நாணயம் என்ற ஒன்றே கிடையாதா?

- விடுதலை நாளேடு, 20.6.19