வியாழன், 21 டிசம்பர், 2017

ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை

28.4.1929- குடிஅரசிலிருந்து...
வழக்கு விசாரணை

22.4.29 தேதியில் ஈரோடு, ஸ்டேஷனிரி சப் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பகல் 12.30 மணிக்கு ஆலயப் பிரவேச வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாதிகள் சார்பில் பிராஸிகியூட்டிங் இன்ஸ்பெக்டரும், பிரதிவாதிகள் சார்பில் நாகை பாரிஸ்டர் கே.சி.சுப்பிரமணியம் அவர்களும் ஆஜராயிருந்தனர். கோர்ட்டினுள்ளும் வெளியிலும் ஏராளமான பொது ஜனங்கள் கூடியிருந்தனர்.

முதல் சாட்சியாக முத்துசாமிக் குருக்கள் கூறியதாவது:

நான் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு எல்லாச் சாமிகளுக்கும் கட்டளை பூஜை செய்துவிட்டு இரண்டாவது அதாவது துவரா பாலகர் கதவுக்குச் சமீபம் நின்று கொண்டிருந்தேன். முதல் பிரதி வாதியான ஈஸ்வரன் என்பவர் தம்முடன் வந்திருப்பவர்களுடன் கோயிலுக்குள் சென்று தாங்களே பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார். அப்படிச் செய்வது வழக்கமில்லை என்று சொல்லி தத்தாத்திரி குருக்களை அழைத்து கதவைப்பூட்டச் சொல்லி விட்டு நான் அம்மன் கோவில் கதவைப் பூட்டச் சென்றேன் பின்பு இருவரும் கதவுகளைப் பூட்டி விட்டு இந்த விஷயம் தெரிவிக்க தருமகர்த்தா வீட்டுக்குப் போனோம். அவர் ஊத்துக்குளிக்குப் போயிருந்தார். பறையர் சக்கிலியர், வள்ளுவர், பள்ளர் முதலியோர் கோவிலுக்குள் வரக் கூடாது. நவக்கிரகத்துக்குக் குருக்கள் தவிர வேறு யாரும் தொட்டுப் பூஜை செய்யக்கூடாது. பஞ்சமர் கோவி லுக்குள் வந்தால் அசுத்தமாகும். அவர்கள் வரக் கூடாதென்பதற்கு சட்டமில்லை ஆனால் வரும் வழக்கமில்லை. எதிரிகளைத் தெரியும் அவர்கள் தேங்காய் பழம் கொண்டு வந்திருந்தார்கள் இவர்கள் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லை.

6.4.29 இரவு 7 மணிக்கு தர்மகர்த்தாவிடம் மூவரும் விஷயத்தைச் சொல்லி கும்பாபிஷேகம் செய்தால்தான் பூஜைசெய்வோம் என்று சொன்னோம்.

இரண்டாவது குருக்கள் மேற்சொன்னபடியே சொல்லி விட்டு கூறியதாவது: கோவில் ஈரோடு, தேவஸ்தானக் கமிட்டிக்கு உட்பட்டது. தர்மகர்த்தா அதன் உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக என்னுடைய அபிப்பிராயம் - விவரமாகத் தெரியாது. கோவில் பிரவேச விஷயமாக உத்திரவு ஏதும் வந்திருப்பதாகத் தெரியாது. கோவிலில் யாரும் இலைப்போட்டு சாப்பிட்டது கிடையாது. எதிரிகள் பூஜை செய்தது அபிஷேகம் செய்தது, சாப்பிட்டது எங்கள் இருவருக்கும் தெரியாது.

குட்டமேனன் கூறியதாவது: நான் கோவில் வேலைக் காரன், அன்றைய தினம் 10, 12 பேர் கோவிலுக்குள் வந்தனர். தேங்காய் பழம் வைத்திருந்தனர். இரண்டாங்கதவு  பூட்டப்பட்டிருந்தபடியால் கதவின் முன் பக்கம் இரண்டு வரிசையாக உட்கார்ந்து புத்தகம் பார்த்துப்பாட்டுப் படித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 10 மணிக்கு மேல் பசுபதி என்பவர் நவக்கிரகமுள்ளவிடத்தில் புகுந்து சாமிக்குத் தண்ணீர் விட்டு தேங்காய் உடைத்து அங்கு பாடிக்கொண்டிருந்தவர் களுக்கு பிரசாதம் கொடுத்தார். பிறகு 7, 8 பேருக்குப் போதிய சாதம் வந்தது. அவர்கள் அவ்விடத்தி லேயே இலைபோட்டுச் சாப்பிட்டார்கள். அங்கேயே கை அலம்பி னார்கள், சிகரெட்டு, பீடிகளை அங்கேயே பிடித்தார்கள். பிறகு விடியற்காலம் 4 மணிக்கு காவேரிக்கு ஸ்நானம் செய்யப் போய்விட்டார்கள்.

தருமகர்த்தா ப.முத்து நாயக்கர் கூறியதாவது: நான் இருபது வருடமாக தருமகர்த்தா வேலை பார்க்கிறேன். இந்தச் செய்கை நடந்த 4ஆம் தேதி ஊத்துக்குளி போயிருந் தேன். 6ஆம் தேதி இரவு 8 மணிக்கு வந்தேன். தத்தாத்திரி குருக்கள் முத்துசாமி ஆகிய இருவரும் வந்து விஷயந்தெரிவித்தார்கள். நான் போலீசாருக்கு ரிப்போர்ட்டுச் செய்தேன். வழக்கு 1..5.29 ஆம் தேதி வாய்தா போடப்பட்டிருக்கிறது.

- ஒரு நிருபர் 

இந்துக்களின் கோவில் பிரவேசம்

7.4.1929- குடிஅரசிலிருந்து...

ஈரோடு தேவஸ்தான கமிட்டியாரின் 30.3.1929 தேதி தீர்மானப்படி ஈரோடு டவுனிலுள்ள சிவன் கோவிலுக்குள் சில இந்துக்கள் (அதாவது வள்ளுவப் பண்டாரம் என்பவர்கள்) 4.4.1929 தேதியில் சுத்தமாகவும் மதச்சின்னங் களுடனும் கற்பூரம், தேங்காய் பழத்துடனும், கடவுளை வணங்கசென்றபோது குருக்கள் மூலவிக்கிரக அறைக் கதவைப் பூட்டிவிட்டுப் போய் விட்டாராம், வணங்கப் போனவர்கள் வெகுநேரம் காத்திருந்தும் வராததால் வெளியில் உள்ள சாமிகளை பூஜைசெய்து கும்பிட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

பிறகு குருக்கள்கள் சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கோவில்களுடைய வெளிக்கதவுகளையும் பூட்டி விட் டார்கள்.

உள்ளூர்ப் பொது ஜனங்கள் கமிட்டியார் தீர்மானத் திற்கு ஆதரவாய் இருக்கின்றார்கள் கோவில் நிருவாகிகள் நியாயமாய் நடந்து கொள்ளாவிட்டால் வணங்கப் பிரிய முள்ளவர்கள் பலாத்காரமில்லாதாக சத்தியாக்கிரகம் செய் வதைத்தவிர வேறுவழியில்லை என்று கருதி இருக்கின் றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

ஆதலால் கோவில் நிருவாகிக சத்தியாக்கிரகம் செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டுவந்து விடாமல் தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுமாறு வேண்டு கிறோம்.

ஆலயப் பிரவேச உரிமை
ஈ.வெ.ராமசாமி சொற்பொழிவு
1936- குடிஅரசிலிருந்து...



என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க்காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங் களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.

எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அத னாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 15 - 20 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட  காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப் பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர் களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனே கருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.

ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக் கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.

கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர் களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சல் செய்ய வேண்டிய தாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப் புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன் (31.3.1929). காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய் தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள்.  திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்ட வர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர் களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடையே செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிக மாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடையே என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத் தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகா ராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக் கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். 
- விடுதலை நாளேடு, 16.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக