வெள்ளி, 7 மார்ச், 2025

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு(!944)


விடுதலை நாளேடு
கட்டுரை

 பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென் இந்திய நலஉரிமைக் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்கிற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் பிரேரேபிக்கப்பட்டது. தோழர் டி.ஷண்முகம் அவர்கள் ஆமோதித்தார்.

இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி.ஜி.நெட்டோ; அ.கணேசசங்கரன், எ.வேணுகோபால் ஆகியவர்கள் விஷயாலோசனைக் கூட்டத்தில் அனுமதித்துவிட்டு ‘போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை”யென்பதாக ஆட்சேபித் தார்கள். தலைவர் பெரியார் எழுந்திருந்து ‘ஜஸ்டிஸ்’ என்பது பத்திரிகையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 20.11.43-ல் கூடிய நிர்வாகசபைக் கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்திலே,) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்ற வேண்டுமென மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென் இந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. ஆயிரக்கணக்கான கைகள் உயரத் தூக்கின. ஆட்சேபிக்கிறவர்களை கைதூக்கும்படி கேட்கப்பட்ட போது, யாரும் கை தூக்கவேயில்லை! ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்துவிட்டார்கள். எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சமுதாய சீர்திருத்த சம்பந்தமான தீர்மானங்கள் தலைவரால் பிரேரேபிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டன.

அதன் பின் தோழர் அண்ணாதுரை அவர்களின் தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு ஒரு சிறு திருத்தத்துடன் நிறைவேறியது.
கடைசியாக ஜில்லா, தாலுகாக்களில் ஸ்தாபன அமைப்பு வேலைக்கு நான்கு பொறுப்பாளர்களை மாநாடு வேண்டிக் கொண்டதும் தலைவரால் முடிவுரை கூறப்பட்டது.
முடிவாக நகரப் பிரமுகரும் வரவேற்புக் கழக முதியவருமான ராவ்சாஹிப் துரைசாமி பிள்ளை அவர்கள், பெரியார், தோழர்கள் அண்ணாதுரை, பாண்டியன் முதலியவர்களுக்கும் வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் மாநாட்டை சிறப்புடன் கூட்டித் தந்த வரவேற்புக் கழகத் தலைவருக்கும், முனிசிபா லிட்டியாருக்கும் வந்தனோபசாரம் கூற மாநாடு இனிது முடிந்தது.
இனி பொது ஜனங்கள் செய்ய வேண்டிய வேலையை கவனிக்க வேண்டும். அங்கத்தினர்களைச் சேர்ப்பதும்,அமைப்புகளைப் புதுப்பிப்பதும் முக்கியமான வேலையாகும்.

கட்சி அரசியல் தீர்மானங்கள்
1. (அ) இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்படும் இக்கட்சிக்கு உள்ள தென் இந்திய நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ Dravidian Association என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(ஆ) அதன் முக்கிய கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி ஸ்டேட் நாடாக பிரிக்கப்படவேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திராவிடர் கழகத்து அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மேற்கண்ட திராவிட நாடு பிரிக்கப்பட்டு அமைக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஜாதிபேதம்
2. (அ) மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும் இக்கழகம் மறுப்பதோடு, அவைகளை ஆதரிக்கிற போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் காவியம் என்பவை முதலாகிய எவையையும் பொதுமக்களும் குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக் கூடாது என்று தீர்மானிப்பதோடு, அவை நம்மீது சுமத்தப்படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
(ஆ) மேலே கண்ட தன்மைகளை நீதியாகக் கொண்ட அரசியல் சட்டங்களையும் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) வருணாசிரம தர்மம் என்கின்ற கொள்கையையும் அதன் பேரால் ஏற்படுத்தப்பட்ட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவையும் இக்கழகம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதோடு, அக்கொள்கைகள் எந்த முறையில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டி யவை என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஈ) மனிதனை மனிதன் தீண்டாமை பார்க்காமை, ஒன்றாயிருந்து உண்ணாமை, தொழுகாமை முதலிய தன்மைகளை ஒழிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(உ) மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பிரிவைக் காட்டும் சொற்களையும் மற்றும் குறிகளையும் விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

சமயம் கோவில் மடம்
3. (அ) கோவில்களில் பல கடவுள்கள் தன்மை யையும், கடவுளுக்கு உருவத் தன்மையையும் அதற்கு பெண்டுபிள்ளை, பல மனைவி, காதற்கிழத்தி தன்மையையும் அதற்கு திருமணம், ஒய்யாரம், உற்சவம், ஊர்வலம், சதுர்கச்சேரி, வாணவேடிக்கை முதலாகிய ஆடம்பரங்கள் செய்யப்படுவதையும் நிறுத்தப்படவேண்டும்.
(ஆ) தொழுகைக்கு பூசைக்கும் தரகன் இருப்பதும் தேங்காய், பழம், கற்பூர ஆரத்தி, நிவேதனம் (படைப்பு) முதலியவைகளுக்கு செலவிடுதலும் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
(இ) நம் மடங்கள், மடாதிபதிகள் என்கின்ற தன்மைகள் மனித நாகரிகத்திற்கும், பகுத்தறிவிற்கும், சுயமரியாதைக்கும் பொருத்தமற்றதாக இருப்பதாலும், அவை இன்றைய நம் வாழ்விற்கும் லட்சியத்திற்கும் வேண்டாததாகவும், விரோதமானதாகவும் இருப்ப தாலும், அவைகளால் பெரிதும் ஒழுக்கமோ, உயர் குணமோ, அறிவு வளர்ச்சியோ, சமுதாய ஒற்றுமையோ ஏற்படுவதற்கு இல்லாமல் இருப்பதினாலும் அவற்றின் அடிப்படையை மாற்றி அவைகளை சமுதாய வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஒற்றுமைக்கும் பாடு படும் ஸ்தாபனங்களாக மாற்றவேண்டும்.
(ஈ) கோயில்களிலும், மடங்களிலும் ஏராளமான பொருளும் வருவாய்களும் இருப்பதால் அவை மக்களின் கல்வி, சுகாதாரம், வைத்தியம், விஞ்ஞானம், தொழிற்சாலை, இயந்திரசாலை, கண்காட்சி முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தச் செய்யவேண்டும் என்பதாக இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

பெண்கள்
4. (அ) பெண்களுக்கு ஆண்களைப் போன்ற சொத்து உரிமையையும், இருவருக்கும் கல்யாண ரத்து உரிமையையும், கலப்பு மண உரிமையையும் அளித்து அவை சட்டமாக்கப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) விதவை மணம் ஆதரிக்கப்பட்டு பெருவாரியாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திருமணங்கள், பதிவுத் திருமணங்களாகவும், அல்லாவிட்டால் பார்ப்பனப் புரோகிதம், ஆடம்பரம், வீண் சடங்கு இல்லாததாகவும், அவசியமானால் ஒரு நாள், ஒரு விருந்துக்கு மேல் இல்லாமலும் நடத்தப் படவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

கல்வி
5. (அ) கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர, மதப்பிரசாரத்திற்காக அல்ல என்பது கல்வியின் அடிப்படைத் தத்துவமாக இருக்கவேண்டும்.
(ஆ) பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக் கையை வளர்ப்பதுமான எந்த விஷயங்களும் கல்வியில் பாடமாகவோ, பாடப்புத்தகமாகவோ, கற்பிக்கப்போவதாகவோ இருக்கக்கூடாது.
(இ) கல்வி கற்பிக்கப்படுவது என்பதானது யாவ ருக்கும் பொதுவானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிற்பட்ட வகுப்பாருக்கும் முதல் உரிமை அளிப்பதாக இருக்கவேண்டும்.
(ஈ) சராசரி வாழ்க்கைத் தேவைக்கும் சாதாரண அறிவு தன்மைக்கும் மேற்பட்டதான கல்வி முறை பொதுக்கல்வியாக செய்யப்படாமல் எல்லா மக்களுக்கும் எண், எழுத்து, வாசிப்பு இருக்கும் படியான அளவு கல்வி, பொது இலவச கட்டாயக் கல்வி முறையாக இருக்கவேண்டும்.
(உ) அரசியல் நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும், உயர்தரக் கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும், சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து அவைகளுக்கு செலவழிக்கவும் கூடாது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

விவசாயம்
6. (அ) விவசாய முறை
(ஆ) நீர் பாய்ச்சல் வசதி
(இ) தனிப்பட்ட மக்களுக்கு நில அடைப்பு (தர்க்காஸ்து)
ஆகிய இவைகளுக்கு ஒரு தனிப்பட்ட இலாகா ஏற்படுத்தி இவற்றை ஒரு தொழில் முறையாக நடத்தவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தொழிலாளி
7. தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கும் அப்பங்கை முதலீட்டுப் பங்குடன் சேர்க்கப்படவும் வேண்டும்.
மற்றவை ஜஸ்டிஸ் கட்சிக்குப் பெரியார் அளித்த திட்டம் என்பவைகளை ஜஸ்டிஸ் கட்சி முன்பே ஒப்புக் கொண்டிருப்பதை இம்மாநாடு ஏற்றுக்கொள்கிறது.

ஒழுங்கு முறை
8. (அ) நம் கட்சிக்கு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளத் தக்க பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) அதற்கு ஏற்ற காரியங்கள் செய்ய தலைவரைக் கேட்டுக்கொள்கிறது.
(தொடரும்)

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு (2)

சிறப்புக் கட்டுரை

நேற்றைய (30.1.2025) தொடர்ச்சி…
அண்ணாதுரை தீர்மானம்
“9. கால நிலையையும், உலக நிலையையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் தன்மையையும், இதுவரை நாம் கடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பலனையும் மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் நிலைமையும், அதனால் அவைகளுக்கு ஏற்பட்ட பலனையும் நன்றாக ஜாக்கிரதையாக ஆலோசித்துப் பார்த்தால் நம் சமுதாயத்தில் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும் நமது கட்சியின் பேரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்துவரும் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக்கொண்டு போகப்பட்டுவிட்டோம்.

யுத்த நெருக்கடி
அதாவது, நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்கு தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங் களை எதிர்த்துப் போராடி சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவிசெய்து வந்ததும், குறிப்பாக சென்ற அய்ந்து வருஷ காலமாக நடந்துவரும் உலக யுத்தத்தில் உள்ள நெருக்கடியில் நேசநாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாகும்படியான நிலையில் நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்துவந்த பெருங்கிளர்ச்சிகளையும் நாசவேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும் நேசநாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரசாரம் முதலியவைகள் நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும் சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்கு பயன்பட்டு விட்டது.
இந்திய அரசியல் சமுக இயல் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சர்க்காரார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

நீதி நெறி
இந்திய மக்களின் அரசியல் சமுதாய இயல் சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதி நெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்துவந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக்கூட சேர்த்துப் பேசும் விதத்தில்லாதாக அலட்சியப்படுத்தப்பட்டது.
மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்தியா மந்திரியாலோ பிரிட்டிஷ் முதல் மந்திரி யினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப்பற்றி பலதடவை பேச ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட நிலைமை மாறி நம் கட்சிநிலை மதிக்கப்படவும் குறிப்பிடவும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு நாணயமாகவும் தீவிரமாயும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும் நல்ல வசதியும் சவுகரியமும் ஏற்படுவதற்கு நம் கட்சிக்கு அடியில்கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்படவேண்டியது அவசியமும் அவசரமும் ஆன காரியமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

கவுரவப் பட்டங்கள்
அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும் இனியும் வந்துசேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு வாபசு செய்துவிட வேண்டும்; இனி ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
ஆ. அதுபோலவே அவர்கள் யுத்தத்திற்கு ஆகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்கு ஆகவும், மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும், அவைகளையெல்லாம் உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.
(இ). தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்துபோர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர் அங்கத்தினர் ஆகிய பதவிகளில் சர்க்காரால் நியமனம் பெற்றே அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ இருக்கிறவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பதவிகளை உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.

போட்டி இல்லை
(ஈ). சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவித மான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது.
“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும் தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டமில்லை என்று கருதி கட்சியை விட்டு நீங்கிக்கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டிய வர்களாவார்கள்.”
இதை சங்க காரியதரிசி தோழர் சி.என்.அண்ணா துரை அவர்கள் பிரேரேபித்தார்.
கட்சியின் காரியக்கமிட்டி காரியதரிசி தோழர் ஊ. பு. அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மனப்பூர்வ மாய் ஆமோதிப்பதாக கூறி ஒரு திருத்தம் கூறினார். திருத்தம் தலைவர் பெரியாராலும், அண்ணாதுரை யாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. திருத்தமாவது:
(உ) “இதையேற்று ஒரு வாரத்தில்” என்கின்ற பிரிவுக்கு பதிலாக ‘1945 மார்ச்சு 31 ஆம் தேதிக்குள்ளாக தமிழ்நாட்டில் 10000 அங்கத்தினர்களுக்குக் குறையாமல் அங்கத்தினர்களை சேர்த்து ஜில்லா தாலுகா சங்கங்களை இன்னும் அதிகமாக பலப்படுத்தி ஒழுங்குமுறை கண்டிப்புகள் ஏற்படுத்தி ஒரு தனி மாநாடு கூட்டி தெரிவித்து அன்று முதல் அமலுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்பதாகும்.
திருத்தப்பட்டபடி தீர்மானத்தை ஓட்டுக்குவிட தலைவர் எழுந்தார். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளால், ‘வாய்தா கூடாது இன்று முதலே அமலுக்கு வரவேண்டும்’ என்றும் ‘ஒரு வார வாய்தா போதும்’ என்றும்,

சமாதானம்
அதிகமான காலம் 3 மாதத்திற்குள் என்று இருந்தால்போதும் என்று சொல்லிக்கொண்டு நூற்றுக் கணக்கான பேர்கள் மேடைக்குவந்து பேச தலைவர் அனுமதி கேட்டும் ஆரவாரம் செய்வதுமூலம் திருத் தத்தை எதிர்த்தார்கள். பிறகு தலைவர் 2-3 பேர்களை மாத்திரம் பேச அனுமதித்தபின் திருத்தத்தை எதிர்த்தவர்களுக்கு சமாதானம் சொல்லும் முறையில் பேசியதாவது:
“தோழர்களே,
இத்தீர்மானத்திற்கு பலமான எதிர்ப்பு இருக்கும் என்று கருதினேன். இந்த 15000 பேர் கொண்ட கூட்டத்தில் ஒரு சிறு எதிர்ப்புகூட இல்லை என்று கண்டேன். இந்த நிலை உங்களுக்கு என்னை, ஒரு சலிப்படைய முடியாத தொண்டனாக ஆக்கிவிட்டது. இந்த தீர்மானத்தை நான் இன்றும் இனிமேலும் ஒரு நிமிடமாவது தலைமை வகிப்பதற்கும், தலைமை வகிக்காமல் தப்பித்துக்கொள்ளவும் காரணமாக வைத்திருந்தேன். அப்படி இருக்க இத்தீர்மானம் இன்று நம்மில் யாருக்கும் அதாவது திருத்தம் பிரேரேபித்த என் நண்பர் மதுரை ஜில்லா போர்டு பிரசிடெண்ட், பாண்டியனுக்கும் இங்கு வீற்றிருக்கும் நண்பர் செங்கல்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் டி. சண்முகத்திற்கும் மற்றும் சில பதவி ஆளருக்கும்கூட அபிப்பிராய பேதம் இல்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

ஆனால், கொஞ்சம் வாய்தா காலம் கேட்கப்படு கிறது. இது பாண்டியன் அவர்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானத்தைக் காப்பாற்றவல்ல. இப்பொழுதே விட்டுவிட அவர் தயாராய் இருக்கிறார். ஆனால், அவர் இத்திருத்த தீர்மானம் இங்கு கொண்டுவந்ததின் கருத்து பட்டம், பதவி ஆளர்களை வெளியில் அனுப்புவதற்கு ஆக அல்ல, அவர்களுடைய ஒத்துழைப்பை இன்னும் அதிகமாகப் பெறவும் பாமர மக்கள் ஆதரவை அதிகமாகப் பெறவும், சர்க்காரைத் திருத்தவும், நம் இயக்கத்தில் தன்னல மறுப்பு உணர்ச்சியும் நாணயமும் பெருகவும் ஆகவே கொண்டு வந்திருக்கிறோம். ஆதலால், சிறிது நாள் பொறுப்பதால் ஒன்றும் முழுகிப்போகாது. நாம் இத்தீர்மானத்தினால் 6 மாதகாலம் என்று அறுதியிட்டு வாய்தா கொடுக்கவில்லை. 6 மாதத்திற்கு உள்ளாக என்றுதான் போட்டிருக்கிறோம். 6 மாதத்திற்குள் என்பது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்றும் பொருள் கொள்ளலாம். நாளைக்கே ஆரம்பித்தாலும் இத்தீர்மானத்தின்படி குற்றமாகாது.

உழைப்பின் பலன்
ஆனால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிற நீங்களும் நானும் வெறும் வாய்ப் பேச்சாளர்களாயிருந்து சர்க்காரையும் பட்டதாரிகளையும் குறைகூறுகிறோம் என்று யாரும் கருதக்கூடாது. நமக்கு அதிகமாக நிபந்தனை இதில் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் ஜில்லா தாலுகா சங்கங்களை இத்தீர்மானங்களின்படி அமைக்க வேண்டும். ஜில்லாவுக்கு ஆயிரம் பேராவது அங்கத்தினர்கள் இதன்படி சேர்க்கப்படவேண்டும். தனி மாநாடு கூட்டி அதில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு கஷ்டம் ஒன்றுமில்லை. தோழர் பாண்டியன் அவர்களோடு ஆலோசித்தேன். அவர் குறை கூறுபவர்களுக்கு வாய்ப்புக்காகவே இதைப் பிரேரேபிக்கிறேன் என்று சொன்னார். அது சரியென்றுபடுகிறது. என் தலைமையில் உங்களுக்கு இருக்கும் அன்பை இந்த சொற்ப நாள் வாய்தாவுக்கு அனுமதி கொடுப்பதின் மூலம் காட்டுங்கள். “இந்தச் சமயத்தில் தனிப்பட்ட முறையில் ஒன்றும் பேசக்கூடாது. எல்லோரையும் நண்பராகக் கருதுங்கள். நம்மை வைகிறவர்களையும் அவர்கள் விஷயத்தில் பரிதாபப்பட்டுக் கொண்டு நண்பராகக் கருதுங்கள். உழைப்பாளிகள் யார்? உழைப்பின் பலனை அனுபவிக்கிறவர்கள் யார்? என்பது இத்தீர்மானத்தின் செய்கையினால் விளங்கிவிடப் போகிறது” என்று கூறி ஓட்டுக்கு விட்டார்.
பெருத்த ஆரவாரத்தின் மீது ஆயிரக்கணக்கான கைகள் வெகுநேரம் தூக்கிய வண்ணமாக நின்று ஆதரவு அளித்தன.
ஆட்சேபிக்கிறவர்கள் கைதூக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏகமனதாக…
6 மாத வாய்தா கூடாதென்று பேசிய இரண்டொருவர் கைதூக்கினர். அவர்களைப் பார்த்து தலைவர் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பதிவு செய்ய நீங்கள் தயவுசெய்து அனுமதியளிக்கக் கூடாதா என்று கேட்டார். உடனே அவர்களும் கையை தொங்கப் போட்டுக் கொண்டார்கள். பிறகு தலைவர் ஆடசேபிக்கிறவர்கள் கை தூக்கலாம் என்றுசொல்லி இரண்டு தடவை நான்கு புறமும் திரும்பிப்பார்த்தார்.
திருத்தத்தின்படி தீர்மானம் ஏகமனதாக நிறை வேறியது. இதை தலைவர் சொன்னவுடன் சொல்ல முடியாத ஏராளமான கைத்தட்டலும், ஆரவாரமும் பெரியார் வாழ்க! கழகம் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே! என்கின்ற பேரொலியும் மக்களை இலக்கச் செய்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக