திங்கள், 3 மார்ச், 2025

சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டுப் புரட்சி சுயமரியாதைத் திருமண வரலாறு-கி.வீரமணி

 


விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

மனிதரின் அறிவுக்கு எங்கெல்லாம் விலங்குகள் பூட்டப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் உடைக்கவே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. கைவிலங்கு, கால்விலங்கு போன்றவை கண்ணுக்குத் தெரியும் விலங்குகள் மூளைக்கு இடப்படும் விலங்குகளோ கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால், கடும் விளைவுகளை உருவாக்குபவை.

அப்படி புதிய பார்வையோடு அறிவுக்கு ஒவ்வாத மடமைகளை ஒழித்து, தன்மதிப்புடன் உருவாக்கப்பட்டதே சுயமரியாதைத் திருமணமுறை.

அதற்கு முன்பும் சில புரோகித மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று வந்தன. பார்ப்பனர்களை அழைக்காவிட்டாலும் அவர்களுக்கு செலுத்த வேண்டிய புரோகித வரியை செலுத்தியே ஆகவேண்டும் என்று பம்பாய் மாகாணத்தில் இருந்த சட்டத்தினை எதிர்த்து புதிய சட்டம் கேட்டுப் போராடும் நிலையை உருவாக்கியிருந்தன.
இந்த திருமணங்கள், நாகை என்.பி.காளியப்பன் – செல்லம்மாள் திருமணம் 19.08.1926 அன்று புரோகித மறுப்புத் திருமணமாக, கதராடை அணிந்த திருமணமாக பட்டுக்கோட்டை அருகே படப்பைக்காடு கிராமத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சில புரோகித மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. சில திருமணங்கள் குறித்து ‘குடிஅரசி’ல் பதிவான சில செய்திகள். இதோ :

‘பிராமணியத்தை ஒழித்த திருமணம்’

என்ற தலைப்பில் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் மைத்துனர் ஸ்ரீமான் ஜி. ராமச்சந்திர நாயுடு அவர்கள் தன் சகோதரர் ஸ்ரீமான் கோவிந்தராஜுலு நாயுடுவுக்கு நடத்திவைத்த திருமணத்தில் மணமகனும் மணமகளும் முழுக் கதர் உடையோடு இருந்ததல்லாமல் மணச் சடங்குக்குக் கொஞ்சமும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே நடந்தது. ஆனால் அதிலும் ஒரு கஷ்டத்தை நாம் உணர்ந்தோம். அதாவது அம் மணச்சடங்கை நடத்தியவர் பார்ப்பனரல்லாதாரும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒரு அய்ந்து ஆறு பார்ப்பனர்கள் பூணூலைச் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு மொத்தம் இருக்குமோ அவ்வளவு மொத்தப் பூணூலும் பார்ப்பனர் எவ்வளவு சப்தமாய் மந்திரங்கள் சொல்லுவார்களோ அதைவிட அதிக சப்தமாகவும், பார்ப்பனர்கள் எப்படி மணமகனுக்கும் மணமகளுக்கும் மற்றும் அங்குள்ள உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் முதலியவர்களுக்கும் தெரியாத பாஷையாகிய சமஸ்கிருத பாஷையில் அனாவசியமான விஷயங்களைச் சொல்லிக் காலத்தை வீணாக்குவார்களோ அதைவிட அதிக விஷயத்தையும், அதிக காலத்தையும், சொல்லிக் கழித்தார்கள். இதன் மூலம் பார்ப்பனர் அங்கில்லை என்பது மாத்திரம் ஏற்பட்டதே அல்லாமல் மூடநம்பிக்கை ஒழிந்தது என்பது அங்கு ஏற்படவில்லை;

‘குடிஅரசு’ – செய்தி – 26.09.1926

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையாரின் கிராமம் பலிஜ நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது. இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார். ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகு தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங்களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

(‘குடிஅரசு’ – செய்திக்குறிப்பு – 21.11.1926)

புரோகித மறுப்பு இந்த திருமணமுறை தமிழகம் மட்டுமல்லாமல் சுயமரியாதை இயக்கம் போலவே மலாயா நாட்டிலும் நடைபெற்றது ‘குடிஅரசு’ ஏட்டிலிருந்து அப்படியே தருகிறேன்.

நம்மவர்களின் வீட்டு சுபா சுப காரியாதிகளில் “பிராமணியம்’’ அதாவது ஜன்மசனி போன்ற “புரோகிதவரி” என்னும் பெரும் பேய்வாய்ப்படாது தப்பி தாய்நாட்டில் நடந்த காரியாதிகள் நமது செவிக்கெட்டிய வரையில் ஒரு சிறிது இருப்பினும் நேரில் கண்டவைகள் ஒன்றுமேயில்லை. பல்லாண்டுகளாகப் பல்லவி பாடி வரும் நம் தாய்நாட்டின் சீர்திருத்த முன்னேற்றம் நாட்டின் விஸ்தீர்ணத்தையும் ஜனசங்கியையும், கல்வி கேள்வி யாதியவைகளின் சிறப்பையும் சீர்தூக்கிப்பார்க்குமளவில் அச்சில காரியாதிகளையும் சொல்லளவே யெனக் கொள்ளக் கிடப்பிலும்;
நம்மிந்திய மக்கள் குடியேறியுள்ள இம்மலாய்நாட்டில் கூறியவாறே செய்கையாலுஞ் செய்து காட்டிய “புரோகித வரி” என்னும் பேயை இருந்த இடந்தெரியாது ஓட்டிய சிறந்த விவாக மொன்று “தெலுக் ஆன்ஸன்” எனும் நகரில் நிகழ்ந்ததை நேரிற் கண்டு ஆனத்தித்தோம்.

மணமக்களின் தந்தை பேரா. இந்துமகா ஜன சங்கத் தலைவரும், பலதரப்பட்ட தேச ஊழியத்தில் சதா ஈடுபட்டு மெய்த்தொண்டு புரிந்து வருபவருமாகிய தைபிங் நந்நகர ஏலாதிபர் ஸ்ரீமான் மா. இரத்தினசாமி பிள்ளையவர்கள் – மணமகனின் குடும்பத்தலைவர், அவர் தம் சகோதரர் பேரா. இந்து சங்கத்தின் காரியதரிசியும் பொது ஜன சேவையிற் சலிப்படையாதவருமான தெலுக் ஆன்ஸன் சேனிடரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் தி.சுப்பையா அவர்கள் குறித்த விவாக வைபவம் சென்ற (22.04.1927) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 3 1/2 மணிக்கும் இடையே ‘பார்ப்பனப் புரோகித’மின்றி தமிழ் ஓதுவாரொருவரையும், ஸ்ரீமத் சுவாமி அர்ப்புதானந்தரவர்களையும், இந்து மகாஜன சங்கப் பொதுக் காரியதரிசி ஸ்ரீமான் அய்யாரு அவர்களையும் முற்கொண்டு ஜாதி பேதம் தீண்டாமை என்பதை அறவே ஒழித்த பல இந்தியப் பெருமக்களின் திருக்கூட்டத்தினிடையே முறையிற் சிறிதும் பிழையாது சிறப்பாக நிறைவேறியது. அச்சமயம் மணமக்களுடையவும் அவர்தம் குடும்பத்தாருடையவும், மணப்பந்தலில் கூடியிருந்தாரிற் பெரும்பாலருடையவும் ஆடைகள் முழுதும் பரிசுத்தக் கதராடையாகவே இருந்ததானது குறிப்பிடத்தக்க தொன்றாம்.
விவாகம் முடிந்த 9ஆம் நாள் அதாவது 30.4.1927 சனிக்கிழமை மாலை 7 மணி ரெயிலில் தைபிங்குக்கு மணமக்களை அழைத்து வந்தபோது, மணமகளின் தந்தை ஸ்ரீமான் மா.இரத்தினசாமி பிள்ளையவர்களைத் தலைவராகவும், டிரஸ்டியாகவும் கொண்டுள்ள தைபிங் இந்து தேவாலய சபையின் அங்கத்தினர்கள் மணமக்களை ரெயில்வே ஸ்டேஷனிலிருந்தபடியே ஸ்ரீமாரியம்மன் தேவாலயத்திற்கு அழைத்து வந்து விசேஷ அபிஷேகாதிகள் செய்வித்து மாலை சூட்டி சுமார் 300 பெயர்களில் அதிகம் கூடியிருந்தவர்களுக்கும் தேனினுமினிய சிற்றுண்டியளித்துச் சிறப்பித்த பெருமையை உள்ளபடி எழுத இங்கு இடம் பெறாதென அஞ்சுகின்றோம்.

மேற்கண்ட திருமணங்கள் யாவும் புரோகிதர் மறுப்பு அல்லது புரோகித மறுப்புத் திருமணங்கள் தானே தவிர சுயமரியாதை திருமணங்கள் அல்ல.

முதல் சுயமரியாதைத் திருமணம்!

முதல் “சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம்.
அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் என்னும் சிற்றூர். பருத்தி விளையும் பண்பட்ட நிலங்களுக்கு உரிமை உடையது இவ்வூர். மாடமாளிகைகளில் இவ்வூரார் வாழ்ந்து வந்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் பாண்டி நாட்டில் குடியேறிய மக்களில் ஒரு பிரிவினரான கெண்டிக்கோட்டை ரெட்டியார்கள் வாழும் ஊர் இச்சுக்கிலநத்தம். இவ்வூரில் துரைசாமி ரெட்டியார் என்ற சுப்பாரெட்டியார் பெருஞ்செல்வர்; இவர் மதப்பற்றும் மாந்தப்பற்றும் மிக்கவர். பார்ப்பனர்களையே தெய்வமாகக் கருதி 55 ஆண்டுகள் ஒழுகினவர்; ஒத்துழையாமைக் கிளர்ச்சியின்போது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பிரச்சாரத்தில் கட்டுண்டு காங்கிரசைச் சார்ந்தவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சுயமரியாதை இயக்கம் தொடங்கியதும் அதில் ஈடுபட்டு ‘குடிஅரசு’ இதழைப் படிப்பதைத் தம் கடமையாகக் கொண்டார். “நாயக்கரே என் குரு” என்று கொண்டவர். அருப்புக்கோட்டை வட்டாரத்தில் (போடம்பட்டி) தி. கருப்பையா பிள்ளையையும் வா.து. கைலாசம் பிள்ளையையும் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களாக்கினார். சுக்கில நத்தம் ஊரைச்சுற்றி உள்ள சிற்றூர்களிலும் ‘குடிஅரசு’, படிப்பதை ஊக்குவித்தார். இருபது வயதுள்ள தம் ஒரே மகனாகிய அரங்கசாமி ரெட்டியாரையும் சுயமரியாதை நெறியில் இயங்கச் செய்தார்.

வீட்டில் திருமணப் பேச்சு வந்தது; அரங்கசாமி ரெட்டியார் பார்ப் பனரை விடுத்து தந்தை பெரியாரை கொண்டே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இத்திருமண முறைக்கு ஆதரவளிக்கும் பெற்றோர் இலரே என துரைசாமி ரெட்டியார் கவலை அடைந்தார்.

சுக்கிலநத்தத்திலுள்ள அழகர்சாமி ரெட்டியாரையும் சீநிவாச ரெட்டியாரையும் சந்தித்து இதுகுறித்துத் துரைசாமி ரெட்டியார் பேசினார். அவர்கள் இருவரும் தத்தம் மகளை துரைசாமி ரெட்டியாருக்கு அளிக்க முன் வந்தனர். அழகர்சாமி ரெட்டியார் மகள் நாகம்மாளும் சீநிவாச ரெட்டியாரின் மகள் ரத்தினத்தாயம்மாளும் அரங்கசாமி ரெட்டியாரைத் திருமணம் செய்ய விரும்பினர். மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் இதை ஏற்றுக் கொண்டனர்.
ஈ.வெ.ராமசாமியார் 28.05.1928 அன்று சுக்கிலநத்தம் வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக எழுதினார். திருமண அழைப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டன.

நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும் நாகப்பட்டணம் தென் இந்தியா ரயில்வேயைச் சேர்ந்த தொழிலாளரும், ஸ்ரீமான் பாலையத் தேவர் குமாரருமான ஸ்ரீமான் பா.காளியப்பத் தேவர் அவர்களுக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராமசாமித் தேவரவர்கள் குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கு இவ்வாவணி மாதம் மூன்றாந்தேதி (19-08-1926) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறும். அத்திருமணத்தில் மணமகனும் மணமகளும் கதராடையே அணிவதுடன், பார்ப்பனர் சம்பந்தமே இல்லாமல் அத்திருமணச் சடங்கும் நடைபெறும். நம் தென்னாட்டில் இம்மாதிரி கதருடையுடன் இதுவரை பல திருமணங்கள நிகழ்ந்திருந்தாலும் பார்ப்பனப் புரோகிதரில்லாமல் திருமணங்கள் நடப்பது அதிசயமாகக் கருதப்படுவதுடன் வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் சென்ற மாதம் வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர் சாணாங்குப்பத்திலிருக்கும் திருவாளர்கள் வெங்கிடசாமி முதலியாரும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும் நாகையில் நடக்கப் போகும் இத் திருமணமும் முக்கியமானதென்றே சொல்லலாம். இனியும் தமிழ்நாட்டில் நடக்கும் அநேக திருமணங்களும் இதுபோலவே தங்கள் தங்கள் வகுப்பிலுள்ள முதிர்ந்த பரிசுத்தம் பொருந்திய பெரியோர்களைக் கொண்டே நடத்திக்கொள்வது திராவிட மக்களின் சுயமரியாதையைக் காப்பதாகுமென்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். சுமார் 30,40 வருஷங்களுக்கு முன்னால் தென்னாட்டில் விசேஷமாய்ப் பார்ப்பனரின்றியே விவாகம் முதலிய அநேக சடங்குகளும் நடைபெற்று வந்திருக்கிறது.

முக்கியமாய் இன்னாட்டுக் கொங்கு வேளாள சமூகமாகிய பெரும் சமூகத்தார் தங்கள் மணச்சடங்குகளைத் தங்கள் சமூகத்திலேயே உள்ளவரான அருமைக்காரர் என்னும் பெரியார்களைக் கொண்டே நடப்பித்து வந்திருக்கிறார். கொஞ்சம் செல்வமோ, அல்லது நாகரிகப்பேயோ எதாவது ஒரு குடும்பத்திற்குப் புதிதாய் ஒட்டிக் கொண்டால் அவர்கள் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்வது ஒரு பெருமை என்று நினைத்து பார்ப்பனர்களே இருந்து நடத்த வேண்டும் என்று செய்து விட்டார்கள். இன்னமும் அவ்வகுப்புகளிலும் மற்றும் பல வகுப்புகளிலும் 100க்கு 90 குடும்பங்கள் பார்ப்பனர் இல்லாமலே நடைபெற்று வருகின்றன. சிரார்த்தம் முதலிய சடங்குகள் வேளாள சமூகமாகட்டும், பலிஜா சமூகமாகட்டும் மற்றும் பல

சமூகங்களாகட்டும் இப்பொழுதும் பெரும்பான்மையான குடும்பங்கள் பார்ப்பனரைக் கொண்டு செய்வதே இல்லை. இப்படி இருந்தும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியினால் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யும் சடங்குகளும் ஒரு பெருமை இருப்பதாக கருதிப் புதிது புதிதாய் அவ்வழக்கங்களை Þதாபித்து வருகிறார்கள். இவை பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அனுகூலமே தவிர நமக்காவது நமது பெற்றோர்களுக்காவது, நமது மணமக்களுக்காவது யாதொரு பயனும் இல்லை. அவர்கள் சொல்லும் மந்திரங்கள் என்னும் சமÞகிருத வார்த்தைகளிலும் யாதொரு விசேஷப் பொருளும் இல்லை. அதைச் செய்து வைக்கும் புரோகிதர்களோ உபாத்தியாயர்களோ அப்படி ஒன்றும் விசேஷ சக்தியோ யோக்கியதையோ பெருமையோ படைத்தவர்களுமல்ல. வீண் பிரமையும் போலி நாகரிகம் என்கிற முட்டாள் தனமுமேயல்லாமல் இதில் வேறு ஒரு பலனும் இல்லை.

உண்மையாகவே பார்ப்பனர் இல்லாமலும் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்யாமலும் சிரார்த்தம் தர்ப்பணம் முதலிய பார்ப்பனர் வயிறு வளர்க்கும் போலிச் சடங்குகளில்லாமலும் இருக்கும் ஜனங்களும் சமூகமும் ஜாதியும் சேர்த்து கணக்குப் பார்த்தால் இவைகளையெல்லாம் பார்ப்பனர்களைக் கொண்டு செய்கிறவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானி ருப்பார்கள்.

இதனாலேயே அவர்கள் சேமமாய் வாழவில்லையென்றாவது அவர்கள் பெற்றோர் மோட்சம் அடையவில்லை என்றாவது சொல்லி விட முடியுமா? ஆதலால் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் இனிமேலாவது தங்கள் சுயமரியாதையையும் தத்துவத்தையும் உத்தேசித்தாவது பார்ப்பனர் இருந்து நடத்தும் காரியங்கள்தான் உண்மையானது என்றும், உயர்ந்தது என்றும், கடவுள்களும் மோட்சத்திற்கும் பிரீதியானது என்றும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணி தங்கள் தங்கள் சமூகத்தையே தாழ்த்திக் கொள்வதற்குத் தாங்களே பணங்கொடுத்து ஆளாகாமல், தங்கள் தங்கள் சமூகத்தாரைக் கொண்டே செய்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.

குறிப்பு:-இத்திருமணத்திற்கு ஸ்ரீமான் நாயக்கரையும் அவசியம் வரும்படி வேண்டிக் கொண்டிருப்பதால் அநேகமாய் ஸ்ரீமான் நாயக்கரும் போகலாம்.
‘குடிஅரசு’ – செய்திக்குறிப்பு – 15.08.1926

துரைசாமி ரெட்டியார் என்ற அய்யாரெட்டியாரின் சகலப்பாடி ஆவல்சூரன்பட்டி நாராயண ரெட்டியார். இவர் மகன் கோபால்சாமி ரெட்டியார். இவரும் தம் திருமணத்தை தந்தை பெரியாரை கொண்டே முடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அரங்கசாமி ரெட்டியாருக்கு வாழ்க்கைப்பட விரும்பியவர் இருவர். இவர்களைப் போலவே கோபால்சாமி ரெட்டியாரை இணைத்துக் கொள்ளவும் இரு பெண்கள் முன் வந்தனர். சிரோன்மணி அம்மாளும் கமலத்தம்மாளுமே ஆவர் இம்மணப் பெண்கள்.

முதல் திருமண மேடையிலேயே இந்தத் திருமணம் நடைபெற முடிவாயிற்று. அரங்கசாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் ரத்தினத்தாயம்மாளும், கோபால்சாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் சிரோன்மணி அம்மையாரும் உடன்பிறந்தவர்கள்.

27.05.1928-இல் மதுரையில் இளைஞூர் மாநாடு நடைபெற்றது; அது முடிவடைந்ததும் அம்மாநாடு முடிந்தவுடன் 28.02.1929 அன்று காலை சுக்கிலநத்தத்திற்கு தந்தை பெரியாருக்கு சுக்கிலநத்தத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்ட நெருக்கடி மிகுதியாக இருந்தது. சரியாகக் காலை பத்து மணிக்குத் திருமணம் நடைபெறத் தொடங்கியது.

கும்பகோணத்தில் இரு சுயமரியாதைத் திருமணங்கள் கும்பகோணம் அழகப்ப முதலியார் தெரு தோழர் தி.சா.கோவிந்தசாமி அவர்கள் இல்லத்தில் 16.09.1931 தேதி புதன்கிழமையன்று திருச்சி திரு.கே.சாமிய புதல்வர் திருச்செல்வர் டி.எஸ். நடேசம் அவர்கட்கும் கூத்தூர் திரு.டி. எஸ். குமாரசாமி புதல்வி திருச்செல்வி சாரதாம்பாள் அவர்கட்கும், தஞ்சை திரு. கிருஷ்ணசாமி புதல்வர் திருச்செல்வன் டி.கே.கண்ணையா அவர்கட்கும் கூத்தூர் திரு. சோமசுந்தரம் புதல்வி திருச்செல்வி திருபுரசுந்தரி அவர்கட்கும் எவ்வித புரோகித கலப்புமின்றி அர்த்தமற்ற சடங்குமின்றி சுயமரியாதை இயக்க முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண வைபவத்திற்கு திருச்சி, ஈரோடு, தஞ்சை, மாயூரம், சுவாமிமலை, சாக்கோட்டை, நாச்சியார் கோவில், பட்டுக்கோட்டை முதலிய வெளியிடங்களிலிருந்தும் பல அன்பர்கள் வந்திருந்தனர். உள்ளூர் பிரபலஸ்தர்களும் சுயமரியாதை வாலிப சங்கத் தலைவரும் மணமக்கள் உறவினருமாக ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்காக வந்திருந்தார்கள். திருமண அழைப்பில் குறிப்பிட்ட காலத்தில் மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தை சபை முன் படித்து மலர் மாலை சூடி மாங்கல்யம் பூட்டிக்கொண்டார்கள்.

தோழர் கா.கு.நீலமேகம் அவர்கள் எழுந்து, இத்திருமண நிகழ்ச்சியிலேற்பட்ட மாறுதலைப்பற்றியும், மாறுதலடைய வேண்டிய அவசியத்தைபற்றியும் திருமணம் என்ற பெயரால் நாம் புரோகிதர்கட்கும் அர்த்தமற்ற பழக்கவழக்க சடங்குகட்கும் எத்தனை எத்தனை காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் திருமண சுதந்திரம் மணமக்கட்கு வழங்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மிக விளக்கமாய்ப் பேசியமர்ந்தார். பின் தோழர்களான அ.பொன்னம்பலம் அவர்களையும் கே.வி. அழகர்சாமி அவர்களையும் “சீர்திருத்தத் திருமணம் – மதமும் மக்களும்” என்பது பற்றி பேசும்படி தோழர் கா.கு.நீலமேகம் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன்படி தோழர்கள் அ.பொன்னம்பலம், கே.வி.அழகர்சாமி ஆகிய இருவரும் மூன்று மணி நேரம் மிக விளக்கமாகவும் விரிவாகவும் பேசி மண மக்களைப் பாராட்டினர். மணமக்களாலும் தோழர் நீலமேகம் அவர்களாலும் வந்தனோபசாரம் கூறி சந்தனதாம்பூலம் பழவகை வழங்கினார்கள். பின் யாவருக்கும் சம்பந்தி விருந்து ஒன்று நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு தோழர் கே.வி.அழகர்சாமி, அ.பொன்னம்பலம் ஆகியவர்கள் ஈரோட்டிற்கு ரயிலில் பயணமானார்கள்.

– ‘குடிஅரசு’ – 27.09.1931

அரங்கசாமி ரெட்டியார் வலது கையில் நாகரத்தினம் அம்மாளையும், இடது கையில் ரத்தினத்தாயம்மாளையும் பற்றிக் கொண்டு நாயக்கரை வணங்கி மணவறையில் அமர்ந்தார். ஆடம்பரமான ஆடைகளை மணமக்கள் அணியவில்லை. கதராடைகளே அணிந்திருந்தனர். பூமாலைகள் சூட்டப்பட்டிருந்தன.

ஓமம் வளர்க்கப்படாமல், திருவிளக்கு ஏற்றப்படாமல், கற்பூரம் கொளுத்தப்படாமல் திருமணம் நடந்தது !
தந்தை பெரியார் பெற்றோர்களிடமும் மணமக்களிடமும் விருப்பத்தை அறிந்து அதன்மேல் திருமண வாக்குறுதி வாங்கினார்.

இத்திருமணம் முடிந்ததும் அதே மேடையில் இரண்டாம் தம்பதிகளுக்கு முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கோபால்சாமி ரெட்டியார் தம் வலப்பக்கத்தில் ஸ்ரீமதி கமலத்தம்மாளையும் இடப்பக்கத்தில் சிரோன்மணி அம்மாளையும் கைக்கொண்டு மணையில் வந்து அமர்ந்தார். இவர்களும் கதருடையே அணிந்திருந்தனர். இத்திருமணமும் இனிது நிறைவேறியது.

இந்த இரண்டு திருமணங்களின் நடைமுறையையும் சிறப்பையும் சுக்கிலநத்தம் பார்த்துக் கொண்டிருந்தது. அதே நாளில் பார்ப்பனரைக் கொண்டு தம் திருமணத்தை நடத்த மாரிரெட்டியார் என்பார் எண்ணி யிருந்தார். இவர் சுயமரியாதைச் சிறப்பு கண்டு தாமும் அதே மேடையில் இத்தகைய திருமணம் செய்ய விரும்பினார். சுப்புரெட்டியாரும் தம் பந்தலில் மாரி ரெட்டியார் திருமணம் நடைபெற ஒப்புதல் அளித்தார். எனவே மாரிரெட்டியார் – சீதாலட்சுமி அம்மாள் திருமணமும் சரியாக பகல் 12 மணிக்கு அங்கு இனிது நடைபெற்றது.

கூடியிருந்த 5000 பேர்களும் மூன்று திருமணங்களையும் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்!

வைதிகக் கிழவர்கள் இப்படிப் பழைய பழக்கங்களுக்கு மாறுபட்டுப் பார்ப்பனர்களை நீக்கி பழைய முறைகளை நீக்கித் திருமணம் செய்வதனால் என்ன விளையுமோ! ஏது விளையுமோ! என அஞ்சினர். திண்ணைகளில் உட்கார்ந்து ‘குசுகுசு’ என்று பேசத் தொடங்கினர்.

மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்வஜாதி மதத்தவர்களும் சமத்துவத்துடன் பல சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

29-ஆம் நாளன்று நாயக்கரை வழி அனுப்பிய சுப்பாரெட்டியார் இனி 116 ஊர்களிலும் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்கள் செய்விக்க உறுதிபூண்டார்.

திருமணத்திற்காகவும், நாயக்கரின் சுயமரியாதைச் சொற்பொழிவுக் காகவும் வந்திருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கும் அவர் தகுதியறிந்து குறையில்லாமல் சமபந்தியாக விருந்து அளித்தார் சுப்பாரெட்டியார். இவர் திறமையையும் தியாகத்தையும் போற்றாதாரில்லை.
இந்த ஒரு செல்வர் வீட்டுத் திருமணத்தால், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களையும்

சுயமரியாதை இயக்கம் ஈர்த்துக் கொண்டது. 1928-ஆம் ஆண்டு முதல் 1950 வரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளமாகும். இடையில் சுயமரியாதைத் திருமணங் களிலேயே காதல் கலப்பு (ஜாதி விட்டு ஜாதி மாறி) திருமணங்கள், விதவை மறுமணங்கள் – திருச்சியில் இம்மாதிரித் திருமணங்களை நடத்தி வைக்க புரோகித மறுப்புச் சங்கம் (Anti-Prohit Association) என்று ஒரு சங்கம் கூட நிறுவப்பட்டு அச்சங்கம் இவ்வாறு காதல், கலப்பு, சுயமரியாதை முறையில் திருமணம் செய்துகொண்ட பல தம்பதியர்களின் புகைப்படங்களைக் கொண்டு ஒரு காலண்டரே வெளியிட்டது. ஏராளமாய் நடைபெற்ற இந்த திருமணமுறை திடீரென ஒரு சட்ட சிக்கலை சந்தித்தது.
(தொடரும்…)

சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டுப் புரட்சி சுயமரியாதைத் திருமண வரலாறு

கட்டுரை, தந்தை பெரியார்

கி.வீரமணி

நேற்றைய (18.1.2025) தொடர்ச்சி…

சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியது.

திருச்சி கருணாநிதி பார்க் என்ற பூங்காவில் 1934ல்தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று நடத்திய சுயமரியாதைத் திருமணம்தான் செல்லாது என்று அத்தீர்ப்பின் மூலம் – திருமணமாகி அவர்களுக்கு 2 ஆண்கள், 2 பெண்கள் – பிறந்த பிறகு 20 ஆண்டுகள் கழித்து இத்தீர்ப்பு வெளி வந்தது!

செட்டி நாடு கோட்டையூரைச் சேர்ந்த திரு. ராம. அழ. சிதம்பரம் (இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஜாதி) திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தினைச் சேர்ந்த ரங்கம்மாள் என்ற (ரெட்டியார் ஜாதி) இளம் விதவையை – (ஏற்கனவே ‘விதவன்’ ஆனவர் மணமகன்) வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இது தந்தை பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட – ஏற்பாடு செய்யப்பட்ட (Arranged Marriage) ஜாதி மறுப்பு, விதவை மறுமண, சுயமரியாதைத் திருமணம் ஆகும்! (15-4-1934)

சிதம்பரம் அவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி காலமாகி விட்டார்; அவருக்கு ஒரு மகன் உண்டு. அவருக்குத் திருமணம் (செட்டியார் வகுப்பு) செய்து வைக்கப்பட்டவர் மருமகள் தெய்வானை ஆச்சி என்பவர். இவர்தான் வழக்குத் தொடுத்தவர்.

பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பு
இவர்களுக்கு மலேயாவிலும் கோட்டையூரிலும் சொத்து உண்டு. அதன் பாகப் பிரிவினை சம்பந்தமாக பிரிவினை (Partition Suit) தேவக்கோட்டை சப்-கோர்ட்டில் போட்டு வந்த வழக்கில் பிறகு அய்க்கோட்டு அப்பீலில் தான் ‘சுயமரியாதைத் திருமணமே செல்லாது’ என்று தீர்ப்பு ஜஸ்டிஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயணராவ் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்பட்டது. (05.05.1915 & 1947)

சிதம்பரத்தின் மருமகள் தெய்வானை ஆச்சி மாமன் அழ.சிதம்பரம் ஆகிய இருவரும்தான் எள இவ்வழக்காடிகள்! (இவ்வழக்கு 1955 (1) M.L.J. 128 – தெய்வானை ஆச்சி, சிதம்பரம் செட்டியார் என்ற பெயரில் பதிவான பிரபல வழக்கு ஆகும்.
இத்தீர்ப்பு 26.8.1953 அன்று வழங்கப்பட்டதாகும்.

“குறிப்பிட்ட இத்திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங்கள்படி நடைபெறவில்லை. ‘சப்தபதி” என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஓமம் வளர்த்தல் போன்ற எந்த சடங்கும் நடத்தப் பெறாமல் நடைபெற்றுள்ளது. இப்படி நடப்பது (Customary Marriage) வழமையான வகை திருமணமா என்றால் அதுவும் இல்லை! எனவே இது இந்து சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல.

“யாரோ சிலர் கூடி, தங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் இத்திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும் அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளைகளுக்கு தகப்பன் சொத்தில் பங்கும் பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு உண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியாள் பிள்ளைகளாகவே கருதப் படுவார்கள்!” என்று தீர்ப்புக் கூறினார்கள்.!

இதைக் கண்டு இயக்கத்தினர் கொதித்தனர் என்றாலும் சுய மரியாதைத் திருமணங்கள் பெருகினவே தவிர, குறையவே இல்லை!

சிதம்பரம் – (ரங்கம்மாள்) சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரபல பார்ப்பனர் ‘திருப்புகழ்மணி’ டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற ஓய்வு பெற்ற திருவிதாங்கூர் இராஜ்ய முன்னாள் தலைமை நீதிபதி என்றாலும் இத்தகைய தீர்ப்பு தான் !

சாஸ்திரங்களில் இருந்து…
இத்தீர்ப்புக்கு அடிப்படையாக – ஆதார சுருதிகளாக, நாரதர், யக்ஞவல்கியர், பராசர் ஸ்மிருதிகள் – இந்து சாஸ்திரங்களை எல்லாம் ஏராளமாக அந்த பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்!

அந்த 4 பிள்ளைகளில் (இரு ஆண்கள் இரு பெண்கள்) ஒருவர் தான் திருமதி மோகனா வீரமணி ஆவார்!

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்பதால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைக் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று என்றாலும், அதற்கு பரிகாரம் எமது காலத்தில் – கண்ணெதிரில் தேடப்பட்டு – அவமானம் – “வைப்பாட்டி மக்கள்” என்ற அவமானம் துடைத் தெறியப்பட்டது.

1954-இல் தனி திருமணச் சட்டத்தினை (இதுபோன்ற சடங்கு சம்பிரதாயம் ஒழிந்த முறை விரும்புவோருக்கு வாய்ப்பாக) Special Marriage Act 1954-இல் மத்திய அரசாங்கம் (ஊநவேசயட ஹஉவ) ஆகக் கொண்டு வரப்பட்டது.

திரு. ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் (அப்போது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறவில்லை) முதலமைச்சராக ஆண்டபோதுதான் சீர்திருத்தத் திருமணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா ஒன்று 1953-இல் அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது.

‘The Hindu Non-Confirming Marriage Registration Bill 1953’ என்ற அந்த சட்ட வரைவில் இயற்கையான தமது சூழ்ச்சியை நுழைத்தார் ஆச்சாரியார். அதாவது இதுகாறும் நடந்த சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாக மாட்டா என்றும் இனி நடக்கும் திருமணங்கள் சட்டப்படி செல்லுமென்றும் மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இதைத் தந்தை பெரியார் கண்டித்து எழுதினார்.
சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியிலிருந்த தஞ்சை வழக்கறிஞர் சுயம்பிரகாசம் எம்.எல்ஏ தலைமையில் இயங்கிய ‘திராவிடப் பார்லிமெண்டரி கட்சியினர்’ இத்திருமணம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டுமென்று வாதாடினர். அக்கட்சியைச் சேர்ந்த துறையூர் பி. ரெங்கசாமி (ரெட்டியார்) எம்.எல்.ஏ., அவர்கள் இதற்காக மிகவும் முயற்சி எடுத்து, ஒரு மசோதாவையே தயாரித்தார். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாக்க வேண்டியது அவசியம்தான் என்று முதலமைச்சர் ஆச்சாரியார் ஒப்புக்கொண்டார். அதற்கான முயற்சி எடுக்கப்பட்ட நேரத்தில் அவரது அமைச்சரவை பதவி விலக நேரிட்டது. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பிடிவாதம் காட்டியதன் காரணமாக ஆச்சாரியாரின் ஆட்சியை தந்தை பெரியார் அவர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். அவரது கட்சிக்குள் மிகவும் கடுமையான எதிர்ப்புத் தோன்றியது. அதன் காரணமாக அவர் பதவி விலகினார்.

தடை ஏற்பட்டது
சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவமாக்கப்படும் முயற்சி இதன் காரணமாகத் தடைப்பட்டது.
திரு. காமராசர் அவர்கள் ஆச்சாரியாருக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடைய ஆட்சிக் காலத்தில் 1957-இல்தான் முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிட முடிவெடித்து, போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சி அணியில் அமர்ந்தது.

அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் அதன் கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அக்கட்சி சட்ட மன்ற உறுப்பினராகிய திரு. களம்பூர் அண்ணாமலை அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட வடிவமாக்கவேண்டுமென்று தீவிரமாகப் பேசினார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையிலும் வற்புறுத்தியது.

ஆனால், அன்று ஆளுங்கட்சியின் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு இணங்கவே இல்லை.

தந்தை பெரியார் அவர்களது ஆதரவினையும், திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பையும் பெற்ற நிலையில் அவருக்கு உகந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட பூர்வமாக்கச் செய்ய ஏன் காமராசர் அரசு தயங்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் குத்திக் காட்டியும் பேசினார்கள் என்ற போதிலும், காமராசர் ஆட்சி இதற்குச் சட்ட வடிவம் கொடுத்திட முன் வரவில்லை. ஏதேதோ சாக்குப் போக்குகள் கூறி இதனைத் தவிர்த்திடவே அவர்கள் முயற்சிகள் செய்தனர்.

அதன் பிறகு வழக்குரைஞர் திரு. எஸ்.மாதவன் (பத்து ஆண்டுக்குப்பின் தி.மு.க. ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆனவர்) ஒரு தனியார் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். அதனை எதிர்த்த அப்போதைய காங்கிரஸ் சட்ட அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் (பின்னால் இவர் குடியரசு தலைவராக ஆனவர்) மிகவும் ஆணவமாக பதில் கூறி, இதனைத் தோற்கடிப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். பெரும்பான்மை இருந்த காரணத்தால் அத்தீர்மானம் அன்றைய ஆளுங்கட்சியினராகிய காங்கிரஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது!

சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக எழுப்பிய வினாவுக்கு விடையளித்த அமைச்சர் பக்தவத்சலம், “சம்பிரதாயமான சடங்குகள் இல்லாத முறையில் நடத்தப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களை சட்ட பூர்வமாக்கும் வகையில் மசோதா கொண்டு வரும் எண்ணம் சர்க்காருக்கு இல்லை” என்று கூறினார்.
“ஏன் இல்லை, என்பதே நம் கேள்வி” என்று தந்தை பெரியார் ‘விடுதலை’ தலையங்கத்தில் ஆத்திரம் பொங்க வினா எழுப்பி சுயமரியாதைத் திருமணத்தின் தன்மையினை விளக்குகிறார்.- ‘விடுதலை’, 02.09.1959

வாழ்க்கை ஒப்பந்தங்களைக் கணக்குப்பிள்ளை மணியக்காரரிடம் பதிவு செய்து கொண்டால் அதுவே போதும் என்ற நிலை வர வேண்டும். என்று 02.09.1964 அன்று திருச்சி தங்கவேலு – பாக்கியம் திருமணத்தில் உரையாற்றினர் (‘விடுதலை’ 07.10.1964)

நாடு தழுவிய மணம் என்றாலும், நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளம் வழக்கம்போல் நடைபெற்ற வண்ணம் இருந்தன. புரோகித, வைதிக முறைத் திருமணங்கள் வெகுவாகக் குறைந்து வரவே செய்தன.

தந்தை பெரியார் அவர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி தமது சுயமரியாதைச் சூறாவளிப் பிரச்சாரத்தை நாட்டின் மூலை முடுக்கெங்கும் செய்துகொண்டு வந்த காரணத்தால், தன்மான உணர்வு பெருகிய நிலையில், தமிழரின் சுயமரியாதைத் திருமண முறையையே பெரிதும் விரும்பினர். அரசியலில் மாற்றுக் கருத்துள்ள தமிழர்கள்கூட, இம்முறையைப் பெரிதும் பாராட்டி வரவேற்றனர். எனவே, இது நாடு தழுவிய, சமுதாயம் பெரிதும் ஏற்ற ஒரு திருமண முறையாகவே ஆகிவிட்டது.
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற சட்டத் தீர்ப்பே, ஒரு தலைமுறைக்குப் பின்னர்தான் வந்தது. ஒரு தம்பதியர்க்கு மண முடித்து, அவர்களது பிள்ளைகளுக்கும் சுயமரியாதைத் திருமணம் முடிந்து, அந்த தம்பதியர்க்கு குழந்தைகள் பிறந்த நிலையில்தான் (சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று) தீர்ப்பு வெளிவந்தது!

லட்சியம் செய்யவில்லை
ஆனால், அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள, சட்ட விளைவுகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் – லட்சியம் செய்யாமல் – நாட்டில் பல்லாயிரக்கணக்கில் நடைபெற்ற இத்திருமண முறையின் மூலம் பெருகிய குடும்பங்களும் பல்லாயிரக் கணக்கில் இருந்தன. பெரியார் சட்டமே அவர்களுக்கு முக்கியம்.

1964-ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு சட்டக் கருத்தரங்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.ஆனந்த நாராயணன் அய்.சி.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. ஜஸ்டிஸ் ஆர். சதாசிவம் அவர்கள், சுயமரியாதைத் திருமணங்களை சட்ட பூர்வமாக ஆக்குவது மிகவும் அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.

சட்டப்படி, சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளை சட்ட பூர்வமற்ற குழந்தைகள் (Illegitimate children) என்று ஆக்கிவிட்ட நிலையில், அதனை லட்சியம் செய்யாது பல்லாயிரக்கணக்கில் திருமணங்கள் நடைபெற்று, அவர்களின் வம்சாவழியினர் பெருகியுள்ள நிலையில், இது ஒரு சட்டச்சிக்கலை எதிர்காலத்தில் நிச்சயம் உண்டாக்கும்.

இவர்களது சட்ட பூர்வமான அந்தஸ்தை நிர்ணயிக்க பல சட்டக் கற்பனைகளை (Legal fiction) நாடவேண்டியிருக்கும். எனவே, இந்த விளைவுகளையெல்லாம் எண்ணி, சுயமரியாதைத் திருமணங்களை எவ்வளவு விரைவில் சட்ட பூர்வமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இதனைச் சட்ட பூர்வமாக்க வேண்டும் என்று கருத்தரங்கில் கூறினார் அவர்!

வைதிக உணர்வும், ஆழ்ந்த மதப்பற்றும் கொண்டு, எப்போதும் பழுத்த சைவத்திருமேனியராகக் காட்சியளித்த போதிலும், சட்ட ரீதியான பிரச்சினைகளை தெளிவாகச் சிந்தித்து, தமக்குச் சரியென்று பட்ட கருத்தினை ஒளிவு மறைவின்றி எடுத்து முன் வைத்தார் ஜஸ்டிஸ் திரு. சதாசிவம் அவர்கள்!

சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட வடிவமாக்க வேண்டும் என்பது திராவிட இயக்கத்தினரின் ஏதோ ஒரு வகையான கொள்கைப் பற்றின் அடிப்படையில் எழுந்த கூச்சல் என்ற நிலையிலிருந்து நாட்டின் நீதிபதிகளும் சட்ட மேதைகளும்கூட இதனை வற்புறுத்தவே செய்கிறார்கள்; சட்ட நிபுணர்களின் கருத்துகளும் இதற்கு உடன்பாடானவைகளே என்பதை நாட்டில் தெளிவாக ஆட்சியாளருக்கும் விளக்கும் வண்ணம் ‘விடுதலை’ ஏடு தந்தை பெரியார் அவர்களது 84-ஆவது பிறந்த நாள் விழா மலர் வெளியிட்டபோது, அம்மலரில் ஜஸ்டிஸ் திரு.சதாசிவம், அன்றைய பிரபல வழக்கறிஞர்களான திரு. மோகன் குமாரமங்கலம், திரு. எஸ். மோகன் (இன்று உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று உள்ளார்) ஆகியோரது கட்டுரைகளும், சென்னை சட்டமன்றத்தில் திராவிடப் பார்லிமெண்டரி கட்சியில் பணியாற்றி சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவமாக்கிட முனைந்த துறையூர் வழக்கறிஞர் திரு.ரெங்கசாமி ரெட்டியார் அவர்களது கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. (மேலும் அவர்களின் விவரமான கருத்துகளை அறிய சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும் நூலைப் படிக்க…)

சட்ட வடிவம்
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்போம் என்பதை மீண்டும் அவர்கள் வலியுறுத்தினார்கள். 1957 முதல் 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களின்போதும் தி.மு.க. இதனை வலியுறுத்தியே வந்தது!

“சுயமரியாதைக் கொள்கை சுயமரியாதை மணமுறை பல தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அடிப்படையில் இதுவரை நடை பெற்றுள்ள திருமணங்களும் இனி நடைபெறவிருக்கும் திருமணங்களையும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.”
– தி.மு.க. மாநில மாநாட்டில் திருச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், (27.5.1956)
அன்றைய காங்கிரஸ் கட்சியினரோ சட்ட மேதைகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்கள் வலியுறுத்தியும்கூட சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்திட முன்வராது, பழைய பிடிவாதத்தைத் தளர்த்தவே முடியாது என்று மறுத்துரைக்கவே செய்தனர்.

1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. கைப்பற்றியவுடனேயே அதன் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியின்போதே சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கும் முயற்சிகளை, செய்து அதனைத் தந்தை பெரியார் அவர்களது காலடியில் வைப்போம் என்று முழங்கினார்! சொன்னபடியே செய்தும் காட்டினார்!

1967-இல் அய்யாவுடன் அண்ணா (முதல் அமைச்சரான நிலையில்) குடந்தையில் நண்பர் திரு. ஏ.ஆர். இராமசாமி அவர்கள் இல்லத்து மணவிழாவில் கலந்து கொள்ள வந்தார்; அய்யாவுக்கு உடல் நலக் குறைவு – 104 டிகிரி காய்ச்சல் – எனவே மருத்துவர் கட்டளைப்படி வர இயலாத நிலை என்பதை அறிந்த அண்ணா, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு தவறாமல் வரும் அய்யாவின் முதுமைக் காலத்தில் அவர் இப்படி திடீரென்று நோய் வாய்ப்பட்டது அறிய சங்கடப்பட்டு, நேரே திருச்சி சென்று பார்த்தார்; அய்யாவை சென்னை பொது மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறும்படியும் கேட்டுக் கொண்டார். அய்யாவும் அடுத்து வந்து சென்னை பொது மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்கள்.

அங்கேயும் வந்து பார்த்தார் அண்ணா. அண்ணாவுக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை அய்யா காலத்தில் நிறைவேற்றி அவரை மகிழ்விக்க வேண்டுமென்ற பெரு விருப்பம். சட்டமன்றத் தொடரில் அச்சட்டத் திருத்தம் வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அய்யாவிடம் ‘என்னை (கி.வீரமணி) சட்ட அமைச்சர் திரு. மாதவனைப் பார்க்க அனுப்புமாறு சொன்னார். அய்யாவும் அனுப்பினார். சுயமரியாதைத் திருமண மசோதாவின் வரைவு (Draft) என்னிடம் தரப்பட்டது. அய்யாவிடம் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு.

பொது மருத்துவமனையில் நலமாகி வரும் அய்யாவிடம் காட்டினேன். மகிழ்ந்தார். அதனை இரண்டு படிகள் எடுத்து, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றொரு சட்ட வல்லுநர் இருவரிடம் தனித்தனியே கொண்டு காட்டி இதில் ஏதாவது ‘ஓட்டை’ உண்டா? நாளை கோர்ட்டுக்கு போனால் இச்சட்டம் செல்லாது என அடிபட வாய்ப்பு உண்டா? என்று கருத்து கேட்டு வருமாறு (அய்யாவின் பிரதிநிதியாக) என்னை அனுப்பினார் – இது ரகசியத் தூது – ஆட்சியாளரும் அறியாத ஒன்று!

தந்தை பெரியாரின் திருத்தம்
அவர்களும் ஒப்புதல் முத்திரை தந்து விட்டனர். வந்த பிறகு படிக்கச் சொன்னார். வரிவரியாக நானும் படித்தேன். ‘நிறுத்துங்கள்’ என்றார். மாலை மாற்றிக் கொண்டோ, மற்றபடி உறுதி மொழி கூறிக் கொண்டோ என்றெல்லாம் போட்டு விட்டு வரைவு மசோதாவில் ‘And tying of thali’ அதோடு தாலி கட்டியும் என்ற சொற்றொடர் இருந்ததை அய்யா சுட்டிக் காட்டி ‘And’ என்று இருப்பதற்கு பதில் ‘Or’ என்று மாற்றுங்கள். ‘Or’ என்றால் அது கட்டாய அம்சமாகி விடும்; ‘Or’ என்றால் ‘தாலி கட்டலாம்; தாலி கட்டாமலும் சுயமரியாதை திருமணம் இருக்கலாம் என்று ஆகும் – இல்லையா என்றார்!

‘ஆம்’ என்று கூறி நான் திருத்தி – புதிதாக டைப் செய்து முதல்வர் அண்ணா இல்லத்தில் இரவு 12 மணி அளவில் – அப்போதுதான் எவருடைய ‘தொல்லையும்’ இல்லாமல் கோப்புகளை பார்க்கும் வழமையாகும். அங்கே என்னை அப்போதுதான் வரச் சொல்லி அனுமதிப்பார். – இப்படி பல முறை சென்றுள்ளேன்.

அவரது தனிச் செயலாளர் கே. சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., மற்றவர் மாடியிலிருந்து கீழே வந்து விடுவார். நான் அண்ணாவைப் பார்த்து இச்சட்ட மசோதா வரைவினைத் தந்தேன்.

‘அய்யா ஏதாவது திருத்தம் சொன்னாராப்பா?’ என்று ஒரு சிறு குழந்தை ஆர்வத்தோடு முந்திக் கேட்பது போல் அவசரமாக ஆர்வத்துடன் அண்ணா கேட்டார்.

நான், ‘And-அய் அகற்றி ‘Or’ போட்ட’ அய்யாவின் கருத்துப் பற்றி சொன்னபோது, அவர் வியப்புடன் “நீ எம்.ஏ., பி.எல்., நான் எம்.ஏ., அரசு, சட்ட இலாகா எல்லாம் இருந்தும்கூட அய்யாவின் பொது அறிவுக்கூர்மை எப்படிப்பட்டது பார்த்தாயா?” என்று வியந்து மகிழ்ந்து கூறி பாராட்டினார்!

மசோதாவை சட்டமன்றத்தில் முன்மொழிவதற்குமுன் தனது செயலாளர் கே.சொக்கலிங்கம் அவர்களை அழைத்து காதோடு காதாக அய்யா சொன்ன திருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டுத்தான் முன் மொழிந்தார்! அன்று நான் அவையில் பத்திரிகையாளனாக ‘விடுதலை’ சார்பில் இருந்தேன். பிறகு காதோடு காதாகச் சொன்ன இதுபற்றி கே.சி. (கே.சொக்கலிங்கம்) என்னிடம் கூறினார்!

தந்தை பெரியாருக்குக் காணிக்கை
அப்போது தந்தை பெரியார் அவர்கள் சென்னை பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகையில், சென்னை சட்டமன்றத்தில் தியாகி மானியம்பற்றி ஒரு கேள்வி பதில் எழுந்த நிலையில், தாம்பரத்திலிருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான திரு. முனுஆதி எம்.எல்.ஏ., அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கும், இந்த அரசு தியாகி மானியம் அளிக்குமா என்று ஒரு துணைக் கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டுள்ள காணிக்கையாகும்’ என்று குறிப்பிட்டார்.

இச்செய்தியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையவர்களிடம் தெரிவித்தபோது, படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து மகிழ்ச்சியுடன், “இதனால் என் பாதி வலி குறைந்தது” என்று மனப்பூர்வ மகிழ்ச்சியையும் தெரிவித்ததன் மூலம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்தார்!

இந்து திருமணச் சட்டத்தின் திருத்தமாக சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாகும் மசோதாவைச் சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, யாரும் இதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

திரு.எச்.வி ஹண்டே சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர். இந்து மதத்தின்மீதுதான் எதற்கெடுத்தாலும் கை வைக்கிறீர்கள். ஏன் மற்ற மதத்தினரைப்பற்றி கவலைப்படவில்லை என்று தான் கேட்டாரே தவிர, அவரும்கூட சுயமரியாதைத் திருமண முறையைச் சட்ட பூர்வமாக்கும் முயற்சி கூடாது என்று வாதாடவில்லை!

1955-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்து திருமணச் சட்டத்திற்கு இதை ஒரு திருத்தமாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதே அம்மசோதாவாகும்!

சட்டமன்றத்தில் இம்மசோதாவைத் தாக்கல் செய்தபோது அனைத்துக் கட்சியினரும் இதனை எதிர்க்காமல் வரவேற்கவே செய்தார்கள்! அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.பி.ஜி.கருத்திருமன் அவர்களுக்கும், முதலமைச்சர் அறிஞர் அண்ணாவிற்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் மிகவும் சுவையாக இருந்ததோடு, ஒரு கலகலப்பையும் ஏற்படுத்தியது.

சட்டமன்றத்தின் விவாதத்திற்கு பிறகு 27.11.1967 அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டமன்ற அவையிலும், பிறகு மேலவையிலும் நிறைவேறிய பிறகு 17.1.1968-இல் ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று 20.1.1968-இல் சென்னை அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டவடிவமாகியது.

முந்தைய திருமணங்களும் செல்லும்
அப்போது நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்கள் மட்டும் செல்லுபடியாகும் என்ற நிலையில்லை. இதற்குமுன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும் என்ற நிலையில் இச்சட்டத்தின் அமல் பின்னோக்கித் தள்ளப்பட்டு, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சட்டமற்ற மனைவி சட்டபூர்வமற்ற குழந்தைகள் (Illegitimate Children and Illegitimate Wives) என்ற அவப்பெயர் நீங்கி, அனைவருக்கும் சட்ட அந்தஸ்து இதன்மூலம் கிடைத்தது. மானவாழ்வைப் பெற்றனர் மக்கள் !

பேரறிஞர் அண்ணா அவர்கள் இதனை தமது ஓராண்டு கால ஆட்சியின் வரலாற்றில் புகழ் ஓங்கிய முப்பெரும் சாதனைகளில் ஒன்று என்று வர்ணித்தார்.

சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றிய நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பி ஓய்வுடன் இருந்த பிறகு அவர் பேசிய முதல் கூட்டம் அது!

“சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டவடிவம் கொடுத்தது,
இந்தியைப் பள்ளிகளிலிருந்து நீக்கியது,
சென்னையை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றியது
ஆகிய இம்மூன்றும் தி.மு.க. ஆட்சியின் வரலாற்றைப் புகழ்வாய்ந்த ஓராண்டுகால முப்பெரும் சாதனைகள் ஆகும் என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. ஆட்சியில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள்; சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கினார்கள் என்றால் அதன் கருத்து தங்களுக்குக் கடவுள் மதம் சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பதேயாகும்.
5.6.1970 அன்று கொட்டாம்பட்டியில் தி.க.
பொதுக்கூட்டத்தில் உரை ‘விடுதலை’ 25.6.1970 ப.3.

காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தோழரும் சுயமரியாதை இயக்கத்தில் ஆரம்பகாலத் தோழர்களில் ஒருவருமான தோழர் ப.ஜீவானந்தத்தின் மகள் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தமது பெரியார் மாளிகையில் தாமே முன்னின்று நடத்தி வைத்தார். முதலமைச்சர் அண்ணாவும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டார்கள்.
1953இல் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த அதே சென்னை உயர்நீதிமன்றம் 60 ஆண்டுகளுக்குப்பின் கீழ்கண்ட தீர்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தள்ளுபடி
“இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர், பர்மா நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்றுவிட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் – இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.

சீர்திருத்த சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இதில் ஒரு நீதிபதி வடக்கே டெல்லியிலிருந்து வந்து பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகிய பார்ப்பனர் மற்றொருவர் பார்ப்பனரல்லாத ‘முன்னேறிய ஜாதி’ தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக