செவ்வாய், 21 மே, 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்



 

 

நூல்             : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள்

ஆசிரியர்      : அ. மார்க்ஸ்

வெளியீடு     : அடையாளம் பதிப்பகம்.

 

விலை: 160. பக்கங்கள்: 175

 

 

(“திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு’’ எனக்கூறி, நூலாசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டது இந்நூல்).

பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் போக்கொன்றைச் சில ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தலித் பிரச்சினையில் திராவிட இயக்கத்தின் போதாமை குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஒருவர் முன்வைத்தால் அதை யாரும் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், பார்ப்பன சக்திகளின் பகடைக் காயாக இருக்கும் சிலர் உள்நோக்கத்துடன் மேற்கொள்கிற இம்முயற்சி ஆபத்தானது. திராவிட இயக்கத்தவர்கள் கவனத்தில் நிறுத்த வேண்டிய ஒரு பிரச்சினை இது.

இன்னும் சிலர் பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தொடக்க காலத்தில் (1920, 30களில்) தீண்டாமை ஒழிப்பில் காட்டிய ஆர்வத்தைப் பின்னாளில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். விரிவான ஆய்வுகள் ஏதுமின்றி சும்மா போகிற போக்கில் இக்குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

1968ஆம் ஆண்டு விடுதலை இதழ்களின் ஒரு தொகுதியைச் சமீபத்தில் புரட்டிக்கொண்டிருந்தேன். ஜாதி ஒழிப்பிற்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் மேலதிக முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளதை அறிய நேர்ந்தது. மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் மற்றும் சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோரின் தீண்டாமைக்கு எதிரான பேச்சுகள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நாட்களில் விடுதலை இதழில் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள்கூட அவர்களின் பேச்சுகளால் நிரப்பப்பட்டுள்ளன.

‘கலப்புத் திருமணத்தால்தான் ஜாதி ஒழிப்பு’ என ஜெகஜீவன்ராம் அவர்கள் சென்னையில் பேசிய பேச்சு முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது (12.10.1968). டில்லியில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர் நல மாநாட்டில் சத்தியவாணி முத்து அம்மையார் கலந்துகொண்டதும் அங்கே அவர் பேசியதும் முதற் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன (அக்டோபர் 10, 1968). அதே இதழில் ‘தீண்டாமைக் கொடுமை’ எனப் பெரியார் தலையங்கம் எழுதியுள்ளார். காங்கிரசின் போலித்தனம், வட்டமேசை மாநாட்டில் காந்தி தானே தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி எனச் சொன்னதை அண்ணல் அம்பேத்கர் மறுத்தது ஆகியன அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து.

தீண்டாமைக் குற்றத் தடுப்புச் சட்டங்கள் (PCR சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முதலியன) நீக்க வேண்டுமென ஆதிக்க ஜாதிக் கட்சிகள் இன்று கோருகின்றன. தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என அன்றைய மத்திய அரசு ஒரு முயற்சி மேற்கொண்டது. அதை முழுமையாக ஆதரிக்கிறார் பெரியார். இந்தியாவில் தீண்டாமை எந்த அளவிற்கு கைக்கொள்ளப்பட்டு வருகிறதென்பதை மதிப்பிட மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி தன் இடைக்கால அறிக்கையில் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் பார்லி மென்ட், மாநில சட்டசபைகள் முதலியவற்றில் உறுப்பினர்களாகக் கூடாதென்றும் விலக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சத் தண்டனை இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், வழக்குகளை வெளியே ராஜி பேசிவிட்டு விடுவதை இச்சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டும் என்றும், தீண்டாமையை விரட்டுவதற்குத் தாலுகா மட்டத்தில் போர்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. கமிட்டியின் சிபாரிசுகள் பற்றி மாநில அரசுகளின் கருத்தறிய மத்திய மாநிலங்களுக்குக் கிடைத்ததும் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்திற்குத் திருத்தங்கள் கொண்டுவர உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது....

என மிக விரிவாக இது குறித்து அன்று விடுதலை (10.10.1968) எழுதியது. இந்த அளவிற்கு விரிவாக வேறு யாரும் தமிழில் இதை விளக்கி ஆதரவு சேகரிக்க முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரையின் இறுதி, ஆயினும் புரட்சியொன்றினால்தான் இந்தத் தீண்டாமைக் கொடுமை ஒழிய முடியுமென்று மத்திய அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராம் கூறியுள்ளதை நாமும் ஆதரிக்கிறோம் என முடிகிறது.

திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை உள்ளதை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராமிடம் புகார் கொடுக்கப்பட்டதையும் விடுதலை (23.10.1968) பதிவுசெய்யத் தவறவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேர மாத வருமானம் ரூ.1500/- என்கிற மேல் வரம்பை ரூ.5000/- என ஆக்கவேண்டும் என்பதையும் விடுதலை ஆதரித்து வலியுறுத்தியது. (அதே நாள்).

பெரியார் லக்னோவில் (13.10.1968) பேசிய பேச்சொன்றும் அதே நாளில் பதிவாகியுள்ளது. அதில்,

எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நான் சொல்லுவது அபாயகரமாக இருந்தாலும் கூட சமுதாய இழிவோடு இருப்பதைவிட, அது ஒழிய போராட்டத்திற்கு ஆளாகி இறந்துபோவது நல்லது என்று கருதுகிறேன். (விடுதலை, 23.10.1968)

எனப் பெரியார் அவருக்கேயுள்ள துணிச்சலுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

1968 டிசம்பர் 11 அன்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற மேயர் வேலூர் நாராயணன் அவர்கள் பிறந்த நாளில் பெரியார் ஈவெரா அவர்கள் பேசிய பேச்சு குறிப்பிடத்தக்கது. இது முழுவதும் விடுதலை (15.12.1968) இதழில் வெளிவந்துள்ளது. இதற்குப் பின்னணியாக இருந்த சில விஷயங்களை நாம் புரிந்துகொள்வது நல்லது.

தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வேலூர் நாராயணன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சென்னை நகரமெங்கும் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் அமைந்திருந்த நடைபாதைக் கோயில்களை நீக்கினார். இதற்குப் பார்ப்பனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. பார்ப்பன இதழ்களெல்லாம் கண்டித்து எழுதின. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மேயரின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரித்து வந்தார். 1967 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க அரசையும் பெரியார் ஆதரித்து வந்ததை நாம் அறிவோம்.

இச்சூழலில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டது. சத்திய வாணி முத்து அம்மையாரின் மகனுக்கும் மேயர் நாராயணன் அவர்களின் மகளுக்கும் இடையே திருமண விருப்பம் இருப்பதை அறிந்தே மேயர் அம்மையாரைப் பற்றி ஜாதி சொல்லி இழிவு செய்ததாக ஒரு பேச்சு. இது ஒரு பிரச்சினையாக எழுந்த சூழலில்தான் தனது பிறந்த நாள் விழாவில் பெரியாரை அழைத்துச் சிறப்புரையாற்றச் சொல்கிறார் நாராயணன். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்ததாக தி.மு.கவினர் போஸ்டர் பிரச்சாரம் செய்ததை எல்லாம் அப்பேச்சில் நினைவுகூர்கிறார் பெரியார். அவரது பேச்சிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:

அவர் (வேலூர் நாராயணன்) அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லியிருக்கமாட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் நான் கேட்கிறேன். மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன்.

பறையன் என்றால் என்ன? பறையடிக்கிறவன் பறையன். பறையன் என்று சொல்லக்கூடாது என ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டத்தகாதவர்களுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம், தனியாகக் கோயில், தனியாகக் கிணறு வெட்டுவதற்காக ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன். நான் அதை அதற்காகச் செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்களெல்லாம் செலவழித்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக் கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். நாம் அவர்களுக்கு இவையெல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதாக இருந்தாலும் தீண்டாமை ஒழியாது, அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் கேணி, பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்கும் கேணிகளில் அவர்களும் தண்ணீர் எடுக்க வேண்டும். நாம் படிக்கும் பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்கவேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்.

நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னது தான். எலெக்ஷன் நேரத்திலே இப்படியெல்லாம் சொல்வது சாதாரணம்.

இந்த இடத்தில், பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவதாக ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று கூறி நோட்டீஸ் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதே எனக் கூறியதை நினைவுகூர்ந்த பெரியார், அப்படி அவர்களின் ரவிக்கை போடுவதை பெருமைக்குரிய மாற்றமாகவே தான் கூறியதை விளக்கினார். தொடர்ந்து, ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைபேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொருத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிடப் பறையனாக இருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. பிள்ளை இல்லை என்பது பற்றி ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இது போல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்துக் காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் (திரு.வேலூர் நாராயணன்) அப்படிக் கருதியிருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலே இருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களைப் பார்த்துப் பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்பது. நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதிதான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான். மற்றது சூத்திரன். இதைத்தான் ஒழிக்க வேண்டும். இது ஒழியாமல் பார்ப்பதற்காகத்தான் பார்ப்பான், செட்டி, முதலி, நாயக்கன், கவுண்டன், படையாட்சி என நமக்குள் பல ஜாதிகளைப் பிரித்து, அதில் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்து நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்திருக்கின்றான்.

நாம் தமிழர்கள், சூத்திரர்கள் அல்ல. இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வரவேண்டும். இன்றைய தினம் இந்தப் பேச்சுப் பேசியதற்கு அம்மையாரிடம், அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமாக அன்பு கொண்டிருக்கிறேன். அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது (விடுதலை, டிசம்பர் 15, 1968)

இப்படி ஏராளமான தகவல்களை நாம் மறுவாசிப்பு செய்யவேண்டி இருக்கிறது. 1968ஆம் ஆண்டு விடுதலையின் இறுதி சில இதழ்களை மேலோட்டமாக புரட்டியபோது கிடைத்தத் தகவல்களே இவை இந்த ஆண்டில் தான் (டிசம்பர் 25) வெண்மணி கொடுமை நிகழ்ந்தது. டிசம்பர் 29, 1968 ‘விடுதலை’ இதழில் ‘‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை ஜனநாயகத்தால் ஏற்பட்ட பெருங்கேடு’’!! என முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியில் இக்கொடுமை கண்டிக்கப்பட்டது. இத்தகைய கொடுமைகளைத் தடுக்க இயலாமற்போன இந்திய அரசியல் சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றையும் நிலவும் குற்றத் தடுப்புச் சட்டங்களின் போதாமையும் நீதிமன்றங்களையும் பெரியார் கண்டிக்கிறார். மனுதர்ம ஆட்சி ஒழிந்து மனித தர்ம ஆட்சி வேண்டும் என்கிறார். இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு அரச நாயகம் ஏற்பட வேண்டும் என்று கூறிய பெரியார், தனித் தமிழ்நாடு உருவாதல், மீண்டும் நாட்டை அந்நிய ஆட்சியின்கீழ் கொண்டுவருதல், இருகட்சி ஆட்சிமுறை எனப் பல மாற்றங்களை முன்வைத்து இறுதியாக,

நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும். ‘தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ - ஜான்சன் என முடிக்கிறார் (‘விடுதலை’, 29.12.1968)

‘அறிவுக்கொடி’ பிப்ரவரி 2006

(தொடரும்)

 -  உண்மை இதழ், 1-15.5.19

2 கருத்துகள்:

  1. தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

    திறமையான’ ‘தகுதியுள்ள' சமுதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கும் இடம் கொடுத்ததினாலும், நாடு வளர்ச்சியடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய்விட்டார்கள்.

    மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் 'துரோகம்-பச்சைத் துரோகம்' என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கையான பண்பு (அல்லது விதி)

    அதனாலேயே, நம் நாட்டிலுள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு, இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.

    இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்கு பயன்பட்டு வாழக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாட்சியில் #தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை, தமிழ்நாடு இந்த கதிக்கு ஆளாகித்தான் தீரும்.

    பதிலளிநீக்கு
  2. இதனில் சாணி பாப்பான்.. மலம் முஸ்லீமா?

    பதிலளிநீக்கு