நேயன்
கோயில்களில், தாழ்த்தப்பட்டோர், நாடார் உள்ளிட்ட சூத்திர மக்கள் செல்ல முடியாத நிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது. கோயில் கொடிமரம் வரை மட்டும் சில ஜாதி மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேல் அவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கோயில் மதில் சுவருக்கு வெளியே நின்று தரிசிக்க சில ஜாதியினருக்கு அனுமதி. சில ஜாதியினர் கோயில் இருக்கும் தெருக்களில் செல்லக்கூட அனுமதியில்லை.
கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவதற்குக்கூட இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் செலுத்தும் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலமே செலுத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட நிலை மாறி இன்று எல்லோரும் கோயிலுக்குள் செல்லும் நிலை உடனே வந்துவிடவில்லை. அதற்கு காலங்காலமாகப் பல்வேறு முயற்சிகள், போராட்டங்கள் நடத்தியே படிப்படியாக கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறப்பட்டது.
கோயில் நுழைவுப் போராட்ட வரலாறு
நாடார்கள்களின் கோயில் நுழைவுப் போராட்டம்
திருச்செந்தூர் கோயிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை---கோயிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோயில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோயில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
சுயமரியதை இயக்கத்தின் கோயில் நுழைவுப் போராட்டங்கள்
• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926இல் கோயில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோயிலில்தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.
• முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். இவர் 07.02.1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6.5.1928)
-உண்மை இதழ், 16-31.10.20
நேயன்
சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுப் போராட்டங்கள்
• 1927ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள்.
• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிருவாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினார்.
• 25.06.1928இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12.08.1928இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.
• தந்தை பெரியார் 1922ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு -பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.
• 1929 மார்ச் 12ஆம் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்’’ என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தை பெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசி குருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசி குருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.
இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்ட மறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப் பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.
ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும், தலைச்சேரியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள் ‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.
ஏடுகள் தரும் செய்திகள்!
சிதம்பரத்தில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழைந்து விடுவார்களென்று தீட்சிதர்கள் நடுக்கம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக போலிஸ் படையையும் வைத்திருக்கிறார்களாம். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. தீட்சிதர்களுக்கு நுழைய எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமையும் ஆதிதிராவிடருக்கும் உண்டு என்று திராவிடன் ஏடு எழுதியது. (“திராவிடன்” 16.12.1929 பாகம் 4, பக்கம் 1)
ஜாதி எனும் சண்டாளப் பேயை கொல்லுவதற்காக நடைபெறப் போகும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரவேச இயக்கத்தில் கலந்துகொள்ள துறையூரிலிருந்து சுமார் 500 ஆதிதிராவிடர் வரை கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்கள் என்று “திராவிடன்” ஏடு செய்தியை வெளியிட்டது. (“திராவிடன்” 25.12.1929 பாகம் 3, பக்கம் 2)
ஈரோட்டில் சர்க்கிள் தேவஸ்தானம் கமிட்டியின் தீர்மானத்திற்கு 4ஆம் தேதி காலையில் கருப்பர், தேசியன், சாளி, வெங்கடாசலப் பண்டிதர், கலியப் பண்டிதர் ஆகியோர், ஈஸ்வரன், மாயவரம் நடராசன், ராவணன், பொன்னம்பலனார், நித்தியானந்தம், குருசாமி ஆகியோர் தலைமையில் இதுவரை பஞ்சமர் அனுமதிக்கப்படாத இடம்வரை சென்று முதல் வாசற்படியருகில் பாட்டுகள் பாடிக்கொண்டு சென்றபோது அர்ச்சகர் முதலாவது வாயிற்படியை மூடிவிட்டான் மறுநாளும் கோயில் கதவுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் ஏமாறித் திரும்பினர் இவ்வாறு “திராவிடன்” ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (“திராவிடன்” 1929)
(தொடரும்......)
-உண்மை இதழ், 1-15.11.20
நேயன்
சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததினால் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது என ‘திராவிடன்’ -19.5.1930 செய்தி வெளியிட்டது.
ஆடி அமாவாசையன்று சுமார் 100 நாடார்களும், ஹரிஜனங்களும் கிழக்குக் கோபுரத்தின் வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழைய எத்தனித்ததாகவும் சனாதனிகளும் சேர்வைக்காரர்களும் தடுத்துவிட்டதாகவும், பகல் பூஜைகள் வழக்கத்துக்கு முன்னதாகவே நடத்தப்பட்டு, கோயில் கதவுகள் பூட்டப்பட்டு விட்டனவாம். ஆக, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அறிவதோடு, அந்தப் போராட்டங்கள் பெரிதும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் தொண்டர்களாலேதான் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பெரிய கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் செல்ல தற்போது தடையில்லை என்றாலும், கிராமப்புறக் கோயில்களில் தாழ்த்தப் பட்டோருக்கான தடையும், அதை யொட்டிய தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது கசப்பான உண்மை என ‘விடுதலை’ 16.8.1939 நாளிதழில் செய்தி வெளியிட்டது.
ஸ்ரீ மீனாக்ஷி கோவில் ஆலயப் பிரவேசம்:
கோயில்களில் பூஜைசெய்யும் பட்டர்கள் நிலை ஒரே நிலையில் இல்லாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியார் அதிகாரிகள் உத்தரவுப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசத்தை ஒப்புக்கொள்ளலாம் என்றும், மற்றொரு கட்சியார், எவர் எவ்விதம் உத்தரவிடினும் தாங்கள், தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பதில்லை என்றும், ஒருகால் பெருந்திரளாக மக்கள் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால் ஸ்வாமி இருக்கும் மூலஸ்தானத்தைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்துவிடுவதென்றும் தீர்மானம் கொண்டிருப்பதாய்த் தெரிகிறது.
கோயிலுக்குச் சென்ற மூவரை கோயில் சிப்பந்திகள் யார், எந்த ஊர் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் நீ யார் என்று கேட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது என ‘திராவிடன்’ (26.9.1932 பக்கம் - 11) நாளிதழில் செய்தி வெளியிட்டது.
‘தினத்தந்தி’ நாளிதழ் மதுரை வைத்தியநாத அய்யரைப் பற்றிய கட்டுரையொன்றை 8.7.2014 அன்று வெளியிட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களையும் நாடார்களையும் அழைத்துக் கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன் 8.7.1939லேயே முதன்முறையாக ஆலயப் பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டுகிறது.
சென்னைச் சட்டமன்றத்தில் 01.11.1932இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30.10.1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!
யார் இந்த வைத்தியநாத அய்யர்? இவருடைய நோக்கம் என்ன? எந்தச் சூழ்நிலையில் இவர் கோயில் நுழைவுக் கிளர்ச்சி செய்கிறார்? எந்த வகையில் அந்தக் கோயில் நுழைவு நடைபெறுகிறது? அதற்கு முன்னும் பின்னும் அவருடைய செயல்பாடுகள் என்ன? என்பதை அறிந்து கொண்டால் பார்ப்பனர்களால் தாங்கிப் பிடிக்கப்படும் வைத்தியநாத அய்யரின் முகமூடி கிழிந்து விடும்.
“நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கோயில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு விரோதமான சாத்திரங்களையும் _ பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்’’ என்று தந்தை பெரியாரால் 1922ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மாநாட்டில் மேற்கண்ட தீர்மானத்தைக் கொண்டுவர விடாமல் பல பார்ப்பனர்கள் தகராறு செய்தனர். அதையும் சமாளித்து திரு.வி.க. முன்மொழிய, தந்தை பெரியார் வழிமொழிந்தார். அந்தத் தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்தியநாத அய்யர், கும்பகோணம் பந்தலு அய்யர் ஆகியோர் கூச்சல் போட்டு, குழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல், அத்தீர்மானத்தின் சாரமான கோயில் நுழைவு உரிமையின் உயிர்நாடியை அழித்து விட்டனர். 1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராகக் கூப்பாடு போட்ட மதுரை வைத்தியாத அய்யர்தான் கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத் திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாற்றுவதை மறைத்துவிட்டு, மனுதருமவாதிகள் அவரை ‘அரிசனத் தந்தை’ என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள்.
1922ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939ஆம் ஆண்டு மதுரை கோயிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரை அந்தப் போராட்டம் நடத்தத் தூண்டிய காரணி எது?
17 ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதையே தன் வாழ்நாளில் முக்கியப் பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை. தீண்டாமையை ஒழித்து, ஏற்றத்தாழ்வை அழித்து எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைத்திட அவர் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை.
தீண்டாமைக்கு எதிராக அவர் போர் தொடுத்தார் என்பது உண்மையானால், தீண்டாமைக்குக் காரணமான ஜாதியையும், ஜாதியை உருவாக்கிய இந்து மதத்தையும் சேர்த்து அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்? அப்படி அவர் ஜாதியையும், இந்து மதத்தையும் எதிர்த்து இயக்கம் எதுவும் நடத்தவில்லை. நடத்தியதாக, அவர் புகழ்பாடும் கட்டுரையாளர்கள் யாரும் கூறவில்லை. ஆக, வைத்தியநாத அய்யர் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த அவருக்குத் தூண்டுகோலாக இருந்தது தீண்டாமைக் கொடுமை அல்ல என்பது உறுதியாகிறது.
வரலாற்றுப் பக்கங்களில்...
அப்படியானால், அவருடைய போராட்டம் நடக்கக் காரணமாக இருந்தது எது? எந்த இலாபத்தை எதிர்பார்த்து அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்? என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுபற்றிய மேலும் விவரத்தை வரலாற்று ஆய்வாளர்களின் மேற்கோள்களுடன் அறிந்து கொண்டால் வைத்தியநாத அய்யரின் பித்தலாட்டத்தனமான அரிசன சேவையைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்.....)
- உண்மை இதழ், 16-30.11.20
நேயன்
எஸ்.வி.இராசதுரை ஆய்வில்...
முதலில் எஸ்.வி.இராசதுரை அவர்கள், “பெரியார் மரபும் திரிபும்’’ என்னும் நூலில் “சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவு, கருவறை நுழைவுப் போராட்டங்கள்’’ என்னும் தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றிக் கூறியிருப்பதைப் பார்ப்போம்.
“அப்போது நடக்கவிருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் பெரும் ஆரவாரமிக்க அங்கீகாரம், ராஜாஜியிலிருந்து காந்திவரை தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் - பெரியாரால் ‘குள்ளநரி’ என்று அழைக்கப்பட்டவர், மதுரை ஏ.வைத்திய நாதய்யர். தாழ்த்தப்பட்டோருக்கு கோயில் நுழைவு உரிமை என்பதை 1922இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதை ‘திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு’களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இனாம் குடிகளின் உரிமையையும், இனாம்தாரி, ஜமீன்தாரி ஒழிப்பையும் எதிர்த்தவரும் இவர்தான். மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்தியநாதய்யர் நடத்தி வைத்த ‘நுழைவும்’ கூட அப்போது அக்கோயில் நிருவாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான். (‘குடிஅரசு’ 16.07.1939, ‘நகரதூதன்’ 16.07.1939)
வைத்தியநாத அய்யரின் ‘கோயில் நுழைவுப் போராட்டத்தை’ அடுத்து, 1937_1939ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சி.இராசகோபாலாச்சாரியின் (இராஜாஜி) அரசாங்கம், ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றியதாகவும் ஒரு பொய்ப் பிரசாரம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது.
ஆனால், உண்மை என்ன? அன்றிருந்த சட்டப்படி, தாழ்த்தப்பட்டோர் கோயில்களுக்குள் நுழைவதும் அவர்களை நுழையச் செய்வதும் குற்றமாகும். மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில ‘நாடார்கள்’ போன்ற ‘சூத்திர’ ஜாதியினரும் நுழைவதற்குத் தடை இருந்தது. நாம் மேலே சுட்டிக்காட்டிய காரணங்களுக்காக வைத்தியநாத அய்யர் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டத்திற்குப் பிறகு, தஞ்சைக் கோயில் உள்ளிட்ட வேறுசில முக்கியக் கோயில்களிலும் வழிபாட்டிற்காகத் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதி தரப்பட்டது. எனவே, ஆலயங்களில் நுழைந்தோரையும், நுழைய விட்டோரையும் சட்டத்திலிருந்து பாதுகாக்க, அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் எர்ஸ்கின் பிரபுவை ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கச் செய்தார் இராஜாஜி. மேலே சொன்ன குற்றத்தைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவதுதான் அச்சட்டம். பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கும் வைசிராய்க்கும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்று முழங்கிய பின்னர் 1937இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காங்கிரசு அரசாங்கம் பல்வேறு நோக்கங்களுக்கு அவசரச் சட்டங்களை இயற்றச் செய்தது. (‘தினமணி’ 12.04.1939: எஸ்.வி.ஆர்., 315_316). இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி - வைத்தியநாத அய்யர் ‘ஆலயப் பிரவேசப் போராட்டம்’ நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பு (1938-இல்), சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் தலைவர் எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலய நுழைவு மசோதா நிறைவேறாதபடி செய்த பெருமையும் ஆச்சாரியாருக்கு உண்டு.’’
தொ.பரமசிவன் ஆய்வில்...
அடுத்து, முனைவர் தொ.பரமசிவன் அவர்கள், “தெய்வங்களும் சமூக மரபுகளும்’’ என்னும் நூலில் “1939 _ மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம்’’ என்னும் தலைப்பில் அன்றைய அரசியல் சூழலில் காங்கிரசு தனிமைப்பட்டுப் போயிருந்ததை விளக்கி மேற்கண்ட போராட்டத்திற்கான அவசியத்தைத் தெளிவாகத் கூறியுள்ளார். அதில், 1939 அய் ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவுமில்லை, திரண்டெழுந்து போராடவுமில்லை. அந்த நிலையில் மதுரை வைத்தியநாத அய்யர் இந்தப் பிரச்சனையை ஏன் முன்னெடுத்துச் சென்றார் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான விடை காங்கிரசு இயக்கத்தின் வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது.
காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரம்பற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் காங்கிரசு இயக்கத்தோடு ‘பூனா ஒப்பந்தத்தை’ 1932 செப்டம்பர் 15இல் செய்துகொண்டார். ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. 1933 பிப்ரவரி 4ஆம் நாள் நிகழ்ந்த காந்தியடிகள் _ அம்பேத்கர் சந்திப்பின்போது மத்தியச் சட்டசபையில் ஸ்ரீரங்க அய்யரும் தமிழகச் சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனும் கொண்டுவரவிருந்த ‘தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச மசோதா’வுக்கு ஆதரவு தருமாறு காந்தியடிகள் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார். அம்பேத்கர் அதற்கு மறுத்துவிட்டார்.
(தொடரும்)
- உண்மை இதழ், 1-15.12.20
தொ.பரமசிவன் ஆய்வில்....
கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் என்பது அம்பேத்கர் கருத்து, மறு வாரம் (1933, பிப்ரவரி 11) காந்தியடிகள் புதிதாகத் தொடங்கிய அரிஜன் இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கர் செய்தியாக அனுப்பி இருந்தார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்து கொண்டு வந்தன.
பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில், அம்பேத்கரைத் தவிர மற்ற இருவரும் தமிழ்நாட்டவர் ஆவர். ஒருவர் ராவ்பகதூர் (ரெட்டமலை) சீனிவாசன். மற்றவர் எம்.சி.ராஜா. இவர்களில் சீனிவாசன் வட்டமேசை மாநாட்டின் முதல் சுற்றில் அம்பேத்கரோடு கலந்துகொண்டவர். மிக விரைவில் பூனா ஒப்பந்தத்தைக் காங்கிரசுக்காரர்கள் நடைமுறையில் கைகழுவி விட்டனர். அரிசனர் கோயில் நுழைவைக் கடுமையாக வங்காள இந்துக்கள் எதிர்த்தனர். அதற்கு முசுலிம்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயன்றனர். 1933இல் வங்காளத்தைச் சேர்ந்த கவி இரவீந்திரநாத் தாகூர் பூனா ஒப்பந்தத்துக்கான தன் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1937 தேர்தலில் காங்கிரசு அம்பேத்கருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் அவர் வென்றார். பூனா ஒப்பந்தத்துக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு பரவலாக இருந்தது. 1932 அக்டோபரில் சென்னையில் ஜே.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு பூனா ஒப்பந்தத்தைக் கண்டித்து, அத்துடன் அம்மாநாடு கோயில் நுழைவு அவ்வளவு அவசியமல்லவென்று கருதுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. காந்தி தாழ்த்தப்பட்டோருக்கு அரிஜன் என்று பெயரிட்டு, இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்து தாழ்த்தப்பட்டோர் எழுதினர்.
மணிநீலன் (எ.முத்துக்கிருஷ்ணன்) என்பவர், காந்தி இடும் அரிசனப் பெயர் எதற்குதவும் _ அது தாழ்ந்தவரைக் கை தூக்குமோ என்று பாடல் எழுதினார். அவரெழுதிய நூலின் பெயரே காந்தி கண்டன கீதம் என்பதாகும். இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரசு இயக்கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால், முதலமைச்சர் இராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.
மதுரை வைத்தியநாத அய்யர் காங்கிரசு கட்சிக்குள் இராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே, உட்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு அவர் மதுரைக் கோயிலில் அரிசன ஆலயப் பிரவேசம் நடத்திக் காட்டினார். இராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசரச் சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாத அய்யரின் முயற்சியை வெற்றியாக்கி விட்டார்.
கோ.கேசவன் ஆய்வில்...
அடுத்ததாக, முனைவர் கோ.கேசவன் அவர்கள், கோயில் நுழைவுப் போராட்டங்கள் என்னும் நூலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றி ஆய்ந்து அறிந்து சொன்னதைப் பார்ப்போம்.
மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு நல்ல செயலைச் செய்து அதை ஈடுகட்டுவோம் என்கிற அடிப்படையில் இவை நடந்தேறியதாகக் கருதலாம். இதிலும் கூட இராசாசியின் தேர்ந்தெடுப்பு மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். கோயிலிலிருந்து ஒதுக்கப்பட்ட ஜாதிகள், ஏற்கப்பட்ட ஜாதிகள் என இரண்டு தரப்பினரும் ஒருங்கே வாழ்க்கை நடத்தும் ஊர் மதுரை. இராஜாஜி குழுவைச் சார்ந்தவரும் அரிசன சேவை சங்கத்தில் ஈடுபாடு கொண்டவருமான வைத்தியநாத அய்யரின் தலைமை... ஆர்.எஸ்.நாயுடுவின் கோயில் நிருவாகம் என இன்னோரன்ன தேர்ந்தெடுப்புகள் மிகவும் கருதத் தக்கனவாகும்.
வேடம் கலைந்தது!
முனைவர். கோ.கேசவன், முனைவர். தொ.பரமசிவன், எஸ்.வி.இராசதுரை ஆகிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோயில் நுழைவுப் போராட்ட நாடகம் அம்பலமாகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் நிருவாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ்.நாயுடு கொடுத்த முழுமையான ஒத்துழைப்பும், காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், காங்கிரசில் இராஜாஜியா? சத்தியமூர்த்தியா? என எழுந்த கோஷ்டி மோதலில் இராசாசியின் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளவும் நெருங்கி வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் ஆகியோரின் உற்ற துணைவன் காங்கிரசுதான் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவுமான பல்வேறு பின்னணிகள் அந்தப் போராட்ட நாடகத்திற்கு இருந்தது.
இப்படிப்பட்ட உள்நோக்கத்தோடுதான் வைத்தியநாத அய்யர் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மதுரை வைத்தியநாத அய்யரை கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என வானாளவப் புகழ்வது, வரலாற்று மோசடி என்பது மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. எனவே, குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தாழ்த்தப்பட்டோரின் உயிரான உரிமைப் பிரச்சனையைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி விளையாடிய, மதுரை வைத்தியநாத அய்யரை கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று கூறுவது மோசடியானது என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
(தொடரும்...)
- உண்மை இதழ், 16- 31. 12 .20
This is a very true history of our Hinduism
பதிலளிநீக்கு