சனி, 13 ஜூலை, 2019

இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம்


சாந்தி நாராயணன்
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது
இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம்
என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள்.
இதற்கு என்ன காரணம்?

oOo
எழுத்தாளர்  ஏ.எஸ்.பன்னீர்செல்வன். :

ஓர் இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன, அதைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் கையாண்ட முறை என்ன, அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் - இந்த மூன்றில் இருந்து தான் அந்த இயக்கத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடியும்.

திராவிட இயக்கத்தினர் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதான். அதாவது சாதிக்கு எதிரான போர் அல்லது அனைவருக்கும் சமவாய்ப்பு. இதை திராவிட இயக்கம் சாதித்துள்ளது.

oOo
இட ஒதுக்கீட்டில் 67 சதவீதம் என்பதைத் தாண்டி ஒரு கட்சியால் அரசு என்ற அமைப்பின் மூலமாக வேறெதுவும் செய்துவிட முடியாது. இது வெற்றி தான். இதற்குள் குறைகள் இல்லையா என்று கேட்டால் அது procedural பிரச்சினை. அது கட்சியின் பிரச்சனை அல்ல.

இட ஒதுக்கீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வரும் முரண்பாடுகள் சில இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இட ஒதுக்கீடு வெற்றி பெற்று விட்டது.

oOo
மற்றொரு கருத்து இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை திணித்து விட்டதாக சொல்லப்படும் கருத்து. இது முழுக்க முழுக்க அரசியல் பார்வையே இல்லாத குற்றச்சாட்டு. இங்கு யாரும் ஆங்கிலத்தை திணிக்கவில்லை. தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பத்தினால். இந்தி திணிக்கப்பட்டது, அதை எதிர்த்தார்கள். ஆங்கிலம் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

சுய விருப்பம் தான் அரசியல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய அரசு இங்கே இருக்கிறது. அந்த சுய விருப்பத்தையே தவறு என்று சொன்னால் சொல்பவர்களுடைய அரசியல் பார்வையே தவறு என்றாகி விடுகிறது. தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது எனக்கு இருக்கக்கூடிய வருத்தமே இதுதான். விரும்பி ஏற்றுக் கொள்வதற்கும், மிரட்டி திணிப்பதற்குமான அடிப்படை வேறுபாடே அவர்களுக்குத் தெரிவதில்லை.

oOo
அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

oOo
அடுத்து, இன்று யாரும் மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்வதில்லை. தமிழ்நாடு என்று தான் சொல்கிறார்கள். எந்த தமிழ்ப் பத்திரிகையும் உபாத்தியாயர் என்று எழுதுவதில்லை ஆசிரியர் என்று தான் எழுதுகின்றன. எல்லாவற்றிலும் தமிழ் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

oOo
‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். இன்று வட இந்தியர்கள் ‘தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது’ என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சமூக, பொருளாதார மாற்றங்களால் மற்ற மாநிலங்களை விட அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள் தான். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

Continue.........................முழு நேர்காணலையும் பின்னூட்டத்தில் உள்ள சுட்டியில் காண்க.

oOo
தமிழ் ஆங்கில ஊடகங்களில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருபவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் திராவிடக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
ஆரம்பத்தில் தமிழில் திசைகள் பத்திரிகையிலும், ஆங்கிலத்தில் Sunday observer பத்திரிகையிலும் பின்னர் Illustrated weekly, Frontline, Business India, Outlook எனப் பல பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.

கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக Panos South Asia நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
-  இசை இன்பன் முகநூல் பக்கம்

12.7.18

கீற்று இணைய தளத்தில் வெளிவந்த
ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களின் முழு நேர்காணல் பதிவு

திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்


தமிழ் ஆங்கில ஊடகங்களில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருபவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆங்கிலப் பத்திரிகைகளில் திராவிடக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆரம்பத்தில் தமிழில் திசைகள் பத்திரிகையிலும், ஆங்கிலத்தில் Sunday observer பத்திரிகையிலும் பின்னர் Illustrated weekly, Frontline, Business India, Outlook எனப் பல பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக Panos South Asia நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து...


.

உங்கள் பின்னணி குறித்து?

சென்னை அயனாவரம் தான் சொந்த ஊர். என் பெயரில் உள்ள A அயனாவரத்தைத்தான் குறிக்கும். 90 வருடங்களுக்கு முன்னர் தாத்தாவிற்கு பெண்பார்க்கும்போது மேடவாக்கம் அருகே பொன்மார் என்ற கிராமத்தில் பார்த்திருக்கிறார்கள். ‘ரொம்பவும் தெற்கே போய் பெண் எடுத்ததாக’ அதற்கே என் குடும்பத்திற்குள் சண்டை நடந்துள்ளது. இப்படிப்பட்ட பின்னணிதான் என்னுடையது. பள்ளி, கல்லூரி எல்லாமே சென்னையில் தான். கல்லூரியில் இயற்பியல் படித்தேன்.

மாலனின் ‘திசைகள்’ பத்திரிகையில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். அதே நேரத்தில் ‘Sunday observer’ இதழில் ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினேன். எழுத ஆரம்பிக்கும்போது அரசியல் குறித்து எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்ததில்லை. இந்திய அறிவியல் அமைப்பில் உள்ள மனிதத்தன்மையற்ற செயல்களில் தான் முதலில் அதிக கவனம் செலுத்தினேன். 1984ல் போபால் விஷவாய்க் கசிவு நடந்தபோது அது குறித்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினேன்.

அப்போது தமிழகத்தில் இலங்கைப் பிரச்சனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் அதிகளாக தமிழகத்திற்கு அதிக அளவில் வரத்தொடங்கினர். நான் தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான தமிழ் அறிக்கைகளை மொழிபெயர்த்துத் தருமாறு ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்து கேட்பார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான் முழுநேர பத்திரிகையாளனாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரே பத்திரிகையில் முழுநேர வேலையில் சேராமல், அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் வராமல் இருக்க அறிவியலைத் தவிரவும் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுத வேண்டி வந்தது. ஒவியர்கள், படைப்பாளிகள் குறித்து தொடர் எழுதினேன். இதன்மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் தொடர்புகள் கிடைத்து எழுத ஆரம்பித்தேன். பிரண்ட்லைன் பத்திரிகையிலும் என் கட்டுரைகள் வெளிவந்தன.

1987ல் இந்திய இலங்கை அரசு ஒப்பந்தம் ஏற்பட்டு, 1988ல் அதன் முதல் ஆண்டு கொண்டாட்டத்தின் போது நான் 43 நாட்கள் இலங்கையில் இருந்தேன். ‘யுத்த பூமியில் 43 நாட்கள்’ என்ற தலைப்பில் அது தொடராக விகடன் குழுமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட்டில் வெளிவந்தது. இலங்கை நிலவரம் குறித்து ‘Illustrated weekly’ பத்திரிகையிலும் விரிவாக எழுதினேன்.

ஃபிரீலான்சராக பணியாற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. பல நாட்கள் கஷ்டப்பட்டு, பல ஊர்கள் பிரயாணம் செய்து, ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு நான்கைந்து மாதங்கள் கழித்துதான் பணம் கிடைக்கும். அதற்கிடையே அடுத்த பயணத்திற்கு காசு வேண்டும். இதைத் தவிர்க்க, 1988 நவம்பரில் Business India பத்திரிகையில் correspondent ஆக முழுநேர வேலையில் சேர்ந்தேன். 1995 வரை அங்கு வேலை செய்தேன். அதில் வேலைசெய்தாலும், தமிழ்ப்பத்திரிகைகளிலும், Business Indiaவின் வியாபாரத்தை பாதிக்காத வகையில் இதர ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது.

பாவைச்சந்திரன் குங்குமத்தில் ஆசிரியராக இருந்தபோது தமிழிலக்கியம் தொடர்பாக நிறைய விஷயங்களை குங்குமத்தில் என்னால் எழுத முடிந்தது. 1991ல் பாவை குங்குமத்தை விட்டு வெளியேறிய பிறகு தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது குறைய ஆரம்பித்தது.

1995ல் வினோத் மேத்தா அவுட்லுக் ஆரம்பித்தார். அவரின் அழைப்பை ஏற்று நான் அதில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் பத்திரிகைக்குப் பெயர் கூட சூட்டப்படவில்லை. 2001 வரை அங்கு வேலை செய்தேன்.

2001ல் தமிழகத்தில் தி.மு.க.தோல்வியடைந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் சன் டி.வி.யில் மேனேஜிங் எடிட்டராக சேர்ந்தேன். அடுத்து 2004ல் வந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து தி.மு.க. வெற்றி பெற்ற நாளில் சன் டிவி வேலையில் இருந்து விலகினேன். Panos South Asia வாய்ப்பு காரணமாக சன் டி.வி. வேலையை விடவேண்டி வந்தது. ‘Panos’ல் 2004 பிப்ரவரி மாதமே வேலை கிடைத்து விட்டது என்றாலும், தேர்தல் நேரத்தில் சன் டிவி வேலையை விடுவது சரியல்ல என்ற காரணத்தால் அது முடியும்வரை அங்கு வேலை பார்த்தேன். தேர்தல் முடிந்த நாளே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.

இந்த மாறுபட்ட வேலைகளுக்கிடையில் உங்களுக்கான அரசியல் எங்கு கட்டமைக்கப்பட்டது? வாசிப்பின் மூலமாகவா அல்லது மீடியாவில் பணிபுரிந்ததால் ஏற்பட்ட தாக்கமா?

என்னை மாதிரியான பின்னணியில் இருந்து வருகிறவர்கள் மக்கள் இயக்கங்களுக்கு எதிரான நிலையை மிகச்சுலபமாக எடுத்து விடுவார்கள். தன்னுடைய வேலை காரணமாக மிகச் சவுகரியமான ஒரு நிலையில் இருந்து கொண்டு, மக்கள் அரசியலுக்கு எதிரான நிலையை எடுக்கும் குணம் பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். பார்ப்பனர்கள் வெற்றி பெற்ற பிறகு அதற்கு காரணமானவற்றை மறந்து விடுவதில்லை. பார்ப்பனரல்லாதவர்கள் தங்களுக்கு ஒரு சவுகரியமான நிலை வந்தவுடன், ‘இனி எதுக்கு சாதியைப் பத்திப் பேசணும் அதெல்லாம் அந்தக்காலத்து விஷயம்’ என்று சொல்லி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள்.

எனக்கு இதெல்லாம் மிக உறுத்தலான விஷயமாக இருந்தது. 67ல் தி.மு.க. ஆட்சி அமையவில்லையென்றால் பார்ப்பனரல்லாதவர்களில் இத்தனை பேர் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? ரத்தினவேல் பாண்டியன் உச்சநீதிமன்ற நீதிபதியாகியிருக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தது. பார்ப்பனர்களை விட, பார்ப்பனரல்லாதார் அதிகமாக தகுதி, தரம், திறமை குறித்துப் பேசும்போது எனக்கு எரிச்சல் அதிகமாகியது. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் நம் அறிவியல் கொள்கை குறித்து நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தகுதி, தரம் என்பது பற்றிய எந்தவொரு மயக்கமும் எனக்கு ஏற்படாமல் போகச்செய்தது. நம்முடைய அறிவியல் துறையில், உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் உயர்ஜாதியினர் தான். அவர்களிடம் நேர்மை என்பது துளிகூட இருப்பதில்லை. இதை நேரில் கண்டதால்தான் விஞ்ஞானத்தையும் பொருளாதாரத்தைம் அரசியல் பார்வை இல்லாமல் பார்க்க முடியாது என்பதும் தெரிய வந்தது.

இதற்கு உங்கள் வாசிப்பு எந்தவகையில் உதவி செய்தது. நீங்கள் சின்ன வயதில் இருந்து எந்த மாதிரியான புத்தகங்களை வாசித்தீர்கள்?

வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் நேர்க்கோட்டில் இருந்ததில்லை. 1978ல் நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது எமர்ஜென்சி காலகட்டம். அரசியல் அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் நான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது கு.அழகிரிசாமி கதைகள் தான். அதன்பிறகு புதுமைப்பித்தன் படைப்புகள் உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கியங்களைப் படித்தேன்.

பின்னர் அரசியல் ரீதியான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரையும் போல முதலில் எனக்கும் மார்க்சியம் தொடர்பான புத்தகங்களில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது. 1980ல் சி.பி.ஐ., சி.பி.எம்., இரண்டு கட்சிகளும் எம்.ஜி.ஆருடன் கூட்டு வைத்தன. இது எனக்கு மிகவும் கோபத்தை வரவழைத்தது. இந்த நேரத்தில் தான் ‘கோட்பாடுகளும் கொள்கைகளும் வேறு, அரசியல் கட்சி என்பது வேறு’ எனப் புரிய ஆரம்பித்தது. எழுத ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டம்தான்.

அந்த நிலைப்பாடு இப்போதும் இருக்கிறதா? 

ஆமாம், கட்சிகளைத் தாண்டி, மேலே நிற்பது இயக்கங்களும், அவற்றின் கொள்கைகளும்தான். அதற்காக கட்சிக்குள் இருப்பவர்கள் இயக்கவாதிகள் இல்லையென்று அர்த்தமல்ல. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.க., பெரியார் திராவிடர் கழகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தாலும் அதற்கு மேலே இருப்பது பெரியார் ஆரம்பித்து வைத்த சுயமரியாதை இயக்கம். அதேபோல் சி.பி.ஐ.,சி.பி.எம்., எம்.எல். என எத்தனை கட்சிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேலே இருப்பது இடதுசாரி இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களும் கட்சிகளை விட பெரியதாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

கட்சிகளை விட இயக்கம் பிரம்மாண்டமானது என்கிறீர்களா?

கொள்கைகளால் ஏற்படும் தாக்கமும் அது கொண்டு வரக்கூடிய பயனும் கட்சிகளுக்கு மேற்பட்டது. ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை நான் எந்த ஒரு நல்ல வார்த்தையும் பேசியதோ, எழுதியதோ இல்லை. அப்படி சொல்லும்படியான சூழ்நிலையை அவர் ஒரு நாளும் உருவாக்கியதில்லை. அத்தகைய ஜெயலலிதா சங்கராச்சாரியாரை கைது செய்த போது தமிழ்நாடு முழுவதும் ‘அது சரிதான்’ என்கிற மாதிரியான ஒரு மனநிலை இருந்தது. அது அ.தி.மு.க ஏற்படுத்திய மனநிலை அல்ல, பரந்துபட்ட திராவிட இயக்க மனநிலையாகும்.

அதேதான் மார்க்சியத்திற்கும் மார்க்சியம் சார்ந்த விஷயங்களுக்கும். நந்திகிராம் விஷயத்திற்காக சி.பி.எம்.,கட்சியை எதிர்ப்பதோ, எமர்ஜென்சியை ஆதரித்ததற்காக சி.பி.ஐ., கட்சியை இடதுசாரி இயக்கம் இல்லை என்று சொல்வதோ அந்தந்த காலகட்டத்திற்கான குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். இவற்றை மட்டுமே வைத்து இடதுசாரி இயக்கம் இவ்வளவுதான் என்று கூற முடியாது.

கட்சிகளை மீறி சிறந்த கொள்கைவாதிகளாக விளங்கும் அரசியல்வாதிகள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அடிப்படை விஷயங்களில் அவர்கள் நீர்த்துப் போகமாட்டார்கள். எதிர்காலத்தில் நல்லக்கண்ணு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.வாக செயல்படுவார் என்று சொன்னால், அதை நான் நம்பத் தயாராக இல்லை. காரணம் கட்சியைத் தாண்டி அவரிடம் இருக்கும் இயக்கத்தின் தாக்கமும் அதனால் அவரிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும்தான்.

இங்குள்ள அரசியல்வாதிகள் மீது பலவிதமான விமர்சனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர்களைத் திட்டுவதை விட அவர்களை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறேன்.

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

ஓர் இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன, அதைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் கையாண்ட முறை என்ன, அதில் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் - இந்த மூன்றில் இருந்து தான் அந்த இயக்கத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடியும்.

திராவிட இயக்கத்தினர் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடிப்படையே சமூகநீதிதான். அதாவது சாதிக்கு எதிரான போர் அல்லது அனைவருக்கும் சமவாய்ப்பு. இதை திராவிட இயக்கம் சாதித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் 67 சதவீதம் என்பதைத் தாண்டி ஒரு கட்சியால் அரசு என்ற அமைப்பின் மூலமாக வேறெதுவும் செய்துவிட முடியாது. இது வெற்றி தான். இதற்குள் குறைகள் இல்லையா என்று கேட்டால் அது procedural பிரச்சினை. அது கட்சியின் பிரச்சனை அல்ல.

இட ஒதுக்கீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வரும் முரண்பாடுகள் சில இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இட ஒதுக்கீடு வெற்றி பெற்று விட்டது.

மற்றொரு கருத்து இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை திணித்து விட்டதாக சொல்லப்படும் கருத்து. இது முழுக்க முழுக்க அரசியல் பார்வையே இல்லாத குற்றச்சாட்டு. இங்கு யாரும் ஆங்கிலத்தை திணிக்கவில்லை. தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பத்தினால். இந்தி திணிக்கப்பட்டது, அதை எதிர்த்தார்கள். ஆங்கிலம் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

சுய விருப்பம் தான் அரசியல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய அரசு இங்கே இருக்கிறது. அந்த சுய விருப்பத்தையே தவறு என்று சொன்னால் சொல்பவர்களுடைய அரசியல் பார்வையே தவறு என்றாகி விடுகிறது. தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது எனக்கு இருக்கக்கூடிய வருத்தமே இதுதான். விரும்பி ஏற்றுக் கொள்வதற்கும், மிரட்டி திணிப்பதற்குமான அடிப்படை வேறுபாடே அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

அடுத்து, இன்று யாரும் மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்வதில்லை. தமிழ்நாடு என்று தான் சொல்கிறார்கள். எந்த தமிழ்ப் பத்திரிகையும் உபாத்தியாயர் என்று எழுதுவதில்லை ஆசிரியர் என்று தான் எழுதுகின்றன. எல்லாவற்றிலும் தமிழ் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். இன்று வட இந்தியர்கள் ‘தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது’ என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சமூக, பொருளாதார மாற்றங்களால் மற்ற மாநிலங்களை விட அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள் தான். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.

1950ல் இந்தியா குடியரசான பிறகு முதல் அரசியல் சட்டத்திருத்தமே இட ஒதுக்கீடுக்கானது. இதைச் சாதித்தது தமிழ்நாட்டின் திராவிட இயக்கம்தான். ஓமந்தூராரும், காமராசரும் நேருவை வற்புறுத்தி அதைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திராவிட இயக்க பாதிப்புடையவர்களாகவே இருந்தனர். அவர்களை நான் திராவிட இயக்கத்தினராகவே பார்க்கிறேன். இதைத்தான் கட்சியைத் தாண்டி இயக்கம் இருக்கிறது என்று சொன்னேன்.

இதை தொடர்ச்சியாகவே பார்க்கலாம். இந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இலவச ஆரம்பக்கல்வி தமிழ்நாடு முழுவதும் வருகிறது. மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வர மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப்படுகிறது. அடுத்தபடியாக தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு அரசுக்கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. உயர்கல்வியும் இலவசமாக்கப்படுகிறது.

அடுத்தபடியாக 80களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகத் தொடங்கின. என்ன படித்து விட்டு வெளியே வந்தாலும் அடுத்து மேலே படிப்பதற்கு வசதியாக உயர் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார்கள். இவையெல்லாம் வெவ்வேறு கட்சியினரால் வெவ்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்டவை என்றாலும், அதற்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது திராவிட இயக்கமும், அதன் கொள்கைகளும்தான்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகள் தற்கொலை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாயத்தை மட்டுமே நம்பி யாருமில்லை. Non farm activities 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதற்குக் காரணம் திராவிட இயக்கத்திலிருந்து வந்த தி.மு.க.தான். 1967 முதல் 76 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்து செயல்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்கள்.

மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் பெரிய தொழிற்சாலைகள் இருக்குமிடம் மும்பை. அடுத்து புனே, நாக்பூரை குறிப்பிடலாம். இந்த மூன்று நகரங்களைத் தவிர வேறெங்கும் தொழிற்சாலைகள் கிடையாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சென்னையைத் தவிரவும் ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஓசூர், கரூர், கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி, சிறுசேரி, கடலூர், மறைமலைநகர், திருச்சி, மதுரை, நெல்லை என தொழிற்சாலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் (இராமநாதபுரம் மாவட்டத்தைத் தவிர) ஒன்று அல்லது இரண்டு தொழிற்பேட்டைகள் இருப்பதைப் பார்க்க முடியும்.

இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒரு விஷயம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.

ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளுக்கேற்ப இயக்கங்களும், தலைவர்களும் தோன்றியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ராஜாராம் மோகன்ராய் விதவைகள் மறுமணம், கோவில் நுழைவு உரிமை இவற்றைத் தாண்டி இயங்கவில்லை.

கேரளாவில் சமூகத்தை சீர்திருத்த வந்த நாராயணகுரு ஈழவத்தலைவராகவும், மஹாராஷ்டிராவின் ஜோதிராம் புலே தலித் தலைவராகவும் சுருங்கி விட்டார்கள். இதில் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். 3 Vs 97 (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

சேது பாலம் விவகாரத்தில், ஜெயலலிதா கருணாநிதியிடம் ‘தைரியமிருந்தால் இதே கருத்தை வட இந்தியாவில் பேச முடியுமா?’ என்று கேட்கிறார். பெரியாருக்குப் பிறகு வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் அவரது கருத்துகளை இந்தியா முழுவதும் கொண்டு சென்றிருந்தால் இந்த மாதிரியான கேள்விகள் எழுந்திருக்காது அல்லவா?

திராவிட இயக்க வரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாறல்ல. 1917ல் தியாகராயர், நடேசன் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் தேதிவாரியாக சொல்ல முடிகிற, நம் கண்முன் நடந்த வரலாறு. மிக சமீபத்தில் நடந்த விஷயம் எவ்வளவு வேகமாக மற்ற இடங்களுக்குப் பரவ முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

அடுத்ததாக, உங்களுடைய முக்கிய பணி உங்கள் ஊரிலா அல்லது வேறு ஊரிலா என்று கேள்வி வந்தால் உங்கள் ஊருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி தான். அவர் ஒரு வட மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு, பூரி சங்கராச்சாரியாரைக் கைது செய்துவிட்டு தொடர்ந்து அங்கே முதல்வராக இருந்துவிட முடியுமா? இங்கு முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இது பெரியார் பிறந்த மண். 1920களில் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் தான் சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு இங்கு மதக்கலவரமோ, இனக்கலவரமோ நடக்காமல் தடுத்தது.

ஜெயலலிதாவிடம் இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை அவர் யாரிடமும் உரையாடுவதற்கோ, விவாதத்திற்கோ வருவதில்லை. யாரோ எழுதியதை படித்துவிட்டுச் சென்று விடுவார். அதுதான் பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு உரையாடலில் அவர் அமர்ந்தாலே போதும். ஐந்தாவது நிமிடத்தில் அவரது எல்லா முரண்பாடுகளும் வெளிப்பட்டு விடும்.

திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா? இல்லை வெறும் மொழி அரசியலாக சுருங்கி விட்டதா?

பெரியார் மிகப்பெரிய அளவில் செயல்பட்டார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பெரியாருக்குப் பிறகு வந்த அவரது இயக்கத்தினர் அவரது எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர் அளவுக்கு வீச்சாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இன்றைக்கு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு இயக்கம் உருவானதற்குப் பிந்தைய சமூகம். அந்த இயக்கத்தின் தாக்கம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் நாத்திகர்களாக இருக்கிறார்கள், சிலர் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள், சிலர் மொழிப்பற்று உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெரியார் வைத்த அடிப்படைக் கருத்து என்பது அதிகாரப் பங்கீடு, அதிகாரப் பரவலாக்கல்.

சனாதன தர்மம் அதிகாரத்தை ஒரு சாராரிடமே குவிக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவமரியாதை ஏற்பட்ட போது சுயமரியாதை இயக்கம் தோன்றியது. எனக்கு இன்றைக்கு அவமரியாதை இல்லை என்று தோன்றும்போது, அன்றைக்கு இருந்த வீச்சோடு இன்றைக்கும் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது.

இன்று அதிகாரத்தில் இருப்பது நாம்தான், முக்கிய முடிவுகளை எடுப்பதும் நாம்தான் எனும்போது அந்த அளவுக்கு வீச்சு தேவையில்லை.

அதிகாரப் பரவலாக்கம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை. இந்த அதிகாரப் பகிர்வு பரவும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்தது போலத் தோன்றும். எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களே இருக்கும்போது அதை எதிர்த்து அதிகமாக இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று மாற்றங்கள் வந்திருக்கிறது. நமக்கான முடிவுகளை நாமே எடுக்க முடிகிறது எனும்போது இன்றும் அதே அளவு கூர்மையுடன் எப்படி செயல்பட முடியும்? அப்படி செயல்பட்டால் அது நமது வெற்றியை நாம் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.

67ல் அரசியல் அதிகாரம் வந்தது. 80களில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் வருகிறது. முன்பு பார்ப்பனர்களின் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக செட்டியார்களின் தொழில் நிறுவனங்கள் தான் இருக்கும். இன்று நிலைமை மாறி 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பார்ப்பனர், செட்டியார் அல்லாதவர்களிடம் தான் இருக்கிறது. இன்று அவமரியாதை குறைந்திருக்கிறது. அவமரியாதை குறைந்திருக்கும் போது சுயமரியாதை இயக்கம் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

திராவிட இயக்கம் என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்டதல்ல, சமூக, பொருளாதார காரணிகளின் மீது கட்டப்பட்டது. இப்போது அந்தக் காரணிகள் மாறியிருக்கும்போது இயக்கம் மட்டும் எப்படி அதே வீச்சோடு இருக்க முடியும்? அந்த வீச்சு மாறக்கூடாது என்று சொல்பவர்கள், ‘மாற்றம் என்பதே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் முன்வைக்கும், இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முழுமையாக பதிவாகாமல் போனதற்கு என்ன காரணம்? இன்றைக்கு இருக்கிற ஒரு சில பதிவுகள் பெரும்பாலும் தனிநபர்களின் விருப்பத்தினால் ஏற்பட்டதுதானே?

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். 67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். மற்ற இயக்கங்களைப் பற்றி போதுமான அளவுக்கு அகடாமிக் பதிவுகள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் வேறு. உதாரணத்திற்கு காங்கிரஸ் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் பெரிய பலம் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போதே ஓரளவுக்கு கல்வியறிவுடன் வருகிறார்கள்.

நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.

நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக நாம் வருத்தப்படவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை. நாம் 80களில் இறுதியிலே ஆரம்பித்து அதிலிருந்து தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. வந்தபிறகு நம்முடைய வேலையை நாம் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம். அவர்கள் அளவுக்கு எல்லாவற்றிலும் நாம் சரிக்குச் சமமாக இருப்போமேயானால், இந்த இயக்கம் தோன்றியதற்கான அவசியமே இல்லையே? எனவே நாம் ஒன்றுமே செய்யவில்லை என நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பல்கலைக்கழகத்தில் நுழைய இடம் கேட்பவனிடம், ‘நீ எழுதிய புத்தகம் ஏன் பல்கலைக்கழகத்தில் இல்லை’ என்று கேள்வி கேட்டால் அந்தக் கேள்வியிலேயே உள்முரண்பாடு உள்ளது. இங்கு எதுவும் நடைபெறவில்லை என புலம்பிக் கொண்டிருப்பதால், நடக்கும் விஷயங்களைக் கூட ஒருவர் மற்றவரிடம் பரிமாறிக் கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

சுயமரியாதை இயக்கப் பெண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் எழுதிய ஸ்ரீலதா பற்றியோ, வ.கீதாவின் பங்களிப்பு பற்றியோ, எஸ்.வி.ஆர். பெரியார் கட்டுரைகள் அனைத்தையும் இணையத்தில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையோ, தங்களிடம் இருக்கும் பெரியாரின் படைப்புகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவார் என்பதையோ நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்வதே இல்லை. சொல்லிவிட்டோம் என்றால், ‘நாம ஒண்ணுமே பண்ணலே’ன்னு இனி ஒப்பாரி வைக்க முடியாது என்பதால் சொல்லாமல் இருக்கிறோமா?

சுயமரியாதை இயக்கத்தில் இருக்கும் நாம் ஏன் நம்முடைய வெற்றிகளை சுயமரியாதையுடன் கம்பீரமாகக் கொண்டாடுவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அப்படிக் கொண்டாடியிருந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கான அவசியமே இருந்திருக்காது.

பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். இதனால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?

என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு. காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள். மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.

நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி. அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.

வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம். தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்குமான அமைப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இருந்தன. ஆனால் நாளடைவில் சிறுபான்மையினரும், தலித்துகளும் அதிலிருந்து விலகி தங்களுக்கென தனி அமைப்புகளையும், கட்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். இன்று தலித் இயக்கங்கள் எதிர்நிலையில் இருந்து திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற அளவுக்கு சென்றுவிட்டனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

தமிழ்நாட்டு தலித் மக்கள் மட்டும் இப்படி சென்றுவிடவில்லை. அம்பேத்கர் நூற்றாண்டிற்குப் பின், இந்திய அளவில் தலித் மக்களிடையே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பெரியார் என்ற iconக்குப் பதிலாக அம்பேத்கர் என்ற icon-ஐ முன்வைத்தால் தலித் இயக்கங்களுக்குக் கிடைக்கக்கூடிய சாதகம் வேறுமாதிரியானது. இதுவும் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் தான்.

அதேபோல் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்ட மாற்றமும். ஆரம்பத்தில் தமிழ் அடையாளமும், இஸ்லாமிய அடையாளமும் வேறாக இருந்ததில்லை. உமறுப்புலவரில் ஆரம்பித்து உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் 80களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் இவர்களும் ‘உலக அளவில் முஸ்லிம்கள்’ என்ற குடைக்குள் சென்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கம் என்பதும் தமிழ்நாடு என்பதும் சுருங்கிய இடமாகவும், இஸ்லாம் என்பது விரிந்த பரவலான ஒரு தளமாகவும் தெரிகிற ஒரு பிரச்சனை இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு அவர்களது பிரச்சினைகள் சிலவற்றையாவது சரிசெய்தார்கள் என்பதும் உண்மை.

திராவிட இயக்கங்கள் தலித், சிறுபான்மையினர் நலனில் முழு அக்கறை செலுத்தாதது மட்டுமே அவர்கள் விலகிச் சென்றதற்கான காரணமல்ல. அதை விட Pan Indian Dalit mobilization, Pan Islamic mobilization என்கிற உலகளாவிய பார்வையால்தான் அவர்கள் தங்களுக்கென ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் 19 சதவீத தலித் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 19 சதவீதம் என்பது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிக எண்ணிக்கை தரக்கூடிய பலம், நம்பிக்கை பெரியது இல்லையா? அதை எப்படி தலித் மக்கள் இழப்பார்கள்? அப்படி எதிர்பார்ப்பதும் சரியல்லவே!

அதனால் தான் தி.மு.க.வின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த கிருஷ்ணசாமியும், தி.மு.க. உறுப்பினராக இருந்த திருமாவளவனும் தனித்தனி கட்சி ஆரம்பித்து தலித் தலைவர்களாக ஆகியிருக்கின்றனர். இந்திய அளவில் இருக்கிற தலித் மக்களின் எண்ணிக்கை தருகிற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். இதை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கு மீதி பேருக்கு உரிமையில்லை.

அம்பேத்கரை முன்வைப்பதா, புலேவை முன்வைப்பதா என்று கேட்டால் அவர்கள் அம்பேத்கரை முன்வைக்கிறார்கள். அம்பேத்கரை முன்வைத்தால் கூடுதல் பலம் கிடைக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை அல்ல. இங்கு பள்ளர், பறையர், அருந்ததியர் என்று மூன்றே பிரிவு தலித்துகள் இருப்பதால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வடக்கே செல்லச்செல்ல இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகியிருப்பது தெரியும். பீகாரில் மட்டும் தலித்துகள் எட்டு பிரிவுகளாக இருக்கின்றனர். அங்கு தலித் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது அவர்களுக்கு நல்லதுதானே!

ஒரு தலித் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில்தான், இன்று கிருஷ்ணசாமி அத்வானியையோ, சோனியாவையோ சந்தித்துப் பேச முடிகிறது. வெளிப்படையாகப் பேசினால், கிருஷ்ணசாமியோ, திருமாவளவனோ வேறு கட்சிகளில் இருந்து கொண்டு ‘எங்களுக்கு இந்த மாவட்டங்களில் தலித் மக்களிடம் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வைக்கிறோம், நாடாளுமன்றத் தொகுதியில் 6 சதவீத வாக்குகளை பெற்றுத் தருகிறோம்’ என்று சொன்னால் வாய்ப்பு கொடுத்து விடுவார்களா?

இவர்களுக்கு பரந்துபட்ட அங்கீகாரத்தை தலித் என்கிற அடையாளம் தருகிறது. நான் தலித் தலைவர் என்று சொல்லும்போது அகில இந்திய அளவில் ஓர் இடம் கிடைக்கிறது. வேறொரு கட்சியில் இருந்து கொண்டு, ‘திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரை வரை எனக்கு செல்வாக்கு இருக்கிறது. தாமிரபரணி கன்னியாகுமரியைத் தொடும் இடத்தில் என்னுடைய செல்வாக்குப் போய்விடும்’ என்று கிருஷ்ணசாமி சொன்னால் அவருக்கு என்ன மரியாதை இருக்கும்? கருப்பசாமி, பி.ஹெச்.பாண்டியன் போல அவரும் வட்டார அரசியல்வாதியாக சுருங்கி விடுவார்.

ராமதாஸ் மொழி, கலாச்சாரம் குறித்து திடீரென்று பேச வேண்டிய அவசியம் என்ன? அவருடைய செல்வாக்கு என்பது விழுப்புரம் தொடங்கி சின்னசேலம் வரைதான். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் அவரும் பொன்முடியும் ஒன்றாகி விடுவார்கள். அதனால் தான் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வேறு விஷயங்கள் அவருக்குத் தேவைப்படுகின்றன. இது அரசியல் நிர்ப்பந்தம். இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே தேர்தல் அரசியலை எதிர்கொள்ள முடியும்.

நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும், திராவிட இயக்கங்களிலிந்து வெளியேறி தங்களுக்கென ஒரு அமைப்பைத் தொடங்கியவர்கள், திராவிட இயக்கத்தின் பங்களிப்பை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அதைக் கண்டித்து, எந்த திராவிட இயக்க அரசியல்வாதியும் பேசுவதில்லை. பேசினால், தங்களை தலித் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறதா?

தலித் விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அச்சம் மட்டுமே பதில் சொல்ல விடாமல் என்னைப் போன்றவர்களைத் தடுக்கவில்லை. எவ்வளவு விமர்சித்தாலும் பிரச்சனை என்று வரும்போது இவர்களும் நம்முடன் இணைந்து தான் செயல்படப் போகிறார்கள். விமர்சிப்பதன் மூலம், இவர்களையும் எதிராளியாக மாற்றிவிட வேண்டாம் என்கிற ஒரு பார்வை இருப்பதுதான் காரணம்.

உதாரணமாக ரவிக்குமார் பெரியாரை விமர்சித்தபோது, அதற்கு எதிராக சர்வதேசப் பத்திரிகைகளில் என்னால் எழுதியிருக்க முடியும். இவர் மாதிரியான எழுத்தாளர்கள் எழுதுவது குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. அதற்குப் பதில் எழுதினால், பெரியார் தலித் மக்களுக்கு விரோதியா என்ற விவாதம் மேலும் பல இடங்களுக்குப் போகும். அதை நான் விரும்பவில்லை.

திராவிட இயக்கத்தை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆட்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டம் தலித்துகளின் காலகட்டம். நாளை சிறுபான்மையினர் விமர்சித்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. இதற்காக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

மற்றொருபுறம் விமர்சிப்பவர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்றிவிட வேண்டாம் என்ற எண்ணமும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. இன்று தலித்களுக்காக கண்ணீர் விட்டு உருகி, ‘நீயும் இந்துதான்’ என்ற போர்வையில் நிற்பது ஆர்.எஸ்.எஸ்.ம், பார்ப்பனர்களும் தான். நாம் இந்த மாதிரியான தலித் எழுத்தாளர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை இன்னமும் பார்ப்பனர்கள் பக்கம் தள்ளிவிட வேண்டுமா?

திராவிட இயக்கங்களை விமர்சிப்பது ஒருபுறமிருக்க, இப்போது ‘தலித் - பார்ப்பனக் கூட்டணி’ என்ற ஒன்றை ரவிக்குமார், அவுட்லுக் ஆனந்த் போன்றவர்கள் சொல்கிறார்களே, இது எந்தளவிற்கு வெற்றி பெறும்? எந்தளவிற்கு சரி? 

குஜராத்தில் நரேந்திரமோடியின் வெற்றியை வேறு எந்த மாநிலத்திலும் பரப்பிவிட முடியாது. அது குஜராத்தில் மட்டும்தான் சாத்தியம். அதேபோலத் தான் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி செய்ததை தமிழ்நாட்டில் செய்துவிட முடியாது. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி எல்லாமே எண்ணிக்கை என்ற அடிப்படையில் வந்து நின்று விடும்.

உத்திரப்பிரதேசத்தில் 12 சதவீதம் பார்ப்பனர்களும், 19 சதவீதம் தலித்துகளும் இருக்கிறார்கள். தேர்தலில் நடைபெறும் மும்முனை அல்லது நான்குமுனைப் போட்டியில் யார் முப்பது சதவீதம் வாங்குகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட முடியும். தமிழ்நாட்டில் 3 சதவீதம் மட்டுமே பார்ப்பனர்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது வெற்றி பெறும் கூட்டணியாக இருக்காது. தலித் பார்ப்பனக் கூட்டணி மீது சிலருக்கு இருக்கும் மயக்கமெல்லாம், ஒரு தேர்தலில் போட்டியிட்டு தோற்றால் தானாக தெளிந்துவிடும்.

ஒரே தேர்தலில் தெளிந்து விடக்கூடிய பித்தத்துக்கு நாம் ஏன் மருந்து கொடுக்க வேண்டும்? தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தான் ஒன்று சேரமுடியும்.

இதுபோல தலித் அரசியலில் வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அரசியல் என்பதே பன்முக அடையாளங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நான் ஒரு ஆண், பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவன், நகரத்தில் வளர்ந்தவன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் என எனக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன.

ஆனால் ‘தலித் என்கிற ஒரு அடையாளம் போதும், மொழியும் தேவையில்லை, இடமும் தேவையில்லை’ எனும்போது நீங்கள் எங்கே செயல்படப் போகிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. அதாவது ஒரு போராட்டம் என்று வரும்போது அது யாருக்கானது, எங்கே நடக்கிறது, எந்த மாதிரியாக நடைபெறுகிறது என்பது மிக முக்கியம்.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. திராவிடர்களை மேலும் முன்னேற்றவே திமுக உருவானது என்ற பொருள் அதில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தாலும், அவர்களது போராட்டக்களம் இங்கேதான் என்பதைத் தெளிவாக்கினார்கள்.

தலித்துகளைப் பொறுத்தவரை அவர்கள் போராட்டத்துக்கான இடம் என்பது இங்கு இல்லை. அகில இந்திய கட்டமைப்பை முன்வைக்கிறார்கள். அகில இந்திய கட்டமைப்பு ஒன்றா என்றால் இல்லை, அதற்குள் பல முரண்பாடுகள் இருக்கின்றன. இதை எதிர்கொள்ளாமல் இருப்பது தலித் அமைப்புகளின் பிரச்சனை. இதை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அருந்ததியர் நிலையும், தேவேந்திரகுல வேளாளர் நிலையும் ஒன்றா? இரண்டும் ஒன்றே எனக் கூறி இருதரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படிப் பேசினால், தலித் ஒற்றுமை பாதிப்படையும் என்று கூறுவது சரியல்ல. உள்முரண்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, பன்முகத்தன்மையுடன் இயங்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்குள் இருக்கும் பிரச்சனையும் இந்த ‘ஒற்றை அடையாளம்’ தான். உருது பேசுகிற முஸ்லீமும், தமிழ் பேசுகிற முஸ்லீமும் ஒன்றா? பாகிஸ்தான் முஸ்லிமும் இந்திய முஸ்லீம்களும் ஒன்றா? ஒஸாமாவும் மற்றவர்களும் ஒன்றா?

உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் என்பது சரிதான். ஆனால் அப்படி சேரும்போது, அந்தந்தப் பகுதி முஸ்லீம்களின் அடையாளங்கள் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சூஃபி இயக்கத்தின் கூறுகள் மிகவும் செழுமையானவை. ‘Pan Islamic mobilization’ என்றபோது, இத்தகைய கூறுகள் அடிபடத் தொடங்குகின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது.

தலித்களோ, முஸ்லீம்களோ, யாரெல்லாம் தங்களுடைய அடையாளத்தை நிலப்பரப்புக்கு அப்பால் விரித்துக்கொள்கிறார்களோ அப்போதெல்லாம் பிரச்சனை வரத்தான் செய்யும். இங்கே, இந்துத்துவா சக்திகள் ‘ஏக இந்தியா’ என்று சொல்வதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பல முரண்பாடுகளை மறைத்து ஒன்றை கட்டமைக்க விரும்பினால் அந்த முரண்பாடுகளே உங்களை உடைத்து விடும். ஒரு தலித்துக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முதலில் அவன் ஒரு தமிழன், கலைகளோடு சம்பந்தப்பட்டவன். அவனுக்குப் பாடத் தெரியும், மருத்துவம் தெரியும். இந்த மண்ணின் உயிர்ப்பு சக்தியாக அவன் இருந்திருக்கிறான். இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் தலித் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

திராவிட இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஏராளமான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதன் மூலம் கருத்துகளை பரவலாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் இன்றைக்கு அந்த இடத்தை பார்ப்பன ஊடகங்கள் பிடித்துக்கொண்டு, இட ஒதுக்கீடு முதலான சமூக நீதிப் பிரச்சினைகளுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகின்றன. அதே நேரத்தில் இன்றைக்கு திராவிட இயக்கங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் கூட இயக்கக் கருத்துகளை பேசுவது கிடையாது. இயக்க தொலைக்காட்சிகளும் முழுவதும் வணிக நோக்கில் தான் செயல்படுகின்றன. திராவிட இயக்க கருத்துகளை முன்வைப்பதற்கு இடமில்லாததுபோல் தோன்றுகிறதே?

இதே கேள்வி என்னிடம் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி, ‘நீங்கள் எதிலாவது எழுத முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா, கருத்து சொல்வதற்கு முன்வந்து இடமில்லாமல் போயிருக்கிறதா’ என்று. அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை.

என்னிடம் நிறைய பேர் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். அலுவலக வேலை காரணமாகவும், நேரமில்லாததாலும் என்னால் எழுத முடியவில்லை. என் நண்பர்களும், ‘அந்தப் பத்திரிகையில் எழுதச் சொல்லி கேட்கிறார்கள். என்னால்தான் முடியவில்லை’ என்று சொல்கிறார்கள்.

பத்திரிகைகள் வணிகமயமாகி இருக்கிறது என்று சொன்னால், அது தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பிரச்சினையல்ல, உலகம் முழுவதும் இருக்கிற பிரச்சினை. அதையும்மீறி, எழுதத் தெரிந்தவர்களுக்கு அவர்களது கருத்துகளைச் சொல்ல இடம் இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு format இருக்கிறது. அதற்கு உட்பட்டு நாம் எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்து பத்திரிகையில் புத்தக விமர்சனம் என்றால் 900 வார்த்தைகள்தான். அதை மீறி, 5000 வார்த்தைகளில் எழுதினால் போடமாட்டார்கள்.

40, 50களில் புத்தகங்கள் இல்லை. பத்திரிகைகள் தான் கருத்துகளைப் பரப்புவதற்கு அடிப்படையான விஷயம். ஆனால் இன்றைக்கு அத்தகைய கருத்துகள் அடங்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு சராசரி மனிதர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார். கருத்துகள் புத்தகங்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இப்போதும் பத்திரிகைகள் 40, 50 காலகட்டங்களில் வெளிவந்ததைப் போல் வரவேண்டிய அவசியமில்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியத் தொலைக்காட்சிகள் அலறிக்கொண்டிருக்கின்றன. இதை நம்முடைய தொலைக்காட்சிகள் எதிர்கொள்வதில்லையே?

பிரச்சனையின் தளம் இங்கில்லாதபோது நாம் ஏன் அதை எதிர்கொள்ள வேண்டும்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு ஒரு பிரச்சனையே கிடையாது. இங்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜெயலலிதா, இல.கணேசன் கூட பேசிவிட முடியாது. டெல்லிவாழ் உயர்குடிகளின் பிரச்சனை அவர்களைச் சார்ந்திருக்கிற மீடியாவுக்குப் பிரச்சனை. அதனால்தான் அவை அப்படி அலறுகின்றன.

இடதுசாரி இயக்கங்கள் புதிதாக வரும் தொண்டர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. ஆனால் திராவிட அரசியல் கட்சிகள் பெரியாரை சுவரொட்டியில் மட்டும்தானே பயன்படுத்துகிறார்கள். அவரின் கருத்துகளை தொண்டர்களிடம் ஏன் கொண்டு செல்வதில்லை?

இடதுசாரிகள் கட்சித்தொண்டர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் கட்சி இன்னும் வளரவில்லையே? அதேநேரத்தில் இடதுசாரி சிந்தனை உடையவர்கள் நாட்டில் குறையவும் இல்லை. இதற்குக் காரணம் கட்சியைய் தாண்டி இடதுசாரி இயக்கம் பரவியிருக்கிறது.

இயக்கம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் அதை கட்சிக்குள் தேட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மு.ராமசாமியின் ‘கலகக்காரத் தோழர் பெரியார்’ நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்திற்கு வந்ததில் முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

சத்யராஜ் என்ற நடிகர் சம்பளம் வாங்காமல் பெரியார் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்? பெரியார் படம் எப்படி வெற்றிகரமாக ஓடியது? தமிழ் சினிமாவில் பார்ப்பன முகத்தோடு வருகிற மாதவனோ, அர்விந்தசாமியோ வெற்றிபெறுவதே இல்லை. விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்தியராஜ், விஜய் என நம்மைப் போன்றவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராக, சேது கால்வாய் திட்டத்திற்கு எதிராக இங்கே எந்த ஒரு போராட்டமும் நடைபெறுவதில்லை.

இந்த மாற்றம் எங்கேயிருந்து வந்தது? ஒரு பொதுப்புரிதல் இல்லையென்றால் இவையெல்லாம் இங்கே சாத்தியமா? பொதுப்புரிதல் ஏற்பட்டுவிட்ட பின்பு, பயிற்சி வகுப்புகள் எதற்கு?

இடதுசாரிகளின் கொள்கைகள் அந்த பொதுப்புரிதல் என்கிற தளத்துக்கே செல்லாததால் அவர்கள் வகுப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

திராவிட இயக்கம் தொடக்கத்தில் இருந்தே பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் வெளியில் தெரிகிற மாதிரி பெண்கள் ஏன் உருவாகவில்லை?

எல்லா இயக்கங்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தும். இன்றைக்கு இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, இந்துத்துவா தலைவி உமாபாரதி, தலித் தலைவி மாயாவதி, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தவிர குறிப்பிடும்படி வேறு பெண்கள் இல்லை. இடதுசாரி இயக்கத்திலும் குறிப்பிடும்படி பெண் தலைவர்கள் யாரும் இல்லை. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. ஆனால் மாறவேண்டும். எல்லா மாற்றங்களும் நம் கண்முன்னே சாத்தியமாகி வருவதைப் போல இந்த மாற்றமும் விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் (panneer@panossouthasia.org)

25.4.2010

புதன், 10 ஜூலை, 2019

திராவிட இயக்க ஆங்கில இதழ்கள்

* நான்பிராமின் (1916)


ஆசிரியர் சர்.பி.தியாகராயர்

* ஜஸ்டிஸ் (1917)

ஆசிரியர் டாக்டர் டி.எம்.நாயர்

ஆற்காடு இராமசாமி முதலியார்

டி.ஏ.வி.நாதன்

* ரிவோல்ட் (1928)

ஆசிரியர் தந்தை பெரியார் மற்றும் எஸ்.இராமநாதன் எம்.ஏ., பி.எல்.,

* ஜஸ்டிசைட் (வார இதழ்) -1945

ஆசிரியர்: தந்தை பெரியார்

* சண்டே அப்சர்வர்

ஆசிரியர் பி.பாலசுப்பிரமணியம்

* லிபரேட்டர்

ஆசிரியர், டாக்டர் ஏ.கிருட்டினசாமி பார்அட்லா

* ஹோம்லாண்ட் ஹோம் ரூல்

ஆசிரியர் அறிஞர் அண்ணா

* ஸ்பார்க்

ஆசிரியர் எஸ்.தேவரத்தினம்

* பிராக்ரஸ் (Progress)

ஆசிரியர் டி.எம்.பார்த்தசாரதி

* ரைசிங்சன்

ஆசிரியர்: முரசொலி மாறன்

* சண்டே டைம்ஸ்

ஆசிரியர் ஈ.வெ.கி.சம்பத்

* நியூ ஜஸ்டிஸ்

ஆசிரியர்: ஏ.எஸ்.வேணு

* தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் -1971

ஆசிரியர்: கி.வீரமணி எம்.ஏ., பி.எல்.,

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

திராவிடர் கழகத்தின் திட்டங்கள்



17.04.1948  - குடிஅரசிலிருந்து.... -

நான் அரசியல் என்னும் பொருள் பற்றிப் பேசுவேன் என்று தலைவர் குறிப்பிட்டார். நான் அரசியலைப் பற்றிப் பேசுவதற்காக வந்தவனல்ல. மேலும் அரசியல் பற்றிப் பேசுவதும் எனக்கு எப்போதும் முக்கிய கொள்கை அல்ல. நான் சமுகச் சார்பில்தான் அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் பற்றிப் பேசுவது வழக்கம்.

கழகத் திட்டம்


தற்போதைய நிலையில் அரசியலில் சம்பந்தம்  வைத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் எங்கள் கழகத்தின் திட்டமுமாகும். 1939ஆம் ஆண்டில் காங்கிரஸ் பதவியை விட்டு ஓடிய போதே ஜஸ்டிஸ் கட்சித் தலைவன் என்கிற முறையில் கட்சி நிர்வாக சபையைக் கூட்டி ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது என்று தீர்மானம் செய்தேன். அத்தீர்மானத்தின் காரணமாக சில ஜஸ்டிஸ் பிரமுகர்களுக்கு என்மீது வருத்தம்கூட ஏற்பட்டது. சமுக இழிவு நீங்கி மக்களெல்லாம் மனிதத்தன்மை அடையும்படி செய்யவேண்டும் என்பதுதான் எனது முக்கிய கடமை என்பதையும், அரசியல் பிரவேசம் இதற்குப் பாதகமாகவே முடியும் என்பதையும் உணர்ந்ததால்தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவிப் பற்றுள்ள சிலர் இதனால் அதிருப்தி கொண்டு கட்சியிடையே கலவரம் விளைவிக்க முயற்சித்தனர் என்றாலும், நான் தலைவனாயிருக்கும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சியார் இப்படிப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசிக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெளிவாக்கி விட்டேன். ஆகவே பதவிக்காக, சொந்த வாழ்வுக்காக கட்சியில் ஒட்டிக்கொண்டு இருந்த சிலர் என்னைத் தலைமைப் பதவியினின்று நீக்க பலமான முயற்சி செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவியில் ஆசைகொண்ட சிலர் அதைத் தங்களுக்கு நல்லவாய்ப்பு என்று கருதி மறைமுகமாக இதைத் தூண்டிவந்தனர். சேலம் மகாநாட்டின் போதுதான் இம்முயற்சி உச்சநிலை அடைந்தது.

அம்முயற்சியில் அவர்கள் படுதோல்வி யடையவும், மகாநாடு முடிந்தவுடன் கிளை ஸ்தாபனங்கள் அமைக்கும் வேலையும், அங்கத்தினர் சேர்க்கும் வேலையும் தொடங்கப்பட்டு 6 மாதத் திற்குள் 200 கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டு 20,000 அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டனர். இவ் வேலை முடிந்ததும் திருச்சியில் மாநாடு கூட்டப்பட்டு சேலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. அதன்படி அன்றே சிலர் நியமனப் பதவிகளைத் துறந்தனர். பட்டம் பதவிகளைவிட வசதி இல்லாத சிலர் கட்சி சம்பந்தத்திலிருந்து நீங்கிக் கொண்டனர். சிலர் வேறுகட்சி உண்டாக்கிக் கொண்டதாகக் கூறி அதுதான் ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண்டனர். ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அநேகமாக ஒருவரும் நிற்கவில்லை என்றாலும், ஒருவரிருவர் தங்கள் கட்சியைக் காட்டிக்கொள்ள நின்றனர். அவர்கள் உண்மையான ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டவர்கள் அல்ல என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் பொதுமக்களும் அவர்களுக்கு ஓட்டு கொடுக்கக் கூடாதென்றும் அறிக்கை வெளியிட்டோம். சுவரொட்டிகள் மூலமும் விளம்பரப் படுத்தினோம். சில ஊர்களில் தேர்தல் எதிர்ப்புப் பிரசாரமும் செய்தோம்.

எங்கள் கவலையெல்லாம்


ஆகவே, தோழர்களே! திராவிடர் கழகத்தாருக்கு அரசியல் பற்றிக் கவலையில்லை. மந்திரி பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணமும் எங்களுக்குக் கிடையாது. அரசியல் தலைவர்களாக எந்தக் கட்சியில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் சம்பளக் கணக்கைப் பார்த்துக் கொள்வதோடு நின்று விடாமல், மக்களுக்குச் சரியானபடி பணியாற்றினால் ஆதரிப்பதும், இல்லாவிட்டால் குறை கூறுவதும், நல்ல முறையில் பணியாற்றும்படி மக்களால் நிர்பந்தப்படுத்தப் படவேண்டும் என்பதுதான் எங்கள் கவலையும் அரசியலும் ஆகும். நாங்கள் அரசாட்சியின் மீது குறை கூறுவதெல்லாம் எங்களுக்கு கள்ள மார்க்கெட் லைசென்ஸ் பெறுவதற்காகவோ, அல்லது அவர்களை ஒழித்து விட்டு பதவியைக் கைப்பற்றிக் கொள்ளவோ, அல்லது அவர்களுடைய உத்தியோகங்களில் பங்கு கொள்ளவோ அல்ல. ஆட்சியாளர் யாவரேயாயினும் அவர்கள் ஒழுங்காக மக்களின் நலன் கருதியே உழைத்து வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

ஒரு நீக்ரோ ஆண்டாலும் ஆளட்டும்


ஆகவே, அரசியல் பதவியில் விருப்பமுள்ள எந்தக் கட்சியும், நாங்கள் போட்டி போடுவோமோ என்று கருதி எங்களை எதிர்க்கவேண்டிய அவசியமே இல்லை. திராவிட சமுகத்தைச் சேர்ந்த யாவரும் மற்றவர்களைப்போல் மனிதத் தன்மை பெற வேண்டுமென்பதுதான், அம்மனிதத்தன்மை அடைவதற்குத் தடையாயுள்ளவைகள் விலக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை. எங்களை ஒரு நீக்ரோ ஆண்டால்கூடக் கவலைப்பட மாட்டோம். அவன் மனிதத்தன்மையோடு ஆளவேண்டுமென்பதுதான் எங்கள் ஆசை.

கள்ளமார்க்கெட் பேர்வழிக்குக்


கழகத்தில் இடமில்லை


அரசாங்கத்தைக் குறை கூறுவதன் மூலம் எவராவது சிறு சலுகை பெறவோ, அல்லது கள்ள மார்க்கட் செய்ய பர்மிட் பெறவோ, மந்திரிகளுக் கிடையே தரகராயிருந்து கொள்ளையடிக்கவோ முயற்சி செய்வாராயின், அத்தகையவருக்கு திராவிடர் கழகத்தில் வேலையில்லை என்று கட்டாயம் கூறிவிடுவோம். கூறுவது மட்டுமல்ல, அதைப் பத்திரிகையில் போட்டு விளம்பரப்படுத்தி அவன் அவமானம் அடையும்படியும் செய்துவிடு வோம். அவனுடைய அயோக்கியத்தனத்தை மூடி வைக்க ஒருபோதும் முயற்சிக்கவும் மாட்டோம். திராவிடர் கழகம் சமுதாய சீர்திருத்தத்திற்காகவே இருந்து வருகிறது.

 

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமேன்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளாதார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத்துவ சுதந்தரம் வேண்டு மென்பதுதான் எங்கள் கோரிக்கை.

-தந்தை பெரியார்

 - விடுதலை நாளேடு, 6.7.19

திங்கள், 8 ஜூலை, 2019

கோவில் நுழைவு உண்மை நிலை என்ன?

*கோவில் நுழைவு: மதுரை வைத்தியநாதய்யர்தான் முன்னோடியா?...................*

உண்மை நிலை என்ன?*

1921 ஆம் ஆண்டிலேயே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய நுழைவை நடத்திக் காட்டியது சுயமரி யாதை இயக்கம் - இதைப்பற்றி எல்லாம் ஊடகங்கள் வெளிப்படுத்துவது இல் லையே ஏன்?

1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர், அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லி, குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார்.

இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும், ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் அழைத்துச் சென்றார். *(ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624).*

அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்து விட்டதாக அறிவித்தார். இதை அறிந்த பட்டர்கள், கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றனர். அங்கு அறங்காவலராக இருந்த ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சிக் காரர்.

எனவே, அவர் மறுநாள் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்து விட்டார். "இரவு 8.45 மணிக்கு மந்திரி வருகிறார் என்று சொல்லி கோயில் பட்டரை ஏமாற்றி கூட்டிக் கொண்டு, கோயிலுக்குள் நுழைந்த வைத்தியநாதய்யரிடம் பட்டர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு தீபா ராதனை காண்பித்து விபூதி கொடுத்தார். அதன் பின்னரே அவருடன் வந்தவர்கள் - அய்ந்து பஞ்சமரும் ஒரு நாடாரும் எனத் தெரிந்தது என வர்ணாசிரம சங்கம் சார்பில் துண்டறிக்கை விநியோ கிக்கப் பட்டது'' *("விடுதலை' - 13.7.1939).*

கோயில் நுழைவை பகிரங்கமாக நடத்தும் நோக்கமும் துணிவுமின்றி, இரவு 8 மணிக்கு மேல் கோயில் நுழைவு நாடகமாடியதற்குக் காரணம் என்ன என்பதை பெரியார் விளக்குகிறார் : "தேர்தல் வந்தது, கதவும் திறந்தது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டே வைத்தியநாதய்யர் நாடகமாடினார். இது, ராஜாஜியின் சூழ்ச்சி. இதனால் ஆதிதிராவிடர்களுக்கு நிரந்தரப் பயன் எதுவும் இல்லை. செய்கிற சட்டத்தை ஒழுங்காகவும் நன்றாகவும் செய்ய வேண்டும் என பெரியார் வேண்டுகோள் விடுத்தார்'' *("விடுதலை', 12.7.1939).*

1921லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்து கொண்டு ஜே.என் இராமநாதன், டி.வி. சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன் றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள்மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

1929ஆம் ஆண்டிலேயே ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தவரால் ஆலய நுழைவு செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகியோர்மீது இபிகோ 295,299, 109 பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப் பட்டதுண்டே!

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என். இராமநாதன் தாழ்த்தப்பட்டவர் களை அழைத்துக் கொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலை யில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவு செய்திருக்கிறது. திரு வண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ். கண்ணப்பரை கோவிலுக்குள் ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது.

1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவி லில் 1000-க்கும் மேற்பட்ட பார்ப்பனரல் லாதாருடன் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர் களால் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்மைகளை ªல்லாம் இனி மேலாவது ஊடகங்கள் வெளியிடுமா? 1922ஆம் ஆண்டில் திருப் பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆலய நுழைவுக்கு வைத்தியநாதய்யர் எதிர்ப்புத் தெரிவித்தார் மதுரை வைத்திய நாதய்யர் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

- *கருஞ்சட்டை*
-  விடுதலை நாளேடு, 8.7.16

வியாழன், 4 ஜூலை, 2019

உயிர்ப்புடன் இருக்கும் திராவிட இயக்கத்தின் சித்தாந்த பலம்!

அமெரிக்காவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் வெளியீடு


"தி காமன் சென்ஸ்" (The Common SENSE) மாத இதழில் புகழாரம்!




அமெரிக்காவில் உள்ள பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் வெளி வரும் "The Common Sense” என்ற மாத இதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர்களின் படங்களுடன் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது.)

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ் தோழர்களிடம் கொண்டு சேர்க்க 2017 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது. அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கலைஞரின் 96 ஆவது பிறந்த நாளை ஒட்டி இந்த சிறப்பு இதழை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. கலைஞர் நம் நெஞ்சங்களில் என்றும் நிறைந்து இருப்பார் என்பதற்கான வெளிப்பாடே இந்த சிறப்பு இதழ் மேலும் சமுக நீதி காவலர், மண்டல் நாயகர் வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 25) வாழ்த்துகளையும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் இந்துத்துவ காவிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை, இஸ்லாமி யர்களை ஜெய் சிறீராம் கூற வற்புறுத்தி அதைக்கூறாத காரணத்தினால், கொன்று போடும் வன்கொலைகளை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. தப்ரெஸ் அன் சாரி (Tabrez Ansari) ஜார்க்காண்ட் மாநிலத்தில் ஜெய்சிறீராம் சொல்லாத காரணத்தினால் கட்டி வைக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். அதேபோன்று மேற்கு வங்கத்தில் Hafeez Mohd Sahrulkh Haidar ஜெய் சிறீராம் சொல்லாத காரணத்தினால் ஓடும் தொடர் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயங்களோடு உயிர் பிழைத்திருக்கின்றார். இதுபோன்ற தொடர் தாக்குதல்களை காவிகள் நிறுத்திட மக்கள் ஒன்றிணைந்து ஆதிக்கத்திற்கு எதிராக குரலெழுப்புவது ஒன்றுதான் வழி.

தெலங்கானாவில் ஒன்பது மாத பெண் குழந்தையை, 25 வயது ஆண் கடத்திக் கொண்டுச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கின்றார் என்ற செய்தி நாடெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான, பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்தப் போக்கை கட்டுப்படுத்த சமுகம் இணைந்து செயல்படுவது ஒன்றேவழி என்று பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கருதுகின்றது.

அமைப்பின் புதிய முயற்சிகளுக்கு உங்களின் ஆதரவைக் கோருகின்றோம்

நன்றி ஆசிரியர் குழு (இதைத் தொடர்ந்து 'ஒரு ஒலி வாங்கியின் குரல்' என்ற தலைப்பில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்அமெரிக்கா என்ற அந்த அமைப்பின் சார்பில் சுதாகர் சிவசாமி எழுதியுள்ள கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்)

ஒரு ஒலிவாங்கியின் குரல்!


தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு கண்டு பிடிப்புகளில் நமக்கு பரிச்சியம் இருந்தாலும் 'ஒலிவாங்கி' பயன்படுத்தும்போது மட்டும் நமக்கு பழைய நினைவுகள் கலந்த ஒரு உணர்வு இருக்கும். அரைஞாண் கயிற்றின் தயவால் அரைக்கால் சட்டையை இழுத்து கட்டிக்கொண்டு மைக் செட்காரர்பின் ஓடிய அனுபவம் நம்மில் பல பேருக்கு இருந்திருக்க கூடும். மைக்செட்காரர் அசந்த நேரம் மைக்கில் ஹலோ ஹலோ என்று கூச்சலிட்டுவிட்டு ஓடுவது அக்கால சிறார்களின் விழாக்கால விளையாட்டு. சிறுவயதில் சந்தித்த மைக் செட்காரர்கள் நம் ஆதர்சநாயகர்கள்.

விருந்தினர் இல்லாமல்கூட ஒரு பொது நிகழ்ச்சி நடக்கலாம் ஆனால் மைக் செட்காரர் இல்லாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

சமுக நீதியும் சாதி ஒழிப்பு அரசியலும் பேசும் இடத்தில் மைக்செட் நினைவுகளை பேசி பூரிப்படைய என்ன இருக்கிறது என கேள்வி எழலாம். நிச்சயமாக தொடர்பு உண்டு. ஆண்டாண்டு காலமாய் ஏற்ற தாழ்வுடன் வாழ்ந்த நம் சமூகம் கொஞ்சமேனும் சமத்துவம் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறதென்றால், அதற்கு மிக முக்கிய காரணம் இங்கே எளிய மக்களின் சமத்துவத்திற்காகவும்

முன்னேற்றத்திற்காகவும் உழைத்த அறிஞர் பெருமக்கள் தான். அவர்களின் கருத்துகளும் எண் ணங்களும் மக்களிடம் சென்றடைய கருவிகள்  தேவை. இக்காலம் போல் ஒவ்வொருவர்  கையிலும் ஸ்மார்ட் போன் இல்லை, நல்ல வேளை அதனால்தான் என்னவோ பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது குறைவாக இருந்தது. தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு பேச்சு. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினாலும், அனைவர் உள்ளத்திலும் கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கக் கூடிய சர்வ வல்லமை பொருந்திய ஒலி வாங்கி, தன்மனதில் இருப்பதை சொல்வதே இக்கட்டுரை.

நான் ஒலி வாங்கி!




மைக் என்று சொன்னால்தான் எளிய மக்களுக்கும் இலகுவாய் புரியும். மனிதகுலம் கண்ட மிகச் சிறந்த நடுநிலையாளர் நான். கேட்பதை மட்டுமே எடுத்துரைப்பேன், என்னுடைய தனிப்பட்ட கருத்துகளை என்றுமே நான் திணித்ததில்லை. படித்து உயர்ந்த பண் பாளர்கள் பலருக்கு பக்கபலமாய் அவர் கள் கருத்துகளை பரப்புரை செய்ய உழைத்ததும் நானே.

வாட்ஸ் எப்பில் வரலாறு(?) படிக்கும் இன்றைய தலைமுறைக்கு, மக்கள் நலனுக்காக முழங்கிய மேதைகள் நிறைந்த மேடைகளை பார்த்து வியக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. என் மூலமாய் புகழை அடைந்தோர் பலர் இருக்க, இவர்கள் பேசியதால் பெருமைஎன நான் உணர்ந்தவர்களும் சிலர் உண்டு. வாழ்நாள் முழுவதும் மக்கள் விடுதலைக்காக பரப்புரை செய்த தலைவர்களையும் போராளிகளையும் நான் கண்டிருக்கிறேன். அப்படி என்னை மிகவும் கவர்ந்த சில தமிழக தலைவர்களுடனான என் நினைவை பதிவு செய்கிறேன்.

பகுத்தறிவு பகலவன்


தந்தை பெரியார்




உலக சிந்தனையாளர்கள் வரிசையில் தமிழகம் கண்ட தன்னிகரில்லா சிந்தனையாளர் தந்தை பெரியார். எதையும் ஏன் எதற்கு எப்படி என்று ஆராய்வதே பகுத்தறிவு என்றார் சிந்தனை சிற்பி சாக்ரடீஸ். நான் சொல்வதை கேளுங்கள் என உரைப் போர் பலர் இருக்க பெரியாரோ, யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று கூறியவர். வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மேம்பாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இன்று பலரால் கொண்டாடப்படும் அவர் அன்று சந்தித்தது அவமானங்களை மட்டுமே. ஆனால் அவர் சந்தித்த அவமானங் கள் எதுவும் வீண் போகவில்லை , அவர் வாழும் காலத்திலேயே அவர் எடுத்த போராட்டங்கள் பலவற்றில் வெற்றி கண்டார். தொண்ணூறு வயதிற்கு பிறகும் இளைஞனாய் தமிழகம் முழுதும் வலம் வந்தவர், தன்னுடைய கடைசி பரப்புரையில் அவர் பேசியது இன்றும் ஆழமாய் ஒலித்து கொண்டிருக் கிறது. ''உலகமெல்லாம் முன்னேற்றம் அடை யுது, நம்ம நாடு மட்டும் பட்டிக்காடா போகுது.. உலகமெல்லாம் விஞ்ஞானத்துல் விருத்தி ஆகுது நம்ம நாடு மட் டும் மூடநம்பிக்கை  விருத்தி ஆகுது... ஏதாவது ஒரு காரியம் பாத்து விட்டுடனும்" என்று முழங்கினார். தன் உடல்நல குறை பாடுகளையும் தாண்டி அவர் பயணித்த தூரம் மிக மிக அதிகம். அந்த உத்வேகமே அவருக்கு பின்னால், அவர் கண்ட இயக்கம் வெற்றிகரமாய் செயல்பட காரணமாய் இருக்கின்றது

திராவிட பேராசான் அறிஞர் அண்ணா




பெரியாரின் பாசறையில் பயின்ற ''தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என முழங்கியவர். தமிழகத்தில் மேடை பேச்சிற்கான இலக்கணத்தை வகுத்தவர். ஒரு தேர்தல் பரப்புரையில் அண்ணா மேடைப் பேச்சின் முக்கியத்து வத்தை இவ்வாறு கூறுகிறார். 'நீண்ட உரை நாட்டுக்கு தேவைப்படுகிறது, ஏனென்றால் நெடுங்காலமாக மூண்டு போயிருக்கின்ற கேடுபாடு களை நீக்குவதற்கு நீண்ட உரையும் தேவை. அடிக்கடி உரைகளும் தேவை. தொடர்ந்து உரைகளும் தேவை. தாம் ஒடுக்கப்பட்டுள்ளதையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதையும் மக்களை உணர வைக்க இங்கே நிறைய உரைகள் தேவைப்பட்டன. ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே ஒப்பற்ற பேச்சாற்றல் கொண்டிருந்த பேரறிஞர், அடுத்தடுத்து இரண்டு மேடைகளில் வெவ்வேறு தலைப்பு களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்ற கூடியவர்.

இந்தி திணிப்பு போராட்டங்களின் தொடக்க காலத்தில் அண்ணா முழங்கிய இணைப்பு மொழி குறித் தான கூற்று, இன்றும் வடக்கிலிருந்து வரும் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக இன்றைய இளைஞர் களால் மேற்கோள் காட்டப்படுகிறது பூனைக்கு ஒரு வழியும் பூனைக் குட்டிக்கு ஒரு வழியும் தேவையா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இரண்டே ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்திருந் தாலும் அடுத்த சில நூற்றாண்டு களுக்கும் சேர்த்து அடித் தளத்தை அமைத்துவிட்டே சென்றுள்ளார்.

செம்மொழி தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்




பெரியார், அண்ணா வரிசையில் பகுத்தறிவு வளர்த்தவர், தமிழகத்தில் அய்ந்து முறை முதல்வராய் இருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. சிறந்த எழுத்தாளர், கதாசிரியர், அரசியல் வாதி என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்திருந்தாலும், மக்கள் மனதில் என்றுமே ஒரு ஆகச்சிறந்த பேச்சாளராக பதிந்தவர். அரசியல் மேடையானாலும் சரி இலக்கிய மேடையானாலும் சரி எதிர்திசையில் அமர்ந்திருப்போர் அனைவரையும் தன் உரைவீச்சில் கட்டிப்போடக் கூடிய நுண்ணாற்றல் கொண்டவர். இவர் அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் மீது வெறுப்பு கொண்டோர் கூட இவர் பேச்சை ரசிப்பர். முதல்வராய் இருந்த பொழுதும் கூட இலக்கிய கூட்டங் களில் கலந்து கொள்ள அவர் தவறியது இல்லை . ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் "இலக்கணம் எனும் தாய்ப்பால் அருந்தாமல் பசியெடுத்த போதெல்லாம் புதுக்கவிதை புட்டிப் பால் குடித்திடும் குழந்தை நான் என்று கவிபாடி அரங்கத்தை அதிர வைத்தவர். கலைஞரின் ஆயிரமாயிரம் உரைகளும் படைப்பு களும் இருப்பினும் அவர் அண்ணாவிற்காக இயற்றிய இரங்கற்பா எவரையும் உருக வைக்கும். அண்ணா வின் தம்பியாய் அவருடைய மாநில சுயாட்சி கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையிலேயே தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தார்.

இவர்களை போலவே தமிழகத் தில் பல தலைவர்களை நான் கண்டுள்ளேன். திராவிட இயக்கத்தினர், பொதுவுடைமை வாதிகள், தலித்திய வாதிகள், ஜாதியற்ற தமிழ் தேசியம் அமைய உழைப்பவர்கள் என பல்வேறு தரப்பினரின் பல் கருத்துகளையும் வாதங்களையும் கேட்டு கொண்டே இருக்கிறேன். இவர்களை எல்லாம் கண்ட நான் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் கேலி கூற்றுகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எந்த மண்ணில் சமத்துவமும் சகோதரத்துவமும் மலர் பரப்புரை செய்யப்பட்டதோ அதே மண்ணில் இன்று ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரிவினை சக்திகள் வேரூன்றி வருகின்றன. தொண்ணூறு களுக்கு பின் தமிழகத்தில் ஜாதி கட்சிகளின் துவக்கம் பெருகி கொண்டே போகிறது, அதன் விளைவு ஓவ்வொரு ஜாதி கட்சியும் மேடை போட்டு வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றன. ஒரு ஊரில் வசிக்கும் ஒரே வர்க்க நிலையில் இருக்கும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இணைந்து உழைத்து முன்னேறலாம். மாறாக ஜாதியவாதிகளின் ஜாதி பித்துக்கு பலியாகி, இருக்கும் வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர்.



இன்னொருபுறம் இந்துக்களும் சிறுபான்மையினரும் ஒன்றாய் வாழ்ந்து வந்த தமிழகத்தில், மதவாத சக்திகள் ஆங்காங்கே புற்றீசல் போல் முளைத்துள்ளனர். தமிழ் கலாச்சாரத்தை காப்பதாக கூறிக்கொண்டு வடவரின் இந்துத்துவா சித்தாந்தத்தை தமிழ் மண்ணில் நிறுவமுயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர்கள் மேடைகளில் கக்கும் வன்மம் ஆபத்தானவை. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுத்து ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க நினைக்கும் சக்திகளின் முயற்சி தமிழகத்தில் தோல்வியையே சந்திக்கும், இருப்பினும் அலட்சியம் காட்டாமல் அவர்களை வேரறுக்க  வேண்டியது அவசியம். இவர்கள் ஒருபுறமென்றால், வரலாற்றை திரித்து வெறுப்பு அரசியலை வளர்த்தெடுக்கும் கூட்டங்களும் இங்கே காலூன்றி கொண்டிருக்கிறது. மாண்டுபோன மனித மாண்பை மீட்டெடுப்பதே தலையாய கடமை என்றார் அண்ணல். அவ்வாறு கடந்த அறுபது ஆண்டுகளில் மனித மாண்பை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள் மற்றும் வெற்றிகள், அதன் மூலம் அடைந்த சட்ட அங்கீகாரங்கள் என எல்லாவற்றை யும் புறந்தள்ளி வைத்து விட்டு இங்கு அரசியல் பேசுவது அறியாமை இல்லை, ஏமாற்று வேலை. இன்று அரசியல் களத்தில் இருக்கும் அனைவருக்குமே ஒரு வேலை திட்டம் உண்டு, அவை மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதே முக்கியம் வரலாற்றை யார் வேண்டுமானாலும் திரித்து பேசலாம், எந்த விதமான கட்டுகதைகளையும் கூறலாம். திரிபு வாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் அறிவர், உண்மை மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். திராவிட இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலத்தி லிருந்தே அதனை வீழ்த்த பல்வேறு சக்திகள் முயற் சித்து கொண்டே இருந்தாலும் அதன் சித்தாந்த பலம் அந்த இயக்கத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சந்தேகமிருப்பின், நானே சாட்சி. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்க அரசியலில் பேசப்பட்ட அனைத் திற்கும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சாட்சியாக என்றும் வீற்றிருக்கும் நான் ஒலிவாங்கி!

வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!


நன்றி: 'முரசொலி', 3.7.2019

- விடுதலை நாளேடு, 4.7.19