செவ்வாய், 21 மே, 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)


நூல்            : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள்

ஆசிரியர்     : அ. மார்க்ஸ்

வெளியீடு    : அடையாளம் பதிப்பகம்.

 

 

விலை: 160. பக்கங்கள்: 175

 

 

 

ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்ச் சூழலில் அயோத்திதாசரின் பெயர் மறைக்கப் பட்டிருந்ததற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ரா.தான் என்றொரு கருத்தை உடனடியான சில அதிகார நோக்கங் களுக்காகவும் பொருளியல் நலன்களுக்காகவும் சமீபகாலமாகச் சிலர் முன்வைத்து வருகின்றனர். இத்தகைய கருத்தை முன்வைப்பவர்கள் அயோத்திதாசரும் அம்பேத்கரும் பெரியாரும் தமது எழுத்துகளிலும் செயற்பாடுகளிலும் முன்வைத்த பார்ப்பன, இந்து மத எதிர்ப்புகளை உதட்டளவிலுங்கூட முன்வைக்காதவர் களாகவும், முன்வைக்க இயலாத இடங்களில் இருப்பவர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்தை அகில இந்திய அளவில் பரப்புகிற காரியத்தை ஆங்கில ‘மீடியா’வில் செயல்படுகிற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் செய்து வருகின்றனர். இதுநாள்வரை அரசியல் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த முயற்சி இப்போது கல்வியியல் புலத்திலும் மேற்கொள்ளப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கதாக உள்ளது.

அயோத்திதாசரின் தமிழ் பௌத்தத்தை விளக்கும் முதல் நூல் என அறிமுகப்படுத்தப்படுகிற ‘நான் பூர்வ பௌத்தன்’ என்னும் இந்நூல் அறிவித்துக் கொண்டுள்ள இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதைக் காட்டிலும் பெரியாருக்கு எதிரான மேற்குறித்த அவதூறை ஆராய்ச்சி என்னும் போர்வையில் முன்வைக்கும் பணியையே நிறைவேற்றியுள்ளது.

சென்ற நூற்றாண்டு முழுமையிலும் அயோத்திதாசரின் பணியும் பங்களிப்பும் ஆய்வுத் தளத்தில், கல்விப் புலத்தில், அரசியல் களத்தில், சிறு பத்திரிகைச் சூழலில் எதிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது உண்மை. ஆனால், இதற்கான பழியை பெரியாரின் மீது சுமத்துவது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதுங்கூட, சென்ற நூற்றாண்டுச் சாதனையாளர்களின் பெயர்களை முன்வைப்பது அல்லது மறைப்பது என்பதற்காக ஏதோ ஒரு நிறுவனம் இருந்தது போலவும், அதற்குத் தலைவராகப் பெரியார் இருந்தது, போலவும் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது நகைச்சுவையாக இருக்கிறது. இது போல வரலாற்றில் மறைந்துபோகிற அல்லது மறைக்கப்படுகிற செயல், வேறு பல சந்தர்ப்பங்களிலும் நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணங்களை வரலாற்றுச் சூழலில்தான் தேடவேண்டுமேயொழிய, தனியொருவர் மீது பழி சுமத்துவது அர்த்தமற்றது.

பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றுத் துறையில் பணியாற்றுபவரும் இந்நூலாசிரியருமான முனைவர் டி.தருமராஜனும் மற்றவர்களும் பெரியார் அயோத்திதாசரை மறைத்துவிட்டார் என்பதற்குச் சொல்லும் காரணம் அயோத்திதாசர் ஒரு பறையர் என்பது (பக்.90). இப்படியான கருத்தை முன்வைப்பவர்கள் இரு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அவை:

1.            அயோத்திதாசர் பறையர் என்பதற்காகத்தான் பெரியார் புறக்கணித்தாரா? எனில் அவர் அம்பேத்கரை மட்டும் ஏன் கடைசிவரை உயர்த்திப் பிடித்துவந்தார்?

2.            பறையர் என்பதற்காகவே பெரியாரால் புறக்கணிக்கப்பட்டார் என வைத்துக் கொண்டாலும் ஏன் ஒரு நூற்றாண்டு காலப் பறையர் நல மேம்பாட்டு இயக்கங்களோ, இல்லை பவுத்த இயக்கங்களோ அவரையும் அவரது கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தவில்லை?

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் நிலவி வந்த நட்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அம்பேத்கரின் இரு முக்கிய அரசியல் நிலைப்பாடுகளையும் (இரட்டை வாக்குரிமை, மதமாற்றம்) அதாவது சென்ற நூற்றாண்டு தலித் அரசியல் கோரிக்கைகளில் முக்கியமான இரண்டையும் முழுமையாக ஆதரித்த ஒரே தமிழ்த் தலைவர் பெரியார் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அன்றைய தலித் இயக்கத் தலைவர்கள் இவற்றை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தலித் தலைவர்களோ அயோத்திதாசரின் தமிழ் பவுத்தம் என்கிற குரலையும் முன்வைப்பது இல்லை. அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் என்கிற நடைமுறையையும் கடைபிடிப்பதில்லை. சொல்லப்போனால் அயோத்திதாசர், அம்பேத்கர் என்கிற பெயர்களை உச்சரிப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசியத் தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களைத்தான் அதிகம் உச்சரிக்கின்றனர்.

அயோத்திதாசர் முன்வைத்த பவுத்தம் தனித்துவமானது. லட்சுமிநரசு முதலான பவுத்த அறிஞர்கள் முன்வைத்த பவுத்தம், அநகாரிக தர்மபாலா போன்ற சென்ற நூற்றாண்டின் பவுத்த விழிப்புணர்வு இயக்கத்து நாயகர்கள் முன் வைத்த பவுத்தம், பெரியார், சிங்காரவேலர், இராகுல சாங்கிருத்தியாயன் முதலானோர் முன்வைத்த பவுத்தம் ஆகியவற்றிலிருந்து அயோத்திதாசரின் பவுத்தம் வேறுபட்டது. பெரியாரின் பவுத்தமும் சரி, அவரது அரசியலும் சரி, முற்றிலும் அயோத்திதாசரின் பாதையிலிருந்து வேறுபட்டவை. எது சரி என்கிற கேள்விக்கு நான் இப்போது போகவில்லை. பெரியார் அயோத்திதாசரை மறைத்தாரா என்கிற கேள்விக்குப் பதில் தேட அது தேவையுமில்லை. பெரியாரின் அரசியல் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன் மாதிரியாகக் கொள்ள இயலாததாக இருந்தது என்பதே இங்கு முக்கியம்.

சென்ற இரு நூற்றாண்டுகளில் இங்கு மேற்கொள்ளப்பட்ட பவுத்தப் புத்துருவாக்க முயற்சிகளின் வரலாற்றைப் பரிசீலனை செய்வது அவசியம். மாமன்னர் அசோகரது காலத்தில் இந்தியத் துணைகண்டம் முழுவதும் பரவியிருந்த பவுத்தம் இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டது என்பதே வரலாறு. அதன் எச்ச சொச்சங்கள், தாக்கங்கள் பிற மதங்களிலும் மக்களின் பொது நினைவுகளிலும் பதிந்திருந்த போதிலும் ஒரு நிறுவனம் என்கிற வகையில் அது இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டது. தூபிகளும் விகாரைகளும் அழிக்கப்பட்டன. சைவ, வைணவக் கோயில்களாகவும் அய்யனார், தருமராசர், சாஸ்தா முதலிய தெய்வங்களாகவும் மாற்றப்பட்டன. பிக்குகள் கொல்லப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டனர். நூற்கள் பலவும் அழிக்கப்பட்டன. புத்த கயாவும் இதர பவுத்தத் தலங்களும் இந்து மதச் சாமியார்கள் (மகந்த்கள்) கையில் சீர்குலைந்து கிடந்தன.

இந்தத் தலங்களை, குறிப்பாக புத்த கயாவை மீட்பது என்கிற நோக்குடன் கொழும்பில் 1891 மே மாதத்தில் ‘மகாபோதி கழக’த்தை நிறுவியவர் அநகாரிக தர்மபாலா, மகந்த்களை எதிர்த்து வழக்குகளைத் தொடர்ந்து லண்டன்வரை சென்று இந்திய அமைச்சரை எல்லாம் சந்தித்து இறுதியில் புத்த கயா மீட்கப்பட்ட கதை தனியானது (இதற்கான முதல் உந்துதலை அளித்தவர் எட்வின் ஆர்னால்டு).

மகாபோதி கழகத்தின் முதல் தலைவர் மலிசா கந்த விகாரையின் தலைமைப் பிக்குவும் வித்யோதயா கல்லூரி முதல்வருமான சுமங்கல மகாதேரர். பொதுச் செயலாளர் தர்மபாலா. இந்தக் கழகம் உருவாவதற்கு பெரும் உதவிகளைச் செய்தவர் எனக் கழகத்தினர் நன்றியுடன் நினைவுகூர்வது சென்னை ‘அடையாறு தியாசபிகல் சொசைட்டி’யின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் ஆல்காட் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் மேடம் ப்ளாவட்ஸ்கியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தம்மைப் பவுத்தர்கள் என அறிவித்துக் கொண்டனர். தர்மபாலாவுக்கு முன்னரே ‘அய்க்யப் மகாபோதி கழக’த்தை நிறுவி, 1896 வரை அன்றைய இயக்குனராகவும் இருந்தவர் ஆல்காட்.

ஆல்காட்டின் செயற்பாடுகள் அடையாறுடன் முடிந்துவிடவில்லை. இலங்கையிலுள்ள பவுத்த அமைப்புகளுடன் அவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டார். இலங்கையில் பவுத்த விழிப்புணர்வுக்கு காரணம் என இரு நிகழ்வுகளை தர்மபாலா சுட்டிக் காட்டுகிறார்.

ஒன்று: 1872ஆம் ஆண்டு இலங்கையில் பனாதூரில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் பவுத்த பிக்குகளுக்கும் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க சர்ச்சை.

இரண்டு: 1880இல் இலங்கையில் தியாசபிகல் சொசைட்டி தொடங்கப்பட்டது. ஆல்காட்டிற்கும், பிளாவட்ஸ்கி அம்மைக்கும் காலி வீதியில் மிகப் பெரிய  ‘Royal Welcome’ அளிக்கப்பட்டதாக தர்மபாலா எழுதுகிறார் Maha Bodhi Society Journal, Centenary Volume, 1991). கொழும்பில் ஆல்காட்டிற்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறு வண்ணங்களில் பவுத்தக் கொடி ஒன்றையும் ஆல்காட்தான் அமைத்துத் தந்தார் (1884).

அன்னிபெசன்ட் ஜே. கிருஷ்ணமூர்த்தியைக் ‘கண்டுபிடித்தது’ போலப் பாரம்பரியப் பவுத்தக் குடும்பம் ஒன்றில் பிறந்திருந்த ஹெவவிதர்னே தர்மபாலாவைக் கண்டுபிடித்துப் பெற்றோரின் விருப்பையும் மீறி வற்புறுத்திச் சென்னைக்கு அழைத்து வந்து பவுத்த மீட்புப் பணியில் பிளாவாட்ஸ்கி அம்மை ஈடுபடுத்திய கதை விரிவானது.

தர்மபாலாவைப் போலவே அயோத்திதாசருக்கும் பவுத்த மீட்புப் பணியில் பேருதவியாக இருந்தது கர்னல் ஆல்காட் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசரே இதை நன்றியுடன் குறிப்பிடுகிறார். (பார்க்க அலாய்சியசின் தொகுப்பு). தனது சொந்த முயற்சியில் அவர் 1890இல் ஆல்காட்டைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பறையர்கள் பூர்வ பவுத்தர்கள் என்கிற தனது கருத்தை விளக்கி புத்த மதத்தை மீள் உருவாக்கம் செய்யவும் புத்தக்கோயில் ஒன்றைக் கட்டவும் உதவி கோருகிறார். சிங்கள பவுத்த அமைப்புகளுடன் அயோத்திதாசருக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த ஆல்காட் அவரை அதே ஆண்டில் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறார். சுமங்கல மகா தேரரிடம் பஞ்சசீல தீட்சை பெற்று பவுத்தராகத் திரும்புகிறார் அயோத்திதாசர்.

ஆல்காட்டின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்த அநகாரிக தர்மபாலாவும் குணரத்னே என்கிற தமிழறிந்த பிக்கு ஒருவரும் ஆல்காட்டின் முயற்சியில், ‘டாக்டர் அயோத்திதாசர் மற்றும் சிலரின்’ உதவியோடு சென்னை ராயப்பேட்டையில் 1898 ஆகஸ்டு 8ஆம் தேதியன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர். அன்றுதான் ‘சாக்கைய புத்தகக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது (தொடக்கத்தில் அதன் பெயர் திராவிட புத்தக் கழகம்). கூட்டத்தில் அயோத்திதாசர் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியை தர்மபாலா வெகுவாகப் பாராட்டினார். சிகாகோவைச் சேர்ந்த பவுத்த அறிஞர் டாக்டர் பால் கேரஸ் சாக்கைய புத்தக் கழகத்திற்-குத் தலைவராக இருக்கச் சம்மதித்தார்.

மீண்டும் தமது 35ஆவது பிறந்த நாளன்று (செப். 17, 1899) சென்னை வந்த தர்மபாலா ஏராளமான பொதுக்கூட்டங்களில் பேசினார். ‘மெட்ராஸ் ஸ்டான்டர்ட்’ இதழ் அவரது விரிவான பேட்டியை வெளியிட்டது. 1899 செப்டம்பர் 28ஆம் தேதியன்று ‘மகாபோதிக் கழக’த்தின் சென்னைக் கிளையைத் தொடங்கி வைத்தார் தர்மபாலா. இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து எம்.சிங்காரவேலுச் செட்டி பி.ஏ. (மா.சிங்காரவேலனார்). முதல் செயலாளராகவும் அவரே பொறுப்பேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. லட்சுமி நரசுவும் சிங்காரவேலரும் தொடர்ந்து இதில் இயங்கினர். 1906இல் பிக்கு நந்தராமாவை வரவழைத்துப் பவுத்த பிரசாரத்தையும் இவர்கள் மேற்கொண்டனர். இதிலெல்லாம் அயோத்திதாசர் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. இல்லை என்றே தோன்றுகிறது. எனினும் ‘மகாபோதிக் கழக’த்திற்கும் அயோத்திதாசருக்கும் இடையில் பிளவு அதிகமாகி 1911 வாக்கில் முற்றிலும் எதிர் எதிராக இரு அமைப்புகளும் (சாக்கைய புத்தக் கழகம் _ மகாபோதிக்கழகம்) நின்றன. அதற்கான காரணங்களை அயோத்திதாசர் விளக்குவதை அலாய்சியஸ் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் காண்க. இது குறித்து விரிவாக ஆய்ந்த பின்பும், மறுதரப்புக் கருத்துகளை அறிந்த பின்னுமே நாம் எந்த முடிவுக்கும் வர இயலும். (வெளியார் ஒருவர் அளித்த நன்கொடையைப் பயன்படுத்திக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. தர்மபாலா புத்துயிரூட்டிய பவுத்தம் சற்றே மேட்டிமைத் தன்மை வாய்ந்ததாக இருந்தது என்பது இன்னொரு கருத்து.) தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பவுத்தப் புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் குறைந்த பட்சம் இருவிதப் போக்குகள் இருந்தன என்பது கவனித்தக்கது. மூன்று போக்குகள் என்றும்கூடச் சொல்லலாம். தனது அமைப்பை நியாயப்படுத்தி உலகெங்கிலுமுள்ள பவுத்த கழகங்களுக்கு அயோத்திதாசர் கொடுத்த வேண்டுகோளையும் அலாய்சியஸ் தொகுப்பு இரண்டில் காணலாம்.

எனினும் அயோத்திதாசர் சுய முயற்சியுடன் இயக்கம், இதழ், புதிய கிளைகள் மற்றும் பள்ளிகள் துவக்கம் எனத் தனது நடவடிக்கைகளைத் தனித்துவத்துடன் தொடர்ந்தார். ஆல்காட் மற்றும் அடையாறு தியாசபிகல் சொசைட்டியுடன் அயோத்திதாசரின் தொடர்புகள் தொடர்ந்தன என்றே கருத இடமிருக்கிறது. அயோத்திதாசரின் இராய்பேட்டை அலுவலகத்திற்கு இறுதிவரை மாதவாடகை ரூ.10அய் ஆல்காட்தான் செலுத்திவந்தார். ஆல்காட்டுக்கும் தர்மபாலாவுக்கம் இடையில் கருத்து மாறுபாடுகள் இதே காலகட்டத்தில் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1908இல் ஆல்காட் மரணமடைந்தபோது அனைத்து மதச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. பவுத்த மதச் சடங்குகளை நிறவேற்ற அன்னிபெசன்ட் அம்மையாரால் அழைக்கப்பட்டது அயோத்திதாசர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பவுத்தப் புத்துயிர்ப்பில் மட்டுமின்றிச் சென்ற நூற்றாண்டின் இந்துத்துவப் புத்துருவாக்க முன்னோடிப் பணிகளைச் செய்தவர்களில் ஒருவராகவும் ஆல்காட் மதிக்கப்பட்டதும் சிந்திக்கத்தக்கது.

அயோத்திதாசரின் பவுத்தமும் அவரது தோழர்களாக இருந்த லட்சுமி நரசு, அப்பாதுரையார் முதலியோரின் பவுத்தமும் வேறு வேறாக இருந்தன என்பதைத் தருமராஜனும் ஏற்றுக்கொள்கிறார் (இவர்களோடு சிங்காரவேலரையும் பின்னாளில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றிய பெரியாரையும் சேர்த்துக் கொள்ளுதல் பொருத்தம்). அதற்கான காரணத்தையும் தருமராஜன் சரியாகவே அடையாளம் காண்கிறார். ‘பகுத்தறிவு சார்ந்து, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் பார்வையுடன் இவர்கள் பவுத்த சமயத்தைப் புரிந்துகொண்டு இருந்தார்கள்’ என்கிற அவரின் கூற்றை (பக்.91) நாமும் ஏற்-றுக் கொள்கிறோம். ஆனால் இவர்களது பௌத்தத்தின் மையப் பொருள் சாதி எதிர்ப்பு இல்லை என தருமராஜன் கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ் மரபிலிருந்து பவுத்தத்தைக் கட்டமைத்தல் என்ற உத்தியை இவர்கள் சிரத்தையுடன் எதிர் கொள்ளவில்லை என்கிற கூற்றை (பக.92) வேண்டுமானால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழ் மரபிலிருந்து கட்டப்படக்கூடிய பவுத்தம் ‘இயற்கையாகவே’ சாதி எதிர்ப்புத்தன்மை உடையதாக இருக்கும் என்கிற அவரது நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது. பவுத்தமும் சமணமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்டவை. அந்தக் காரணத்தாலேயே அவை பார்ப்பன மதத்தால் அழிக்கப்பட்டன. அம்பேத்கர் உட்படப் பலரும் சொல்கிற காரணம் இது. ‘அழிக்கப்பட்டன’ எனச் சொல்லாவிட்டாலும் சைவ _ வைணவ மதங்கள் காட்டிய எதிர்ப்பின் அடிப்படை பவுத்தத்தின் சாதி எதிர்ப்புப் பண்பே என்பதை அயோத்திதாசரும் ஏற்றுக்கொள்கிறார்.

பெரியாரும் இடதுசாரி அறிஞர்களும் பவுத்தத்தின் கடவுள் மறுப்புக் கூறுகளை முதன்மைப்படுத்தினர். அந்த வகையில் இவர்களிடமும் ஒரு வகையில் ஆதி பவுத்தம் குறித்த தேடல் இருந்தது. இவர்கள் முதன்மைப்படுத்திய பவுத்தத்தின் முக்கிய கூறுகள்:

1.            கடவுளை ஒப்புக் கொள்ளாமலிருப்பது.

2.            ஆன்மாவை நிரந்தரமானது என ஒப்புக் கொள்ளாதது.

3.            எந்த ஒரு புனித நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாதது. வேதங்களின் பிரமாணத் தன்மையை ஏற்றுக் கொள்ளாதது.

4.            வாழ்க்கைப் பிரவாகத்தை ஒரு இடையறாத இயக்கமாக நம்புவது.

5.            பிராமண மதத்தின் ‘கர்மக் கோட்பாட்டை’ மறுப்பது, பிறப்பால் உயர்வு தாழ்வுகள் நிர்ணயிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதது. பார்ப்பன மேலாண்மை, தீண்டாமை, சாதி ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை மறுப்பது.

(பார்க்க: ராகுல் சாங்கிருத்யாயனின் ‘பௌத்த தத்துவ இயல்’, தேவிபிரசாத் சட்டோபத்யாயாவின் ‘லோகாயதா’, தர்மானந்த சோசாம்பியின் ‘பகவான் புத்தர்’ முதலிய நூல்கள்.)

மே, 15, 1957 அன்று சென்னை ‘மகா போதி’ கழகத்தில் நடந்த 2501ஆம் ஆண்டு புத்தர் விழாவில் பெரியார் ஆற்றிய தலைமை உரையைத் தருமராஜன் படிக்க வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு கடவுளல்ல என்கிற கருத்தை அவர் அந்த உரையில் வற்புறுத்துகிறார்.

“புத்தகர் மகானோ ரிஷியோ அல்லர். இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிஷியோ இல்லையோ அதே போல் பவுத்தம் என்பதும் ஒரு மதமல்ல. ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும். மோட்சம், நரகம் வேண்டும். ஆத்மா, பாவ_புண்ணியம் அவற்றிற்கு ஏற்றற் போல் தண்டனை இவையெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பொண்டாட்டி, பிள்ளைகுட்டி, வைப்பாட்டி இவை எல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும். ஆனால், புத்தர் முதலில் “கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்.’’ “மனிதனைப் பற்றிக் கவலைப்படு’’ என்று சொல்லிவிட்டார். மோட்சம், நரகம் இல்லை ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இன்னும் அறிவுதான் முக்கியம் என்றார். ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே, யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்’’.

என்றுகூறுகிற பெரியார் புத்தியைக் கொண்டு சிந்திப்பவன்தான் புத்தன் என்பதற்கும் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஏற்காமையே பவுத்தம் என்கிற கருத்திற்கும் அழுத்தம் கொடுக்கிறார். கடவுளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சாதியை ஏற்றுக் கொள்ளவே இயலாது என்பதாகப் பெரியாரின் அன்றைய நீண்ட உரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

‘‘சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, சாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சியல்ல... சாதி ஒழிய வேண்டுமானால் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வேலை இல்லை. புராணங்களும் இதிகாசங்களும் ஒழிய வேண்டும். அப்போதுதான் சாதி இல்லாத சமுதாயம் ஆக முடியும்.’’ என்று முடிக்கிறார்.

ஆக பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு, புராண இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு, சாதி ஒழிப்பை இணைப்பதாக (articulate) உள்ளது. ஆனால், அயோத்திதாசரின் பவுத்தமோ புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்துப் புராணங்களையும் தொல்கதைகளையும் மாற்ற மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாக உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றென வைத்துக் கொண்டாலும் பாதைகள் முற்றிலும் வேறானதாகவும் உள்ளன (மறுபடியும் சொல்கிறேன்: எது சரி என்ற கேள்விக்குள் நாம் இப்போது போகவேண்டாம்). எனவே, பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன்மாதிரியாகக் கொள்ளவே இயலாத நிலை இருந்ததை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட உரையில் எந்த இடத்தில் அயோத்திதாசரைப் பெரியார் நுழைக்க இயலும்?

“நடைமுறையில்கூட இறை வணக்கங்களையும் பண்டிகைகளையும் ஒழிப்பதாகப் பெரியாரது பார்வை இருந்தது. அயோத்திதாசரின் பார்வையோ புதிய பெயர் சொல்லி, விளக்கம் கூறி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டாடுவதாகவும் இருந்தது. கார்த்திகை தீபத்தை ‘கார்த்துலதீபம்’ எனவும், தீபாவளியை ‘தீபவதி’ப் பண்டிகை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அயோத்திதாசர் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் பெரியாரின் பகுத்தறிவு சார்ந்த நவீனத்துவப் பார்வையும் அயோத்திதாசரின் தொன்ம மீட்புப் பார்வையும் சந்திக்க இயலாதவையாக இருந்தன என்பதே உண்மை.’’ தருமராஜனே இதை ஏற்றுக் கொள்கிறார்.

“பவுத்தம் தொடர்பான அயோத்திதாசரின் பார்வையை அவருக்குப் பின் முன்னெடுத்துச் செல்வதற்-கு வேறு யாரும் இருக்கவில்லை என்பது வேதனையான உண்மை. அயோத்திதாசரின் மறைவுக்குப் பின்னர் அய்ரோப்பிய மரபுவழி (இந்தப் பெயர் சூட்டல் விவாதத்திற்குரிய ஒன்று _ அ.மா.) வந்த பவுத்தத்திற்கு அதிக மரியாதையும் மேன்மையும் வழங்கப்பட்டன. அயோத்திதாசரின் தமிழ் பவுத்தம் என்ற சிந்தனை இதனால் ஏறக்குறைய மறைந்தே போயிற்று. அவரது வழித்தோன்றல்களே அதனைத் தேக்கமடையச் செய்தனர்.’’ என்று வாக்குமூலம் அளிக்கிற தர்மராஜன் தேவையின்றிப் பெரியாரின் மீது காழ்ப்பைக் கக்குவது ஆய்வு நேர்மையின் பாற்பட்ட செயலாகத் தெரியவில்லை.

-  உண்மை இதழ், 16-31.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக