புதன், 23 ஜூலை, 2025

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! - கடந்து வந்த பாதை

 

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!-மஞ்சை வசந்தன்



சுயமரியாதை இயக்கத்தின் கால்கோள் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் நடைபெற்றது என்று கூறும் அளவிற்கு குறிப்பிடும் அளவிற்கு – சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமாக ‘குடிஅரசு’ ஏடு அமைந்தது.

‘குடிஅரசு’ ஏட்டின் முதல் இதழ் 02.05.1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும் மிகக் கடுமையாக,  முனைப்புடன் செயல்பட்டு வந்தார் பெரியார்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, இலக்கு இவற்றைக் கூறும் ஏடாக ‘குடிஅரசு’ அமைந்தது. நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற இலக்குடன் இவ்வேடு தொடங்கப்பட்டதால், ஏடு தொடங்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து, 23.08.1925 இதழ் முதல் தலையங்கத் தலைப்பில்,

‘‘அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன்றுண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும்தானே.’’

என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏடு தொடங்கப்படும் செய்தியறிந்து, திரு.வி.க. அவர்களும், வரதராஜுலு நாயுடு அவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். ஆனால் இச்செய்தியை ராஜகோபாலாச்சாரியிடம் பெரியார் கூறியதும், ‘‘இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டுவிட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. அதனால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது’’ என்றார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகை வெளியிடுவது பற்றிக் கேட்கையில்,

‘‘அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும், அவை தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது. உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்’’ என்று பெரியார் கூறினார். அதைக் கேட்டு அகம்மகிழ்ந்த ஞானியார் அடிகள், ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திறந்துவைக்கும்போது,

‘‘நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்று கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை’’

‘‘உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். ‘குடிஅரசு’ ஏட்டின் கருத்தும் இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இவை ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் கொள்கையாய் இருக்கவேண்டும். இப்பத்திரிகையில் சிறீமான் நாயக்கருக்கு (பெரியாருக்கு) எவ்வளவு சிரத்தையுண்டே அவ்வளவு எனக்கும் உண்டு’’ என்று கூறி வாழ்த்தினார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஆசிரியராய்ப் பெரியார் இருந்த நிலையில் இணையாசிரியராக திரு.தங்கபெருமாள் 6 மாதகாலம் இருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் இறை சம்பந்தப்பட்டவை இடம் பெற்றிருந்ததற்கு அவரே காரணம். பெரியாரின் முழுப்பொறுப்பில் (ஒரே ஆசிரியர் என்ற நிலை) வந்தபின் அதுபோன்ற கருத்துகள் இடம் பெறவில்லை.

‘குடிஅரசு’ ஏடு தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் அதைப் பாராட்டி சுமார் 400 கடிதங்களும், எதிர்த்து 4 கடிதங்களும் வந்தன.

‘‘குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும்’’ என்று விமர்சனங்களுக்கு விடையாய் பெரியார் தம் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு தலையங்கத்தில் பெரியார், தாம் கண்டித்து எழுதியவை பற்றிக் குறிப்பிட்டார். என்னால் கண்டிக்கப்படாதவை எவை என்று பார்த்தால் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கண்டித்திருக்கிறேன்.

அரசியம், மதம், கோயில், கடவுள், சடங்கு, வேதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பனியம், ஜாதி, நீதிமன்றம், அலுவலகம், தேர்தல், கல்வி, காங்கிரஸ் ஆட்சியென்று அவர் கண்டித்தவற்றின் பட்டியல் நீள்கிறது.

‘‘ஒரு பொருள் அல்லது ஒரு கருத்து எவ்வளவு பழைமை உடையது என்று சொல்கிறோமோ, அந்த அளவிற்கு அது சீர்திருத்தப்பட வேண்டியதாகும்’’ என்ற தன் வலுவான கருத்தின் அடிப்படையில்தான்அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்தார். திருத்த வேண்டியவற்றைத் திருத்தினார். பெரியார் உலகியலைப் பேசினார்; உலகியலையே எழுதினார். கண்டித்தாலும், பாராட்டினாலும் அது உலகு, உலக மக்கள் நன்மை இவற்றின் அடிப்படையிலேதான் செய்தார். மக்களுக்குப் புரியும் சொற்களில் பேசினார், எழுதினார். புலமையை, திறமையை கவர்ச்சியைக் காட்டும் வகையில் அவர் பேச்சோ எழுத்தோ அமையவில்லை.

தான் கூறுவதை அப்படியே ஏற்காமல், சிந்தித்து சரியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். எதிர்ப்புக்கும், கண்டனங்களுக்கும், தாக்குதலுக்கும் அஞ்சாது, கலங்காது, பின்வாங்காது, துணிவுடன், எதிர்கொண்டு தன் கருத்துகளைப் பரப்பினார்.

பதவி நாட்டம். புகழ் நாட்டம், பணநாட்டம் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காகவே பாடுபட்டார்.

எனவே தான் ஜெர்மனி தத்துவஞானி வால்டர்ரூபன் என்பவர், ‘‘தந்தை பெரியார் இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை!’’ – என்றார்.

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் ‘‘வால்டர் ரூபன்’’ இந்தியாவைப் பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்.

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு ‘‘கேள்வியை’’ முன்வைக்கிறார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத ‘‘மகத்தான மானுட ஆளுமையுடையவர்’’ யார் தெரியுமா? (Who is the unprecedented Human personality of the present India?)

திகைத்துப் போனவர்கள் காந்தி பெயரைத் தயக்கத்துடன் சொல்ல, காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரைச் சொல்ல, அவருக்கு முன் உதாரணம் அசோகர் எனச் சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல, தான் எழுப்பிய வரலாற்றுப் புதிர் கேள்விக்குரிய பதிலைச் சொன்னார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை ‘‘பெரியார் ஈ.வெ.ரா தான்’’ என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம், மனுதர்மம், வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகத்தளத்தில் போராடுகிறார். அதனால்தான் என்றார். இந்தச் செய்தியை சாகித்திய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் 25.11.2011 அன்று ஆற்றிய ஒரு உரையில் கூறியிருக்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஒவ்வொரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும்போதும் மக்களுக்கு தம் கருத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. ‘குடிஅரசு’ இதழின் நிலை, சமுதாய நிலை இரண்டைப் பற்றியும் ஒளிவு மறைவு இன்றி தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

‘குடிஅரசு’ ஒவ்வோர் ஆண்டைக் கடக்கும் போதும் அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான சவால்களும் தொடர்ந்தன. மதவாதிகள், பக்தர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் கையாளர்கள் என்று பல தரப்பு கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருந்தன; தொடர்ந்தன.

‘‘உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் குடிஅரசின் தலைமீது விழுந்து கிடக்கிறது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, வருணாசிரமக்காரர்களும், சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும்’’ என்று பெரியாரே குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்கள் ‘குடிஅரசு’ ஏட்டின் பிரச்சாரம், அந்த ஏட்டைப் படித்துவிட்டு தொண்டர்கள் செய்யும் பிரச்சாரம் இரண்டும் சேர்ந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்க அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கியதால் அவர்களின் எதிர்ப்பும் வலுவாக இருந்தது.

மேலும் ‘குடிஅரசு’ பெற்றுள்ள மக்கள் ஆதரவையும் பெறவேண்டிய ஆதரவையும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

‘குடிஅரசு’ ‘முதல் வருஷ’த்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ‘குடிஅரசே’  அதிகமான சந்தாதாரர்களையும் வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில்  ‘குடிஅரசு’ 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் ‘குடிஅரசு’ மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும், அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும், தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே  உறுதி கூறலாம்.

‘குடிஅரசு’வின் வாயிலாகப் பெரியார் ஆற்றிய குமுகாயத் தொண்டின் தாக்கம் பற்றிக் கோவை அய்யாமுத்து அவர்கள்,

‘‘கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து. அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்து வந்தது போலவே, பெரியார் ‘குடிஅரசு தொடங்கிச் சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் அன்பும் அறிவும் ஆவேச உணர்வும் பொங்கிட உழைத்தார். அய்ம்பது ஆண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் அய்ந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதோர் இலர்!’’

இச்சான்றுரைகள் யாவும் மிகையானவை அன்று; மெய்யானவை!

ஆக ‘குடிஅரசு’ என்பது வெறும் இதழாக இல்லாமல் ஓர் இயக்கமாக விளங்கிற்று. சுயமரியாதை இயக்கந்தான் ‘குடிஅரசு’ இயக்கம்; ‘குடிஅரசு’ இயக்கந்தான் சுயமரியாதை இயக்கம். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றுப் பெயராக இலங்கின.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே ‘குடிஅரசு இயக்கம்’ என்று குறிப்பிட நேர்ந்தது.

‘‘என் கருத்துகளை வரும் தலைமுறையினர்க்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை’’ என்னும் உறுதிப்பாட்டுடன் ‘குடிஅரசு’ ஏட்டை ஈன்ற பெரியார், அதைப் பேணி வளர்ப்பதற்கான முறைகளைச் செம்மையாகக் கையாண்டார்.

‘குடிஅரசு’ முதல் இதழின் முதற்பக்கத்தில், ‘‘சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா’’ ரூபாய் மூன்றுதான் என்பதோடு, ‘‘தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால், இதனை ஆதரிக்க வேண்டுவது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்’’ என்றும் பெரிய எழுத்துகளில் பொறித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இதழியல் வரலாற்றில் இணையில்லாப் பெருமை படைத்த ‘குடிஅரசு’ ஏட்டை அறிமுகம் செய்தார் பெரியார். கடந்த மே மாதத்துடன் இந்த இதழ் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன.

‘‘விடுதலை’’ ஏடு நீதிக்கட்சியென்று அழைக்கப்படும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினரால் 01.06.1935ஆம் நாள் அன்று தொடங்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டு, விளைவுகளை விடிவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஏடு தொடங்கப்பட்ட போது பெரியார் அவர்கள், அதை வரவேற்றுப் பாராட்டி ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.

தற்போது அண்ணாசாலை என்று அழைக்கப்படும் மவுண்ட்ரோட்டில் 14ஆம் எண்ணுள்ள கட்டடத்திலிருநது வெளிவந்தது. அதன்பின் 1937 ஆண்டு முதல் பெரியாரே ஏற்று நடத்தினார். 01.01.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடக்க காலத்தில் ‘விடுதலை’ ஏட்டின் விலை காலணா.

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வேடு பரப்பிக்கொண்டிருக்கிறது. வருணபேதம், ஜாதி, மதம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை, வேத, சாஸ்திரம், புராணங்களை மறுத்தல், எதிர்த்தல், ஒழித்தல் இதன் முதன்மை இலக்காக இருந்து வருகிறது. சமூகநீதி, சமத்துவம், அறிவியல், பொதுவுடைமை கல்வி உரிமை, பெண்ணுரிமை, ஆதிக்க ஒழிப்பு, தமிழை அறிவியல் மொழியாக்கல் போன்றவற்றைச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது. எனவே இது செய்தி ஏடல்ல, இயக்கக் கொள்கைகளை வென்றெடுக்க, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழிகாட்டும் ஏடு. இன்றைக்கு வீடு தோறும் ‘விடுதலை’ என்பது இலக்காகக் கொள்ளப்பட்டு பரப்பப்படுவதோடு, இணையதளத்திலும் இலவசமாய்ப் படிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறையாகத் தொடங்கப்பட்டு அதன்பின் நாளேடாக ஆக்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் அவர்கள். இவர் 01.06.1935 முதல் 06.05.1936 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார். இவர் தந்தை பெரியார் 1940இல் மும்பை சென்று அம்பேத்கரைச் சந்தித்துபோது உடன் சென்றவர். ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்கள் 04.11.1936 முதல் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1936 ஜனவரி 7ஆம் நாள் வரை அப்பொறுப்பிலிருந்தார்.

நீதிக்கட்சியால் தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டை நடத்த முடியாமல் பெரியாரிடம் ஒப்படைத்தது. 29.051935 நீதிக்கட்சியால் நிறுத்தப்பட்ட ‘விடுதலை’ ஏடு மீண்டும் 01.07.1937 முதல் பெரியாரால் நாளிதழாக நடத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.

நீதிக்கட்சி ‘விடுதலை’ ஏட்டை நடத்தியபோது,

‘‘பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

பரவரோடு குறவருக்கு மறவருக்கும் விடுதலை!’’

என்ற பாரதியார் பாடல் இடம் பெற்றிருந்தது. பெரியாரிடம் ‘விடுதலை’ வந்தபின் 01.07.1937 முதல் அப்பாடல் இடம் பெறவில்லை.

1937இல் துறையூரில் முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டில் அண்ணா பங்கேற்றார். அண்ணா முதன்முதலில் தலைமையேற்ற மாநாடு இதுதான். துறையூரில் நடந்த மாநாடு குறித்து 1937 ஆகஸ்ட் 23ஆம் தேதி பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை துல்லியமாக அதில் கூறியிருந்தார்.

சுயமரியாதை இயக்கம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் ஜஸ்டிஸ் கட்சி ஆழப்புதைக்கப்பட்டு, சத்தியமூர்த்தியின் ஆசை நிறைவேறியிருக்கும் என்ற வரலாற்று உண்மையையும் கூறியிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் சுயமரியாதைக்காரர்களின் தலையிலே இறக்கப்பட்டது என்றும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்த செலவாக்குக்கு காரணம் சுயமரியாதை இயக்கமே என்றும் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்கவேண்டியதாயிற்று. அறவே அழியும் நிலையிலிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிய பெரியார், ‘விடுதலை’ ஏட்டையும் பொறுப்பேற்று நடத்தினார்.

ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ கடைசியாக வெளிவந்தது 29.05.1937 அன்றுதான்.

‘விடுதலை’ ஏட்டை பெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றினார். 01.07.1937 முதல் விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. பெரியார் பொறுப்பில் விடுதலை வந்தபின் அதன் ஆசிரியராக பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை பொறுப்பேற்றார். வெளியிடுபவராக ஈ.வெ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டில் வருணாசிரம தர்மத்திற்கும், முதலாளிகள் ஆட்சிக்கு எதிராகப் பத்திரிகை நடத்துவது கஷ்டமும், நஷ்டமும், தொல்லையுமான காரியமாகும் என்ற கசப்பான  உண்மையையும் பெரியார் சரியாகக் கூறினார்.

விடுதலைப் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை அரசு விரோதம், வகுப்பு துவேஷம் ஊட்டுகின்றன என்று கூறி வழக்குத் தொடுத்து,  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பண்டித முத்துசாமி பிள்ளையும் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

09.01.1939 அன்று பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று 13.02.1942 வரை பணியாற்றினார். 14.02.1942 முதல் 18.09.1943 வரை ‘விடுதலை’யின் ஆசிரியராக என்.கரிவரதசாமி பணியாற்றினார்.

18.09.1943 இதழோடு ‘விடுதலை’ நிறுத்தப்பட்டு யுத்தப் பிரச்சார ஏடாக வெளிவந்தது. 19.09.1943 முதல் 05.06.1966 வரை ‘விடுதலை’ பெரியார் பொறுப்பில் இல்லை. அக்காலகட்டத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ‘‘புது விடுதலை’’ என்ற பெயரில் வந்தது.

தனக்கு நெருக்கடி தந்த அரசாங்கத்திற்கு போர்க் காலம் என்பதால் அரசுக்கு துணை நிற்றல் என்ற அடிப்படையில் பெரியார் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். பத்திரிகை முழுக்க போர்ச் செய்திகளே அச்சிடப்பட்டிருந்தன. அப்போது சீர்திருத்த எழுத்தும் தவிர்க்கப்பட்டது.

1943 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ‘விடுதலை’ இதழ்கள் பெரியார் பொறுப்பில் இல்லை. அதுபோல் 1944 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டு காலமும் அவர் பொறுப்பில் ‘விடுதலை’ வெளிவந்தது. கே.ஏ. மணி(மணியம்மையார்) 07.06.1946 முதல் 06.09.1949 வரை விடுதலை ஆசிரியராகப் பொறுப்பில்  இருந்தார். 1949 செப்டம்பர் 7ஆம் தேதி கே.ஏ.மணி என்னும் பெயர் ஈ.வெ.ரா.மணியம்மை என்று மாற்றப்பட்டு இதழ் வெளிவந்தது. (பெரியார் மணியம்மையார் திருமணம் 09.07.1949ல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

07.09.1949 முதல் 16.03.1978 வரை ஈ.வெ.ரா. மணியம்மை அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் அதிகார பூர்வ ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு ‘விடுதலை’ இதழுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இவ்வளவு தொகை கேட்கப்படவில்லை என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆரிய பார்ப்பனர்கள், எப்படியாவது விடுதலையை முடக்கி, அதன் பிரச்சாரத்தை, அதன்மூலம் மக்கள் பெறும் விழிப்பைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே, அரசின் மூலம் இச்செயலைச் செய்தனர்.

அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தங்கள் கருத்துகளை ‘விடுதலை’யில் எழுதி மக்களைக் கவர்ந்தனர், விழிப்பூட்டி எழுச்சிபெறச் செய்தனர்.

அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் தி.மு.க. தொடங்கப்பட்டபின், குத்தூசி குருசாமி நிருவாக ஆசிரியராக ‘விடுதலை’யில் சிறப்பாக எழுதி வந்தார். குத்தூசி குருசாமி தந்தை பெரியாருடன் முரண்பட்டு நின்றதால் விலக்கப்பட்டார்.

அந்நிலையில் விடுதலையைத் தொடர்ந்து நடத்துவதில் சரியான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி பெரியாருக்கு ஏற்பட்டது. அச்சூழலில் பெரியார் தேர்வு செய்தது. கடலூரில்  வழக்கறிஞராகப் பணியாற்றிய கி.வீரமணியவர்களைத்தான்.

பெரியாரின் அன்புக் கட்டளையை ஏற்று கி.வீரமணியவர்கள் 21.08.1962 முதல் ‘விடுதலை’க்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் ‘விடுதலை’ தொடர்ந்து வெளிவர துணை நின்றார்.

மணியம்மையார் மறைவிற்குப்பின் ‘விடுதலை’யின் முழுப் பொறுப்பையும் ஏற்று, விடுதலையை விரிவாக்கி, சந்தாக்களைப் பெருக்கி, திருச்சியிலும் ஒரு பதிப்பை உருவாக்கி சிறப்புடன் நடத்தி வருகிறார். ‘விடுதலை’ தமிழக வரலாற்றில் பல சாதனைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

‘விடுதலை’ பற்றி அண்ணா

‘‘கீழ்த்தர ஜாதியாய் – நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் – உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் – பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டுவிட்டாய் – கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் – அரசியலிலோ, பிறதுறைகளிலோ கேவலம்  கீழ்த்தர சிப்பந்தியாய்ச் சீர்க்குலைக்கப்பட்டுவிட்டாய்’ என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியும் வாழக்கைத்துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது’’ என்று ‘விடுதலை’யின் அளப்பரிய பணியைக் கூறினார்.

கலைஞர் கருத்து

‘‘‘விடுதலை’ என் வழிகாட்டி, திசைகாட்டி, ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் தவறாது படித்து என்னை நான் சீர்செய்து கொள்கிறேன்; நேர் செய்து கொள்கிறேன் என்று ‘விடுதலை’யைப் பெருமையாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

சமூகநீதி, இடஒதுக்கீடு, ஆட்சியாளர்களை நெறிப்படுத்தல், போராட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’ ஏட்டின் பங்கு இணையற்றது.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதில் இவ்வேடு வரலாற்று சாதனை செய்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அரசுக்கும், மக்களுக்கும், அலுவலர்களுக்கும், தொண்டு பணி செய்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தேவையான கருத்துகளை அறிக்கையாக எழுதி வழிநடத்துகின்ற, தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற பணியை ‘விடுதலை’ செய்து வருகிறது. தொலைக்காட்சிகளின் அன்றாட விவாதங்களின் கருப்பொருளை ‘விடுதலை’யே வழங்குகிறது என்றால் அது மிகையன்று.

இத்தகு சிறப்புக்குரிய பழைய ‘குடிஅரசு’ ஏட்டையும் ‘விடுதலை’ ஏட்டையும் இன்றைய தலைமுறை படிப்பதோடு, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘The
Modern Rationalist’ போன்ற ஏடுகளைத் தவறராது படித்து, விழிப்பும், தெளிவும் பெற்று, கல்வி, சமூக நீதி, சமத்துவம், சமஉரிமை பெற வேண்டும், அனைவரும் பெறத்தொண்டாற்ற வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே காப்பாற்றப்பட,  இந்திய மக்கள் உரிமையும் உயர்வும் பெற அதுவே வழி! சுயமரியாதைச் சுடரொளிதான் இந்தியா எங்கும் வெளிச்சமும், விழிப்பும் தருகிறது என்பதே இன்றைய யதார்த்த நிலை! தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம்! .

- உண்மை இதழ், 1-15.7.25

செவ்வாய், 3 ஜூன், 2025

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)

 Published May 27, 2025

விடுதலை நாளேடு

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)
எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! – தந்தை பெரியார்

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக் கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தி யானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– “விடுதலை” நாளேடு 11-07-1953

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

 Published May 28, 2025

விடுதலை நாளேடு

சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம்

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது பாரம்பரிய சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் நடந்தது. அந்த நிகழ்வில் ஒரே மேடையில் மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

ஊர் எல்லையிலிருந்து மாபெரும் வரவேற்புடன் தந்தை பெரியாரும், தலைவர்களும் ஊர்வலமாக 3 கி.மீ. வரை அழைத்து வரப்பட்டனர்.

விழா மேடையில் மணமகன் – மண மகள்கள் மேடைக்கு வந்த தலைவர்களை வணங்கினர். மணமக்கள் கதராடை அணிந்திருந்தனர்.

ஆடம்பரமான ஆடையோ, அணிகலன்களோ கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் உறுதிமொழி கூற, மணமக்களும் உறுதி மொழியேற்று மாலை மாற்றி கொண்டனர்.

அப்போது, “சுயமரியாதை வெல்க! வைக்கம் வீரர் வாழ்க!!” என்ற முழக்கங்கள் கிராமத்தையே அதிரவைத்தன.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று முதல் முறையாக மூன்று சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

மதச்சடங்கு திருமணங்கள் பெரும்பாலும் ஜாதியப் பாகுபாட்டோடு இழிவுபடுத்தும் நிலையிலும் நடத்தப் பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இப்படியாக 28-5-1928 வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறிப் போயிற்று. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. கெடு வாய்ப்பாக, அப்போ திருந்த  அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிடர் கழகத் தோழர்களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் முறை தவறி (Illegitimate Child) பிறந்தவர்களாக சட்டம் கருதியது.

பின்னாளில், 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1967 (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967) நிறைவேற்றப்பட்டது. இது 1968 ஜனவரி 20 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

உலகமெங்கிலும் இன்றளவும் பல்வேறு வகைகளில் திருமண முறைகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏதாவது ஒரு மதச்சடங்கு அல்லது அச்சமூகத்திற்கான அடையாளமாக ஏதாவது ஒரு சடங்கு நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக இணையர்கள் உறுதிமொழி ஏற்க புரட்சிகர சுயமரியாதைத் திருமணம் நடத்திய தந்தை பெரியார் மனிதகுலத்திற்கு மேலும் ஒரு நவீன பாதையினை அமைத்துகொடுத்த நாள் இன்று.

சனி, 24 மே, 2025

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

 

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

இந்துக்கள் தெருவில் நடப்பது கூட

இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்
சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்ஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபசுவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது.

இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போராட்டம் போன்று சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பன போலீசு சுப்பிரண்டின் அடக்குமுறை வெறியாட்டம்
இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவ துடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த மனிதனும் பொறுத்துக் கொள்வானா?
இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர் களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி எது?
ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம்.
இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப் பட்டதாகும். அவ்வாக் குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.06.1930

செவ்வாய், 20 மே, 2025

1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம் - ‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள் முகப்பு அட்டை அமைப்பு

 1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில்

அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

கைவல்யம்
எஸ்.என்.எஸ்.சுந்தரம்
திருப்பத்தூர் வே.நாகலிங்கம்
சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி
என்.வி.நடராஜன்
மயில்வாகனனார்
ஜி.நாராயணன்
அருப்புக்கோட்டை எம்.எம்.சீனிப்பாண்டியன்
பள்ளத்தூர் சிதம்பரம்
அனுப்பப்பட்டி பி.ஆர்.சின்னகிருஷ்ணசாமி
கொந்தங்குடி ரா.ரத்தினசாமி
டபிள்யூ.எப்.தாமஸ் அபிராமன்
சிறுகுடி செ.ராமலிங்கம்
திருமங்கலம் மணிமாறன்
சித்தார்க்காடு கே.இராமையா
டாக்டர் சி.வா.பாலகிருஷ்ணன்
பி.மீனாட்சி
ஏ.ராதாம்மாள் ஆனந்தன்
ஏ.ஆர்.சிவானந்தம்
விருதை விதுரன்
தி.டி.கோபால்
எஸ்.லட்சுமிரதன்பாரதி
பட்டுக்கேட்டை கே.வி.அழகிரிசாமி
சிதம்பரம் பி.கே.நடேசன்
டி.ஆர்.வரதன்
நாகை காளியப்பன்
பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம்
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்
டி.என்.ஆர்.சந்திரன் (டி.என்.இராமச்சந்திரன்)
ம. சிங்காரவேலு
ஏ. சோமசுந்தரன்
டி.ஜி.வெங்கடாச்சலம்
பண்டிதர் திருஞானசம்பந்தர்
நாகை முருகேசன்
கொழும்பு சதாசிவம்
முத்துப்பேட்டை எம்.என்.கோவிந்தசாமி
இந்திராணி பாலசுப்ரமணியம்
கே.ஆர்.சுவாமி
சிவகாமி சிதம்பரனார்
டாக்டர் ஆர்.பி.பராஞ்சிபே
கே.எஸ்.டி.முத்துசாமி
பட்டுக்கோட்டை கோ.சண்முகம்
விருதுநகர் தோழர் சி.ச.சுப்பையா
ராஜரத்தினம் பிள்ளை
பட்டுக்கோட்டை தோழர் எம்.ராஜமாணிக்கம்
செய்கோன் தோழர் எம்.ராஜமாணிக்கம்
டாக்டர் அம்பேத்கர்
ஈ.வெ.நாயர் எம்.ஏ.எல்.எல்.பி.
என்.பி.கிருஷ்ணன்
தோழர் வைசு.ஷண்முகம்
எம்.ஏசுதாஸ்
தோழர் ராபின்
ஆர்.பி.நாதன்
தோழர் டி.கே.எம்.சாமி
தி.ராஜன்
உடுமலை கனகராஜன்
பச்சையப்பன்
எம்.என்.நாயர்
அருப்புக்கோட்டை வீர சு.பு.வீரய்யா
சென்னை என்.வி.நடராஜன்
ஈரோடு பி.வேலாயுதன்
டாக்டர் சி.ஆர்.ரெட்டி
சென்னை எஸ்.ரங்கநாதன்
தி.வே.அ.
பட்டுக்கோட்டை எஸ்.சோமசுந்தரம்
துறையூர் எஸ்.தனபாக்கியம்
திவான்பகதூர் ஆர்.சீனிவாசன்
சர்.ஷண்முகம்
தோழர் எஸ்.எம்.ராமையா
குமணன்
சிவானந்த அடிகள்
தோழர் கே.நாராயணம்மா
சிங்கை நேசன்
பள்ளத்தூர் எம்.அருணாசலம்
எம்.சி.ராஜன்
தோழர் அ.பொன்னம்பலம்
தோழர் செல்லத்தாயம்மாள்
சேலம் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி
நாகை தோழர் பி.அம்மைநாதன்
சிறீவில்லிபுத்தூர் ஞா.பி.ஞானதேசிகம்
குடியேற்றம் மு.அண்ணல் தங்கோ
தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார்
ஈரோடு வாணன்
மு.த.வேலாயுதம்
மறைமலையடிகளார்
தோழர் ஆர்.பி.டேவிஸ்
திரு.சொக்கையா
பாரதிதாசன்
எம்.பி.சாமி
இளவலூர் மறைமணி
சடகோபால்
புதுவை எஸ்.சிவபிரகாசம்
கூச்சூர் குழந்தை
பொன்னாகரம் வி.எஸ்.நடேசன்
புதுவை சாமி சித்தானந்த பாரதியார்
சந்தமல்லி அ.சிதம்பரநாத பாவலர்
நஞ்சையா
குஞ்சிதம்
கலிபுல்லா பி.தலைவர்
சி.என்.அண்ணாதுரை
உமா மகேசுவரம் பிள்ளை
போளுர் வி.சுப்பராயன்
எஸ்.ஏ.கே.உபயதுல்லா
அகதி ராயன்
எஸ்.கே.சிசுபாரதி
கே.எம்.பாலசுப்பிரமணியம்
பி.நடராஜன் எம்.ஏ.
சர்.கே.என்.ரெட்டி
சவுந்திரபாண்டியன்
இரண்ணியதாசன்
தோழர் பி.சிதம்பரம்
ராஜம்மாள்
திருவந்திபுரம் கே.கோவிந்தன்
தி.பொ.வேதாசலம்
வித்துவான் ஏ.எம்.குழந்தை
அட்வகேட் சுயம்பிரகாசம்
டி.எஸ்.ஸ்ரீனிவாசன்
பு.துரைராஜ்
ஹேரிகிலமெண்ட்ஸ்
ஆம்பூர் தோழர் கோ.ஜெயராமுது
எம்.என்.முத்துக்குமாரசாமி பாவலர்
பல்லடம் எம்.பொன்னுச்சாமி
தோழர் நானப்ப முதலியார்
சென்னை டி.தேவராஜன்
குகன்
கோவை எம்.ஏ.ரஹ்மான்
அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி
சர்.பன்னீர்செல்வம்
ம.சிங்காரவேலு
கோவை கே.எம்.ஹனீப்
ஜெ.க.வேலன்
எஸ்.க.முஹம்மத் ஹனீப் சாகப்
தோழர் எஸ்.ஜி.ரங்கராமானுஜன்
செ.ராமலிங்கம்
தோழர் காமத்
எஸ்.கே.பி.முத்துராஜா
பி.எம்.அப்துல் மஜீது
சந்தனாபுரம் எபிநேசன்
வைகோன் புரோவேன்ஸியலான்
ஸ்டாலின் ஜெகதீசன்
கோலாலம்பூர் க.ராஜகோபால்
கணேசபுரம் முருகோன்
பம்பாய் என்.சிவபாண்டியன்
சிங்கப்பூர் வி.எம்.முத்து
வி.பிச்சையன்
பூவை. அ.க.நவநீதகிருட்டிணன்
ஆசன் பொறையார்
கோவை கே.எஸ்.முஹம்மன் ஹுசைன்
ஏ.எம்.அஸ்லீம்
எ.எம்.யூசுப் மரைக்காயர்
டி.பி.வேலாயுதசாமி
கோவைக்குடியான்
ஜே.க.வேலன்
க. அய்யலிங்கம்
எஸ்.இக்நட்டோல்
உடுமலை பி.ரங்கநாத நாயுடு
கே.டி.ஆர்.

இது குறித்த 16. 7.1933 தேதியிட்ட குடிஅரசு ஏட்டில் வெளியான செய்தி

‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்

முகப்பு அட்டை அமைப்பு

(அ) அட்டைப்பட விளக்கம்:  துவக்கத்தி லிருந்து 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) வெளிவந்த இதழ்களில் காணும் அட்டைப் படத்தின் முகப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.

பாரதமாதா, ஏர் உழவன், நூல் நூற்கும் பெண், தச்சுத் தொழிலாளி,

மூட்டை சுமப்பவர், நெசவாளி, தேர் இழுத்து வரும் கூட்டம், தேர்ச் சக்கரத்தில் சிலர் நீண்ட கிட்டிபோட்டு தள்ளுதல், கிருஸ்துவக் கோயில், இந்துக் கோயில், முஸ்லீம் பிறை, ஓமகுண்டம் எரிதல், புத்தர், நீர்நிலை அருகில் ஆடுமாடுகள் நிற்றல், கரும்பு சோளம், கம்பு, நெல், கோதுமை முதலிய பயிர்கள் கதிர்களுடன் காணப்படுதல்.

18.12.1927 இதழுக்குப் பிறகு அட்டையில் படங்கள் இடம்பெறவில்லை.

ஆ) ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில் 18.4.1926 முதல் (மாலை 1: மலர் 47) 13.11.1927 இதழ் (மாலை 3:  மலர் 29) வரை காணப்படுகின்றன.

இ) ‘கதர் வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில், 20.11.1927 (மாலை 3:  மலர் 30) முதல் 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) காணப் படுகின்றன.

ஈ) தமிழ் ஆண்டுக் கணக்கு, இதழின் துவக்க காலம் முதல் 08.04.1944 (மாலை 17:  மலர் 26) வரை அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது.

உ)   இதழின் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் துவக்கம் முதல் 02.06.1929 வரை (மாலை 5:  மலர் 5)  இடப்பட்டு வந்தன.  அதற்குப் பின்னர் பக்கங்களுக்கு தமிழ் எண்கள்  குறிப்பது கைவிடப்பட்டது.

ஊ) நாயக்கர் பட்டம்:  இதழின் ஆரம்பம் முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) அட்டையில், ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன்பின் ‘நாயக்கர்’ என்ற ஜாதிப் பட்டம் விடப்பட்டுள்ளது.

எ) திருக்குறள்:  இதழின் அட்டையில்,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்,’ (972) என்ற குறளும்,

‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355) என்ற குறளும்,

‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) என்ற குறளும்,

13.01.1935 இதழ் முதல் (மாலை 9:  மலர் 23) 29.12.1940 வரை (மாலை 16:  மலர் 20) காணப்படுகின்றன.

அத்துடன் 27.12.1947 முதல் 03.04.1948 வரை அவ்வப்போது தலையங்கத்திற்கு மேல்

‘மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்’ (278)     (24.01.1948),

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்’ (611)    (14.02.1948),

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று’ (890)      (21.02.1948),

‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு’ (735) (28.02.1948),

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு’ (766) (03.04.1948)

ஆகிய திருக்குறள்கள் காணப்படுகின்றன.

ஏ.  பாரதியார்பாடல்:  துவக்கத்தில் (02.05.1925)  “எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஓர் குலம்”, “சாதிகள் இல்லையடி பாப்பா” ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் பல இதழ்களில் “எல்லோருமோர்குலம் எல்லோருமோர் இனம்”, என்ற பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது.  பாரதியார் பாடல் 25.10.1925 வரை காணப்படுகிறது.