வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

பகுத்தறிவு வார ஏடு

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார் அவர்கள் கடந்த 99 ஆண்டுகளுக்கு முன்பு “பகுத்தறிவு” வார இதழினை 26.8.1934இல் வெளியிட்டார். “குடிஅரசு” ஏட்டிற்கு மாற்றாக வெளியிடப்பட்ட “புரட்சி” ஏடு மூன்று முறை அரசின் அடக்கு முறைக்கு உட்பட்டு அபராதம் கட்டி தொடர்ந்து வெளிவர முடியாத நிலைக்கு சென்றது. “பகுத்தறிவு” என்னும் பேரால் அதே வடிவமைப்புடன் ஒரு வார ஏட்டினை பெரியார் வெளியிட்டார்.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் “பகுத்தறிவு” தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும் இன்றியமையாதனவாகவும் கருதப்படும்.

“எங்கும் நிறைந்த

இறைவனை” வாழ்த்தவோ

“எல்லாம் வல் மன்னனை

வாழ்த்தவோ,

“யாதினும் மேம்பட்ட

வேதியனை” வணங்கவோ

“ஏதும் செய்ய வல்ல செல்வவானை”

வாழிய செப்பவோ கருதி அல்ல” வென்பதேயாகும்.

மேலும் மனித சமூகத்தில் மவுட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும் ஒற்றுமையையும் பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் “பகுத்தறிவு” வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழைமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும், ஆற்றலையுமே துணை கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும். முடிவாய் கூறுமிடத்து “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய, எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வியல் உயிர் வாழாது என்பதேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

(பகுத்தறிவு – தலையங்கம் – 26.8.1934)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக