கிளர்ச்சி தேதி அறிவிப்பு : ஜனவரி 26
தி.மு.க ஆட்சியைத் தீவிரமாக ஆதரித்து வந்த நிலையில், கிளர்ச்சி குறித்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்த தந்தை பெரியார் 09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மய்தானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு உரையாற்றினார்.
இந்த ஆட்சியை நாம் ஆதரித்தாலும், இந்தப் போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டி இருக்கிறது. இவர்கள் தண்டித்தாலும் இவர்களை ஆதரிப்பதை நான் ஒன்றும் மாற்றிக் கொள்ளப்போவது கிடையாது. இந்த ஆட்சியைப் போன்று நம் மக்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி வேறு எதுவும் கிடையாது. இந்த ஆட்சி மாறினால் அடுத்து யார் வருவார்கள் என்பதைச் சிந்தியுங்கள். இந்தச் சுப்பிரமணியத்திற்கும் பூணூல் போட்டு விடுவார்கள்; பக்தவத்சலத்திற்கும் பூணூல் போட்டுவிடுவார்கள். மற்றவர் யார் வந்தாலும் அவர்கள் பார்ப்பானுக்குத் தான் ஆளாக இருந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்களே ஒழிய, இவர்களைப் போல நம் இனத்திற்கு நன்மை செய்ய மாட்டார்கள். இந்த ஆட்சியின் பயனால் நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். இது எதிரிக்கும் தெரியாது- பார்ப்பனக் கூலிக்கும் தெரியாது; எனக்குத்தான் தெரியும். நம் மக்கள் உத்தியோகத்துறையில் எண்ணிப் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் இருக்கும்படியான வாய்ப்பு இவர்களால் தான் ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் நாம் ஜெயிக்கா விட்டால் என்ன நஷ்டம்? நம் ஜனங்களுக்குப் புத்தி வந்தால் போதுமே! வெற்றி தோல்வியைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. நமக்கிருக்கிற இழிவு நீக்கப்பட வேண்டும் என்பதே எனது முக்கிய இலட்சியமாகும். எனவே நம் மக்கள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
09.11.1969 அன்று திருச்சி வெல்லமண்டி மைதானத்தில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு: விடுதலை,16.11.1969.
குன்றக்குடி அடிகளார் முயற்சி
பெயர் பட்டியல் குவிந்து நாள்தோறும் விடுதலையில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் “அருள்நெறித் திருக்கூட்டம்” என்னும் ஆன்மீக தலைவர்கள் கலந்துரையாடல் நடைப்பெற்றது. அதில் தந்தை பெரியார் நடத்தவிருந்த கருவறைக் கிளர்ச்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“திருக்கோயில் கருவறைக்குள் இருக்கும் மூர்த்திக்கு பூவும், நீரும் இட்டு வழிபடும் உரிமை இந்து சமூதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களும் வேண்டும் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு அருள்நெறிதிருக்கூட்டம் பேசியும் எழுதியும் வந்திருக்கிறது. ஆனால், அந்த கருத்துரிமையை கருத்துப் புரட்சி மூலம் மனமாற்றத்தின் மூலமே அடைய விரும்பியது. அதன் காரணமாக கிளர்ச்சியில் ஈடுபடவில்லை.
“கிளர்ச்சியில் ஈடுபடாததாலேயே நாம் பின்தங்கிவிட மாட்டோம். மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ராமசாமி இந்த உரிமையை அடைவதற்காக முயற்சியெடுக்க முன்வந்ததற்கு கொள்கையளவில் அருள்நெறிதிருக்கூட்டம் தனது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆயினும் கடவுள் நம்பிக்கை முற்றிலும் இல்லாத திராவிடர் கழகம் இந்த கிளர்ச்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதன்று. அதனால் இந்த உரிமைகளை சார்ந்துள்ள நியாயத்தன்மை வலுவற்றதாகப் போய் சாதியற்ற சமுதாய லட்சியத்திற்கே இடையூறு ஏற்படும் ஆதலால், அருள்நெறித்திருக்கூட்டம் இந்த உரிமையை அடைய கங்கணம் பூணுகிறது.
ஆதலால், திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா அவர்களை கிளர்ச்சியை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறது. அருள்நெறிதிருக்கூட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக திராவிடர் கழகம் இதனை கைவிடவேண்டுமென்றும் மனம் நிறைந்த மதிப்புணர்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறது” மேற்கண்ட இந்த தீர்மானம் நிறைவேற்றியதுடன், தவத்திருக் குன்றக்குடி அடிகளார் தனியே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைவராகிய பெருமதிப்புக்குரிய மகா சன்னிதானம் தவத்திருக் குன்றக்குடி அடிகளார் விடுத்திருந்த வேண்டுகோள் போராட்டத் தத்துவத்தை ஆதரிக்கும் அதே நிலையில் போரட்டத்தினை ஆத்திகப் பெருமக்களாகிய தங்களிடமே விட்டுவிடும்படி கேட்டிருக்கும் வேண்டுகோள் பற்றி திருச்சியில் நடந்த கூட்டம் மிகவும் ஆழ்ந்து பரிசீலித்தது.
தந்தை பெரியார் அவர்கள் அதை பற்றி மிக விளக்கமாக கருத்துரைக் கூறினார். “தவத்திரு அடிகளாரிடம் மிகுந்த அன்பு தமக்கு உண்டு என்றபோதிலும் கூட இக்கிளர்ச்சி சம்பந்தமாக அடிகளார் எப்போது எப்படி தாங்கள் முன்நின்று கிளர்ச்சியை செய்ய முன்வருவார்கள் என்பதற்கு திட்டவட்டமான பதில் அருள்நெறித் திருக்கூட்டத் தீர்மானத்தில் இல்லையே என்பது பற்றியும், நமது பிறவி இழிவை நீக்க நாம் மக்களை நல்லவண்ணம் பிரச்சாரப் படை மாநாடுகள் மூலம் தயார்படுத்தவும் தற்போதுள்ள சிக்கல் நிறைந்த அரசியல் சூழ் நிலைகளும் மிகவும் தெளிவுப்பட வேண்டுமென்பதாலும் உடனடியாக கிளர்ச்சி தேதி வைப்பதைவிட சற்று காலம் தள்ளி வைப்பது மிகவும் பொருத்தம் என்று அப்படி தள்ளுவதால் நட்டம் ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டார்.
திருச்சியில் கூடிய மத்திய கமிட்டி 16.11.1969
16-11-69 ஞாயிறு மாலை 3-30 மணியளவில் திருச்சி "பெரியார் மாளிகை"யில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது.
தந்தை பெரியார் அவர்கள் "கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின்'' அவசியம் பற்றியும், அது பற்றி முடிவெடுக்க வேண்டிய தேவை பற்றியும் விளக்கினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் உரைக்குப்பின் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்கள் இந்த கிளர்ச்சி எப்படி சட்ட சம்மதமானது, இந்த கிளர்ச்சி நடத்தவேண்டிய தேவை ஆகியவைகளை விளக்கிய பின், கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்லாத கழக முக்கியஸ்தர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். பிறகு தந்தை பெரியார் அவர்களால் பிரரேபிக்கப்பட்ட கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
· தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களு டைய கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி பற்றிய கடிதத்தை கமிட்டியில் வைத்து, அதைப்பற்றி மிக மரியாதையுடன் ஆலோசித்து அதில் எந்தவிதமான திட்டவட்டமான சமாதானமும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட வேண்டுமென்று மாத்திரம் இருக்கிறதே தவிர, வேறு எந்த விதமான முடிவும் இல்லை யென்பதால் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முடியாமலிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.
· 'கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி" செய்யும் தேதியை ஜனவரி 26ஆம் தேதியாக வைத்துச் கொள்ளலாமென கமிட்டி முடிவு செய்கிறது.
· "கர்ப்பக்கிருக'' கிளர்ச்சியை மன்னார்குடி ராஜகோபால்சாமி கோயில் என்று மாத்திரமல்லாமல் மற்ற ஊர்களில் உள்ள மூன்று, நான்கு கோயில்கள் வரை சேர்த்துக் கொள்ளலாமென இக்கமிட்டி தீர்மானிக்கின்றது,
· மற்றும் பல கட்சித் தோழர்களும், பல ஆத்தீக நண்பர்களும் கர்ப்பக்கிருக கிளர்ச்சியில் கலந்து கொள்வதால் எதிர் வழக்காட வேண்டிய அவசியம் வந்தால் எதிர் வழக்காடலாமென முடிவு செய்கிறது.
· ஒரு பிரசாரப் படையை அமைத்து சில முக்கிய ஊர்களுக்கு படையை அனுப்பி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யலாமென தீர்மானிக்கிறது.
· ஜனவரி 26ஆம் தேதிக்குள்ளாக ஆத்தீகர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் தாங்களாகவே இந்தக் கிளர்ச்சியை நடத்துவதாக இருந்தால் நம்மால் ஆன எல்லா உதவிகளையும் செய்வது என கமிட்டி முடிவு செய்கிறது
கோயில் கர்ப்பக்கிருக நுழைவு கிளர்ச்சி சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் கமிட்டியால் நியமிக்கப்பட்டது.
1. தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி - தலைவர்
2. கே. வீரமணி எம். ஏ. பி. எல். - செயலாளர்
3. டி.டி. வீரப்பா (திருச்சி) - உறுப்பினர்
4. அ.ஆறுமுகம் (நீடாமங்கலம்)
5. து. ம. பெரியசாமி (திருச்சி)
6. புலவர் கோ. இமயவரம்பன் - பொருளாளர்
வழக்கறிஞர் படை திரண்டது
இதுவரை தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களில் வழக்காடாத நிலையில் இந்த கிளர்ச்சிக்கு எதிர் வழக்காடுவது என்று முடிவெடுத்த நிலையில்
கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கிறோம் என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் 28.11.1969லும், குடந்தை வழக்கறிஞர்கள் 3.12.1969லும், தஞ்சை வழக்கறிஞர்கள் 11.12.1969லும், கோவை வழக்கறிஞர்கள் 9.1.1970லும் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக