புதன், 24 மே, 2017

இந்து -தமிழர் சூத்திரரா?

13.11.1943  - குடியரசிலிருந்து...

திராவிட நாட்டிலுள்ள திராவிட இந்துக்கள் ஆதிதிராவிடர்கள் உள்பட தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் மலையாளிகள் ஆகியவர்கள் சமுதாயத்தில் தங்களைக் கீழான ஜாதி என்றும் சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள்(பார்ப்பனர்கள்) அழைத்து இழிவுபடுத்துவதைப்பற்றி மிக மிக ரோஷப்படுகிறார்கள்.

சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி உன்னை எவனாவது சூத்திரன் என்றால் நீ அவனை மிலேச்சன் என்று கூப்பிடு என் றெல்லாம் உணர்ச்சி வார்த்தைகள் சொல்லுகிறார்கள்.

வெள்ளைக்கார ராஜ்ஜியம் ஏற்பட்டு 200 வருஷமாகி இன்னமும் சூத்திரராய்த், தீண்டத் தகாதவராய், ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவராய் இருக்கிறோமே என்று சர்க்கார் மீதும் பாய்கிறார்கள். இது சரியா?

இதற்குக் காரணம் பார்ப்பனரும் சர்க்காருமா? அல்லது நாம் தானா? என்பதை நன்றாய் சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

ஒரு மனிதர் அவர் சர் ஆனாலும் சரி, ராஜா சர் ஆனாலும் சரி, மகாராஜா சர் ஆனாலும் சரி; சிறீலசிறீ மகா சன்னிதானம் ஆனாலும் சரி, இன்னும் யாராயிருந்தாலும் சரி, இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு அந்தப் பட்டியில் பதிவாகி இந்துமத சம்பிரதாயப்படி தங்கள் சமுதாய, குடும்ப, ஆச்சார, அனுஷ்டான பூசை காரியங்களைச் செய்து கொண்டும் வந்தால் அந்த இந்து மத முறைப்படி இவர்களை சூத்திரன் என்று அல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது?

சமுதாய முறையில் இவர்களை எங்கு நிறுத்தி வைப்பது? என்பதை ஒவ்வொரு திராவிட இந்துவும் யோசித்துப் பதில் சொல்லவேண்டும் என்று விரும்புகின்றோம். இந்து மதம் என்பதற்கு இஸ்லாம் மதத்தைவிட, கிறிஸ்தவ மதத்தைவிட வேறு மாறுதல் என்ன என்று பார்த்தால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன் என்கின்ற பஞ்சவர்ண பேதம் அல்லாமல் வேறு என்ன முக்கிய வித்தியாசம் இருப்பதாய்ச் சொல்லக்கூடும்?

கிறிஸ்தவ மதத்தில் சூத்திரன் இல்லை, இஸ்லாம் மதத்திலும் சூத்திரன் இல்லை. சூத்திரன் இருக்கும் மதத்தை எடுத்து நம்மீது போட்டுக்கொண்ட பிறகு சூத்திரப்பட்டம் தாங்க நாம் பயந்தால் வெட்கப்பட்டால் முடியுமா? அதாவது கழுதைக்கு வாக்கப் பட்டு உதைக்கு பயந்தால் முடியுமா? என்கின்ற பழமொழிப்படி நம்மை இந்து என்று சொல்லி பெருமை அடைந்து கொண்டு அதனால்வரும் பட்டத்தைப் பார்த்து ரோஷப்படுவது எப்படி அறிவுடைமையாகும் என்று கேட்கிறோம்.

திராவிட இந்துக்கள் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கொள்ளுகிறார்கள். பட்டை பட்டையாக நாமம் தீட்டிக் கொள்ளு கிறார்கள். இராகு காலம், குளிகை காலம், பார்க்கிறார்கள் பார்ப்பானைக் கொண்டு ஹோமம், எக்கியம், நடத்துவதுடன் பார்ப்பான் இல்லாமல் கருமாதி, ருது,சாந்தி, பிள்ளைப் பேறு, காதுகுத்தல், திதி, திவசம், திருமணம், முதலியவை நடத்துவதில்லை. சிறீ ராமநவமி, கோகுலாஷ்டமி, நரகசதுர்த்தி முதலிய இந்துமதப்பணடிகைகள் செய்யாமல் இருப்பதில்லை.

இப்படியெல்லாம் நடந்து கொண்டு பார்ப்பனன் நம்மை சூத்திரன் என்று கூப்பிடுகிறானே என்று ஆத்திரப்பட்டால் இதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனமான காரியம் என்ன இருக்க முடியும். பார்ப்பான் நம்மைக் கண்டு சிரிக்காமலும் பரிதாபப்படாமலும் எப்படி இருப்பான்.

எனவே இந்து மதத்தை நான் உண்மையாய் விட்டுவிட்டேன் அடியோடு இந்து மதத்தில் இருந்து விலகிவிட்டேன். என்று சொல்ல முடியாத ஒருவர் உண்மையில் சூத்திரராய் இருக்க முடியாமல் வேறு என்னமாய்த்தான் இருக்க முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். பிராமணன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? அப்படிச் சொல்லிக் கொண்டவர்களையாவது பார்ப்பான் சரியாய் நடத்துகிறானா?

கோவிலுக்குள் தன்னை விடமாட்டேன் என்கிறார்களே என்று ஒரு ஆதிதிராவிடனோ ஒரு திராவிட இந்துவோ கோபிப் பானேயானால், அவன் இந்து மதக் கோவில்களுக்குள் இந்து மத ஆச்சாரச்சட்டம்தான் நடத்தப்பட வேண்டியது என்பது தெரியாத வனாய் இருந்தால்தானே கோபிக்க முடியும்.

இன்று கோவில் இலாகா தலைவர் திவான் பகதூர் நாராயணசாமி பிள்ளை; அடுத்தவர் ராவ்பகதூர் இராமச்சந்திரன் செட்டியார், இவர்களே அர்த்த மண்டபத்துக்கும் கர்ப்பக்கிரகத்துக்கும் வெளியில்தானே நின்று கொள்ளுகிறார்கள். காரணம் என்ன? இந்துக்கள் ஆன சூத்திரர்க்கு உள்ள இடம்தானே தங்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்ந்துதானே?

இப்படியே நான் ஒரு ஆதிதிராவிட இந்து, எனக்கு சர்க்கார் சட்டப்படி பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று ஒரு ஆதிதிராவிடர் பாத்தியம் கொண்டாடுவாரேயானால் அவர் இந்துமத சட்டப்படி எட்டி நின்றுதானே ஆகவேண்டும். அப்படி இல்லாமல், இந்துமதத்தை விடமாட்டேன்; அதிலிருந்தால்தான் எனக்கு உத்தியோகம், பட்டம், பதவிபணம் கிடைக்கும்;

ஆனால் மதத்தின்படி எனக்கு உள்ள யோக்கியதையை மாத்திரம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் இது ஏய்க்கத்தான் பயன்படுமே தவிர யோக்கியதைக்குப் பயன்படுமா என்று கேட்கிறோம்.

இப்படி ஒவ்வொருவரும் தன் தன் சுயநலத்துக்கு ஆக சமுதாயத்தை ஏய்த்து வருவதால் தான் ஏதோ இரண்டொருவர் மாத்திரம் சமுதாயத்தின் பேரால் கொள்ளை அடிக்க முடிந்ததே தவிர சமுதாயம் கீழான நிலையிலேயே சூத்திரனாகவும், பறையனாகவும் இருந்து வருகிறது. ஆகவே நம்மைப் பார்ப்பான் சூத்திரன் என்றும், தீண்டப்படாதவன், புலையன் என்றும் அழைப்பதிலும், நடத்துவதிலும் சர்க்கார் அதற் கேற்ற சட்டம் வைத்து இழிவுபடுத்துவதிலும் ஏதாவது தப்பிதம் இருக் கிறதா என்று யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். திருத்திக் கொள்ளுவதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.

-விடுதலை,20.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக