வியாழன், 11 மே, 2017

'தினமலரில்' இரு கட்டுரைகள் திராவிடர் இயக்கத்தின்மீது 'திராவக' வீச்சு!

கவிஞர் கலி. பூங்குன்றன் 

"ஸ்டாலின் விருப்பமும் - திராவிட நாடும்" எனும் தலைப்பில் 6.5.2017 நாளிட்ட தினமலரில் மூத்த பத்திரிகையாளர் பா.சி. ராமச்சந்திரன் என்பவர் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். தலைப்பு அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தாலும், கட்டுரைக்குள்ளே தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் சகட்டு மேனிக்கு அவதூறுகள் பொழியப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு நாள் கழித்து "பிராமண துவேஷம் வளர்ந்த கதை"  எனும் தலைப்பில் டாக்டர் சு. அர்த்தனாரி என்பவர் (இவர் இதய நோய் சிகிச்சைப் பேராசிரியர்) எழுதியுள்ளார். இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தவரையும் அதன் தலைவர்களையும் சீண்டுவது என்பது வாடிக்கையாகி விட்டது.

எழுதியவர்கள் எந்த அளவுக்கு "விவரம் தெரிந்தவர்கள்" என்பதற்கு ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைத் தெரிவித்தாலே போதுமானது.
1930களில் சென்னை நகரில் உள்ள சில பிராமணரல்லாத பணக்கார பேர் வழிகள் ஒரு கட்சியைத் துவக்கினர்! அதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இதில் ஈ.வெ.ரா.வும் அடக்கமாம்.

1916ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்பது - மூத்த பத்திரிக்கையாளருக்குத் தெரியவில்லை. இனமலரின் பத்திரிக்கா தர்மம்!

அப்படி அந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது தந்தை பெரியார் அதில் கிடையாது என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
இன்னொரு கூற்றைக் கேளுங்கள் 1927இல் ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தாராம். எந்த வரலாற்று நோட்டில் இவர் படித்தாரோ தெரியவில்லை.

பொதுவாக திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் குறிப்பாகப் பார்ப்பனர்கள் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், தான் தோன்றித்தனமாக எழுதுவது என்பதை ஒரு வழமையாகக் கொண்டுள்ளனர். இத்தகு எழுத்து முறைகளுக்கு 'சோ'யிசம் என்று ஓர் அடைமொழியைக் கொடுத்து விடலாம்.

இந்த இரண்டு கட்டுரைக்குள்ளும்கூட முரண்பாடுகள் மொத்தமாகவே கிடைக்கின்றன. அதே நேரத்திலே ஒரு கட்டுரைக்குள்ளேயே முன்னுக்குப்பின் முரண்பாடுகளும் பிய்த்துத் தின்னுகின்றன.

தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா., காமராஜ் ஆகியோருக்கு தனியாக வெளியே திண்ணையில் உணவை வைத்தும், மற்ற பிராமணர்களுக்கு பிரமுகரின் வீட்டின் உள்ளேயும் சாப்பாடு பரிமாறினர். அவர்கள் இருவரும் சாப்பிட்ட இலையை மாலை வரை யாரும் எடுக்கவில்லை. (கருத்து சரிதான் என்றாலும் அதைக்கூட சரியாக சொல்லத் தெரியவில்லை;

தந்தை பெரியாரும் எஸ்.சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய் திண்டுக்கல்லுக்கு ஒரு பார்ப்பனர் வீட்டுக்குச் சென்றபோதும், மற்றொரு சமயம் தஞ்சை திருவேங்கடசாமி பிள்ளையும், தந்தை பெரியாரும் பெரிய குளத்துக்குச் சென்றபோதும் தனியே வைத்து சாப்பாடு போடப்பட்டனர். காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைப் பக்கத்தில் இராத்திரி  சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும் ஈக்களும் மொய்த்திருந்தன. (குடிஅரசு 10.1.1948).

"சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் தீவிர ஆச்சாரம் மிக்கவர்கள். அவர்கள் நடத்தும் குரு குலங்களில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடுகள் இருந்தன. இதை ஈ.வெ.ரா. எதிர்த்தார்" என்று எழுதிவிட்டு வேறுபாடு காட்டியவர்கள் துவேஷிகள் அல்லர் - வேறுபாடுகளைக் காட்டியவர்களை எதிர்த்தவர்களை பிராமண துவேஷிகள் என்று எழுத முடிகிறது என்றால் இந்தக் கூட்டத்தை மனநல மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் எம்.கே. ஆச்சாரியா என்ற பார்ப்பனர் என்ன பேசினார் தெரியுமா?

"ஒரு பிராமண சிறுவன், ஒரு பிராமணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால், இதற்காக நான் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன்" என்று பேசினாரே இதற்கு என்னவென்று பெயராம்?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள், துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் சொன்னதுதான் இந்த இடத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

முதலில் தங்களை பிராமணன் பிராமணன் என்று சொல்லுவதே மற்றவர்களை மறைமுகமாக சூத்திரன் என்று சுட்டிக்காட்டி கீழ்மைப்படுத்துவது தானே! சூத்திரன் என்றால் என்ன பத்மபூஷன் பட்டமா? மனுதர்ம சாத்திரத்தின்படி வேசிமகன் (அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று சொல்லுவதுதானே!

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்னை மாகாண மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட எப்படிக் கூறப்பட்டது?

பிராமணர்கள் 3.4% சூத்திரர்கள் 94.3% மனுகாலத்தில் கிளம்பிய இந்தத் துவேஷம் ஆங்கிலேயர் ஆட்சிவரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே!

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்பதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் போராடி, திமுக ஆட்சியில் சட்டம் செய்தபோதும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் சென்றார்களே - அதன் உள்ளடக்கம் என்ன?

வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி, கோயில் கருவறையில் உள்ள மூல விக்ரகத்தைத் தொட்டு சூத்திரன் அர்ச்சனை செய்தால் சாமி சிலை தீட்டாகி விடும் - செத்துப் போய் விடும் - அதற்காகப் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும், புதிய கலசங்கள் செய்து வைக்க வேண்டும்; பிராமணப் போஜனம் நடத்தப்பட வேண்டும். சம்ரட்சணம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டதே - இதன் பொருள் என்ன?

இந்த மண்ணுக்குரிய 97 சதவீதமுள்ள பெரும்பான்மை மக்களை இதைவிட இழிவுபடுத்த முடியுமா? துவேஷச் சேற்றைத்தான் முகத்தில் வாரி இறைக்க முடியுமா?

கடவுள் தீட்டாகிவிடும், செத்துப் போய்விடும் என்று சொல்லுகிறோமே என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் அதைவிட முக்கியம் பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்த வேண்டும் என்ற நச்சுக் கொடுக்குத் தான் அம்பிகளுக்கு முனை முட்டி நிற்கிறது.

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று அரசு சட்டம் போட்டால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவது துவேஷம் இல்லையா? பூஜை வேளையில் சங்கராச்சாரியார் நீஷப் பாஷையில் (தமிழில்) பேச மாட்டார் என்று கதைப்பதெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறோம் என்று கருத வேண்டாம்.

பார்ப்பனர்களின் இந்தப் பாழ்பட்ட புத்தியினால்தான் பரிகசிக்கப்படும் நிலை தமிழ் மண்ணில் மலர்ந்திருக்கிறது. இன்று வரை இந்த ஜென்மங்கள் திருந்திய பாடில்லை என்பதற்கு அடையாளம்தான் தினவெடுக்கும் 'தினமலரின்' கட்டுரைகள்!

திராவிடர் என்பதே வடசொல்தான் இது தெரியாமல் திராவிடர் கழகத்தைத் துவக்கினார் ஈ.வெ.ரா. என்கிறது தினமலர். திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரைவிட ஆய்வுத் திலகங்கள் இவர்கள் - அதனால் இவர்கள் சொல்லுவதை நாம் ஆமோதித்துத்தானே தீர வேண்டும்.

சரி அவர்கள் சொல்லுகின்ற வழிக்கே நாம் செல் லுவோம் திராவிடம் என்பது வடசொல் என்று ஏற்றுக் கொள்பவர்கள் ஆரியர் என்ற வடசொல்லையும் ஏற்றுக் கொண்டு, நாட்டில் வரலாறு நெடுக நடைபெற்ற ஆரியர் - திராவிடர் போராட்டத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! அங்கு மட்டும் ஏன் பதுங்கல் - பம்மாத்துத்தனம்!

ஆரியப் பார்ப்பனர்கள் - இந்தியாவுக்குள் நாடோடிகள்போல் வந்து சேரும் முன்பே திராவிடர்கள் வட இந்தியாவிலும் வாழ்ந்து வந்துள்ளார்களே. சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்று அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும், வெளிநாட்டு தொல் பொருள் ஆய்வுகளும் மெய்ப்பித்திருக்கின்றனவே இதன் பொருள் என்ன? ஆரியர் வருவதற்கு முன்பே திராவிடர் இங்கு வாழ்ந்து வந்த நிலையில் திராவிடம் எப்படி வட சொல்லாகும்?

ராஜாஜியைப் பார்ப்பனர் என்று ஈ.வெ.ரா. குரல் கொடுத்தார் என்கிறார் கட்டுரை ஆசிரியர் ஆம். அதிலென்ன? ஆச்சாரியாரே முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணனாக இருப்பதில்தான் எனக்குப் பெருமை என்று சொன்னவராயிற்றே!

In fact in one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan Apirl (1) 1918 Gandhiji's crusade against casteism)

இன்னும் பூணூல் கல்யாணத்தை நடத்திக் கொண்டும், ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டும் தங்களின் பிறவி ஆதிக்கத் திமிரை உச்சிக் கொம்பில் ஏறிக் கொண்டு கொக்கரிக்கும் கூட்டம் வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று கோணங்கி ஆட்டத்தையெல்லாம் போட்டுக் கொண்டு திரிவது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

பெரியாருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் பேச முடிவதில்லை. 
அவரால் எப்படி மதன்மோகன் மாளவியாவிடமும், நேருவுடனும், காந்தியுடனும் பேச முடியும்? இப்படியொரு வாதத்தை முன் வைத்திருக்கிறது தினமலர் கட்டுரை.

தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்திருக்கிறார் நகர மன்றக் கூட்டங்களின் நடவடிக்கைகளை அவர் ஆங்கிலத்திலேயே எழுதி இருப்பதை அறியாத பேச்சு இது.

காந்தியார் ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்திற்கே வந்து தங்கியுள்ளார். பெங்களூருவில் காந்தியாருடன் இரண்டு மணி நேரம் விவாதம் செய்திருக்கின்றார்.

உலக மேதை அண்ணல் அம்பேத்கருடன் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறார். கான்பூர் மாநாட்டில் முழு உரையையும் ஆங்கிலத்திலேயே நிகழ்த்தி இருக்கிறார். அன்றாடம் ஆங்கில ஏடுகளையும்  படிக்கக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்!

இந்த வரலாறு எல்லாம் தெரியா விட்டால் வாயை மூடிக் கொண்டு கவிழ்ந்து கிடக்க வேண்டும்.

ஆனால், அது அவர்களின் நோக்கமல்ல; தந்தை பெரியார் சமூகநீதிக்காகக் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதை மறைக்க வேண்டும் - அந்த உண்மை தெரிய வந்தால் அது அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! இவர்கள் இருட்டடித்து விட்டால் இந்த பூணூல் பூனைகள் கண்களை மூடி விட்டால் பூலோகமே இருண்டு விடுவதாக ஒரு நினைப்பு!

காங்கிரசில் பெரியார் மட்டுமல்ல; அவரின் குடும்பமே எப்படி ஈடுபட்டது என்பது காந்தியாருக்குத் தெரிந்திருக்கிறது - இந்தக் கனக விஜயர்களுக்குத் தெரியவில்லையே!

மதுவிலக்குப் போராட்டத்தை தொடர்வதா, நிறுத்துவதா என்பது என் கைகளில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது என்று பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் சொன்ன தாத்பரியத்தை அறிவார்களா இந்த அக்ரகாரவாசிகள் அந்த இரு பெண்மணிகளும் வேறுயாருமல்ல;

தந்தை பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையாரும், தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும்தான் என்பதை இப்பொழுதாவது தெரிந்து கொள்வது நல்லது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையார் இருந்தார்  என்பதெல்லாம் தெரியுமா?

சென்னை மாநில காங்கிரஸ் தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர் பெரியார் என்பதைக் கூட தெரியாமல் கிறுக்குவதுதான் மூத்த  பத்திரிக்கை யாளர்களுக்குத் தகுதியோ?

குருமூர்த்திகளுக்கும், பாரதிய ஜனதா பார்ப்பனர் களுக்கும் தந்தை பெரியாரின் அருமை தெரியாமல் இருந்திருக்கலாம். அவாள் ஆத்து மூதறிஞர்  உடம் பெல்லாம் மூளை என்று வருணிக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மூலம் தெரிந்து கொள்ளட்டும்.

"முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் (1924 ஜூன்). அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ. இராமசாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ் காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை.

"சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்றுதான் இராமசாமி நாய்க்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக  (head and active master)அவர் இருந்து வந்திருக்கிறார்" என்று ராஜாஜி இரயிலிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தியார் பக்கம் 392-393)

இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் கூழ் முட்டைகளை உடைத்து ஆம்லெட் போடுகிறது 'தினமலர்'

-விடுதலை,11.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக