ஞாயிறு, 30 ஜூன், 2024

இலக்கியத்தரம் மிக்க இணையிலா இரங்கலுரை – சிகரம்

 



 மே 1-15, 2024

1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கையில் தடியுடன் வாசலில் நின்ற பெரியார் யாரும் அழக்கூடாது; அழுவதானால் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் காலை நாகம்மையார் உடல் எரியூட்டப்பட்டது. அன்று மாலையே ஈ.வெ.ரா. பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார். அதனால் பாசம் இல்லையென்று பொருள் அல்ல. பகுத்தறிவு வழிச்சென்றார்.

மூன்று நாட்கள் கழித்து தன் மனைவி குறித்து ஈ.வெ.ரா. ஒரு தலையங்கம் எழுதினார். அது ஈ.வெ.ராவின் உள்ளமும் உணர்வும் எத்தகையது என்பதை உலகிற்கும் காட்டிற்று.

“எனதருமைத் துணைவி ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.05.1933ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷ காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண்ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றில் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்டபிறகு பொதுநல காரியங்களுக்கும் சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சு.ம.இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படி இருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஓர் அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையெய்தினாள். இதிலொன்றும் அதிசயம் இல்லை. நாகம்மாளை அற்ப ஆயுள் காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறைவான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ, எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும் நாகம்மாள் எனக்குமுன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டமென்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் அல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால், அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருமென்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்தபின், ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் “கூற்றாக” நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்படயிருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு இருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுதையும் (சங்கராச்சாரியார் போல)- (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடன் அல்ல)- (பண வசூலுக்காக அல்ல)- சஞ்சாரத்திலேயே சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டுமென்றும் நமக்கென்றும் ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்று கருதி இருந்ததுண்டு. ஆனால், இதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாக இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.

– ’குடிஅரசு’ தலையங்கம் 14.5.1933

இதை இரங்கல் உரை என்பதா? காதல் காவியம் என்பதா? பகுத்தாய்வின் உச்சநிலை என்பதா? எழுத்தாண்ட விதத்தில் இலக்கியச் சிகரம் என்பதா? என்னவென்று சொல்வது என்று நமக்கே அலைவெய்தும் அற்புத எழுத்தோவியம் இது! அவரின் அன்பு கசியும் உள்ளத்தை அடையாளங்காட்டிய அரிய தடயம் இது.
இறந்ததற்கு யாரும் அழக்கூடாது என்று அவர் பகுத்தறிவின்பாற் செயற்பட்டாலும், அவர் நாகம்மையார் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றும், காதலும் தனக்காக நாகம்மையார் செய்த தியாகங்களும் அவரின் உள்ளத்தைக் கசிந்துருகச் செய்தன என்பதை உணர்வு ததும்ப எவ்வளவு சிறப்பாகக் கூறியுள்ளார் பாருங்கள்!
ஈ.வெ.ராவிற்கு அவரது தங்கை மகள் இராசாத்தியை (வயது-17) மணம் முடிக்க தாயார் வற்புறுத்தினார். வேறு சில பெண்களும் முன் வந்தனர். ஆனால் ஈ.வெ.ரா. எல்லாவற்றையும் மறுத்துவிட்டார்.
ஈ.வெ.ரா. எவ்வளவுதான் நம்மையும் அவரையும் தேற்றினாலும் அவரது அன்பு உள்ளம் நாகம்மாளை நாடி வாடியே நின்றது! மனிதநேயத்தின் மறுவடிவமாயிற்றே அவர்!
குறிப்பு : “கூற்று” என்று அவர் மேற்கோளில் கூறியுள்ளது எமன் நம்பிக்கை அவருக்கு இல்லை. உலக வழக்கை எடுத்தாள்கிறேன் என்று கூறவே என்பதைக் கருத்தில் கொள்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக