சுவரெழுத்து சுப்பையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவரெழுத்து சுப்பையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சுவரெழுத்தாளர் சுப்பையா!'' - கி.வீரமணி

                    

                         விளம்பரமில்லா வியக்கத்தக்க                                               பெரியார் தொண்டர்கள்!

                       '' சுவரெழுத்தாளர் சுப்பையா!''

                              - கி.வீரமணி  


                                   ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,

ஈரோட்டு வேந்தர் பராக்! பராக்!!

விநாயகனை வீதியிலே போட்டுடைத்த, வீராதி வீரர்!

சூராதி சூரர் சுப்ரமணியனை சுக்குநூறாக்கிய சூரர்!

தீராதி தீரர் தீங்கான அரசியல் சட்டத்தை எரித்த தீரர்!

பராக்! பராக்!

என கட்டியம் கூறும் கம்பிரக் குரல் மாநாட்டுப் பேரணிகளில் பெரியார் அமர்ந்து வரும் அலங்கார ஊர்திக்கு முன்னால் ஒலிக்கின்றதென்றால் அது சுவரெழுத்தாளர் சுப்பையாவின் குரலாகத்தான் இருக்கும். காரைக்குடி அருகில் சூரக்குடி எனும் கிராமத்தில் பிறந்து இளமைப்பருவத்தில் 1940களின் மத்தியில் வேலைதேடி மயிலாடுதுறைக்கு வந்தவர். சுயமரியாதைக் கோட்டையாக விளங்கிய மயிலாடுதுறையில் பெரியார் தொண்டர்களின் தொடர்பு ஏற்பட பெரியார் கொள்கை மீதும் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மயிலாடுதுறை கோ.அரங்கசாமி அவர்களின் மளிகைக்கடைதான் பெரும்பாலும் அவரின் பாசறை

1950 வாக்கில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிச் சுவர்களில் பெரியாரின் கொள்கைகளை எழுத ஆரம்பித்த அவரது சுவரெழுத்துப் பணி தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தொடர்ந்தது. சுவரில் அவரால் எழுதப்பட்ட வாசகங்கள் இருபால் இளைஞர்களையும் ஈர்த்து அவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சுப்பையா சுவரெழுத்திற்கென எந்தவித பிரத்யோக எழுதுபொருளையும் பயன்படுத்தியதில்லை. சாலை போட பயன்படும் தாரை எடுத்து காய்ச்சி மண்ணெண்ணெய் கலந்து அதில் துணி சுற்றப்பட்ட மூங்கில் குச்சியை தோய்த்துதான் எழுதுவார். கடைசிவரை அவருக்குப் பயன்பட்டது இரண்டு பழைய தகர டப்பாக்களும் அழுக்குத்துணியும் மூங்கில் குச்சியும்தான். இரவு முழுதும்
எழுத்துப் பணி, பகல் வேளையில் மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம். இதுவே அவரது வாழ்க்கையாகி இருந்தது. யாருக்கும் கட்டுப்படமாட்டார். முன்கோபக்காரர். மயிலாடுதுறை காவிரி ஆற்றில் காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதில் விபூதி வீரமுத்து எனும் காங்கிரஸ் பேச்சாளர் பேசயிருந்தார். இவர் போகுமிடங்களிலெல்லாம் தந்தை பெரியார் அவர்களை விமர்சித்து பேசிவந்தார். விபூதி வீரமுத்து மயிலாடுதுறை வருவதை அறிந்த சுப்பையா "கருப்புக்கு மறுப்பு! மறுப்புக்கு செருப்பு!" என கொட்டை எழுத்துக்களில் கூறைநாடு பகுதியில் எழுதிவிட்டார். இது இயக்கத் தோழர்களை உசுப்பிவிட்டது. வழக்கம்போல் விபூதி வீரமுத்து பெரியார் அவர்களைப்பற்றி பேச ஆரம்பிக்க கூட்டத்தில் கலந்திருந்த இயக்கத் தோழர்களும் சுப்பையாவும் மேடை முன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட அடிதடி ரகளையாகி கூட்டம் அத்தோடு ரத்தாகிப் போனது. விபூதி வீரமுத்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி அருகில் இருந்த காங்கிரஸ் தோழர் பூட்டுக்கடை தங்கராசுவின் கடையில் ஒளிந்துகொண்டார். பின்னாளில் அந்தத் தங்கராக கருப்புச்சட்டை போடாத பெரியாரின் தொண்டராகவும், என்பால் மிகுந்த பற்று கொண்டவராகவும் விளங்கினார். நான் மயிலாடுதுறைப் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு என்னை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார்.

காங்கிரசை நமது இயக்கம் கடுமையாக எதிர்த்த நேரத்தில் மயிலாடுதுறைக்கு வருகைதந்த காமராஜரிடம் சுப்பையாவின் சுவரெழுத்தைப் பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் முறையிட அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காமராஜரே ஆத்திரப்பட்டு 'கட்டை விரலை வெட்ட வேண்டும்" என்று பேசிவிட்டுப் போனார்.
-
-உண்மை இதழ், 16-30.09.2015

சனி, 6 மே, 2023

சுவரெழுத்து சுப்பையா

  

9

1960ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது...

சீர்காழி சியாமளா பெண்கள் உயர் நிலைப் பள்ளி வாசலில் ஆவேசத் துடன் திரண்டு நின்று கொண்டிருந்தனர் பெற் றோர்கள்.

பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட் டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந் தளிக்க வைத்திருந்தது. என்ன, பள்ளிக்கு முன்பு இவ்வளவு கூட்டம்? என்று ஆர்வத் துடன் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக் களும் சுவரில் எழுதியிருந்தைப் படித்து விட்டு கோபத்துடன் பெற்றோர்களுடன் இணைந்து கொள்ள...எல்லோரையும் சமா தானப்படுத்த வழிதெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை யாசிரியர்.

"பொம்பளப் புள்ளைங்க படிக்கிற இடத்தில இப்படி எழுதலாமா?"

"ஏதோ நாலெழுத்து தெரிஞ்சுக்குனும் தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறோம்...இப்படி எழுதி வச்சா எப்படி அனுப்பறது?" 

"இதப் படிச்சிட்டு பொம்பளப் புள் ளைங்க இதுக்கு ஆசைப்பட்டா குடும்பம் குட்டிச்சுவராயிடாதா..?" என்கிற பொதுமக் களின் கேள்விகளைச் சமாளிக்க இயலாத தலைமையாசிரியர் அந்தச் சுவரை வெறித்துப் பார்த்தார்.

அதில்...

"சைக்கிள் ஓட்டும் பெண்கள்;

செந்தமிழ்நாட்டின் கண்கள்!"

என்று எழுதப்பட்டிருந்தது.

தலைமையாசிரியருக்கும் கூட்டத்தில் இருந்த விவரம் தெரிந்த ஒருசிலருக்கும் இதை எழுதியது யாரென்று புரிந்துவிட்டது.

பிரஷ் இல்லாமல்,பெயிண்ட் இல்லா மல் ரோடு போடப் பயன்படும் தாரை உருக்கி, விரலில் துணியைச் சுற்றிக் கொண்டு தாரில் தொட்டு முத்து முத்தாக சுவர்களில் எழுதி வைப்பவர் சுற்று வட்டா ரத்தில் ஒருவர்தான். அவர்...சுவரெழுத்து சுப்பையா!

பெண்கள் விமானம் ஓட்டுகிற காலத் தில் இந்தச் செய்தி உங்களுக்கு வேடிக்கை யாக இருக்கலாம். ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் நிலை இதுதான்.

அவ்வளவு ஏன்? 

தொண்ணூறுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களின் கேலி, சமூகத் தின் கிண்டல்களை எதிர்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தனர் பெண்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் அன் றைய ஆட்சித்தலைவர் ஷீலாராணி சுங்கத் அவர்களின் தீவிர முயற்சியால், அறிவொளி இயக்கத்தின் மூலமாக 1990-1992 காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டனர் என்பது நம்மில் பலரின் கவனத்தை ஈர்க்காத மிகப் பெரும் சாதனைதானே!

//முகநூல் பகிர்வு//

நன்றி: தோழர் நலங்கிள்ளி