செவ்வாய், 7 மார்ச், 2017

தலித் சுயமரியாதை யாத்திரை  ரோகித் வெமுலாவின் தாயார் அறிவிப்பு



அய்தராபாத், மார்ச் 5 கடந்தாண்டு ஜனவரி மாதம் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவன் ரோகித் வெமுலா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தலித் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் பாகுபாடு காட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ரோகித் வெமுலாவின் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தாண்டு அவரது நினைவு தினம் பல்கலைக்கழக வளாகத்தில் கடைப்பிடிக்கப்படும் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவித்தனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்து விட்டது. இதையடுத்து மீண்டும் மானவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் முழுவதும் தலித் சுயமரியாதை யாத்திரையை மார்ச் 14 அன்று மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை மற்றும் நாடு முழுவதும் தலித்துகள் மீதான கருத்தியல் தாக்குதல் ஆகியவற்றை விளக்கி இந்த யாத்திரை இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், யாத்திரையில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று தலித் சுயமரியாதை யாத்திரை நிறைவு பெறும் என்று ராதிகா வெமுலா தெரிவித்தார்.

-விடுதலை,5.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக